FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on January 31, 2015, 12:26:49 AM

Title: மண்ணின் மகிமை
Post by: thamilan on January 31, 2015, 12:26:49 AM
உயிர்களின் கர்ப்பப்பையும் நீயே
சமாதியும் நீயே

எங்கள் தாய்
பத்துமாதம் தான் சுமக்கிறாள்  நீயோ
ஆயுள் முழுவதும் சுமக்கிறாய்

மற்றவர்கள் பிணம் என்று
ஒதுக்கும் போது
உன் வயிறு எங்களை ஏற்றுக்கொள்கிறது

எங்களை
முதலில் மார்பில் தவழவிட்டு பின்பு
வயிற்றில் சுமக்கும் நீ
தாய்க்கு எதிர்பதம்

ஒரே நேரத்தில் நீ
மனிதனுக்கு சமாதியாகவும்
விதைகளுக்கு கருப்பையாகவும்
இருக்கிறாய்

நீ
ஆக்குகிறாய்
காக்கிறாய்
அழிக்கிறாய்
கடவுளுக்கு நீ காரியதரிசி

மனிதனுக்கு
தொட்டில் நீ
அன்னம் ஊட்டும் வட்டில் நீ
கடைசியில் தூங்கும்
கட்டிலும் நீயே