FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on February 09, 2014, 08:00:39 PM

Title: ~ வெண்குஷ்டம் பற்றிய தகவல்கள்:- ~
Post by: MysteRy on February 09, 2014, 08:00:39 PM
வெண்குஷ்டம் பற்றிய தகவல்கள்:-

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1/1555473_685721724783479_272625156_n.jpg)


தோல் நோய்களில் மிகவும் கடுமையாக, கொடுமையாக உள்ளத்தை பாதிக்கும் தோல் நோய் எதுவென்றால் அது வெண்குஷ்டம்தான்! இதற்குப் பிறகு தான் "சோரியாஸிஸ்' என்கிற, மிகவும் அரிப்புடன் கூடிய, தற்கொலை செய்யக் கூட தூண்டக் கூடிய செதில் படை நோய் வருகிறது. இந்த வெண்குஷ்டத்தால் உடலுக்கு ஒரு துளி பாதிப்பும் இல்லை என்றாலும், அக்கம், பக்கம், உற்றார், உறவினர் கேட்கும்போதும், பார்க்கும்போதும் ஒரு குற்ற உணர்வு ஏற்படும்.

வெண்குஷ்டம் காரணமாக ஒருவரின் உடல் நலமோ அல்லது அவருடன் தொடர்புடையவர்களின் உடல் நலமோ எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. அது தொற்று நோயும் அல்ல. உலகில் "விடிலிகோ' எனப்படும் வெண்படை நோய் ஒரு சதவீத மக்களிடம் மட்டுமே காணப்படுகிறது.

இந்த நோய் காரணமாக ஆண்களை விட பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுவதாக ஒரு கருத்து உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30 முதல் 40 சதவீத நோயாளிகளின் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் இந்த நோய் வர வாய்ப்பு உண்டு. அன்றாட வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் சில நிகழ்வுகளும், பழக்க வழக்கங்களுமே இந்த நோய் வர காரணமாக உள்ளன.

உதாரணமாக அடிக்கடி உராய்வுக் காயங்கள் ஏற்படும் கால் மூட்டு, கை மூட்டு, மணிக்கட்டு போன்ற இடங்களில் வெண்குஷ்டம் வரலாம். சிறிய வெட்டுக் காயங்கள், நகம் கொண்டு பிராண்டிய இடங்களிலும் இந்த நோய் வரலாம். பெண்கள் தரமற்ற குங்குமப் பொட்டை வைத்துக் கொள்வதால் நெற்றியிலும், பிளாஸ்டிக் மணி பர்ûஸ வைத்துக் கொள்பவர்களுக்கும் வெண்குஷ்டம் வர வாய்ப்பு உண்டு.

மேலும் சிலர் அணியும் ரப்பர் செருப்புகளால் கால்களிலும், மூக்குக் கண்ணாடியின் சட்டம் படும் காதுப் பகுதிகளிலும், இறுக்கமாக அணியும் பாவாடை, உள்பாவாடை, சல்வார் நாடாக்களின் அழுத்தத்தாலும் அந்த இடங்களில் வெண்குஷ்டம் வர வாய்ப்பு அதிகம். சூரிய ஒளி அதிகம் படும் முகம், முதுகு, கைகளில்தான் வெண்குஷ்டம் முதலில் அதிகமாக தெரிய வரும். தொடக்கத்தில் முகம், அக்குள், தொடை இடுக்குகள், மார்பகக் காம்பு, பிறப்பு உறுப்பு ஆகியவற்றில்தான் அதிகமாக வெண்குஷ்டம் ஏற்படும்.

பொதுவாக, இந்த வெண்படை உடலின் இரு பக்கங்களிலும் காணப்படும். எனினும் சில நேரங்களில் ஒரு பக்கமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நரம்பு மண்டலத்தின் பகுதியிலோ காணப்படும். சிலருக்கு இந்த நோய் ஏற்பட்டு அது பல காலம் அப்படியே இருக்கும். சிலருக்கு மெதுவாகப் பரவலாம். மற்று சிலருக்கு அது மடமடவெனப் பரவி உடலின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கலாம்.

மனிதனின் தோலுக்கு நிறம் கொடுக்கும் பொருள் "மெலனின்' எனப்படும் நிறமி. மெலனின் நிறமியின் அடர்த்தியைப் பொருத்து, அது அதிகம் இருந்தால் தோலின் நிறம் கருப்பாகவும், குறைவாக இருந்தால் வெளுப்பாகவும் அமைகிறது. இந்த மெலனின் - மெலனோசைட்டுகள் என்ற சிறப்புச் செல்களை தயாரிக்கின்றன. தோலின் மேற்பரப்பில் அமைந்துள்ள "எபிடெர்மிஸ்' என்ற பகுதியில் மெலனின் நிறமிகள் உள்ளன. வெண்குஷ்டத்தால் பாதிப்புக்குள்ளான பகுதியில் சிறப்புச் செல்களான மெலனோசைட்டுகள், அழிக்கப்படுவதால் மெலனின் நிறமிகள் போதிய அளவு தயாரிக்கப்படுவதில்லை. எனவே அந்தப் பகுதி நிறமற்ற வெளுப்பாக மாறுகிறது.

இந்த நோய் ஏற்பட்டதற்கான புறக்காரணங்கள் தெரிந்தால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக குங்குமம் வைப்பதால் நெற்றியில் அந்த இடம் வெளுப்பாகத் தெரிந்தால் குங்குமத்துக்குப் பதிலாக வேறு பொருளைப் பயன்படுத்த வேண்டும். செருப்பு, உள்ளாடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்