FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 02, 2015, 01:40:24 PM
-
ஆரோக்கியம் காக்கும் காய்கறிகள், கனிகள்
காய்கறிகள், கனிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தினமும் எவ்வளவு காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா? இதுதொடர்பாக ஆய்வாளர்கள் செய்துள்ள பரிந்துரையின்படி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் அன்றாடம் அரை கிலோ காய், கனிகளை உண்பது அவசியம்.
சுமார் 65 ஆயிரம் பேரிடம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை, ’25 வயதுள்ள ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவாவது காய்கறி மற்றும் பழங்களை உண்ணவேண்டும்’ என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரை செய்து வந்தார்கள்.
ஆனால் தற்போது, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 560 கிராம், அதாவது ‘அரை கிலோவுக்கும் அதிகமாக காய்கறியும் பழங்களையும் சாப்பிடுவது தான் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது’ என்று மருத்துவ ஆய்வாளர்கள் சிபாரிசு செய்கின்றனர்.
இதன்மூலம் மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பதுடன், உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான சத்துக்களை காய்கறிகளும், பழங்களும் கொடுக்கும் என்பது இந்த ஆய்வாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
இதில் ஒரே வகையான காய்கறி, உதாரணமாக அரை கிலோ கேரட்டை சாப்பிட்டால் போதுமா, அல்லது ஒரே வகையான பழம், உதாரணமாக இரண்டு வாழைப்பழங்களைச் சாப்பிட்டால் போதுமா என்று கேட்டால், ‘அது சரியான அணுகுமுறையாக இருக்காது’ என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.
தினசரி சாப்பிடும் காய்கறி மற்றும் பழங்களில் பல்வேறு வகையான காய்கறிகளும் பழங்களும் இருப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும், அதன்மூலமே மனித உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காய்கறிகள் என்பவை விலை உயர்ந்த காய்கறிகளாகவோ, பழவகைகள் என்றதும் விலை உயர்ந்த பழங்களாகவோதான் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை என சுட்டிக்காட்டியிருக்கும் விஞ்ஞானிகள், தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய், கத்தரி, வெண்டை, கோவைக்காய், பலவகையான கீரைகள், முள்ளங்கி, வாழைத்தண்டு போன்ற காய்கறிகளும் கூட நல்ல பலனைத்தரும் என தெரிவித்துள்ளனர்.
பழங்களிலும் கூட வாழைப்பழம், நாவல்பழம், பலாப்பழம், இலந்தை, மாம்பழம் போன்ற சாதாரணமாகக் கிடைக்கும் பழங்களிலும் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.