இரத்த சோகை நோய் பற்றிய தகவல்கள்:-
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1/1782040_688964071125911_1198917803_n.jpg)
உடலில் ஏற்படும் வளர்ச்சி மாற்றத்தில் ரத்தத்தின் பங்கு மிக முக்கியமானது. மூச்சு விடுதலிலும் இதன் பணி உண்டு. பாதுகாப்புப் பணியும் இதற்கு உண்டு. உடலில் நீரியல் சார்ந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதும் இதுதான். ரத்தம் தான் உடல் வெப்பத்தையும் பேணுகிறது. ரத்தத்தின் செல்கள் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், திராம்போசைட்கள் எனப்படும் தட்ட ணுக்கள் ஆகியவை.
நல்ல உடல்நலத்துடன் உள்ள ஒரு மனிதனின் ரத்தத்தில் ஒரு கன மில்லி மீட்டரில் 45 முதல் 50 லட்சம் சிவப்பணுக்கள் இருக்கும். இந்தச் சிவப்பணுக்களின் சைட்டோபிளாசத்தில் ஹீமோகுளோபின் என்ற நிறமி உள்ளது. இதுதான் ரத்தத்தின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். சில நோய்களின்போது இந்த ஹீமோகுளோபின் அளவு மாறுபடும்.
ரத்த சோகையின் முக்கிய அறிகுறி, ஹீமோகுளோபின் குறைவுதான். சிவப்பு அணுக்களின் குறைந்த எண்ணிக்கையோ, ஹீமோ குளோபின் குறைந்த அளவோ அல்லது இரண்டுமோ சோகைக்குக் காரணமாக அமைகின்றன. ரத்த சோகை என்றால் போதிய ரத்தம் இல்லை என்று பொருள்.
ரத்த சோகையில் பலவகை உண்டு. பொதுவாக சிவப்பணுக்கள், ஹீமோகுளோபின் குறைவினால் ஏற்படும் சோகை நோய் பரவலாக ஏற்படும். ஹீமோகுளோபினால் ஆக்சிஜனை எளிதில் ஈர்த்துக்கொள்ள முடியும். அதேமாதிரி வெளியிடவும் செய்யும். ஆக்சிஜனை பல்வேறு திசுக்களுக்கு எடுத்துச் செல்லும் மிக முக்கியப் பணி சிவப்பு அணுக்களுடையது.
ரத்தம் நுரையீரலுக்கு செல்லும்போது சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின், ஆக்சிஜனை கிரகித்துக் கொள்கிறது. ஆக்சிஜன் கொண்ட தமனி ரத்தம் உடலெங்கும் பரவலாக வினியோகிக்கப்படுகிறது. அப்போது ஹீமோகுளோபினில் இருந்து ஆக்சிஜன் விடுபட்டு திசுக்களை அடைகிறது. ஒரு மனித உடலின், ரத்த எடையில் சராசரியாக 15 சதவீதம் ஆக்சிஜன் அடங்கியிருக்கும்.
இந்த ஹீமோகுளோபின் சிவப்பணுக்கள் குறைவால் ஆக்சிஜன் வினியோகம் குறைகிறது. தவிர, உடலால் ஈடு செய்ய முடியாத அளவுக்கு வேகமாக ரத்த இழப்பு ஏற்பட்டாலும் ரத்த சோகை ஏற்படும். ரத்தப் போக்கு பலமான காயங்கள் காரணமாகவோ, காசநோய் காரணமாக நுரையீரலில் இருந்தோ, இரைப்பைப் புண்ணால் இரைப்பைப் பையில் இருந்தோ ஏற்படலாம். கொக்கிப் புழுவால் ஏற்படும் தொற்றுநோய், சீதபேதி, மலேரியா போன்றவையும் ரத்த சோகைக்கான மற்ற காரணங்கள்.
மேலும் நாம் உண்ணும் உணவில் இரும்புச் சத்துகள் இல்லாவிட்டாலும் இது ஏற்படும். இடைவிடாமல் குழந்தை பெறுவது, தொடர்ந்து கருச்சிதைவுகள், மாத விலக்கின்போது அதிகமான அளவு ரத்தம் வெளியாதல் போன்றவை பெண்களுக்கு ரத்தம் சோகை ஏற்படக் காரணமாகின்றன.
ரத்த சோகைக்கு அறிகுறிகள் வெளிறிய கண்கள், தோல், நகங்கள் போன்றவையும், பலவீனமும்,களைப்பும் ஏற்படும். மூச்சிரைக்கும். ரத்த சோகை முற்றினால் மிகவும் தீமையாக அமையும். ஆனால் நாம் உண்ணும் உணவில் கீரை வகைகளையும், இரும்புச் சத்து அதிகமுள்ள பயறு, பருப்பு வகைகளையும், மொச்சை, இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றையும் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை வராமலே தடுத்துவிடலாம்.