FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 12, 2014, 01:39:43 PM
-
கர்ப்ப கால நீரிழிவை அலட்சியப்படுத்தாதீர்கள்
கர்ப்பம் உறுதியான பிறகு செய்யப்படுகிற சோதனைகளில், நீரிழிவு இருப்பதாகக் காட்டும். இன்றைய தலைமுறைப் பெண்களில் பலரும் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.
‘‘பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகு நீரிழிவு காணாமல் போய் விடும் என்றாலும் இது அலட்சியப்படுத்தக் கூடியதல்ல… அந்தப் பெண்களுக்கான எச்சரிக்கை மணி’’ என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். ‘‘கர்ப்ப கால நீரிழிவு இன்று மிகப் பரவலாகக் காணப்படுகிற பிரச்சனையாகி விட்டது. முதல் காரணம் உடல் பருமன். கல்யாணத்துக்கு முன்பே உடல் பருமனுடன் காணப்படுகிற பெண்களை அதிகம் பார்க்கிறோம்.
கல்யாணத்துக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாவது அதை சரி செய்து கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு அவர்களுக்கு இருப்பதில்லை. உடல் பருமன் என்பது ஏராளமான நோய்களுக்கான நுழைவு வாசல் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. கர்ப்ப காலத்தில் 8 முதல் 12 கிலோ வரை ஒரு பெண்ணுக்கு எடை கூடுவது இயல்பு.
ஆனால், ஏற்கனவே அதிக உடல் பருமனுடன் காணப்படுகிற பெண்களுக்கு இந்த எடை இன்னும் அதிகரிக்கும். அதன் விளைவாக அவர்கள் உடலில் சுரக்கும் இன்சுலின் வேலை செய்யாமல் போகும். கர்ப்ப கால நீரிழிவு அவர்களைப் பற்றிக் கொள்ளும். கண்டதையும் தின்னத் தோன்றும் மசக்கை காலத்தில், இந்த திடீர் நீரிழிவு காரணமாக, ஒரு பக்கம் உணவுக்கட்டுப்பாட்டையும் பின் பற்ற வேண்டியிருக்கும்.
கர்ப்ப காலத்தில் உண்டாகிற நீரிழிவுக்கு இன்சுலின் போட சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. மாத்திரைகளாக எடுத்துக் கொள்கிற போது, அது கருவிலுள்ள குழந்தையைப் பாதிக்கலாம். அதனால் இன்சுலினே பாதுகாப்பு. கர்ப்ப கால நீரிழிவு தற்காலிகமானதுதான். அதாவது, 70 சதவிகிதப் பெண்களுக்கு இது பிரசவத்துக்குப் பிறகு சரியாகி விடும்.
20 சதவிகிதப் பெண்களுக்கு அது அடுத்து எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலையில் காத்திருக்கும். மீதி 10 சதவிகிதப் பெண்களுக்கு கர்ப்பத்தில் வந்து ஒட்டிக் கொண்ட நீரிழிவானது, பிரசவத்துக்குப் பிறகும் போக மறுத்துக் கொண்டு அப்படியே தங்கி விடுவதும் உண்டு. கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவானது உணவுக்கு முன் 95 மி.கி. மற்றும் சாப்பிட்டு 2 மணி நேரத்துக்குப் பிறகு 120 மி.கி. அளவுதான் இருக்க வேண்டும்.
இந்த அளவை மிகச் சரியாகத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கட்டுப்பாடற்ற நீரிழிவு கருவிலுள்ள குழந்தையை பாதிக்கும். குழந்தை வழக்கத்தை விட அதிக எடையுடன், குறைமாதப் பிரசவத்தில் பிறக்கும். பிறக்கும் போதே குழந்தைக்கு ரத்தசர்க்கரையின் அளவு மிகக் குறைவாக இருக்கலாம்.
கர்ப்ப கால நீரிழிவைக் கட்டுப்படுத்தாமல், அலட்சியப்படுத்தினால் குழந்தை தாயின் வயிற்றிலேயே இறந்து போகவும் கூடும். பிரசவத்துக்குப் பிறகு போடப்படுகிற தையல் ரணம் அத்தனை சீக்கிரம் ஆறாது. எளிதில் இன்ஃபெக்ஷன் ஏற்படும். எனவே கர்ப்ப கால நீரிழிவு வந்தால், அதை அவர்களது எதிர்கால நீரிழிவு பாதிப்புக்கான அலாரமாக எடுத்துக் கொண்டு, கர்ப்பத்தின் போதும், பிரசவத்துக்குப் பிறகும் கவனமாக இருக்க வேண்டும்.
உடல் பருமன் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு அசைவு இல்லாவிட்டால் உடனே எச்சரிக்கையாகி, மருத்துவரைப் பார்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாமல் பின்பற்ற வேண்டும்.