FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on March 18, 2016, 06:02:20 PM

Title: ~ 80 விதமான வாதநோய்களைப் போக்கும் தழுதாழை! ~
Post by: MysteRy on March 18, 2016, 06:02:20 PM
80 விதமான வாதநோய்களைப் போக்கும் தழுதாழை!

(https://3.bp.blogspot.com/-9_wsvxMqmg4/VupFpwdDy0I/AAAAAAAAQ18/1aUqZkje37Q4wrDo3-wJ2bcwE6rtCQ98g/s1600/9.jpg)

வெப்ப மண்டலக் காடுகளில் சிறு மரம்போல வளர்வது தழுதாழை. இதன் இலையும் வேரும் பல மருத்துவக் குணங்கள் கொண்டவை. மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்களைத் தேற்றுவதற்கு இந்தக் கீரைப் பயன்படுகிறது. `தக்காரி’, `நத்தக்காரி’, `வாதமடக்கி’ என வேறு சில பெயர்களும் தழுதாழைக்கு உள்ளன.

சித்த மருத்துவத்தில் வாத நோய்களைப் போக்கும் அருமருந்தாகத் தழுதாழை கொண்டாடப்படுகிறது. பக்கவாதம் முதலான 80 விதமான வாதநோய்களைப் போக்கும் என்கிறது சித்த மருத்துவம்.

தழுதாழையைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால், `பாலவாதம்’ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தால் ஏற்படும் முடக்கநிலை நீங்கும்.

மாந்தம், மூக்கடைப்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கழலை, சொறி, சிரங்கு, கப மிகுதியால் ஏற்படும் காய்ச்சல், உடல்கடுப்பு, குடைச்சலை நீக்கும்.

(https://2.bp.blogspot.com/-dWbt7-UWXfc/VupFp8mRuHI/AAAAAAAAQ14/VDNw1dTAezEKGp9il4ww2FlbiJcoJXz3Q/s1600/10.jpg)

தழுதாழை  இலைச்சாற்றை காலை மற்றும் மாலைகளில் தலா இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி அருந்திவந்தால், காய்ச்சல் நீங்கும்.

சித்த மருத்துவரின் அனுமதி பெற்று, தழுதாழை இலைச்சாற்றை மூக்கினுள் இரண்டு துளிகள்விட, மூக்கடைப்பு நீங்கும். 

தழுதாழை இலைச்சாற்றை சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து, தினமும் ஒன்றிரண்டு தேக்கரண்டி உட்கொள்ள, மேக நோய்கள் நீங்கும்.

வாதத்தால் ஏற்படும் வலி நீங்க, இதன் இலைகளை ஒன்றிரண்டு கைப்பிடி அளவுக்கு எடுத்து, தேவையான அளவு நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, மிதமான சூட்டில், வலி ஏற்பட்ட இடங்களில் ஊற்றிக் கழுவ வேண்டும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர் தழுதாழை இலையை வதக்கி, வலி, வீக்கம் ஏற்படும் இடங்களில் கட்டு போட்டுவர, பிரச்னை தீரும்.

இதன் இலையை ஆலிவ் எண்ணெய் விட்டு வதக்கி, விரைவாதம் மற்றும் நெறிகட்டிய இடங்களில் கட்டுப்போட, அவை குணமாகும்.

சுளுக்கு, மூட்டு வலி இருப்பவர்கள், இதன் இலையை அரிசி கழுவிய நீரில் வேகவைத்து, துணியில் முடித்து வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். இலைகளை விளக்கெண்ணை விட்டு வதக்கி, வலி ஏற்படும் இடங்களில் பற்று போடலாம்.