FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 22, 2015, 04:56:36 PM

Title: ~ சிகிச்சையாகும் நீர் குணமாகும் நோய்கள் ஹைட்ரோ தெரப்பி! ~
Post by: MysteRy on November 22, 2015, 04:56:36 PM
சிகிச்சையாகும் நீர் குணமாகும் நோய்கள்
ஹைட்ரோ தெரப்பி!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-QA9dboOXOJY%2FVlFuCRaHt6I%2FAAAAAAAAP00%2FtVYPD3kifpA%2Fs1600%2F1.jpg&hash=37d011b0214ee0eee3d167915b8b5e14162112e5)

நம் உடலில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம்  நீர்தான் உள்ளது. அதனால், ‘நீரைக்கொண்டு செய்யப்படும் சிகிச்சையின் மூலம் உடலில் உள்ள நோயைச் சரிசெய்ய முடியும்’ என்கிறது ‘ஹைட்ரோதெரப்பி’ எனப்படும் நீர் சிகிச்சை. ஹைட்ரோதெரப்பி என்பது இயற்கை மருத்துவத்தின் ஒரு பகுதி. ‘மருந்தில்லா மருத்துவம்’ எனும் நோக்கத்துடன் இது செய்யப்படுகிறது. நாட்பட்ட நோய்கள் என்று சொல்லக்கூடிய தீராத வயிற்று வலி, மூட்டு வலி, தலைவலி போன்றவற்றைத் தீர்க்கக் கூடியது; எந்தப் பின்விளைவுகளும் இல்லாமல் நோய்கள், வலிகளை விரட்ட உதவுகிறது என்பது இதன் சிறப்பு.

யார் செய்யலாம்?

வெந்நீர், வெதுவெதுப்பான நீர், குளிர்ந்த நீர் என நீரின் வெப்பநிலையைப் பொறுத்து எந்தெந்தப் பிரச்னைகளுக்கு எந்த நீர் சிகிச்சை என்பதை மருத்துவர் முடிவுசெய்வார். நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப நீர் சிகிச்சை செய்யப்படும்.
வெவ்வேறு வெப்பநிலை (டெம்ப்ரேச்சர்) கொண்ட நீரால், உடல் வலிகள், நோய்களைக் குணமாக்க முடியும்.
நோயாளிகள் மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களும் நீர் சிகிச்சை செய்துகொள்ளலாம்.

ஸ்பைனல் பாத்

இதை, ‘தண்டுவடக் குளியல்’ எனச் சொல்லலாம். பாத்டப்பில், முதுகுப்பகுதி மட்டும் நீரில் இருக்க, தலையும் கால்களும் வெளியே இருக்கும்படி படுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் குளியலை, தூங்குவதற்கு முன் செய்ய வேண்டும். 6 - 7 மணிக்குள் இரவு உணவை முடித்துவிட்டு, 10 மணிக்கு இந்தக் குளியலை எடுத்த பிறகு தூங்கச் செல்லலாம்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-Jvd1RczKuDU%2FVlFuKwFaS1I%2FAAAAAAAAP08%2F3f2bsSkq9D4%2Fs320%2F2.jpg&hash=e974a89d23aad7a0675c3ea80dbbfdc5d21d530a)

பலன்கள்

மனம் தொடர்பான பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வு. தூக்கமின்மை, மனஅழுத்தம், மனச்சோர்வு, மன உளைச்சல், பயம், அதீதக் கோபம் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

ஹார்மோன்களின் இயக்கங்கள் சீராகும். நரம்புகளுக்குத் தளர்வுத்தன்மை கிடைக்கும்.

முதுகெலும்பு நரம்புகள் வலிமை பெறும். உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும்.

மாரடைப்பு, நெஞ்சு வலி பிரச்னை உள்ளவர்கள் இந்த பாத் எடுக்கலாம்.

இதயம் தொடர்பான பிரச்னைகள், உயர் ரத்த அழுத்தம் போன்றவை கட்டுக்குள் வரும்.

ஹிப் பாத்

இந்தச் சிகிச்சையில் இடுப்பு மட்டும் நீரில் நனையும்; தலை, கால் நனையாது. கால்களுக்கு சப்போர்ட் கொடுக்க சின்ன ஸ்டூல் வைக்கப்படும். இதற்குப் பயன்படுத்தப்படும் நீர் சற்றுக் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். சாதாரண குழாய் நீரே போதுமானது.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-EcoL-sf9X7Y%2FVlFuQue80UI%2FAAAAAAAAP1E%2FbVJAZhKvwHk%2Fs320%2F3.jpg&hash=a416c9b4800e1415aaf9c7f7e6e62b16877dff53)

பலன்கள்

கல்லீரல், மண்ணீரல் சிறப்பாகச் செயல்படும். எலும்பு மஜ்ஜைகள் ஆரோக்கியமாகும். ரத்தசோகை சரியாகும்.

பெப்டிக் அல்சர், காஸ்ட்ரிக் அல்சர், செரிமானப் பிரச்னை, நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றுக்கு நல்ல தீர்வு.

பி.சி.ஒ.டி, சீரற்ற மாதவிலக்கு, தூக்கமின்மை சரியாகும்.

சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். பித்தப்பைக் கற்கள், கல்லீரல் சுருக்கம் ஆகியவற்றின் வீரியம் குறையும்.

மஞ்சள் காமாலை வந்தவர்கள் இந்தச் சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியமாக இருப்பவர்கள், ஹிப் பாத் எடுத்தால், சரும நோய்கள் நெருங்காது. சருமம் ஆரோக்கியமாகும்.

ஸ்பைனல் ஸ்ப்ரே

பாக்ஸ் போன்ற ஓர் அமைப்பில் படுத்துக்கொள்ள வேண்டும். பாக்ஸின் மேற்புறத்திலிருந்து நீர்ப் பீய்ச்சி அடிக்கப்படும். முதுகுத்தண்டுக்கு மட்டும் தண்ணீர் ஸ்ப்ரே ஆகும். இது மிதமான மசாஜ் செய்த அனுபவத்தைத் தரும். மருத்துவர் அனுமதியோடு மட்டுமே இதைச் செய்ய வேண்டும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-YwYmXNQIUtA%2FVlFuWWTarsI%2FAAAAAAAAP1M%2FY0OeHoNXyAM%2Fs320%2F4.jpg&hash=5737ae6e4f418100e2bf293a891a03b34fd06a90)

பலன்கள்

ரத்த ஓட்டம் சீராகும். முதுகுவலி சரியாகும். நரம்பு மண்டலம் ஆரோக்கியம் பெறும்.
முதுகெலும்பு நரம்புகள் வலிமை பெறும். உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும்.
இதயம் தொடர்பான பிரச்னைகள், உயர் ரத்த அழுத்தம் போன்றவை கட்டுக்குள் வரும்.

ஸ்டீம் பாத்

நீராவியில் நனைவது ஸ்டீம் பாத். பிரத்யேக ஸ்டீம் பாக்ஸைத் திறந்தால், உட்கார சீட் இருக்கும். அதில் உட்கார்ந்த பின் கதவை மூடி, ஸ்விட்ச் ஆன் செய்தால் நீராவி வரும். தலையை மட்டும் மேலே வைத்துக்கொள்வதுபோல பாக்ஸின் அமைப்பு இருக்கும்.

