FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 23, 2015, 11:48:00 PM

Title: ~ சளியை துரத்தும் தூதுவளை துவையல்! ~
Post by: MysteRy on September 23, 2015, 11:48:00 PM
சளியை துரத்தும் தூதுவளை துவையல்!

குழந்தைகள் முதல் முதியோர் வரை பலருக்கும் மழை மற்றும் குளிர்காலங்களில் தும்மலில் தொடங்கி தலைவலி, இருமல், சளி என தொடர் உபாதைகள் ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு எல்லாம் தூதுவளை துவையல் அருமையான மருந்தாகும். முள் நீக்கிய தூதுவளை இலைகளோடு தேவையான அளவு இஞ்சி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உளுந்து, பச்சை மிளகாய், வெள்ளைப்பூண்டு, மிளகு, புளி, உப்பு சேர்த்து நெய் விட்டு வதக்கி சூடு ஆறியதும் அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும் (தூதுவளையுடன் கொஞ்சம் முசுமுசுக்கை இலையையும் சேர்த்துக்கொள்ளலாம்). இந்த துவையலை கால் அல்லது அரை மணி நேரம் கழித்து காலை சிற்றுண்டிகளான இட்லி, தோசைக்கு சேர்த்துக்கொள்ளலாம். பகல் உணவின்போது மோர் சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம். வாரத்தில் 2 அல்லது 3 நாட்களாவது தூதுவளை துவையல் சாப்பிட்டால் பல பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, குழந்தைகளின் மூளை நரம்புகள் வலிமை பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும்.
  இருமல், கபம் போன்றவற்றால் மூச்சுத்திணறும் குழந்தைகளுக்கு இஞ்சிச்சாறு, மாதுளம்பழச்சாறு கலவையுடன் தேன் கலந்து குடிக்க கொடுத்தால், பலன் கிடைக்கும். சிறு குழந்தைகளுக்கு சளியினால் மூச்சுத்திணறல் ஏற்படும்போது வெற்றிலைச் சாற்றுடன் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் கோரோஜனையை இழைத்து அரை சங்கு (பாலாடை) குடிக்கக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.