FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: RemO on February 04, 2012, 03:31:40 PM
-
கடல் உணவுகளிலேயே மிகவும் சுவையானதும் அதீத நல்ல கொழுப்புச் சத்துக்களும் இறாலில் உள்ளன. மேலும், கால்சியம், புரதம், அயோடின் போன்ற சத்துக்களும் இறாலில் உள்ளதால் இதனை உண்ண மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் பி12, டி போன்றவையும், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம் போன்றவையும் இறாலில் காணப்படுகின்றன. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இது.
இந்தியாவில் இறாலை பலவிதங்களில் சமையல் செய்து உண்கின்றனர். இறாலை தொக்கு, குழம்பு, வறுவல் செய்து சாப்பிடலாம். இறால் பிரியாணி சுவையாக இருக்கும். இறால் தொக்கு எளிமையான முறையில் தயார் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
இறால் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - ஆறு பற்கள்
மிளகாய்தூள் - மூன்று தேகரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - அரை கோப்பை.
தொக்கு செய்முறை
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும். அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கிய உடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் போட்டு வதக்கவும், லேசாக உப்பு தூவி மேலும் வதக்க எண்ணெய் பிரிந்து வர வேண்டும். இந்த கிரேவியுடன் இறாலை போட்டு வதக்கி இளஞ்சூட்டில் வைக்கவும்.
இறாலை அதிக நேரம் வேக விடக்கூடாது ஏனெனில் சுவை மாறி ரப்பர் போல ஆகிவிடும். இறால் வெந்தவுடன் இறக்கி விடவும். இந்த தொக்கினை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். எலுமிச்சை, தயிர், சாதங்களுக்கு சைட்டிஸ் ஆகவோ சாப்பிட ஏற்றது.