FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on October 18, 2013, 02:28:08 PM

Title: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 02:28:08 PM
சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp84.jpg&hash=2e0292f5467ed211df389c8242b4f74bf047f733)

''உடல் நலம் பாதிக்கப்படும்போது, மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதைக் காட்டிலும், எவற்றைச் சாப்பிடக் கூடாதோ... அவற்றைத் தவிர்த்தாலே, பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்திவிட முடியும். கொஞ்சம் மெனக்கெடலும், சமையலறையில் கூடுதல் கரிசனமும் முறையான மருத்துவத்துடன் சேர்ந்து இருந்தால் மட்டுமே எந்த நோய்க் கூட்டத்திலிருந்தும் தப்பிக்கலாம்'' என்கிற சித்த மருத்துவர் சிவராமன், நோய் வந்தால் உணவு விஷயத்தில் எவற்றைத் தவிர்க்கலாம்... எவற்றையெல்லாம் சேர்க்கலாம் என்பது குறித்து விளக்குகிறார்.
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 02:34:55 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp85.jpg&hash=a31e39446cb212bf7a60182bd187f2055bb6e9d0)

புளி, உருளைக்கிழங்கு, வாழைக்காய், கொத்தவரங்காய், காராமணி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் குளிர்பானங்கள், செரிமானத்துக்குச் சிரமம் தரும் மாவுப் பொருட்களைத் தவிர்க்கவேண்டும்.

வாயுவை வெளியேற்றும் லவங்கப்பட்டை, மிளகு, சீரகம், புதினா, பூண்டு, முடக்கத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் வாதத்தைக் குறைக்கலாம். 
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 02:45:17 PM
பித்தம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp85a.jpg&hash=665229edc90dd9371569abc6338d6276aa3dc7ba)

உணவில் காரத்தைக் குறைக்கவேண்டும். கோழி இறைச்சியைத் தவிர்க்க வேண்டும்.

குறைந்த அளவு கோதுமை, கைக்குத்தல் அரிசி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, தனியா, சீரகம், எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி ஆகியவை பித்தத்தைக் குறைக்கும்.
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:09:13 PM
கபம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp86.jpg&hash=71832eef219e9ea32a2a32d40294e7885e41415c)

பால், இனிப்பு, தர்ப்பூசணி, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் இவற்றைத் தவிர்க்கவேண்டும். 
சுரைக்காய், வெண்பூசணி மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் இவற்றை மூன்று முதல் ஐந்து மாதங்கள் கண்டிப்பாகத் தவிர்க்கலாம்.
அப்படி முடியாதபட்சத்தில், மிளகு சேர்த்துச் சாப்பிடலாம்.

பழங்களில் கமலா ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை வேண்டாம்.
பால், தயிர், இனிப்பு இந்த மூன்றும் நுரையீரலில் கபத்தைச் சேர்ப்பதால் தவிர்த்துவிடுவது நல்லது. மோர், மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை கபத்தைக் குறைக்கும்.
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:10:33 PM
சிறுநீரக நோய் 

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp86a.jpg&hash=956036e582d3da3e268333a59d7b811ace0d8c93)

அதிக உப்பு, ஊறுகாய்கள், பொட்டாஷியம் நிறைந்த பழங்களான வாழை, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய் தவிர்க்க வேண்டும்.  சோடியம் நிறைந்த பழங்களான பைனாப்பிள், பப்பாளி, கொய்யா மற்றும் காய்கறிகளில் பீட்ரூட், நூல்கோல், கேரட், பருப்புக் கீரை இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தினமும் மூன்று முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர்.  வாரம் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளை அவசியம் சேர்க்க வேண்டும்.
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:11:54 PM
ஆஸ்துமா

