FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on March 05, 2016, 09:52:54 AM

Title: ~ வெஜிடபிள் பிரியாணி ~
Post by: MysteRy on March 05, 2016, 09:52:54 AM
வெஜிடபிள் பிரியாணி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F02%2Fveg.jpg&hash=3d03ce8dbf5b2334a51a449fd7efbc3770c5728a)

காரட் – 2
உருளைக்கிழங்கு – 2
பச்சைப்பட்டாணி – முக்கால் கப்
பூண்டு – 22 பல்
புதினா – 2 கொத்து
சின்ன வெங்காயம் – 12
கொத்தமல்லி – 4 கொத்து
தேங்காய்த்துருவல் – ஒன்றரை கப்
இஞ்சி – ஒரு அங்குலத்துண்டு
பட்டை – ஒன்று
கிராம்பு – 2
ஏலக்காய் – 3
உப்பு – 3 தேக்கரண்டி
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 5
அரிசி – இரண்டரை கப்
கசகசா – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்ட்
பிரிஞ்சி இலை – சிறிது
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
முந்திரி – 8
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
நெய் – ஒரு மேசைக்கரண்டி

பூண்டை தோலுரித்துக் கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கவும். கொத்தமல்லி, புதினாவை கழுவி இலைகளைத் தனியே ஆய்ந்து வைக்கவும். துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்து, பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து ஊறவைக்கவும்.
கேரட்டையும், உருளைக்கிழங்கையும் சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். தக்காளியை நான்கு துண்டங்களாக நறுக்கி வைக்கவும்.
காய்ந்த பட்டாணியாக இருந்தால் முதல் நாள் இரவே ஊறவைத்துவிடவும். பச்சைப் பட்டாணியாக இருந்தால் ஊற வைக்கத் தேவையில்லை. பட்டாணியை குக்கரில் போட்டு மூழ்கும் அளவிற்கு நீர் விட்டு, 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
நறுக்கின இஞ்சி, பூண்டில் 18 பல், ஏலக்காய், பாதி பட்டை, கொத்தமல்லி, புதினா, நறுக்கின வெங்காயத்தில் பாதி, கசகசா, 3 பச்சை மிளகாய், அரைத்தேக்கரண்டி சோம்பு, அரைத்தேக்கரண்டி சீரகம், கிராம்பு ஒன்று இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள பட்டை, சோம்பு, சீரகம், சிறிது பிரிஞ்சி இலை ஆகியவற்றைப் போட்டு பொரியவிடவும்.
அத்துடன் மீதமுள்ள பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அடுத்தடுத்துப் போட்டு நன்கு வதக்கவும். மீதமுள்ள இரண்டு பச்சை மிளகாய்களையும் அப்படியே முழுதாகப் போட்டு லேசாக வதக்கவும்.
அத்துடன் நறுக்கி வைத்துள்ள காரட், உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து பிரட்டிவிடவும். அதில் வெந்த பட்டாணியை போட்டு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
பின்னர் அதில் அரைத்த விழுதைப் போட்டு பிரட்டிவிட்டு 2 நிமிடங்கள் வேகவிடவும். இப்போது அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் வேகவிடவும். அதன்பிறகு தேங்காய் பாலை ஊற்றி, 4 கப் தண்ணீரையும் ஊற்றி, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
கொதிக்கும் போது மேலே கறிவேப்பிலை இலைகளை தூவவும். இடைப்பட்ட நேரத்தில் அரிசியை தயார் செய்து கொள்ளவும்.
கொதிக்கும் நேரத்தில், ஊற வைத்துள்ள அரிசியை எடுத்து, சுத்தமாக நீரை வடித்துவிடவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் அரிசியைப் போட்டு ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும்.
இப்போது வறுத்த அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கொதிக்கின்ற கலவையை ஊற்றி, பாத்திரத்தை குக்கரில் வைத்து மூடி வேகவிடவும்.
சுமார் 10 நிமிடங்கள் வெந்தவுடன் இறக்கி, முந்திரியை நெய்யில் வறுத்து அதில் கொட்டி கிளறிக் கொள்ளவும். சிறிது கொத்தமல்லி தழையினையும் தூவவும். சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்.