FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on November 06, 2013, 04:45:03 PM

Title: ~ தோல் நோய்கள் & ஓர் அறிமுகம்..! ~
Post by: MysteRy on November 06, 2013, 04:45:03 PM
தோல் நோய்கள் & ஓர் அறிமுகம்..!

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/q77/1378705_523030391123618_1812449841_n.jpg)


மனித உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல் தான். கிட்டத்தட்ட இரண்டு சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. உடலின் மொத்த எடையில் 16 முதல் 20 சதவீதம் தோலின் எடை இருக்கும். கண், காது, மூக்கு, இதயம், சிறுநீரகம், மூளை போன்றவற்றைப் போன்றே, தோலும் மிக முக்கியமான உறுப்பாகும்.

தோல் என்பது, ஒரு மனிதனுடைய தலை முதல் கால் வரை இருக்கிறது. அதாவது, முழுவதுமாகத் தோலால் மூடப்பட்ட உரவம்தான் மனித உடல். ஒரு மனிதனைப் பார்க்கும் போது, கண்ணுக்கு முதலில் தெரிவது அந்த நபரின் தோல்தான். அந்த வகையில், ஒரு மனிதனைப் பொறுத்தவரை தோல் ஒரு முக்கியமான உறுப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வளவு முக்கிய உறுப்பான தோலில் வரக்கூடிய நோய்கள் ஏராளம். இதுவரை உலகில் கண்டறியப்பட்டுள்ள தோல் நோய்களின் எண்ணிக்கை 600&க்கும் மேல். அவற்றை ஆராய்ந்து, அவை என்ன மாதிரியான நோய்கள், எதனால், எப்படி வருகின்றன என்பதைத் தெரிந்து கொண்டு, அவற்றுக்கு ஏற்றார்போல் சிகிச்சை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தட்பவெப்ப நிலை

ஒரு மனிதன், அவன் வசிக்கும் பகுதியில் நிலவும் தட்ப வெப்ப நிலை, நாகரிகம், செய்யும் தொழில், பழக்க வழக்கங்கள், அணியும் உடை, உணவுப் பழக்கம் போன்ற பலவற்றைப் பொறுத்து அவனுக்கு தோல் நோய்கள் வரக்கூடும். அதோபோல், மனிதனுக்கு மனிதன் வரக்கூடிய நோய்களும் வித்தியாசப்படும்.

ஓர் இந்தியனுக்கு வரக்கூடிய தோல் நோயும், வெள்ளைக் காரர்கள் என்று சொல்லப்படும் வெளிநி£ட்டினருக்கு வரக்கூடிய தோல் நோயும் ஒன்றாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில், இருவருடைய தோலின் தன்மைகளில் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.
எந்த தோல் நோயாக இருந்தாலும், முதலில் பார்க்கும் போது அவை ஒரே மாதிரியாகத்தான் தோற்றமளிக்கும். தோலில் ஏதோ பிரச்னை என்பதை கண்ணால் பார்த்தாலே தெரிந்து விடும். ஆகையால், மற்ற நோய்களைப்போல், தோல் நோய் குறித்து டாக்டர் என்ன சொல்கிறாரோ அதுதான் உண்மை என்று நம்ப வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில், பாதிக்கப்பட்ட நபரே, தன்னுடைய கண்ணால் தோலில் வந்திருக்கும் நோயை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருப்பார். தோலில் வந்திருக்கும் நோய், சரியாகிக் கொண்டிருக்கிறதா, இல்லை பிரச்னை தீவிரமாகிக் கொண்டிருக்கிறதா என்பதை அவரால் கண்டிறிந்து கொள்ள முடியும்.

ஆக, பாதிக்கப்பட்ட ஒருவரே அவருடைய கண்ணாலேயே பிரச்னையைப் பார்த்து நிலைமையைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலையில், அது எந்த வகையான தோல் நோய் என்பதைக் கண்டுபிடித்து அதற்கு ஏற்ற சிகிச்சை முறையைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதே நேரத்தில், மிகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும் என்பதுடன், மருத்துவர்களுக்கு அது ஒரு தீவிர சவாலாகவே பல சமயங்களில் அமையும் என்பதே உண்மை.