FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 06, 2016, 09:31:50 AM
-
மசாலா கொழுக்கட்டை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fkol.jpg&hash=07bfcaed5fe965d059909c60e0e5cd4d698cd847)
பயத்தம் பருப்பு – 50 கிராம்
பச்சை மிளகாய் – 2
தேங்காய் துருவல் – கால் கப் + ஒன்றரை மேசைக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 5 தேக்கரண்டி + அரை மேசைக்கரண்டி
அரிசி மாவு – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 8
மிளகாய் வற்றல் – 4
தனியா – அரை மேசைக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
கல் உப்பு – கால் தேக்கரண்டி
எலுமிச்சை – ஒரு மூடி
பயத்தம் பருப்பை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடானதும் சுத்தம் செய்த பயத்தம் பருப்பை போட்டு 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அம்மியில் அல்லது மிக்ஸியில் தனியா, மிளகாய் வற்றல், கால் தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து அரைக்கவும். அவை மசிந்தவுடன் கால் கப் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து விட்டு கடைசியில் சின்ன வெங்காயம் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கொதிக்க விட்டு அதில் அரிசி மாவை போட்டு கரண்டியின் பின்புறத்தை வைத்து கிளறி கொண்டே இருக்கவும். கெட்டியாக ஆனதும் இறக்கி ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி கால் கப் தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து இடியாப்ப மாவு பதத்தில் கெட்டியாக, கையில் ஒட்டாமல் வரும் வரை பிசையவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து விட்டு அதில் நறுக்கின பச்சை மிளகாய் போட்டு 30 நொடி வதக்கவும். பின்னர் அதனுடன் வேக வைத்த பருப்பில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு போட்டு ஒரு நிமிடம் பிரட்டவும்.
பருப்புடன் அரை தேக்கரண்டி உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் ஒன்றரை மேசைக்கரண்டி தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் நன்கு பிரட்டி இறக்கி வைத்து மேலே எலுமிச்சை பழம் பிழியவும். பிறகு கிளறி விட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு பிசைந்து வைத்த மாவை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்துக் கொண்டு முதலில் கட்டைவிரலை நடுவில் வைத்து திருப்பி திருப்பி விட்டு கிண்ணம் போல் செய்துக் கொள்ளவும். அதன் நடுவில் செய்து வைத்திருக்கும் பயத்தம் பருப்பு மசாலாவை வைத்து மூடி, உள்ளங்கையில் வைத்து வலது கையால் சீடையை தேய்ப்பது போல் தேய்த்து முட்டையை போல உருட்டி வைக்கவும். கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
இதை போல எல்லா மாவையும் செய்துக் கொள்ளவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி செய்து வைத்திருக்கும் உருண்டைகளை வைத்து மேலே தண்ணீர் தெளித்து இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வேக வைத்த உருண்டைகளை போட்டு மெதுவாக பிரட்டி விடவும்.
பிறகு அரைத்து எடுத்து வைத்திருக்கும் விழுதை போட்டு அதன் மேல் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து மெதுவாக மசாலா, உருண்டைகளுடன் ஒன்றாக சேரும்படி பிரட்டி விடவும். மேலே 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒன்றாக நன்கு பிரட்டி இறக்கவும்.
பார்க்க முட்டை போல் இருக்கும் சுவையான மசாலா கொழுக்கட்டை தயார். இது மிகவும் ருசியான மாலை நேரச் சிற்றுண்டி.