வாயுவை உண்டாக்கும், செரிக்க நேரமாகும் உணவுகள், எண்ணெய்ச் சத்துள்ள உணவுகள், இனிப்பு வகைகள் தவிர்க்கவேண்டும். மருந்து எடுத்துக்கொள்பவர்கள், எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை இவற்றைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. 
சிவப்பு அரிசி அவல், புழுங்கலரிசிக் கஞ்சி, திப்பிலி ரசம், மிளகு ரசம், தூதுவளை ரசம், முருங்கைக்கீரைப் பொரியல், லவங்கப்பட்டைத் தேநீர், மணத்தக்காளி வற்றல், புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், சீரணத்தை வேகப்படுத்தும் எளிய உணவுகளைச் சாப்பிடலாம். பல் துலக்கியதும் 2, 3 கப் வெதுவெதுப்பான நீர் அருந்துவது நல்லது. 
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:13:11 PM
மலச்சிக்கல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp87.jpg&hash=82bd078e3826e4dcaa92ccff84871503ca16862c)

பிஸ்கட், மைதாவில் செய்யப்பட்ட பீட்சா, பர்கர், பரோட்டா போன்ற கடின உணவுகளைத் தவிர்க்கவேண்டும். தினசரி மூன்றரை முதல் நான்கு லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்கவேண்டும். நார்ச் சத்து அதிகம் உள்ள பிடிகருணை, வாழைத்தண்டுப் பச்சடி, பாசிப்பருப்பு சேர்த்த கீரை, வெந்தயம், கைக்குத்தல் அரிசி, பட்டை தீட்டாத கோதுமை நல்லது. 

இரவு உணவுக்குப் பிறகு ஒரு வாழைப்பழம், சில துண்டுகள் பப்பாளி சாப்பிடலாம்.  மாலை நேரத்தில் 10 முதல் 15 காய்ந்த திராட்சை எடுத்துக்கொள்வது நல்லது.
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:14:32 PM
சர்க்கரை நோய்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp88.jpg&hash=e0c0870491ae945ddd3b1cb0bf49627c4bda56fd)

சர்க்கரை, பட்டை தீட்டிய அரிசி, கோதுமை, கேரட், பீட்ரூட், பூமியில் விளையும் கிழங்குகள் குறிப்பாக உருளைக்கிழங்கைத் தவிர்க்கவேண்டும்.     கொத்தவரங்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, அவரை, வெண்டை, கோவைக்காய், பாகற்காய், கத்தரிக்காய், சுண்டை வற்றல், முருங்கைக்கீரை, கொத்தமல்லி, புதினா மற்றும் துவர்ப்புள்ள பழங்கள் மிகவும் நல்லது.

புழுங்கல் அரிசி, தினை அரிசி, வரகரிசி, மாப்பிள்ளை சம்பா அவல் என  வாரம் இரண்டு நாட்கள் சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கும்.
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:15:49 PM
உயர் ரத்த அழுத்தம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp88a.jpg&hash=a0975c978246a414b2002d961efbb1faf250b6dc)

அதிக உப்பு, ஊறுகாய், மிளகாய்ப்பொடி, அசைவ உணவைத் தவிர்க்கவேண்டும். 

வெந்தயம், சீரகம் மிகவும் நல்லது. மதிய வேளையில் ஐந்து முதல் பத்து பூண்டு பற்கள், தினசரி 50 கிராமுக்குக் குறையாமல் வெங்காயம் மற்றும் வாழைப்பூ, சுரைக்காய், பீர்க்கங்காய், வாழைத்தண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:17:28 PM
அலுப்பு / சோர்வு

அதிகம் புளி சேர்த்த உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்க்கவேண்டும். 
இரவில் நல்ல செரிமானத்தைத் தரக்கூடிய, தூக்கத்துக்குத் தடையில்லாத எளிய உணவுகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். நெல்லிக்காய், காய்ந்த திராட்சை, உலர் அத்தி தினசரி காலை வேளையில் சாப்பிடும்போது, அன்று முழுவதும் உற்சாகத்தைத் தரும்.  தினசரி 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:18:28 PM
மூட்டுவலி

