FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 10, 2014, 08:18:24 PM

Title: ~ எப்பேர்ப்பட்ட தலைவலியும் குறைந்துவிடும்! கை வைத்தியம்!! ~
Post by: MysteRy on April 10, 2014, 08:18:24 PM
எப்பேர்ப்பட்ட தலைவலியும் குறைந்துவிடும்! கை வைத்தியம்!!


தலைவலி
அதிமதுரம், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். இரண்டும் நாட்டு மருந்துக் கடையில் பொடியாகக் கிடைக்கும். இரண்டையும் கலந்து எடுத்துக்கொள்ளவும். இந்தப் பொடியைத் தேனுடனோ, வெந்நீரிலோ கலந்து சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் குறைந்துவிடும்.

வயிற்றுப் பிரட்டலுக்கு (நாஸியா)
1 பிடி கறிவேப்பிலை, அதன் தண்டு, அரை ஸ்பூன் மிளகு, 1 டேபிள்ஸ்பூன் ஓமம். இவற்றைத் தனித்தனியாக வறுத்து, உப்பு சேர்த்துப் பொடி செய்துவைக்கவும். வயிறு சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் இது நல்லது. வயிற்றுப் பிரட்டல் இருந்தால், மோரில் கலந்து சாப்பிடவும், வயிற்று வலிக்குச் சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடவும்.

மூட்டுவலி
கால் முட்டி, கணுக்கால், கைகளில் வீக்கம் இருந்தால் அரிசி களைந்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதைச் சூடுபடுத்தி 1 பிடி கல்உப்பு போட்டு, வீக்கம் இருக்கும் இடத்தில் விடவும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் வீக்கம் சரியாகிவிடும்.

நரம்புத் தளர்ச்சி
நரம்புத் தளர்ச்சி இருந்தால் முருங்கைக் கீரையை 1 பிடி எடுத்து, நன்றாகச் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் வேப்பிலைக் கொழுந்தைக் கொஞ்சம் எடுத்து 2 டம்ளர் நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும், எடுத்து ஆற வைத்து அடுத்த நாள் காலையில் குடிக்கவும். அத்திப் பழமும் சேர்த்துக்கொண்டால், அதுவும் நல்லது.

நகச்சுத்தி
பச்சரிசி சாதத்தைச் சூடாக எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள், கால் ஸ்பூன் சுண்ணாம்பு ஆகியவற்றைச் சேர்த்து உடல் பொறுக்கக்கூடிய சூட்டில் நகத்தில் வைத்து நன்றாகக் கட்டிவிடவும். இப்படிச் செய்தால் நகச்சுத்தி பழுத்து உடைந்துவிடும்.

பி.பி., சர்க்கரை நோய்க்கு
சர்க்கரை நோய் வருவதைத் தவிர்க்க, நெல்லிக்காயின் கொட்டை, நாவல்பழக் கொட்டை பொடிகளை எடுத்து, 1 டம்ளர் நீரில் 1 ஸ்பூன் பொடியைப் போட்டுக் குடிக்கவும். இரண்டு பொடிகளும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்.