FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 26, 2014, 08:20:09 PM

Title: ~ சர்க்கரை நோயால் காது செவிடாகும் வாய்ப்பு உள்ளது ~
Post by: MysteRy on December 26, 2014, 08:20:09 PM
சர்க்கரை நோயால் காது செவிடாகும் வாய்ப்பு உள்ளது

சர்க்கரை நோயால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்டுபிடிப்பதில் தற்போது காதுகளின் கேட்கும் திறனையும் பரிசோதனை செய்யும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் பாதங்கள், கண்கள், ஆகிய்வற்றின் ஆரோக்கியம் குறித்து அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் சர்க்கரை நோய் காதுகளை செவிடாக்கலாம் என்பதே தற்போது புதிய கவலையாக முளைத்துள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள பல்வேறு ஆய்வுகளில் ஒன்றிரண்டை மேற்கோள்காட்டி மருத்துவர்கள் தற்போது சர்க்கரை நோயால் காதுகள் கேட்கும் சக்தியை இழக்கும் என்று கூறுகின்றனர்.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காது செவிடாகும் வாய்ப்பு அந்த நோய் இல்லாதவர்களுக்கு ஏற்படுவதைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் காதுகளின் உள்ளுக்குள் சத்தங்கள் ஏற்பட்டாலோ அல்லது ரீங்காரம் போன்று ‘உய்ங்’ என்று சத்தம் வந்தாலோ உடனே காது சிறப்பு மருத்துவரைப் பார்ப்பது நல்லது. டிவியை சத்தமாக வைத்துக் கேட்பது என்பது மிகவும் பரவலாக இருந்து வரும் பழக்கமாகும். இவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்குமெனில் இவர்கள் காதுகளையும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இரண்டு காதுகளிலும் சம அளவு கேட்கும் திறன் இழப்பு ஏற்பட்டால் அது வயதான கோளாறு என்று கூறலாம். ஆனால் நிறைய இளம் வயதினர்களில் ஒரு காது சற்று மந்தமடைவது தற்போது அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அப்படியிருக்குமெனில் அதற்கு பல காரணங்களில் சர்க்கரை நோயும் ஒன்று என்கின்றனர் மருத்துவர்கள்.

காதுகளில் அழுக்கு சேருவது என்பது சர்க்கரை நோயின் ஒரு அறிகுறியாகும். ஏனெனில் காதுகளில் அழுக்கைப் போக்கும் கெராடின் என்ற ஒன்று சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குறைவாக இருக்கும் அல்லது இல்லாமலே கூட போய்விடும். கெராடின் குறைபாட்டினால் காதுகளில் அழுக்கு விரைவில் சேர்ந்து காது செவிடாகும் வாய்ப்பு ஏற்படுகிறது.

ஆகவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனி கண் பாதிப்பு, இருதயம், கால்கள், பாதங்களுடன் காதுகளையும் பரிசோதனைக்குட் படுத்துவது சிறந்தது என்கிறது மருத்துவ வட்டாரம்.