FTC Forum
Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Yousuf on November 29, 2011, 07:23:40 AM
-
வெளிப்படையாக தர்மம் செய்வதைவிட மறைத்து செய்வது மிகச்சிறந்தது!
"தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்" (அல்-குர்ஆன் 2:271)
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத அளவிற்கு இரகசியமாக கொடுத்தால் மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்!
நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்:
1) நீதிமிக்க அரசன்.
2) அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன்.
3) பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன்.
4) அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர்,
5) அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது ‘நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்’ எனக் கூறியவன்.
6) தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன்,
7) தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர்.என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்" (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி)
செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவதால் நன்மைகள் பாழாகிவிடும்!
அல்லாஹ் கூறுகிறான்:
"நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான (இறைநிராகரிப்பாலரான) மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை" (அல்-குர்ஆன் 2:264)
சொர்க்கம் நுழையாத மூவர்!
"சதி செய்பவனும், உலோபியும் செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்" (ஆதாரம் : நஸயி, திர்மிதி)
மேற்கண்டவைகளிலிருந்து பெறும் படிப்பினைகள்:
தான தர்மங்களை வெளிப்படையாக செய்தாலும் நல்லது! ஆனால் மறைத்து செய்வது அதை விடச் சிறந்தது
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத அளவிற்கு இரகசியமாக தர்மம் செய்தால் மஹ்ஷரில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்.
செய்த தர்மத்தை அல்லது உதவியை சொல்லிக்காட்டி நிந்தனை செய்தால் நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும்