FTC Forum
		தமிழ்ப் பூங்கா  => நாவல்கள்  => Topic started by: Maran on February 28, 2014, 11:30:16 AM
		
			
			- 
				---------------------------------------------------------------------
 தண்ணீர் தேசம்
 
 கவிஞர் வைரமுத்து
 ---------------------------------------------------------------------
 1
 
 கடல்...
 உலகின் முதல் அதிசயம்.
 சத்தமிடும் ரகசியம்.
 காலவெள்ளம்
 தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.
 
 வாசிக்கக் கிடைக்காத
 வரலாறுகளைத் தின்றுசெரித்து
 நின்றுசிரிக்கும் நிஜம்.
 
 கடல்...
 ஒருவகையில் நம்பிக்கை.
 ஒருவகையில் எச்சரிக்கை.
 
 கடல்குடித்துக் கொண்டிருந்த
 கலைவண்ணன் மடியில்கிடந்த
 தமிழ்ரோஜாவை மறந்துபோனான்.
 
 அவள் அழகின் நவீனம்.
 சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
 சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
 பாயும் தங்கம் அவள் தேகம்.
 பொறுக்கி எடுத்த உலக
 அழகுகளை நெருக்கித் தொடுத்த
 நேர்த்தியான சித்திரம். குமரி
 வயதுகொண்ட குமரி அவள்.
 
 அவன் அழகன். இளைய அறிஞன்.
 காதலிக்கும்போதும் கம்பீரம்
 குறையாதவன்.
 
 என்ன யோசனை?
 என்றாள் தமிழ்.
 கலைவண்ணன் மனது
 கரையேறியது.
 
 இந்தச் செவிட்டுக் கரைகளோடு
 அந்த அலைகள் இத்தனை
 யுகங்களாய் அப்படி என்னதான்
 பேசும் என்று யோசிக்கிறேன்.
 
 பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
 கடல் தூரத்துவானத்துக்குத்
 தூரிகையில்லாமல் எப்படி
 வர்ணமடிக்கிறது என்று
 யோசிக்கிறேன்.
 
 மடியில் கிடந்தவள் நொடியில்
 எழுந்தாள்.
 
 நீங்கள் கடல்பைத்தியம்.
 
 இல்லை. நான் கடற்காதலன்.
 
 கடல் உங்களுக்குச் சலிக்கவே
 சலிக்காதா?
 
 காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோஜா.
 அவள் மல்லிகைக்கரம் தொட்டு
 மணிக்கட்டில் முத்தமிட்டான்.
 நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.
 
 அவளை இழுத்து வளைத்து
 இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
 மடியில் ஊற்றிக் கொண்டான்.
 
 ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.
 
 காதுமடல்களின் வெயில்மறைவுப்
 பிரதேசங்களில் விளையாடி
 அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
 நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
 கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.
 
 அவன் அறிவான் - ஊடல் என்பது
 பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
 வம்புக்கிழுத்தான்.
 
 வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.
 
 அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.
 
 கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.
 ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
 
 இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.
 
 எதனால்?
 
 ஆக்டோ பஸ அலைகள் என்னை அள்ளிக்
 கொண்டோ டிவிட்டால்?
 
 அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
 
 சிரித்தது அவன் நுரைத்தது கடல்
 
 தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா,
 தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
 கலைவண்ணன்.
 
 வா
 
 மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.
 குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
 வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
 விழிமுடிக் கொள்வேன்.
 
 ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
 ததும்பும்போது என் படுக்கையில் நான்
 வியர்த்து விழிக்கிறேன்.
 
 மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
 ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.
 
 ஒரே ஒரு பயம்
 எனக்கு தண்ணீர் பயம்
 
 பேசப் பேச அவள்
 படபடப்பைப் பறைசாற்றின
 கண்களில் உடைந்துவிழுந்த
 மின்மினி மின்னல்கள்.
 
 கலைவண்ணன் கரைமீண்டான்.
 அவளை ஆதரவாய் அணைத்து
 அங்கவஸதிரமாய்த் தோளில்
 அணிந்து அவள் சுட்டுவிழி தாழும்
 வேளை கன்னத்தில் சுட்டுவிரல்
 கையெழுத்திட்டான்.
 
 காதல் மண்டியிட்டான். காதில்
 ஓதினான்.
 
 தமிழ்ரோஜா
 
 அதைவிட சுகமாக
 அம்சத்வனிராகம்கூட அவள்
 பெயரை உச்சரித்திருக்க
 முடியாது.
 
 காதல் அழைக்கும் போதுதான்
 பெயர்வைத்ததன்
 பெருமைபுரிகிறது.
 
 அந்த சுகம் மீண்டும் அவளுக்கு
 வேண்டியிருந்தது. அதனால்
 உம் கொட்டாமலிருந்தாள்.
 
 தமிழ்ரோஜா
 
 - இப்போது அவன் அழைத்தது
 தோடிராகம்.
 
 உம் என்றாள் தமிழ்.
 
 தண்ணீருக்கு நீ பயந்தால்
 உன்னைக்கண்டு நீயே
 பயப்படுகிறாய் என்று
 அர்த்தம்.
 
 புரியவில்லை.
 
 உன் உடம்பு என்பதே
 முன்றில் இரண்டுபங்கு தண்ணீர்.
 உன் அழகுதேகம் என்பது 65
 சதம் தண்ணீர்.
 
 மெய்யாகவா?
 
 தமிழிடம்
 பொய்சொல்வேனா?
 விஞ்ஞானம் விளம்பக்கேள்...
 வாழும் உயிர்களை
 வடிவமைத்தது தண்ணீர்.
 70 சதம் தண்ணீர் - யானை.
 65 சதம் தண்ணீர் - மனிதன்.
 என் அமுதமே. உன் உடம்பில்
 ஓடுவது 7.2 லிட்டர் உப்புத்
 தண்ணீர்.
 
 நம்ப முடியவில்லை.
 
 உண்மைக்கு உலகம்வைத்த
 புனைபெயர் அதுதான்.
 
 உடம்பில் ஏன் உப்புநீர்
 ஓடுகிறது?
 
 கடற்கொடை. தாய்தந்த
 சீதனம். முதல் உயிர் பிறந்தது
 நீரில் என்பதால் ஒவ்வோர்
 உடம்பிலும் இன்னும்
 ஓடிக்கொண்டேயிருக்கிறது அந்த
 உறவுத் திரவம்.
 
 முதல் உயிர் பிறந்தது
 கடலிலா? நம்புவதெப்படி
 நான்?
 
 கலையின் கழுத்தைக்
 கட்டிக்கொண்டாள் தமிழ்.
 ஒருவருக்கான காற்றை
 இருவரும் சுவாசித்தார்கள்.
 
 சுகபோதையிலும் கலைவண்ணன்
 உண்மை உளறினான்.
 
 கடலில் பிறந்த முதல் உயிர்
 தண்ணீரில்தானே சுவாசித்திருக்க
 முடியும். அந்த மரபுரிமையின்
 தொடர்ச்சிதான் இன்றும்
 கர்ப்பத்தில் வளரும் சிசு
 தண்ணீர்க் குடத்தில்
 சுவாசிக்கிறது.
 
 ஆகா, என்று ஆச்சரியம்
 காட்டிய தமிழ் அவன் முகத்தில்
 முள்குத்தாத பிரதேசம்தேடி
 முத்தமிட்டாள்.
 
 அந்த முத்தச்சூடு உயிரெல்லாம்
 பரவக்கண்டவன், அவள்
 கழுத்தடியில் கைபதித்துக்
 குளிரக்குளிரக் குறுமுடி
 கோதினான். குழந்தையே.
 என் குழந்தையேஎன்று
 கொஞ்சினான்.
 
 புரிகிறதா? கடல் நம்
 தாய். தாய்கண்டு தமிழ்
 அஞ்சலாமா?
 
 தாயென்றால் பூமியை அவள்
 ஏன் புசிக்க வேண்டும்?
 
 அவள் மீது குற்றமில்லை.
 கடலின் கீழேநகரும் பாறைகள்
 அவளை நகர்த்திவிடுகின்றன.
 
 அவளுக்கா கருணையில்லை.
 கடல் தந்த அனுமதியால்தான்
 முழ்காத நிலப்பகுதி முச்சுவிட
 முடிகிறது.
 
 கடல்நீர் இடம்மாறி
 நிலப்பரப்பில் நின்றால் எல்லா
 இடங்களிலும் முன்று
 கிலோமீட்டர் உயரம். தண்ணீர்
 நிற்கும்.
 
 புள்ளிவிரம் சொல்லியே
 பொழுது
 போக்கிவிட்டீர்கள்.
 
 சரி, நல்லவிவரம்
 சொல்லட்டுமா? ஒரு
 முத்தத்தில் எத்தனை வோல்ட்
 மின்சாரம்தெரியுமா?
 
 போதும். போதும்.
 புள்ளிவிவரப் புலியே.
 ஆளைவிடுங்கள்.
 
 விடமாட்டேன். வா.
 
 தண்ணீரில் நனை அல்லது
 தண்ணீரை நனை. அலையோடு
 விளையாடு.
 
 தெறிக்கும் திரவநட்சத்திரங்கள்
 சொல்லாத இடங்களில்
 விழுகையில் இல்லாத அனுபவம்
 எழுமே....
 அந்த சுகம் துய்.
 
 எத்தனை மனிதர்
 கடல்பார்த்தனர்? எத்தனை
 மனிதர் இதில் கால்வைத்தனர்?
 
 வா. இந்தச் சிற்றலையில்
 கால் வைத்து யாரும் செத்துப்
 போனதில்லை.
 
 தண்ணீர் பயம் தவிர்.
 சொட்டச் சொட்ட நனை.
 கிட்டத்தட்டக் குளி.
 நீரின் பெருமை நிறையப்பேர்
 அறியவில்லை. காதலி பெருமை
 பிரிவில். மனைவி பெருமை
 மறைவில். தண்ணீரின் பெருமை
 பஞ்சத்தில். அல்லது
 வெள்ளத்தில்.
 
 நீ உணவில்லாமல் ஒருமாதம்
 வாழலாம். நீரில்லாமல்
 ஒருவாரம் வாழமுடியாது.
 தண்ணீர்தான் உயிர். இந்தக்
 கடல் அந்த உயிரின் தாய்.
 தாயோடு தள்ளி நிற்பதா?
 வா.
 
 எட்டி நின்றவளைக் கட்டிப்
 பிடித்தான். திமிறினாள்.
 வாழைத்தண்டாய்
 ஓடிந்தாள். வாளை மீனாய்
 வழுக்கினாள்.
 
 அவன் முன்னுக்கிழுத்தான். அவள்
 பின்னுக்கிழுத்தாள்.
 
 வேண்டாம். இந்த
 விளையாட்டுமட்டும்
 வேண்டாம்.
 
 என்னோடு வாழ்ந்தால் நீ
 நெருப்புப் பள்ளங்கள் தாண்ட
 வேண்டியிருக்கும். நீர்கண்டு
 பயந்தால் எப்படி?
 
 நெருப்புப் பயம் இல்லை.
 தண்ணீர்தான் பயம்.
 அவன் தூக்கமுயன்றான். அவள்
 துவண்டு விழுந்தாள்.
 
 கைதட்டிச் சிரித்தன அலைகள்.
 நாடகம் பார்த்தன நண்டுகள்.
 
 சிதறிவிழுந்தவளைச்
 சேர்த்தெடுத்தான். அவளைச்
 சுமந்து அலையில் நடந்தான்.
 
 அவளோ அந்தரத்தில்
 நீச்சலடித்தாள். இடுப்பளவுத்
 தண்ணீரில் இறக்கிவிட்டான்.
 அஞ்சினாள். தண்ணீரின்
 ததும்பலில் மிரண்டாள்.
 
 அவனை உடும்பாய்ப்
 பற்றினாள். அவன் உதறி
 ஒதுங்கினான்.
 
 நுரைச் சதங்கைகட்டி ஆடிவந்த
 அலைகள்கண்டு அலறினாள்.
 பிரமைபிடித்துப்
 பேச்சிழந்தாள்.
 
 தூரத்திலிருந்து ஒரு பேரலை
 அவள் பெயர் சொல்லிக்
 கொண்டே படைதிரட்டி
 வருவதாய்ப் பட்டது அவளுக்கு.
 அவ்வளவுதான்.
 அவள் ஞாபகச்சங்கிலி
 அறுந்துவிட்டது.
 
 அந்த முர்க்க அலையின்
 மோதுதலில் தன்னிலை குலைந்து
 தடுமாறி எழுந்து ஒருகணம்
 மிதந்து மறுகணம் அமிழ்ந்து
 மீண்டும் எழுந்து மீண்டும்
 விழுந்தாள். அலைகளில்
 தொலைந்தாள்.
- 
				2
 
 மருத்துவமனை.
 
 குடல் குடையும் மருந்துவாசம்.
 துடைத்துவைத்த சோகம்.
 
 வெள்ளைவெள்ளையாய்
 அவசரங்கள். ஆங்கிலத்தில்
 அகவும் அழகுமயில்கள்.
 
 அறை எண் 303.
 
 மேகத்தில் நெய்தெடுத்த
 மெல்லிய போர்வையின்கீழே
 சோர்ந்துகிடந்தது
 சுடிதார்ரோஜா. அவள்
 கண்கள் செயற்கை உறக்கச்
 சிறையிலிருந்தன.
 
 பாரிஜாதப் பூவில்
 பட்டாம்பூச்சி
 உட்காருவதுபோல் படுக்கையில்
 பைய அமர்ந்து அன்புமகள்
 நெற்றிதொட்டார் அகத்தியர்.
 
 மாலை நேரத்து வெயிலாய்
 அது சூடுகுறைந்து சுட்டது.
 
 உடம்பில் இப்போது
 உப்புநீர் இல்லை. சுவாசப்பை
 சுத்தம், நுரையீரல் தரைவரை
 பிராணவாயு பிரயாணம்.
 ஓய்வுதான் தேவை.
 உறங்கவிடுங்கள்.
 
 செவிலியின் வெள்ளை அறிக்கை
 அவரை வெளியேற்றியது.
 
 அறைக்கு வெளியே தூரத்தில்
 தெரிந்த துண்டுவானத்தையே
 பார்த்துச் சலித்த கலைவண்ணன்
 தன் பக்கத்திலிருந்த
 பூந்தொட்டியில் தன்
 இதயம்போல் துடிதுடிக்கும்
 இலைகளுக்குத் தாவினான்.
 
 சிகரெட் புகை சிந்தனை
 கலைத்தது. புகைக்குப் பின்னே
 அகத்தியர் தோன்றினார்.
 
 நல்ல உயரம். நாகரிகத்
 தோற்றம். நாற்பதுகளில்
 நட்சத்திரமாய்த் தொடங்கிய
 வழுக்கை - ஐம்பதுகளில்
 முழுமதியாய்
 முற்றுகையிட்டிருந்தது.
 தடித்த கண்ணாடி.
 தங்கஃபிரேமுக்காக
 மன்னிக்கலாம்.
 
 பெருந்தொழில் அதிபர்.
 நாடாளுமனறத்தில் -
 வரிபாக்கிப்
 பட்டியலில் வந்து வந்து
 போகிறவர்.
 
 கலைவண்ணனுக்கு அவரிடம்
 பிடித்தது அவர் பெண்.
 பிடிக்காதது அவர் பிடிக்கும்
 சிகரெட்.
 
 தமிழை இன்னும் கொஞ்சம்
 மென்மையாய்க்
 கையாண்டிருக்கலாம்
 என்றார் அகத்தியர் புகைசூழ.
 
 இப்படி நீரச்சம்கொண்டவள்
 என்று நினைக்கவில்லை
 நான்.
 
 கனவுகள் நிஜங்களாகவும்,
 நிஜங்கள் கனவுகளாகவும்
 தோன்றும், அந்தப்
 பள்ளிவயதில் கொடைக்கானல்
 ஏரியில் பள்ளித் தோழிகளோடு
 இவள் படகில் போனாள். அது
 கவிழ்ந்தது. மீட்கப்பட்டவள்
 இவள் மட்டும்தான். சில
 நாட்களில் ஏரியெங்கும்
 சீருடைப்பிணங்கள் மிதந்தன.
 அன்று கொண்ட நீரச்சம்
 இன்றும் தீரவில்லை.
 
 நீரச்சம் நிரந்தர அச்சம்
 அல்ல. நிச்சயம் களையலாம்.
 இல்லையென்றால் அந்தப் பயம்
 உடலையும் மனதையும்
 உள்ளிருந்தே தின்றுவிடும்.
 இந்தத் தண்ணீர்பயத்தைத்
 தவிர்த்தாக வேண்டும்.
 
 கவனம்.
 தூசு எடுக்கும் அவசரத்தில்
 கருமணியே
 தூர்ந்துவிடக்கூடாது. எனக்கு
 அவள் ஒரே பெண்.
 
 இதுதான் அடிக்கடி கேட்கும்
 அப்பாமொழி.
 ஒரே பெண் என்றால்
 நூறுசதம் அன்பா? இரண்டு
 பெண்கள் என்றால் ஆளுக்கு
 ஐம்பதுசதம் அன்பா? நான்கு
 பெண்கள் என்றால் இதயத்தை
 நான்காக்கி இருபத்தைந்து
 சதமா?
 
 ஒரே பெண் என்றால்
 உயிர்ப்பாசம் வருமா?
 இன்னொரு பெண் இருந்தால்
 இவள் இறந்துபோகச்
 சம்மதமா?
 
 உங்கள் ஆண்மைகலந்த
 அறிவுதான் என் மகளைத்
 தலைசாயவைத்தது. என்னைத்
 தலையாட்ட வைத்தது. ஆனால்
 தர்க்கம் வேறு. தர்மம்
 வேறு.
 சில குணங்களை
 எதிர்த்திடக்கூடாது.
 ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
 இயல்புகளை
 ஏற்றுக்கொள்ளலாம்.
 திரிபுகளை ஏற்றுக்கொள்ள
 முடியாது.
 எனக்கு நீல விழிகள் பிடிக்கும்.
 ஆனால், தமிழ்ரோஜா விழிகள்
 கருமை. இருள் உறைந்த
 கருமை. நிறம் என்பது
 நிறமிகளின் வேலை. அது
 இயல்பு. ஏற்றுக்கொள்கிறேன்.
 ஆனால் நீரச்சம் என்பது
 திரிபு. அது விழியின்
 கருமைபோல் இயல்பானதல்ல.
 துணியில்
 அழுக்கைப்போல் திரிபானது.
 மனச்சலவை ஒன்றே
 மருந்து.
 
 சலவை செய்யும் ஆர்வத்தில்
 சல்லிசல்லியாகிவிடக் கூடாது.
 அவள் மென்மையானவள்.
 
 அப்பாக்கள் செய்யும்
 இரண்டாம் தவறு இது.
 மென்மையை நீங்கள்
 கற்பிக்கிறீர்கள். பெண்களின்
 செருப்பைக்கூட
 மெல்லியதோலில்
 வடிவமைக்கிறீர்கள். பதினாறு
 வயதுக்கு மேலும் பலூன்வாங்கி
 வருகிறீர்கள்.
 சில்லென்று முளைக்கும்
 சிறகுகளைக்கூட வேண்டாத
 ரோமங்களென்று வெட்டி
 விடுகிறீர்கள்.
 அதனால்தான் காற்று
 கடுமையாக அடித்தாலே பல
 பெண்களுக்கு ரத்தம்
 கசிந்துவிடுகிறது.
 
 ஒன்று சொல்கிறேன்
 உங்களுக்கு. என் உயிரின்
 கடைசிச்சொட்டுவரை
 அவள்தான் நிறைந்திருக்கிறாள்.
 என்
 நீண்ட பயணத்திற்குத் தகுதியாக
 அவளைத்
 தயாரிக்கவேண்டும்.
 
 அவள் உங்களுக்குத் தகுதி
 இல்லாதவளா?
 
 அப்படியில்லை.
 அன்பில் - குணத்தில் -
 காதலில் அவள் என்னிலும்
 மிக்கவள். ஆனால், என்
 வாழ்க்கைக்குத் தயாராய்
 அவள் இன்னும்
 வார்க்கப்படவில்லை.
 என்னுடையது புயல்யாத்திரை.
 அவள் பூஜையறைக்
 குத்துவிளக்கு. அணைந்து
 போகாமலிருப்பது எப்படி
 என்பதைச் சுடருக்குச்
 சொல்லிக்
 கொடுக்கவேண்டும்.
 
 அகத்தியர் பேசவில்லை.
 தன் மெளனத்தைப் புகையாய்
 மொழி பெயர்த்தார்.
 பிறகு வேர்களில் வீழாமல்
 இலைகளைமட்டும் நனைக்கும்
 சாரலாய் - கலைவண்ணன்
 காதுதொடாமல் தனக்குத்
 தானே பேசிக்கொண்டார்.
 
 நான் தவறான இடத்தில்
 தலையாட்டி விட்டேனா?
 
 காற்றில் கசிந்த வார்த்தை
 அவன் காதுகளில்
 விழுந்துவிட்டது. சுள்ளென்று
 ஏதோ சுட்டது.
 பொங்கிவழியாமல்
 புலனடக்கம்கொண்டான்.
 மோனோலிசாவின்
 புன்னகைதிருடி உதடுகளில்
 ஒட்டிக்கொண்டான். மெல்ல
 மெல்லச் சொல்லவிழ்த்தான்.
 
 நீங்கள் தலையாட்டியது
 தப்பானவனுக்கல்ல.
 சரியானவனுக்குத்தான்.
 எனக்குக் கிராமத்துக்
 குட்டிச்சுவர் வாழ்க்கையும்
 தெரியும். நகரத்து நட்டசுவர்
 வாழ்க்கையும் தெரியும்.
 
 எனக்குச் சோளக்கூழில்
 மிதக்கும் மிளகாயும் தெரியும்.
 உங்கள் சாராயக் கிண்ணங்களில்
 முழ்கிமிதக்கும் பனிக்கட்டிகளும்
 தெரியும்.
 
 எனக்கு மழையில் நனைந்த
 வைக்கோல் வாசமும்
 தெரியும். சொட்டுக்கு ருபாய்
 நூறு தந்தால் மட்டுமே
 மணக்கும் அரேபிய அத்தரும்
 தெரியும்.
 
 செருப்பில்லாத எனது
 பாதத்தில் காட்டுப்பாதையில்
 குத்திய கருவேலமுள்ளை
 நகரத்துத் தார்ச்சாலையில்
 வந்து தேய்த்தவன் நான்.
 
 நீங்கள் விதையில்லாத
 திராட்சைகளை விழுங்கி
 வளர்ந்தவர்கள். நான்
 கற்றாழைப்பழத்தின்
 அடியிலிருக்கும் நட்சத்திரமுள்
 பார்த்தவன்.
 
 நான் சென்னை வந்தது என்
 அறிவுக்கு அங்கீகாரம் தேடி
 அல்ல. உடல் உழைப்புக்கும்
 முளை உழைப்புக்குமான
 வித்தியாசத்தின் வேர்காண
 வந்தேன்.
 
 சென்னை நூலகங்களில்
 வாடகைதராமல் வசித்தேன்.
 இரைப்பையைப் பட்டினியிட்டு
 முளைக்குப் புசித்தேன்.
 சமுகத் தேடல் கொண்ட
 பத்திரிகையில் சேர்ந்தேன்.
 
 ஒரு கல்லூரி விழாவில் உங்கள்
 மகளைச் சந்தித்தேன்.
 முதன் முதலில் என் உயிர்மலரக்
 கண்டேன்.
 மென்மைச் சிறையைவிட்டு
 அவளை மெல்ல மெல்ல மீட்க
 நினைக்கிறேன்.
 ஏனென்றால் நான் பயணிப்பது
 மயிலிறகு பரப்பிய மல்லிகைப்
 பாதையல்ல.
 நான் சகாராவின்
 சகோதரன்.
 பகல் சுடும் - இரவு குளிரும்
 - இதுதான் என் பயணம்.
 
 நான் பத்திரிகைக்காரன்.
 பேனாவின் முடிதிறந்தபோதே
 என் மார்பையும் திறந்துவைத்துக்
 கொண்டவன்...
 
 அவன் பேசப்பேச, துடிக்கும்
 ரத்தம் துடிக்கிறதுஎன்று
 அகத்துக்குள் சிரித்த அகத்தியர்
 அவன் முச்சுவாங்கவிட்ட
 இடைவெளியைத் தனதாக்கிக்
 கொண்டார்.
 
 தமிழை
 மணம்செய்துகொண்டால்
 உங்கள் பாலைவனம் கடக்கச்
 சொந்த விமானம் ஒன்று
 தந்துவிட
 மாட்டேனா?
 
 சொந்தத்தில் விமானம்
 வாங்கலாம். அனுபவம் வாங்க
 முடியுமா?
 
 உங்கள் பணம் எனக்குக்
 குடைவாங்கித் தரலாம்.
 மழைவாங்கித் தர முடியுமா?
 
 உங்கள் பணம் மின்னல்.
 அதிலிருந்து வெளிச்சம்
 வரலாம்.
 ஆனால், வெளிச்சமெல்லாம்
 தீபமாகுமா?
 
 அகத்தியர் அவன்
 தோள்தொட்டார். அந்தத்
 தொடுதலில் அனுபவம்
 கனத்தது.
 
 பணம் இல்லாதவன்தான்
 பணத்தை மதிப்பதில்லை.
 சொல்லிலும் உதட்டிலும் சிந்தி
 வழிந்தது சில்மிஷம்.
 
 நான் பணம்
 உள்ளவனைத்தான்
 மதிப்பதில்லை.
 ஒவ்வொரு பணக்காரனின்
 ஆழத்திலும் கண்ணுக்குத்
 தெரியாத
 ஒரு குற்றம்
 கால்கொண்டிருக்கிறது.
 
 பணம் ஒரு விசித்திரமான
 மாயமான். அது தன்னைத்
 துரத்துபவனுக்குக்
 குட்டி போட்டுவிட்டு
 ஓடிக்கொண்டேயிருக்கிறது.
 குட்டிகளில் திருப்தி அடையாத
 மனிதன் தாய்மானைப் பிடிக்கும்
 வேட்டையில் தவிக்கத் தவிக்க
 ஓடிச் செத்துப் போகிறான்.
 
 இந்தப் பிரபஞ்சமே
 எனது பெட்டி
 என்கிறேன் நான். இல்லை
 உங்கள்வீட்டுப் பெட்டிக்குள்தான்
 பிரபஞ்சம் என்கிறீர்கள்
 நீங்கள்.
 உங்களைப் பிரபஞ்சமாய்
 விரியவிடுங்கள். பிரபஞ்சத்தை
 உங்களாய்ச் சுருக்கி
 விடாதீர்கள்.
 
 எப்போதும் வெப்பம்.
 எதிலும்
 ஆவேசம். எதையும்
 அறிவாகவே
 பார்க்கும் அவசரம். இது
 தகாது
 கலைவண்ணன்.
 நீங்கள் புன்னகையைக்
 கழற்றிவிட்டுப் போர்வாள்
 தரித்திருக்கிறீர்கள்.
 
 போர்தான். அடுத்த
 நூற்றாண்டு
 யுத்தம்தான். மிருகவாழ்க்கை
 மனிதனுக்குத் திரும்பும். வலிமை
 உள்ளது மட்டுமே தப்பிக்கும்.
 அன்பு - அறம் - எல்லாம்
 அன்றில் - அன்னம் பட்டியலில்
 காணாமல்போகும்.
 அடுத்த நூற்றாண்டில் எவனும்
 சைவனாய் இருக்கமாட்டான்.
 நரமாமிசம் தின்பான்.
 டீக்கடைகளின் மனிதரத்தம்
 விற்கும்.
 
 இந்த நூற்றாண்டு மனமும்
 உடம்பும்
 அடுத்த நூற்றாண்டுக்காகாது.
 
 நகரவாழ்க்கை என்னும் இந்தத்
 தார்ப்பாலைவனம் கடக்க
 தோல் - தோள் இரண்டும்
 தடித்திருக்கவேண்டும்.
 
 இனி வருவது போராளிகளின்
 காலம். மனிதர்களோடு
 மனிதர்களும் -
 எந்திரங்களோடு
 எந்திரங்களும்,
 தொடர்ந்து யுத்தம்
 புரியும் ஒலிகளின் நூற்றாண்டு.
 
 அந்த யுத்தத்திற்குத் தங்களைத்
 தயாரித்துக் கொண்டவர்கள்
 மட்டுமே ஜீவிதரயிலின் அடுத்த
 நூற்றாண்டுப் பெட்டியில் ஏறிக்
 கொள்ளலாம். முடியாதவர்கள்
 இந்த நூற்றாண்டின்
 இறுதியிலேயே
 இறங்கிக் கொள்ளலாம்.
 
 வாழ்க்கையின்மீது
 நீங்கள்மட்டுமே
 நிறைவேற்றிக்கொள்ளும்
 அவநம்பிக்கைத் தீர்மானம்
 இது.
 
 இந்தத் தீர்மானத்தை ஆதரித்து
 உயர்வது உங்கள்
 ஒருகரமாய்த்தானிருக்கும்.
 இன்னொரு கரம் உயர்ந்தால்
 அது உங்கள் இடக்கரமாய்
 இருக்கலாம்.
 
 அவ்வளவுக்கு வாழ்க்கை இன்னும்
 அழுகிவிடவில்லை. அழுகப்
 போவதுமில்லை.
 
 வேட்டையாடுகிற
 வேட்டையாடப்
 படுகிற இரண்டு இனங்களும்
 உயிர்கள் தோனறிய
 காலந்தொட்டு
 உலவிக்
 கொண்டுதானிருக்கின்றன.
 ஆனால், சிங்கம்
 அழிந்துவிடவுமில்லை. முயல்
 முடிந்துவிடவுமில்லை.
 
 வலைகளின் எண்ணிக்கை
 அதிகமானதற்காய் மீன்களின்
 எண்ணிக்கை
 குறைந்துவிடவில்லை.
 
 ஒப்புக்கொள்கிறேன்.
 ஆனால் வலைகளை அறுக்கத்
 தெரிந்தவைமட்டுமே
 வாழ்கின்றன
 என்கிறேன்.
 
 நம் வாழ்க்கை முறை உடம்பை
 வாழையாய் வளர்த்துவிட்டது.
 மனதைக் கோழையாய்
 வளர்த்துவிட்டது. உடம்புக்கும்
 மனதுக்கும் ஒருமைப்பாடு
 இல்லை.
 
 செருப்புக் கடித்துச்
 செத்துப்போகும்
 தேகங்களை
 வளர்த்துவிட்டோ ம்.
 தந்திவந்தால் இறந்துபோகும்
 இதயங்களை
 வளர்த்துவிட்டோ ம்.
 
 தேகம் வன்மை செய்து இதயம்
 செம்மை செய்யும் பயிற்சிகள்
 இல்லை.
 
 இனிவரும் நூற்றாண்டுகளில்
 மழை
 நிறைய இருக்குமோ
 இல்லையோ -
 இடி நிறைய இருக்கும்.
 
 கற்பகவிதைகள் வாங்கிக்
 காளான் சாகுபடி செய்யும்
 இந்தக் கல்விமுறையும் -
 ஈசல் பண்ணைகளாகிவிட்ட பல்கலைக்
 கழகங்களும் மாணவர்களுக்குத் தந்தனுப்புவது
 அடுத்த நூற்றாண்டு ஆயுதம் அல்ல
 கடந்த நூற்றாண்டுக் கவண்வில்.
 
 உங்கள் பெண்ணும் விதிவிலக்கல்ல அவள்
 ஈசல் உடம்புக்காரி காளான் மனசுக்காரி
 
 என்னிடம் விட்டுவிடுங்கள் எனக்கு
 அவளை இணை செய்து கொள்கிறேன்.
 
 அகத்தியர் அவன் கண்களைக் கவனித்தார்
 அவற்றில் நம்பிக்கை நட்சத்திரங்கள்
 மிதந்து மிதந்து மின்னின.
 
 அவனது சொல்லின் உஷணம் அவரைச்
 சுட்டாலும், நெல்லிக்காயின் ஆழத்திலிருக்கும்
 இனிப்பை நேசிப்பதுபோல் - அவன்
 சொல்லின் உள்ளிருக்கும் அசையாத
 நம்பிக்கையை ஆராதித்தார்.
 
 என்ன அது சத்தம்?
 
 என்னை விட்டுவிடுங்கள். தண்ணீரில்
 கொல்லாதீர்கள். நீங்கள் என்னை நேசிக்க
 வில்லை. நீங்கள் என்னை நேசிக்கவில்லை.
 
 தமிழ் ரோஜாவின் கதறல் அவர்களின்
 காதுமடல் திருகியது. அவர்கள் கால்களால்
 பறந்தார்கள்.
- 
				3
 
 அன்புள்ள தமிழ்ரோஜா.
 
 இதுவரை உனக்கு நான் எந்தக்
 கடிதமும் எழுதியதில்லை.
 
 கடிதம் என்பது தூரங்களின்
 காகித வடிவம்.
 
 உனக்கும் எனக்கும்
 தூரமில்லை.
 உன் காதுகள் என்
 உதடுதொடும்
 தூரத்திலேயே இருந்ததால்
 காகிதத்தில் பேசும் அந்நியம்
 நேர்ந்ததில்லை.
 
 இன்னொன்று.
 காதல் கடிதங்கள் உணர்ச்சியின்
 மத்தாப்புகளாய் இருப்பதுண்டே
 தவிர உண்மையின் தீபங்களாய்
 இருப்பதில்லை.
 
 ஒரு காதல் கடிதம்
 படிக்கப்படும்போதே
 எண்பது சதவிகிதம் கழிக்கப்பட
 வேண்டும். மிச்சமிருக்கும்
 இருபது சதவிகிதத்தில்
 உணர்ச்சியின் வண்டலின்கீழே
 உண்மையும் கொஞ்சம்
 உறைந்திருக்கும்.
 
 உலகத்தின் காதல்
 கடிதங்களெல்லாம்
 அழகானவை. ஆனால்
 ஆரவாரமானவை.
 
 நிலாவில் ரத்தம் கசிவதுபோல்
 மீசையோடு பிறந்த
 குழந்தைபோல்-
 கவனம் ஈர்ப்பவை.
 ஆனால் எதார்த்தம் மீறியவை.
 
 எனவே இடைவெளி
 இருந்திருந்தாலும் உனக்கு நான்
 எழுதியிருக்கமாட்டேன்.
 
 பள்ளம் நிரப்ப
 நுரைகொட்டியிருக்கமாட்டேன்.
 
 ஆனால், இப்போது
 எழுதுகிறேன்.
 ஏனென்றால், இது காதல்
 கடிதமல்ல.
 என் தன்னிலைவிளக்கம்.
 
 உன்னைக் காதலிக்கத்
 தொடங்கியபிறகு
 ஒருநாளில் எத்தனை
 மணிநேரம் நான்
 முட்டாளாயிருக்கிறேன்
 என்பதன் மொத்தத்
 தொகுப்பு.
 
 நான் உன்னை
 நேசிக்கவில்லையோ என்று உன்
 உணர்வுகள் உறங்கும்போது நீ
 உச்சரித்தாய்.
 
 என் காதலின் எடை என்ன
 என்பதை
 மில்லிகிராம் சுத்தமாய்ச்
 சொல்லிவிட முடியாது.
 
 கத்தியால் கைகீறி ரத்தம்
 காட்டவும் மாட்டேன்.
 
 நேசம்காட்ட அனுமன்போல்
 நெஞ்சுகிழிக்கவும் மாட்டேன்.
 
 பின் -
 அடையாளம் எதுவென்பாய்.
 
 என் வானத்தில் சூரியன்
 அஸதமிக்கவில்லையே.
 அதுதான் அடையாளம்.
 
 எந்தப் புதுப்பேனா
 வாங்கினாலும்
 என்பெயர் எழுதிப்பார்ப்பதை
 மறந்துஅனிச்சைச் செயலாய்
 உன்பெயர்
 எழுதிப்பார்க்கிறேனே.
 அதுதான் அடையாளம்.
 
 கவிதைகள் அடையாளம்.
 என் கண்ணீர் அடையாளம்.
 
 ஒருநாள் என் அறையில் நீ
 தவறவிட்ட
 உன் பூப்போட்ட கைக்குட்டை
 என் பூஜைப்பொருள்.
 
 என் வீட்டுக்கண்ணாடியில்
 உன்படத்தை ஓரத்தில் ஒட்டி,
 உன் படத்தின் பக்கத்தில்
 என் பிம்பம் படியவைத்து
 ஜோடிப்பொருத்தம்கண்டு
 சுகம்காண்பதில் என்
 சிநேகமான காலைப்பொழுது
 செலவாகிறதென்று தெரியுமா
 உனக்கு?
 
 நினைவுக் கொசுக்களால்
 நித்திரைதொலைந்த
 ஒரு நீலராத்திரியில்
 கால்கடுக்க நடந்து,
 கடற்கரை அடைந்து, நீயும்
 நானும் சந்தித்த இடத்தில்
 அனாதைக் குழந்தைகளாய்
 அழுதுகொண்டிருந்த உன்மல்லிகைஉதிர்வுகளை
 மடியோடு அள்ளிவந்து
 மார்போடு
 தழுவிக்கொண்டு விடியவிடிய
 விழித்துக்கிடந்தேனே.
 அந்த நேச உஷணத்தின்
 நிறமறிவாயா நீ?
 
 என் பத்திரிகை அலுவலகத்தின்
 எக்ஸரே கண்ணாளர்கள்
 உன்னையும் என்னையும்
 ஊடறுத்துப் பார்த்து,
 தமிழ்நாட்டிலேயே
 தமிழ்ப்பற்று அதிகமுள்ளவன்
 கலைவண்ணன் மட்டும்தான் என்று
 கிண்டல்மொழி சுண்டுவதைக்
 கண்டதுண்டா நீ?
 
 பூமியின் அடிவயிற்றில்
 கனன்றுகொண்டிருக்கும்
 அக்கினிமாதிரி என் அடிமனத்தில்
 கனன்றுகொண்டிருக்கும்
 ஆசைஅக்கினி
 உன்னைச் சுடவில்லையா?
 
 என் நேசம் புரியும் முன்பு நீ
 என் நெஞ்சுபுரிய வேண்டும்.
 
 உன்னை உன் வாழ்க்கைக்குத்
 தயாரிக்கிறேன்.
 
 தண்ணீர்பயம் கொண்டு
 தள்ளிநின்றால்
 நாளை எப்படி வெந்நீராற்றில்
 விசைப்படகு விடுவாய்?
 
 நீ சுத்தத் தங்கம்தான்.
 நல்ல தங்கத்தில் நகைசெய்ய
 முடியாது.
 சிறிதே கலக்கவேண்டும்
 செம்பு.
 
 தைரியம் செம்பு. அனுபவம்
 செம்பு.
 அதைத்தான் உன்னில் கலக்க
 நினைக்கிறேன்.
 
 உன் கங்காரு மடியைவிட்டு
 வெளியே வா.
 நான் சிங்கத்தின் முதுகு...
 ஏறிக்கொள்.
 முதலில் - தார்ச்சூடு
 காணட்டும் உன்
 தாமரைப்பாதம்.
 
 உன் வெல்வெட் திரைவிட்டு
 வெளியே வா.
 குளிரில் கோணிபோர்த்துக்
 கூவம்கரைக் குடிசை ஒன்றில்
 இரவுகழி.
 
 உன் சைவக்கோடு கட.
 கூறுகட்டி மீன்விற்கும் குப்பத்துக்
 கிழவியைச்
 சற்றே நகரச் சொல்லிவிட்டு
 ஒரு வெயில்பகலில் மீன்
 விற்றுப்பார்.
 
 அரசாங்க லாரியில்
 தண்ணீர்பிடி.
 இரண்டுகுடம் வேர்வைக்குப்
 பிறகு
 ஒருகுடம் தண்ணீர் நிறைவதை
 உணர்.
 
 வெள்ளிக்கரண்டியோடு
 பிறந்தவளுக்கு ஏன்
 வேலையற்றவேலைஎன்பாய்.
 
 ஓர் ஆணியைச் சுயமாய்
 அடிக்கத்
 தெரியாதவளுக்கு
 வெள்ளிக்கரண்டி
 சொந்தமாய் இருக்கக்கூடாது.
 அனுபவங்கள் தடுப்பூசிகள்.
 போட்டுக்கொள்.
 
 அம்மைகுத்த வந்தால்
 கைமறைக்கும்
 குழந்தைபோல்
 அடம்பிடிக்காதே.
 
 அனுபவங்களுக்கு உடம்பு, மனம்
 இரண்டையும் உட்படுத்து.
 தன்னைத் திருப்பிப் போடுவதன்
 முலம்தான் பூமி சூரியனிடம்
 அனுபவம் பெறுகிறது.
 
 வசந்தம்-கோடை-மழை-குளிர்-
 வெயில்-புயல் என்ற
 அனுபவங்கள்
 இல்லையேல் எப்போதோ பூமி
 இறந்துபோயிருக்கும்.
 
 கல்யாணச் சந்தையில் உன்னைத்
 துலக்கிவைப்பதற்கு மட்டுமல்ல
 கல்வி.
 அனுபவங்களின்பால்
 ஆற்றுப்படுத்துவது கல்வி.
 
 நமக்குள் ஆண்-பெண் என்ற
 பேதம்
 நம் அவசரத்தேவைக்காக
 மட்டும் இருக்கட்டும்.
 
 மற்றபடி பிறப்புமுதல்
 இறப்புவரை
 உணர்ச்சியும் வலியும்
 ஒன்றுதான்.
 
 ஆண் உடம்பில்
 ரத்தம் - 5 1/2 லிட்டர்.
 பெண் உடம்பில் -
 5 லிட்டர் என்ற
 பேதமிருந்தாலும் செல்களின்
 செயல்கள் ஒன்றுதான்.
 
 எனவே ஆணுக்குத்தான் அதிக
 உரிமை. பெண்ணுக்கில்லை என்ற
 பிற்போக்குத்தனத்திலிருந்து
 பிதுங்கி வெளியே வா.
 
 ஏ பணக்கார நத்தையே.
 முதலில் நீ உன் தங்கக்கூடு
 தகர்.
 
 இந்தப் பிரபஞ்சமே
 பொதுவென்று கொள்ளாமல்
 மனிதர்கள் மனைப்பட்டா
 வாங்கும் போராட்டத்திலேயே
 மரித்துப்போகிறார்கள்.
 
 பயன்படுத்தாத வானம் -
 பயன்படுத்தாத சூரியன் -
 பயன்படுத்தாத நட்சத்திரம் -
 பயன்படுத்தாத பூமி -
 பயன்படுத்தாத முளை
 மனிதகுலத்துக்குப்
 பாக்கியிருக்கிறது.
 
 ஒவ்வொரு மனிதனும் தனது
 சொந்த
 முளையைக்கூட அடுத்தவன்
 மனைவிமாதிரி
 பாவிப்பதற்குப்
 பயப்படுகிறான்.
 
 இரண்டு சதவிகிதத்துக்குமேல்
 முளை இங்கே
 வேலை வாங்கப்படவில்லை.
 
 தொண்ணூற்றெட்டு சதவிகித
 முளை சாகும்வரை
 செல்வியாகவே இருக்கிறது.
 
 நான் என் புலன்கள் திறந்து
 பிரபஞ்ச எல்லைவரை பறக்கப்
 பிரியப்படுகிறேன்.
 நீ மழையில் நனைந்த
 கிளிக்குஞ்சாய்
 மறுகிநின்றால் எப்படி?
 
 சிறகு விரித்து வா.
 சிலிர்த்து வா.
 
 உனக்கு நானோ எனக்கு
 நீயோ
 சுமையாகிப் போகாமல்
 துணையாகிப் போவோம் வா.
 
 உனக்கு நான் துன்பம்
 செய்திருந்தால்
 என்னை நீ மன்னித்துவிடு
 
 நான் உனக்கு நறுக்க நினைத்தென்னவோ
 நகம்தான். ஆனால், விரல் காயமாகிவிட்டது.
 
 எப்போதும் படுத்தே கிடக்காதே.
 தலையணையொன்றும் மார்க்கண்டேயனின்
 சிவலிங்கம் அல்ல.
 
 நம்பிக்கையின் சக்தியை உடலெங்கும் பரப்பு
 உன்னை உணர், என்னை நினை.
 
 என்னை மன்னித்துவிட்டாய் என்பதன்
 அடையாளமாய் என் குயிலே
 தொலைபேசியில் கூவு.
 
 ஆலயமணிகளையும் மாதாகோயில்
 மணிகளையும் விட தொலைபேசி
 மணியில்தான் நம் காதல் பூஜிக்கப்படுகிறது.
 
 எப்போது கேட்கும் உன் தொலைபேசிச்
 சங்கீதம்?
 
 காதலோடு........
 கலைவண்ணன்
 
 ஒருதாய் தன் குழந்தையை உறங்கவைப்பது
 போல் கடிதத்தின் இமை முடினான். காகிதப்
 பறவை சிறகடித்தது.
 
 பத்திரிகைப் பணியை அவன் நேசிக்கிறான்.
 
 அவனுக்கு உலகின் ஜன்னல்களை ஓசையோடு
 திறந்துவிட்டது பத்திரிகை.
 
 சூரியன் - பூமி - நிலா இவற்றை
 அவன் வாயில் மாத்திரைகளாய்ப் போட்டு
 தண்ணீர் ஊற்றியது பத்திரிகை.
 
 அந்தப் பத்திரிகையில் அவன் அதிகம்
 நேசிப்பது அவனுக்குத் தந்திருக்கும் சுதந்திரத்தை.
 
 அமைப்புச் சார்புகொண்டவன் எவனும் இங்கே
 உண்மை சொல்லமுடிவதில்லை.
 
 அரசு சார்ந்து - அரசியல் சார்ந்து - மதம் சார்ந்து -
 தத்துவம் சார்ந்து உண்மைகள் முழுப்பிரசவத்தோடு
 வெளிவருவதில்லை.
 
 மக்கள் சார்பு கொண்டவன் மட்டுமே இங்கே
 உண்மை பேச முடியும்.
 
 தன்னைப் போலவே தன் பத்திரிகையும்
 மக்கள் சார்பு கொண்டது என்ற
 நம்பிக்கையில்தான் அவன் அந்த
 நாற்காலிக்குத் தாலிக் கட்டியிருந்தான்.
 
 ஒருவகையில் பத்திரிகையும் காதலிதான்.
 இரண்டும் குறித்த நேரத்தில் வராவிட்டால்
 மாரடைப்பு வந்துவிடும்.
 
 அந்த வாரத்தில் தனக்கான கட்டுரையை
 ஆதாரப்படுத்தி, அழகுபடுத்தி உண்மை
 களைக்காதிருக்க அங்காங்கே நகைச்சுவை
 தெளித்து நயம் சேர்த்தான்.
 
 அவன் இருதயம் மட்டும் தூரத்து மேஜையில்
 துடித்துக் கொண்டிருந்தது.
 
 அங்குதான் தொலைபேசி இருந்தது.
 
 அந்த பிளாஸடிக் கூட்டுக்குள் அவன் குயில்
 எப்போது கூவும்?
 
 என் காதல் பூஜையின் கோயில்மணி எங்கே?
 
 தொலைபேசியில் ஒலிக்கும் என் தோடி ராகம்
 எங்கே?
 
 தயவுசெய்து முணுமுணுக்கவும் என்று
 தொலைபேசி அருகே எழுதிவைத்தால் என்ன?
 கடைசியில் அது இசைத்தது கலைவண்ணன்
 கலைவண்ணன் என்றே அழைத்தது.
 
 ஒன்றாம் மணி அடங்கி இரண்டாம் மணி
 முடிவதற்குள் ஓடி எடுத்தான். பெருமுச்சும்
 பரபரப்பும் இழைய நான் கலைவண்ணன்
 என்றான்.
 
 எதிர்முனையில் கண்ணீர் பேசியது தன்
 தாய்மொழியில் பேசியது.
 
 கண்ணீரின் தாய்மொழி விசும்பல்தானே?
- 
				4
 
 இராயபுரம் கடலோரம்.
 
 விஞ்ஞான அன்னங்களாய்
 விசைப்படகுகள்.
 
 தண்ணீர்த் தவளைகளாய்க்
 கட்டுமரங்கள்.
 
 தாலாட்டும்
 தண்ணீர்த் தொட்டிலில்
 வாலாட்டும் ஒரு
 கடற்கொக்கு. தண்ணீரில்
 தங்கம்கரைக்கும்
 சொக்கச்சூரியன்.
 
 கடலுக்குள் தலைதூக்கும்
 கரும்பாம்பாய்
 நீண்டுகிடந்த அந்தத்
 தார்ப்பாலத்தின் முடிவில்
 கலைவண்ணன் மார்பில் தழைந்து
 மடியில் மாலையாய்க்
 கிடந்தாள் தமிழ்ரோஜா.
 
 அழுது அழுது கடைசியில்
 தூங்கிப்போகும்
 ஒரு குழந்தைமாதிரி
 விசும்பி விசும்பிக் கிடந்தவள்
 கண்ணீர்தீர்ந்து மெளனமானாள்.
 
 சத்தியம்செய். இனி என்
 நேசத்தைச்
 சந்தேகிக்க மாட்டாயே.
 
 அவளைக் காதுக்குள் காதலித்த
 கலைவண்ணன்
 அவள் அங்கங்களில் எதுவும்
 அவனுக்கு வெளியே
 வழியாதவண்ணம் வாரி எடுத்து
 வசதி செய்து கொண்டான்.
 
 இரண்டு ஒட்டுமாஞ்செடிகளைக்
 கட்டுவதுபோல்
 அவளைத் தன் மார்போடு
 பதித்து முத்தப்பசையிட்டு
 ஒட்டிக் கொண்டான்.
 
 அவள் உடம்பெங்கும் ஒரு
 பத்திரமான
 பாதுகாப்புணர்ச்சி
 பரவியது.
 
 அதுதான்.
 
 ஒவ்வொரு பெண்ணின்
 உயிர்த்தேவை அதுதான்.
 
 அந்த இதம்... அந்தக்
 கதகதப்பான
 உத்தரவாதம்...
 அந்தத் தடம்பதியாத
 தடவல்... பாசம் குழைத்த
 ஸபரிசம்...
 
 ஒவ்வொரு பெண்ணின் உள்ளாசை
 அதுதான்.
 
 பெரிதும் பெண்கள் ஆராதிப்பது
 அதிரப்புணரும்
 அந்நிகழ்வை அல்ல.
 
 அவர்கள் அதிகம் விரும்புவது
 இந்த நேசம்
 நிஜம் என்னும் நினைப்பை.
 
 அவர்கள் பெரிதும்
 பிரியப்படுவது பின்கழுத்தில்
 விரல்பதித்துக்
 கூந்தல் ஆழத்தில் செய்யும்
 கோதுகையை.
 
 பூக்களுக்குச்
 சுளுக்கெடுப்பதுபோல்
 விரல்களுக்குச்
 சொடுக்கெடுக்கும் அந்த
 வேடிக்கையை.
 
 தனக்குரியவனின்
 முடிகொண்ட மார்பில்
 முகம் புதைத்து
 விழித்துக்கொண்டே உறங்கும்
 ஒரு மயக்கநிலையை.
 
 அந்த மனோநிலையில்
 மயங்கிக் கிடந்தாள்
 தமிழ்ரோஜா.
 
 இமைகளை விழியிலிருந்தும்
 தன்னை அவன் மார்பிலிருந்தும்
 விலக்கிக்கொள்ள விரும்பாமல்
 வினவினாள்.
 
 எனக்கு ஏனிந்த
 வெயில்குளியல்?
 
 காதலரைச் சுடுவதில்லை
 என்பது காலங்காலமாய்
 நிலவிவரும்
 சூரியத் தீர்மானம்.
 
 எப்போதும் என்னை
 இங்கேதான் அழைக்கிறீர்கள்.
 மெரீனா பிடிக்காதா?
 
 அவன் அவள் கன்னத்துக்கும்
 உதட்டுக்கும்
 இரண்டங்குல இடைவெளியில்
 பதில் பேசினான்.
 
 மெரீனா - திருமணத்தின்மீது
 நம்பிக்கையில்லாதவர்கள்
 சந்திக்கும் இடம்.
 
 அவள் தளும்பிச் சிரித்ததில்
 அவள் கன்னம்
 அவன் உதட்டில் விழுந்தது.
 
 சரி... சாந்தோம்?
 
 அது காதல்மீதே
 நம்பிக்கையில்லாதவர்கள்
 சந்திக்கும் இடம்.
 
 ஓகோ. இது?
 
 நம்பிக்கைமீது
 நம்பிக்கை உள்ளவர்கள்
 சந்திக்கும் இடம்.
 
 ஓர் அலை ஓங்கி எழுந்துவந்து
 கைதட்டிவிட்டு
 மீண்டும்
 கடலுக்குள் போனது.
 
 அந்த அலைஓசை அச்சத்தில்
 அவன் உடம்புக்குள்
 ஓடிஒளிவதுமாதிரி
 அவனுக்குள் ஒட்டி ஒடுங்கினாள்
 அவள்.
 
 ஓ, கடலே. நீ இன்னும்
 சில அலைகளை
 அடுத்தடுத்து எனக்காக
 அனுப்பிவைக்கக் கூடாதா?
 
 புல்லாங்குழலின் காதில்
 உதடு ஊதுவதைப் போல
 அவன் அவள் காதில்
 குறைந்த குரலில்
 குனிந்து பேசினான்.
 
 உனக்குப் பிடித்த ஒரு
 செய்தியும் பிடிக்காத
 ஒரு செய்தியும்
 சொல்லட்டுமா?
 
 ஒருமுறை கண்திறந்து
 ம்... சொல்லிவிட்டு
 மறுபடி முடிக்கொண்டாள்.
 
 உனக்குப் பிடித்த
 செய்தி...
 நீ கடைசிப் பரீட்சை
 எழுதியதும் தேர்வு
 மண்டபத்திலேயே
 நம் திருமணம்.
 
 சரி, பிடிக்காத
 செய்தி?
 
 கடலுக்குள் நம் முதலிரவு.
 
 அய்யோ.
 
 அவள் அவனை
 நிஜமாய்க் கிள்ளிப்
 பொய்யாய் அழுதாள்.
 
 தூரத்தில் கரையோரத்து
 விசைப்படகு ஒன்று
 கடல்புக
 எத்தனித்துக்
 கொண்டிருந்தது.
 
 அதன் எந்திரஓசை, ஓரத்தில்
 மேய்ந்த மீன்களையெல்லாம்
 ஆழத்தில் அனுப்பிவைத்தது.
 
 கலைவண்ணன் மீண்டும்
 கடல்பார்த்தான். மடியில்
 கிடக்கும் புதையலை
 மறந்துபோனான்.
 
 அவள் அவனை உதறி
 எழுந்தாள். ஊடல் கொடி
 பிடித்தாள்.
 
 உண்மையில் நீங்கள்
 நேசிப்பது கடலையா? -
 என்னையா?
 
 உன்னைத்தான். நிச்சயமாய்
 உன்னைத்தான். கடலைவிட
 மதிப்புடையவள் என்
 காதலியே
 நீதான்.
 
 கடலைவிட
 மதிப்புடையவளா? அவள்
 கண்விரிந்தாள்.
 
 ஆமாம். ஒரு டன்
 கடல்தண்ணீர் 0.000004
 கிராம்
 தங்கம் வைத்திருக்கிறது.
 
 ஆனால், 72 சதவிகிதம்
 மட்டுமே தண்ணீர் கொண்ட
 உடலில்
 நீ 50 கிலோ கிராம்
 தங்கமல்லவா
 வைத்திருக்கிறாய்.
 
 நான் உன்னைக்
 காதலிப்பேனா? கடலைக்
 காதலிப்பேனா?
 
 அவள் காதுகள் முடிக்
 கத்தினாள். போதும்.
 போதும். உங்கள் புள்ளிவிவரம்
 போதும்.
 
 கடலுக்குள் நுழைவதற்குத்
 தூரத்து விசைப்படகு துடித்துக்
 கொண்டிருந்தது.
 நான் கடல்பார்த்தபோதும்
 உன் கண்பார்த்தபோதும்
 மட்டும் பிரமித்திருக்கிறேன்
 தமிழ்.
 
 நீலக்கடல்பற்றி
 நிறையப் படித்தேன். உன்னைப்
 படித்துக்கொண்டேயிருக்கிறேன்.
 
 என் ஒவ்வொரு கனவிலும்
 உலாவரும் கடல் தேவதை
 நீதான்.
 
 நீ கடல். நான் பூமி.
 
 என் மீது உன் அலைகளை
 அனுப்பிக்கொண்டே
 இருக்கிறாய்.
 
 நீதான் என்மீது
 புயல்வீசுகிறாய். நீதான்
 என்மீது
 மழைதூவுகிறாய்.
 
 ஒவ்வொரு நாளும் என்
 ஓரக்கரைகளை அரித்து
 அரித்து என்னை உன்
 உள்ளிழுத்துக்
 கொண்டிருக்கிறாய்.
 
 கடல் இல்லையென்றால்
 வானுக்கு நிறமில்லை. நீ
 இல்லையென்றால் என்
 வாழ்க்கைக்கு நிறமில்லை.
 
 நீ கடல். நான் பூமி என்பது
 வெறும் உவமை
 அல்ல. உண்மை.
 
 சூரிய வெப்பத்தை உடனே
 உள்வாங்கி
 உடனே வெளிவிடுகிறது பூமி.
 உடனே கொதித்து
 உடனே குளிர்ந்துவிடும்
 என்னைப் போல.
 
 சூரிய வெப்பத்தை
 மெல்லமெல்ல உள்வாங்கி
 மெல்லமெல்ல வெளிவிடுகிறது
 கடல் - அணு
 அணுவாக அன்புவயப்பட்டு
 உயிர்நிறையக்
 காதலிக்கும் உன்னைப்
 போல.
 
 கலைவண்ணனுக்குப்
 புனைபெயர் கடல்மைந்தன்
 என்று வைக்கலாம்.
 
 நான் மட்டுமல்ல.
 ஒவ்வொரு மனிதனும் கடலின்
 மைந்தன்தான்.
 ஒவ்வொரு பெண்ணும்
 கடலின் புத்திரிதான்.
 ஒன்றை மறந்தேன். இன்னொரு
 வகையிலும் நீதான் கடல்.
 நான்தான் பூமி.
 
 எந்த வகையில்?
 
 முன்றில் இரண்டுபங்கு தண்ணீர்
 இருந்தும் மிச்சமுள்ள பூமி,
 தாகத்தால் தவிக்கிறதே...
 அதைப்போல -
 அமிர்தப் பாத்திரமாய் நீ
 அருகிருந்தும் தாகப்பட்ட மனசு
 தவியாய்த் தவிக்கிறதே.
 
 தள்ளியிருந்த தமிழ்ரோஜா
 தாவும் குழந்தையாய்
 அருகில் வந்தாள்.
 
 அதுதான் எனக்கும்
 ஆச்சரியம். தண்ணீர்
 இவ்வளவிருந்தும்
 தாகம் ஏன் தீரவில்லை?
 
 புள்ளிவிவரம் சொன்னால்
 பொறுத்துக்கொள்வாயா?
 கொள்வேன்.
 
 சொல்வேன். பூமியின்
 தண்ணீரில் 97 சதம்
 கடல்கொண்ட
 நீர். உப்பு நீர். குடிக்க
 உதவாத நீர்.
 
 மிச்சமுள்ள 3 சதம்தான்
 நிலம்கொண்ட நீர்.
 அதில் 1 சதம் தண்ணீர்
 துருவப்பிரதேசங்களில்
 பனிமலைகளில்
 உறைந்துகிடக்கிறது.
 
 1 சதம் தண்ணீர் கண்டுகொள்ள
 முடியாத ஆழத்தில்,
 மொண்டுகொள்ள முடியாத
 பள்ளத்தில் கிடக்கிறது.
 மனிதகுலம்
 பயன்படுத்துவதெல்லாம்
 மிச்சமுள்ள 1
 சதத்தைத்தான்.
 
 அய்யய்யோ. அந்த 1
 சதமும் தீர்ந்துவிட்டால்?
 
 தீராது. தண்ணீர் பூமிக்கு
 வெளியே போய்விட முடியாது.
 ஒவ்வொரு மனிதனும் பருகுவது
 பயன்படுத்தப்பட்ட பழைய
 தண்ணீரைத்தான். தண்ணீரும்
 காதலைப்போலத்தான். அதன்
 முலகங்கள் அழிவதில்லை.
 
 தூரத்து விசைப்படகு
 தண்ணீர் கிழிக்கத் தயாரானது.
 கிழக்கு நோக்கித் தன் முக்கை
 மொத்தமாய்த் திருப்பியது.
 
 கலைவண்ணன் கரையில்
 இருந்துகொண்டே
 மீண்டும் கடலில் முழ்கினான்.
 விழித்துக்கொண்டே கனவில்
 பேசினான்.
 
 கடல்.
 அது ஒரு தனி உலகம்.
 பள்ளிகொண்ட விஸவருபம்.
 எண்பத்தையாயிரம் உயிர்வகை
 கொண்ட உன்னத அரசாங்கம்.
 
 அடுத்த நூற்றாண்டு
 உணவுத்தேவையின்
 அமுதசுரபி.
 
 முத்துக்களின் கர்ப்பப்பை.
 பவளங்களின் தொட்டில்.
 
 மங்கனீஷ பாறைகளின் உலோக
 உலகம்.
 பெட்ரோல் ஊற்றின
 பிறப்புறுப்பு.
 கலங்கள் நகரும்
 திரவத்திடல்.
 அது கவிஞர்களின் கனா.
 விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடம்.
 ஞானிகளின் தத்துவம்.
 
 விசைப்படகு அந்தக்
 காதலர்பாலம்
 கடந்துதான்
 கடல்புக வேண்டும்.
 
 இப்போது ததும்பித் ததும்பி
 அவர்களை நோக்கித்
 தவழ்ந்து வந்தது அந்த
 டீசல்பறவை.
 
 தூரத்துச் சித்தரங்களாய்
 அதன்
 விளிம்பில் சில மீனவர்கள்.
 
 படகு நெருங்க...
 நெருங்க...
 
 ஓ....
 அவனுக்குத் தெரிந்தவர்கள்.
 அவனை நேசிப்பவர்கள்.
 
 மீனவர் போராட்டத்தில்
 கைதாகி
 அவன்
 எழுத்துக்களால்
 மீட்கப்பட்டவர்கள்.
 அவர்களும் அவனைக்
 கண்டுகொண்டார்கள்.
 
 கலைவண்ணன்.
 கலைவண்ணன்.
 
 எந்திரஓசை கிழத்துக்
 குரலெடுத்துக்
 கூவினார்கள்.
 
 அவன் மடியில்
 படுத்துக்கிடந்தவள்
 வெடித்துப்
 பூத்தாள்.
 
 விசைப்படகை வெறித்துப்
 பார்த்தாள்.
 பிறகு கண்களால் கேள்விகேட்டு
 மெளனம் காத்தாள்.
 
 கண்ணிமைக்காத கலைவண்ணன் -
 தோழர்கள். என் மீனவத்
 தோழர்கள் என்றான்.
 
 என்ன பேனாக்காரரே.
 கடலோடு
 போய்விடுவோம்.
 வாருங்களேன்.
 
 விசைப்படகிலிருந்து வீசிய
 அழைப்பு காற்றுவழி
 மிதந்து கரையேறியது.
 
 பாலம் நோக்கியே படகும்
 வந்தது.
 
 காதலியே. தமிழ்ரோஜா.
 கடல்சென்று வருவோமா?
 
 கண்ணடித்துச் சிரித்தான்
 கலைவண்ணன்.
 
 அய்யோ.
 
 அவள் பெங்குவின் பறவைபோல்
 பின்வாங்கினாள்.
 
 கொஞ்சதூரம் போகலாம், சுத்தமான காற்று
 சுகமான தாலாட்டு, தரையில் விழுந்த
 ஆகாயமாய்க் கடல்பார்க்கலாம்.
 
 ஓராயிரம் பறவைகளின் ஊர்வலம் பார்க்கலாம்
 உடனே திரும்பலாம்.
 
 கால்கள் பின்னுக்கிழுக்க - அச்சத்தில் முகம்
 வியர்க்க - வேண்டாம் அந்த விபரீதம்
 என்று விலகி ஓடினாள்.
 
 படகு பக்கத்தில் வந்துவிட்டது.
 
 கலைவண்ணனைப் பார்த்துக் கத்தினார்கள்.
 கடலுக்குள் போய்வருவோம் மீன்விருந்து
 வைப்போம் மாலைக்குள் கரைசேர்ப்போம்
 ஒரே கதியில் உரைநடையில் பாடினார்கள்.
 
 படகு நின்றது பாலம் உரசி.
 
 தயவுசெய்து வா தமிழ் கலை கெஞ்சினான்
 
 வேண்டாம் வேண்டாம்
 மாட்டேன. மாட்டேன்.
 
 அவள் சுடுமணலில் விழுந்த ஒற்றை
 மழைத்துளியாய் ஓடி மறையப்பார்த்தாள்.
 
 நீங்களும் வாருங்கள் தங்கையும் வரட்டும்
 அழைப்புக் குரல்கள் அதிகமாயின.
 
 இப்படி அஞ்சினால் எப்படி?
 பாதுகாப்பான பயணம் இது. சின்னச்சின்ன
 அனுபவங்கள் வேண்டாமா? சிறகடி
 என்னோடு. வா தமிழ். வா.
 
 அவள் சுருங்கினாள்
 இவன் நெருங்கினான்.
 
 அவள் அஞ்சி விழித்தாள்
 இவன் கெஞ்சி
 அழைத்தான்.
 
 அவள் விழித்தாள்.
 இவன் அள்ளினான்.
 
 அங்கே அரங்கேறியது ஓர் அகிம்சை இம்சை
 அவளை மார்போடு அள்ளி கவனமாய்க்
 கால்வைத்து விசைப்படகில் குதித்தான்.
 தாலாட்டும் படகில் தடுமாறி விழுந்தான்.
 
 வீழ்வது அவனாக இருப்பினும்
 வாழ்வது தமிழாக இருக்கட்டும்
 தமிழ் காயப்படாமல் கட்டிக்கொண்டான்.
 
 அவள் உள்ளாடிய அச்சத்தில்
 ஊமையானாள். மீனவர்கள் கைதட்டி
 ஒலிஎழுப்ப கிலிகொண்டது கிளி.
 
 பயப்படாதே தமிழ். பார் என் தோழர்களை.
 அவர் பாண்டி இவர் பரதன் இவர் இசக்கி
 அவர் சலிம்.
 
 எல்லோரையும் அவள் வேர்த்த
 முகத்தோடு வெறித்துப் பார்த்தாள்.
 
 அவளை அவர்களுக்கு அறிமுகம் செய்தான்
 
 இவள்தான் தமிழ்ரோஜா. இப்போது
 மனைவிபோல் இருக்கும் என் காதலி.
 பின்னாளில் காதலிபோல் இருக்கப்போகும்
 என் மனைவி.
 
 விசைப்படகு விரைந்து படபடத்தது
 தமிழ்ரோஜா இதயம் இரண்டுமடங்கு
 துடிதுடித்தது.
- 
				5
 
 கண்விழித்துப் பாரடி என்
 காதல்தமிழே.
 இமைகொண்டு கண்ணுக்கும்
 கரம்கொண்டு முகத்துக்கும்
 இரட்டைக்கதவுகள் இட்டுக்
 கொண்டவளே.
 
 இப்போது வங்காள
 விரிகுடாவில் முப்பது
 கிலோமீட்டர் வேகத்தில்
 முன்னேறிக்
 கொண்டிருக்கிறோம்.
 
 மேலே
 நீலவானம் - நீளவானம்.
 கீழே
 நீலக்கடல் - நீளக்கடல்.
 
 தண்ணீரில் அங்கங்கே
 வெள்ளைவெள்ளையாய்க் கவிதை
 எழுதும் கடற்காற்று.
 
 சரி. சரி. கண்திறந்துபார்.
 சமுத்திரம் உனக்குக் கீழே.
 
 பிளாஸடிக் வலைகளின்மேலே
 நைந்து குலைந்து
 நலிந்துகிடந்தவள் விலக்கவில்லை
 விழித்திரைகளை.
 
 தலைசுற்றியது தமிழுக்கு.
 
 அவள் அடிவயிற்றில் மெல்ல
 மெல்லப் பெரிதானதொரு
 குமட்டல் குமிழி.
 
 புதிய விருந்தாளிகள்
 வந்திருக்கும் புளகாங்கிதத்தில்
 அலைமீன்கள் ஆனார்கள்
 மீனவர்கள்.
 
 வராதவர்கள்
 வந்திருப்பதால் விழாத மீன்கள்
 விழும்.
 
 நம்பிக்கைமொழி பேசி
 நடனமாடினார்கள்.
 
 காதலர் தனிமைக்குப்
 பின்பக்கம் தந்துவிட்டு
 முன்பக்கச் சுக்கான் அறையில்
 மொத்தமானார்கள்.
 
 தன் சொற்பொழிவுக்குக் கடல்
 கைதட்டுவதாய்க் கருதிய
 களிப்போடு இன்னும் அதிகமாய்
 ஓசையிட்டது விசைப்படகு.
 
 காதலியை மடியில்போட்டவன்
 கண்களைக் கடலில்
 போட்டான்.
 
 கண்ணுக்கெட்டிய மட்டும்
 கடலோ கடல்.
 
 இது வியப்பின் விசாலம்.
 பூமாதேவியின் திரவச்சேலை.
 ஏ தமிழா.
 உன் புலமைகண்டு
 புல்லரிக்கிறேன்.
 இதன் பரப்பை வியந்தாய்.
 பரவை என்றாய். ஆழம்
 நுழைந்தாய். ஆழி என்றாய்.
 ஆற்றுநீர் - ஊற்றுநீர் -
 மழைநீர் முன்றால் ஆனதென்று
 முந்நீர் என்றாய்.
 
 வியந்துகிடந்தவன்உடைந்துகிடந்தவளை
 மடியில் அள்ளி ஒட்டவைத்தான்.
 
 ஏ தமிழ். என்ன இது?
 திற, கண்களைத் திற.
 கண்களால் கடல்விழுங்கு.
 விசைப்படகு விரையும்போது
 கடலோடு ஒரு வெள்ளிவீதி
 பார்.
 
 அன்பு கொண்டவர்களைக்
 காணும்போது துயரம்
 மெல்லமெல்ல மறைவதுமாதிரி
 - தூரத்துக்கரை மெல்ல
 மெல்லத் தொலைவது பார்.
 
 ததும்பும் தண்ணீர்
 ஊஞ்சல்மேலே அழகுப்
 பறவைகள் ஆடுவதுபார்.
 
 தப்பு செய்துவிட்டுவந்த
 கணவர்கள், தாழ்திறவாக்
 கதவுகளுக்கு வெளியே
 நிற்பதுபோல் -
 துறைமுகத்துக்குள்
 அனுமதியில்லாத கப்பல்கள்
 தூரத்தில் நிற்பது பார்.
 
 அங்கொன்றும்
 இங்கொன்றுமாய்க்
 கடற்பட்டாம் பூச்சிகளாய்
 மிதக்கும் கட்டுமரங்கள்
 பார்.
 
 காசுக்கு மனம்மாறும்
 வஞ்சகர்களைப் போல
 அங்கங்கே நிறம்மாறும்
 கடல்பார்.
 
 நீ ஏன் பயப்படுகிறாய்?
 
 தன்னைக் கடைந்து கடைந்து
 கடந்துவிட்டானே என்று
 கடல்தான் மனிதனைப் பார்த்து
 பயப்படுகிறது.
 
 அவளை அவன் மில்லிமீட்டர்
 மில்லிமீட்டராய் மலர்த்தப்
 பார்த்தான்.
 
 ஆனால், தன் புலன்களைப்
 பூட்டிக்கொண்டவள்
 திறக்கவேயில்லை.
 
 ஆடும் படகு ஆடஆட அடிவயிறு
 அழுத்தியது அவளுக்கு.
 
 நிறந்தெறியாத பூச்சிகள்
 நெற்றிப் பொட்டில்
 பறந்தன.
 
 உள்ளே வளர்ந்து வளர்ந்து
 உடையப்பார்த்தது
 குமட்டல்குமிழி.
 
 முகம்தூக்கிப் பார்த்தபோது
 அவன்
 கையில் பிசுபிசுத்தது அவள்
 கண்ணீர்.
 
 அழுகிறாயா?
 கடல்நீரை மேலும்
 கரிக்கவைக்கிறாயா?
 கடலில் 3.6 சதம் உப்பு
 முன்னமே இருக்கிறது.
 அதுபோதும். எங்கே... உன்
 இதழ்நீர் துப்பு. இனிக்கட்டும்
 கடல்.
 
 ஏன் இப்படி என்னைச்
 சோதிக்கிறீர்கள்?
 அவள் எழுத்துக்கூட்டி
 விசும்பினாள்.
 
 அவன் சின்முறுவல் பூத்தான்.
 
 தன்மேல் விழும் மண்ணைச்
 சோதனை என்று
 சொன்னதுண்டா விதை?
 
 உளியின் உரசலைச் சோதனை
 என்று சொன்னதுண்டா சிலை?
 
 இது பயிற்சி. முளைக்கவைத்து
 முழுமையாக்கும் முயற்சி.
 
 சோதனை என்று சொல்லாதே
 பெண்ணே.
 சொடுக்கு, விரலுக்குச்
 சோதனை அல்ல.
 
 அவள் வயிற்றில் புறப்பட்ட
 வாந்தி நெஞ்சில் வந்து
 நின்றுவிட்டது.
 
 தன்னிரு கரங்களால் அவள்
 தலைதாங்கித் தவித்தாள்.
 
 துவண்ட கொடிகண்டு துடித்தான்
 அவனும்.
 
 இது கடல்நோய்.
 ஒருவகையில் இது ஒவ்வாமை.
 முதன்முதலாய்க் கடல்புகும்
 பலருக்கு இது வரவே வரும்.
 கலங்காதே.
 சின்னச் சின்னச் சிரமங்களுக்கு
 உன் உடம்பை உட்படுத்து.
 
 எனக்கிது தேவைதானா?
 
 அவள் கன்னத்தில் வழிந்த
 கண்ணீர் வாயில் விழுந்ததில்
 வார்த்தை நனைந்தது.
 
 தேவைதானா என்று
 கேட்டிருந்தால்
 தீயை அறிந்திருக்க முடியுமா?
 குரங்கிலிருந்து மனிதன்
 குதித்திருக்க முடியுமா?
 தூரத்தை நெருக்கியிருக்க
 முடியுமா?
 நேரத்தைச் சுருக்கியிருக்க
 முடியுமா?
 
 தேவைதான் முட்டைக்குள்
 இருக்கும் உயிரை
 முச்சுவிடவைக்கிறது.
 
 தேவைதான் உலக உருண்டைக்கு
 ஒரேபகல் கொண்டுவர
 யோசிக்கிறது.
 
 உணர்வுகளின் தேவை காதல்.
 உணர்ச்சிகளின் தேவை காமம்.
 உலகத்தின் தேவை உழைப்பு.
 
 இந்தத் தேவைகளின் வெவ்வேறு
 வடிவங்களே வாழ்க்கை.
 
 பெண்மீது காதலும் வெற்றிமீது
 வெறியும் இல்லையென்றால்
 இன்னும் இந்த பூமி பிறந்த
 மேனியாகவே
 இருந்திருக்கும்.
 
 அவன் பேச்சுக்குக்
 காதுகொடுத்தது காற்று
 மட்டும்தான்.
 
 அவளால் தாங்கமுடியவில்லை.
 ஒவ்வாத சூழல்.
 உடன்படவில்லை உடம்பு.
 ஏதோ ஒரு திசையில் -
 ஆனால் மிகமிகப் பக்கத்தில்
 மரணம்
 மையம்கொண்டிருப்பதாய்ப்பட்டது
 அவளுக்கு.
 
 என்னைக் கொல்லாதீர்கள்.
 படகைத் திருப்புங்கள்.
 படபடப்பாய்
 வருகிறதெனக்கு.
 
 அவன் இரு கரங்களாலும் அவள்
 முகம் அள்ளினான்.
 வசதி இல்லாத இடங்களிலும்
 வளைத்து வளைத்து
 முத்தமிட்டான்.
 
 இடைவேளையில் பேசினான்.
 
 இது ஓர் அனுபவம்.
 படபடப்பு என்பது உயிருக்கு
 நேரும் உயர்ந்த அனுபவம்.
 படபடப்பு இல்லையென்றால்
 பரிணாமம் இல்லை.
 
 முதன் முதலில் நிலாவுக்கு
 மனிதனைக் கொண்டு சென்ற
 விண்வெளிக்கலம் பூமிக்குத்
 தெரியாத நிலாவின்
 மறுபக்கத்தில் சுற்றத்தொடங்க
 - விண்ணுக்கும் மண்ணுக்கும்
 ஒலித்தொடர்பு அறுந்துபோக
 - முப்பத்து முன்று நிமிடம்
 பூமியின் இதயம்
 படபடக்கவில்லையா?
 
 மைனஸ 27 டிகிரியில் -
 எவரெஸட் உச்சிதொட இன்னும்
 நானூறடிதான் இருக்கையில் -
 அந்த தூரம்
 கடக்கும்வரைக்கும் ஆக்சிஜன்
 இருக்குமா என்று ஹிலாரி
 ஐயம் கிளப்ப டென்சிங்கின்
 இதயம் படபடக்கவில்லையா?
 
 வடதுருவம் தொடும் முயற்சியில்
 ஏழுமுறை விழுந்து ஒவ்வொரு
 தோல்வியிலும் ஒரு விரல்
 இழந்து எட்டாம் முறையும் தன்
 முயற்சி தொடர்ந்து, ஸலெட்ஜ
 வண்டிகள் சிதறிப்போக,
 இழுக்கும் நாய்கள்
 இறந்துபோக இதுதானோ தன்
 கடைசிப் பயணம் என்று
 வெற்றிக்குச் சற்றுதூரத்தில்
 விரக்தியில் நின்றபோது
 எட்வின்பியரியின் இதயம்
 படபடக்கவில்லையா?
 
 இன்னும் பத்துநாட்களில்
 கண்ணுக்குக்
 கரைதெரியாவிட்டால்
 புறப்பட்ட இடத்துக்கே
 திரும்பவேண்டும் என்று
 மாலுமிகள் போர்க்கொடி
 பிடிக்க அந்த ஒன்பதாம்
 ராத்திரியில் கொலம்பஸின்
 இதயம் படபடக்கவில்லையா?
 
 அவர்களைவிடவா ஆபத்து
 உனக்கு?
 
 அவர்கள் உயிரைப்
 பணயம்வைத்துப் பயணம்
 செய்தவர்கள்.
 
 நீ சுகமாக இருக்கிறாய்.
 
 தாய்க்குரங்கின் பிடியிலிருக்கும்
 குட்டியைப்போல்
 நீ என் மடியில்
 பத்திரமாயிருக்கிறாய்.
 
 பதறிப்பதறிச் சிதறிப்
 போகாதே.
 எழு தமிழ். எழு.
 
 ஒரு பேரலையின் உசுப்பலில்
 விசைப்படகு ஆபத்தான
 ஆட்டமொன்றாட - அந்த
 அதிர்வலைகள் அவள் உள்ளுக்குள்
 பரவிஉசுப்ப - அவளுக்கு
 வந்துவிடும் போலிருந்தது
 வாந்தி.
 அவள் தரைமேல் மீனாய்
 வலைமேல் உருண்டாள்.
 
 தாளாமல் துடித்தவளைத்
 தாவிஎடுத்து
 அவலம் கொள்ளாதே
 தமிழ். இது ஓர் அனுபவம்
 என்றான்.
 
 வேண்டாம். எனக்கிந்த
 அனுபவம் வேண்டாம்.
 அவள் சட்டை பிடித்துலுக்கிச்
 சத்தமிட்டாள்.
 
 அவனோ ஏசுவின்
 மலைப்பிரசங்கம் மாதிரி
 அலைப்பிரசங்கம்
 ஆரம்பித்தான்.
 
 பாவம். வயதுக்கு வந்த
 குழந்தை நீ. அனுபவங்களின்
 தொகுப்புதான் வாழ்க்கை.
 நம் வாழ்க்கைமுறை
 தீர்மானிக்கபட்ட
 அனுபவங்களையே நம்மீது
 திணித்தது.
 
 யாருக்கோ நேர்ந்த
 அனுபவங்களை
 ஒப்புக்கொள்ளுமாறு நம்மீது
 துப்பியது.
 
 ஆகவே தாத்தாக்களின்
 நகல்களாகவே தமிழன்
 தயாரிக்கப்பட்டான்.
 
 எனவே பல நூற்றாண்டுகளாக
 இந்த இனம் இருந்த
 இடத்திலேயே இருந்தது.
 
 சாதிக்கும் முளையிருந்தும்
 சோதிக்கும் முயற்சி இல்லை.
 
 வாழ்நாளில் 66,000 லிட்டர்
 தண்ணீர் குடித்தான்.
 ஆயுளில் முன்றில் ஒருபங்கு
 தூங்கினான்.
 நான்குகோடி முறை
 இமைத்தான்.
 நாலரை லட்சம் டன்
 ரத்தத்தை இதயத்தால்
 இறைக்கவைத்தான்.
 35 ஆயிரம் கிலோ உணவு -
 அதாவது எடையில் இந்திய
 யானைகள் ஏழு தின்றான்.
 மரித்துப் போனான்.
 
 இதற்குத்தானா மனிதப்பிறவி?
 
 யாருக்கும் இங்கே
 குறைந்தபட்ச லட்சியம்கூட
 இல்லை.
 
 நமக்கேனும் வேண்டாமா?
 இற்றுப்போன பழைய
 இரும்புவேலிகளைச் சற்றே
 கடக்கவேண்டாமா?
 
 ரத்தம்பார்த்தாலே
 மயங்கிவிழும் ஒரு தலைமுறையை
 மீட்கவேண்டாமா?
 
 எழுந்து உட்கார்.
 துன்பமென்பது மனதின் பிரமை.
 மனதை மாற்றுத்திசையில்
 ஆற்றுப்படுத்து.
 தும்மல் - காதல் - வாந்தி
 முன்றும் வந்தால்
 அடக்கலாகாது.
 அதன்போக்கில் விட்டுவிடு.
 
 அவள் மெல்ல அசைந்தாள்.
 கவிழ்ந்துகிடந்தவள் நிமிர்ந்து
 எழுந்தாள். கண்திறந்து
 கடல்பார்த்தாள்.
 
 நடுக்கடல் கண்ட திடுக்கிடல்
 கண்ணில் தெரிந்தது.
 
 முச்சு - நம்பிக்கை
 இரண்டையும் மெல்ல மெல்ல
 உள்ளிழுத்தாள்.
 
 கடைவிழியில் ஆடிய கண்ணீருக்கு
 நங்கூரமிட்டாள்.
 
 ஓங்கியடித்த ஓர் அலை
 விசைப்படகின் விளிம்பு தாண்டி
 திடதிரவமாய் அவள்மீது
 விழுந்தபோது
 ஓ வென்றலறினாள்
 ஓசையோடு.
 நன்றாய் நனைந்துவிட்டாள்.
 
 கலைவண்ணன் தொடாத
 பாகமெல்லாம் கடல்தண்ணீர்
 தொட்டுவிட்டது.
 
 ஓடிவந்தனர் உள்ளிருந்தோர்
 
 என்ன.... என்னவாயிற்று? பாண்டியும்
 இசக்கியும் படபடத்தார்கள்.
 
 ஒன்றுமில்லை. அலை...
 
 உள்ளே ஓடிய சலீம் துவைக்கவேண்டிய
 ஒரு துண்டைத் துடைத்துகொள்ள நீட்டினான்
 
 பரவாயில்லை. கடல்நோய் கொண்டவர்கள்
 நனைந்தால் நல்லதுதான்.
 இசக்கி அனுபவம் சொன்னான்.
 
 தண்ணீர் சொட்டச்சொட்ட தானே
 தலைதாங்கிக் தமிழ்ரோஜா அழுதாள்.
 அதில் கண்ணீர் எது? தண்ணீர் எது?
 கடல்மீன் அழுத கதைதான்.
 
 ஒரு கண்ணில் பாசம் ஒரு கண்ணில்
 பரிதாபம் மீனவர்பார்வை நிலைகுலைந்தவள்
 மீது நிலைத்தது.
 
 ஆவேசமாய் நிமிர்ந்தவள் - இப்போதே
 கரைதிரும்ப வேண்டும் என்றாள் அழுதவிழி
 துடைத்தபடி
 
 மீன் விழுந்தாலும் விழாவிட்டாலும்
 மாலைக்குள் கரைசேர்ப்போம் என்றான் பாண்டி
 
 அலையில் இந்தப் படகு கவிழ்ந்துவிட்டால்?
 
 கவிழாது. கவிழ்ந்தாலும் எங்கள் உயிர் கொடுத்து
 உங்கள் உயிர்காப்போம் தங்கையே.
 தடித்த எழுத்துக்களில் பேசினான் இசக்கி.
 
 விடவில்லை அவள்.
 
 டீசல் தீர்ந்துவிட்டால்?
 
 தீராது 2800 லிட்டர் கொள்ளும் கலத்தில்
 இரண்டாயிரம் லிட்டர் அடைத்திருக்கிறோம்
 நம்பிக்கை சொன்னான் பாண்டி
 
 படகைத் திருப்ப முடியுமா - முடியாதா?
 அவள் கரைக்கே கேட்குமாறு கத்தினாள்.
 
 யாரும் பேசவில்லை.
 
 முட்டிக்கொண்ட இரண்டு அலைகள் எட்டிமோத
 தஞ்சாவூர் பொம்மையாய்த் தலையாட்டியது படகு.
 
 அவள் வயிற்றுக்குள் வட்டமிட்ட
 குமட்டல்குமிழி வளர்ந்து வளர்ந்து -
 நெஞ்சு கடந்து - தொண்டைதொட்டு -
 வெளியேறியது. அவள் வலையெல்லாம்
 நனைய வாந்தியெடுத்தாள்
 
 கலைவண்ணன் தன் கட்டைவிரல் பதித்து
 அவள் நெற்றிப்பொட்டை அழுத்தினான்
 மீனவர் பதறினர.
 
 சலீம் மட்டும் கலைவண்ணனைக்
 கேட்டேவிட்டான்
 தங்கை வாந்தியெடுக்கும்படி
 அப்படி என்ன செய்தீர்கள்?
- 
				6
 
 உள்ளே எதையும் ஒளிக்காதே.
 துணிந்துவிடு. துப்பிவிடு.
 
 ஆசையைத் துப்பு.
 ஞானம் வரும்.
 அச்சம் துப்பு.
 வீரம் வரும்.
 ரகசியம் துப்பு. தூக்கம்
 வரும்.
 
 அவள் அடிவயிற்றில் உழன்ற
 வாந்தி துப்பினாள். அழுத்தம்
 குறைந்தது. அமைதி வந்தது.
 நெற்றியில் அடித்த சம்மட்டி
 நின்றேவிட்டது. மழை நின்ற
 பின்னால் இலை சொட்டும்
 துளிபோல தலைபாரம்
 வடிந்தது, சொட்டுச்
 சொட்டாய்.
 
 அவள் வலை நனைய
 வாந்தியெடுத்தது கண்டு
 பதறிய மீனவர் சிதறி ஓடினர்.
 காணாமல் போன வேகத்தில்
 மீண்டும் கண்ணில் தெரிந்தனர்.
 
 பரதன் கையில் குடிதண்ணீர்
 பாண்டி கையில் கோப்பைத்
 தேநீர்.
 
 இதற்குத் தேநீர்தான்
 மருந்து.
 
 குடி தாயே. குடி.
 
 - இசக்கி வைத்திய வார்த்தை
 சொன்னான்.
 
 பருகினாள் அவள்.
 பாலில்லாத தேநீர்.
 அவள் களைப்பை மாற்றும்
 கறுப்புத் தாய்ப்பால்.
 
 துவண்ட கொடியைத்
 தோளில் அணைத்து
 வாந்தியெடுத்த
 வாய்க்கடை துடைத்து
 விரிந்த குழலை
 விரல்கொண்டளைந்து
 காதலிதுயரம் கண்களால்
 அளந்து அவள் கண்ணோரம்
 சிதறிய
 கண்ணீர் துடைத்த கலைவண்ணன்
 இப்போது
 பரவாயில்லையா..? -
 என்றான் இதமாக.
 
 புலவர்க்கு மட்டுமே புரியும்
 சில தமிழ்ச்சொற்கள் மாதிரி
 - அவனுக்கு மட்டுமே
 புரியும்படி ஒரு புன்னகை
 புரிந்தாள்.
 
 அந்தப் பாலைவனச்சாரல்
 கண்டு பளிச்சென்று மலர்ந்தவன்
 - எல்லாரும் ஜோராக
 ஒருமுறை கைதட்டுங்கள்.
 தமிழ் புன்னகைக்கிறாள். தமிழ்
 புன்னகைக்கிறாள்.
 - என்று தன்னைமறந்து
 கத்தினான்.
 
 அவர்கள் குழந்தைகளாய்ச்
 சிரித்தார்கள்.
 குதூகலமானார்கள்.
 மார்கழிமாத வெயில்
 மறைவதற்குள் துணிகாய
 வைக்கத் துடிக்கும் ஒரு
 சலவைக்காரியைப் போல
 அந்தப் புன்னகை மறைவதற்குள்
 அவளைக் கரைசேர்த்துவிடக்
 கருதினார்கள்.
 மின்னல்வேகத்தில் மீன்பிடிக்க
 ஆயத்தமானார்கள்.
 
 பாண்டி கட்டளையிட்டான்.
 
 பரதா. விசைப்படகின்
 வேகம் குறை. இந்த இடத்தின்
 ஆழம் அறி. இரும்புக் குண்டை
 நுனியில்கட்டிய பிளாஸடிக் கயிறு
 எடு.
 வீசு கடலில்.
 விடு. விடு. போகட்டும்.
 அது தரைதொட்ட உணர்வு
 தட்டுப்படுகிறதா? இப்போது
 எடு. ஆழக்கயிற்றின் நீளம்
 அள. எத்தனை பாகம்?
 
 இசக்கி அளந்து சொன்னான்.
 பதினான்கு பாகம்...
 
 பதினான்கு பாகமா?
 பரவாயில்லை - இருபத்தைந்து
 மீட்டர். இறக்கு, இறக்கு.
 வலைகளை இறக்கு. அய்யா
 பேனாக்காரரே.
 அம்மா தமிழ்ரோஜா.
 ஓரமாய் ஒதுங்குங்கள்.
 வலையோடு சேர்த்துக்
 கடலோடு எங்கள் இரும்புவடம்
 இறங்கும். தலையில்
 மோதலாம். தள்ளியிருங்கள்.
 
 ஏ இசக்கி. ஏ சலீம்.
 வலைவிரிய வசதியாய்ப்
 பக்கப்பலகை இறக்கு.
 கவனம். ஒவ்வொரு பலகையும்
 தொண்ணூறு கிலோ.
 நகர்த்திவிட்டு நகராவிட்டால்
 முகத்தைப் பிய்க்கும்.
 
 மீன் விழும் முன்னே நீ விழக்கூடாது.
 சுறாக்கள் உன்னைச்
 சுவைத்துவிடக் கூடாது.
 அப்புறம் உன்
 வைப்பாட்டிக்கெல்லாம் நான்
 வாழ்வுதர முடியாது.
 இரும்புவடத்தில் வேகம்
 இருக்கு. பக்கப் பலகையைப்
 பார்த்து இறக்கு...
 
 கடலில் எறிந்த வலை
 காணாமல் போக - மிதந்த
 மிதவைகள் அமிழ்ந்துபோக -
 பக்கப்பலகைகளின் பாரம்
 அழுத்த ஆடிக்காற்றில்
 பாவாடையாய் அகலப்பட்டது
 வலை.
 
 விழித்த விழி விழித்தபடி
 வியந்துநின்ற தமிழ் ரோஜா -
 
 படகுக்கு வால்முளைத்த
 மாதிரி வலை மிதந்து
 கொண்டே வருமா?
 என்றாள்
 
 ஆமாம். கடலின் தரையை
 வலை தடவிக்கொண்டே வரும்.
 வலைநீளும் எல்லைக்குள் எந்த
 மீன் வந்தாலும் அது
 வலைப்படும். வலையில்
 மாட்டிய மீனும்
 அரசியல்வாதியிடம் மாட்டிய
 பணமும் ஒன்றுதான். சிக்கினால்
 மீளாது.
 
 வெண்கல உண்டியலில்
 வெள்ளிக்காசுகளாய்த் ததும்பிச்
 சிரித்தாள் தமிழ்ரோஜா.
 
 இதுவல்லவோ நான்
 எதிர்பார்த்தது. இதுவல்லவோ
 என் மனம் கேட்டது.
 இதற்காகவல்லவோ நான்
 தண்ணீரில் தவமிருப்பது.
 
 சிரி பெண்ணே சிரி. இந்தக்
 கடல் இத்தனை யுகமாய்
 எத்தனை சிரித்ததோ
 அத்தனைச் சிரிப்பையும்
 மொத்தமாய்ச் சிரி...
 
 சுக்கான் அறையில் பரதன்.
 சமையல் அறையில் சலீம்.
 விசைப்படகின் வெளித்தளத்தில்
 அணில் மனிதர்களாய் -
 பாண்டியும் இசக்கியும்.
 
 விசித்திர வாழ்க்கை
 இவர்களுக்கு என்றாள்
 தணிந்த குரலில் தமிழ்.
 
 இல்லை. வேதனை
 வாழ்க்கை இவர்களுக்கு
 என்றான் தடித்த குரலில்
 கலை.
 
 விளங்கவில்லை.
 
 உனக்கு மட்டுமில்லை.
 உலகுக்கே விளங்கவில்லை.
 இவர்கள் இந்த மண்ணின்
 பூர்வகுடிகள். காற்றை
 எதிர்த்துக் கடல்
 கிழித்தவர்கள். கிழக்கிலும்
 மேற்கிலும் நம் நாகரிகத்தை
 நடவுசெய்தவர்கள்.
 
 பூமியின் மையக்கோட்டுக்கு
 மேலே போனவர்கள். ஆனால்
 இன்னும் வறுமைக்கோட்டுக்குக்
 கீழே வாழ்பவர்கள்.
 
 மனிதனின் முதல்தொழில்
 மீன்பிடித்தல்தான். வேட்டையே
 மீன் வேட்டையில்தான்
 ஆரம்பித்தது.
 
 இன்னும் பசிபிக் தீவுகளில் சில
 பழங்குடிகள் அம்பு
 தொடுத்துத்தான் மீன்
 பிடிக்கிறார்கள்.
 
 அந்தப் பழந்தொழில் செய்த
 இனம் இன்னும் பழையதாகவே
 இருக்கிறது.
 
 இந்த மீன்நாற்றத்தில் முக்கு
 முடிக்கொள்கிற சில
 மனிதர்களைப் போலவே -
 இவர்களைப் பார்த்துக்
 கண்முடிக் கொண்டது காலமும்.
 
 இயற்கை தாலாட்டினால்
 இந்தக் கடல் இவர்களுக்குத்
 தொட்டில்.
 இயற்கை தள்ளிவிட்டால் இந்தக்
 கடல் - கல்லறை.
 
 கரை மீண்டால் இவர்கள்
 மீன்தின்னலாம். கரை
 மீளாவிட்டால் இவர்களை
 மீன்தின்னும்.
 
 வேட்டையாடு. அல்லது
 ஆடப்படு.- இதுதான்
 இந்தத் தண்ணீரில் எழுதப்பட்ட
 அழியாத வாசகம்.
 
 அதோ பார். இந்த உப்புக்
 காற்றில் துருப்பிடித்துவிட்டது
 இரும்புவடம்.
 
 சுக்கான் இரும்பில் துரு.
 சமைக்கும் அடுப்பில் துரு.
 நட்ட கம்பியில் துரு.
 விசைப்படகின் விளிம்பில் துரு.
 இன்னும் துருப்பிடிக்காதிருப்பது
 இவர்களின் எலும்பு
 மட்டும்தான்.
 
 அவன் பேச்சிலிருந்த உண்மையும்
 உள்ளார்ந்த கண்ணீரும்
 தடுமாறவைத்தன தமிழை.
 
 இப்போது புரிகிறது. என்
 வாழ்க்கை எவ்வளவு
 மெல்லியதென்று.
 என் வீட்டுக் கூண்டுக்கிளிகூட
 எவ்வளவு பத்திரமாயிருக்கிறது?
 என் வாழ்க்கை என்
 சாப்பாட்டு மேஜைக்கே
 வந்துவிடுகிறது. ஆனால்,
 இவர்களோ கரையில்
 தொலைத்த வாழ்க்கையைக்
 கடலில் தேடிக்
 கொண்டிருக்கிறார்கள்.
 மெல்லிய வாழ்க்கை என்
 வாழ்க்கை. பனித் துளிக்குள்
 பள்ளிகொள்ளும் வாழ்க்கை.
 என் குரோட்டன்ஸ - என்
 செல்ல நாய் - ஆயிரம்
 டாலர் இலைகளின் மேலே
 அள்ளித் தெளித்த புள்ளிகள் -
 காற்றாடும் மொட்டைமாடி -
 கண்ணடிக்கும் நட்சத்திரம் -
 சுருக்கம் விழாத படுக்கை -
 சுதந்திரமான குளியல் -
 கைநிறையக்காசு -
 பைநிறையக் கனவுகள் - இந்த
 சந்தோஷவட்டத்தில் நான்
 செளகரியமாயிருக்கிறேன்.
 
 ஆனால், இவர்களுக்காக நான்
 இரக்கப்பட முடியும். என்னால்
 இவர்களாக இருக்க முடியாது.
 என் சுவாச உறுப்புகள்
 தரைக்கு மட்டுமே ஏற்றவை.
 தண்ணீருக்குள் தள்ளாதீர்கள்.
 
 அவள் சத்தமிட்டுப்
 பேசவில்லை. ஆனால் அவள்
 கருத்து உரத்துநின்றது. உண்மை
 சொல்கிறேன் உணர்ந்து
 சொல்கிறேன் என்ற உறுதி
 இருந்தது.
 
 வாடிய கீரையைத்
 தண்ணீர்தெளித்து வைப்பது
 மாதிரி
 வாடிய அவள் முகத்தில்
 வேர்வை தெளித்தது வெயில்.
 
 தன் கசங்காத கைக்குட்டையில்
 அவளின் கசங்கிய
 முகம்துடைத்தான்.
 
 தாயின் முதுகைக் கட்டிக்
 கொண்டு முதன்முதலாய்
 யானைபார்க்கும் ஒரு
 குழந்தையைப் போல்
 கலைவண்ணன் முதுகைக்
 கவசமாய்க் கொண்டு அவள்
 கடல்பார்த்தாள்.
 
 பார்த்து வியந்து பயந்தவள்
 பதறிச் சொன்னாள்.
 
 அய்யய்யோ. இதில்
 விழுந்தால்?
 
 அவ்வளவுதான். குன்றில்
 தொலைந்த குன்றிமணிதான்.
 கடலில் விழுந்த
 கடுகுதான்...
 
 அவள் செல்லக் கேள்விகளால்
 சீண்டினாள்.
 
 இப்போது
 புயலடித்தால்?
 
 அடிக்காது. புயல் நல்ல
 விருந்தாளி. சொல்லாமல்
 வருவதில்லை...
 
 திடீரென்று கடலுக்குள்
 எரிமலைகள் வெடித்தால்?
 
 வங்காளவிரிகுடாவில் அதற்கு
 வசதி இல்லை. இது
 இந்துமகாசமுத்திரத்தின்
 குழந்தை. பெரும்பாலும்
 ஆழமில்லை. எரிமலைகள்
 எங்குமில்லை.
 
 பர்மாக் கரையோரம்
 செடுபா தீவுகளில் சின்னச்
 சின்ன எரிமலைகள் உண்டு.
 ஆனால், அவை அனல்
 கக்குவதில்லை. மணல் கக்கும்.
 
 முன்னாளில் இது கடல்
 என்றுகூடக் கருதப்படவில்லை.
 கங்கைஏரி என்பதுதான் இதன்
 சின்ன வயதுச்
 செல்லப்பெயர்...
 
 விசைப்படகில் ஓட்டைவிழுந்து
 விறுவிறுவென்று நீர்புகுந்து
 மொத்தத்தில் எல்லாரும்
 முழ்கிவிட்டால்?
 
 கவலைகொள்ளாதே
 கண்ணே. ஓர் அலையின் முதுகில்
 ஏறிக்கொண்டு உலகம் சுற்றி
 வருவோம்...
 
 அவள் சலவைநிலவாய்ச்
 சட்டென்று சிரித்தாள்.
 
 அலை முதுகில்
 ஏறிக்கொண்டால் உலகம் சுற்ற
 முடியுமா?
 
 ஆமாம். தென்கடலில்
 தோன்றும் பேரலைகள்
 இருபத்துநான்கு மணி
 ஐம்பது நிமிடத்தில்
 உலகத்தைச் சுற்றிவிட்டு
 ஓடிவந்துவிடுகின்றன. அப்படி
 எனக்கும் உனக்கும் ஓர் இலவச
 அலை கிடைக்காதா? சுற்றும்
 உலகத்தை நீர்வழியே
 சுற்றிவரமாட்டோ மா?
 
 எனக்கு மீண்டும்
 தலைசுற்றுகிறது...
 அவளைத் தாங்கிப்பிடித்துத்
 தலைமுடிதடவி விசைப்படகின்
 விளிம்பில் சாய்த்து நெற்றியில்
 அன்பு தடவி ஆதரவு
 செய்தான்.
 
 இரண்டுமணி நேர
 இடைவெளிக்குப் பிறகு
 மீனவர்கள் வலையிழுத்தார்கள்.
 நீரில் கிடந்த இரும்புவடங்கள்
 எந்திரச் சுழற்சியில்
 ஏறின மேலே.
 
 அமிழ்ந்த மிதவை மீண்டும்
 மிதக்க - பக்கப் பலகைகள்
 பளிச்சென்று தெரிய -
 மீனவர்கள்
 இழுக்க இழுக்க நீள வலைகள்
 நிறைத்தன படகை.
 
 எந்த முகத்திலும்
 உற்சாகமில்லை.
 வலையில் மீன்பட்ட அறிகுறி
 இல்லை.
 
 வலையில் அங்கங்கே ஒட்டிவந்த
 பச்சைப்பாசி, அது தரைதடவி
 வந்ததென்றே தடயம்
 சொன்னது.
 
 கலைவண்ணன் முகத்தில்
 கவலைக்கோடு.
 
 அரசனை யாசித்து
 வெள்ளைவேட்டியோடு போன
 புலவன் அழுக்குவேட்டியோடு
 திரும்பி வந்ததைப்போல
 மீன்பிடிக்கப் போன வலை
 பாசி பிடித்தல்லவா
 வந்திருக்கிறது.
 தமிழ்ரோஜாவும் தவித்துப்
 போனாள்.
 
 முழுவலையும் இழுத்து
 முடித்தார்கள். இல்லை.
 பெருமீன்கள் இல்லை.
 
 ஏழைக்கிழவியின் சுருக்குப்பையில்
 முலையில் அங்கங்கே முடங்கிக்
 கிடக்கும் சில்லறைகளைப்போல
 வலையின் ஆழத்தில் சில
 சில்லறை மீன்கள்
 சேர்ந்திருந்தன.
 
 வலை உதறினார்கள்.
 
 வா வா தமிழ்.
 வந்துபார்...
 
 அவள் தட்டுத்
 தடுமாறிக்கொண்டே
 ஆடும்படகில் ஓடிவந்தாள்.
 
 தட்டை மீன்கள் குட்டி மீன்கள்
 உருளைஉயிர்கள் பெயரிடப்படாத சில
 பிண்டப் பிராணிகள் சின்னச் சின்ன
 ஜெல்லி மீன்கள் அங்கொன்றும்
 இங்கொன்றுமாய் ஆக்டோ பஸகள் .. குதித்தும்
 ஊர்ந்தும் நகர்ந்தும் தவழ்ந்தும் பல
 வண்ணங்களில் படங்காட்டின.
 
 சரியாய் விழவில்லை - பாண்டி
 
 சமையலுக்கே காணாதே - சலீம்
 
 இன்னொரு முறை வலைபோட நேரமில்லை
 தங்கை பாவம் தாங்காது கரை திரும்ப
 வேண்டியதுதான் - இசக்கி.
 
 எல்லார் முகத்திலும் கவலை வலைவரித்து.
 கலைவண்ணன் தமிழ்ரோஜாவைத் தனியே
 அழைத்தான்.
 
 அவள் உள்ளங்கைகளைத் தன்
 கன்னங்களில் ஒற்றிக் கொண்டு சொன்னான்.
 
 இதோ பார் தமிழ். முப்பது கிலோ மீட்டர்
 கடல் கடந்து வந்தபிறகு வெறுங்கையோடு
 கரைதிரும்புவது காலவிரயம் - காசுவிரயம்-
 டீசல் விரயம். பல்லைக் கடித்துப் பொறுத்துக்
 கொள். இன்னொரு வலைவீச்சுக்கு
 வாய்ப்புக்கொடு ... - அவன் கெஞ்சினான்
 
 தலையை அழுத்திப் பிடித்து உட்கார்ந்தவள்
 சற்றுநேரப் போராட்டத்திற்குப் பிறகு சரி,,,
 என்றாள்.
 
 உப்புக்கரித்த அவள் கன்னத்தில் இனிக்க இனிக்க
 முத்தமிட்டான்.
 
 மீண்டும் பிளாஸடிக் கயிறு இறக்கி ஆழம்
 அறியப்பட்டது. இப்போது இருபத்திரண்டு
 பாகம் - நாற்பது மீட்டர் மீண்டும் இரும்புவடம்
 இறங்க - பக்கப்பலகை குதிக்க - வலைகள்
 மறைய - மிதவைகள் அமிழ நிகழ்த்தப்பட்டது
 இரண்டாம் வலைவீச்சு.
 
 இந்தமுறை மீன் விழும் என்றான் பாண்டி
 
 எப்படி? என்றான் கலை.
 
 ஆழமறியும் இரும்புக்குண்டு தரைதொடும்
 போது தரை சகதியா பாறையா என்று
 சொல்லும் தரை பாறையாயிருந்தால் மீன்
 வீழாது. சகதியாயிருந்தால் மீன் வீழும்.
 வலை முதலில் விரிந்தது பாறையில்.
 
 இப்போது விரிந்திருப்பது சகதியில் மீன் விழும்
 
 அவன் நினைத்ததும் நடந்தது, நினைக்காததும்
 நடந்தது,
 
 அவன் நினைத்தபடி - விரித்த வலையில்
 மீன்கள் விழத் தொடங்கின.
 
 அவன் நினைக்காத ஒன்றும் நிகழ்ந்தது.
 
 எந்திரத்திற்கு டீசல் விநியோகத்தைச் சீர்செய்து
 அனுப்பும் டைமிங் பிளேட் உடைந்து
 விசைப்படகு நின்று விட்டது.
 
 அது-
 நீலக்கடலில் கறுப்பு இரவு கவியும் நேரம்.
- 
				7
 
 அய்யய்யோ. படகு பழுதா..?
 ஓடுமா..? ஓடாதா..?
 
 கரையோடு சேருமா..? - இல்லை
 கடலோடு முழ்குமா..?
 
 அப்போதே சொன்னேன்.
 உதவாது இந்த உயிர்
 விளையாட்டு என்றேன்.
 
 அனுபவம்.. அனுபவம்.. என்றீர்கள்.
 
 கடைசியில் வாழ்வா, சாவா என்ற
 அனுபவத்திற்கல்லவா வரவழைத்துவிட்டீர்கள்..?
 
 தீக்குச்சி கொளுத்தி விளையாடும்
 குழந்தைகள் முங்கில் காட்டுக்குள் சிக்கிக்
 கொண்டது மாதிரி இந்த விளையாட்டுப்
 பயணம் வினையாகவல்லவா முடிந்துவிட்டது.
 சொல்லுங்கள், சொல்லுங்கள்... இது படகா -
 இல்லை நாம் மிதந்து வந்த கல்லறையா..?
 
 கோழிக்கூண்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டால் -
 பக்கவாட்டில் இறக்கையடித்துப் படபடக்கும்
 கோழி மாதிரி - அவள் பயந்து நடுங்கிப்
 பதறி ஒடுங்கிப் பட்டாசுபாஷை பேசினாள்.
 
 அமைதி. அமைதி. அவசரப்படாதே.
 குடியும் முழுகிவிடாது. படகும் முழ்கிவிடாது.
 கொஞ்சம் பொறு...
 
 அவளை அமைதிப்படுத்தியவன் நின்ற
 படகின்மேல் நில்லாமல் ஓடிக்கொண்டிருந்த
 பாண்டியை நிறுத்தி, படகில் என்ன பழுது..?
 என்றான்.
 
 எந்திரத்துக்கு எண்ணெய்வரத்து நின்று
 விட்டது. எந்திரத்துக்கு வரும் எண்ணெய்க்கு
 அழுத்தம் கொடுத்தனுப்பும் டைமிங் பிளேட்
 உடைந்துவிட்டது. நல்லவேளை. மாற்றுத்தகடு
 இருக்கிறது. மாற்றத் தெரிந்த பரதனும் இருக்கிறான்.
 மாற்றிவிடலாம்...
 
 எவ்வளவு நேரமாகும்..?
 
 இரண்டு மணியாகலாம்...
 
 இரண்டு மணி நேரமா -
 அல்லது இரவு இரண்டு மணியா..?
 - தமிழ்ரோஜா தடுத்துக் கேட்டாள்.
 
 பயம் வேண்டாம் தாயே. இரண்டு மணி
 நேரம்தான்...
 
 அவன் போய்விட்டான்.
 
 மீண்டும் தமிழ்ரோஜா விட்ட இடத்திலிருந்து
 புலம்ப ஆரம்பித்தாள்.
 
 முடியாது. இதைப் பழுதுபார்க்க முடியாது.
 விடியாது. இதோ, வந்து கொண்டிருக்கும்
 இரவு விடியாது. இந்தப் படகு கரைசேர்வது
 இருக்கட்டும்... நம் உயிர்போன உடலாவது
 கரைசேருமா..? சொல்லுங்கள் கலைவண்ணன்.
 சொல்லுங்கள்...
 
 இரு கைகளாலும் அவன் மார்பில் மாறி மாறிக்
 குத்தி, அவன் உணர்ச்சி காட்டாததால்
 தன் முகத்தையும் அவன் மார்பில் முட்டி முட்டி
 அழுதாள்.
 
 அவன் அவளைத் தீண்டாமல் பேசினான்.
 
 இதோ பார். இது மிகை.
 வாழ்வைக் கற்பனை செய்.
 சாவைக் கற்பனை செய்யாதே...
 
 பூக்கள் காற்றில் உதிர்ந்தால் பூகம்பம்
 வந்துவிட்டதென்று புலம்பித் திரியாதே.
 
 உச்சிவானத்தில் நிலா வந்தால் தலையில்
 விழுந்துவிடுமோ என்று சந்தேகப்படாதே...
 
 இன்பத்தைக் கற்பனை செய்து பார்.
 துன்பத்தை எதார்த்தமாய்ப் பார்.
 
 படகு பழுதானதொரு சின்னஞ்சிறு செய்தி...
 
 உடனே இதுதான் வாழ்வின் கடைசி
 இரவென்று கருகிப் போகாதே...
 
 இன்பத்தை இரண்டாய்ப் பார்.
 துன்பத்தைப் பாதியாய்ப் பார்...
 
 அவளுக்கு உறுதி ஊட்டும் பாவனையில்
 ஒலி குறைந்த தொனியில் அவன் சொல்லச்
 சொல்ல, அவள் கண்கள் சொட்டுச் சொட்டாய்த்
 தமிழ்ப் பேசின.
 
 கண்ணீர்...
 திட உணர்ச்சிகளின் திரவமொழி.
 
 ஏய். என்ன இது..? ஓர் இடைவேளைக்குப்
 பிறகு இது கண்ணீரின் இரண்டாம் பாகமா..?
 
 நீ எப்படி இப்படித் தண்டுவடம் இல்லாத
 புழுவாய்த் தயாரானாய்..?
 
 நீ கர்ப்பத்தின் சுவர்களை உதைத்து உதைத்து
 வெளிவந்த குழந்தையா..? இல்லை -
 முட்டையின் ஓடுகளை முட்டாமல் வெளிவந்த
 குஞ்சா..?
 
 புராணங்கள் சொல்லும் பெண்களின்
 பழைய கலவைகளை விட்டு வெளியே வா...
 
 என்ன கலவை அது என்ற பாவனையில்,
 அவள் தன் கண்ணீர்க் கண்களை
 உயர்த்திக் கேட்டாள்.
 
 இது கேள். இந்தியப் புராணம் சொல்கிறது.
 எல்லாம் படைத்து முடித்த பிரம்மன்,
 கடைசியாய்ப் பெண்ணைப் படைக்க
 முயன்றபோது தேவையான முலகங்கள்
 தீர்ந்திருக்கக் கண்டான்.
 
 யோசித்தான். படைத்து வைத்த ஒவ்வொன்றிலும்
 பங்கெடுத்தான்.
 
 நிலாவின் வட்டமுகத்தை - வளர்ந்த கொடியின்
 வளைவு நெளிவுகளை - புல்லின் மெல்லிய
 அதிர்வுகளை - நாணலின் மென்மையை -
 பூக்களின் மலர்ச்சியை - மானின் பார்வையை-
 உதயசூரியனின் உற்சாகத்தை - மேகத்தின்
 கண்ணீரை - காற்றின் அசைவை - முயலின்
 அச்சத்தை - மயிலின் கர்வத்தை - தேனின்
 இனிமையை - புலியின் கொடுரத்தை -
 நெருப்பின் வெம்மையை - பனியின்
 தன்மையை - குயிலின் கூவலை - கொக்கின்
 வஞ்சகத்தை - கிளியின் இதயத்தை -
 சக்கரவாகத்தின் கற்பை ஒட்டுமொத்தமாய்ச்
 சேர்த்துப் பெண் படைத்தானாம் பிரம்மன்.
 
 நான் பெண். சுதந்திரமான பெண். நான்
 அச்சப்படுவதற்கும் அழுவதற்கும்கூட எனக்குச்
 சுதந்திரமில்லையா..?
 
 அவன் அவள் கண்ணீரைத் தொட்டுக்கொண்டு
 சிரித்தான்.
 
 அறியாப்பெண்ணே. அழுகையும் அச்சமும்
 தீர்ந்தநிலைதான் சுதந்திரம்.
 
 இதோ பார்... பூமி உருண்டை இன்னொரு
 நூற்றாண்டுக்குள் சுற்றப்போகிறது.
 
 பெண் மாறிக் கொண்டிருக்கிறாள்.
 
 தலையணை உறைமாற்ற மட்டுமே
 தயாரிக்கப்பட்ட பெண், துப்பாக்கிகளுக்குத்
 தோட்டா மாற்றத் தயாராகிவிட்டாள்.
 
 மாறிவிடு. நீயும் மாறிவிடு.
 
 உடைந்த தகடு கழற்றிப் புதிய தகடு
 பொருத்தும் முயற்சியில் பரதன்
 முனைந்திருக்க - பாண்டியும் இசக்கியும்
 சேர்த்து அவனுக்கு ஆறு கரங்களானார்கள்.
 
 நீலவானத்தில் ஜெட்விமானம் விட்டுப்போன
 புகை திட்டுத்திட்டாய்த் தெரிவது மாதிரி,
 இருள் கவியும் கடல்மீது அங்கங்கே
 வெள்ளலைகள்...
 
 இருபத்துமுன்று ஆண்டுகளாய் அவள்
 சந்திக்காத ஓர் இரவு அவளைச் சந்திக்க
 வந்தபோது - அவள் மெய்யாகவே
 மிரண்டு போனாள்.
 
 படமெடுத்துச் சீறும் பாம்பாய் ஓசையோடு
 வீசும் வாடைக்காற்று.
 
 விசைப்படகில் வெளிச்சம்விழும்
 கடற்பரப்பைத் தவிர சுற்றிக் கறுப்புச்சுவர்
 எழுப்பி நிற்கும் இரவு.
 
 வானத்தில் அணைந்து அணைந்து எச்சரிக்கும்
 நட்சத்திரங்கள்.
 
 நிலாவைப் பெற்றெடுப்பதற்குப் பிரசவ
 வலியில் சிவந்து கொண்டிருக்கும் கிழக்கு.
 
 அலைகளின் தளுக்.. தளுக்.. ஓசைகளில்
 தளும்பி ஆடும் படகு.
 
 இவையெல்லாம் அவள் அச்சத்தை மெள்ள
 மெள்ள அதிகரித்தன.
 
 அழுது அழுது கண்கள் சிவந்தும் கண்ணீர்
 உறைந்தும் போனவள் - இன்னும் எவ்வளவு
 நேரமாகும்..? என்றாள் குழந்தையாய்க்
 குழைந்து குழைந்து.
 
 இன்னும் ஒரு மணி நேரம் அல்லது
 ஒன்றரை மணி நேரம்...
 
 அதுவரை என்ன செய்யலாம்..?
 
 கண்முடித் தியானம் செய்வோம். கவிதை
 செய்வோம். நீ அனுமதித்தால் காதலிப்போம்.
 
 விரல் விழுந்துவிட்டால் அழுதுகொண்டிருக்கக்
 கூடாது. நகம் வெட்டும் நேரம் மிச்சம் என்று
 நினைத்துக்கொள்வோம்.
 
 படகு பழுதானதென்றால் பதறிக்
 கொண்டிருக்கக் கூடாது.
 
 கடலில் ஓர் இரவு என்ற கட்டுரைக்குக்
 குறிப்பெடுப்போம்...
 
 இப்படி ஒரு தைரியம் உங்களுக்கு எப்படிக்
 கிடைத்தது..?
 
 கல்வியோடு வாழ்க்கையைக் கல்யாணம்
 செய்தபோது கிடைத்தது.
 
 ஒரு ஜப்பானியக் கவிதை சொல்வேன் -
 கேட்டுக் கொள்வாயா..?
 
 சொல்லுங்கள்...
 சோதனைகளை அனுபவிக்கப்
 பழகிக் கொண்டிருக்கிறேன்.
 
 எரிந்துவிட்டது வீடு
 இனி
 தெளிவாய்த் தெரியும் நிலா...
 
 - இந்தக் கவிதையை வாழ்க்கைப்படுத்தக்
 கற்றுக்கொண்டேன்.
 
 தண்ணீரில் எடையிழக்கும் பாரம்போல்
 துன்பம் எடையிழந்தது.
 
 தங்கத்தின் துருவல்களைச் சேகரித்தே ஒரு
 நகை செய்து விடுவதுபோல், கஷடங்களைச்
 சேகரித்தே நாம் கலைசெய்யக் கற்றுக்கொள்ள
 வேண்டும்.
 
 கலையின் முதல் எதிரி பசி...
 முதல் நண்பனும் அதுதான்.
 ஓ. உனக்குப் பசிக்கிறதா..?
 
 அந்த நேரத்தில் அந்தப் படகில் ஒரே
 ஓர் ஆறுதல் சலீமின் சமையல் வாசனைதான்.
 
 வாந்தி கண்ட தமிழ்ரோஜா, பகல் முழுவதும்
 தேநீர் தவிர எதையும் அருந்தவில்லை.
 
 அவளோடு அவள் பட்டினியைப் பங்கிட்டுக்
 கொண்டவனும் அதுவரை எதுவும்
 அருந்தவில்லை.
 
 சாப்பிடுங்கள்... எங்களுக்கே பசிக்கிறதே.
 உங்களுக்குப் பசிக்காதா..?
 
 சோற்றின் முக்கால்பாகத்தை மீன்குழம்பில்
 முழ்கடித்து, தட்டேந்தி நின்றான் சலீம்.
 
 ஆனால், அதில் மீன்துண்டு கிடக்கக் கண்டு,
 உயிருள்ள பாம்பைக் கண்டதுபோல் தன்னைப்
 பின்னிழுத்துக் கொண்டாள் தமிழ்ரோஜா.
 
 மன்னித்துவிடுங்கள் சலீம். தமிழ் - சைவம்...
 என்றான் கலைவண்ணன்.
 
 அப்படியானால் மீன் அசைவமா..?
 என்றான் சலீம்.
 
 தயவுசெய்து போய்விடுங்கள். என்னால்
 தாங்கமுடியவில்லை... - முகத்தையும் முக்கையும்
 முடிக்கொண்டாள் தமிழ்ரோஜா.
 
 வெறும் சோறு... வெறும் ரசம்... தரமுடியுமா
 தமிழுக்கு..?
 
 இப்போதே தருகிறேன்... என்ற சலீம்.
 ஒரு தட்டைக் கலைவண்ணன் கையில்
 தந்தான். மறுதட்டை ஏந்திக்கொண்டான்.
 ததும்பும் படகில் தடுமாறாமல் ஓடினான்.
 
 சோற்றில் ரசமுற்றிச் சுடச்சுடக் கொண்டு
 வந்தான். தமிழுக்குப் பசித்தது. தட்டை
 வாங்கிக் கொண்டாள். உடனே சாப்பிடாமல்
 உற்று உற்றுப் பார்த்தாள். தட்டிலிருந்த பிசுக்கு
 அவளைப் புசிக்க விடவில்லை.
 
 தூக்கம் வந்தால் தலையணை தேவையில்லை.
 பசி வந்தால் சுத்தம் தேவையில்லை.
 
 அவள் பிசுக்கை மறந்தாள். பிசைந்தாள். ரசமே
 சோறாய் - சோறே ரசமாய் மாறும் ரசவாதம்
 நிகழ்ந்தது.
 
 ஒருவாய் அள்ளி உண்டாள்.
 
 மென்ற சோற்றை விழுங்கவிடாமல் உள்ளே
 ஏதோ உறுத்தியது.
 
 சமையலறையில் பாண்டி சலீமைத் திட்டிக்
 கொண்டிருந்தான்.
 
 மீன்கரண்டியை ரசத்தில் போடாமல் உனக்குப்
 பரிமாறவே தெரியாதா..?
 
 அவ்வளவுதான்.
 தமிழ்ரோஜா தன் குடலைத் தவிர,
 எல்லாவற்றையும் மொத்தமாய்த் துப்பிவிட்டாள்.
 
 தட்டை வீசியெறிந்தாள்.
 
 அது வங்காள விரிகுடாவில் விழுந்தது.
 
 தயவுசெய்து என்னையும் இந்தக் கடலில்
 எறிந்துவிடுங்கள்...
 
 அவள் சத்தத்தில் - அப்போதுதான்
 தூங்கப்போன கடல் துடித்து எழுந்தது.
- 
				8
 
 வாழ்வின் மர்மம்தான்
 வாழ்வின் ருசி.
 
 நாளை நேர்வதறியாத சூட்சுமம்தான்
 அதன் சுவை.
 
 எதிர்பாராத வெற்றிதான்
 மனித மகிழ்ச்சி.
 
 தோல்வியும் எதிர்பாராமல் வருவதால்தான்
 மனிதன் அதன் முன்நிமிஷம் வரைக்கும்
 முயற்சியில் இருக்கிறான்.
 
 மரணத் தேதி மட்டும் மனிதனுக்குத்
 தெரிந்துவிட்டால் மரணம் வருமுன்பே அவன்
 மரித்துப் போவான்.
 
 வாழ்க்கையும் ஒருவகையில் கண்ணீரைப்
 போலத்தான். இரண்டும் எதிர்பாராமல்
 வருவதில்தான் பெருமை.
 
 சரியாகிவிட்டது. டைமிங் பிளேட்
 பழுதுபார்த்தாகிவிட்டது...
 
 அவிழ்ந்த லுங்கி தெரியாமல் ஆடிக் குதித்துக்
 கத்தினான் சலீம்.
 
 படகுக்குள் அதுவரைக்கும் கோமாவில்
 கிடந்த சந்தோஷம் அங்குலம் அங்குலமாய்
 அசையத் தொடங்கியது.
 
 கறுத்த முகங்களில் மகிழ்ச்சி நுரைத்தது.
 
 அந்தத் தடித்த இரவுக்கும் வாடைக்
 காற்றுக்கும் அந்தச் செய்தி மட்டுமே ஆறுதல்.
 
 மாலையின்றி மேளமின்றிப் பரதனுக்குப்
 பாராட்டு விழா.
 
 கலைவண்ணன் ஓடிப்போய் அவன்
 கைகுலுக்கினான்.
 
 அதில் -
 எண்ணெய்ப் பிசுக்கில் ஊறிய அழுக்கு.
 
 அதனாலென்ன.
 
 உழைக்காதவன் கையில் தங்கமும் அழுக்கு.
 உழைப்பவன் கையில் அழுக்கும் தங்கம்.
 
 நாங்கள் படித்தவர்கள்தாம். ஆனால்.
 பழுதுபார்க்கப் பயன்படவில்லை எங்கள்
 படிப்பு. நீங்கள் படிக்காதவர்தான். ஆனால்
 பழுதுபார்த்துக் கொடுத்தது உங்கள் பயிற்சி.
 நன்றி பரதன். நன்றி...
 
 தன் அழுக்குக் கையை இழுத்துக்கொண்டு
 பரதன் சிரித்தான்.
 
 பிரசவத்தில் முதலில் தலைநீட்டும்
 குழந்தையைப் போல - துண்டுமுகம்
 காட்டியது தூரத்துநிலா.
 
 சரி. சரி. கரைக்குத் திருப்புங்கள் படகை.
 வாடைக்காற்று வாட்டுகிறது. தங்கை தாங்காது.
 மீன் விழாவிட்டால் பரவாயில்லை. இவர்களைக்
 கரைசேர்த்துத் திரும்பி வருவோம்...
 
 - பாண்டியின் கரகரப்பான ஆணைகேட்டுச்
 சுறுசுறுப்பான படகு நங்கூரம் களையத்
 தயாரானது.
 
 கலைவண்ணன் முகத்தில் கவலை கப்பியது.
 
 பாண்டி. மீன் விழுந்திருக்குமா..?
 
 விழுந்திருக்காது...
 
 ஏன்..?
 
 படகுதான் நின்றுவிட்டதே... வலை பயணப்பட
 வில்லையே.
 
 கண்களைக் கடலுக்கும் காதுகளை அவர்கள்
 பேச்சுக்கும் கடன் கொடுத்திருந்தாள்
 தமிழ்ரோஜா.
 
 தலைதாழ்த்திப் பேசினான் கலை.
 
 மன்னிக்க வேண்டும். எங்களால்
 உங்களுக்கு இன்னல். உங்கள் படகில் துன்பம்
 ஜோடியாய்க் குதித்துவிட்டது...
 
 பரவாயில்லை பேனாக்காரரே. திரும்பி
 வந்து மீன்பிடித்துக் கொள்கிறோம்...
 
 இருவரும் மெளனமானார்கள். வாடைக்காற்று
 மட்டும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்தது.
 
 மீன் விழவேண்டுமென்றால் இன்னும்
 எவ்வளவு தூரம் போக வேண்டும்..?
 
 எதிர்பாராத குரல்கேட்டு இருவரும்
 திரும்பினார்கள்.
 
 - கேட்டவள் தமிழ்ரோஜா.
 
 இது உண்மைதானா என்று கண்களை
 உருட்டி உருட்டிப் பார்த்த பாண்டி -
 
 இன்னும் ஐந்தாறு கிலோமீட்டர் போக
 வேண்டியிருக்கும்... என்றான்.
 
 போகலாம்... இவ்வளவு தூரம் வந்துவிட்டோ ம்.
 மீன்பிடித்துக்கொண்டே போகலாம். படகை
 முன்னோக்கிச் செலுத்துங்கள்...
 
 நிஜந்தானா இது..?
 நிலைகுத்தி நின்றான் கலைவண்ணன்.
 
 பேசுவது தமிழா..?. இல்லை,
 பெருங்கனவின் குரலா..?.
 
 பகலெல்லாம் உணவு கொள்ளாமல் வண்ணம்
 உதிர்ந்து கிடக்கும் என் வசீகரச் சித்திரம்
 தோழர்களின் வயிறு வாடக்கூடாதென்று
 வாய்திறந்து பேசியதா..?
 
 மற்றவர் நலனுக்காகத் தன் துயர் பொறுக்கும்
 தன்னல மறுப்பு இருக்கும் வரைக்கும் காற்றும்
 மழையும் பூமியிலிருக்கும். கடல்கள் தங்கள்
 கரைதாண்டாதிருக்கும்.
 
 தன் மெளனவிரதத்தைச் சத்தமிட்டு
 முடித்துக்கொண்ட விசைப்படகு ஒரு
 போர்க்கோபத்தோடு புறப்பட்டது.
 கிழக்கே கிளம்பிய நிலாவைத் தொட்டுவிடத்
 தன் நீண்ட முக்கை நீட்டியது.
 
 உற்சாகம்தான். படகு முழுக்க ஒரு பரவசம்தான்.
 
 மீன்குழம்பு சாப்பிடுவதே அவர்களுக்கொரு
 கலைநிகழ்ச்சிதான்.
 
 கொஞ்சநேரம் தட்டாராய்ச்சி செய்து
 கொண்டிருந்த இசக்கி சலித்துக்கொண்டான்.
 
 என்ன சலீம். மீனின் நடுத்துண்டம்
 பாண்டிக்கு. வால் பரதனுக்கு. தலை மட்டும்
 எனக்கா..?
 
 சாப்பிடுங்கள். அதில்தான் முளை இருக்கிறது.
 மீன் தலை சாப்பிட்டால் முளை வளரும்...
 
 அப்படியா. நீ பிறந்ததிலிருந்து மீன் தலையே
 சாப்பிட்டதில்லையா..?
 
 பொசுக்கென்று எல்லோரும் சிரித்ததில்
 புரையேறிவிட்டது. சத்தங்கேட்டு ஓடிவந்த
 தமிழ்ரோஜா தண்ணீர் ஊற்றிக் கொடுத்தாள்.
 
 கலைவண்ணன் அவர்கள் தலை தட்டித் தட்டி,
 சிரித்துப் புரையேற்றிய சிரமம் குறைத்தான்.
 
 ஏதோ ஒரு கூச்சம். ஏதோ ஒரு நெகிழ்ச்சி.
 அவர்கள் பின்வாங்கினார்கள்.
 
 படித்தவர்கள் தங்களை உபசரிக்கிறார்களே
 என்ற பாமரப் பதுங்கல்.
 
 நெளிந்துகொண்டே பரதன் கேட்டான்.
 நீங்கள் சாப்பிடவில்லையா..?
 
 சாப்பிடுவோம். இன்று எங்களுக்கு
 நிலாச்சோறு... என்றவன், தமிழ்ரோஜாவை
 அழைத்துக்கொண்டு படகின் பின்விளிம்பில்
 இருள் கவிந்த பிரதேசம் ஏகினான்.
 
 அவள், அவன் மடியில் விழுந்து குறுகிக்
 குறுகி ஒரு குட்டியானாள்.
 அவன் கங்காருவானான்.
 
 வானத்தில் நிலா. வயிற்றில் பசி.
 
 என்னவோ நிலாச்சோறு என்றீர்களே.
 
 சைவப்பெண்ணே. இன்றுனக்கு நிலாவே
 சோறு... நிலாவைத் தின்றுவிடு...
 
 நிலா சைவமா..?
 
 நிச்சயமாய்ச் சைவம்தான்...
 
 எப்படி..?
 அங்குதான் உயிர்கள் இல்லையே.
 
 அவள் பசியில் சிரித்தாள். அலைகளோடு
 சடுகுடு விளையாடும் நிலவின் கிரணங்களில்
 நெஞ்சுகரைந்தவள் -
 
 பெளர்ணமி பார்த்தால் கடல் பொங்குகிறதே.
 அது ஏன்..? என்றாள்.
 
 பிரிந்துபோன மகளைப் பார்த்தால் பெற்ற தாய்
 பொங்கமாட்டாளா..?
 
 யார் மகள்..? யார் தாய்..?
 
 கடல் - தாய்... நிலா - மகள்...
 
 எனக்கு இந்தக் காதுக்குப் பூ வைக்கும்
 கவிதைகள் பிடிப்பதில்லை...
 
 நான் சொல்வது கவிதையல்ல. விஞ்ஞானம்.
 பூமியிலிருந்து தூக்கியெறியப்பட்ட துண்டுதான்
 நிலா என்று ஒரு விஞ்ஞான முடிவு உண்டு...
 
 எப்படி..?
 
 பூமி தோன்றி அதன் எரிமலைக் குழம்புகள்
 ஆறத்தொடங்கிய அந்த ஆதிநாளில் - சூரிய
 ஏற்றவற்றத்தால் ஐந்நூறு ஆண்டுகள் வளர்ந்த
 ஒரு பேரலை பூமியிலிருந்து பிய்ந்து
 விண்வெளியில் வீசப்பட்டது. சில பெளதிக
 விதிகளுக்குட்பட்டுத் தூக்கியெறியப்பட்ட
 துண்டு ஒரு சொந்தப் பாதை போட்டுச் சுற்ற
 ஆரம்பித்தது. அதுதான் நிலா...
 
 ஆச்சரியம். ஆனால் - ஆதாரம்..?
 
 இன்னும் பசிபிக் கடலில் அந்தப்
 பள்ளமிருக்கிறது. அந்தப் பள்ளத்திலிருக்கும்
 பசால்ட் என்னும் எரிமலைக் குழம்புப்
 பாறையும், நிலாப் பாறையும் ஒரே ஜாதி
 என்ற உண்மை உணர்த்தப்பட்டிருக்கிறது.
 நிலாவை ஈன்று கொடுத்த பசிபிக்
 சமுத்திரத்தின் கர்ப்பப்பை இப்போதும்
 காலியாயிருக்கிறது...
 
 அவ்வளவு பெரிய பள்ளமா..?
 
 பள்ளம். பெரும்பள்ளம். எவரெஸட்டை
 வெட்டி உள்ளே போட்டாலும் இன்னும்
 மிச்சமிருக்கும்...
 
 கடலுக்குள் ஏன் மலையை வெட்டிப்
 போட வேண்டும். கடலுக்குள் ஏற்கெனவே
 மலைகள் இல்லையா..?
 
 இருக்கின்றன...
 
 அடையாளங்கள்..?
 
 தீவுகள்...
 
 தீவுகளுக்கும் மலைகளுக்கும் என்ன
 சம்பந்தம்..?
 
 கடலுக்குள் முழ்கிய மலைகளின் முழ்காத
 உச்சிகளே தீவுகள்...
 
 அப்படியா..?
 
 அப்படித்தான்... மத்திய பசிபிக்கின்
 குறுக்கே இரண்டாயிரம் மைல் நீளமுள்ள
 மலைமுகட்டின் கடல் கொள்ள முடியாத
 சிகரங்களே ஹவாய்த் தீவுகள். இந்துமகா
 சமுத்திரத்தில் இந்தியாவிலிருந்து அண்டார்டிகா
 வரை ஒரு மலைத்தொடர் போகிறது. அந்த
 மலைத்தொடரில் முழ்காத உச்சிகளே மடகாஸகர் -
 இலங்கை - மாலத்தீவுகள் - லட்சத்தீவுகள்...
 
 அவள் இரண்டு கண்களிலும் ஆச்சரிய நிலாக்கள்
 அடித்தன. உள்ளிருந்து ஒரு பாட்டுச் சத்தம்.
 
 என்னென்னமோ ஆகிப்போச்சு ஐலசா - ஓடம்
 எந்திரத்தில் ஏறிப்போச்சு ஐலசா...
 ஒங்களத்தான் கரைசேத்தோம் ஐலசா - அட
 எங்க கரை எப்ப வரும் ஐலசா...
 
 ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு சுதியில்
 சமையலறையிலிருந்து சலீம் பாடினான்.
 
 மீன்களுக்கு மட்டும் காது கேட்குமானால்
 அவன் அறுப்பதற்கு முன்பே மரித்திருக்கும்.
 
 சலீம்தானே பாடுவது..? என்றாள் தமிழ்.
 
 கழுத்தளவு நீரில் நிற்பவனுக்கே சங்கீதம்
 வருமென்றால், கடல்நீரில் நிற்பவனுக்குச்
 சங்கீதம் வராதா..?
 
 அவன் விதித்ததே சுதி. அவன் வகுத்ததே
 மெட்டு. ஆனால், இப்போது அவனது
 சந்தோஷத்தின் உயரத்தை எந்தச் சங்கீத
 வித்வானும் தொட்டுவிட முடியாது...
 
 சமையல்கட்டில் ஒரு சுண்டெலி வந்து மாட்டிக்
 கொண்டது.
 
 மிளகாய்த்தூள், கடுகுபுட்டிகளுக்குப் பின்னே
 இடுக்குகளில் வளைந்து வளைந்தோடி அது
 வால்காட்டியது.
 
 சலீம் அந்தச் சுண்டெலியை விரட்டியும்
 மிரட்டியும் பார்த்தான்.
 
 ஆனால், அது எலிமொழி பேசிக்கொண்டு
 அங்கேயே சுற்றிச்சுற்றி வந்தது.
 
 ஏய். எங்களுக்குத் தெரியாமல் எங்கள்
 படகில் ஏறிக்கொண்டு வக்கணை வேறு
 காட்டுகிறாயா..? ஓடிப்போ. ஓடிப்போ. என்று
 அவன் செல்லமாய் விரட்ட, அது அவன்
 தலைமேல் ஒரு எட்டு வைத்துத் தாவி,
 அவன் பார்வை தொடமுடியாத இடத்தில்
 போய்ப் பதுங்கிக்கொண்டது.
 
 நான் சுறாமீனுக்கே பயப்படாதவன்.
 சுண்டெலிக்கா பயப்படப் போகிறேன்..?
 என்று தன் வீரத்தைத் தனிமையில்
 பிரகடனம் செய்துகொண்டான் சலீம்.
 
 நிலா வெளிச்சத்தில் கடல்குளிக்கும் அந்த
 வெள்ளை இரவில் - அலைகளின் மேலே
 துள்ளித் துள்ளி விளையாடின ஜெல்லி மீன்கள்.
 
 சில நேரங்களில் அலை எது, மீன் எது
 என்ற வித்தியாசம் விளங்கிக்கொள்ள வெளிச்சம்
 போதவில்லை.
 
 கலைவண்ணன் மடியில் கிடந்துகொண்டே
 அந்த மங்கலான காட்சிகளில் மனது கரைந்து
 கொண்டிருந்தாள் தமிழ்ரோஜா.
 
 கடல்நோய் கொண்ட கண்மணி. கடல்
 உனக்கும் பிடித்துவிட்டதா..? இன்னும் கொஞ்சம்
 கடல் விஞ்ஞானம் சொன்னால் காது கொடுப்பாயா..?
 
 வேண்டாம்... எனக்கிந்த இரவுபோதும். கடல்
 அலைகளைக் கிச்சுக்கிச்சு முட்டிச்
 சிரிக்கவைக்கும் கிரணங்கள் போதும்.
 தண்ணீரிடம் சுதந்திரம் கேட்கும்
 ஜெல்லிமீன்களின் துள்ளல் போதும். இது
 என் கண்ணுக்குத் தெரிந்த நிஜம்.
 இதற்குமேல் இதில் விஞ்ஞானம் பார்த்து, என்
 முளையில் நான் முள் குத்திக்கொள்ள மாட்டேன்...
 
 நீ தமிழச்சி. தலைமுறை தலைமுறையாய்த்
 தமிழன் செய்த தவறைத் தமிழச்சி நீயும்
 செய்கிறாய்.
 
 தெரிந்த பூமியைப் பார்க்க மறந்ததும் -
 தெரியாத கடவுளைத் தேடி அலைந்ததும்
 தான் தமிழன் செய்த தவறு. பசித்தவன்
 காதில் வேதாந்தம் ஓதக்கூடாது
 என்பார்கள். வேதாந்தம் மட்டுமல்ல.
 விஞ்ஞானமும் ஓதக்கூடாது...
 
 சலீம் வந்து தனிமை கலைத்தான்.
 
 கையில் இரண்டு தட்டுகள் ஏந்தியிருந்தான்.
 
 இதோ. சுத்தமான பாத்திரத்தில் வடித்த
 சோறு. சாப்பிடுங்கள்... நீங்கள் பட்டினி
 கிடந்தால் எங்களுக்குச் செரிக்காது...
 
 அவன் நீட்டியது பள்ளமும் குழியும்
 நிறைந்த அலுமினியத் தட்டுதான். ஆனால்
 ஒவ்வொரு பள்ளத்தையும் அவன் தன்
 பாசத்தால் நிரப்பியிருந்தான்.
 
 தட்டாமல் வாங்கினர் தட்டை.
 
 அவள் முதலில் பிசைந்தாள். பசி
 இப்போது சுத்தம் பார்க்கவில்லை.
 உருட்டி உருட்டி ஒரு வாய் உண்டாள்.
 
 மென்றால் ருசி தெரிந்துவிடுமோ என்று
 மெல்லாமல் விழுங்கினாள்.
 
 அவள் உண்ணும் அழகுபார்த்து அவன்
 உண்ணத் தொடங்கியபோது, விரைந்து சென்ற
 விசைப்படகு நிலைகொள்ளாமல் ஆடி
 நின்றுவிட்டது.
 
 என்ன... ஏனிந்த நிறுத்தம்..? ஒருவேளை
 கரைக்குத் திருப்பச் சொல்லிக் கட்டளையா..?
 
 அங்கே நிலவிய ஒரு நீளமான
 குழப்பத்துக்குப் பிறகு பதட்டத்தோடு வந்து
 பாண்டி ஒரு சேதி சொன்னான்.
 
 சேதியா அது..?
 
 மேலே மேகம் இல்லை.
 மின்னலும் மழையும் இல்லை.
 
 ஆனால் -
 
 இடிமட்டும் காதில் வந்து இறங்கியது.
- 
				9
 
 படகின் எந்திரம் பழுது. இனி ஓடாது.
 சிறு பழுதல்ல. பெரும் பழுது.
 இறுகிவிட்டது எந்திரம். வெடித்துவிட்டன
 எண்ணெய்க் குழாய்கள்.
 0முதல் 7 வரை
 எண்கொண்ட எண்ணெய்மானியில்
 அந்த எண்ணெய் முள் 5 வரை ஆடும்.
 அந்த முள் செத்து பூஜயத்தில் விழுந்து
 விட்டது. இது படகுக்கு மாரடைப்பு. இனி
 ஒன்றும் செய்ய முடியாது.
 
 அதுவரையில் அந்த விசைப்படகில்
 விரிந்திருந்த சந்தோஷத்தின் சிறகு
 தொட்டாற்சிணுங்கி இலையைப் போல்
 மொத்தமாய் முடிக்கொண்டது.
 
 மென்ற உணவை விழுங்கியும்
 விழுங்காமலும் கலைவண்ணன் கேட்டான்.
 பழுதுபார்க்க முடியுமா? முடியாதா?
 
 பாண்டி ஓடிக்கொண்டே சொன்னான்.
 இல்லை. அது நம் கையைவிட்டுப் போய்
 விட்டது. போன மாதமே இந்தப் படகை
 எடுக்க வேண்டாமென்று எச்சரித்தார்கள்.
 நாங்கள் கேட்கவில்லை. படகு பழையது.
 
 ஓடாதா? படகு இனிமேல் ஓடாதா?
 
 தவணை முறையில் தாக்கிய அதிர்ச்சியில் -
 தட்டோ டு தட்டுத் தடுமாறித் தமிழ்ரோஜா
 முர்ச்சையானாள்.
 
 தமிழ். தமிழ். என்று
 கத்திய கலைவண்ணன் குரலில்
 அந்த ராத்திரிக்கடல் உறக்கம்
 கலைந்தது. ஆனால்
 தமிழ்ரோஜாவின் முர்ச்சை
 தெளியவில்லை.
 
 அவளை அவன் தன் மடி
 கிடத்தித் தாதியானான்.
 
 தீப்பிடித்த வீட்டில்
 திரைச்சீலையை யார்
 கவனிப்பது?
 
 அவர்களைக் காக்க
 மீனவர்களுக்கு
 அவகாசமில்லை.
 
 இடு. இடு. நங்கூரமிடு.
 இழு. இழு. வலையை இழு.
 ஒரு வஞ்சகக் கஞ்சனின் கையில்
 காசு நகர்ந்தாலும்
 நகரலாம். ஆனால் நம் படகு
 நகரும் என்று நம்பாதே.
 
 உதவிப் படகு வராமல்
 ஒன்றுமே நடக்காது. அபாய
 அறிவிப்புக் கொடு.
 விளக்குகளை அணைத்தணைத்து
 வெளிச்சம் காட்டு.
 
 இங்கே சில இதயங்கள்
 விட்டுவிட்டுத் துடிக்கின்றன
 என்பதை விட்டு விட்டு எரியும்
 விளக்காவது விளக்கட்டும்.
 படபடவென்று பாண்டி
 தந்தித்தமிழ் பேசினான்.
 
 உதட்டுக்கும் முத்தத்துக்கும்
 இடைவெளியே இல்லாதது
 மாதிரி கட்டளைக்கும்
 காரியத்துக்கும் இடைவெளியே
 இல்லாமல் அங்கே செயல்கள்
 நடந்தன.
 
 தண்ணீர் முடிச்சாய் நங்கூரம்
 விழுந்தது.
 
 கடலில் நீந்திவந்த வலை
 படகேறியது.
 
 ஆபத்தின் அறிகுறியாய்
 விளக்குகள் அணைந்தணைந்து
 எரிந்தன.
 
 ஆனால் அந்த சமிக்ஞைக்கு
 நட்சத்திரங்களை
 அணைத்தணைத்து வானம்தான்
 பதில் சொன்னதே தவிர -
 கடல் பேசவில்லை.
 படபடத்த மீனவர்கள்
 பரபரத்தார்கள்.
 
 தமிழ். தமிழ். -
 கலைவண்ணன் முர்ச்சை
 தெளிவிக்கும் முயற்சி
 தொடர்ந்தான்.
 
 ஏ வெயிலில் சூம்பிய
 வெள்ளரிப் பிஞ்சே. ஒரே ஓர்
 அதிர்ச்சியிலேயே முச்சுவிடும்
 கல்லாய் முர்ச்சையுற்றுப்
 போனவளே.
 
 கலங்காத கடல்
 கலங்கிநிற்பதுபோல பதறாத
 என் உள்ளம் பதறி நிற்கிறதே.
 கண்திறந்து பார்.
 
 என்ன இது? உன் சிவந்த
 திருமேனி சில்லிட்டு வருகிறதே.
 கூடாதே. சில்லிடக்கூடாதே.
 
 அவள் கால்களை அள்ளி மடியில்
 போட்டுப் பரபரவென்று
 பாதம் தேய்த்தான்.
 
 முயல்காதுகளைப் போல
 மெல்லிய
 அந்தப் பாதங்களை
 முரட்டுத்தனமாய்த்
 தேய்த்தான். பாதங்கள்
 சூடுகண்டதும் உள்ளங்கைகளுக்கு
 ஓடினான்.
 அந்தக் குவிந்த தாமரைகளைக்
 கொஞ்சம் மலர்த்தி
 மெல்லென்று தேய்த்துத்
 தேய்த்து மின்சாரம்
 தயாரித்தான்.
 
 முர்ச்சையுற்றுக் கிடந்த
 மரங்களில் வசந்தகாலம்
 வந்ததுமே கொழுந்து
 எழுந்துவருமே - அப்படி அவள்
 இமைகள் கொஞ்சம் எழுந்தன.
 உடனே விழுந்தன.
 
 தமிழ். தமிழ்.
 
 காதலியின் காதுமடலில் குனிந்து
 குனிந்து கூப்பிட்டான்.
 
 ஓடிக்கொண்டேயிருந்த பாண்டி
 ஒருகணம் நின்றான்.
 
 கலையின் துயர் கண்டும் தமிழின்
 நிலைகண்டும் பரபரப்பிலும்
 பரிதாபித்தான்.
 
 எங்களால்தானே உங்களுக்கு
 இத்தனை துன்பம்? மன்னித்து
 விடுங்கள்.
 
 யார் மீதும் தவறில்லை.
 இது சந்தர்ப்பத்தின் சதி.
 நீங்கள் பதற்றப்படாதீர்கள்.
 பதற்றத்தில் மனிதன் பாதிபலம்
 இழக்கிறான். சிதறும்
 உணர்ச்சியைச் சேகரித்து
 யோசியுங்கள். நம் மீட்சிக்கு
 வழியுண்டா இல்லையா?
 
 உண்டு. முன்றே வழி...
 
 என்னென்ன?
 
 ஒன்று.
 கடந்து செல்லும் கப்பல்
 நம்மைக் கரை சேர்க்கலாம்.
 
 இரண்டு.
 படகு ஏதேனும் வந்து
 நம்மைப் பாதுகாக்கலாம்.
 
 முன்று.
 கட்டுமரம் வந்து
 நம்மை இட்டுச் செல்லலாம்.
 
 இந்த முன்றுமே
 இல்லையென்றால்..?
 
 காற்றடித்துக் காற்றடித்து
 நாம் கரைசேர வேண்டும்.
 இப்போது அது முடியாது.
 
 ஏன் முடியாது?
 
 இது கிழக்கிலிருந்து மேற்கே
 காற்றுவீசும் காலமல்ல.
 மேற்கிலிருந்து கிழக்கே
 காற்றுவீசும் காலம்.
 
 நல்லது நடக்கும்.
 நம்பிக்கையோடிருப்போம்.
 
 பாண்டி சிரித்தான். அதில்
 ஈரப்பசை இல்லை.
 
 பாவம். அது சிரிப்பின்
 மீசையை ஒட்டவைத்துக்
 கொண்ட சோகம்.
 
 ஆனாலும் தைரியம் பேசினான்.
 மீன் தப்பினாலென்ன? வலை
 இருக்கிறது. எந்திரம்
 போனாலென்ன? படகு
 இருக்கிறது. நீங்கள்
 தங்கையைக் கவனியுங்கள்.
 நாங்கள் தடங்கல்களைக்
 கவனிக்கிறோம்.
 
 பாண்டி கடலில் விழுந்த
 காசாய் இருளில்
 தொலைந்தான்.
 
 விழுந்தவள் விழுந்தவள்தான்.
 விழிக்கவில்லை. ஐம்பது கிலோ
 தங்கம் அசையவில்லை.
 
 அந்தச் சுத்தத் தங்கத்தை
 அவன் சுடவைத்துக்
 கொண்டேயிருந்தான்.
 
 தொட்டால் ஒட்டும் கெட்டி
 இரவு.
 மேலே பொத்தல் வானம்.
 கீழே கத்தும் கடல்.
 
 செத்துப் போன படகு.
 சிறகில்லாத மனிதர்கள்.
 
 நேற்று வந்ததும் அதே நிலா.
 இன்று வந்ததும் அதே நிலா.
 
 நேற்று வந்த நிலாவில் கறை
 என்பது அதன் கன்னத்து
 மச்சமாய் இருந்தது. இன்று
 வந்த நிலாவில் அது கண்ணீரின்
 மிச்சமாய்த் தெரிந்தது.
 
 இயற்கை அப்படியேதான்
 இருக்கிறது. அர்த்தம்
 கொடுப்பவன் மனிதன்.
 
 துள்ளி விளையாடிய ஜெல்லி
 மீன்களும் உள்ளே உறங்கப்
 போய்விட்டன.
 
 அலைகள்கூட உறக்கத்தில்
 புரண்டு புரண்டு படுத்துக்
 கொண்டிருந்தன.
 
 நட்சத்திரங்களைக் காவலுக்கு
 வைத்துவிட்டு நிலாகூட
 உறங்கிவிட்டது.
 
 வாடைக் காற்றுக்குத்
 தூக்கத்தில் நடக்கிற வியாதி
 போலும். தட்டுத் தடுமாறி
 வீசிக்கொண்டிருந்தது.
 
 அந்தக் கடல்வீதியில் மீனவர்
 நால்வரும் கலைவண்ணனும்
 மட்டும் கண்ணுறங்கவில்லை.
 விம்மிவிம்மித் தன் முகத்தில்
 தானே அறைந்துகொண்டு,
 அவன் தோளில் முட்டிமுட்டி
 அவள் அழுதாள்.
 
 சுமப்பவனுக்குத்தான் தெரியும்
 சாலையின் தூரம்.
 விழிப்பவனுக்குத்தான் தெரியும்
 இரவின் நீளம்.
 
 கலைவண்ணன் கண்கள் போலவே
 கிழக்கு வானமும் சிவந்தபோது
 - அந்தச் சின்னமணித்தாமரை
 சிறுவிழி திறந்தது.
 
 தலையை அசைத்தது. சங்கீதம்
 முனகியது.
 
 இரவில் அணைந்தணைந்து எரிந்த
 விளக்குகளைப் போலவே அவள்
 விழிகளை முடிமுடித் திறந்தாள்.
 
 அவளுக்கு ஒன்றும்
 விளங்கவில்லை. விழிப்படலத்தில்
 விழுந்த காட்சிகள் முளைக்குச்
 சென்று சேரவில்லை.
 
 இப்போது நான்
 எங்கிருக்கிறேன்?
 
 என் மடியிலிருக்கிறாய். ஓர்
 ஏழையின் உள்ளங்கையிலிருக்கும்
 தங்க நாணயத்தைப் போலவும்
 - தூக்கணாங்குருவிக் கூட்டின்
 ஆழத்தில் கிடக்கும் அதன்
 குஞ்சைப் போலவும் நீ
 பாதுகாப்பாயிருக்கிறாய்.
 
 அவள் ஞாபகக் கண்ணிகளை
 அறுந்த இடத்திலிருந்து முடிச்சுப்
 போட்டாள். விளங்கிவிட்டது.
 
 பள்ளி கொண்டவள் துள்ளி
 எழுந்தாள். பயந்து
 கத்தினாள்.
 படகு இனி ஓடுமா?
 ஓடாதா?
 
 பதறாமல் கேள். இந்தப்
 படகு இனி ஓடாது. இதயம்
 உடையாதே. எதார்த்தம்
 கேள். இந்தப் படகு
 இறந்துவிட்டது. இப்போது இது
 பிணம். இந்தப் பிணத்தில்
 மொய்த்திருக்கும் ஈக்கள்
 நாம். ஆனால், என்
 காதலியே. ஐப்பசி
 மாதம்போல் அழுது
 வடியாதே. நம் பிறவிப்
 பெருங்கடல் கடந்து முடிக்க
 இதுவொன்றே படகென்று
 எண்ணாதே.
 எல்லாக் கடலுக்கும்
 கரையுண்டு. எந்தத்
 துன்பத்துக்கும் முடிவுண்டு.
 பொறு. மீட்சிவரும்.
 
 நிறுத்துங்கள்.
 இப்போதாவது உண்மை
 சொல்லுங்கள்.
 
 எப்போதும் உண்மைதான்
 சொல்லுகிறேன்.
 
 இல்லை. என்னை நீங்கள்
 அழைத்து வந்தது சமுத்திரத்தை
 அறிமுகப்படுத்தவா? இல்லை
 சாவை அறிமுகப்படுத்தவா?
 
 அதற்குமேல் பேச்சுவராமல்
 சப்தம் கேட்டு ஓடிவந்த சலீம்
 சமையல்கட்டுக்குச் சென்று
 இரண்டு கோப்பைகள்
 கருந்தேநீர் கொண்டு
 வந்தான்.
 
 கலைவண்ணன் அதைவாங்கித்
 தோளில் புதைந்தவளின்
 தலைதடவி, தேநீர் குடி
 என்று செல்லவார்த்தை
 சொன்னான்.
 
 கண்ணீர்விட்டுக் கண்ணீர்விட்டே
 உடம்பில் தண்ணீர்வற்றிப்
 போனவளுக்கு அது
 தேவைப்பட்டது.
 விசும்பிக்கொண்டே பருகினாள்.
 
 இரவெல்லாம் பழுதுபார்க்கும்
 முயற்சியில் களைத்துப்போன
 மீனவர்கள் அவர்களைச் சுற்றிப்
 பரவினார்கள்.
 
 இங்கிருந்து கரை எவ்வளவு
 தூரம் பரதன்?
 
 இடைமறித்தாள் தமிழ்.
 இங்கிருந்து மரணம் எவ்வளவு
 தூரம் என்று கேளுங்கள்.
 
 கடலுக்குள் 45 கிலோ
 மீட்டர் தூரம்
 வந்திருப்போம். -
 யோசித்துச் சொன்னான்
 பரதன்.
 
 ஆபத்தை உணர்த்தும்
 அறிகுறியாய் இரவில் விளக்கை
 அணைத்தணைத்து எரித்தீர்கள்.
 பகலில்..?
 
 அதோ பாருங்கள்.
 பாண்டி கைகாட்டினான்.
 
 கலைவண்ணன் அண்ணாந்து
 பார்த்தான்.
 
 இசக்கியின் இடுப்பு லுங்கியை
 மேற்கூரையின் உச்சிக்கம்பம்
 கட்டியிருந்தது.
 
 இடம் பொறுத்துப் பொருள்
 வேறு. இடுப்பில் கட்டினால்
 லுங்கி, கம்பத்தில் கட்டினால்
 கொடி.
 
 அதுதான் இப்போது அபாய
 அறிவிப்பு.
 
 சிவந்த கிழக்கின்
 உதயரேகைகள் கடல்நீரில்
 கவிதை எழுதின.
 
 யார் முகத்திலும்
 சந்தோஷமில்லை. எல்லார்
 முகத்திலும் இறுக்கம்.
 ஓ. படகின் மரணத்துக்கு
 மெளனாஞ்சலியா?
 
 சலனமற்ற சித்திரங்களாய் -
 சப்தமற்ற வாத்தியங்களாய்
 அந்த
 ஆறு மனித ஜீவன்களும்
 சொல்லறுந்து செயலிழந்து துக்கப்பட்ட
 பொழுதிலே - வாழ்வின் சுமையறியாது,
 மரணத்தின் பயமுமறியாது அங்கே துள்ளிக்
 குதித்தாடிய ஜீவன் ஒன்றுண்டு.
 
 அந்த ஏழாவது ஜீவன் - சுண்டெலி.
 
 அது வால் தூக்குவதையும் வளைந்தோடு
 வதையும் கிரீச் கிரீச்சென்னும் ஒரு
 வார்த்தையை வைத்துக்கொண்டு அது பல
 பாஷை பேசுவதையும் தங்களை மறந்து
 அவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
 வேளையில் - அங்கே நிலவிய அமைதி
 சகிக்காத தமிழ்ரோஜா ஆவேசம் கொண்டு கத்தினாள்.
 
 என்னை எப்போது கரை சேர்க்கப்போகிறீர்கள்?
 சப்தம் கேட்டுப் பயந்த காற்று சற்றே ஒதுங்கி வீசியது.
 
 அவள் தங்கத் தோள்களில் தடம்பதிய அழுத்திய
 கலைவண்ணன்-
 பொறுமையாய் இரு. பொறுமையாயிருந்தால்
 எதையும் சாதிக்கலாம்.
 
 எதைச் சாதிப்பீர்கள்?
 
 பொறுமையாயிருந்தால் தண்ணீரைக் கூடச்
 சல்லடையில் அள்ளலாம் - அது பனிக்
 கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்
 
 ஓர் இடைவேளைக்குப் பிறகு அவள் அழுகை
 தொடர்ந்தது.
 
 அவள் கரம்பற்றி விரல் இடுக்கில் விரல்
 கோத்தவன் தன் அமைதிப்பணியை ஆரம்பித்தான்.
 சோகம் தெரியாமல் துள்ளிக்குதிக்கிறது. நீயும்
 தற்காலிகமாய்ப் பகுத்தறிவை மறந்துவிடு.
 சோகத்தைச் சுண்டி எறிந்து ஒரு சுண்டெலியாகி
 விடு சுந்தரி..
 
 படகின் விளிம்பில் வால்தூக்கி நின்ற
 சுண்டெலி அவளைப் பார்த்து வக்கணை காட்டியது.
 
 அவளுக்கோ - பசித்தது. வாய்விட்டுக் கேட்க
 மனமில்லை.
 பொத்திவைத்த அழுகை பொத்துக் கொண்டது.
- 
				10
 
 மனிதன் நினைக்கிறான் -
 இந்தப் பிரபஞ்சமே
 தனது பிடியிலென்று.
 
 வானம் இடிந்தாலும் பூமி
 பிளந்தாலும் ஊழிவெள்ளம்
 உயர்ந்தெழுந்து நட்சத்திரங்ளை
 நனைத்தாலும்
 தன் புகழ் அழியாதென்று
 தருக்கித் திரிகிறான்.
 
 எனது புகழ் - எனது சாதனை
 - எனது இலக்கியம் -
 எனது பெயர் இவையெல்லாம்
 காலம் என்ற பரிமாணத்தின்
 கடைசி வரை, காலத்தையே
 வென்றுவாழும் என்று
 கனாக்காண்கிறான்.
 
 ஆனால், பூமி அவனைப்
 பார்த்துப் பொறுமையாய்ப்
 புன்னகைக்கிறது.
 
 இந்தப் பூமி பிறந்து இருநூறு
 கோடி ஆண்டுகள்
 இருக்குமென்பது ஆராயப்
 புகுந்தவர்களின்
 தோராயக் கணக்கு.
 
 இதில் முதல் உயிர் முளைத்தது
 முன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு
 முன்புதானாம்.
 
 196 1/2 கோடி ஆண்டுகள்
 இந்தப் பூமி வெறுமையில்...
 வெறுமையில்... யாருமற்ற
 தனிமையில்.
 
 காற்றின் ஓசையும் - கடலின்
 ஒலியும் - இடியின்
 பாஷையும் தவிர 196 1/2
 கோடி ஆண்டுகள் வேறோன்றும்
 சப்தமில்லை.
 
 முதல் உயிர் பிறந்தது
 முன்றரைக் கோடி ஆண்டுகட்கு
 முன்புதான் என்றால்
 குரங்கிலிருந்து மனிதன் குதித்தது
 35 லட்சம் ஆண்டுகளுக்கு
 முன்புதான்.
 
 பூமியின் காலக்கணக்கில் மனிதன்
 என்பவன் ஒரு துளி.
 
 இந்த இடைக்காலத்தில் இந்தப்
 பூமி என்னும் கிரகத்தில்
 எத்தனையோ ஜீவராசிகள்
 தோன்றித் தோன்றித்
 தொலைந்திருக்கின்றன.
 
 மனிதன் என்பவனும் இந்தப் பூமி
 என்னும் கிரகத்தில் வந்துபோன
 ஒரு ஜீவராசி என்று நாளை
 வரலாறு பேசலாம்.
 
 இதுவரை வந்த ஜீவராசிகளில்
 மனிதனே சிறந்தவனெனினும் -
 பூமியைப் புறங்காணும் புஜபலம்
 மிக்கவனெனினும்
 காலச்சூழலில் அவனும்
 காணாமல் போகலாம்.
 
 எனவே இதில் நிலை என்றும்
 நிரந்தரமென்றும்
 சொல்வதெல்லாம்
 அறியாமையின்
 அடுக்குமொழிகளே தவிர
 வேறல்ல.
 வாழும் வாழ்க்கை வரை
 நிஜம். இருப்பதொன்றே
 இன்பம்.
 
 இரை தேடுவதும்
 இரையாகாமல் இருப்பதுமே
 உயிரின் குணம்.
 
 இன்பமே உயிரின் வேட்கை.
 
 புலன்களின் தேவைகள் தீர்த்து
 வைப்பதே வாழ்தலின்
 அடையாளம்.
 
 எனக்குப் பசிக்கிறது
 என்றாள் தமிழ் ரோஜா.
 
 அப்படிக் கேளடி என்
 தங்கமே.
 மடியில் கிடந்தவளை
 இறக்கிவைத்துவிட்டு, உள்ளே
 ஓடிப்போய்
 மீனவர்கள் பயன்படுத்தும்
 பற்பசை கொண்டுவந்தான்
 கலைவண்ணன்.
 
 விரலில் பசைபிதுக்கி ஈறுகளிலும்
 பற்களிலும் இழுக்கத்
 தெரியாமல் இழுத்து,
 கொஞ்சத் தண்ணீரில் அவள்
 கொப்பளித்துத் துப்பினாள்.
 
 தட்டேந்தி வந்தான் சலீம்.
 
 அதிலிருந்த பொங்கலுக்கும்
 சட்னிக்கும் வித்தியாசம்
 பிரித்தறியத்தக்க சாட்சியங்கள்
 இல்லாமல் அவள்
 தடுமாறினாள்.
 
 அதை உருட்டி உருட்டி
 விழுங்கவைத்தது அவளை
 மிரட்டிக்கொண்டிருந்த பசி.
 
 என்ன சலீம். கப்பல்,
 படகு ஏதேனும் கண்ணுக்குத்
 தட்டுப்படுகிறதா?
 
 அவன் சமையலை அவனே
 சாப்பிட்டதுபோல் முகம்
 கோணிநின்ற சலீம்
 உங்களுக்கு நீச்சல்
 தெரியுமா?
 என்றான்.
 
 ஏன் கேட்கிறாய்?
 என்றான் கலைவண்ணன்.
 
 நாற்பத்தைந்து
 கிலோமீட்டரை
 நான்கு நாட்களில்
 நீந்திவிட முடியாதா என்று
 பாண்டிக்கும் பரதனுக்கும்
 பட்டிமன்றம் நடக்கிறது.
 
 சொல்லிவிட்டு
 மறைந்துவிட்டான். அவன்
 சொன்ன சொற்கள்
 மறையவில்லை.
 
 கப்பலோ படகோ
 வரவில்லையென்றால் கரைசேர
 முடியுமா கலைவண்ணன்?
 
 ஏதாவதொரு அதிசயம்
 நிகழ வேண்டும்.
 
 அதிசயமா?
 
 மேகங்களை
 விலக்கிக்கொண்டு சில
 தேவதைகள் வரவேண்டும்.
 அல்லது திடீரென்று சிறகு
 முளைத்து
 இந்தப் படகே பறவையாக
 வேண்டும். அல்லது
 நீலக்கடல் வற்றி நிலமாக
 வேண்டும். அல்லது இந்துமகா
 சமுத்திரத்தில் இதுவரை
 இல்லாத எரிமலை ஒன்று
 கண்விழித்து, நிலத்தடி மண்ணை
 அள்ளிப் பொழிந்து
 மின்னல் வேகத்தில் ஒரு மேடு
 உண்டாக்க வேண்டும்.
 அல்லது பால்கன் தீவு
 மாதிரி...
 
 அது என்ன பால்கன்
 தீவு? - அவள்
 ஆர்வமானாள்.
 
 ஆஸதிரேலியாவுக்குக்
 கிழக்கே இரண்டாயிரம் மைல்
 தூரத்திலிருந்த பால்கன் தீவு
 திடீரென்று மறைந்து
 விட்டது. பதின்முன்று
 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்
 பளிச்சென்று மேலெழுந்தது.
 அப்படி இங்கே
 முழ்கிய தீவு ஏதேனும்
 முகம் காட்ட வேண்டும்.
 
 அப்படிக்கூட
 நேர்வதுண்டா?
 
 அங்கே நேர்ந்தது,
 இங்கே நேரவில்லை. இங்கு
 மட்டும்
 அப்படி நேர்ந்தால் -
 கொடுங்கடல் கொண்ட
 குமரிக்கண்டம்
 மீண்டும் குதித்து வந்திருக்கும்.
 தமிழர்களின் சாகாத
 நாகரிகத்துக்குச் சாட்சி
 கிடைத்திருக்கும். குணகடலின்
 இளவரசி என்று
 கொண்டாடப்பட்ட பூம்புகார்
 மீண்டும்
 பூத்து வந்திருக்கும்.
 நேரவில்லையே.
 பால்கன் தீவுக்கு நேர்ந்த
 மறுபிறப்பு
 எங்கள் பழந்தமிழ் பூமிக்கு
 நேரவில்லையே.
 நேராது. கடலுக்குத்
 தமிழ்மேல் ஆசை.
 
 வெயில் ஏறியது. வேறோரு
 வாழ்க்கைக்குப் படகு
 தயாராகிக் கொண்டிருந்தது.
 
 மீனவர் ஒவ்வொருவரும்
 விசைப்படகின் விளிம்புக்கு வந்து
 வந்து கப்பலோ படகோ
 தெரிகிறதா என்று
 கடல்வெளியெங்கும் கண்களை
 வீசினார்கள்.
 
 நல்ல செய்தி சொல்லிக்
 கரைவதற்கு ஒரு காக்கைகூடக்
 கண்ணுக்குத்
 தட்டுப்படவில்லையே.
 
 வெயில் ஏற ஏற, உடம்பில்
 வேர்வையும் மனதில்
 சோர்வும் கசியக் கசிய
 அங்கங்கே உட்கார்ந்து
 உறைந்தார்கள்.
 
 சோகமில்லாதது சுண்டெலி
 மட்டுந்தான்.
 
 ஆறுபேர்க்கும் சேர்த்து அது
 சந்தோஷமாயிருந்தது.
 
 சில்லென்று துள்ளிச் சில்மிஷம்
 செய்து - வேகமாய்த்
 தாவித்தாவி வித்தை காட்டி
 தன் பின்னங்கால்களைத்
 தளத்தில் பதித்து -
 முன்னங்கால்களாலும் வாலாலும்
 அபிநயம் புரிந்து வேடிக்கை
 காட்டி விளையாடியது.
 அஃறிணைகள் சாகும்வரை
 மகிழ்ச்சியாகவே
 இருக்கின்றன.
 மனிதன்தான்
 பாதி வாழ்க்கையிலேயே
 படுத்துவிடுகிறான்.
 
 கீழே விழும்வரை ஒரு
 தென்னங்கீற்று காற்றோடு
 பாடும் சங்கீதத்தை நிறுத்திக்
 கொள்வதில்லை.
 
 மரணத்தின் முன்நிமிஷம் வரை
 பட்டாம் பூச்சித் தன்
 சிறகுகளைச் சுருக்கிக்
 கொள்வதில்லை.
 
 ஒரு கலப்பையின்கொழு
 தன்னை இடறும்வரை
 ஒரு மண்புழு தன் தொழிலைக்
 குறைத்துக் கொள்வதில்லை.
 
 எந்தப் பகுத்தறிவு,
 பிராணிகளைவிட்டு மனிதனைப்
 பிரித்துக் காட்டுகிறதோ அதே
 பகுத்தறிவுதான்
 கனவுகளால் நிராசைகளால்
 அவனை வருத்தியும் வைக்கிறது.
 
 எங்கு பார்த்தாலும் நீலம்.
 கீழும் மேலும் நீலம்.
 
 பார்வை முடியும் பரப்பில்
 வந்து கவியும் வானவட்டம்.
 
 தமிழ் எழு. தோழர்களுக்கு
 நாம் துணிவு சொல்வோம்.
 வா.
 அவளைத் தாங்கி அழைத்துத்
 தளம் வலம் வந்தான்.
 
 அவர்களைப் பார்த்ததும்
 அச்சடித்த சித்திரங்கள்
 அங்கங்கே அசைந்தன.
 
 பாண்டி. பரதன். என்ன
 இது? படகே முழ்கிப்
 போன மாதிரி ஏன் முகம்
 கறுத்து நிற்கிறீர்கள்?
 எப்போதும் போலவே
 இருங்கள். இப்போது
 நம்மிடம் இரண்டு வாகனங்கள்.
 ஒன்று படகு.
 இன்னொன்று நம்பிக்கை.
 படகு கவிழ்ந்தாலும்
 கரைசேர முடியும். நம்பிக்கை
 கவிழ்ந்தால் கரைசேர
 முடியுமா?
 
 மீனவர் உதடுகளில் ஒரு வாடிய
 புன்னகை ஓடியது.
 
 நாங்கள் வருந்துவது
 எங்களுக்காக அல்ல. சிக்கலில்
 உங்களையும்
 சிக்கவைத்துவிட்டோ மே.
 அதற்குத்தான்.
 
 இது சிக்கல்தான்.
 எல்லோரும் சேர்ந்து
 சிக்கெடுப்போம்.
 ஒவ்வொரு படகிலும்
 தேசியக்கொடி பறக்க
 வேண்டுமாமே.
 கொடி எங்கே?
 
 உள்ளே இருக்கிறது.
 
 உடனே எடுங்கள்.
 அபாயக்கொடி மட்டும்
 போதாது.
 அதற்குப் பக்கத்தில் அதைவிட
 உயரமாய்
 தேசியக்கொடியும் சேர்ந்து
 பறக்கட்டும்.
 
 ஏன்? நாம் இந்து மகா
 சமுத்திரத்தில்தானே
 இருக்கிறோம். எதற்காகத்
 தேசியக்கொடி?
 என்றாள் தமிழ்ரோஜா.
 
 இந்துமகா சமுத்திரம்
 இந்தியாவுக்கு மட்டும்
 சொந்தமல்ல.
 எந்த நாட்டுக் கடலும்
 கரையிலிருந்து ஐந்து
 கிலோமீட்டர்வரைக்கும்தான்
 அந்த நாட்டுக்குச் சொந்தம்.
 அதன் பிறகு வருவது
 பொதுக்கடல்.
 
 எந்தக் கலமானாலும் அந்த
 நாட்டுத் தேசியக்
 கொடியைத்
 தாங்கியிருக்கவேண்டும்.
 தேசியக்கொடி இல்லாதது
 கொள்ளைக்கலம் என்று
 கருதப்படும்.
 நாம் சுடப்படலாம்.
 
 அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
 அபாயக்கொடிக்குப்
 பக்கத்தில் இந்தியாவின்
 தேசியக்கொடி பறந்தது.
 
 ஏதோ ஒரு
 நம்பிக்கைமொழியைத்
 தேசியக்கொடி
 அவர்களோடு படபடத்துப்
 பேசியது.
 
 பார்ப்போம்,
 பாலைவனத்தைக்கூட மேகம்
 கடக்கிறதே.
 இந்தப் படகை ஒரு
 படகு கடக்காதா?
 
 அவர்களின் திருடப்பட்ட
 சந்தோஷத்தின் முதல்
 தவணை திருப்பித் தரப்பட்டது.
 
 தத்தித்தாவும் அலைகளில்
 தள்ளாடிக்
 கொண்டேயிருந்தது படகு.
 
 இது என்ன கலத்தின் கீழே
 ஒரு தளம்?
 - பிள்ளைக்கேள்வி கேட்டாள்
 தமிழ்ரோஜா.
 
 அது பனிக்கட்டிப்பெட்டி.
 அதுதான் மீன் கிடங்கு.
 பார் அங்கே. பிடித்த
 மீன்களைப் பதப்படுத்தி
 வைக்கப்
 பெட்டிப் பெட்டியாய்ப்
 பனிக்கட்டிகள்.
 பெரிய கிடங்கு இது. இறங்கிப்
 பார்ப்போமா?
 
 அவள் மறுத்தாள். அவன்
 இழுத்தான்.
 
 வலக்கரத்தால் அவன்
 கரத்தையும் இடக்கரத்தால்
 தன் முக்கையும்
 பிடித்துக்கொண்டே அவள்
 இறங்கினாள்.
 
 ஆறடி ஆழம், பதின்முன்றடி
 நீளம். பன்னிரண்டடி
 அகலம். அது சற்றே
 இலக்கணம் மீறிய சதுரம்.
 
 குப்பென்று அடித்த
 மீன்வாசத்தில் நெஞ்சடைத்தது.
 
 தொகுதி தொகுதியாய்ப்
 பனிக்கட்டிப் பெட்டிகள்.
 
 அங்கங்கே இறைந்து கிடக்கும்
 சில்லறைப் பொருட்கள்.
 
 தரையில் செதில்களின் பிசுக்கு.
 ஓரத்தில் இரண்டு பீப்பாய்கள்.
 
 உள்ளறையில் பார்வை பரப்பிய
 தமிழ்ரோஜா
 கலைவண்ணன் கையிலிருந்து
 தன்னைக்
 கழற்றிக்கொண்டு - நீங்கள் மேலே
 போங்கள் நான் வருகிறேன் என்றாள்.
 
 ஒன்றும் புரியாமல் விழித்தவன் சட்டென்று
 பிரகாசமாகி ஓ. அதுவா? என்று சிரித்து மேலே
 போனான்.
 
 தளத்திற்கு வந்தான் மீண்டும் கடல்பார்த்தான்,
 மீண்டும் வான் பார்த்தான்.
 
 தலைக்குமேலே ஒரு பறவைக்கூட்டம்
 படபடவென்று சிறகடித்துப் பறந்து தூரத்து
 வானத்தில் தொலைந்தது.
 
 ஓ பறவைகளே. நீங்கள் மட்டும் கரைக்குத்
 தகவல் சொல்லி ஒரு கலம் அழைத்துவந்தால்
 சாகும்வரைக்கும் நான் சைவனாயிருப்பேனே.
 
 சற்றுநேரத்தில் தமிழ்ரோஜா செம்பருத்திப்
 பூவாய்ச் சில்லென்று பூத்து வந்தாள்.
 
 மலர்ந்திருந்தது முகம், பொலிந்திருந்தது தேகம்.
 
 திறந்த விழிகளால் வியந்துநின்ற கலைவண்ணன்,
 பனியில் குளித்த பாரிஜாதமாய் வந்திருக்கிறாயே...
 எப்படி? என்றான்.
 
 குளித்தேன் என்றாள்.
 
 குளித்தாயா? தண்ணீர்..?
 
 இரண்டு பீப்பாய்கள் இருந்தன. ஒரு
 பீப்பாய்த் தண்ணீர் போதவில்லை.
 இரண்டாவது பீப்பாயிலும் கொஞ்சம்
 எடுத்துக் குளித்தேன். அப்போதைக்கிப்போது
 அழகாய் இருக்கிறேனா?
 
 அடிப்பாவி.
 
 அதிர்ச்சியடைந்தான் கலைவண்ணன்.
 
 குடிக்க வைத்திருந்த தண்ணீரைக்
 குளித்துவிட்டாயே தாயே - சலீம் அழுதான்.
- 
				11
 
 சொல்லின் அர்த்தம்
 தீர்மானிப்பது சொல்லல்ல.
 இடம்.
 
 ஒரே ஒரு முத்தம் கொடு .
 - இந்தத் தொடருக்குக்
 கட்டிலில் பொருள் வேறு.
 தொட்டிலில் பொருள் வேறு.
 பாடையில் பொருள் வேறு.
 
 குளித்தல் என்பது ஒரு
 செயல்தான். அதற்குக்
 கரையில் பொருள் வேறு.
 நின்றுபோன கலத்தில் பொருள்
 வேறு.
 
 குளித்தல் என்பது அங்கே
 சுகாதாரம். இங்கே
 துரோகம்.
 
 உப்புத்தூளுக்குப் பதிலாய்
 வைரக்கற்களை அம்மியில்
 வைத்து அரைத்துவிடுகிற ஒரு
 குழந்தை மாதிரி - குடிநீர்
 என்று தெரியாமல் அதில்
 குளித்து முடித்த தமிழ்ரோஜா
 இப்போது
 அழுது அழுது அழுக்கானாள்.
 
 ஆனால், அதுவும்
 நன்மையானது.
 உலகமகா யுத்தத்தில் முதல்
 குண்டு விழுந்தவுடன்
 சுறுசுறுப்படைந்துவிடும் ஒரு
 தலைநகரத்தைப் போல
 இருப்புக் கணக்கெடுக்கத்
 தயாரானது படகு.
 
 எப்படியும் இரண்டொரு நாளில்
 கரை சேரலாம். ஆனாலும்
 ஆபத்தைத்தான் நாம் அதிகம்
 சிந்திக்க வேண்டும்.
 
 மழைக்காலத்தில்
 கூடு கட்டிக் கொள்ளலாம்
 என்று தூக்கணாங்குருவி
 கோடையில்
 தூங்கிக்கொண்டிருக்கக்
 கூடாது.
 
 சரி... சரி... சரி
 பார். அரிசி எவ்வளவு? அள.
 காய்கறி எவ்வளவு?
 கணக்கெடு. நீ எவ்வளவுண்டு
 நிறு. எண்ணெய் - மிளகாய் -
 கடுகு எத்தனை நாள் வரும்?
 எண்ணிச் சொல்.
 உலையில் குமிழி கொதிக்குமே.
 அப்படிப் படபடவென்று பேசி
 முடித்தான் பாண்டி.
 
 இதோ பாருங்கள் பாண்டி.
 முன்று நாள் தேவைக்குத்தான்
 உணவுப்பொருள் கொண்டு
 வந்தோம். அதற்குள்
 திரும்பிவிடுவதாய்த் திட்டம்.
 உண்மை சொல்கிறேன்.
 உணர்ச்சிவசப்படாமல்
 கேளுங்கள். கொண்டு வந்த
 அரிசி 12 கிலோ. முன்று
 நாளைக்கு. 4 கிலோ
 வெந்தது போக, இருப்பு 8
 கிலோ. தண்ணீர் 200 லிட்டர்
 கொண்டு வந்தோம். அதில்
 குடித்ததும் - குளித்ததும்
 போக எஞ்சியிருப்பது 80
 லிட்டர். ரவை, மைதா
 இன்றுமட்டும் வரும். தக்காளி
 அழுகாமலிருந்தால் அடுத்த
 நாளைக்கும் வரும். இப்போது
 படகில் நிறைய இருப்பது டீசல்
 மட்டும்தான்.
 
 இல்லை.
 நம்பிக்கையும்தான்.
 கவலைஅறிக்கை வாசித்த
 சலீமைக் கலைவண்ணன்
 இடைமறித்தான்.
 
 சில நூற்றாண்டுகளுக்கு
 முன்னும் மழை இல்லை. சில
 நூற்றாண்டுகளுக்குப் பின்னும்
 மழை இருக்கப் போவதில்லை
 என்ற வருந்தத்தக்க வானிலை
 கொண்ட பாலைவனத்திலும்
 காற்றின் ஈரப்பசையை உண்டு
 வாழும் தாவரம் உண்டு. சில
 நாட்களுக்காவது நாம்
 ஜீவிக்க முடியாதா? உணவு
 என்பது பழக்கம்.
 உணவிருந்தால் மனிதன்
 உபரியாய்த் தின்கிறான்.
 உபரியாய்க் குடிக்கிறான். ஒரு
 படகு தட்டுப்படும் வரை நாம்
 உடம்புக்காக உண்ண
 வேண்டாம். உயிரின் வேருக்கு
 மட்டும் கொஞ்சம் ஈரம்
 வார்ப்போம்.
 சொல்லுங்கள்... இன்னும் ஆறு
 வேளைக்குத்தான் உள்ள இந்த
 உணவை அதிக வேளைக்கு
 நீட்டிப்பது எப்படி?
 
 கேள்வியின் பயங்கரத்தில்
 அங்கே மையம் கொண்டதொரு
 மெளனம்.
 
 படகின் தளக், தளக், ஓசை
 மட்டும் அந்த மெளனம்
 பார்த்துச் சிரித்தது.
 பரதன் அந்த மெளனத்தைக்
 கனைத்துக் கலைத்தான்.
 
 இனிமேல் ஒரு நாளுக்கு ஒரு
 வேளைதான் உணவு. ஒரு
 டம்ளர்தான் தண்ணீர்.
 சரிதானா?
 
 அதை முதலில் ஒரு தைரியசாலி
 வழிமொழியட்டும் என்று
 எல்லோரும்
 பேசாமலிருந்தார்கள்.
 
 சரி...
 
 ம்...
 
 ஆகட்டும்...
 
 அப்படியே
 செய்வோம்... ஆண்களில்
 எல்லோரும் அவசரமாய்
 வழிமொழிய, தமிழ்ரோஜா
 மட்டும் உதடுதிறக்கவில்லை.
 
 பத்துக் கண்களும் அவள் இரண்டு
 கண்களை மொய்த்தன.
 
 இறுதியில் அவள் எண்ணத்தை
 எழுத்துக் கூட்டினாள்.
 
 குடிப்பதற்குச் சரி...
 குளிப்பதற்கு..?
 
 குடிப்பதற்கு ஒரு
 டம்ளர்தான் இருக்கிறது. நீ
 குளிப்பதற்கு ஒரு கடலே
 இருக்கிறது.
 
 கலைவண்ணன் தன்
 வார்த்தைகளையும் அவள்
 உள்ளங்கைகளையும் ஒரே
 நேரத்தில் அழுத்தி
 உச்சரித்தான்.
 
 எடுத்த முடிவு அடுத்த
 நிமிடத்தில்
 அமல்படுத்தப்பட்டது.
 
 அதுவரை அரிசியை அளந்து
 சமைத்துக்கொண்டிருந்த சலீம்
 எண்ணிச் சமைக்க
 ஆரம்பித்தான்.
 முன்பெல்லாம் உருளைக்கிழங்கை
 அவித்துத்
 தோலைஉரித்தெறிகிறவன்,
 இப்போது அதிலும்கூடச்
 சத்திருக்கும் என்று சமாதானம்
 சொல்லிக்கொண்டான்.
 
 யுத்தம் உயிரின் மதிப்பைக்
 குறைக்கிறது.
 பஞ்சம் உணவின் மதிப்பை
 உயர்த்துகிறது.
 
 படகின் பின்விளிம்பில் மீண்டும்
 ஓர் அகதியின் போராட்டம்
 ஆரம்பமானது.
 
 தமிழ்ரோஜா கண்ணீர்வற்றிய
 கண்களில் கோபம் குமுறியது.
 
 இங்கே பஞ்சுமெத்தை
 இல்லை. பரவாயில்லை.
 தலையணை இல்லை.
 தவறில்லை. மீன்
 பிசுக்கடிக்காத போர்வை
 இல்லை. வருந்தவில்லை. என்
 குறைந்தபட்சத் தேவை,
 குளிப்பது. அதற்கும் வழியில்லை
 என்றால் நான் வாழ்வதா,
 சாவதா?
 
 தமிழ். உனக்கின்னும்
 விளங்கவில்லை. குளிப்பதைவிட
 ஒரு பெரிய பிரச்னை
 வரும்போது குளிப்பது
 இரண்டாம்பட்சமாகிவிடும்.
 இப்போது குளித்தல் என்பது
 உயிர்வாழ்தலின் அம்சமல்ல.
 குளித்தே ஆகவேண்டுமென்றால்
 கடலில் விழு. எழு. உனக்குள்ள
 குடிதண்ணீரில் ஒரு டம்ளர்
 ஒதுக்கித் துண்டை நனைத்துத்
 துடை. கரைசேரும் வரை
 டம்ளர்தான் உன் குளியல்
 அறை.
 
 முடியவே முடியாது. என்
 உடம்பும் மனசும் நான்
 சந்திக்காத வாழ்க்கைக்குத்
 தயாராகாது.
 
 உயிர்ஆசையிருந்தால் நிறம்
 மாறித்தான் தீரவேண்டும்.
 இந்த விஷயத்தில் நீ
 விலங்குகளிடம் நிறைய
 விளங்கிக்கொள்ள வேண்டும்.
 
 விலங்குகளா?
 
 ஆமாம். கடல் விலங்குகள்.
 இதோ, விரிந்து பரந்து
 செறிந்து நெகிழ்ந்து நிற்கிறதே
 இந்த நீலத்தண்ணீர்...
 இதற்குக் கீழே பவளம்
 மட்டுமல்ல. மனிதனுக்குப்
 பாடமும் இருக்கிறது. இந்தச்
 சூரியக்கதிர் இருக்கிறதே, இது
 350 அடி ஆழம் வரைதான்
 தண்ணீர்துளைக்கும். அதற்குக்
 கீழே இருள்தான். இருள்தான்.
 இந்தக் கடல் தோன்றிய
 நாள்தொட்டு இன்றுவரை
 அங்கே இரவுதான். ஆனால்,
 அங்கே வாழும் பிராணிகள்
 இருளில் இறந்து போகவில்லை.
 ஸகுவிட்போன்ற
 பிராணிகள், தங்கள்
 உடம்பிலேயே வெளிச்சம்
 போட்டு உலவுகின்றன -
 தங்கள் சொந்தச் செலவில்
 சுயவெளிச்சம்
 போட்டுக்கொள்ளும் சில
 மனிதர்களைப்போல.
 
 அப்படியா?
 
 ஆமாம். எல்லாப்
 பிராணிகளுக்கும் இரண்டே
 லட்சியங்கள்.
 
 என்னென்ன?
 
 இரை தேடுவது.
 இரையாகாமல் இருப்பது.
 ஆக்டோ பஸ என்ன செய்யும்
 தெரியுமா?
 
 தெரியாது.
 
 எதிரி துரத்தினால் அதன்
 உடம்பு சில வண்ணத் திரவங்கள்
 கக்கும். கடல் நீரை
 நிறம்மாற்றி எதிரியின் கண்ணைக்
 குருடாக்கும். தண்ணீர்
 தெளிவதற்குள்
 தப்பித்தோடிவிடும்.
 
 இந்தக் கதையெல்லாம்
 எனக்கெதற்கு?
 
 சூழ்நிலையை வெற்றி
 கொள்ளும் சூத்திரம் தெரிய
 வேண்டும் உனக்கு.
 வாழ்க்கையை வாழப்பார்.
 அல்லது வாழ்க்கைக்கேற்ப
 உன்னை வார்க்கப்பார்.
 அழுவதுதான் அவமானமே தவிர
 - அவதி தாங்குதல் அவமானம்
 அல்ல. வெற்றி என்ற தேருக்கு
 எதிர்ப்பு, துன்பம் என்று
 இரண்டே சக்கரங்கள். சிரமம்
 வாழ்வின் சேமிப்பு. வளையாத
 அம்பின் சக்தி என்பதென்ன?
 வளைந்த வில்தானே.
 சந்தர்ப்பம்தான் சக்தி
 தருகிறது.
 
 எல்லாம்
 கற்பனாவாதம்.
 அவள் கத்திமுடித்துக் காது
 பொத்தினாள்.
 
 அவன் நெருங்கி
 உட்கார்ந்தான். அவள் ஒதுங்கி
 உட்கார்ந்தாள்.
 
 நீங்கள் மனிதகுல
 மீட்சிக்காகப் பேசுகிறீர்கள்.
 எனக்கோ ஓட்டைப்
 படகிலிருந்து உடனே மீட்சி
 வேண்டும். இப்போது எனக்குத்
 தனிமை வேண்டும்.
 விட்டுவிடுங்கள்.
 என்னைத் தனிமையில்
 விட்டுவிடுங்கள்.
 அவள் சத்தமிட்டுப்
 பின்னேறினாள்.
 
 உழக்கில் என்ன கிழக்கு
 மேற்கு? முட்டையில் என்ன வட
 துருவம் - தென் துருவம்?
 நாற்பத்தொன்பதடி நீளம்
 கொண்ட சின்னப் படகில் என்ன
 தன்னந்தனிமை?
 
 அவன் முனகிக்கொண்டே எழுந்து
 நடந்து முன்விளிம்பில்
 கலந்தான்.
 
 தனிமை. வெறுமை. பெயர்
 தெரியாத ஒரு கிரகத்தில்
 வழிதெரியாமல்
 விழுந்தவர்களைப்போல் ஒரு
 பிரமை.
 
 அந்தப் படகின் ஒரே ஓர்
 ஆறுதல் தாளிப்பு
 வாசனைதான்.
 
 அளந்து வைத்த சாப்பாடு.
 ஆளுக்கொரு மீன்.
 சாப்பாட்டின் கடைசியில்
 மிச்சமானது போல்
 எல்லோருக்கும் கொஞ்சம்
 கொஞ்சம் குழம்பு.
 ஒரே ஒரு தட்டில் மட்டும்
 சாப்பாடும் சாம்பாரும்.
 
 எல்லாச் சோற்றையும்
 பசிபிசைந்தது.
 
 தமிழும் பிசைந்தாள்.
 அவசரத்தில் பிசைந்ததில்
 சோற்றின் சூட்டில் அவள்
 ரோஜாத்தோல் வெந்தது.
 உருட்டிய கவளத்தை
 எல்லோரும்
 உண்ணப்போனபோது -
 நிறுத்துங்கள் என்று
 சத்தமிட்டுக் கத்தினான் சலீம்.
 
 அதிர்ச்சியில் யாரும்
 அசையவில்லை.
 
 ஒவ்வொருவர் பங்காய்க்
 கொஞ்சம் கொஞ்சம் சோறு
 கொடுங்கள்.
 
 அவன் இரு கை ஏந்தினான்.
 
 ஏனென்று யாரும்
 கேட்கவில்லை.
 
 விசாலமாய் விசாரிக்க
 அவர்களின் பசிக்குப் பொறுமை
 இல்லை.
 
 எல்லோரும் கொஞ்சம்
 கொஞ்சம் கொடுத்தார்கள்.
 
 இரு கைகள் ஏந்தியும் ஒரு
 கையும் நிரம்பவில்லை.
 
 வசூலித்த சோறெடுத்து உள்ளே
 ஓடினான்.
 
 ஓடிய வேகத்தில் உடனே
 திரும்பினான்.
 
 சுண்டெலிக்குச் சோறு
 கொடுத்துவிட்டேன்.
 எல்லோரும் சாப்பிடலாம்
 என்று கூவினான்.
 அவர்கள் கோரஸில்
 புன்னகைத்தார்கள்.
 
 தமிழ். சாப்பாடு
 எப்படி? கலைவண்ணன்
 கண்ணடித்தான்.
 
 சாம்பார் - சோறு
 இரண்டில் ஏதோ ஒன்றில்
 உப்பில்லை. எது என்று
 தெரியவில்லை.
 
 அதுவரை அமைதியாயிருந்த
 பாண்டி அதிர்ந்தெழுந்தான்.
 சாப்பிடுவது பிச்சைச்
 சோறு. இதில் உப்புப்
 பார்ப்பது உங்கள் தப்பு.
 
 வாயிலிருந்த சோற்றைக்
 கலைவண்ணன் தட்டில்
 துப்பினான்.
 பாண்டி. இதுவரை உங்கள்
 வார்த்தை தடித்ததில்லையே.
 நாங்கள் தன்மானிகள்.
 ஞாபகமிருக்கட்டும். எங்கள்
 உடம்பில் ஓடுவது
 தமிழ்ரத்தம்.
 
 எங்கள் உடம்பில் ஓடுவது
 மட்டும் இங்கிலீஷ ரத்தமா?
 தமிழ்ரத்தம்தான்.
 உரத்துப்பேசினான் பாண்டி.
 
 கொடுப்பது இலவசம்.
 அதிலென்ன நவரசம்?
 இசக்கியும் சேர்ந்து
 கொண்டான்.
 
 இவர்கள் கால்வைத்த
 நேரம் படகு
 பழுதாகிவிட்டது. பரதன்
 பழிபோட்டான்.
 
 விசைப்படகின் விளிம்பில்
 அமர்ந்திருந்த கலைவண்ணன்
 எழுந்து நின்றான்.
 இப்படியெல்லாம்
 அவமானப்படுத்தினால் நான்
 கடலில் குதித்துவிடுவேன்.
 
 நீயென்ன குதிப்பது?
 நாங்களே
 தள்ளிவிடுகிறோம்.
 
 மீனவர் முவரும் எழுந்து
 கலைவண்ணன் நெஞ்சில்
 கைவைத்து அழுத்தினார்கள்.
 அவன் திமிறினான்.
 
 வேண்டாம். வேண்டாம்.
 
 தமிழ்ரோஜா ஆடும் படகில்
 ஆடிக்கொண்டே ஓடி வந்தாள்.
 அதற்குள் முவரின் மிருகபலமும்
 கலைவண்ணனைப் புரட்டிக்
 கடலில் தள்ளியது.
 
 உள்ளே விழுந்தவன் முழ்கினான்.
 வெளிவந்தான்.
 மிதந்தான். மறைந்தான், கைகால்கள்
 உதறினான், நீர் குடித்தான், நிலை மறந்தான்.
 
 காப்பாற்றுங்கள் என்று சைகை செய்தான்
 யாரும் அவனைக் காப்பாற்ற முனையவில்லை.
 
 அய்யோ. அய்யய்யோ. அவரைக்
 காப்பாற்றுங்கள் - தமிழ் ரோஜா கதறினாள்.
 
 எல்லோரும் இறுகி நின்றார்கள், யாரும்
 இரங்கவில்லை.
 
 தண்ணீரில் தத்தளித்தவன் முழ்கிவிடுவான்
 போலிருந்தது.
 
 அவன் ஏதேதோ உளறினான். தண்ணீர் குடித்துத்
 தமிழ்பேசியதில் ஒன்றும் புரியவில்லை.
 
 அவ்வளவுதான். அவன் தன் சுயபலம்
 இழந்துவிட்டான் போல் தோன்றியது.
 
 காப்பாற்றுங்கள், தயவுசெய்து காப்பாற்றுங்கள்.
 
 அவர்கள் மசியவில்லை முதுகுதிருப்பிக்
 கொண்டார்கள்.
 
 தொப்பென்று சத்தம் கேட்டது., திரும்பிப்
 பார்த்தார்கள்.
 
 தமிழ்ரோஜாவைக் காணவில்லை.
 
 குதித்தவள் அவள்தான்.
- 
				12
 
 என்னை மன்னித்துவிடு தமிழ்.
 நானே இயக்கிய நாடகத்தில்
 நீமட்டும்தான்
 நிஜமான பாத்திரம்.
 
 மன்றாடிக் கேட்கிறேன்.
 மன்னித்துவிடு.
 
 மொட்டுக்களை
 உடைத்துவிட்டதற்காகச்
 செடியிடம் தென்றல்
 மன்னிப்புக் கேட்பதில்லை.
 
 சிவக்கச் சிவக்கச்
 சுட்டுவிட்டதற்காகத்
 தங்கத்திடம்
 நெருப்பு மன்னிப்புக்
 கேட்பதில்லை.
 
 தண்ணீரில் உன்னைக்
 குதிக்கவைத்ததற்காக உன்னிடம்
 நான் மன்னிப்புக்
 கோருகிறேன்.
 
 தென்றல் முட்டியது -
 மொட்டுக்களை மலர்த்த.
 நெருப்பு சுட்டது - தங்கம்
 நகையாக.
 
 நாடகமாடி நாங்கள் தண்ணீரில்
 உன்னைக் குதிக்கவைத்தது -
 உனக்குள் உறங்கும் வீரத்தை
 உசுப்ப.
 
 தைக்கும் பருத்தித் துணியைத்
 தண்ணீரில் ஊறப் போடும் ஒரு
 தையற்காரனைப் போல் -
 உன்னை வேண்டுமென்றே
 நனைத்தேன். இப்போது
 சொல். எப்படி வந்தது
 இந்தச் செப்படி வித்தை?
 
 அலைகண்டு மயங்கிவிழும் நீ
 ஆழ்கடலில் குதித்ததெப்படி?
 
 அச்சம் என்பது ஒரு நினைப்பு நிலை.
 மறந்தால் அச்சமில்லை.
 
 என்னைக் காப்பாற்றும்
 அவசரத்தில் நீ தன்னை மறந்து
 தாவிக் குதித்தாயே. அதுதான்
 இத்தனை நாளாய் உனக்குள்
 உறக்கநிலையில் இருந்த சக்தி.
 
 உன் பங்களாவாசத்தில்
 உறங்கிக் கொண்டிருந்த சக்தி.
 வங்காளவிரிகுடாவில்
 விழித்திருக்கிறது. மீண்டும்
 உறங்கவிட்டு விடாதே.
 
 இதோ. சொட்டிக்
 கொண்டிருக்கும் உன் ஆடையின்
 ஈரம் வடிய வடிய உன்
 அச்சமும் வடிந்துவிட வேண்டும்.
 வடிந்தே தீரும்.
 
 ஏ தெப்பமாய் நனைந்துபோன
 சிற்பமே. கவிழ்ந்த தலை
 நிமிர்ந்து பார். கண்ணெடுத்துப்
 பார்.
 
 நல்ல நடிகர்கள் நம் மீனவ
 நண்பர்கள்.
 
 வாத்தியாரின் நோட்டில்
 கிறுக்கிவிட்ட மாணவர்களைப்
 போலக் குற்ற உணர்ச்சியில்
 அவர்கள் குறுகிநிற்பது பார்.
 
 என்னை மன்னிப்பாயோ...
 மாட்டாயோ... அவர்களை
 நீ மன்னிக்கத்தான்
 வேண்டும்.
 
 அவர்களை ஏன் நான்
 மன்னிக்க வேண்டும்?
 
 முழங்காலில் முகம்புதைத்துத்
 தண்ணீர் சொட்டக் குனிந்திருந்த
 தமிழ், பளிச்சென்று
 நிமிர்ந்தொரு பட்டாசு
 வெடித்தாள்.
 
 எல்லோரும் தவித்துநிற்க,
 அவளே தொடர்ந்தாள்.
 அவர்களுக்குரியது
 மன்னிப்பல்ல. நன்றி.
 
 நன்றியா? எதற்கு?
 
 என் பயத்தைக் கடல்நீரில்
 கழுவினார்களே. அதற்கு.
 
 எனக்குள்ளிருந்த வீரத்தை
 எனக்குத் தெரியாமல் விழிக்க
 வைத்தார்களே. அதற்கு.
 
 என்னையும் உங்களையும்
 காப்பாற்றிக் கலம்
 சேர்த்தார்களே. அதற்கு.
 
 கொஞ்சம் கொஞ்சம்
 புரிகிறதெனக்கு. பொறுங்கள்.
 நான் முழுப்பெண்ணாக முயன்று
 பார்க்கிறேன்.
 
 அவள் பேசப் பேச, அத்தனை
 முகங்களிலும் ஆச்சரியப்
 புன்னகை.
 
 ஓ.
 
 முதல் வெற்றி.
 
 முன்று சூரியன்கள்
 தொலைந்துவிட்டன. முன்று
 நிலவுகள் விழுந்துவிட்டன.
 ஆனால், அவர்களின்
 கண்ணுக்கெட்டியமட்டும்
 கப்பலோ படகோ
 தட்டுப்படவில்லை.
 
 மேலே ஏற்றிய
 தேசியக்கொடிகூடப்
 பறந்து பறந்து படுத்துவிட்டது.
 
 அபாயக்கொடியான லுங்கி
 அவிழ்ந்துகொண்டது.
 
 பீப்பாயிலும் அவர்கள்
 உடம்பிலும் தண்ணீர்
 குறைந்துகொண்டே வந்தது.
 
 உணவைப் போலவே
 உரையாடலும் மெள்ள மெள்ள
 சுருங்கிவிட்டது.
 
 பார்வைகளால் மட்டுமே
 ஒருவரை ஒருவர் நலம்
 கேட்டுக்கொண்ட ஊமை
 வாழ்க்கை அங்கே
 தொடங்கிவிட்டது.
 
 அசைந்தால் சக்தி
 செலவாகுமென்று கலைவண்ணன்
 மடியில் சலனமின்றிக் கிடந்தாள்
 தமிழ்ரோஜா.
 
 அவள் தங்கத்தோல் மங்கத்
 தொடங்கிவிட்டாலும் அவள்
 முகத்தில் மட்டும்
 தைரியரேகைகள்.
 
 அவள் நெற்றியில் புறப்பட்ட
 அவன் சுட்டுவிரல்,
 புருவமத்தியிலும் முக்கின்
 பள்ளத்தாக்கிலும் முக்கின்
 சிகரத்திலும் பயணப்பட்டு -
 மேலுதட்டில் குதித்து -
 கீழுதட்டில் தாவி - நாடிப்
 பள்ளம்விட்டு நகர்ந்து - அவள்
 பிஞ்சுக் கழுத்தில் பிரயாணம்
 முடித்துச் சற்றே யோசித்துச்
 சட்டென்று நின்றது.
 
 அதற்குமேலும்
 எதிர்பார்த்தவள், விரலின்
 வேலைநிறுத்தம் உணர்ந்து
 விழித்துக்கொண்டாள்.
 
 தமிழ். அடியே தமிழ்.
 என் உயிரின் திடப்பொருளே.
 இந்தப் பிரபஞ்சத்தின் என்
 பங்கே. உனக்குத்தான்
 என்மேல் எத்தனை ஆசை.
 
 கடல் வீழ்ந்தான் காதலன்
 என்று கண்டதும் நீ தன்னை
 மறந்தாய். தன் நாமம்
 கெட்டாய். தண்ணீர்பயம்
 களைந்தாய். நீச்சல்
 தெரியாதென்பதை
 நினைவிலிருந்து அழித்தாய்.
 எப்படியடி குதித்தாய்?
 
 என் இரண்டாம் உயிரே.
 
 காவிரி கொண்டுபோன
 ஆட்டனத்தியை மீட்க
 ஆதிமந்திகூட வெள்ளத்தில்
 விழவில்லை. கரையில் நின்று
 அழுதுதான் காவியைக்
 கரிக்கவைத்தாள். நீயோ
 கடல்குதித்தல்லவா காதலனை
 மீட்க நினைத்தாய். எப்போது
 என்னுயிர் காக்க நீ தண்ணீரில்
 குதித்தாயோ - அப்போதே
 நாம் சாவென்ற சம்பவத்தைத்
 தாண்டிவிட்டோ ம்.
 
 ஐம்பூதங்கள் தந்த இந்த
 உடலை நாளை ஐம்பூதங்களும்
 பிரித்தெடுத்துக் கொள்ளலாம்.
 
 ஆனால், மரணம் என்ற
 பெளதிகச் சம்பவத்தால் நாம்
 மரிக்கப் போவதில்லை.
 
 சூரியன் சுடரும்வரை அதன்
 ஏதாவதொரு கிரணத்தில் நம்
 கண்ணொளி கலந்திருக்கும்.
 காற்றின் சுழற்சியில் நாம்
 விட்டுவிட்டுப் போகும் சுவாசம்
 இழைந்திருக்கும்.
 
 அந்த நிலப்பரப்பில் நாம்
 பதித்த சுவடுகளைக் காற்றின்
 கரங்கள் அழித்துவிட்டாலும்,
 நம் உள்ளங்கால்களின்
 உஷணத்தை அது பத்திரமாகவே
 பாதுகாத்து வைத்திருக்கும்.
 
 காதல் என்ற அருவத்தின்
 உருவங்கள் நாம். தடயங்கள்
 அழியலாம். தத்துவங்கள்
 அழிவதில்லை.
 
 அவன் பேசிக்கொண்டேயிருக்க
 - அந்தப் பேச்சுப் பாடகனை
 அவள் கேட்டுக்கொண்டேயிருக்க
 - வீசிக் கொண்டேயிருக்கும்
 காற்றோசை மட்டும் அவனை
 ஆம் ஆம் என்று
 வழிமொழிந்தது.
 
 இன்னொரு மோசமான இரவும்
 முடிந்தது. லுங்கிக்குள் கூட்டுப்
 புழுக்களாய் அங்கங்கே
 சிதறிக் கிடந்தனர் மீனவர்கள்.
 
 எழுந்திருங்கள். தயவுசெய்து
 எல்லோரும் எழுந்திருங்கள்.
 
 என்ன இது, வித்தியாச
 விடியல். யார் குரல் இது?
 
 புரண்டுபடுத்துச் சோம்பல்
 முறித்தவர்கள் ஒரு கண் திறந்து
 பார்த்தார்கள்.
 
 இது என்ன, தேநீர்க்
 கோப்பைகளோடு ஒரு
 தேவதை. எல்லோரும்
 சோர்வுதுடைத்துச்
 சுறுசுறுப்பானார்கள்.
 
 அம்மா. நீயாம்மா?
 ஆச்சரியம் காட்டினார்கள்.
 
 நானே தயாரித்தேன்.
 
 எல்லோருக்கும் தேநீரை
 அவளே நீட்டினாள்.
 
 பாண்டியும் இசக்கியும்
 கண்களைக் கசக்கிக் கசக்கிப்
 பார்த்தார்கள்.
 
 ம்.. வாங்கிக்
 கொள்ளுங்கள். நானும் உங்கள்
 வாழ்க்கைக்குத்
 தயாராகிவிட்டேன்.
 
 தேநீர் கறுத்திருந்தது. அவள்
 சிரிப்பு பால் கலந்தது.
 
 கலைவண்ணன் கைதட்டினான்.
 
 வா. வாழ்க்கைக்குள்
 இப்படி வா. இடி-மழை
 இரண்டுமே வாழ்க்கை..
 மழைக்கு வாய்திறக்கும் பூமி,
 இடியை ஏற்க மாட்டேன்
 என்றால் எப்படி?
 
 தமிழ். இதுதான் சரி.
 இப்போதுதான் நீ
 மனிதராசியில் சேருகிறாய்.
 
 கொடு உன் தேநீரை. அது
 விஷமாயிருந்தாலும்
 குடித்துவிடுகிறேன்.
 
 நான் விழுந்தால் கடல்நீர்
 குடிநீராகும் என்றீர்கள். நான்
 தயாரித்தால் விஷம்கூட
 அமுதமாகாதா?
 
 அமுதத்தின் நிறம்
 கறுப்பல்ல.
 
 அவன் குடித்தான். அவள்
 சிரித்தாள். சிரிப்பு மட்டுமே
 ருசியாயிருந்தது.
 
 அது நான்காம் பகல்.
 
 ஒரு படகும் தெரியவில்லை.
 கட்டுமரங்களும்
 தட்டுப்படவில்லை.
 
 கப்பலின் அடையாளமாய்
 அவர்களின் தலைக்கு மேலே
 இருந்த வானத்தில் ஒரு
 புகைக்கோடுகூட விழவில்லை.
 
 அவ்வப்போது சிறகடிக்கும் பறவைக்
 கூட்டங்கள் மட்டுமே ஏதோ ஒரு
 நம்பிக்கையை எழுதிப்போயின.
 
 வானத்தில் திட்டுத்திட்டாய் மேகங்கள்
 படகில் திட்டுத்திட்டாய் சோகங்கள்.
 
 நாம் என்ன துரோகம் செய்தோம்? இந்தக்
 கடலுக்கு நம்மேல் கருணை இல்லையா?
 தமிழ்ரோஜா இளைத்த குரலில் பேசினாள்.
 
 ஐந்து கண்டங்களுக்கே கருணைகாட்டும்
 கடல் நம் ஆறு பேருக்குக் கருணைகாட்டாதா?
 பொறு தோழி பொறு.
 
 கண்டங்களுக்குக் கருணையா?
 
 ஆமாம். கடலடியில் இரண்டு நீரோட்டங்கள்.
 ஒன்று வெப்ப நீரோட்டம், இன்னொன்று
 குளிர்நீரோட்டம். கடலின் வெப்ப நீரோட்டம்
 தான் ஸவீடன், நார்வே போன்ற நாடுகளைக்
 கொஞ்சம் சூடுபடுத்தி வைத்திருக்கிறது.
 இல்லையென்றால். கிரீன்லாந்தைப் போல
 அந்த நாடுகளும் பனிப்பாலைகளாய்
 இருந்திருக்கும்.
 
 கடல் வெறும் கடலல்ல கருணைக்கடல்
 அது இன்னொரு கருணையும் புரிகிறது.
 பூமியின் தட்பவெப்பத்தை வாங்கிப்
 பகிர்ந்தளிக்கும் வங்கி அது.
 
 பூமத்திய ரேகைக்கு அருகில் கிடைக்கும்
 வெப்பத்தைத் துருவப் பிரதேசங்களுக்கும் -
 துருவப் பிரதேசங்களின் குளிரை பூமத்திய
 ரேகைப் பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்கிறது.
 
 இத்தனை வேலை செய்யும் கடலுக்கு
 நமக்கு ஒரு படகு மட்டும் அனுப்பத்
 தெரியாதா? அவள் சுருதி குறைந்து பேசினாள்.
 
 அதுவரை அமைதிகாத்த படகின் முன்விளிம்பில்,
 உச்சக்குரல் ஒன்று ஓங்கி ஒலித்தது.
 
 என் பங்கு மட்டும் ஏன் குறைகிறது?
 இது என்ன மிச்சச் சோறா? எச்சில் சோறா?
 நீ கொடுக்கும் குழம்பு பத்துப் பருக்கை
 நனைக்கவே போதாது. இதைச் சாப்பிடுவதை
 விடச் சாப்பிடாமலே இருக்கலாம்.
 
 எட்டிப்பார்த்தார்கள்
 
 இசக்கி.
 
 இருவரும் முன்விளிம்பு நோக்கி
 முன்னேறினார்கள்.
 
 சற்றே மெளனம் சாதித்த சலீம் வாய்திறந்தான்.
 
 நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
 நாளை முதல் சாப்பிடமுடியாது. இன்னும்
 இருப்பது அரைகிலோ அரிசிதான்.
 இருபது லிட்டர் தண்ணீர்தான் என்ன
 செய்யலாம்? நீங்களே சொல்லுங்கள்.
 
 அது எல்லோரும் எதிர்பார்த்ததுதான்,
 எதிர்பார்த்து வந்தாலென்ன -
 எதிர்பாராமல் வந்தாலென்ன -
 இடி இடிதான்.
 
 என்ன செய்யலாம்?
 
 ஒரு முடிவுக்கு வந்தபிறகு பாண்டி அந்த
 மெளனத்தில் கல்லெறிந்தான்.
 
 சொல்கிறேன், கேளுங்கள். அந்த அரைகிலோ
 அரிசியைச் சோறாக்கிவிடலாம். ஆனால்,
 அந்தச் சோற்றை யாரும் சாப்பிடாமல் நீருற்றி
 வைக்கலாம். அந்தக் கஞ்சித் தண்ணீர்தான்
 நம் உணவு, ஆளுக்கு அரை டம்ளர்.
 சோற்றில் நீர் குறையக் குறைய நீர் மட்டும்
 ஊற்றிக் கொண்டேயிருக்காலாம். என்ன
 சொல்கிறீர்கள்?
 
 மீண்டும் அங்கே மெளனம் நிலவியது.
 
 அந்த மெளனம் என்பது சம்மதமில்லை,
 ஆனால் சம்மதிக்காதிருப்பது அங்கே
 சாத்தியமில்லை. கொஞ்சநேரத்தில் அவர்களின்
 அரைகிலோ நம்பிக்கை உலையில் கொதிக்கத்
 தொடங்கியது.
 
 அன்று நள்ளிரவில் தேய்பிறை நிலவின்
 அழும் வெளிச்சத்தில் .. தூக்கம் வராமல்
 புரண்ட ஓர் உருவம் மட்டும் மெள்ள எழுந்தது.
 
 உறங்கும் உருவங்களை உறுதி செய்து
 கொண்டு பூனையின் பாதங்களால் நடந்தது.
 
 சமையல் அறையில் நுழைந்து கஞ்சிப்பாளையில்
 கைவிட்டது.
 
 அவ்வளவுதான்.
 
 திருட்டுநாயே. இன்னோர் உருவம் அதைப்
 பாய்ந்துபிடித்துக் கடல்கிழியக் கத்தியது.
 
 ---------------------------------------------------------------------
- 
				13
 
 இந்த மண் யாருக்குச்
 சொந்தம் என்ற கேள்வி
 எழும்வரைக்கும் பூகோளப்
 படத்தில் அடித்தல்கள் இல்லை.
 திருத்தல்கள் இல்லை.
 
 வறுமை என்னும் ஒரு தத்துவம்
 செயற்கையாகச்
 சிருஷடிக்கப்படும்வரை
 சரித்திரத்தின் முகத்தில்
 தழும்புகள் இல்லை.
 
 என்னுடையது என்னும்
 வலிமையும்,
 இல்லாமை என்னும் வெறுமையும்
 வந்த பிறகுதான் மனிதகுலம்
 யுத்தங்களைச் சந்தித்தது.
 
 கனவுகள் உயிர்களின்
 அனுபவங்கள். கிரகங்கள் கனாக்
 காண்பதில்லை.
 ஆனால், பூமி என்னும்
 கிரகத்துக்கு மட்டும்
 நிறைவேறாத
 ஒரு நெடுங்கனவு உண்டு.
 
 யுத்தங்களுக்கும் ரத்தங்களுக்கும்
 சத்தங்களுக்கும் மத்தியில்
 அந்த நெடுங்கனவு
 நீண்டு கொண்டேயிருக்கிறது.
 
 என்ன கனவு அது?
 எப்பொருள் பற்றியது?
 
 ஒரு திருடன் - ஒரு பிச்சைக்காரன் -
 ஒரு விலைமகள் -ஒரு கொலைகாரன்
 இந்த நால்வரும் அற்ற
 சமுதாயம்தான் இந்த உலகம்
 கடைவிழியில்
 நீர்வடியக் கண்டுவரும் கனவு.
 
 மனிதன் அந்தப் புதிய
 பிரதேசத்துக்குத்தான் பூமி
 என்னும் கிரகத்தைச் செலுத்த
 விழைகிறான்.
 
 அரசியல் - அரசுகள் -
 மதங்கள் - அறிவியல்
 கண்டுபிடிப்புகள் - எண்ணங்கள்
 - இலக்கியங்கள் - கலைகள்
 இவையெல்லாம் அந்தக் கனவுப்
 பிரதேசத்துக்கு இந்தப்
 பூமியை நகர்த்தும் உருளைகள்
 என்றே அவன் இன்னும்
 நம்புகிறான்.
 
 ஆனால், பூமியென்னும்
 கிரகத்தை முன்னெடுத்துச்
 செல்ல வேண்டிய அந்த
 உருளைகள் பல நேரங்களில்
 நகராமலும் நகரவிடாமலும்
 சுற்றிய இடத்திலேயே சுற்ற
 வைக்கின்றன. சில நேரங்களில்
 பின்னோக்கியும்
 செலுத்திவிடுகின்றன.
 
 எனவே களையப்பட வேண்டிய
 திருடனும் பிச்சைக்காரனும்
 விலைமகளும் கொலைகாரனும்
 மாறுவேஷத்தில் வாழ்ந்து
 கொண்டேயிருக்கிறார்கள்.
 
 மனிதன் வெவ்வேறு வடிவங்களில்
 திருடுகிறான். வெவ்வேறு
 வடிவங்களில்
 பிச்சையெடுக்கிறான்.
 வெவ்வேறு வடிவங்களில்
 விபசாரம் நடக்கிறது. வெவ்வேறு
 வடிவங்களில் கொலையும்
 விழுகிறது.
 
 பூமி மட்டும்
 சுற்றிக்கொண்டேயிருக்கிறது தன்
 நிறைவேறாத கனவை
 நெஞ்சில் சுமந்துகொண்டே.
 
 அந்த நள்ளிரவில் கையும்
 கஞ்சியுமாய்ப் பிடிபட்ட
 சலீம், இசக்கியின் பிடியிலிருந்து
 தன்னை இதமாய்
 விடுவித்துக் கொண்டான்.
 
 விழித்துக்கொண்டு சூழ்ந்தவர்கள்
 அவனையே உற்று உற்றுப்
 பார்த்தார்கள் உடைந்த
 நிலாவெளிச்சத்தில்.
 
 அவன் திருடன்போல் குனிந்து
 நிற்கவில்லை.
 தியாகிபோல் நிமிர்ந்து
 நின்றான்.
 
 உனக்கு மட்டுந்தான்
 வயிறா? இல்லை உனக்கு
 மட்டுந்தான் உயிரா? இத்தனை
 பேரும் கும்பிகருகிக் குடல்
 வெந்து கிடக்கையில் உனக்கு
 மட்டும் எப்படித் திருடத்
 தோன்றியது?
 சொல் சலீம்.
 சொல்....
 
 திருடப் போனது
 உண்மைதான். ஆனால், என்
 பசிக்குத்
 திருடவில்லை...
 
 பிறகு யார் பசிக்கு..?
 
 ஒருவேளை கடல்மீன்களின்
 பசிபோக்கத்தான் கஞ்சிப்
 பானைக்குள்
 கைவிட்டாரோ?
 
 இல்லை. ஓர் ஏழை
 ஜீவனின் பசிக்கு.
 
 இப்போது இந்தப்
 படகிலுள்ள ஒவ்வொரு ஜீவனும்
 ஏழை ஜீவன்தான்.
 
 நம் பசியை நமக்குச்
 சொல்லத் தெரிகிறது. நான்
 திருடியது அதைச் சொல்லத்
 தெரியாத
 ஒரு ஜீவனுக்கு.
 
 சொல்லத் தெரியாத
 ஜீவனென்றால்..?
 
 சுண்டெலிக்கு.
 
 அவர்கள் ஒரே இடத்தில்
 சிரிக்க ஆரம்பித்து வெவ்வேறு
 இடத்தில் முடித்தார்கள்.
 
 வெயிலடித்துக் கொண்டே மழை
 பெய்தது மாதிரி இன்பம்,
 துக்கம் இரண்டும் இழையோடிய
 சிரிப்பு அது.
 
 இங்கே மனிதனுக்கே
 சோற்றைக் காணோம். நீ
 சுண்டெலிக்குச்
 சோறு வைக்கிறாயோ?
 
 நம் தேவை பெரிது.
 அதன் தேவை சிறிது.
 
 அது இருக்கட்டும்.
 நீ சுண்டெலிக்குத்தான் சோறு
 திருடப் போனாய் என்பது
 என்ன நிச்சயம்?
 
 சரியான கேள்வி. சாட்சி
 கிடைக்காத கேள்வி.
 
 பட்டாசுத் திரியில்
 முதன்முதலாய்த் தீ வைத்துவிட்டு
 அது வெடிக்கும்வரை
 பரபரக்கும் சிறுவனைப் போல
 அவன் பதில் கேட்க
 ஆவலானார்கள்
 ஐந்து பேரும்.
 
 சலீம் மோவாய் தடவி முகம்
 கவிழ்ந்தான். யோசித்தான்.
 பற்றிக் கொண்ட
 தீக்குச்சிகளாய்ப் பளிச்சென்று
 வெளிச்சம்
 காட்டின கண்கள்.
 
 நான் சுண்டெலியின் தினசரி
 சிநேகிதன். நானும்
 சுண்டெலிக்குச் சோறு
 வைக்கிறேன். நீங்களும் சோறு
 வையுங்கள். யார் வைத்த
 கவளத்தைச் சுண்டெலி வந்து
 உண்டு செல்கிறது
 பார்ப்போம்.
 
 அதையும் பார்ப்போம்.
 
 சத்திய சோதனை
 தொடங்கியது.
 
 ஒரு கவளம்
 சோறெடுத்து ஒவ்வொருவரும்
 வெவ்வேறு இடத்தில்
 வைத்தார்கள்.
 
 சுண்டெலி தன் தலைமறைவு
 வாழ்க்கையைவிட்டு
 வெளியேறவில்லை.
 
 எல்லா முகங்களிலும்
 ஏமாற்றக் கோடுகள்.
 சரி. சரி. இப்போது
 நீ சோறு வை.
 
 வைரங்களை எண்ணும் ஒரு
 வியாபாரியைப் போல்
 கவளத்தில் ஒரு பருக்கையும்
 சிதறிவிடாமல் சேர்த்தெடுத்து,
 கடுகுபுட்டியின் முடிமேல்
 கவனமாய்
 வைத்தான் சலீம்.
 
 அடுத்த நிமிடம் அந்த அதிசயம்
 நிகழ்ந்தது.
 
 கண்ணுக்குத் தெரியாத ஒரு
 சந்துவழி வந்து ஒரு க்ரீச்
 வணக்கம் சொல்லி கவளத்தில்
 வாய் வைத்தது சுண்டெலி.
 
 உயிர்த்தெழுந்த ஏசுநாதரைப்
 பார்த்தவனைப்போல் வியந்து
 நின்றான் இசக்கி.
 
 அந்தத் துள்ளலென்ன.
 அதன் மகிழ்ச்சியென்ன.
 ஒரு சிற்றுயிரின்
 ஜீவததும்பல் என்ன.
 
 கலைவண்ணன் காதில்
 தமிழ்ரோஜா முணுமுணுத்தாள்.
 பசியாறும் ஒரு ஜீவனின்
 சந்தோஷம் பார்த்தாலே
 பசியாறிவிடும்
 போலிருக்கிறதே.
 
 பாரதீ. மகாகவி.
 உன் செல்ல அனுமதியோடு
 உன் கவிதையில் ஒரு
 சின்னத் திருத்தம்.
 அனுமதிப்பாயா?
 
 வயிற்றுக்குச் சோறிட
 வேண்டும் - இங்கு வாழும்
 மனிதருக்கெல்லாம் என்றாய்.
 
 அந்த ஆறாம் சீரில் மட்டும்
 உனக்கு வருத்தம் வராமல் ஒரு
 திருத்தம் செய்வோமா?
 
 வயிற்றுக்குச் சோறிட
 வேண்டும் - இங்கு வாழும்
 உயிர்களுக்கெல்லாம்.
 
 சம்மதமா?
 
 ஓர விழி கசிந்தபடி ஓர்
 ஓரமாய் நின்றான் சலீம்.
 
 எங்களை மன்னித்துவிடு
 சலீம்.
 - ஐவர் மொழியை
 ஒருவன் பேசினான்.
 
 உறக்கம் துரத்தும் இரவுகள்.
 உடம்பு எரிக்கும் பகல்கள்.
 இரைப்பை சுருக்கும் பசி.
 இதயம் அறுக்கும் வெறுமை.
 
 முன்று டம்ளர் கஞ்சித் தண்ணீரில்
 ஆறு ஜீவன்கள்.
 
 படகைப் போலவே ஒரே
 இடத்தில் நின்றுபோன
 வாழ்க்கை.
 
 நடக்கவும் சக்தியில்லாமல்
 நலிந்து சாயத் தொடங்கிய
 உடல்கள்.
 
 ஒரே ஒரு படகுகூட இந்தக்
 கடலில் வெள்ளைக்கோடு
 கிழிக்காதா?
 
 வங்காள விரிகுடாவில் கப்பல்
 போகக் கூடாதென்று
 கட்டளையா?
 
 ஓர் ஆறு பேரைக் காணோம்
 என்று தமிழ்நாட்டின்
 ஜனத்தொகை இன்னும்
 கவலைப்படவில்லையா?
 
 விடியாத இரவைப் பார்த்து
 சூரியன் செத்துவிட்டானா?
 என்று தனிப்பாட்டில் ஒரு
 தமிழச்சி புலம்பினாளே.
 அப்படி அங்கே பூகம்பம்
 நேர்ந்து பூமி புரண்டு
 புதைந்துவிட்டதா?
 
 ஒருவேளை சவப்பெட்டிக்கு
 வாங்கிய மரத்தில்
 இந்தப் படகு
 தயாரிக்கப்பட்டுவிட்டதா?
 
 அழுத பிள்ளைக்குத்தான்
 பாலா?
 அபயக்குரல் கொடுத்தால்தான்
 உதவியா?
 
 சரி. கத்துவோம்என்று
 முடிவெடுத்தார்கள். பரதன்
 ஏறினான் பாய்மரத் தட்டில்.
 
 அய்யா உதவிக்கு
 வருவீர்களா? படகு பழுது.
 அய்யா உதவிக்கு வருவீர்களா?
 படகு பழுது.
 
 முன்றாம் முறை குரலெடுக்க
 முடியவில்லை. தொண்டையின்
 கடைசி ஈரம் வற்றிவிட்டது.
 
 அடுத்து இசக்கி ஏறினான். ஒரு
 கரத்தால் காதுபொத்தி
 ஓங்கிக் கத்தினான்.
 அதற்குமேல் அவனுக்கும் சக்தி
 இல்லை. வயிற்றைப் பிடித்துக்
 கொண்டு இறங்கிவிட்டான்.
 
 சலீம். நீ போ அவன்
 கத்திக் கத்திப் பார்த்தான்.
 சத்தமே வரவில்லை. அவன்
 நாவிலிருந்த எச்சிலைக்
 கடற்காற்று குடித்துவிட்டுப்
 போய்விட்டது.
 
 அடுத்து பலங்கொண்ட மட்டும்
 பாண்டி கத்தினான். எந்தத்
 திசையிலும் எதிரொலியில்லை.
 
 போங்கள். உயிருக்கு குரல்
 கொடுங்கள் - தமிழ்
 கலைவண்ணனை அனுப்பினாள்.
 கலைவண்ணனும் கத்திப்
 பார்த்தான். அவன் குரல்
 காற்றில் குதித்துத் தற்கொலை
 செய்ததுதான் மிச்சம்.
 
 தமிழ். நீ வா.
 
 வேண்டாம். தங்கை கத்த
 வேண்டாம் - பாண்டி
 தடுத்தான்.
 
 ஏன்?
 
 சேவல் கூவி விடியாத
 பொழுது குயில் கூவியா விடியப்
 போகிறது?
 
 தமிழ் சினந்தாள்.
 இல்லை. இது எனக்கு
 நீங்கள் காட்டும்
 சலுகையில்லை.
 அவமரியாதை. நானும்
 கத்துவேன்.
 
 தட்டுத் தடுமாறி ஏறினாள்.
 பாய்மரத்தையும் வயிற்றையும்
 பிடித்துக் கொண்டு கத்தினாள்.
 
 அந்தக் குரல் படகைக்கூடத்
 தாண்டவில்லை.
 
 கலைவண்ணன் அவளைக்
 கைத்தாங்கலாய் இறக்கினான்.
 
 கத்திய களைப்பு. வறண்ட
 தொண்டை. அன்றைய பங்கைப்
 பிரித்துக் கொள்ள
 அவசரமானார்கள். கஞ்சிப்
 பானையில் கூடினார்கள்.
 
 கஞ்சிப் பானை திறந்து
 கிடந்தது.
 
 ஏன்? எப்படி?
 
 சுண்டெலிக்குச் சோறு வைத்த
 பரபரப்பில் அதை முடிவைப்பது
 மறந்துவிட்டது.
 
 உள்ளே பார்த்தால் -
 அவர்களின் அமுதத்தில் இரண்டு
 கரப்பான் பூச்சிகள்
 இறந்துகிடந்தன.
 
 அது -
 அவர்கள் வயிற்றில் விழுந்த
 கடைசி இடி.
 
 பீப்பாய் திறந்தார்கள்.
 
 அவர்கள் தாகத்தின் கடைசித்
 தவணை ஆளுக்கு அரை
 டம்ளராய் ஆழத்தில் சிரித்தது.
 
 இரவு.
 
 எலிகடித்த ரொட்டியாய்
 வடிவிழந்த
 நிலா.
 நாலா திசையிலும்
 சிதறிக்கிடக்கும் நட்சத்திரப்
 பருக்கைகள்.
 
 மீனவர் நால்வரும் தூங்கிப்
 போயினர். மீன்விழி மங்கை
 தூங்கவில்லை.
 
 உறங்கிவிட்டீர்களா?
 இல்லை. கண்கள் இமைத்துக்
 கொண்டிருக்கும்போது உறங்க
 முடியுமா?
 
 புரியவில்லை.
 
 என் கண்ணே நீதானே. நீ
 விழித்துக் கிடக்கையில் என்னால்
 எப்படி உறங்க முடியும்?
 
 நாளைக்கு மரணமென்றாலும்
 இன்றுவரைக்கும் கவிதை
 பேசுவீர்கள்
 போலிருக்கிறதே.
 
 ஆமாம் மரணத்தை வரவேற்கக் கவிதைகள்
 வேண்டாமா?
 
 போதும். போதும். நாளைப்பொழுதாவது நம்
 பொழுதாக விடியுமா?
 
 நாளைப் பொழுது நம் பொழுதோ இல்லையோ
 ஆனால் உன்பொழுது.
 
 என் பொழுதா?
 ஆமாம் விடிந்தால் உன் பிறந்த நாள்.
 
 அப்படியா. என்று ஆச்சரியம் காட்டியவள்,
 நான் தேதி பார்ப்பதை நிறுத்திவிட்டேன் என்றாள்.
 
 ஏன்? என்றான்.
 
 கோமாவில் கிடப்பவனுக்குத் தேதி எதற்கு?
 
 அவநம்பிக்கை அடையாதே. நாளை
 உன் பிறந்தநாள். ஒரு நல்ல சேதி வரலாம்
 
 வருமா?
 
 வராவிட்டாலும் பரவாயில்லை. நீ பூமிக்கு
 வந்ததே ஒரு நல்ல சேதிதானே?
 
 எனக்கென்ன பிறந்தநாள் பரிசு தருவீர்கள்?
 
 பொறுத்திருந்து பார்.
 
 சூரியன் தாம்பூலம் போட்டு வெளியேறத்
 தயாரானபோது -
 
 அவள் கன்னத்திலும் காதுகளிலும் சுட்டுவிரல்
 கோலமிட்டு எழுப்பினான்
 
 தமிழ். உனக்கென்ன பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 
 என்ன பரிசு தருவீர்கள்? அவள் விழிக்காமல்
 புரண்டபடி வினவினாள்.
 
 இதோ.
 
 அவள் விழித்துப் பார்த்தாள்.
 
 அவன் கையில் - அரை டம்ளர் தண்ணீர்.
 
 நேற்றுப் பருகாமல் வைத்திருந்த அவன் பங்கு.
 
 அவள் உணர்ச்சிவசமானாள்.. பரவசப்பட்டுப்
 பாய்ந்தெழுந்து அவன் தோள்கட்டினாள்.
 
 அந்த வேகத்தில் தவறி விழுந்து டம்ளர்
 உருண்டது, தண்ணீர் சிதறியது.
- 
				14
 
 அது ஒன்பதாம் நாள்.
 இதயத் துடிப்பு குறையத்
 தொடங்கும் இரண்டாம்
 வாரம்.
 
 தண்ணீர் குறையக் குறைய
 உயிர்த்தாமரை உலரும்
 காலம்.
 
 ஒரு மனிதன் தண்ணீர் இல்லாமல்
 ஈரப்பதம் இல்லாத
 பாலைவனத்தில் இரண்டு நாள்
 இருக்கலாம்.
 
 ஈரப்பதமுள்ள கடலில்
 ஏழுநாள்வரை பொறுக்கலாம்.
 
 ஆனால் - அது ஒன்பதாம்
 நாள்.
 
 காலக்கெடு முடிந்துவிட்டது.
 எச்சில் சுரப்பி வறண்டுவிட்டது.
 
 தார்ச்சாலையில் அசைவற்றுக்
 கிடக்கும் செத்தபிராணியாய்
 உள் அண்ணத்தில்
 ஒட்டிக்கொண்டது நாக்கு.
 
 சூரியன் வந்துவந்து
 போனாலென்ன. விடியல்
 மட்டும் வரவே இல்லையே.
 
 இன்னும் சொல்லப்போனால்
 இரவுகூடக் கொஞ்சம்
 இதமாயிருக்கிறது.
 விடிந்தால்தான்
 பயமாயிருக்கிறது.
 
 சாரமற்ற இந்த
 வாழ்க்கையைச்
 சகிப்பதெப்படி?
 
 கடற்காற்றின் ஒரேமாதிரியான
 ஓசை. காது மடலடியில்
 படியும் உப்புப் பிசுபிசுப்பு.
 கொஞ்சம் கொஞ்சமாய்
 எடையிழக்கும் உடல்கள்.
 உடம்பின் ஏதோ ஒரு
 துவாரத்தின் வழியே, உயிர்
 பகுதி பகுதியாய்
 வெளியேறுவதாய் ஒரு பயம்.
 மோகனமாய்த் தொடங்கி
 முகாரியாய் நிறம்மாறிய
 தளக் தளக்
 அலைச்சத்தம்.
 
 நரகத்தை உருவகித்தவன் அது
 கடலுக்கு மத்தியில்தான்
 கட்டப்பட்டிருக்கிறது என்று ஏன்
 கற்பனை செய்யவில்லை?
 இதுதான் நரகம். இதுதான்
 மரணத்தின் முன்னோட்டம்.
 
 இந்த நிமிஷத்தின் முதல் தேவை
 தண்ணீர்தான். சுருங்கிக்
 கொண்டிருக்கும் உயிரைச் சில
 மில்லி மீட்டர்களாவது
 விரியவைப்பது தண்ணீர்
 மட்டும்தான்.
 
 மீனவர் சற்றே தாங்குவர்.
 அவை உழைத்த தேகங்கள்.
 
 தமிழ்ரோஜா தாங்குவாளோ?
 அது செம்பருத்திப் பூக்களையும்
 செண்பகப் பூக்களையும்
 செதுக்கிச் செதுக்கி இழைத்த
 தேகம்.
 
 கிரேக்கச் சிற்பம்போல்
 பளபளத்த பருவமகள்,
 மொகஞ்சதாரோ
 ஒவியம்போல் முகம்
 சிதைந்து போனாளே.
 மீனுக்குக் கொண்டுவந்த
 பனிக்கட்டி இருந்திருந்தாலும்
 ஊனுக்கும் உயிருக்கும்
 கொஞ்சம் நீர்
 வார்த்திருக்கலாம்.
 
 ஆனால் - கலக்கத்தில் -
 உள்ளறைக் கதவு திறந்து
 கிடந்ததில் உஷணக்காற்று உள்
 நுழைந்து பனிக்கட்டிகளை
 அழவைத்துவிட்டுப்
 போய்விட்டது.
 
 இனி என்ன வழி? உறைந்த
 கடல்நீரில் உப்பிருக்காதாமே.
 அதை உறைய வைத்துப்
 பருகலாமா?
 
 அய்யோ.
 கடல்நீர் உறைய இது
 வடதுருவம் அல்லவே.
 
 இனி இருக்கும் ஒரே ஓர்
 எதிர்பார்ப்பு வானம்தான்.
 
 இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை
 - ஓரிடத்தில் குவிந்ததை அள்ளி
 ஊருக்குப் பகிர்ந்தளிக்கும்
 காம்ரேட் மேகம்தான்.
 
 ஏ, திட்டுத்திட்டாய் மிதக்கும்
 மேகங்களே. நீங்களும்
 நாங்களும் ஒரே ஜாதிதான்.
 ஆமாம்.
 
 இருவருமே விட்டுப்புறப்பட்டு
 விலாசம் தப்பியவர்கள்.
 கொள்ளை கொள்ளையாய்
 மிதக்கும் வெள்ளை
 மேகங்களே. எங்களுக்காகக்
 கொஞ்சம்
 கறுப்பாகுங்களேன்.
 
 மழைத்துளிகளை
 உண்டுவாழுமாமே
 சாதகப்பட்சிகள். நாங்களும்
 இப்போது சாதகப்பட்சிகளே.
 இந்தச் சாதகப்பட்சிகளின்
 ஜாதகம், இப்போது உன்
 கையில் மழையே... உன்
 கையில். ஓராண்டுக்கு
 எண்பத்தாறு சென்டிமீட்டர்
 உலகத்துக்காக ஒழுகும்
 மழையே. எங்கள் மீது ஒரே
 ஒரு மில்லிமீட்டர் உதிர்க்கக்
 கூடாதா? திருடிய பொருளைத்
 திருப்பித்தர மறுக்கும் ஒரு
 திருடனைப் போல -
 உயரத்தில் ஏறிக்கொண்டு ஏன்
 எங்கள் உயிர் குறைக்கிறாய்?
 
 கொஞ்சம் அவிழ்த்துவிடு. உன்
 வைரப்பை சிந்தட்டும்.
 முத்துக்கள் எங்கள் முகத்தில்
 தெறிக்கட்டும். மாட்டாயா?
 
 காட்டில் நிலாவும் - கடலில்
 மழையும் விரயமா? ஏன்?
 காட்டில் நிலவடித்தால் என்ன?
 விலங்குகளும் பறவைகளும்
 நிலாவின் எதிரிகளா?
 பூக்களுக்கு நிலவின் புளகம்
 பிடிக்காதா?
 
 கடலில் மழை பெய்தால்
 என்ன? இந்த உலர்ந்த
 தேகங்கள் உயிர்
 நனையக்கூடாதா?
 
 இரக்கமில்லையா
 இளையமேகமே? யாராவது
 ஒரு விஞ்ஞான தேவதை வந்து
 உன்மீது சில்வர் அயொடைடு
 தெளித்தால்தான் சில்லென்று
 சிரிப்பாயா?
 
 காற்று வந்து மண்ணைச்
 சுரண்டாமலிருக்க மழை
 வேண்டுமாமே. மரணம் வந்து
 எங்கள் உயிரைச்
 சுரண்டாமலிருக்கவும் இப்போது
 மழைதான் தேவை.
 
 அவர்கள் மானசீகமாக
 யாசித்தார்கள். என்ன
 செய்வது? காது கேட்காது -
 வானத்திற்கு. கண் தெரியாது
 - மேகத்திற்கு.
 
 கடல்
 அமைதியாகத்தானிருந்தது.
 கரையில் ஒரு புயலடித்தது.
 
 அந்தப் புயலின் பெயர்
 அகத்தியர். தமிழ்ரோஜாவின்
 தந்தை.
 
 தன் எதிர்காலச்
 செலவுப்பட்டியலை எண்ணிக்
 கிடந்தபோதுதான்
 தமிழ்ரோஜா அவர்
 ஞாபகங்களில் மின்னி
 மறைந்தாள்.
 
 ஓ. என்னவானாள் என் மகள்?
 
 வாரத்தில் ஒருநாள் மட்டும்
 சலவைச்சட்டை அணிந்து
 கொள்ளும் ஒரு பழைய
 தமிழ்வாத்தியாரைப் போல
 அந்த வாரத்தில் அன்றுதான்
 மகளை நினைந்தார்
 அகத்தியர்.
 
 அது ஒன்றும் அதிசயமல்ல.
 முன்பெல்லாம் அவர்
 அனுமதியோடு இருவரும்
 விடை கொள்வார்கள்.
 சிலநாள் சென்று
 திரும்புவார்கள்.
 
 அப்போதெல்லாம் அவர்
 கொண்ட வருத்தம் முன்று
 நாட்களாகத் தன் மகளைக்
 காணவில்லையே என்பதல்ல.
 தன் மகளின் முகத்தில்
 முத்தத்தின் அடையாளங்கள்
 காணவில்லையே என்பதுதான்.
 
 இத்தனை நாள் இல்லாமல்
 போனது இதுவே முதல் முறை.
 
 அவர் மீசையில் தோன்றிய
 நரைகளைப் போலவே
 மனதிலும் அங்கங்கே
 அச்சரேகைகள்.
 
 சுழற்றினார் -
 பத்திரிகை அலுவலகம் -
 கலைவண்ணன் இல்லை.
 
 சுழற்றினார் -
 பல்கலைக்கழகம் -
 தமிழ்ரோஜா இல்லை.
 
 சின்னச் சந்தேகக்கோடு
 சீனத்துப் பெருஞ்சுவரானது.
 
 அடுத்ததென் செய்வது?
 காவல்துறைக்கு எப்போதும்
 அவர் தூரத்து உறவினர்.
 
 பல காக்கிச்
 சட்டைகளுக்கெல்லாம்
 அவர்தான் கஞ்சி உபயம்.
 
 அடுத்த பத்தாம் நிமிடத்தில்
 ஐந்தாறு ஜோடி பூட்ஸகால்கள்
 அழகிய கிரானைட் படிகளை
 அழுக்காக்கின.
 
 சற்று நேரத்தில் செய்திகள்
 பறக்க - அங்கங்கே
 தீப்பிடிக்க - ராயபுரம்
 காவல்நிலையத்தில் உண்மையின்
 மங்கிய கைரேகைகள் பதிவாக
 - அகத்தியர் கண்களுக்கு ஒரு
 மெல்லிய நம்பிக்கை பிறந்தது.
 
 கரையிலிருந்த அவருக்கு
 மட்டுமல்ல - கடலில் சிக்கிய
 ஜீவன்களுக்கும் ஒரு தூரத்து
 நம்பிக்கை
 வானத்தில் தெரிந்தது.
 
 உடம்பு நிற்பது உயிரின்
 தலத்தில். உயிர் நிற்பது
 நம்பிக்கை பலத்தில்.
 
 அந்த
 நம்பிக்கை அவர்களைக்
 கைவிடவில்லை. பரதன்தான்
 முதலில் அதைப் பார்த்தான்.
 
 அதோ.
 
 தன் உயிரையெல்லாம் உருட்டி
 - சுட்டு விரலில் திரட்டி அவன்
 காட்டிய திசையில் ஓர் இருண்ட
 மேகத்தீவு திரண்டு நின்றது
 தென்கிழக்கே.
 
 ஓ.
 கருணையின் நிறம் கறுப்பு.
 சூரியன்கூட அதன்மீது சுள்ளென்று
 அடிக்கவில்லை.
 
 ஒரு மார்கழி மாதத்து
 மாலையில் அருகம்புல் மேய்ந்து
 திரும்பும் ஒரு தாய்ப்பசுவின்
 கொழுத்த காம்பாய் அந்த
 மேகம் செழித்து நின்றது.
 
 ஒரு தென்றல்கன்று
 வாய்வைத்தால் போதும் -
 திமுதிமுவென்று சொரிந்துவிடும்
 போலிருந்தது.
 
 சிந்தி விழப்போகும் அந்த
 மேகம் இந்த வேளை இங்கு
 வருமா?
 
 வாராது.
 
 காற்று அவர்களுக்கு மேகத்தை
 அழைத்துவரும் திசையில்
 வீசவில்லை. அந்த மேகமிருக்கும்
 தென்கிழக்கை நோக்கித்தான்
 காற்று வீசுகிறது.
 
 அந்த மேகம் உடைந்து விழும்
 நேரத்தில் அதை
 அடைந்துவிட்டால் - இருக்கும்
 பாத்திரத்தில் சிதறும்
 உயிர்த்துளிகளைச் சேமித்துக்
 கொள்ளலாமே.
 
 சரிசரி. எப்படி அடைவது?
 
 அதோ அதோ.
 
 எட்டிவிடும் தூரத்தில் வானம்.
 தொட்டுவிடும் தூரத்தில்
 மேகம்.
 
 கலைவண்ணன் கண்ணில் ஒரு
 மின்னல்.
 பாண்டி. பரதன்.
 பாய்மரம் செய்வோமா? பாய்மரம்...
 
 பாய்மரம் செய்தால் பசி
 தீருமா? - இசக்கி.
 
 பசி தீருமோ இல்லையோ,
 தாகம் தீரலாம். அதோ
 பாருங்கள் ஒரு தாய்மேகம்.
 நல்ல வாய்ப்பு நமக்கு.
 காற்றும் அதை நோக்கி.
 நீரோட்டமும் அதை நோக்கி.
 பாய்மரம் மட்டும் கட்டிவிட்டால்
 பயணம் கொள்ளலாம். முயற்சி.
 முயற்சிதான் முன்னேற்றம். என்ன
 சொல்கிறீர்கள்? கடலின்
 அடிமைகளாய்ச் சாவதைவிடக்
 கடலின் வேட்டைக்காரர்களாய்ச்
 சாவோமே.
 
 சரி. அதுதான் சரி
 தமிழ்ரோஜா வழிமொழிந்தாள்.
 
 அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
 ஒரு பாய்மரம் அங்கே
 பிரசவமானது.
 
 தளத்தின் மேற்கூரை கழற்றி -
 அதை செளகரியமாய்ச் சாய்த்து
 - அதன் ஓரங்களில் கழிகள்
 நட்டு - ஆணிகள் அறைந்து -
 அந்தக் கழிகளில் லுங்கிகள் -
 போர்வைகள் தார்ப்பாய் கட்டி
 வீணையின் தந்திகளாய் இழுத்து
 நிறுத்தி - பரபரவென்று
 பாய்மரம் தயாரித்து, நங்கூரம்
 களைய - பாய்மரத்தில்
 மோதிய காற்று விசுக்கென்று
 நகர்த்தியது விசைப்படகை.
 
 எல்லோரும் கலகலவென்று
 ஒலிசெய்து கைதட்டினார்கள்.
 
 ஆகா. அதுவரை செத்துக்கிடந்த
 வாழ்க்கை ஜிவ்வென்று
 சிறகடித்ததா?
 
 ஓ.
 
 இயங்காத வாழ்க்கையில்
 இன்பமில்லை. இயங்கு. இயங்கு
 மனிதனே. இயங்கு. வெற்றியை
 நோக்கியாவது - தோல்வியை
 நோக்கியாவது
 இயங்கிக்கொண்டே இரு.
 இயக்கமே வாழ்க்கையின்
 முதல் அடையாளம்.
 
 வீசு காற்றே வீசு. விரைக
 படகே விரைக. எங்கள் உயிரின்
 தூரம்
 சில கிலோமீட்டர்.
 அதோ.
 அந்தக் கறுத்த மேகம்தான்
 எங்கள் குறிக்கோள். கடலுக்கு
 வந்து வானத்தில் தூண்டில்
 போட்டவர்கள்
 நாங்களாகத்தானிருப்போம்.
 வீசு காற்றே வீசு. விரைக
 படகே விரைக.
 
 அவர்களின் மனோவேகம்
 பாய்மரத்திற்குப் புரியவில்லை.
 
 காற்றுப் பேசினால் மட்டும்தான்
 அதற்குக் காது கேட்கும்
 போலிருக்கிறது.
 
 காற்று சொல்லியபடி
 அது மெதுவாகவே நகர்ந்தது.
 
 ஏ, பாய்மரமே. பாய்மரமே.
 உன்னைத்தான் நம்புகிறோம்.
 உனக்கு வேரில்லை.
 கிளையில்லை. மலரில்லை.
 கனியில்லை. ஆனாலும்
 பாய்மரமே. எங்கள் உயிர்
 ஒதுங்கியிருப்பது உன்
 நிழலில்தான்.
 
 நின்று - நின்று - அசைந்து -
 அசைந்து - விரைந்து -
 விரைந்து - வேகம் குறைந்து -
 அலைகள் கடந்து அவர்களின்
 லட்சிய மேகத்தை அந்தப் படகு
 அடைந்தபோது - அந்த
 மாயமேகம் ஏற்கெனவே சில
 துளிகளைப் பொழிந்துவிட்டுக்
 கலைந்து போயிருந்தது.
 
 இரண்டு முரட்டு அலைகள்
 விசைப்படகின் விலா துழாவியதில்
 அது அப்படியும் இப்படியும்
 ஆடியது.
 
 ஓங்கியடித்த ஒரு காற்றின்
 வேகத்தில் பாய்மரத்தின்
 தார்ப்பாய் கழன்று தண்ணீரில்
 விழுந்தது.
 
 கிரீச். கிரீச். கிரீச்.
 கிரீச். - எங்கோ கத்திய
 சுண்டெலியின் பாதிக் குரலில் பசி
 தெரிந்தது.
- 
				15
 
 வெற்றி தோல்வி இரண்டுமே
 மனதின் விகாரங்கள்.
 இன்னொரு வகையில் சொல்லப்
 போனால் வெற்றி தோல்வி
 இரண்டுமே ஒட்டிப்பிறந்த
 இரட்டைக் குழந்தைகள்.
 இரண்டும் ஒன்றுக்கொன்று
 உள்ளுறவுகொண்டவை.
 தோல்வியின் முடிவுதான்
 வெற்றி. வெற்றியின் முடிவுதான்
 தோல்வி.
 
 துரத்தி வந்த கருமேகம்
 தொலைந்து போனதற்காய்
 அவர்கள் வருந்தவில்லை.
 தோல்வி அவர்களுக்குப்
 புதிதில்லை. இந்தியர்களாக
 வாழ்ந்து வாழ்ந்து
 ஏமாறுவதற்குத்
 தயாரிக்கப்பட்டவர்கள்
 அவர்கள்.
 
 அதனாலென்ன.
 கோடுகளும் சித்திரங்களே.
 எமாற்றங்களும் அனுபவங்களே.
 வெற்றியால் தரமுடியாத
 விளைச்சலைத் தோல்வி தரும்.
 எவரெஸட்டைத் தொடுவதற்கு
 ஏறி, இமயமலையின்
 இடுப்பிலிருந்து வழுக்கி
 விழுந்தாலும் அது தோல்வி
 அல்ல. ஏறுதல் - விழுதல்
 என்ற அனுபவம் வெற்றி.
 
 துவண்டு விழுந்த மனதை
 எல்லோரும் தூக்கி நிறுத்திக்
 கொண்டாலும் தமிழ்ரோஜா
 மட்டும் வாடித்தான்
 போனாள்.
 ஏ பொழியாத வானமே.
 பொய் வானமே.
 உண்மை சொல்.
 எங்கள் கண்களில் நீ
 கறுப்பாய்க் காட்டியது
 மேகமா? புகையா?
 
 வானம் செய்யாத வேலையை
 அவள் கண்கள் செய்தன.
 
 தூறலிட்டன.
 
 சரி. சரி. நம்பி வந்தது
 போதும். நங்கூரமிடுங்கள்.
 
 உணர்ச்சியில்லாமல் அவர்கள்
 அந்த வேலையைச்
 செய்தார்கள்- ஒரு பிணத்திற்குக்
 குழிவெட்டும் வெட்டியானைப்போல.
 
 கிரீச். கிரீச். கிரீச்.
 கிரீச். தொடர்ந்தது
 சுண்டெலியின் சோகக்
 கச்சேரி.
 
 சலீம் அதன்மீது பார்வை
 பதித்தான்.
 பஞ்சு மிட்டாயாய்ப்
 பருத்திருந்த சுண்டெலி
 இளைத்துவிட்டது இப்போது.
 
 தண்ணீர் வற்றியதும்
 தலைகாட்டும் ஏரிமரங்களைப்
 போல அதன் உடம்பில்
 விறைத்து நின்றன
 குருத்தெலும்புகள்.
 
 கோரிக்கை விடுக்கும் ஓர்
 அகதியின் குரலாய்க் குறுகிப்
 போன அதன் கிரீச் ஓசை
 அதன் மரண வாக்குமுலமாகவே
 ஒலித்தது சலீமுக்கு.
 
 சட்டென்று ஒரு சிந்தனைச்
 சிறுமின்னல் அவன் முளையின் ஒரு
 முலையில் மின்னிமறைந்தது.
 
 கரப்பான்பூச்சி விழுந்த
 கஞ்சி நமக்குத்தான் ஆகாது.
 ஆனால் அந்தச் சோறு
 சுண்டெலிக்கு ஆகுமில்லையா?
 
 எல்லோரும் யோசித்தார்கள்.
 
 உண்மைதான். மனிதன்
 தனக்குப் பசிக்கும்போது
 மற்றவன் பசியை
 மறந்துவிடுகிறான். சரி சரி.
 சுண்டெலிக்குச் சோறு வை.
 
 அவன் கஞ்சிப் பானையில்
 கைவிட்டான். நைந்த
 சோற்றை நசுங்காமல்
 பிழிந்தான். அதை உருண்டை
 திரட்டினான். கடுகுபுட்டி மேல்
 வைத்துவிட்டுக் காத்திருந்தான்.
 
 சோற்றுவாசங்கண்டு சுண்டெலி
 வந்தது. முக்கை நீட்டி
 முகர்ந்து பார்த்தது. அதன்
 வால் அதிருப்தியை அபிநயம்
 பிடித்தது.
 
 மீண்டும் முகர்ந்து பார்த்தது.
 அப்படியும் இப்படியும்
 தலையாட்டியது. ஒரு
 பருக்கையும் உண்ணவில்லை.
 ஓசைப்படாமல் உள்ளே
 போய்விட்டது.
 
 அடடே. இது தன்மானச்
 சுண்டெலி. பசித்தாலும்
 புலிமட்டும்தான் புல்லைத்
 தின்னாது என்றிருந்தோம்.
 எலிகூடத் தின்னாது என்பதை
 இப்போது கண்டுகொண்டோ ம்.
 சுண்டெலியே வாழ்க. உன்
 சுயமரியாதை வாழ்க.
 
 அது அமாவாசை இரவு.
 தேய்பிறை நிலவும்
 தீர்ந்துவிட்டது.
 நட்சத்திரங்களின் ஊசிக்கிரண
 ஒளியில் விளையாட்டுக் காட்டின
 வெள்ளலைகள்.
 
 வியர்வைத் துவாரங்களின்
 வழியே உள்ளே புகுந்து
 உயிர்குடிக்கப் பார்த்தது
 வாடைக்காற்று.
 கொழிக்கும் நுரைகளோடு
 அடிக்கும் அலைகளோடு
 தடுமாறத் தொடங்கியது
 படகு.
 
 அலைகளின் கனமும் உயரமும்
 வரவர வளரத்
 தொடங்கியபோது நங்கூரம்
 கழன்றுவிடுமோ என்ற நடுக்கம்
 வந்தது.
 
 ஏ சமுத்திரமே.
 எங்களுக்கெதிராக என்ன
 போர்ப் பிரகடனம்?
 உனக்கு யுத்த தர்மம்
 தெரியாதா?
 நிராயுதபாணிகளோடு போர்
 தொடுப்பது நியாயமில்லை
 தெரியுமா?
 
 ஏ. ஏ. நிறுத்து.
 இந்தக் கறுப்பு இரவிலென்ன
 வெள்ளை யுத்தம்?
 
 அச்சம் நனைந்த குரலில்
 என்னவாயிற்று கடலுக்கு?
 என்றாள் தமிழ்ரோஜா.
 
 இன்று அமாவாசை.
 அதுதான் இந்தப்
 பொங்குதல்.
 
 பெளர்ணமியில்தானே கடல்
 பொங்கும்?
 
 இல்லை அமாவாசையிலும்
 பொங்கும்
 
 ஏன்... எப்படி?
 
 பெளர்ணமியில் - சூரியனும்
 சந்திரனும் எதிரெதிர் திசையில்
 பூமியை இழுக்கின்றன -
 அதனால் அலைகள்.
 அமாவாசையில்- சூரியனும்
 சந்திரனும் ஒரே திசையிலிருந்து
 பூமியை இழுக்கின்றன.
 அதனாலும் அலைகள்.
 
 அடிக்கும் அலை அடித்துக்
 கொண்டேயிருந்தது. ஆடும்
 படகு ஆடிக்
 கொண்டேயிருந்தது.
 
 எங்கள் வானத்தில் உலகத்தின்
 இருளையெல்லாம் ஊற்றிவிட்டுப்
 போனது யார்?
 
 எங்கள் நிலாவைத்
 திருடிக்கொண்டு
 நட்சத்திரங்களின் கண்களைக்
 குருடாக்கிவிட்டது யார்?
 
 கயிறில்லாத ஊஞ்சலான இந்தப்
 படகில் உயிரில்லாத
 உருவங்களை ஊசலாட்டுவது
 யார்?
 
 கலக்கம். மயக்கம்.
 குழப்பம்.
 
 நள்ளிரவுக்குப் பிறகு அலைகள்
 மெள்ள மெள்ளக் குறையத்
 தொடங்கியபோது -
 நம்பிக்கை உள்ளவர்கள்
 உறங்கிப் போனார்கள்.
 நம்பிக்கையற்றவர்கள் விழித்தே
 கிடந்தார்கள்.
 
 மேகக் கிழிசல் வழியே சில
 நட்சத்திரங்கள் மட்டும்
 இவர்கள் படகை வேடிக்கை
 பார்த்துக் கொண்டிருந்த
 வேளையிலே...
 
 பனைமர உயரத்திற்குப்
 பளிச்சென்று கடல்
 தீப்பற்றியது.
 
 பாதித்
 தூக்கத்திலிருந்த சலீம்தான்
 அதை முதலில் பார்த்தான்.
 
 அவன் உயிரே உறைந்துவிட்டது.
 உலர்ந்த நாக்கில் வார்த்தை
 ஒட்டிக்கொண்டது.
 
 பேய். பேய். கடல்பேய். என்று
 அலறிக்கொண்டே பரதனையும்
 பாண்டியையும் ஓங்கியடித்து
 உசுப்பினான். அவர்கள்
 எழுவதற்குள் அச்சங்காட்டிய
 அக்கினிப்பேய் அணைந்துவிட்டது.
 
 எங்கே? எங்கே? என்ன
 உளறுகிறாய்?
 
 அதோ.. அங்கேதான்.
 பேய். நெருப்புப் பேய்.
 அதோ. அதோ.
 
 மீண்டும் அந்தப் பனைமர உயர
 நெருப்பு பயங்காட்டியது.
 
 எழுந்து - வளர்ந்து -
 வளைந்து - நீண்டு -
 நெகிழ்ந்து - அகன்று அக்கினி
 வாய்திறந்து மீண்டும்
 அணைந்தது.
 
 இப்போது பாண்டிக்கும்
 பரதனுக்கும்கூடப் பயம் என்ற
 தொற்றுநோய் பரவிவிட்டது.
 
 மொத்தப் படகும் விழித்துக்
 கொண்டது முன்று பேரின்
 தத்தளிப்பில்.
 
 பேய். பேய். கடல்
 பேய்.
 
 தண்ணீரில் முழ்கிப்போன பேய்
 மீண்டும் தலைகாட்டியது.
 
 நெருப்பாய் - பளபளப்பாய்
 - சுடரொழுகும் ஜொலிப்பாய்
 ஆடியது அக்கினிப் பேய் -
 கடலுக்கு மேலே கனல்
 பற்றியது போல.
 
 ஆ. அய்யோ.
 அய்யய்யோ.
 அலறியபடி கலைவண்ணனின்
 உடம்பில் உயிர்போல
 ஒட்டிக்கொண்டாள்
 தமிழ்ரோஜா.
 
 வாடைக்காற்றிலும் வியர்த்து
 நின்றார்கள் சலீமும் பரதனும்.
 
 அவர்களின் கலக்கங்கண்டு
 குழப்பம்கொண்ட கலைவண்ணன்
 - அந்தப் பேயின்மீது ஒரு
 தூரப்பார்வை வீசித்
 துப்பறிந்தான்.
 
 சலீமின் இருதயம்
 மரணவேகத்தில் துடித்தது.
 அய்யோ. நம்
 மண்டையோடுகூடக்
 கரைசேராதா?
 
 கலைவண்ணன் உண்மைகண்டு
 தெளித்தான். ஒரு பொய்ச்
 சத்தம் போட்டு அவர்களின்
 அச்சம் அடக்கினான்.
 
 அஞ்சாதீர்கள். அது பேயின்
 விஸவருபம் அல்ல. அக்கினியும்
 அல்ல. பூச்சிகளின் உயர
 ஊர்வலம்.
 
 எப்படி?
 சற்றே பெருமுச்சு விட்டவர்கள்
 அந்த ஒரே வார்த்தையை
 ஐந்துநாவுகளால்
 உச்சரித்தார்கள்.
 
 அவை கடல்மேல் மிதக்கும்
 மெல்லிய வெளிச்சப் பூச்சிகள்
 - பெயர் நாக்டிலூக்கா
 கோப்பை அளவுத் தண்ணீரில்
 கோடானுகோடி எண்ணிக்கை
 கொண்டவை. அலைகளுக்கு
 உற்சாகம் வருகிறபோது
 இந்தப் பூச்சிகளுக்கும் ஆவேசம்
 வந்துவிடும். அலையோடு
 பயணம் கொண்டு மெர்க்குரி
 விளக்குகளாய் மின்னும்.
 தொட்டால் சுடுவதில்லை.
 பற்றினால் எரிவதில்லை.
 போலி நெருப்புப் பூச்சிகள்.
 போய் உறங்குங்கள்.
 
 அவ்வளவுதான். படகைப்
 பிடித்திருந்த பிசாசு
 இறந்துவிட்டது.
 
 நிம்மதி. நிம்மதி. கரைகடந்த
 புயலாய் மனங்கடந்தது பயம்.
 
 அறிவே உனக்கு வணக்கம்.
 நீதான் மனிதஜாதியின் அச்சம்
 களைந்தாய். நீதான் பூமியின்
 இருட்டுக்குப் புதுப்பகல்
 கொண்டு வந்தாய்.
 
 இடியும் மழையும் புயலும்
 இயற்கையின் கோபங்கள்
 என்றிருந்தபோது - அவை
 சீதோஷணத்தின்
 சிலிர்ப்புகள்... சிரிப்புகள்
 என்ற செய்தி அறிவித்தாய்.
 
 அறியாமையே அச்சம். அறிவே
 பலம். காரணம்
 கண்டறியாதவரை ஆன்மீகம்.
 காரணம் கண்டறிந்தால்
 விஞ்ஞானம். காரணங்கள்
 கண்டறிவோம். நன்றி அறிவே.
 நன்றி.
 
 விடியாதே இரவே.
 விடியாதே.
 எங்கள் துயரத்திற்கு இரவாவது
 திரைபோடுகிறது. நீ ஏன்
 வெளிச்சம் போடுகிறாய்?
 
 எங்கள் நாவுகளில்
 வாடைக்காற்று பூசிய ஈரத்தை
 சூரியனே நீ வந்து
 சுண்டவைக்கப் போகிறாயா?
 
 தகிக்கும் பகலே. உன்னைத்
 தவிர்க்கமுடியாதா? இந்தக்
 கடலில் எங்கள்
 சம்மதத்துடன்தானா எல்லாம்
 நடக்கிறது?
 
 விடிந்து தொலை இரவே.
 விடிந்து தொலை.
 
 இதோ பாருங்கள். என்
 கைப்பையில் ஒரே ஒரு
 சாக்லெட்.. துழாவியபோது
 ஆழத்தில் அகப்பட்டது.
 
 மீட்சிக்கு ஒரு படகு வந்தது
 போல் துள்ளிக்குதித்தாள் தமிழ்
 ரோஜா.
 
 கண்ணாடித்தாள்
 சுற்றப்பட்டிருந்த அந்தச் சின்ன
 சாக்லெட். செத்துப்போய்ச்
 சில நாட்கள் இருக்கும்.
 
 ஆனாலும், அது ஒவ்வொரு
 நாவிலும் மிச்சமிருந்த எச்சிலை
 ஊறவைத்தது.
 
 சரி சரி. பங்கிடுங்கள்.
 ஆறு பங்கு.
 
 இல்லை. இல்லை. ஏழு
 பங்கு.
 
 மன்னிக்க வேண்டும்.
 மறந்துவிட்டேன்
 சுண்டெலியை.
 
 ஆறு பங்காய்ப் போடுவது
 எளிது. ஏழு பங்காய்ப்
 போடுவது கடிது.
 
 சரி.. சரி. ஆறு
 பங்காகவே போடுங்கள். என்
 பங்கைச் சுண்டெலிக்குக்
 கொடுத்துவிடுகிறேன்
 என்றான் சலீம்.
 
 சாக்லெட் பிளக்கப்பட்டது.
 இந்தியா-பாகிஸதான்
 பிரிவினையைவிட அது
 கவனமாகவே
 கையாளப்பட்டது.
 
 அவரவர் துண்டு அவரவர்
 கைக்கு வந்ததும், உயிருக்கு
 அது ஓர் அமிர்தச் சொட்டு
 என்றே அறியப்பட்டது.
 
 சலீமைக் காணோம்.
 
 தன் பங்கோடு அவன் சுண்டெலி
 தேடி ஓடினான்.
 
 கடுகுபுட்டியின் முடியில்
 வைத்தான். காணவில்லை
 சுண்டெலியை.
 
 வாய்குவித்து ஒலிசெய்தான்.
 வரவில்லை. சின்னச் சின்னச்
 சந்துகளில் கண்களைப்
 போட்டான். சுண்டெலியின்
 அடையாளம் தோன்றவில்லை.
 
 சுக்கான் அறையை ஒட்டிக்
 கவலையோடு நடந்தபோது
 அவன்
 கால்களில் ஏதோ
 பிசுக்கிட்டது.
 
 தீயை மிதித்தவன்போல விசுக்கென்று
 காலெடுத்தான், குனிந்து பார்த்தான்.
 
 சுண்டெலியின் உரிக்கப்பட்ட தோலும்,
 துண்டிக்கப்பட்ட தலையும் தனித்தனியே
 கிடந்தன.
 
 அவ்வளவுதான.
 
 தன் உயிரையெல்லாம் குரல்வளையில்
 திரட்டி எவனடா. எவனடா என
 சுண்டெலியைக் கொன்றவன் என்று கண்ணீர்
 தெறிக்கக் கதறினான் சலீம்.
 
 சில விநாடிகள் அங்கே மரணமெளனம்
 நிலவியது.
 
 அந்த மெளனம் கிழித்து இசக்கி மெல்ல
 எழுந்துவந்தான்.
 நான் கொன்றேன், நான்தான் தின்றேன்.
 பசி, உயிர்போகும் பசி.
 என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?
 
 அவன் மார்பில் ஓங்கிக் குத்தி, சட்டை
 பிடித்துலுக்கி, கண்ணீர்விட்டுக் கதறியபடி -
 அடப்பாவி. நீ என்னைத் தின்றிருக்கலாமே
 என்றான் சலீம்.
 
 அதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது.
 என்றான் இசக்கி.
- 
				16
 
 ஒரு மனிதன் -
 எத்தனை நாடுகள் கடந்தான்.
 எத்தனை கடல்கள்
 கடைந்தான்.
 எத்தனை பேரைக்
 கொன்றான்.
 எத்தனை மகுடம் கொண்டான்.
 எத்தனை காலம் இருந்தான்.
 எத்தனை பிள்ளைகள் ஈன்றான்
 - என்பவை அல்ல அவன்
 எச்சங்கள்.
 
 இவையெல்லாம் நான் என்ற
 ஆணவத்தின் நீளங்கள்.
 
 அவன் இன்னோர் உயிருக்காக
 எத்தனைமுறை அழுதான்
 என்பதுதான், அவன் மனிதன்
 என்பதற்கான மாறாத
 சாட்சி.
 
 சலீம் அழுதான்.
 
 அது சுயசோகத்திற்காகச்
 சொட்டிய கண்ணீரன்று.
 சுண்டெலியின் மரணத்திற்காகச்
 சிந்தப்பட்ட சுத்தக் கண்ணீர்.
 
 காணவும் தூங்கவும் மட்டுமே
 கண்கள் என்று பலபேர்
 தப்பாகக் கருதிக்
 கொண்டிருக்கிறார்கள்.
 
 இல்லை - கண்ணீருக்கும்
 சேர்த்துத்தான் கண்கள்.
 
 பார்த்தல் என்பது
 கண்களின் வேலை.
 கண்ணீர் என்பதே
 கண்களின் தியானம்.
 
 இதயம் கொதித்து
 ஆவியாகும்போது இமைகளின்
 முடி திறந்து கொள்கிறதே...
 அதுதான் கண்ணீர்.
 
 ஒருவன் தனக்காக அழும்
 கண்ணீர் அவனைமட்டுமே
 சுத்திகரிக்கிறது.
 அடுத்த உயிருக்காக அழும்
 கண்ணீர்
 அகிலத்தையே சுத்திகரிக்கிறது.
 
 அழாதே சலீம். அழாதே.
 இசக்கியின்
 தவறுக்காக நான் மன்னிப்புக்
 கேட்கிறேன்
 - கலைவண்ணன் சலீமின்
 கரங்கள் பற்றிக் கெஞ்சினான்.
 
 அவன் நிறுத்தவில்லை.
 அவன் கண்களிலிருந்து
 அறுந்துபோகாத அருவி
 வடிந்து கொண்டேயிருந்தது.
 
 இவன் எவ்வளவு மெல்லியவன்.
 அனிச்சப்பூ மனசு கொண்டவன்.
 
 பிள்ளை மாதிரி
 வளர்த்தேனே.
 பிடித்துத் தின்றுவிட்டானே.
 - அவன் எழுத்துக் கூட்டி
 அழுதான்.
 
 விடு சலீம். ஒரு
 சுண்டெலிக்காக இவ்வளவு
 சோகப்படுகிறாயே.
 - பாண்டியின் சொற்களில்
 அலட்சியம் சொட்டியது.
 
 சொல்லாதே. அதை
 வெறும் சுண்டெலி என்று
 சொல்லாதே. இந்தப் படகின்
 ஏழாவது ஜீவன் என்று
 சொல். உருவங்கள்
 மாறலாம். ஆனால், உனக்கும்
 எனக்கும் அதற்கும் உயிர்
 ஒன்றுதான். நம் ஆறுபேரில்
 யாராவது ஒருவர்
 செத்திருந்தால் நீ அழாமல்
 இருப்பாயா?
 அப்படித்தான் அதுவும்
 
 அவன் வாக்கிலிருந்த தர்க்கம்
 அவர்களை
 வாயைடைத்துவிட்டது.
 
 அவன் அழுகை நிற்கவில்லை.
 
 தண்ணீர் குடிக்காத தேகத்தில்
 எப்படித்தான் அவ்வளவு
 கண்ணீர் இருந்ததோ.
 பாண்டியும் பரதனும் அவனைத்
 தங்கள் மார்பில்
 சாய்த்துக்கொண்டு வேர்வைப்
 பிசுக்கில் சிக்கலாகிப்
 போன அவன் கேசத்தில்
 சிக்கெடுத்தார்கள்.
 
 அந்த ஸபரிசம் அவனுக்குத்
 தேவைப்பட்டது.
 
 இசக்கி மட்டும்
 பேசவேயில்லை.
 
 அவன் தன்னைத் துண்டித்துத்
 தனியனானான்.
 
 ஆடும் படகின் விளிம்பில்
 அசையாது உட்கார்ந்து
 பிரமைப் பிடித்தவன்போல்
 கடல் பார்த்தான்.
 
 தன்னைத் தாங்கிய
 மார்புகளுக்கு மத்தியில்
 அழுது கொண்டேயிருந்தான்
 சலீம்.
 
 ஒரு முரட்டுக்கூட்டத்தில்
 இப்படி ஓர் இதயமா?
 தன் தாகம், பசி இரண்டையும்
 மறந்து வியந்தாள்
 தமிழ்ரோஜா.
 
 உரிக்கப்பட்ட சுண்டெலியின்
 தோலை மட்டும் சலீமால்
 தூக்கி எறிய முடியவில்லை.
 
 தான் வருவதற்கு முன்பே
 அடக்கம் செய்யப்பட்டுவிட்ட
 தாயின் பழைய புடவையைத்
 தொட்டுப் பார்க்கும்
 ஒரு பாசமுள்ள மகனைப்
 போல - சுண்டெலியின்
 தோலை
 அவன் தடவிக்கொண்டிருந்தான்.
 
 கைகளில் ஒட்டிய
 ரத்தம்பார்த்துத் திடீரென்று
 ஆவேசமானான்.
 
 டேய், மனிதனாடா. நீ
 மனிதனா? என்று கண்கள்
 பிதுங்கக் கத்தி, இசக்கியை
 நோக்கி
 முன்னேறினான்.
 
 இழுத்துக் கொண்டோ டியவனின்
 வயிற்றில் கைவைத்து வளைத்து
 நிறுத்தினான் கலைவண்ணன்.
 அவனைத் தழுவித் தடவிச்
 சாந்தம் செய்தான்.
 
 இதோ பார் சலீம்.
 சுண்டெலியைக் கொன்றது
 பாவம்தான். உன் உணர்ச்சி
 நியாயம்தான். ஆனாலும்
 உனக்கொன்று சொல்வேன்.
 இதை உன் உள்ளத்தில்
 எழுதிக்கொள்.
 எது நியாயம், எது பாவம்,
 என்று தீர்மானிப்பவன்
 மனிதனல்லன்.
 இடமும் காலமும்தான்.
 
 தாகத்தில் சாகப் போகும்
 பாலைவனப் பயணிகள்,
 தங்கள் ஒட்டகத்தையே
 கொன்று அதன் உள்ளிருக்கும்
 நீரை அருந்துவார்களாம்.
 அங்கே ஒட்டகவதை என்பது
 பாவமல்ல. பாலைவன
 நியாயம்.
 
 பசி உடம்பைத் தின்னத்
 தொடங்கும் பஞ்சநாட்களில்
 எறும்புப் புற்றை இடித்து,
 அதன் மாரிக்காலச்
 சேமிப்பான
 தானியம் எடுத்துச்
 சமைப்பார்களாம்.
 அங்கே அது திருட்டு அல்ல.
 அது பசியின் நியாயம்.
 
 உணவு கிட்டாத காலத்தில்
 உயிர்காக்க நினைக்கும்
 இருளர்கள், களிமண்
 தின்பார்களாம்.
 அங்கே மண் தின்பது என்பது
 பாவமல்ல.
 பழக்க நியாயம்.
 
 பயிர் செய்ய முடியாமல்
 வருஷத்தில் பாதி நாட்கள்
 பனிமுடிக் கிடக்கும்
 பிரதேசங்களில்
 துருவக்கரடிகளும் நாய்களும்கூட
 அன்றாட உணவாகுமாம்.
 அங்கே அசைவம் என்பது
 பாவமல்ல. பூகோள
 நியாயம்.
 
 சோமாலியாவின் பஞ்சத்தில்
 எலும்பும் உயிரும் வெளியேறத்
 துருத்திக் கொண்டிருக்கும்
 உடம்புக்குச்
 சொந்தக்காரர்கள்
 ஒன்றும் கிடைக்காமல்
 உடைகளையே தின்னத்
 தொடங்கினார்களாம்.
 அவர்கள் உடை தின்றது
 பாவமல்ல. கால நியாயம்.
 
 இசக்கி சுண்டெலியைக் கொன்று
 தின்றதை நான்
 நியாயப்படுத்த விரும்பவில்லை.
 ஆனால், அவன் செய்தது
 கொலை என்று
 குற்றம்சாட்டவும்
 முடியவில்லை.
 
 சலீம் தன் அழுக்குச் சட்டையில்
 வாய் புதைத்து
 அழுகை அடக்கினான்.
 
 அழுகை மெல்ல மெல்லக்
 குறைந்து விசும்பலானது.
 
 விசும்பல் மெல்ல மெல்லத்
 தேய்ந்து மெளனமானது.
 
 சுண்டெலியின் இறுதிச்
 சடங்குக்குப்
 படகு தயாரானது.
 
 இறந்த உடம்பை இரண்டு
 வகையில்
 நிறைவு செய்யலாம்.
 
 ஒன்று எரிப்பது அல்லது
 புதைப்பது.
 
 எரிப்பதென்றால் ஒரு தீக்குச்சி
 செலவாகும்.
 இருக்கும் சில தீக்குச்சிகளில்
 ஒன்றை இழப்பது
 அறிவுடைமை ஆகாது.
 
 புதைத்தல் என்றால் அங்கே
 பூமியில்லை.
 
 யோசித்தார்கள்.
 
 வீசுவது என்று
 முடிவெடுத்தார்கள்.
 
 எந்தக் கடுகுப்புட்டியின் முடியில்
 அது ஆசையாக
 உணவருந்துமோ அதே
 கடுகுப்புட்டியில், அதன்
 தோலையும் தலையையுமிட்டுக்
 காற்றுப் புகாமல் முடினான்
 கலைவண்ணன்.
 
 அந்தக் கடுகுப் புட்டியைக்
 கட்டிக் கொண்டு அழுதான்
 சலீம்.
 
 தாயின் மார்பகத்தோடு
 ஒட்டிக் கொண்ட
 குழந்தையைப் போல்
 அவனிடமிருந்து அதைப் பிரிக்க
 முடியவில்லை.
 
 பாவம். அன்புள்ள அப்பாவி.
 
 அவனைச் சிரமப்படுத்திப்
 பிரித்து, அவன் விரல்களில்
 ஒவ்வொன்றாய் விலக்கி, அதை
 அத்தனை பேரும் பறித்துக்
 கண்ணை முடிக்கொண்டு
 கடலில் வீசினார்கள்.
 
 சலீமோடு சேர்ந்து அலைகள்
 சிலவும் அழுதன.
 
 இசக்கி மட்டும் பிரமைப்
 பிடித்தவன் போல்
 உணர்ச்சியில்லாமல்
 உட்கார்ந்திருந்தான்.
 
 ஏ தமிழ்ரோஜா.
 தலை கவிழ்ந்திருக்கும் என்
 தங்கமே.
 என்னை மன்னித்துவிடு.
 ஆறுதலும் நம்பிக்கையும் தவிர
 எதையும் தர முடியாத
 ஏழையாகிவிட்டேன்.
 உடுத்துவதற்கு மாற்று
 ஆடையுமில்லை. உயிர்
 பிழைப்பதற்கு
 மாற்று வழியுமில்லை.
 என்ன கலக்கம். ஏனிந்தக்
 குழப்பம்.
 உன் முகத்தில் என்ன பயத்தின்
 முற்றுகை.
 மீண்டும் தண்ணீர் பயமா?
 
 இல்லை. மரணபயம்
 - அவள் லேசாய்ச்
 சிரித்தாள்.
 
 சாவின் புன்னகை
 இப்படித்தானிருக்குமோ?
 
 அவன் ஒற்றைவிரல் கொண்டு
 அவள் உதடு பொத்தினான்.
 
 பேதையாய்க்கூட இரு.
 கோழையாய் இருக்காதே.
 இயற்கை அளவற்ற
 கருணையுடையது.
 நம்மை உயிரோடு வரவேற்ற
 கடல் நம் பிணங்களைக்
 கரை சேர்க்காது.
 
 எனக்கும் அதுதான்
 சந்தேகம்.
 இங்கே இறந்தால் கரை
 சேர்வதற்கு நம் உடலே
 இருக்காது
 
 நம்பிக்கை இழக்காதே
 தமிழ்.
 நாளை நம்முடையதே.
 
 நாளை நம்முடையதென்றால்
 இன்று யாருடையதோ?
 
 அவளுக்குத் தலை சுற்றியது.
 மயக்கம் வந்தது.
 கொஞ்சம் தண்ணீர்
 கிடைக்குமா?
 கொஞ்சம் தண்...
 மிச்ச எழுத்துக்களை அவள்
 சைகையில்
 உச்சரித்துவிட்டு
 முர்ச்சையானாள்.
 
 தமிழ். தமிழ். -
 அவன் பதறினான்
 
 தமிழ். தமிழ். -
 அவன் கதறினான்.
 
 கலைவண்ணன் முதன் முதலாய்
 அச்சப்பட்டான்.
 
 எல்லோரும் ஓடி வந்தார்கள்
 - இசக்கியைத்தவிர.
 
 சலீம் தன் மேல்துண்டைக்
 கடல்நீரில் நனைத்துப்
 பிழிந்து நீட்டினான்.
 
 கலைவண்ணன் அவள் முகத்தில்
 அதை ஒற்றி ஒற்றி
 ஈரப்பசை காட்டினான்
 
 முர்ச்சை தெளிந்து அவள்
 முனகினாள்.
 
 தலைக்குமேலே நாரைகளின்
 மந்தை ஒன்று படபடவென்று
 சிறகடித்துப் போனது.
 அத்தனைபேரும் மொத்தமாய்
 அண்ணாந்து பார்த்தார்கள்.
 
 ஏ மனிதர்களே.
 சிறகுகொண்டு கடல்கடக்கத்
 தெரியாத நீங்கள்
 எங்களைவிட எப்படி
 உயர்ந்தவர்கள்?
 
 உப்புத் தண்ணீர் பருகி
 உயிர்வாழ முடியாத நீங்கள்
 மீன்களைவிட எப்படி
 உயர்ந்தவர்கள்.
 
 ஒருவார தாகம் பொறுக்க
 முடியாத நீங்கள்
 ஒட்டகத்தைவிட எப்படி
 உயர்ந்தவர்கள்.
 
 எங்களைக் கொல்லுவதற்கும்
 வெல்லுவதற்கும் ஆயுதம்
 கண்டுபிடித்தீர்கள்.
 அதனால் மட்டும்தானே நீங்கள்
 உயர்ந்தவர்கள்?
 இருந்துவிட்டுப் போங்கள்.
 
 கொஞ்சம் தண்ணீர்...
 கொஞ்சம் தண்ணீர்
 
 முர்ச்சை தெளிந்தும்
 தெளியாமலும்
 அவள் புலம்பிக் கிடந்தாள்.
 
 எங்கு போவது தண்ணீருக்கு?
 என்ன செய்வது தண்ணீருக்கு?
 
 கலைவண்ணனால் அப்போது
 கொடுக்க முடிந்தது
 தண்ணீரல்ல. தன்னை
 மட்டும்தான்.
 
 இசக்கி மட்டும் பிரமை
 பிடித்தவனாய்க் கடலையே
 வெறித்துப் பார்த்துக்
 கொண்டிருந்தான்.
 
 அந்தி வானத்தில் அஸதமனக்
 கோடுகள் விழத் தொடங்கிய
 வேளையில், படகின் விளிம்பில்
 உட்கார்ந்திருந்த பரதன்
 கடலிலும் வானத்திலும் தன்
 கண்களை வீசி, ஆபத்தில்
 உயிர் காக்கும் அடையாளம்
 தேடினான்.
 
 இருப்பது இறப்பது இந்த
 இரண்டுக்கும் இடையிலான
 வித்தியாசங்கள், அங்குலம்
 அங்குலமாக அழிந்துகொண்டே
 வருவதை அவன் உணர்ந்தான்.
 
 தற்செயலாய்த் தலை
 தாழ்த்தினான்.
 ஆ. அவை என்ன?
 
 தண்ணீர் மட்டத்துக்கு மேல்
 தலைதூக்கும் அந்தப்
 பிராணிகள் கடற்பாம்புகளா?
 
 சற்றே உற்றுப் பார்த்தான்.
 ஆமைகள். கடல்
 ஆமைகள். என்று
 கத்தினான்.
 
 எல்லோரும் அவன் குரல்
 கேட்டுக்
 கூடுவதற்குள் அவன் கடலில் குதித்தான்.
 
 வெயிலில் ஒதுங்கவும். படகின் வயிற்றில்
 படிந்திருக்கும் பாசிதின்னவும் படகை உரசிய
 அந்த ஆமைகளை ஒவ்வொன்றாய்த்
 தலைபற்றித் தளத்தில் வீசியெறிந்தான்..
 
 தப்பித்தவை போகத் தளத்தில் விழுந்தவை
 முன்று ஆமைகள். ஒவ்வொன்றும்
 ஆறு கிலோ எடை இருக்கும்.
 
 தலையும் காலும் வாலும் தவிர ஓட்டுக்கு
 வெளியே ஒன்றும் தெரியவில்லை.
 
 ஆகா. ஆகா. ஆமைகள்.
 
 நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போதுதான்
 படகில் பசிக்குரல் மறைந்து உயிர்க்குரல் கேட்டது.
 கடலில் கிடந்த பரதன் தாவிக்குதித்து
 மேலே வந்தான்.
 
 சமையல்கட்டு சென்றான்.
 
 கத்தியும் சட்டியும் கொண்டுவந்தான்.
 
 ஆமைகளை நெருங்கினான்.
 
 பார்த்து. கையைக் கடித்துவிடப்போகிறது
 ஆமை.
 
 அடப்போடா. ஆமைக்குப் பல்லில்லை
 என்பது எனக்குத் தெரியாதா?
 
 வெள்ளையாய்த் தெரிந்தது அடிவயிறு.
 
 அதன் இதயப்பகுதியில் கத்தி வைத்தான்.
 குத்தினான் - அழுத்தினான் - கீறினான் - கிழித்தான்.
 
 முதலில் கசிய ஆரம்பித்த கருஞ்சிவப்பு
 ரத்தம் குபுகுபுவெனக் கொட்டத் தொடங்கியது.
 
 ஆமையின் தலைதுடிப்பதை அவனால் தாங்க
 முடியவில்லை. அதை வெட்டி எறிந்தான்.
 
 அப்படியே தூக்கிப் பிடித்துக் கவிழ்த்து
 அதன் ரத்தத்தைச் சட்டியில் கொட்டினான்.
 
 அவ்வாறே மற்ற ஆமைகளையும் பிளந்து
 ரத்தமெடுக்க, நிரம்பிவிட்டது. பாதிச்சட்டி
 பரதன் உற்சாகத்தில் கத்தினான்.
 இப்போது இது ரத்தமல்ல. சிவப்பு தண்ணீர்
 குடியுங்கள் - எல்லோரும் குடியுங்கள்.
 
 அதுவரை இறந்துகிடந்த டம்ளர்களுக்கெல்லாம்
 உடனே உயிர் வந்தது.
 
 சட்டியில் விட்டு ஆளுக்கொரு டம்ளர்
 ஆமை ரத்தம் அவசரமாய் மொண்டான்.
 
 இந்தா பாண்டி. இது உனக்கு.
 இந்தா சலீம். இது உனக்கு.
 இதோ பேனாக்காரரே. இது உங்களுக்கு.
 
 தூரத்தில் பிரமை பிடித்துப் பேசாதிருந்தான்
 இசக்கி.
 
 இந்தா இசக்கி இது உனக்கு.
 
 அதுவரை திரும்பாதிருந்த இசக்கி திரும்பினான்.
 
 அவன் கண்ணிலிருந்து ஒரு துளிக் கண்ணீர்
 ஆமை ரத்தத்தில் விழுந்தது.
 
 என்னை மன்னித்து விடுங்கள்.
 இன்றுமுதல் நான் சாகும் வரைக்கும்
 அசைவம் தொடமாட்டேன். நான் கொன்ற
 சுண்டெலிக்கு ஆயுள் முழுதும் நான்
 செலுத்தும் அஞ்சலி அதுதான்.
 
 அசையவில்லை யாரும், அப்படியே
 நின்றார்கள்
 
 இசக்கி சைவமாகிவிட்டானா?
 
 வேங்கைக்கு வெற்றிலை மட்டும் போதுமா?
 
 இது என்ன புது அதிர்ச்சி.
 
 அவர்கள் எதிர்பாராத திசையிலிருந்து
 இன்னோர் அதிர்ச்சியும் வந்தது.
 
 எனக்கும் கொடுங்கள் ஒரு டம்ளர்
 ஆமை ரத்தம்.
 
 திகைத்து திரும்பினார்கள்.
 கேட்டவள் தமிழ்ரோஜா.
- 
				17
 
 இந்தப் பிரபஞ்சத்தில் எதுவும்
 நேரலாம். இன்று காண்பது
 நாளை மாறலாம்.
 
 மாற்றமே பரிணாமம்.
 மாறுதல் ஒன்றுதான் உலகில்
 மாறாதிருப்பது.
 
 இந்தக் கிரகத் தொகுதியும்
 கட்சி மாறலாம்.
 
 வியாழனை முட்டித் துளைத்த
 வால்நட்சத்திரத்தால் அங்கே
 தண்ணீரும் உயிர்களும்
 உற்பத்தியாகலாம்.
 
 என்றேனும் ஒரு நாள் -
 இந்தப் பூமி என்னும் கிரகம்
 இடிகொண்ட முட்டையாய்ச்
 சிதறுண்டு போக, இங்கிருந்து
 தப்பிக்க வசதிகொண்ட
 மனிதர்கள் வியாழன் கிரகத்தில்
 வீடு வாங்கலாம்.
 
 இதுவரைக்கும் பூமிக்கு வெயில்
 தந்த பழைய சூரியனைப்
 புறந்தள்ளிவிட்டு, இன்னொரு
 சூரியக் குடும்பத்துக்கு
 ஜீவராசிகள் இடம்
 பெயரலாம்.
 
 நிகழும் வரைக்கும்தான் ஒன்று
 அதிசயம். நிகழ்ந்த பிறகு அது
 சம்பவம்.
 
 தொப்பூழ்க்கொடி அறுத்தது
 முதல் அசைவக்
 கலாசாரத்திலேயே வளர்ந்த
 இசக்கி, அன்று முதல் தன்னைச்
 சைவன் என்று
 பிரகடனப்படுத்திக் கொண்டதும்
 - எறும்பு செத்து மிதக்கும்
 பாலைக்கூட அசைவமென்று
 ஒதுக்கிய தமிழ் ரோஜா,
 அன்று ஆமை ரத்தம் பருகக்
 கேட்டதும் பழகியவர்களுக்கு
 அதிர்ச்சியே தவிர
 பண்பாட்டுக்கு அதிர்ச்சி அல்ல.
 
 மனிதன் இயற்கையின் குழந்தை.
 அவனது உணவை, உடையை,
 உறையுளை ஏற்படுத்திக்
 கொடுப்பதும் இயற்கைதான்.
 
 மதுரையில் சட்டையில்லாத
 உழவனைப் பார்த்து, இனி
 சட்டை அணிவதில்லை என்று
 வடநாட்டு உழவன் சபதம்
 செய்தால், அது சரியான
 சிந்தனை என்று கருத
 முடியாது.
 
 அந்த வெயில் பூமியில்
 சட்டையில்லாமலிருப்பது ஓர்
 உழவனின் செளகரியம்.
 
 வடநாட்டுக் குளிரில் ஓர்
 உழவன் சட்டையும்
 தலைப்பாகையும்
 அணிந்தே ஆக வேண்டும்.. அது
 அவன் தேவை.
 
 எனவே, சட்டை அணிவது -
 அணியாதிருப்பது என்பதை
 வானிலை தீர்மானிக்கிறது.
 
 மனிதனின் ஆணைகள்,
 மீறுவதற்காகவே
 பிறப்பிக்கப்படுகின்றன.
 இயற்கையின் ஆணைகள்
 தேவைக்காகவே
 படைக்கப்படுகின்றன.
 
 ஆமைரத்தம் சைவமா
 அசைவமா என்று
 வாதாடுவதற்கான வாய்ப்பை,
 தமிழ்ரோஜாவின் தாகம்
 அவளுக்குத் தரவில்லை.
 
 அவளைப் பொறுத்தவரை
 அப்போது அவளுக்கு அது
 திடதிரவம்.
 
 குடித்தாள்.
 
 குடித்துவிட்டுப் பால்குடித்த
 குழந்தைபோல் இதழ்க்கடை
 துடைத்தாள்.
 
 அடுத்தொரு கேள்வியும் அவளே
 கேட்டாள்.
 
 அந்த ஆமைக்கறியைச்
 சமைக்க முடியுமா?
 
 மீனவர் நிமிர்ந்தனர்.
 
 அதைப் பச்சையாகவே
 சாப்பிடுவது என்று அவர்கள்
 நெஞ்சுக்குள் நிறைவேற்றிக்
 கொண்ட மெளனத் தீர்மானம்
 சற்றே ஒத்தி வைக்கப்பட்டது.
 
 இதைச் சமைக்கத்தான்
 வேண்டுமா?
 
 பச்சையாய் உண்டாலும்
 அடிவயிற்றில் எரியும் அக்கினியில்
 இது வெந்து போகாதா?
 
 நெருப்பு என்பது அந்த
 நிமிடத்தில் அவர்களுக்கு
 ஆடம்பரம்.
 
 அவர்களின் அந்த நேரத்து
 அகராதியில் சமைத்தல் என்ற
 சொல்லுக்கு நேரே,
 காலவிரயம் அல்லது
 படாடோ பம் என்று பொருள்
 போட்டிருந்தது.
 
 ஆனாலும், ஒரு சைவப்
 பெண்ணின் அசைவத்
 தேவைக்காக அவர்கள்
 சமைக்க ஆயத்தமானார்கள்.
 
 முன்று வருடங்கடந்து மழை
 பெய்த ஒரு திருநாளில், தன்
 பழைய கலப்பையைத் தேடுகிற
 ஓர் ஏழை விவசாயியைப்போல
 அவர்கள் திசைக்கொருவராய்ப்
 பறந்து தீப்பெட்டி
 தேடினார்கள்.
 
 ஒரு குடியானவன் வீட்டு
 உண்டியலின் கடைசிக்
 காசைப்போல அது ஏதோ
 ஓர் ஆழத்தில் அகப்பட்டது.
 
 அது சற்றே ஈரம்பூத்திருந்தது.
 
 உள்ளே- ரஷயப்
 படையெடுப்பில் தோற்றுத்
 திரும்பிய நெப்போலியனின்
 படைவீரர்களைப் போல
 எண்ணிக்கையில் குறைவாகவே
 இருந்தன தீக்குச்சிகள்.
 
 பற்றவைக்க முயன்றான்
 பாண்டி.
 
 முதலாம் தீக்குச்சி -
 உடைந்தது.
 
 இரண்டாம் தீக்குச்சி -
 பட்டையில் ஒரு பாதி கிழித்துத்
 தானும் தேய்ந்தது.
 
 முன்றாம் தீக்குச்சி - சற்றே
 பற்றிச் சட்டென்று அணைந்தது.
 
 தீக்குச்சி நாலாவது -
 பற்றியது. ஏமாற்றாமல்
 எரிந்தது.
 
 அடுப்பும் முகங்களும் ஒரே
 நேரத்தில் ஒளிகொண்டன.
 
 தண்ணீர் இல்லாததால் அதன்
 ரத்தம் ஊற்றப்பட்டு
 அவசரமாய்ச் சமைக்கப்பட்டது
 ஆமைக்கறி.
 
 தட்டேந்தி நிற்கவோ
 பங்கிட்டுக் கொள்ளவோ
 பொறுமையின்றி, ஆளுக்கொரு
 துண்டாய் அவர்கள் அவசரமாய்
 உண்ட பிறகுதான்
 தெரிந்தது... வெந்திருப்பது
 கறி அல்ல - அவர்களின்
 நாக்குகள் என்று.
 
 அவர்களின் உடம்பின் ஆழத்தில்
 வற்றி வண்டலாகிப் போன
 உயிர் ஒவ்வொரு சொட்டாய்
 ஊறத் தொடங்கியது.
 
 கரை.
 
 மீனவர் சங்கம் மிதந்தது
 சத்தத்தில்.
 
 காணவில்லை என் மகனை.
 கண்டுபிடிக்க மாட்டீர்களா?
 - அந்தக் கோடையிலும்
 நடுங்கியது ஒரு முதாட்டியின்
 குரல்.
 
 காணவில்லை என் கணவனை.
 செத்தாரா இருக்கிறாரா...
 செய்தி
 சொல்லமாட்டீர்களா? -
 இது ஒரு
 கைக்குழந்தைக்காரியின்
 கதறல்.
 
 பதறாதீர்கள், ஒன்றும்
 ஆகாது அவர்கள் உயிர்களுக்கு.
 இன்றைக்கே தேட ஏற்பாடு
 செய்வோம். எப்படியும்
 கிடைப்பார்கள் - ஒரு
 பிசிறில்லாத ஆண்குரல்
 பேசியது.
 
 அவனுக்கு மட்டும்
 ஏதாவதானால் நான்
 கடலாத்தா மடியில்
 விழுந்துதான் செத்துப்
 போவேன்.
 தரையில் செத்தால் எனக்குக்
 கொள்ளிவைக்கத்தான் வேறு
 பிள்ளை இல்லையே.
 
 பாவம். கிழவியின் பீளைக்
 கண்களில் ஏழைக்கண்ணீர்.
 
 கடல்.
 
 நேற்றுச் சொன்னேனே..
 அது நிஜமாகிவிட்டது தமிழ்.
 
 என்ன சொன்னீர்கள்?
 
 இயற்கை அளவற்ற
 கருணையுடையது என்றேன்.
 இயற்கை தன் கருணையை ஆமை
 வடிவில் அனுப்பி வைத்ததா
 இல்லையா?
 
 ஒரு பட்டமரத்தில்
 புறப்படும் முதல் தளிரைப்
 போல எனக்குள் புதிய
 நம்பிக்கை பூத்திருக்கிறது.
 
 பூமியைப் பற்றிக்கொள்ளும்
 வேர்களைப்போல நீ
 நம்பிக்கையைப் பற்றிக்கொள்.
 ஒரு பறவை உன் தலைக்கு
 மேலே பறப்பதை உன்னால்
 தடுக்க முடியாது. ஆனால்,
 அது உன் தலையில்
 கூடுகட்டாமல் உன்னால் தடுக்க
 முடியும்.
 
 அவள் பாதி உதட்டில்
 புன்னகைத்தாள்.
 அதில் தேவையான சதவிகிதம்
 சிருங்காரம் இருந்தது.
 
 அதுவரைக்கும் பசியில் உலர்ந்து
 கிடந்த காதல், சின்னதாய்ச்
 சிலிர்த்துச் சிறகு விரித்தது.
 
 அவன் நெருங்கி வந்தான்.
 பட்டாம்பூச்சி பிடிக்கும்
 சிறுவனைப் போல அசையாமல்
 அவளையே பார்த்தான்.
 
 சட்டென்று குனிந்தான்.
 அவள் அசைவ உதடுகளில்
 அவசரமாய் முத்தமிட்டான்.
 
 உதடுகளின் ஓப்பந்தம் சில
 நிமிடங்கள் நீடித்தது.
 கடைசியில் பார்த்தால்
 கரித்தது முத்தம்.
 
 அவனுக்குத் தெரியாமல் அவளும்
 அவளுக்குத் தெரியாமல் அவனும்
 அழுத துளிகள் பரஸபரம்
 உதடுகளில்
 பரிமாறப்பட்டிருந்தன.
 
 ஆனந்தக் கண்ணீர் மட்டும்
 இனிக்குமா என்ன?
 
 மேகமற்ற ராத்திரி.
 
 மெல்லிய பிறை. ஒற்றை
 உதட்டால் சிரித்தது மேற்கு
 வானத்தில்.
 
 கலங்காதிரு பிறையே.
 உனக்குள்தான்
 பூரணச்சந்திரன்
 புதைந்திருக்கிறான்
 - மகாகவி இக்பாலின் இந்தக்
 கவிதை சலீமுக்குத் தெரியாது.
 
 தெரிந்திருந்தால் பிறையை
 அவன் முழுமையாய்
 ரசித்திருப்பான்.
 
 வயிற்றுக்குள் ஆமையை
 நிரப்பிக்கொண்ட ஆனந்தக்
 களிப்பில் - ஒரு மயக்க
 போதை போன்ற பாதி
 உறக்கத்தில் தளத்தில் அவர்கள்
 சுதந்திரமாய்ச் சிதறி,
 உருண்டும் நெளிந்தும் புரண்டும்
 கொண்டிருந்தபொழுதில்
 தூரத்தில் தெரிந்தது ஓர் ஒளி
 ஊர்வலம்.
 
 தன் உள்ளங்கைகளால் கண்களை
 உரக்கத் தேய்த்துக்கொண்டு
 மீண்டும் மீண்டும் பார்த்தான்
 பாண்டி.
 
 தன்னை மறந்து கத்தினான்.
 கப்பல். கப்பல்.
 
 தீப்பிடித்த வீடாய் அந்த
 ஒரே சத்தத்தில்
 விழித்துக்கொண்டது படகு.
 
 கப்பல்தான். அது
 கப்பல்தான். மென்மையாய்
 மிதந்துபோகும் ஒரு
 வெளிச்சத்தீவு.
 
 அவர்கள் காத்துக்கிடந்த
 நம்பிக்கை அதோ
 கண்படுதூரத்தில்.
 
 அதோ. அவர்களை உரசாமல்
 போகிறது அவர்களின்
 ஒளிமயமான எதிர்காலம்.
 
 எப்படி அதை எட்டுவது?
 
 ஒன்று - கப்பலை, அவர்கள்
 சென்றுசேர வேண்டும்.
 அல்லது -
 கப்பல் அவர்களிடம்
 வரவேண்டும்.
 
 கப்பலை அவர்கள் சென்று
 அடைய முடியாது.
 
 அவர்களின் இருப்பையோ
 கப்பல் அறியாது.
 
 அது கெட்டிச்சாயம்
 போட்டுக்கொண்ட ராத்திரி.
 
 அவர்களின் இருப்பை
 அவர்கள்தான் அறிவிக்க
 வேண்டும்.
 
 அவர்களாய் அறிவிப்பதற்கு
 இரண்டே வழிகள்.
 
 ஒன்று - ஒலி.
 இன்னொன்று - ஒளி.
 
 கப்பல் செல்வதோ ஒலி
 எட்டாத தூரம்.
 அப்படியே உயிரைத் திரட்டி
 ஒலி செய்தாலும் கப்பலின்
 எந்திர ஓசைகிழித்து அவர்களை
 எட்டுமோ? எட்டாதோ?
 
 அடுத்துள்ள ஒரே வழி - ஒளி.
 
 வெளிச்சம் காட்டுவோம்-
 அவர்கள் வேகமான,
 விவேகமான முடிவுக்கு
 வந்தார்கள்.
 
 படகின் மின்கலம் சில
 நாட்களுக்கு முன்பே
 செத்துவிட்டது.
 
 ஒரு தீப்பந்தம்
 தயாரிக்கலாம் அவசரத்
 தீர்மானம் நிறைவேறியது.
 
 அடுத்த விநாடியே
 பாய்மரக்கழி ஒன்று
 உருவப்பட்டது.
 
 துணி. துணி.
 
 பாய்மரம் பிரிக்கப்பட்டது.
 
 துண்டுகள் - துணிகள் -
 லுங்கிகள்
 கழியில் சுற்றப்பட்டன.
 
 சற்று நேரத்தில் கழிக்குத்
 தலை முளைத்தது.
 
 சரி... சரி.
 கொளுத்து.
 
 இரு... இரு. டீசலில்
 நனை.
 
 நனைத்தார்கள்.
 
 கொளுத்து.
 
 நிறுத்து.
 
 ஏன் தடுக்கிறாய்?
 
 ஒருவேளை பந்தம்
 பற்றாமல் போனால்..?
 
 முதலில் அடுப்பைப்
 பற்றவைப்போம். அதிலிருந்து
 நெருப்பெடுப்போம்.
 
 அதுதான் சரி.
 
 அவசரமாய் அடுப்படியில்
 கூடினார்கள்.
 
 தீப்பெட்டி திறந்தார்கள்.
 உள்ளே-
 இரண்டே குச்சிகள் இருந்தன.
 
 ஒருவர் முகத்தை ஒருவர்
 பார்த்துக் கொண்டார்கள்.
 
 சுற்றி அடிக்கும் காற்று
 சுழற்றியது படகை.
 
 தீக்குச்சிகளின் இரண்டு
 நுனிகளிலும் அவர்களின்
 எதிர்காலம்
 திரண்டிருந்தது
 
 ஏ தீக்குச்சிகளே. எங்கள் எதிர்காலத்தின்
 மந்திரக்கோல்களே. கைகூப்புகிறோம்
 உங்களை, கைவிட்டு விடாதீர்கள்.
 
 நெருப்பை ஒரு சின்னக்குச்சியின் உச்சியில்
 சேமித்து வைத்தவனே. உனக்கு எங்கள்
 நன்றி.
 
 இந்த நெருப்பை அடைவதற்கு எமக்கு
 முன்னிருந்த மனிதஜாதி என்னென்ன
 பாடுபட்டிருக்கும்?
 
 ஒரு முங்கில்காடு பற்றுகிறவரைக்கும்
 நெருப்புக்குக் காத்திருந்த
 ஆதிமனிதர்களைப் போல் -சிக்கிமுக்கிக்
 கல்லுக்குள்ளும் தீக்கடைகோலுக்குள்ளும்
 நெருப்பைப் பிரசிவிக்கப் பாடுபட்ட
 மனிதர்களைப் போல் - உரசியும் - தேய்த்தும்
 -கடைந்தும் - குடைந்தும் தீயைத்தேடி
 அடைந்த மனிதர்களைப்போல் - இதோ
 நாங்களும் எங்கள் உயிரைக் கையில்
 பிடித்துக் கொண்டு, எங்கள் ஜீவநெருப்பின்
 ஜனனத்துக்குக் காத்திருக்கிறோம்.
 
 தீக்குச்சியே பற்றிக்கொள்.
 காற்றே அணைத்துவிடாதே.
 தீப்பந்தமே எரி.
 கப்பலே நில்.
 
 பாண்டி முதல் குச்சியை எடுத்தான்,
 அவனுக்குக் கை நடுங்கியது.
 எல்லோரும் வட்டமாய் நின்று காற்றை
 மறைத்து வீடு கட்டினார்கள்.
 
 கப்பல் கடந்துவிடப்போகிறது..
 உரசு பாண்டி. உரசு.
 
 மென்மையாய் உரசினான்.
 
 அது பற்றவில்லை.
 
 சற்றே அழுத்தினான், ஒரு பாதி மருந்து
 உராய்ந்து தேய்ந்தது,
 
 மறுபக்கம் உரசினான்,
 
 அவ்வளவுதான், அது சிரச்சேதமானது.
 எல்லோரும் பதறினார்கள்.
 இன்னும் ஒரே ஒரு குச்சி..
 அவர்களின் உயிர்க்குச்சி.
 
 ஒதுங்கு. என்னிடம் கொடு
 தீப்பெட்டியைப் பரதன் வாங்கினான்.
 
 அம்பின் நுனியில் மனம் குவிக்கும் ஒரு
 வில்வீரனைப்போல முழு கவனத்தோடு
 முனைந்தான்.
 
 தன் உள்ளங்கை உஷணத்தைப்
 பட்டைக்கும் தீக்குச்சிக்கும் பரிமாறித்
 தீப்பெட்டியை இடக்கையில் இறுக்கிப் பற்றி,
 வலக்கையில் தீக்குச்சி ஏந்தித் தன் ஒரு
 விரலால் அதற்குப் பக்கபலம் சேர்த்துத்
 தன் உள்ளத்தையெல்லாம் தீக்குச்சியில்
 வைத்து உரசியபோது முன்றாவது உரசலில்
 பொசுக்கென்று பூத்தது நெருப்பு.
 
 ஆகா. உயிரின் ஒளிவடிவம்.
 
 அந்தப் பரவசத்தோடு அதை அடுப்புத்
 திரியில் பற்றவைக்கப் போன அந்த
 விநாடியின் இரண்டாம் பாகத்தில், சந்துவழி
 வந்த சுழற்காற்று அந்த உயிரின் சுடரைப்
 பொசுக்கென்று அணைத்துவிட்டுப்
 போய்விட்டது.
 
 ஆ. அய்யோ. அய்யய்யோ.
 
 எல்லோரும் பரபரவென்று ஒடிவந்து
 விளிம்பில் நின்று பார்த்தபோது கப்பல்
 கடந்துவிட்டது.
 
 அவர்கள் நம்பிக்கையின் இறுதி
 ஊர்வலமாய் அது தூரத்தில்
 மறைந்துகொண்டிருந்தது.
- 
				18
 
 ஏ பகலே.
 நாங்கள் என்ன தவறு
 செய்தோம்?
 பூமிக்கே வெளிச்சம்
 கொண்டுவரும் நீ,
 எங்களை மட்டும்
 ஏன் விட்டுவிட்டு விடிகிறாய்?
 
 எங்கள் ஒவ்வொரு
 நம்பிக்கையையும் நீரில்
 விழுந்த நிலவின் பிம்பமாய்க்
 காட்டுவதுபோல் காட்டி
 ஏன் கலைத்துவிடுகிறாய்?
 
 ஏ கடலே.
 கருணை காட்டி எங்களைக்
 கரைசேர்...
 அல்லது உன் வயிற்றுக்குள்
 எங்களை உள்ளிழுத்துக்கொள்.
 எங்களுக்கு
 ஏதாவது ஒன்றுதான் வேண்டும்-
 வாழ்வு அல்லது சாவு.
 
 ஆனால் ஒன்று -
 இரண்டில் எதுவென்றாலும்,
 எமக்கு முழுமையாய் வேண்டும்.
 
 ஒன்று - பூரண வாழ்வு
 அல்லது பூரணச் சாவு.
 
 வாழ்வென்றால் -
 எதிலும் மிச்சம் வைக்காத
 முழுவாழ்வு.
 
 சாவென்றால் -
 தவணை முறையில் இல்லாத
 முழுச்சாவு.
 
 கொஞ்சம் வாழ்வு -
 கொஞ்சம் சாவு...
 இந்த விளையாட்டெல்லாம்
 வேண்டாம்.
 
 மனித வாழ்வின் பெருந்துன்பம்
 எது தெரியுமா?
 
 மரணத்தைவிட வாழ்க்கை
 பயமானது என்று தெரிந்த
 பின்பும், வாழ்க்கையோடு
 ஒட்டிக்கொண்டிருப்பதுதான்.
 
 உடம்பு மெல்ல மெல்ல
 உலர்ந்து கொண்டிருக்கிறது.
 உயிர் மட்டும் எந்த வழியாக
 வெளியேறுவது என்ற
 தீர்மானத்துக்குப் பக்கத்தில்
 திணறிக் கொண்டிருக்கிறது.
 
 மிக ஆர்வமாய் - ஆனால்,
 தீர்க்கமாய்க் கேட்டாள்
 தமிழ்ரோஜா.
 பேசாமல்
 இறந்துவிடலாமா?
 
 முகமெங்கும் முள்முள்ளாய்ப்
 பூத்திருந்த தாடியைத்
 தடவிக்கொண்டே
 ஜீவன் இல்லாமல் சிரித்தான்
 கலைவண்ணன்.
 
 இதோ பார். தட்டுப்பட்ட
 ஒரே ஒரு கப்பலையும்
 தவறவிட்டதற்குத்தானே உன்
 கண்கள் மரணக்கண்ணீர்
 வடிக்கின்றன? ஓர்
 அஸதமனத்துக்காக அழுது,
 பூமிக்கு இனிமேல் பகலே
 இல்லை என்று புலம்பினால்
 எப்படி?
 
 நாம் வாழ வேண்டுமென்று
 நம்மைப் போலவே
 இயற்கையும் ஆசைப்படுகிறது.
 அந்த ஆசையின்
 அடையாளங்களே ஆமையும் -
 கப்பலும். நீ இடையில்
 அடைந்த தைரியத்தை
 இழந்துவிடாதே.
 சந்தோஷத்தின் தேதி குறிப்பது
 மட்டும்தான் மனிதகுலத்தின்
 வேலை. சாவின் தேதி
 குறிப்பது காலத்தின்
 வேலை...
 
 சாவதற்குக்கூட எனக்கு
 உரிமையில்லையா?
 
 சாவது என்பது உன்
 உரிமையன்று. அது நியதி. நீ
 உயிரோடு பூமியில் வந்து
 விழுந்ததை எப்படி நீ முடிவு
 செய்யவில்லையோ, அப்படியே
 - இந்த உடம்பைப் பூமியில்
 போட்டுவிட்டுப் போவதையும்
 நீ முடிவு செய்ய முடியாது.
 கொஞ்சம் போராடு...
 
 போராடும் தெம்பு
 போய்விட்டது. என் வாழ்க்கை
 முடிந்துவிட்டது...
 
 இல்லை - இனிமேல்தான்
 உன் வாழ்க்கை
 தொடங்கப்போகிறது.
 நிச்சயம் நாம்
 கரைமீள்வோம். பிறகு பார்.
 மரணத்தின் வாசல்வரை சென்று
 மீண்டவர்களுக்கே வாழ்வின்
 பெருமை விளங்கும்.
 
 நீ வாழ்க்கையைத்
 துளித்துளியாய் ரசிப்பாய்.
 வாழ்வின் ஒவ்வொரு கணமும்
 உனக்குப் பெருமை
 உடையதாகும். ஒவ்வொரு
 புல்லிலும் பூவிலும் தீராத
 வாழ்க்கை தேங்கி நிற்பது
 தெரியும். தான் உதிரும் முதல்
 நிமிஷம் வரைக்கும் - ஏன்...
 உதிர்ந்து பூமியில்
 விழும்வரைக்கும், இந்தப்
 பிரபஞ்சத்தின் சந்தோஷத்தை
 மட்டுமே காற்றோடு
 பேசிக்கொண்டிருக்கும் ஒரு
 தென்னங்கீற்றைப் போல -
 இனி இன்பமன்றி உனக்கு வேறு
 இராது.
 
 முதன்முதலாக மலேசியா
 வந்திறங்கிய ஓர் அரபி,
 மழைத்துளிகளை நேசிப்பது
 போல்- நீ நிமிஷங்களை
 நேசிப்பாய். டிசம்பர்
 மாதத்தின் இந்திய வெயிலை
 நேசிக்கும் ஓர் எஸகிமோவைப்
 போல் - நீ வாழ்க்கையை
 ரசிப்பாய்.
 
 ஒரு சிறைக்கைதிக்குத்தான்
 தெரியும் - சுதந்திரத்தின்
 பெருமை. நம்மைப் போன்ற
 அலைக்கைதிகளுக்குத்தான்
 தெரியும் - பூமியின் அருமை.
 பொறு தமிழ். பொறு...
 இரவில் நம்மைக் கடந்த
 கப்பல், ஒரு பகலில்
 கடவாதா?
 
 அவளை அள்ளித் தழுவி ஆதரவு
 செய்தான். காமமில்லாமல்
 அவள் கழுத்தில் முத்தமிட்டான்.
 அவள், அவன் மடியில் முகம்
 புதைத்துப் பாதுகாப்பாய்
 அழுதாள்.
 
 ஓடிவாருங்கள்...
 எல்லாரும் ஓடிவாருங்கள்.
 பரதன் தலை சுற்றி
 விழுந்துவிட்டான். பயமாக
 இருக்கிறது. அவன் கண்ணில்
 கருப்புமணிகள் காணவில்லை.
 வெள்ளைவிழி தெரிகிறது.
 கண்கள் செருகிவிட்டன.
 ஓடிவாருங்கள்... எல்லாரும்
 ஓடிவாருங்கள்...
 - உடம்பும் சொல்லும்
 நடுங்க நடுங்கத் துடித்துக்
 கத்தினான் இசக்கி.
 
 எல்லோரும் சோர்வு மறந்து
 அவனைச் சூழ்ந்தார்கள்.
 
 அசைவற்ற கட்டையாய்க்
 கிடந்தவன் முகத்தில், கடல்நீர்
 பிழியவும் முனகினான்.
 
 பிறகு சற்றே கண்விழித்தவன் -
 பிசாசு, பிசாசு. படகு
 பத்திரம். என்று கூறியது
 கூறினான்.
 
 உண்மை சொல் பரதன்,
 என்ன கண்டாய்? என்ன
 உளறுகிறாய்?
 - கலைவண்ணன் அவனை
 உலுக்கினான்.
 
 அவன் தன் முகத்தைக்
 கைகளால் முடிக்கொண்டே
 குனிந்து பேசினான்.
 
 நேற்றிரவு நீங்களெல்லாம்
 தூங்கிவிட்டீர்கள். நான்
 தூங்கவில்லை.
 நள்ளிரவுக்குமேல் யாரோ
 படகை உள்ளே பிடித்து
 இழுப்பதாய்த் தோன்றியது.
 படகு விட்டுவிட்டு
 இழுக்கப்பட்டது.
 படகு முழுக்க இழுக்கப்பட்டு
 நாம் முழ்கிப் போவோம்
 என்றே நினைத்தேன்.
 சந்தேகமே இல்லை
 - அது கடல் பிசாசுதான்.
 கரையில் கதை கதையாய்ச்
 சொல்வார்கள்.
 முத்தாண்டிக் கிழவனும் அவன்
 பேரனும் அப்படித்தான் இறந்து
 போனார்கள். இரவெல்லாம்
 பயத்தில் என்னால் பேச
 முடியவில்லை. கடல் பிசாசு
 நம்மைக் கரையேற விடாது
 பேனாக்காரரே.
 
 அவன் மெல்ல நடுங்கினான்.
 குலுங்கி அழுதது குன்று.
 கண்ணீர் அருவிகள் சிதறின.
 
 கலைவண்ணன், அவன் கைகளை
 வாரித் தன் தோள்களில்
 இட்டுக்கொண்டான்.
 
 ஒவ்வொரு விரலாய்ச்
 சொடுக்கெடுத்துக்கொண்டே
 சொன்னான்.
 
 பயம் வேண்டாம் பரதன்.
 இப்படிக் கடல் பிசாசு கண்டு
 கலங்கும் பயம் உங்களுக்குமட்டுமல்ல, உலகம்
 முழுவதுமிருக்கிறது. சற்றே
 செவி கொடுங்கள், ஒரு
 சரித்திரம் சொல்கிறேன்.
 அட்லாண்டிக் சமுத்திரத்தில்
 பெர்முடாஸ முக்கோணம்
 என்றொரு மர்ம முக்கோணம்
 இருக்கிறது. அதற்குள் நுழைந்த
 கப்பல்கள் காணாமல்
 போயின. காணாமல் போன
 கப்பல்களைத் தேடப்போன
 விமானங்கள், அந்த
 எல்லைக்குள் நுழைந்தவுடன்
 வெடித்துச் சிதறின.
 அறுபத்திரண்டு கப்பல்களும்
 பதினெட்டு விமானங்களும்
 இரண்டாயிரம் மனிதர்களும்
 அதற்குள் தொலைந்து
 போனதாய்ச் சொன்னார்கள்.
 
 தப்பிப் பிழைத்த ஒரு விமானி
 சொன்னார்.
 விமானத்தை ஏதோ ஒரு
 சக்தி இழுத்தது. விமானமே
 வேலைநிறுத்தம் செய்தது.
 சற்று நேரத்தில்
 வெடித்துவிட்டது...
 
 பெர்முடாஸ முக்கோணத்துக்கு
 மேலே பல மைல்
 தூரத்துக்குப் பரவியிருக்கும்
 காந்த சக்திதான் அதற்குக்
 காரணம் என்ற ஒரு கற்பனை
 முடிவுக்கு வந்தவர்கள்,
 அதற்குள் பிளாஸடிக்
 படகுகளைச் செலுத்தினார்கள்.
 பிளாஸடிக் படகுகளையும்
 பெர்முடாஸ சிதறுதேங்காய்
 போட்டது. பிறகுதான்
 பிசாசுகள் வாழும்
 பெர்முடாஸ என்று உலகம்
 பேசத் தொடங்கியது.
 
 ஆனால், ரஷயர்கள் மட்டும்
 அதை நம்பவில்லை. 1982-ல்
 விட்யாஸ என்ற கப்பலில்
 புறப்பட்டு, முக்கோண
 எல்லைக்குச் சற்றே தூரத்தில்
 நிறுத்தித் துப்பறிந்தார்கள்.
 கொஞ்சம் முன்னேறவும்,
 கப்பலில் இருந்தவர்களுக்குக்
 கை-கால் விளங்கவில்லை.
 புயலின் சின்னம்
 எதுவுமில்லாமலே, புயல்
 வீசுவதாய்க் கருவி காட்டியது.
 அதன்பிறகுதான் உண்மை
 அறியப்பட்டது.
 
 பெர்முடாஸில் ராட்சச
 நீர்ச்சுழிகள் உண்டாகி,
 நிரந்தரமாய்ச் சுழல்கின்றன.
 அதன்மேல் அசுரச் சூறாவளி
 ஒன்று அமைதியாய்
 வீசிக்கொண்டிருக்கிறது. அதுவே
 கப்பல்களும் விமானங்களும்
 கவிழக் காரணம். இந்த
 விஞ்ஞான நெருப்பு
 வீசப்பட்டவுடன், அதுவரை
 நம்பப்பட்டு வந்த பிசாசு
 இறந்துவிட்டது.
 
 அதைப்போலத்தான் இதுவும்.
 கடல்நீரின் ஏற்றவற்றத்தில்
 படகு அமிழலாம்.
 எழும்பலாம்.
 
 அது பிசாசு அல்ல பரதன்.
 பேசாமலிரு.
 மனப்பேய்களையும்
 மனிதப்பேய்களையும் தவிர,
 மனிதப் பிரபஞ்சத்தில் வேறு
 பேய்கள் இல்லை. எழுந்திரு
 பரதன். எழுந்திரு.
 
 தூங்குமுஞ்சி மரத்தின் இலைகள்
 அதிகாலையில் மெல்ல மெல்ல
 விரிவதுபோல், பரதன் மெல்ல
 மெல்லப் பயம் தெளிந்தான்.
 அவனுக்கு முன்னால் அவன்
 நம்பிக்கை எழுந்து கொண்டது.
 
 இந்தக் காதுமடல்
 இருக்கிறதே. அது உடம்பின்
 ஓர் உணர்ச்சிமயமான
 பிரதேசம். மெல்லிய
 குருத்தெலும்புகளாலான
 மென்மையான பாகம்.
 
 அந்தக் காலத்தில் பல
 ஜமீன்தார்களுக்குக்
 காதுமடல்களை யாராவது
 வருடிக்கொடுத்தால்தான்
 தூக்கம் வருமாம்.
 
 பாலியல் பொழுதுகளிலும்
 அதற்கொரு மன்மதப் பங்கு
 உண்டு.
 
 இமைகள் என்னும் முடி
 கண்களுக்குண்டு.
 இதழ்கள் என்னும் முடி
 வாய்க்குண்டு.
 
 முக்கையும்கூடக் கைகளின்
 உதவியின்றியே முடிக்கொள்ள
 முடியும்.
 உடம்பின் பிற வாசல்களும்
 அப்படித்தான். ஆனால், இந்த
 உடம்பில் காதுகளுக்கு
 மட்டும்தான் கதவுகளில்லை.
 
 காதுகளை மட்டும்தான் முயற்சி
 இல்லாமல் முட முடியாது.
 
 கண்களையும் வாயையும்
 காதுகளையும் தனித்தனியே
 பொத்திக் கொண்டிருக்கும்
 குரங்குச் சிலைகள் முன்று
 தேவையில்லை.
 கண்களை இமைகளாலும் வாயை
 உதடுகளாலும் சுயமாக
 முடிக்கொண்டு, காதுகளை
 மட்டும் கைகளால்
 பொத்திக்கொள்ளும் ஒரே ஒரு
 குரங்குச் சிலை போதும்.
 
 தொழிலாளிகளுக்குக் காதுமடல்
 என்பது சேமிப்பு வங்கி.
 
 பீடி, பென்சில், காது
 குடையும் குச்சி - இவற்றைக்
 காதுமடல்களில்
 வைத்துக்கொள்வது அவர்களுக்கு
 வசதி.
 
 இசக்கியின் காதுமடலில்
 தற்செயலாய்ப் பார்வை
 ஓட்டிய சலீம், அண்ணே.
 அது என்ன? என்று
 ஆச்சரியம் காட்டினான்.
 
 அதில் ஒரே ஒரு குச்சி -
 காது குடைய வைத்திருந்த தீக்குச்சி
 - காணப்பட்டது.
 
 எப்போதோ எடுத்து வைத்த
 அந்தத் தீக்குச்சியும் அதன்
 நுனியில் மருந்திருப்பதும்
 அவனுக்கு மறந்து
 போயிருந்தது.
 
 அதைப் பாய்ந்துசென்று
 பறித்துப் பரவசத்தில்
 கூத்தாடினான் சலீம்.
 தீக்குச்சி. தீக்குச்சி.
 என்று கத்தினான்.
 
 வேர்வைச் சொட்டுகளில்
 நனைந்திருந்த அந்தத்
 தீக்குச்சியை அந்திவெயிலில்
 காயவைத்தார்கள்.
 அதில் மட்டும் தீப்பந்தம்
 பற்றிக்கொண்டால் ஒரு தீர்வு
 கிடைக்கும் என்று
 நம்பினார்கள்.
 
 ஒரு தாய் தன் குழந்தைக்கு
 மைதீட்டும் கவனத்தோடும்,
 ஒரு காதலன் தன் காதலிக்கு
 முதல் கடிதம் எழுதும்
 ஆர்வத்தோடும் அவர்கள்
 அதைப் பத்திரமாகப்
 பற்றவைக்க, பற்றிக்கொண்டது
 தீப்பந்தம்.
 
 ஆகா. ஆகா.
 இது நம்பிக்கைச் சுடர்.
 வாழ்வின் ஜுவாலை.
 
 இதை அணைய விடக்கூடாது.
 இதை அணையவிட்டால், நம்
 உயிர்த்தீயை அணையவிட்டோ ம்
 என்று அர்த்தம்.
 
 நெருப்பு ஓர் அபூர்வமாகவும்
 அதிசயமாகவும் இருந்த
 ஆதிகாலத்தில், பழைய
 எகிப்திலும் கிரேக்கத்திலும்
 ரோமிலும் ஊருக்கு மத்தியில்
 ஒரே ஓர் இடத்தில்,
 எப்போதும் நெருப்பு
 எரிந்து கொண்டேயிருக்குமாம்.
 எவர் தேவைக்கும் எடுத்துச்
 செல்லலாமாம். அவர்கள்
 அதை அணையவிட்டதில்லையாம்.
 
 அப்படித்தான் இதுவும் -
 பொதுநெருப்பு.
 அணையாமல் காப்போம்.
 அனைவரும் காப்போம்.
 
 இரவு...
 வானமங்கை தன் அடர்த்தியான
 கூந்தலைப் பூமியில்
 அவிழ்த்துவிட்டாள்.
 நட்சத்திரங்களைக்
 காணவில்லை.
 
 ஆனால், அவர்கள்
 நம்பிக்கையைப் போலவே,
 பிறையும் சில மில்லிமீட்டர்
 வளர்ந்திருந்தது.
 
 அங்கங்கே கனத்த மேகங்கள்
 வானத்தை மறைத்திருந்தன.
 
 ஏ காலமே. எமக்குக்
 கருணை காட்டு. நேற்று
 எங்கள் கையில்
 தீப்பந்தமில்லை.
 எங்கள் பாதையில் ஒரு கப்பல்
 கடக்கவிட்டாய். இன்று எங்கள் கையில்
 தீப்பந்தமிருக்கிறது, தயவுசெய்து இன்னொரு
 கப்பலைக் கடக்கவிடு.
 
 இரவு முழுவதும் தீப்பந்தத்தை
 ஒருவரையெருவர் மாற்றி மாற்றி உயர்த்திப்
 பிடிப்பதாய் முடிவானது.
 
 பாண்டியின் கையிலிருந்து பரதனுக்கும்,
 பரதன் கையிலிருந்து இசக்கிக்கும் வந்த
 தீப்பந்தம் நள்ளிரவுக்குப் பிறகு சலீம் கைக்கு
 இடம் பெயர்ந்தது.
 
 அவன் உறக்கத்தை உதறிவிட்டுத்
 தீப்பந்தத்தை உயர்த்திப் பிடித்தான்,
 மற்றவர்கள் உறங்கிவிட்டார்கள்.
 
 நள்ளிரவு கடந்தபோது,
 அந்த அதிசயம் நிகழ்ந்தது.
 
 ஒரு கஞ்சனின் பையிலிருந்து அவனுக்குத்
 தெரியாமல் விழுந்துவிட்ட வெள்ளிக்
 காசைப்போல, மேகத்திலிருந்து அவிழ்ந்து
 விழுந்தது ஒரு துளி.
 
 பிறகு, ஒன்றிரண்டு முன்றென்று துளிகளின்
 எண்ணிக்கை தொடர்ந்தது.
 
 மழை. மழை.
 என்று கத்தினான் சலீம்.
 
 எல்லோரும் அலறியடித்து எழுந்தோடி
 வரவும் வானம் கிழிந்து கொண்டது
 கொட்டோ கொட்டேன்று கொட்டத்
 தொடங்கியது.
 
 ஆனந்தம் - அதிர்ச்சி - பரவசம் -
 பதற்றம்.... அவர்களுக்கு ஒன்றுமே
 தோன்றவில்லை.
 
 படபடவென்று ஆளுக்கொரு பாத்திரம்
 எடுத்தார்கள், பிடித்தார்கள்.
 
 பீப்பாய் கொண்டுவந்து தளத்தில் வைத்தார்கள்
 மழை. மழை.
 விட்டுவிடக்கூடாது இந்த மழையை
 எடுங்கள் தார்ப்பாயை.
 நான்கு முனையை நான்கு பேர் ஏந்துங்கள்
 சற்றே தார்ப்பாயைத் தளரவிட்டுக்
 குழி செய்யுங்கள்,
 தார்ப்பாயில் நிரம்பட்டும் தண்ணீர்.
 
 அப்படியே செய்தார்கள்,
 அதுவும் வழிந்தது.
 
 ஒதுங்காதே தமிழ்.
 வா, வெளியே வா.
 கொட்டும் மழையில் முழுக்க முழுக்க
 நனைந்துவிடு.
 உன் ஆடைகளை நனைத்துத் தண்ணீரைச்
 சேமி, பிறகு பிழிந்து கொள்ளலாம்,
 
 அவளும் அப்படியே செய்தாள்.
 
 அவர்கள் குதித்தார்கள் குளித்தார்கள்
 கைதட்டினார்கள், கத்தினார்கள்.
 
 மழை நின்றபோது, ஏறத்தாழ அவர்களின்
 எல்லாப் பாத்திரங்களும் நிரம்பியிருந்தன.
 
 ஆனால் அவசரத்தில் சலீம் ஓர் ஓரத்தில்
 சாய்ந்து நிறுத்திய தீப்பந்தம் மட்டும் மழையில்
 அணைந்து கிடந்தது.
- 
				19
 
 அழுவதா? ஆனந்தப்படுவதா?
 
 கைவசம் இருந்த
 கடைசிநெருப்பு அணைந்து
 போனதற்காக அழுவதா?
 
 அவர்களின் உயிரை ஊறவைக்கும்
 தண்ணீரால் பாத்திரங்கள்
 நிறைந்து வழிவது பார்த்து
 ஆனந்தப்படுவதா?
 
 ஒன்றை இழந்துதான்
 இன்னொன்றா?
 இயற்கை இட்ட சட்டம்
 இதுதானா?
 
 அனுபவம் வேண்டுமா -
 இளமையை இழ...
 ஆயுள் வேண்டுமா - போகம்
 இழ...
 
 கவிதை வேண்டுமா-உன்னை
 இழ...
 காதல் வேண்டுமா -
 இதயத்தை இழ...
 
 வளர்ச்சி வேண்டுமா -
 தூக்கத்தை இழ...
 வரவு வேண்டுமா -
 வியர்வையை இழ.
 
 ஒன்றை இழந்துதான்
 இன்னொன்று.
 
 அவர்கள் அணைந்துபோன
 தீப்பந்தத்துக்காக
 அழுவதாயில்லை.
 
 மழை - உடம்பிலிருந்த உப்புப்
 பிசுக்கையும் உள்ளத்திலிருந்த
 கண்ணீர்ப் பிசுக்கையும்
 ஒருசேரக் கழுவி விட்டதில்
 அவர்கள் ஆனந்தமே
 அடைந்தார்கள்.
 
 ஆகா.
 உடம்பில் தண்ணீர் விழுந்தால்
 உயிர் நனைந்து போகுமோ?
 பீப்பாய்த் தண்ணீரை
 அவர்கள் வாரிவாரிக்
 குடித்ததில் வயிறு முட்டியது.
 
 மழை நின்றுவிட்டது.
 நனைந்த ஆடையைப் போலவே
 உடம்பும் வாடைக்காற்றில்
 வெடவெடவென்று ஆடத்
 தொடங்கியது.
 
 அய்யோ. என்னை
 நனையவைத்து நடுங்கவைத்து
 விட்டீர்களே.
 
 கலைவண்ணன் சிரித்தான்.
 
 கண்ணை முடாமல் தும்ம
 முடியுமா? தண்ணீர் படாமல்
 குளிக்க முடியுமா? எங்கே உன்
 ஆடை கொடு. நான் பிழிந்து
 விடுகிறேன். ஒரு மிச்சப்
 பாத்திரத்தில் அதையும்
 பிடித்துக் கொள்கிறேன்.
 பிறகு, நானே அதைக்
 குடித்துக் கொள்கிறேன்.
 முலிகைகளை மோதிவரும்
 தண்ணீருக்கே நோய்தீர்க்கும்
 குணமுண்டாமே. உன்னைத் தடவி
 வந்த தண்ணீருக்கு
 என்னை உயிர்ப்பிக்கும் சக்தி
 இருக்காதா?
 
 வாடைக் காற்றில் நனைந்து
 நடுங்கியவளைச் சிறிதும்
 சிந்திவிடாமல் சேர்த்தணைத்துத்
 தன் உடம்பின் உஷணத்தை
 ஊட்டினான் கலைவண்ணன்.
 
 மீனவர்கள் ஆடை கழற்றிப்
 பிழிந்து ஒருவரையொருவர்
 துவட்டிவிட்டார்கள்.
 
 விடிந்தது.
 
 மழையில் நனைந்த இரவை
 சூரியன் வந்து துவட்டி விட்டது.
 
 தமிழ்ரோஜாவின் கைப்பை
 திறந்துபார்த்ததில் பளிச்சென்று
 மின்னலிட்டன கலைவண்ணன்
 கண்கள்.
 
 நாம் ஒரு கடிதம் எழுதிக்
 கடலில் வீசினாலென்ன?
 
 எப்படி எழுதுவது?
 
 இதோ உன் கைப்பையில்
 பேனாவும் குறிப்பேடும்...
 
 இரண்டையும் வெளியில்
 எடுத்தான்.
 
 தமிழ்ரோஜா என்று எழுதிப்
 பார்த்தான். எழுதியது.
 
 சிறந்த யோசனை.
 ஆனால், எப்படி
 அனுப்புவது?
 
 நம்மிடமிருக்கும் ஒரு
 காலிப்புட்டியில்... கடிதத்தை
 வைத்து நீர்புகாமல் இறுக
 முடியிட்டுக் கடலில் அஞ்சல்
 செய்வோம். கரைசென்று
 சேர்ந்தாலும் சரி அல்லது ஒரு
 கப்பலையோ
 கட்டுமரத்தையோ
 அடைந்தாலும் சரி
 
 எல்லோரும் கூடிவிட்டார்கள்.
 சரி... என்ன
 எழுதுவது?
 
 சென்னைக்
 கடற்கரையிலிருந்து
 வங்காளவிரிகுடாவின்
 தென்கிழக்கே 40 முதல் 50
 கிலோ மீட்டருக்குள் பதின்முன்று
 நாட்களாய்ப் பழுதான படகில்
 சிறையிருக்கும் தண்ணீர்க்
 கைதிகள் நாங்கள். இது
 கடற்பயணிகளின் கையில்
 சேர்ந்தால் தயவுசெய்து
 எங்களைக் காப்பாற்ற
 வாருங்கள்.
 கரையிலுள்ளவர்களின் கையில்
 சேர்ந்தால் கருணைகொண்டு
 காவல்துறை இயக்குநருக்குச்
 சேர்த்துவிடுங்கள்.
 
 எதற்கும் தமிழில் எழுதிவிட்டு
 ஆங்கிலத்திலும் எழுதுவோம்.
 
 சரியாகச் சொன்னாய்...
 நன்றி தமிழ். நன்றி.
 
 ஈரச்சட்டையை உயர்த்திப்
 பிடித்துக் காற்றிலும் வெயிலிலும்
 உலர்த்திக் கொண்டிருந்த
 இசக்கி, பேனாக்காரரே.
 எனக்கு ஒரு சகாயம்
 செய்வீர்களா? என்றான்.
 
 எல்லோர் பார்வையும்
 அவன்பக்கம் திரும்பி
 என்னவென்றது.
 
 தாய்-என் தாய்-வாழ்வு,
 வைத்துக்கொள்ள முடியாமலும்
 சாவு, வாங்கிக் கொள்ள
 முடியாமலும் தள்ளாடும் வயதில்
 இருக்கும் என் தாய் -
 அவளுக்கு ஒரே ஒரு சேதியை
 இத்தோடு சேர்த்து
 அனுப்பமுடியுமா?
 
 பரதன் படபடப்பானான்.
 உனக்கு மட்டும்தான்
 சொந்தமா? நாங்களெல்லாம்
 அநாதைகளா? எங்களுக்காக
 அழுவதற்குக் கரையில் ஆளே
 இல்லையா? பேனாக்காரரே.
 நானும் சேதி சொல்ல
 வேண்டும். எனக்கும் சேர்த்து
 எழுதுங்கள்.
 
 கலைவண்ணன் சற்றே மெளனம்
 காத்தான். கண்களால் கண்கள்
 படித்தான்.
 பிறகு பேசினான்.
 கடிதம் அனுப்பும் உரிமையும்
 உறவும் நம் ஒவ்வொருவருக்கும்
 உண்டு. ஆளுக்கொரு கடிதம்
 எழுதுவோம். எல்லாவற்றையும்
 மொத்தமாக அனுப்புவோம்.
 இசக்கி இப்போது உனக்காக
 எழுதுகிறேன். என்ன எழுத
 வேண்டும் சொல்.
 
 இசக்கியின் உணர்ச்சி -
 கலைவண்ணன் வார்த்தைகளில்
 கடிதமானது.
 
 அன்புள்ள அம்மா
 மேரி செல்லத்தாயி
 அவர்களுக்கு. உன் மகன்
 கடலுக்குள் இருந்து எழுதும்
 கடிதம் இது. நடுக்கடலில்
 படகு பழுதாகி உயிருக்குப்
 போராடிக்
 கொண்டிருக்கிறேன். உன்
 வயதான முகத்தை எண்ணி எண்ணி
 யாருக்கும் தெரியாமல் அழுது
 கொள்கிறேன். விற்பனைக்குக்
 கூறுகட்டி வைத்த மீன்களில்
 ஒட்டும் ஈக்களை ஓட்டி ஓட்டி
 ஓய்ந்துபோன அந்தக்
 கைகளுக்கு மீண்டும் முத்தமிடும்
 வாய்ப்பைக் கர்த்தர்
 எனக்கருள்வாரா? ஒருவேளை,
 நான் செத்துவிட்டால்,
 தாயே... மீனவர் சங்கம்
 வழங்கும் என் மிச்சச்
 சேமிப்பில் நம் கூரைவீட்டுக்கு
 ஓடு மாற்றிக் கொள்.
 
 இப்படிக்கு,
 இசக்கி
 
 இசக்கி கண்ணீரைத் துடைத்துக்
 கொண்டான். கலைவண்ணன் தன்
 கண்ணீரை மறைத்துக்
 கொண்டான்.
 
 இப்போது பாண்டியின் கடிதம்
 எழுதப்பட்டது.
 
 என் அன்பு மனைவி
 வரலட்சுமி. நீயும்
 குழந்தைகளும் சுகமா?
 என்னைப் பற்றிக்
 கேட்கிறாயா? இந்தக் கடிதம்
 எழுதப்படும் இந்த நிமிஷம்
 வரை நான்
 உயிரோடுதானிருக்கிறேன்.
 கரைமீது எங்களுக்கு ஆசை.
 எங்கள்மீது கடலுக்கு ஆசை.
 எப்படியும் மீள்வோம் என்ற
 நம்பிக்கையோடுதான்
 இருக்கிறோம். எனக்காக அழ
 வேண்டாம். ஒருவேளை, நான்
 இறந்துவிட்டால் வளரும்
 பிள்ளைகள் வளரும் வரை
 அவர்களுக்கு நான் செத்த
 செய்தி சொல்லாதே.
 கடைசியில், ஒரே ஒரு
 உண்மையை மட்டும் உனக்குச்
 சொல்லிவிட்டுப் போகிறேன்.
 என்னை மன்னிப்பாயா? எனக்கு
 வரும் நஷட ஈட்டுத் தொகையில்
 ஒரு பகுதியை நம் வீட்டில்
 வாழாவெட்டியாக வாழ்ந்து
 கொண்டிருக்கிறாளே உன்
 தங்கை கலா - அவளுக்கும்
 பிரித்துக்கொடு. ஏனென்றால்
 எனக்கும்... அவளுக்கும்...
 அவ்வளவுதான் சொல்வேன்.
 நான் சாவதற்காக
 அஞ்சவில்லை. நான் செத்தால்
 ஒரே வீடு இரண்டு
 விதவைகளைத் தாங்குமா
 என்றுதான் வருந்துகிறேன்.
 என்னை மன்னிப்பாயா
 வரலட்சுமி? மன்னிப்பாயா?
 
 இப்படிக்கு,
 பாண்டி
 
 எல்லோரும் ஒருவரை ஒருவர்
 பார்த்துக் கொண்டார்கள்.
 
 இப்போது பரதனின்
 உணர்ச்சிகள் தமிழாயின.
 
 அன்புள்ள மீனா. என் ஆசை
 மகளே. நீ பிறந்தது முதல்
 உன்னைப் பத்து
 நாட்களுக்குமேல்
 பார்க்காமலிருந்தது
 இப்போதுதான். ஒருவேளை,
 உன்னை இனிமேல் பார்க்கவே
 மாட்டேனோ என்று
 பயமாகவும் இருக்கிறது. உன்
 பிரசவத்திலேயே உன் தாயைப்
 பறிகொடுத்த நான்
 அப்போதே செத்திருப்பேன்.
 ஆனால், உன் பிஞ்சுக்கைகளின்
 உத்தரவுக்குத்தான் நான்
 பிழைத்துக் கிடந்தேன்.
 
 எனக்கு ஒரே ஓர் ஆசை
 இருந்தது தாயே. அந்தத்
 தகரப்பெட்டியில் நாப்தலின்
 உருண்டைகளுக்கு மேலே மடித்து
 வைக்கப்பட்டிருக்கும் உன்தாயின்
 பழைய பட்டுப் புடவையை, நீ
 வளர்ந்த பிறகு உனக்குக் கட்டி
 அழகு பார்த்து.. உன்னில் உன்
 தாயைப் பார்க்க
 ஆசைப்பட்டேன். என்
 நியாயமான ஆசை
 அநியாயமான கனவாகவே
 அழிந்துவிடுமா? உன் தாயின்
 பிரிவை நான் தாங்காதது
 போலவே என் பிரிவை அவளும்
 தாங்கவில்லைபோலும்.
 கண்ணுக்குத் தெரியாத கைநீட்டி
 என்னை அழைத்துக்
 கொண்டேயிருக்கிறாள். கரை
 வந்தால் உன்னோடு
 வாழ்வேன். என்னைக்
 கடல்கொண்டால் உன்
 தாயோடு சேர்வேன். படி
 மகளே. படி. நம் இனத்தைப்
 பரம்பரைத் துயரிலிருந்து
 மீனவர்மகளே... மீட்கப்
 படி. ஒரு விதையைப் பூமி
 பாதுகாப்பதைப் போல
 உன்னை
 உன் தாத்தா பாதுகாப்பார்
 என்று நம்புகிறேன்.
 ஜென்மங்களில் எனக்கு
 நம்பிக்கை இல்லை மகளே.
 இருந்தால் - எவ்வளவு
 வசதியாக இருக்கும்.
 
 உன் அன்பு அப்பா,
 பரதன்
 
 கடிதத்தின் கடைசி வரியைச்
 சொல்லமுடியாமல் விசும்பி
 விசும்பி அழுத பரதனைக்
 கட்டிக்கொண்டு ஆறுதல்
 சொல்லவந்த பாண்டியும்
 ஓவென்று அழுதுவிட்டான்.
 
 சலீம். இப்போது உன்
 முறை. என்ன எழுத
 விரும்புகிறாய்? யாருக்கு எழுத
 விரும்புகிறாய்?
 
 அவன் விரக்தியாய்ச்
 சிரித்தான்.
 
 காற்று யாருக்குக் கடிதம்
 எழுதப் போகிறது? நான்
 அநாதை. எனக்கிருந்த ஒரே
 ஓர் உறவு என் மனைவி.
 அவளும் ஓடிப் போய்விட்டாள்.
 இப்போது நான் எழுத
 வேண்டுமென்றால் ஒரே
 ஒருத்திக்குத்தான்.
 தேநீர்க்கடை
 சுப்பம்மாவுக்குத்தான்
 எழுதமுடியும்.
 
 எல்லோரும் நிமிர்ந்து
 பார்த்தார்கள்.
 சொல்கிறேன்
 எழுதுங்கள். சலீமுக்காகக்
 கலைவண்ணன் பேனா ஒரு
 காதல் கடிதத்தை முத்தமிடக்
 குனிந்தது.
 
 அன்புள்ள சுப்பம்மா.
 செளக்கியமா? சாவுக்குப்
 பக்கத்தில் நானும்
 செளக்கியமாயிருக்கிறேன்.
 ஒரே ஒரு நம்பிக்கை - உன்
 நினைவுதான். ஊருக்குத்
 தெரியாத நம் சிநேகம்தான்
 என்னை உயிர்வாழச்
 சொன்னது. ஆனால், நான்
 காதலிப்பது கடலுக்குப்
 பொறுக்கவில்லை
 போலிருக்கிறது. ஒரு
 கோப்பைத் தேநீரை உன்னைப்
 பார்த்துக் கொண்டே ஒரு மணி
 நேரம் குடிக்கும் சுகம் இனி
 வாய்க்குமா? உன் கணவனைப்
 போலவே உன் காதலனும்
 அகால மரணமடைய
 வேண்டியதுதானா? இந்த
 அலைகடலுக்கு மத்தியில் நான்
 அழிய நேரும்போதும் என்
 கடைசிச் சக்திகளையெல்லாம்
 திரட்டி உன் பெயரை மட்டுமே
 உச்சரிக்கப் பயன்படுத்துவேன்.
 உன் பெயரை அலைகள்
 கற்றுக்கொள்ளும். கரையில்
 நின்று கேட்டுப்பார். ஓடிவந்து
 மோதும் ஒவ்வோர் அலையும்
 சலீமின் சார்பாக உன் பெயர்
 சொல்லும். எனக்கான
 துக்கத்தை ஒருவாரத்துக்கு
 மேல் நீட்டிக்காதே.
 
 காதல் என்பது எனக்கும்
 புதிதல்ல. உனக்கும் புதிதல்ல.
 என் ஞாபகத்தை எங்காவது
 ஒரு முலையில் முடிந்துவிட்டு நீ
 இன்னொரு வாழ்க்கை
 தொடங்கு.
 
 இப்படிக்கு,
 உன் சலீம்.
 
 சலீம். அழக்கூடத் தெரியாத
 அப்பாவியே. உனக்குள் இப்படி
 ஒரு வாழ்க்கையா?
 
 அவன் உள்ளங்கைகளை
 உறவோடு பற்றித் தாடி
 முளைத்த கன்னம் தடவினார்கள்
 மீனவர்கள்.
 
 முடிந்தது கடிதம்.
 இந்தக் கடிதத்துக்குக்
 காலிபுட்டிதான் உறை.
 
 எல்லாம் சரி.. இந்தத்
 தபாலுக்குக் கட்டணம் கட்ட
 வேண்டுமே...
 
 கடல் தபாலுக்குக்
 கட்டணமா?
 
 இது யார் கையில்
 சேர்ந்தாலும் அவர்கள் அதை
 அலட்சியப்படுத்திவிடக்
 கூடாதல்லவா.
 கொண்டு சேர்ப்பவர்களுக்குக்
 கூலிவேண்டாமா?
 
 கூலியா? கூலிக்கு எங்கு
 போவது?
 
 எல்லாரின் சில்லறைகளையும்
 திரட்டத் தொடங்கினார்கள்.
 தொகுத்தபிறகும் ருபாய்
 நூற்றுப்பதினேழு ஐம்பதுதான்
 தேறியது.
 
 இது போதாது என்று
 உதடு பிதுக்கினான் கலைவண்ணன்.
 
 யோசித்துத் தாழ்ந்த கண்கள்,
 தமிழ்ரோஜாவின் விரலிலிருந்த
 தங்கமோதிரத்தில் பட்டுத்
 தெறித்தன.
 
 காணாமல்போன குழந்தையை
 மீண்டும் கண்டெடுத்த ஒரு
 தாயைப் போலப்
 பரபரவென்று அவள் கைபற்றிய
 கலைவண்ணன் கழற்று.
 உடனே கழற்று என்றான்.
 
 அய்யோ. இது நீங்கள் என்
 பிறந்த நாளுக்குப்
 பரிசளித்தது -அவள்
 வெடுக்கென்று கையிழுத்தாள்.
 
 இன்னொரு பிறந்த நாள்
 உனக்கு வேண்டுமா வேண்டாமா
 - கழற்று அவன் கடிந்து
 சொன்னான்.
 
 மாட்டேன்...
 மாட்டேன்...
 
 அவள் முரண்டுபிடித்தாள்.
 அவன் முயன்று பறித்தான்.
 
 அந்த மோதிரத்தைப்
 புட்டியிலிட்டுப் பூட்டினார்கள்.
 
 அதில் நீர்புகாமல் இருக்க
 உப்புத்தூள் கொண்டு வந்த
 பாலிதீன் பை சுற்றிக் கயிறு
 கட்டினார்கள்.
 அதில் ஒவ்வொருவராக உதடு
 பதித்து முத்தமிட்டார்கள்.
 
 தமிழ்ரோஜா மட்டும் தன்
 விரலைத் தொட்டுத் தொட்டுப்
 பார்த்து விசும்பிக்
 கொண்டிருந்தாள்.
 
 அந்தக் கடிதத்தைக் கலைவண்ணன்,
 பலம் கொண்ட மட்டும் கடலில் வீசினான்.
 நீரலைகளில் அது மிதந்தது - மிதந்தது,
 சற்று நேரத்தில் அவர்கள் பார்வையிலிருந்து
 மறைந்தது.
- 
				20
 
 நாவுக்கு மட்டும் என்பதில்லை
 உடம்பின் ஒவ்வோர்
 உறுப்புக்கும் கேட்கத்
 தெரியும்.
 
 உடம்பில் நீர் குறைந்தால்
 தாகத்தின் வழியே அது தண்ணீர்
 கேட்கும்.
 
 உடம்பு களைத்துப் போனால்
 கண்கள் உறக்கம் கேட்கும்.
 
 புறத்தோலில் அரிப்பென்றால்
 உறக்கத்திலும் சொறியக்
 கேட்கும்.
 
 உயிர் துடித்தால் கலவி கேட்கும்.
 உடல் துடித்தால் உணவு கேட்கும்.
 
 அன்றென்னவோ பாண்டியின்
 மனசுக்குப் பாட்டுக்
 கேட்கத் தோன்றியது.
 
 ஏதோ ஒரு நெகிழ்ச்சி -
 ஏதோ ஒரு கிளர்ச்சி...
 கடலில் வீசிய புட்டி வெடித்துப்
 பூதம் கிளம்பி நாம்
 காப்பாற்றப்படுவோம்
 என்றதொரு நம்பிக்கையின்
 மலர்ச்சி.
 
 எனக்கு இப்போது
 பாட்டுப்பாட வேண்டும் அல்லது
 கேட்க வேண்டும்
 போலிருக்கிறது. என்றான்
 பாண்டி.
 
 நீ தண்டிக்க வேண்டாம்.
 நானே தண்டிக்கிறேன்
 என்றான் சலீம்.
 
 நீ பாடப்போகிறாயா?
 என்றான் இசக்கி.
 
 பாடக்கூடாதா?
 என்றான் சலீம்.
 
 ஆயுள் தண்டனைக் கைதி
 நான். கசையடி என்ன
 செய்யும்... பாடு.
 
 இசக்கி தண்டனைக்குத் தன்னைத்
 தயாரித்துக் கொண்டான்.
 
 சலீம் தன் சொந்த
 சோகத்தில் சுதி சேர்த்தான்.
 
 இக்கரையில் நானிருக்க
 அக்கரையில் அவளிருக்க
 அக்கறை இல்லாததென்ன
 கடலலையே.
 
 அந்தக் கடைசி சுரத்தின்
 ஏகாரசங்கதியில் ஏறி
 உட்கார்ந்தவன்
 இறங்கவேயில்லை.
 
 நிறுத்து. இல்லையென்றால்
 நான் பாட
 வேண்டியிருக்கும். இசையைக்
 கசக்கிப் பிழிந்தவனை நோக்கி
 இசக்கி கத்தினான்.
 
 இசக்கியின் கத்தலுக்காக அல்ல
 - அதற்கு மேல் பாட்டு
 வரிகள் தெரியாததால் சலீம்
 தன்னைத் துண்டித்துக்
 கொண்டான்.
 
 வாடிக்கிடந்த தமிழ்ரோஜாவை
 மார்பில் அணிந்த வண்ணம்,
 அவள் அழுத கண்ணீரில் தான்
 நனைந்த கலைவண்ணன்,
 மீனவர்களின் பாமர
 நாடகத்தையும் பக்கவாட்டில்
 ரசித்துக் கொண்டான்
 பாதிக்கண்களால்.
 
 நீ பாடு பரதன்.
 எனக்கொரு நல்ல பாட்டுக்
 கேட்க வேண்டும்
 
 பரதன் சுற்றும்முற்றும்
 பார்த்தான்.
 நீங்கள் தப்பிக்க
 வேறுவழியே இல்லை என்பதால்
 பாடுகிறேன்.
 
 கானம் பாடுவதற்கு முன்னால்
 அவன் கனைத்தபோது ஒரு
 குதிரை சங்கீதத்துக்குத்
 தயாராவது போலிருந்தது.
 
 தோணி வருகுதுன்னு
 துறைமுகமே காத்திருந்தேன்
 தோணி கவுந்திருச்சே
 துறைமுகமே ஆசையில்ல
 
 கப்பல் வருகுதுன்னு
 கடற்கரையே காத்திருந்தேன்
 கப்பல் கவுந்திருச்சே
 கடற்கரையே ஆசையில்ல.
 
 அவன் பாடியதில் பாவமில்லை.
 ஆனால், உணர்ச்சி இருந்தது-
 வெயிலில் சருகானாலும் வீரியம்
 போகாத முலிகை மாதிரி.
 
 ஆனால், புன்னகையில்
 தொடங்கிய பாட்டு கண்ணீரில்
 முடிந்து போனது -
 ஈரங்காயப் போட்ட துணி
 மழையில் நனைந்தது மாதிரி.
 
 அந்தப் படகில் மெல்லியதாய்
 விழுந்த ஒரு சந்தோஷ
 நிழல் விசுக்கென்று மறைய
 மீண்டும் வெயில் சுட்டது.
 
 மீனவர் நால்வரும் அவரவர்
 சோகத்தில் அமிழ்ந்து
 கண்ணீர் குடித்த வேளையில் -
 தமிழ்ரோஜாவைச் சற்றே
 தளர்த்தித் தளத்தில் கிடத்தி
 வந்த கலைவண்ணன்
 ஒவ்வொருவர்
 தோளையும் உரிமையாய்த்
 தொட்டான்.
 
 என் தோழர்களே.
 மீன் பிடிக்க வந்து சந்தர்ப்பம்
 பின்னிய சதிவலையில் சிக்கிக்
 கொண்டவர்களே.
 இப்போது நீங்கள்
 பாடவேண்டிய
 பாடல் இதுவல்லவே.
 
 முத்துக் குளிக்கும் சக்தி
 கொண்ட நீங்கள்... உங்கள்
 கண்களில் உப்புக்
 காய்ச்சக்கூடாது.
 உங்களுக்காக நான்
 பாடுவேன். உங்கள் நம்பிக்கை
 நரம்பு தேடி எடுத்து அதில்
 சந்தோஷ ஊசி போடுவேன்.
 சிரிப்பவனைப் பார்த்து மரணம்
 தூரத்தில் நிற்கிறது. அழுபவன்
 வீட்டுக் கதவைத்தான் அது
 அவசரமாய்த் தட்டுகிறது.
 
 இப்போது நாம் நம்பிக்கை
 பேசுவோம். நம் உடம்பும்
 மனசும் உலராதிருக்க
 உற்சாகத்தில் கொஞ்சம்
 நனைத்து வைப்போம்.
 உங்களுக்கு நான் ஒரு பாடல்
 கொண்டு வந்தேன். என்
 தமிழை உங்கள் இதயப்
 பலகையில் எழுதிக்
 கொள்ளுங்கள்.
 
 காதுவழிப்புகும் என்
 கானவரிகளை ரத்தத்தில்
 கரைத்துக் கொள்ளுங்கள்.
 
 என் பாடலால் உங்கள்
 நம்பிக்கையும் கனவுகளும்
 ஒருநாள் நீட்டிக்கப்பட்டாலும்
 நான் பிரம்மனின் வேலை
 செய்தேன் என்ற பெருமை
 பெறுவேன். எங்கே, உங்கள்
 கண்ணிமைகள் மெள்ளக் கவிழ்ந்து
 கொள்ளட்டும்.
 உங்கள் செவிகள் எனக்காகத்
 திறந்திருக்கட்டும்.
 
 அவன் மெல்லிய குரலில்
 பாடத்தொடங்கினான்.
 மீனவர்களின் இதய இறுக்கம்
 மெள்ள மெள்ள அவிழத்
 தொடங்கியது.
 
 நீர்மட்டத்துக்கு மேலே
 தலைதூக்கும்
 தண்ணீர்ப்பாம்பாய்த் தளத்தில்
 கவிழ்ந்து கிடந்த
 தமிழ்ரோஜாகூட மெள்ளத்
 தலை தூக்கினாள்.
 
 காற்றோசையே சுருதி.
 அலைகளே தாளம்.
 அரங்கேறியது பாட்டு
 
 மனிதன் நினைத்தால்
 வழி பிறக்கும்.
 மனதிலிருந்தே
 ஒளி பிறக்கும்
 
 புதைக்கின்ற விதையும்
 முயற்சி கொண்டால்தான்
 பூமியும்கூடத் தாழ் திறக்கும்
 
 
 கண்களிலிருந்தே
 காட்சிகள் தோன்றும்
 களங்களிலிருந்தே
 தேசங்கள் தோன்றும்
 
 துயரத்திலிருந்தே
 காவியம் தோன்றும்
 தோல்வியிலிருந்தே
 ஞானங்கள் தோன்றும்
 
 சூரியன் மறைந்தால்
 விளக்கொன்று சிரிக்கும்
 தோணிகள் கவிழ்ந்தால்
 கிளை ஒன்று கிடைக்கும்
 
 மரமொன்று விழுந்தால்
 மறுபடி தழைக்கும்.
 மனம் இன்று விழுந்தால்
 யார் சொல்லி நடக்கும்?
 
 பூமியைத் திறந்தால்
 புதையலும் இருக்கும்.
 பூக்களைத் திறந்தால்
 தேன்துளி இருக்கும்
 
 நதிகளைத் திறந்தால்
 கழனிகள் செழிக்கும்
 நாளையைத் திறந்தால்
 நம்பிக்கை சிரிக்கும்.
 
 குஞ்சுகளைத் தன் அலகால்
 கோதிவிடும் தாய்ப்பறவை
 போல - கலைவண்ணன் பாடல்
 அவர்கள் மனசு கோதியது.
 
 மீண்டும் புன்னகை
 வெயிலடிக்கவும் காய்ந்தது
 கண்ணீர்.
 
 பாட்டு முடிந்ததும் அவன்
 தாவிப்பாய்ந்து தமிழை அள்ளித்
 தன் மடி கிடத்தியபோது அவள்
 தேகம் லேசாய்த் தகித்தது.
 
 நெற்றி தொட்டான். சுட்டது.
 
 கடலுக்கு என்ன தெரியும்-
 அந்த புட்டியின் ஜாதகம்.
 அதனுள் ஆறு ஆருயிர்கள்
 அடக்கம் என்று அறியாமல்
 அலைகள் அதை
 உதைபந்தாடின.
 
 ஏ உயிர்த்தூதுவனே.
 கரை சேர்வதற்குள் நீ
 கரைந்து போவாயா?
 
 போ. போ.
 அலைகளோடு யுத்தம் நடத்து.
 காற்றை எதிர்த்துப்
 போராடு. முட்டவரும்
 மீன்களை எதிர்த்து முன்னேறு.
 எப்போதாவது ஒரு சிப்பிக்குள்
 விழும் மழைத்துளியைப் போல
 ஏதாவதொரு மனிதக்கரத்தில்
 சேர்ந்து விடு.
 போ. போ.
 வாழ்க்கை இன்னும் சில
 கிலோ மீட்டர்தான். எட்டி
 உதைத்து எதிர்நீச்சல் போடு.
 
 
 சமுகம் வரவர
 இறுகிக்கொண்டே வருகிறது.
 மனிதன் கெட்டிப்பட்டுப்
 போனான்.
 நான்கு அறைகள் கொண்ட
 இதயம் இறுகி இறுகி ஒரே
 அறையில் இயங்கப்
 பழகிவிட்டது.
 
 அந்தி வெயிலில் விழும்
 நிழலைப்போல சுயநலம் நீண்டு
 கொண்டே போகிறது.
 
 மனிதன் தன் சொந்தச்
 செலவுக்கு மட்டுமே கண்ணீரைச்
 சேமித்து வைக்கிறான்.
 
 பொதுநலம் இறந்து
 கொண்டிருக்கும் சமுகப்
 போக்கில், போராட்டம்
 இல்லாமல் எதுவுமே
 கிடைப்பதில்லை.
 
 பாலையில் நீர் காணப்
 போராடலாம், பாறையில்
 பயிர் வளர்க்கப்
 போராடலாம், ஆனால்,
 சுத்தம் அழிந்த இந்தச் சமுக
 அமைப்பில் சுவாசிக்கக்கூடப்
 போராட வேண்டியிருக்கிறது.
 
 சந்திரோதயத்துக்காக -
 சத்தியாக்கிரகம்.
 மொட்டுகளுக்கு முன்னால் -
 மலரச்சொல்லி மறியல்.
 
 உணவு கிடைக்கும்வரை
 உண்ணாவிரதம்.
 
 இயல்பான சங்கதிகள்கூட
 இங்கே இறுக்கமாகிவிட்டன.
 
 முறைகெட்டுப்போன வாழ்க்கை
 முறையில் சரியாகச்
 சாப்பிடுகிறவன்கூடச்
 சாதனையாளனாகி விட்டான்.
 
 காணாமல் போன மீனவர்களை
 மீட்கப் போராடாமல் தீராது
 என்ற முடிவுக்கு வந்த மீனவர்
 சங்கம் அடுத்த நாளே அதை
 அமல்படுத்தியது.
 
 முவர்ணக்கொடிகள்
 கோட்டைக்கு
 முன்னேறும் நேரம் அது.
 
 ஆண்களும் பெண்களுமாய்ச்
 சாலையின் இருமருங்கும்
 அறிவிப்பில்லாமல்
 அணிவகுத்தார்கள்.
 
 குறிப்பிட்ட அமைச்சரின் கார்
 தூரத்தில் வருகையில் பத்து
 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத்
 தார்ச்சாலைத்
 தாமரைகளாய்த் தரையில்
 பரப்பினார்கள்.
 
 மனிதச் செங்கற்களால்
 கட்டப்பட்ட வேகத்தடை.
 
 கண்ணிமைக்கும் நேரத்தில்
 நடந்துபோன இந்த அதிர்ச்சி
 கண்டு கார்கள் மாரடைத்து
 நின்றன.
 
 என்ன? என்னவாயிற்று?
 அமைச்சர்கள் இறங்க,
 பாதுகாப்பு அதிகாரிகள்
 படபடக்க நேர்முக
 உதவியாளர்கள் கோப்புகளால்
 தங்கள் மார்புக்குக்
 கவசமிட்டுக் குதிக்க,
 வாகனங்கள் வரிசைகட்ட,
 கூட்டம் கூச்சலிட அமைதி
 இழந்தது அந்த இடம்.
 
 என்ன? என்ன கோரிக்கை
 உங்களுக்கு? ஏனிந்தப்
 போராட்டம்?
 ஒலிபெருக்கி தேவையில்லாத
 கட்டைக்குரல் அமைச்சர்
 கத்தினார்.
 
 மீன் பிடிக்கப் போன
 எங்கள் மீனவர்களை இரண்டு
 வாரங்களாய்க் காணவில்லை.
 மீட்பதற்கு எந்த முயற்சியும்
 நடக்கவில்லை.
 
 மனுக்கொடுத்தீர்களா?
 
 சங்கத்தின் முலமாய்க்
 கொடுத்துப்
 பார்த்தோம். ஆனால்,
 மந்திரிக்கும் மழைக்கும்
 மனுச்செய்து புண்ணியமில்லை
 என்று புரிந்துதான் போராட
 வந்திருக்கிறோம்.
 
 அமைச்சர் சற்றே
 சிந்தித்தார்.
 தன் கோபத்தைத் தோளில்
 ஆடும் துண்டால் துடைத்தார்.
 
 இதற்குத்தான் இந்த
 அதிகாரிகளை நம்பி ஆட்சி
 நடத்தக்கூடாது என்பது.
 என்னிடமல்லவா கொடுத்திருக்க
 வேண்டும். கொடுங்கள்.
 
 நகல் அவரிடம் நீட்டப்பட்டது.
 
 படித்தார்.
 
 முதல் பக்கத்தை
 எழுத்துக்கூட்டவே முன்று
 நிமிடமாயிற்று.
 
 சரி. சரி. இன்றைக்கே
 ஏற்பாடு செய்கிறேன்
 என்றவர்,
 சாலையில் படுத்திருக்கும்
 அத்தனை பிள்ளைகளுக்கும்
 ஆளுக்கு நூறு ருபாய்
 கொடுத்து எழுப்பு என்று
 உதவியாளருக்கு
 உத்தரவிட்டார்.
 
 மன்னிக்க வேண்டும் நாங்கள்
 உங்களுக்குக் கொடுத்தாலும்
 நீங்கள் எங்களுக்குக்
 கொடுத்தாலும் அதற்கு பெயர்
 லஞ்சம்தான். இது
 போராட்டம்.
 படப்பிடிப்பல்ல. என்ற
 மீனவர் சங்கத்தலைவன்,
 எல்லோரும் கலைந்து
 செல்லுங்கள் என்று உரத்த
 குரலில் உத்தரவிட்டான்.
 
 தாமரை மொட்டுக்கள்
 மொத்தமாய் மலர்ந்து
 குளத்தைக் கடந்து கரைக்குப்
 போவது போல் அத்தனை
 குழந்தைகளும் எழுந்து
 அமைதியாய்க் கலைந்து
 கூட்டத்தில் கரைந்தார்கள்.
 
 சற்று நேரத்தில் அந்தக்கூட்டம்
 வழுக்கைத் தலையில் விழுந்த
 மழைத்துளியாய் வழிந்து
 போனது.
 
 அகத்தியர் தொலைபேசியைக்
 கையிலெடுத்து அவரே
 பொத்தான்களை அழுத்தினார்.
 
 தொலைபேசியை அவரே
 அழுத்துவது அபூர்வம்.
 அப்போதெல்லாம் அவர்
 ஆவேசத்திலிருக்கிறாரென்று
 அர்த்தம்.
 
 அந்தத் தொலைபேசியின்
 பொத்தான்களுக்கு மெல்லிய
 இறகின் ஸபரிசம் போதும்.
 ஆனால், அவர் அழுத்திய
 அழுத்தலில் தொலைபேசி
 துளைபேசியாகிவிடும்
 போலிருந்தது.
 
 ஐ.ஜி அவர்களே.
 இன்று மாலைக்குள், என் மகள்
 எங்கிருக்கிறாள் என்று தெரிய
 வேண்டும். இன்று அல்லது
 நாளைக்குள்
 தெரியவில்லையென்றால்...
 அதற்குமேல் சொல்ல வந்த
 கெட்டவார்த்தைகளைத்
 தொலைபேசியை வைத்துவிட்டுப்
 பேசினார்.
 
 ஏ.ஸி. அறையில் உடம்பு
 சுட்டது.
 
 கடல் -
 
 அதோ. அதோ.
 என்றான் கட்டுமரக்கிழவன்.
 
 என்ன? எங்கே?
 என்றான் இளையவன்.
 
 அவன் விரல் காட்டிய திசையில்
 பாய்ந்து குதித்துப் புட்டியை
 
 கைப்பற்றினான் இளைஞன்
 பாவம். இருவருமே படிக்காதவர்கள்
- 
				21
 
 மனிதர்களில் குதிரைகள் உண்டு.
 தம் நிழல் கண்டு தாமே
 அஞ்சும் குதிரை மனிதர்கள்.
 
 மனிதர்களில் விட்டில்கள் உண்டு.
 பூத்துக் குலுங்கும் பூக்கள்
 அழைத்தாலும் பூக்களில்
 வாயூன்றித் தேன்குடிக்கத்
 தெரியாமல் இலைகள் தின்னும்
 விட்டில் மனிதர்கள்.
 
 மனிதர்களில் குரங்குகள் உண்டு.
 தங்கக் கிண்ணத்தோடு அப்பம்
 கிடைத்தாலும் அப்பம்
 கவர்ந்துகொண்டு
 தங்கக்கிண்ணத்தைத் தரையில்
 எறிந்துவிடும் குரங்குமனிதர்கள்.
 
 கட்டுமரக் கிழவனையும்
 இளைஞனையும் அப்படித்தான்
 பீடித்தது அறியாமை அச்சம்.
 
 புட்டியின் முடி திறக்க இளைஞன்
 தவித்தான். கிழவன்
 தடுத்தான்.
 
 இது கடத்தல் புட்டியோ.
 வெடிகுண்டுப் புட்டியோ.
 வேண்டாம் விளையாட்டு. வீசி
 எறிந்துவிடு.
 
 கிழவன் சொன்னதை இளைஞன்
 செய்தான். மீண்டும் அலைகளின்
 கால்களில் அது
 உதைபந்தானது.
 
 கலைவண்ணன் இன்னும்
 கண்திறக்கவில்லை.
 ஆனால், கைகளும் செவிகளும்
 மட்டும் விழித்துக்கொண்டன.
 
 ஏதோ சுடுகிறது - கைகள்
 சொல்லின.
 ஏதோ ஒரு முனகல் -
 செவிகள் உணர்ந்தன.
 
 புணர்ந்து கிடக்கும்
 காதலர்களை முயன்று பிரிப்பது
 மாதிரி தூக்கத்திலிருந்து
 இமைகளைத் துண்டித்துப்
 பிரித்தான்.
 
 என்னவாயிற்று தமிழுக்கு?
 
 ஒரு புழுவைத் தொட்டவுடன்,
 உடம்பின் இரு துருவங்களையும்
 அது ஒன்றாகச் சுருட்டிக்
 கொள்வது மாதிரி
 குமரித்தாமரை ஏனிப்படிக்
 குறுகிக்கிடக்கிறாள்.
 
 அந்த அழுக்குப்
 போர்வைக்குமேலே
 அனலடித்தது.
 
 போர்வையைப் புறந்தள்ளி
 அவள் நெற்றி தொட்டான்.
 
 தொடர்ந்து தொட
 முடியவில்லை - அவ்வளவு
 வெப்பம்.
 
 எந்த மொழியிலும் சேராத,
 ஆனால் எந்த மொழிக்காரனும்
 புரிந்துகொள்கிற ஒலிகளை
 அவள் முனகினாள்.
 
 இது மழைக்காய்ச்சல்.
 அய்யோ இவளை நனையச்
 சொன்னவன் நான்தானே.
 தமிழ். தமிழ்.
 
 அவன் கூப்பிட்ட குரலுக்குப்
 பதிலில்லை.
 
 என்ன இது? நேற்று ஒத்தடச்
 சூட்டைப்போல் இருந்த
 காய்ச்சல், இன்று
 உலைச்சூட்டைப் போல்
 ஏறிவிட்டதே. சித்திரை
 மாதத்துக் கத்திரிவெயிலாய்த்
 தேக வெப்பம்
 அதிகமாகிறதே. பசியாலும்
 தாகத்தாலும் தேய்ந்தும்,
 நைந்தும், தொய்ந்தும்
 கிடக்கிற தேகம் - இந்தக்
 கடுங்காய்ச்சல் எப்படித்
 தாங்கும்?
 ஏ, பாலைவனப் பஞ்சே.
 உன்னைப் பற்ற வைத்தது
 யார்?
 
 தண்ணீரில் தன் கைக்குட்டை
 நனைத்தான்.
 அதைப் பிழிந்தும் பிழியாமல்
 அவள் நெற்றியில் பரப்பினான்.
 
 அசோகவனத்தில் கண்ணீரில்
 நனைந்த சீதையின் மேலாடை
 அவள் பெருமுச்சில்
 உலர்ந்ததுபோல், அடுத்த சில
 நிமிடங்களில் காய்ந்துபோனது
 கைக்குட்டை.
 
 வெயில் ஏறஏற அவளுக்குக்
 குளிரெடுத்தது.
 
 மீனவர்களின் துணிகளையும்
 போர்வைகளையும் சேர்த்துப்
 போர்த்திப் பார்த்தபோதும்
 காய்ச்சல் இறங்கவில்லை.
 நடுக்கம் அடங்கவில்லை.
 
 இமை திறக்க முடியவில்லை.
 
 கண்கள் அவள்
 கட்டுப்பாட்டைவிட்டுப்
 போய்விட்டன.
 
 அவள் கைகள் மட்டும்
 அனிச்சைச் செயலாய்
 அசைந்தசைந்து எதையோ
 தேடின.
 
 கலைவண்ணனின் கைகள்
 தொட்டதும் தேடல் நின்றது.
 
 உயிரின் பாசமெல்லாம் அந்த
 ஸபரிசத்தில் குவிந்தது.
 
 நோய் என்பதொரு கொடை.
 
 தறிகெட்டோ டும் வாழ்க்கையில்
 அது ஒரு மெல்லிய
 வேகத்தடை.
 
 வாழ்வின் பெருமையை
 உயர்த்துவதும் - உறுப்புகளின்
 அருமையை உணர்த்துவதும் -
 நேற்றையும் இன்றையும்
 நேசிக்க வைப்பதும் -
 தன்னைச் சார்ந்தவர்பற்றி
 யோசிக்க வைப்பதும் - ஒரு
 நிமிஷச்சொட்டின் விலை என்ன
 என்று நிறுத்துச் சொல்வதும் -
 செலுத்தப்படாத அன்பைச்
 செலுத்தச் செய்வதும் - திமிர்
 கொண்டோ டும் தேகத்தை
 ஞானப்பாதைக்கு அழைத்து
 வருவதும் -
 மனிதனுக்குள்ளிருக்கும்
 சிங்கம்புலிகளைத்
 துரத்தியடிப்பதும் -
 கடந்தகாலத் தவறுகளை
 எண்ணிக் கடைவிழியில் நீரொழுக
 வைப்பதும் - நோய்தான்.
 
 ஆகவே உடம்பே.
 அவ்வப்போது கொஞ்சம்
 நோய் பெறுக.
 
 நோயற்ற வாழ்வுதான்
 குறைவற்ற செல்வம்.
 
 ஆனால் நோயும் ஒரு
 செல்வமென்று பட்டுத்தெளி,
 மனமே.
 
 தன்மடியில் தமிழ்ரோஜாவின்
 தலைதாங்கிக் கிடந்தவன்,
 அவள் ஒரக்கண்ணில் சொட்டும்
 சுடுகண்ணீர் துடைத்தான்.
 
 தமிழ். தமிழ்.
 என்றான்.
 
 அவள், தண்ணீர்.
 தண்ணீர். என்றாள்.
 
 அவன் தண்ணீர் கொண்டுவந்து
 தாய்ப்பாலாய் ஊட்டினான்.
 குலுங்கும் வாகனத்தில்
 தாயைக்கட்டிக் கொள்ளும்
 குழந்தைமாதிரி - அவனைச்
 சேர்த்துக் கட்டி, அவன்
 மடியில் புதைந்து போனாள்.
 
 அவன் இடுப்பைச் சுற்றி
 நெருப்பெரிந்தது.
 
 ஏதோ முனகினாள்.
 
 அவன் சப்தங்களுக்குப்
 பக்கத்தில் செவிகளை
 வைத்தான்.
 
 அவள் முனகியது கேட்டது.
 
 எனக்குத் தெரியும், நான்
 இறந்துபோவேன்.
 
 அவன் துடித்துப் போனான்.
 
 அடியே. என் ஆருயிரே.
 என்ன சொன்னாய்? நீ இறந்து
 விடுவாயா? உன்னை
 இறக்கவிடுவேனா? என்
 உயிரை உறைபோட்டல்லவா
 உன் உயிரை வைத்திருக்கிறேன்.
 மரணம் என் உயிர் கிழிக்காமல்
 உன் உயிர் தொடுவது எப்படி?
 உன்மீது நான் கொண்டிருப்பது
 வெறும் தசைநேசமன்று.
 அது - காதலும் தாய்மையும்
 கலந்தஅபூர்வ அனுபவம்.
 என் உயிரின் பெண்வடிவம் நீ.
 உன் உயிரின் ஆண்வடிவம் நான்.
 இதில் யாருக்குத் தனியாகச்
 சாவு வரும்? நீ மரித்தால்
 என் மரணம். நான் மரித்தால்
 உன் மரணம். நாம்
 மரிக்கமாட்டோ ம். யார்
 உயிர் யாருடையதென்று
 மரணத்துக்குக் குழப்பம் வரும்.
 நாம் மரிக்கமாட்டோ ம்.
 
 அவள் உதடுகள் சிரமப்பட்டுச்
 சிரித்தன.
 
 இது ஆறுதல். உங்கள்
 உணர்ச்சி உண்மை. ஆனால்,
 அது உயிர்காக்கப்
 போவதில்லை. என் உடம்பில்
 இப்போது எதுவுமில்லை. நான்
 ஏறக்குறைய இறந்துவிட்டேன்.
 உயிரின் கடைசித் துளிகளை
 ஆவியாக்கத்தான் என் உடம்பில்
 காய்ச்சல்
 உலைமுட்டியிருக்கிறது.
 
 கண்களைத் திறக்க முடியாதவள்
 கைகளால் அவன் முகம்
 துழாவினாள்.
 
 அவன் நெற்றியை, முக்கை,
 கண்களை, தாடி முளைத்த
 கன்னத்தைத் தடவித் தடவிப்
 பார்த்தாள்.
 
 அந்தக் கடுஞ்சூட்டிலும் முகத்தின்
 ஒரு முலையில் பரவசம்
 காட்டியவள் -
 நான் சாவதில் எத்தனை
 சந்தோஷப்படுகிறேன்
 தெரியுமா? என்றாள் மிக
 உண்மையாய்.
 அவள் உதடுகளைத் தன்
 உள்ளங்கையால் பொத்தியவன்,
 உளறாதே. என்று
 பதறினான்.
 
 இல்லை. என் சாவையும்,
 சந்தோஷத்தையும் உங்களால்
 தடுக்க முடியாது. பூ உதிர்ந்து
 ஒரு புல்வெளியில் விழுவது
 மாதிரி உங்கள் பாதுகாப்பான
 மடியில் நான் பத்திரமாகச்
 சாகிறேன்.
 
 அவன் ஒரு கையில் அவள்
 உள்ளங்கை அழுத்தி மறுகையால்
 நெற்றி தடவினான்.
 
 ரோஜா சுடுமா? சுட்டது.
 
 வாழ்வின் முதல்
 வார்த்தையைக்கூட
 உச்சரிக்காத நீயா மரணத்தின்
 கடைசி வார்த்தை
 பேசுகிறாய்?
 
 இல்லை. நீளமான
 வாழ்க்கையில் நிம்மதி இல்லை.
 இங்கு எல்லா
 மனிதர்களும் முதல் பாகத்தின்
 இனிப்பை இழந்து,
 இரண்டாம் பாகத்தின்
 கசப்போடுதான்
 சாகிறார்கள்.
 
 இதுவரைக்கும்
 என் வாழ்க்கை இனிமைகளால்
 நிறைந்தது. இப்படியே
 இறந்துவிடுவது இதமானது. ஒரு
 வெற்றியோடு போரை
 நிறுத்திக்கொண்ட அசோகச்
 சக்கரவர்த்தி மாதிரி காதலின்
 இனிய நினைவுகளோடு என்
 முச்சை நிறுத்திக்
 கொள்கிறேன்.
 
 முடியாது. உன்னைச்
 சாகவிடமாட்டேன்
 -கலைவண்ணன் உணர்ச்சியில்
 உடைந்தான்.
 
 ஆமாம் தங்கையே.
 உன்னைச்
 சாகவிடமாட்டோ ம் -
 மீனவர் வயிற்றிலிருந்து வந்தன
 வார்த்தைகள்.
 
 எப்படித் தடுப்பீர்கள்?
 உங்கள் பத்துக்கரங்களும் என்
 உடம்பை மொத்தமாகப்
 பொத்தினாலும், மரணம்
 உங்கள் விரல்களின் இடுக்கில்
 புகுந்து என் உயிரை
 வெளியேற்றிவிடும். உயிரைத்
 தரமாட்டோ ம் என்று
 சொல்வதற்கு நீங்கள் யார்?
 மரணம் யாரையும்
 யாசிப்பதில்லை.
 கவர்ந்துகொள்கிறது.
 
 ஏ, பேதைப் பெண்ணே.
 உனக்குள் எப்படி இத்தனை
 ஒளிவீச்சுகள். மரணத்தைச்
 சிந்திக்க ஆரம்பித்தால்
 ஞானக்கதவு திறந்து
 கொள்கிறதா? ஞானத்துக்குப்
 பக்கத்தில் மரணமா? அல்லது
 மரணத்துக்குப் பக்கத்தில்
 ஞானமா?
 
 புலம்பாதே தமிழ்.
 புலம்பாதே. மரணத்துக்குக்
 கண்தெரியும். உன் அரும்புமுகம்
 பார்த்தால் அது உன் உயிரைப்
 பறிக்காது.
 
 இல்லை - மரணம் ஒரு
 புயல். அரும்புக்கும் சருகுக்கும்
 அதற்கு வித்தியாசம்
 தெரியாது.
 
 அதற்குப் பிறகு அங்கே
 மெளனம் நிலவியது.
 
 கண்ணீர் என்ற வீட்டுச்
 சொந்தக்காரன்
 வந்துவிட்டால்,
 வாடகைக்கிருந்த வார்த்தைகள்
 வெளியேற வேண்டியதுதானே.
 
 அவள் விழிப்பதற்கு
 முயன்றுமுயன்று தோற்றாள்.
 
 பிறகு மெல்ல மெல்ல
 இமைகளை மேலெழுப்பினாள்.
 எல்லாக் கண்களிலும் ஈரம்
 பார்த்தாள்.
 
 உணவு, மருந்து
 இரண்டுமில்லாமல் அவள் உயிர்
 காப்பது எப்படி என்று
 அவர்கள் உறைந்து
 நின்றார்கள்.
 
 தனக்கு அவள் தனிமை
 வேண்டுமென்றாள்.
 
 சற்றே தள்ளி இருங்களென்று
 சைகை செய்தாள்.
 
 நால்வரும் பேசவில்லை.
 நகர்ந்தனர்.
 
 அவள் உணர்ச்சிவசமானாள்.
 
 மிச்சமிருந்த உயிரையெல்லாம்
 உதட்டில் திரட்டி அவன்
 மார்பில் முத்தமிட்டாள்.
 
 நான் சொல்வதைக்
 கவனமாய்க் கேளுங்கள். நான்
 இங்கேயே இறந்துவிட்டால்,
 என் உடலைக் கரைக்குக்
 கொண்டுசென்று பூமியில்
 புதைக்காதீர்கள். பூமியில்
 இன்னும் எத்தனையோ
 உடல்களுக்கு இடம்
 வேண்டியிருக்கிறது. ஒருவருக்கு
 என் பிணக்குழியை விட்டுக்
 கொடுத்தேன் என்ற பெருமை
 எனக்கிருக்கட்டும்.
 
 உடம்பை எரித்துத்தானே
 கடலில் கரைப்பார்கள்.. என்
 உடம்பையே கடலில்
 கரைத்துவிடுங்கள். பசியால்
 சாகப்போகும் என் உடம்பு,
 மீன்களின் பசிக்கு
 உணவாகட்டும்.
 
 நம் காதலுக்கு
 மடிதந்த கடற்கரையைக்
 கேட்டதாய்ச் சொல்லுங்கள்.
 அந்தப் பூங்காவில், நம்
 காதலைக்
 கவனித்துக்கொண்டிருந்த
 அசோக மரங்களைக்
 கேட்டதாய்ச் சொல்லுங்கள்.
 பூமிக்குள் பதுங்கியிருந்து
 செப்டம்பரில் தலைகாட்டும்
 புல்வெளிகளைக் கேட்டதாய்ச்
 சொல்லுங்கள். அந்தத்
 தூங்குமுஞ்சி மரத்தின்
 சாயங்காலப் பறவைகளின்
 செளக்கியம் கேட்டதாய்ச்
 சொல்லுங்கள். சென்னை
 நகரத்தின் நடைபாதைத்
 தேநீர்க்கடைகளைக்
 கடைசியாய் நலம் கேட்டேன்
 என்று கண்டிப்பாய்ச்
 சொல்லுங்கள்.
 
 எனக்கு நல்லவர் என் தந்தை.
 என் கண்கள் வடிக்கும் கடைசி
 இரண்டு துளிகளில் ஒரு துளி
 அவருக்கு, ஒரு துளி உங்களுக்கு
 என்பதையும் நான் சொன்ன
 இதே வார்த்தைகளின்
 வரிசையில் அவருக்குச்
 சொல்லுங்கள்.
 
 அதற்குமேல் பேசமுடியாமல்
 அவள் இமைகளும் உதடுகளும்
 முடிக்கொண்டன.
 
 தன் இருகைகளிலும் அந்தச்
 சிதைந்த ரோஜாவைச்
 சிந்தாமல் சிதறாமல் அள்ளி,
 நம் காதல்மீது ஆணை.
 உன்னை உயிரோடு
 கரைசேர்ப்பேன்.
 இல்லையென்றால் நம் இரண்டு
 உடல்களும் கரைசேரும்
 என்று அவள் காதில் குனிந்து
 உறுதிமொழிந்தான்.
 
 அவள் கண்ணில் வழிந்த சுடுகண்ணீர்
 அவன் உதட்டில் விழுந்தது.
 
 கறுத்த மேகங்கள் வானத்தை வளைத்து
 முற்றுகையிட்டிருந்தன.
 
 சூரியனுக்கும் பூமிக்குமுள்ள தொடர்பு
 துண்டிக்கப்பட்டிருந்தது.
 
 பகல் இருட்டை அணியத் தொடங்கியிருந்தது.
 
 மேகம் சில துளிகளை, விட்டுவிட்டுச் சொட்டியது.
 
 சுங்கத்துறைப் படகொன்று வேட்டையில்
 எதுவும் சிக்காமல் வெறுங்கையோடு கரை
 திரும்பிக் கொண்டிருந்த நேரம் -
 
 கடலில் மிதக்கும் ஊசியைக்கூடக் கண்டறியும்
 ஒரு கழுகுக்கண் அதிகாரியின் கண்களில்
 அது தட்டுப்பட்டுவிட்டது.
 
 அதோ பாருங்கள். படகை அங்கே செலுத்துங்கள்.
 
 தண்ணீரை உழுது விரைந்தது படகு.
 
 ராமனின் கால்களுக்காக காத்துகிடந்த
 அகலிகைக் கல்லைப்போல தக்கவர்களின்
 கைகளுக்காகத் தண்ணீர்த்தவம் புரிந்த புட்டி
 கடைசியில் சேரவேண்டியவர்களின் கைகளில்
 சேர்ந்துவிட்டது.
 
 கண்டுபிடித்துவிட்டோ ம். கண்டுபிடித்து
 விட்டோ ம். ராயபுரம் கடற்கரையிலிருந்து
 தென்கிழக்கே நாற்பது முதல்
 நாற்பத்தைந்தாவது கிலோமீட்டரில்,
 பழுதுபட்டு நிற்கும் விசைப்படகில் காணாமல்
 போனவர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள்
 இரண்டு விசைப்படகுகள் தயாராகட்டும்.
 உணவோடும் மருந்துகளோடும் ஒரு
 மருத்துவரும் உடன் செல்லட்டும் அவர்களை
 இன்றே மீட்டு இரவுக்குள் கரைசேரட்டும்
 
 கட்டளைகள் பறந்தன.
 
 டீசல் குடித்து வயிறு புடைத்த விசைப்படகுகள்
 கடல் கிழக்கத் தயாராயின.
 
 இருள் கவிந்த வானம் சின்னத்தூறல்களை
 முணுமுணுத்தது.
 
 அடிவானம் வரைக்கும் அப்பிக்கிடந்த
 மேகங்கள் வானமெங்கும் தார்ச்சாலை
 போட்டதுபோல் அடர்த்தியாயிருந்தன.
 
 ஓநாயின் பாஷை கற்றுக்கொண்ட காற்று
 லேசாய் ஊளையிடத் தொடங்கியது.
 
 இப்போதோ பிறகோ வானம் திறந்து
 கொள்ளலாம் என்று தெரிந்தது.
 
 மீட்புப் பணிகளுக்குப் படகுகள்
 தயாரானபோது அகில இந்திய வானொலியின்
 அறிவிப்பொன்றைத் தொண்டை கட்டிய
 வானொலிப் பெட்டியொன்று துருப்பிடித்த
 குரலில் பேசியது.
 
 ஓர் அறிவிப்பு. வங்கக்கடலில்
 சென்னைக்குத் தென்கிழக்கே 240 கிலோமீட்டர்
 தூரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு
 மண்டலம் ஒன்று உருவாகியிருக்கிறது.
 அது புயலாக வலுவடைந்து மேற்கு
 வடமேற்குத் திசையில் நகரக்கூடும். அடுத்த
 48 மணிநேரத்தில் கடலோரப் பகுதிகளில்
 இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
 மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர்
 வேகத்தில் புயல்காற்று வீசக்கூடும்
 கடல் கொந்தளிப்பு ஏற்படலாம். மீனவர்கள்
 கடலுக்குள் செல்லவேண்டாம் என்று
 எச்சரிக்கப்படுகிறார்கள்.
 
 எங்கோ ஒரு மேகம் இருமியது.
 
 விரையத் தயாரான விசைப்படகுகள்
 விறைத்து நின்றன.
- 
				22
 
 மடியில் தமிழையும் வயிற்றில்
 நெருப்பையும் கட்டிக்கொண்டு
 கிடந்த கலைவண்ணன் வானிலை
 மாற்றம்கண்டு மனநிலை
 மாறிப்போனான்.
 
 ஏ. என்னவாயிற்று கடலுக்கு?
 பகல் ஏன் இருட்டை உடுத்தப்
 பார்க்கிறது. வானம் ஏன்
 காணாமல் போனது? சூரியனை
 மேகம் தின்றுவிட்டதா?
 
 என் கண்மணியின் வெப்பம்
 அதிகமாகும் வேளையில்
 காற்றின் வெப்பம் ஏன்
 குறைந்துகொண்டே போகிறது?
 
 அலைகள் ஏன் பேசுவதை
 நிறுத்திக்கொண்டன? கடல் ஏன்
 மெளனம் சாதிக்கிறது?
 மரணத்துக்கு முன்பே
 மெளனாஞ்சலியா?
 
 எங்கள்
 திசைகளைத் திருடிக்கொண்டது
 யார்? திசைகளைத்
 தெரிந்துகொள்ள இதுவரை
 சூரிய அடையாளம் இருந்தது.
 இப்போது அந்த அடையாளமும்
 அழிந்துவிட்டதே.
 
 அதுவும்
 சரிதான். பயணம்
 போகாதவர்களுக்குத் திசை
 எதற்கு?
 
 மீனவர்கள் படகின்
 விளிம்புகளுக்கு ஓடியோடி
 வானம் பார்த்தார்கள்.
 வானிலை போலவே முகம்
 இருண்டார்கள்.
 
 தமிழ். தமிழ். - அவன்
 கூப்பிட்ட அழைப்புக்குக் குரல்
 இல்லை.
 
 செடிக்குத் தெரியாமல்
 உதிர்ந்த சிறுமலரைப்போல
 நினைவுகள் அவளைவிட்டு
 நீங்கிவிட்டன.
 
 ஆனால், அவள் உதடுகள்
 மட்டும் முளையின்
 கட்டுப்பாட்டிலிருந்து
 விடுபட்டு முனகிக்
 கொண்டேயிருந்தன.
 
 எங்களோடு என்ன ஊடல்
 கடலே. ஏனிந்த இறுக்கம்?
 
 எங்கள் காற்றை எங்கே
 கடத்திவிட்டாய்?
 
 ஒன்று மட்டும் புரிகிறது.
 
 இப்போது நீ அடைந்திருப்பது
 அமைதி அல்ல. கோபமான
 மெளனம் அல்லது மெளனமான
 கோபம்.
 
 இதுவரை நாங்கள் பட்டதும்
 படுவதும் போதாதா?
 
 எங்கள் படகையே மரணத்தின்
 தொட்டிலாக்கி,
 தாலாட்டுக்கும் ஒப்பாரிக்கும்
 மத்தியில் ஒரு சங்கீதம்
 பாடிக்கொண்டிருந்தாயே.