FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on January 09, 2012, 06:08:05 AM

Title: பொங்கலோ பொங்கல் கவிதை நிகழ்ச்சி
Post by: Global Angel on January 09, 2012, 06:08:05 AM
அன்பு நேயர்களுக்கு ....

 நமது  நபர்கள் இணையதள வானொலி ஊடாக பொங்கல் சிறப்பு நிகழ்சிக்காக   சிறப்பு  பொங்கலோ பொங்கல் கவிதை நிகழ்ச்சி ஒன்று வழங்கப்படவுள்ளது  ... உங்கள் கவிதைகளும் இடம்பெற வேண்டுமானால் எதிர் வரும் 3  நாட்களுக்குள் தங்கள் கவிதைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ள படுகின்றீர்கள் ...
Title: Re: பொங்கலோ பொங்கல் கவிதை நிகழ்ச்சி
Post by: ஸ்ருதி on January 10, 2012, 09:40:15 AM

காலைக் கதிரவன்
அழகாய் உதிக்க
தாமரை பூக்கள்
முகம் மலர
உழுதுக் கலைத்த
உழவர்கள் தம்
ஓய்வு வேண்டிக்
கலைத்திருக்க
கட்டிளம் வீரர்கள்
வீரத் திருநாளை
எதிர் நோக்கி பார்த்திருக்க

தமிழருக்கான ஒரு நாளாம்
எங்கள் தமிழர் திருநாளாம்
இயற்கைக்கு நன்றி சொல்லும்
பெரு நாளாம்
பொங்கல் திருநாள்
தை மகளோடு புதிதாய் பிறக்க

மங்கையர் தம் வாசலில்
கோலமிட்டு
புத்தாடையும்,
புதுப்பானை , புத்தரிசியும்
மஞ்சளோடு, செங்கரும்பும்
பொங்கலுக்காக எழிலோடு
பொங்கி வழிய
பொங்கலோ பொங்கல் என
குழந்தைக் கூட்டம்
தித்திக்கும் பொங்கலை
பார்த்திருக்க
அழகான திருநாள்
அமைதியாய் வந்த நாள் இது...

தித்திக்கும் பொங்கல்
திகட்டாமல் இனிக்க
மகிழ்ச்சி மட்டுமே
இனிப்பாய்
நிறைந்திருக்க
பழையவை பஞ்சாய்
பறந்து போக
புதிதாய் நல்வழி பிறக்க
தைமகளே வருக..

தரணி எங்கும்
ஒலிக்கட்டும்
நம்  தமிழ் புகழ்...
திமிரோடு சொல்லுவோம்
தமிழர் என்று...


பொங்கலோ பொங்கல்....
இனிய பொங்கல் திருநாள்
நல் வாழ்த்துக்கள் ;) ;) ;)
Title: Re: பொங்கலோ பொங்கல் கவிதை நிகழ்ச்சி
Post by: AnAnYa on January 11, 2012, 07:21:54 AM
செங்கதிரவன் ஒளியில்
விளைந்த நெற்கதிர் மணிகள்
அறுவடைக்காக
நிமிர்ந்து  நின்றிட

தை பிறந்தால்
வழி பிறக்குமென
காத்திருந்த உழவர்கள்
மகிழ்ச்சியோடு
தலை நிமிர

இனிதான தமிழர் திருநாள்
தை மகளோடு பவனி வர

செங்கரும்பைப் போல
இனிப்பாய் தித்திக்கும்
திருநாளும் வந்ததென
குழந்தைகள் ஆர்ப்பரிக்க

சாதி மதம் சமயம் பாராது
தமிழ் பண்பாடை போற்றும்
ஒரே திருநாளாம்
நம் தமிழர் திருநாளாய்
பொங்கலும் வந்திட

சர்க்கரைப் பொங்கல் போல்
எல்லோர் வாழ்வும் இனித்திட
உலகத்து தமிழ் உறவுகளின் வாழ்வு
மகிழ்ச்சியாய் அமைந்திட
இயற்கைக்கு நன்றி செலுத்தி
கொண்டாடி மகிழ்வோம்
நம் தைப்பொங்கல் திருநாளை

என் இனிய பொங்கல் திருநாள்
நல் வாழ்த்துக்கள்
Title: Re: பொங்கலோ பொங்கல் கவிதை நிகழ்ச்சி
Post by: Global Angel on January 13, 2012, 02:26:17 AM
பொழுது புலரு முன்
புன்னகையுடன் அம்மா சொல்லும்
எழுந்திருமா முழுகிட்டு வா
முத்தத்தில பொங்கவேணும்
கேட்டு பல வருசமாச்சு ....

குளிர குளிர
நானும் தம்பியும்
அடிசுகிட்டே தண்ணீர் அலம்பி
தலைக்கு முழுகும்
ஆனந்தமில்லை ......

பச்சை சாணகத்தில்
பர பரவென மெழுகி
உலக்கை வைத்து
அப்பா போடும்
அரிசி மா கோலம்  இல்லை

சூரியனை கோலத்தில் கீற
அடித்து கொள்ளும்
அடிதடிகளும் இல்லை

அழகாக அடுப்பில் ஏற்றி வைத்து
தென்னை பாளை கொண்டு
சட படவென எரியும்அடுப்பு கூட இல்லை

பாணையுள் பாலை விட்டு
அந்த பக்கம் பொங்கும்
இல்லை இந்த பக்கம் பொங்கும்
என்று ஆர்பரிக்கும் குரல்களும் இல்லை ...