கட்டாயமாகத் தலையின் மேல், ஒரு துண்டை நனைத்துவைக்க வேண்டும். இது மூளையின் வெப்பநிலையைப் பாதுகாக்கும். 10-15 நிமிடங்கள் வரை செய்யலாம்.  இயற்கை மருத்துவர் உதவியுடன் மட்டுமே ஸ்டீம் பாத் செய்ய வேண்டும். தினமும் செய்யக் கூடாது. உடல்பருமனாக இருப்போர், மருத்துவர் அனுமதியோடு செய்யலாம். இந்த ஸ்டீம் பாத் எடுக்கும் முன்னர், சாதாரண தண்ணீரில் குளிக்க வேண்டும். சில நிமிடங்கள் நடந்துவிட்டு, வயிறு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஸ்டீம் பாத் எடுத்த பின்னரும் நீர் அருந்த வேண்டும். பிறகு ரத்த அழுத்தம், பல்ஸ் ரேட் போன்றவற்றை மருத்துவர் பரிசோதிப்பார். 10 நிமிடங்கள் கழித்த பிறகு குளிக்க வேண்டும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-YijAcedSqLU%2FVlFusM1mh0I%2FAAAAAAAAP1U%2FUSL3ifJ80FI%2Fs320%2F5.jpg&hash=14702e59cb8cf402224843b8f4a4d90de732dc64)

பலன்கள்

ஆரோக்கியமாக இருப்போர் ஸ்டீம் பாத் எடுத்தால் சருமத் துளைகள் திறந்து, உள்ளிருக்கும் நச்சுக்கள், கழிவுகள் வெளியேறும்.

சருமம் அழகாகும். பளிச் என மின்னும்.

உடல் எடை குறையும். கொழுப்பு கரையும்.

கை, கால் வலி, மூட்டு வலி நீங்கும்.

உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்னை இருப்பவர்களுக்கு ஸ்டீம் பாத் நல்லது.

உடல் வலிகள் குறையும். மனச்சோர்வு நீங்கும்.

நீர் சிகிச்சை அளிக்கும் முறை

15-20 நிமிடங்கள் வரை அளிக்கப்படும்.

இந்த தெரப்பியை வெறும் வயிற்றில்தான் எடுக்க வேண்டும். சாப்பிட்டவுடன் சிகிச்சை எடுத்தால், வாந்தி, வாயு பிரச்னை, மலச்சிக்கல் போன்றவை வரலாம்.

காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்வது நல்லது.

காபி, டீ குடித்தாலும் இரண்டு மணி நேரம் கழித்தே சிகிச்சை எடுக்க வேண்டும்.

உணவு உட்கொண்டிருந்தால், நான்கு மணி நேரம் கழித்துதான் செய்ய வேண்டும்.

திறந்தவெளியில் செய்யக் கூடாது. வீட்டினுள் அல்லது குளியல் அறையில் செய்யலாம்.

ஒரு நாள் வெதுவெதுப்பான நீர், மறு நாள் குளிர்ந்த நீர் என்று மாற்றிக்கொண்டே இருக்கக் கூடாது. வெதுவெதுப்பான நீரில் பாத் எடுத்தால் அதையே தொடர வேண்டும். நடுவில் குளிர்ந்த நீர் குளியல் என்று மாற்றிக்கொள்ளக் கூடாது.

வீட்டில் செய்பவர்கள் உங்கள் வீட்டு குழாயில் வரும் தண்ணீரில் செய்வது நல்லது. இதுவே கோல்டு பாத்.

மாதவிலக்கு சமயத்தில் இதைத் தவிர்க்க வேண்டும்.

பிசிஒடி பிரச்னை இருப்பவர்களுக்கு, இயற்கை மருத்துவர் உதவியுடன் மாதவிலக்கு வரும் வரை நீர் சிகிச்சை தரப்படும். சுயமாக செய்யக் கூடாது.

குழந்தைக்கு திட்டமிடுவோர் செய்யக் கூடாது. முதல் மூன்று மாத கால கர்ப்பிணிகள் செய்யக் கூடாது.

எந்த நீர் குளியல் செய்தாலும் சரி, உடனே குளிக்கக் கூடாது.

20 நிமிடங்கள் கழித்து, குளிக்கலாம்.