FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Dharshini on February 03, 2012, 09:48:10 PM
-
மழைக்காலம் தொடங்கி ஆரம்பிக்கும் போது எந்நேரமும் மழை பெய்து கொண்டே இருக்கும். இந்தக் காலத்தில் பலரும் சளி தொல்லையால் அவதிப்படுவர். சாலைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் நடப்பவர்களுக்கு சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில் உடலை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்.
மழை பெய்யும் காலங்களில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளித்தால் நல்லது. மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் குளித்தால் தோலின் நிறம் மாறாமல் இருக்கும். குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தேங்காய் எண்ணையை தடவிக் கொள்ளவும். அதேபோல் முழங்காலில் இருந்து கணுக்கால் வரை தேவையற்ற முடிகளை அகற்றும் பசை தடவி மசாஜ் செய்து கொண்டால் மழைநாட்களில் இந்த இடங்களில் (பங்கஸ்) பூஞ்சை தாக்குதல் இருக்காது.
தினமும் இரவு படுக்கப்போகும் முன்பு, ஒரு சிறிது வெந்நீரை ஊற்றி, அதில் உங்கள் பாதங்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து கைவிரல்களால் மசாஜ் செய்யுங்கள்.
இப்படிச் செய்வதால் உடல் முழுவதும் உள்ள இறுக்கம் விடுபட்டது போல் இருக்கும். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது சுத்தமான தண்ணீரால் கால்களை நன்கு கழுவி, சுத்தமான துணியால் ஈரத்தை துடையுங்கள்.
குளிக்கும் நீரில் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை போட்டு வைத்திருந்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம். பெண்கள் மழை நாட்களில் தவறாமல் மஞ்சள் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஏனெனில், கிருமிநாசினியான மஞ்சள் சருமத்தைப் பாதுகாக்கும்.
ஈரமான துணிகளை அணிந்து கொள்வதால் தோல் எரிச்சல், பூஞ்சை பாதிப்பு போன்றவை ஏற்படலாம். எனவே, ஈரத்துணியைக் கழற்றியவுடன் அந்த இடத்தில் தேங்காய் எண்ணை தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.
மழைக்காலத்தில் மருதாணி போட்டுக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. மருதாணி குளிர்ச்சி என்பதால் சளி பிடித்துவிட வாய்ப்புண்டு.