பால் பொங்கும் போது வெடி வேடிகனுமாம்
அடம் பிடித்து ... வெடி வாங்கி வேடிக்கமுடியாமல்
வெறும் சைக்கில் கம்பியில்
நெருப்புக்குச்சி மருந்தை திணித்து
படக்குன்னு வெடிக்கும் சத்தமும் சத்தமும் இல்லை ..

ஆழகாக அப்பா அரிசி போட
அடிபட்டு நாமும் ஒரு கை போடும்
அந்த ஆனந்தமில்லை ...

சர்க்கரை வெட்டுவதாக சொல்லி
நைசாக சர்கரை வாயில் போட்டு கொள்ளும்
இனிமையும் இல்லை ....

வாகாக பொங்கி
வாசனை பரப்பும் பொங்கலை
கதிரவன் கதிர் தொட வைத்து
அதை நாலு பேருக்கு கொடுத்து
அடி பானை வழித்து உண்ணும்
வாசனை புக்கையும் இல்லை ....

இருந்தும் புலம் பெயர் நாட்டில்
பொங்கல் பொங்குகின்றோம்....
பிள்ளை பொங்கியாச்சு
எழும்பி முழுகிட்டு சாப்பிடு
நான் வேலைக்கு போட்டு வாறன்
என்று அவசர அவசரமாய்
எம்மவரும்  பண்பாட்டை விடாமல்
படையல் வைக்கின்றோம்
கதிரவனை காணமுடியாத
கடும் குளிர் காலத்திலும்

இழந்தது இனிய உறவுகளை மட்டுமல்ல
இனிமையான போங்கலையும்தான்
ஊர் போங்கலைபற்றி பேசாமல்
எவரும் ஒருவாய் பொங்கலை
வாயில் வைத்து உண்ண மாட்டார்கள் வாஞ்சையுடன் ....

எங்கள் வீடிலும்
இதேபோல்தான் பொங்கல் ...
எனினும் வாழ்த்துகின்றோம்
இனிய பொங்கல் வாழ்த்துகள்
என்  இனிய ftc  இதயங்களே ...
Title: Re: பொங்கலோ பொங்கல் கவிதை நிகழ்ச்சி
Post by: Karthika on January 13, 2012, 10:13:49 AM
மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு

வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது

கரும்பைக் கைபிடிக்க
கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
குமரியிதழ் தேன்வடிக்க

வயலில் வாய்க்காலில்
ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
பாடிவரும் பொங்கலிது

வீட்டுப் பசுமாடும்
வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
பொன்னழகுப் பொட்டுவச்சி

தோட்டத் தெருவெல்லாம்
தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
அழகுமணிப் பொங்கலிது

மண்ணைக் கையெடுக்க
மனசெல்லாம் மூச்செறிய
பொன்னை அள்ளியதாய்ப்
பெருமிதத்தில் கண்விரிய

அன்னம் கொடுப்பவளின்
அருமைகளை எண்ணிமனம்
 நன்றிப் பெருக்கோடு
 நிலம்வணங்கும் பொங்கலிது

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல்

அன்புடன்  KARTHIKA
Title: Re: பொங்கலோ பொங்கல் கவிதை நிகழ்ச்சி
Post by: RemO on January 14, 2012, 01:37:27 AM
பழையன ஒதுக்கி புதியன தேடும்
தை திங்களின் முன்நாள்

புதிதாய் முளைத்த உரமென்னும்
விசத்தை தொலைத்து இயற்கை உரம் தேடுவோம்

புதிதாய் அகதியான அடிமையான
குலமிங்கு மீண்டும் தரனியாள செய்வோம்

புதிதாய் மனை வேண்டி கீறி கெடுத்த மண்ணை
சீர்செய்து மீண்டும் பழைய விளைநிலமாக்குவோம்

புதிதாய் உழ வந்த இயந்திர வாகனத்தை விடுத்து
அடிமாடாய் போன உழுமாட்டை கொணர்வோம்

இப்படி இன்னும் பல புதுமைகளை ஒழித்து
மீண்டும் பழமை புகுதுவோம் வாரீர் இப்போகியில்



புத்தாடை, புதுப்பானை
பச்சரிசி  பொங்கலிட்டு
செங்கரும்பை வெட்டி வைத்து
பொங்கும் பொங்கலில்
நம் துன்பமும் தொலைந்து
புதிதாய் பிறக்கும் தைமகளுடன்
நம் இன்பமும் பிறக்கட்டும்

ஓய்வில்லாமல் தன்னையே எரித்து
நாம் எரியாமல் காக்கும் ஆதவனுக்கும்

தன் உழைப்பை அர்பணித்து
தன் ரத்தத்தை பாலாக நமக்களித்து
சாணத்தை கூட உரமாக்கி
இறந்த பின்பும் உடலை உணவாக்கி
நாம் உண்ண உதவும்
கால்நடை கடுவுளுக்கும்
பொங்கலிட்டு நன்றி சொல்வோம்