FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on September 23, 2015, 11:26:17 PM
-
முப்பழக் கூட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F09%2Fzdynmu%2Fimages%2Fp52a.jpg&hash=9d841d7c38180d8e5726c84d3449f1a837871645)
தேவையானவை:
நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், தக்காளிப்பழத் துண்டுகள் - தலா அரை கப், நறுக்கிய பப்பாளித் துண்டுகள், நறுக்கிய பெரிய வெங்காயம் - தலா கால் கப், பச்சை மிளகாய் - 3, வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு கப், பால் - ஒரு கப் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பழத்துண்டுகளை சிறிதளவு எண்ணெயில் நன்றாக வதக்கவும். நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாயை தனியாக நன்கு வதக்கி பழக்கலவையில் சேர்க்கவும். வெந்த துவரம்பருப்பை நன்கு மசித்து, வாணலியில் சேர்த்து... மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு பழக்கலவையைச் சேர்த்து மேலும் கிளறி, ஒரு கப் பாலை விட்டு கலக்கி, இறக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தை தாளித்து சேர்க்கவும்.
-
பக்கோடா மோர்க்குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F09%2Fzdynmu%2Fimages%2Fp52b.jpg&hash=302412d14d2067dacbbe4d4a432e7e3304397115)
தேவையானவை:
கடலைப்பருப்பு - 100 கிராம், பெரிய வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு , காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், புளித்த தயிர் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை:
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு எடுத்து மிக்ஸியில் அரைக்கவும். துவரம்பருப்பை ஊறவைத்து அதனுடன் தேங்காய், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடலைப்பருப்பு மாவுடன் 2 வெங்காயம் மற்றும் கொஞ்சம் கறிவேப்பிலையை நறுக்கிக் கலக்கி, உப்பு சேர்க்கவும். வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு, மாவை சிறிய பக்கோடா உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு... கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மீதமுள்ள ஒரு வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்துக் கிளறி, தேவையான நீர் விட்டு கொதிக்கவிடவும். அரைத்து வைத்த துவரம்பருப்பு விழுது, மஞ்சள்தூள் கலந்து மேலும் கொதித்தவுடன், தயிரை ஊற்றி, செய்து வைத்திருக்கும் பக்கோடாவை போட்டு ஒரு கொதி வந்தபின் இறக்கி... தேவையான உப்பு சேர்க்கவும். சுவையான பக்கோடா மோர்க்குழம்பு ரெடி.