'புளிர் துவர் விஞ்சின் வாதம்’ என்கிறது சித்த மருத்துவம்.  அதிகப் புளிப்பு, காரக்குழம்பு, புளியோதரை, ப்ரென்ச் ஃப்ரை, உருளைக்கிழங்கு பொடிமாஸ், வாழைக்காய் வறுவல் தவிர்க்கவும்.
தினசரி 40 நிமிட நடை, 15 நிமிட ஓய்வு,  30 நிமிடம் மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், 4, 5 யோகாசனங்கள், கால்சியம் நிறைந்த கீரை, ஒரு கப் மோர், ஒரு கப் பழத்துண்டுகள் இவற்றை தினசரி மேற்கொள்ளவேண்டும்.
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:19:34 PM
ரத்தசோகை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp89%25281%2529.jpg&hash=217bcf5d638429c97c9b1913c243c1632fe789a1)

எள், பனைவெல்லம், பச்சைப்பயறு, சிவப்புக் கொண்டைக்கடலை, பெரிய நெல்லிக்காய், கீரைகளில் சிறுகீரை, முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, பசலைக் கீரை, தண்டுக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை... பழங்களில் காய்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, பப்பாளி தினமும் சேர்க்கவேண்டும். 
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:20:48 PM
காய்ச்சல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp90.jpg&hash=0c6fe759630de54e7d10a77a1ec917b63c5ce4fe)

கடின உணவுகள், வறுத்தல், பொரித்த உணவு வகைகள், கிழங்கு வகைகளைத் தவிர்க்கவேண்டும். கண்ணுக்கும் உடலுக்கும் அதிக அளவு ஓய்வு கொடுக்கவேண்டும். 

காய்ச்சலுக்கு மருந்து, பட்டினிதான். இன்றைய காலத்தில் உடல்வலுவுக்கு பட்டினி இருப்பதும் நல்லது அல்ல. இட்லி, இடியாப்பம், புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்ற எளிய உணவுகளை குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம்.  சுக்கு, மிளகு, ஓமம் சேர்த்த கஷாயம் நல்லது. குழந்தைகளுக்கு சீரகக் கஷாயம் நல்லது. 
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:21:58 PM
உடல் பருமன்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp90a.jpg&hash=ecba909e22c78eca1cd988fa1da5dfdf2d28ac82)

உடல் பருமனைக் குறைக்க, பட்டினி ஒரு தீர்வு அல்ல. சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

அளவான சாப்பாடு, குறைந்த கலோரி நிறைந்த நார்ப் பொருட்கள். ஒரு கப் (150 கிராம்) சாதத்தை மூன்று பங்காகப் பிரித்து அதாவது, ஒரு பங்கு சாதத்துடன் குழம்பு, ரசம், மோர் என சாப்பிடவேண்டும்.  கொள்ளு ரசம், கொள்ளு சுண்டல் அடிக்கடி சாப்பிடலாம்.
நம் உடலில் உள்ள ரத்த அமிலத்தன்மையை பழங்களும், தாவர உணவுகளும் சுலபத்தில் மாற்றி சீர்செய்துவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள் ஒன்றுக்கு 250 கிராம் முதல் 500 கிராம் வரை சாப்பிடலாம். மூன்று வித வண்ணங்களில் உள்ள பழங்களைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் எல்லாச் சத்துக்களும் கிடைத்துவிடும்'' என்று கூறும் இயற்கை மருத்துவர் ரத்தின சக்திவேல், பழங்கள், தானியங்கள், சூப் வகைகளின் சத்துக்களைப் பட்டியலிட்டார். 
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:23:19 PM
பழங்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp91.jpg&hash=1b19e55355a1d7e824556716ef63ebfc8775a763)

வாழைப்பழம்: தினமும் ஒன்று முதல் ஐந்து வரை சாப்பிடலாம். அதிக குளுகோஸ் இருக்கிறது.  மலச்சிக்கலைப் போக்கும். மூலம், வயிற்றுப்புண்களை மட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.
மாம்பழம்: ஒரு வேளைக்கு 500 கிராம் வரை சாப்பிடலாம். மாலைக்கண் நோயை விரட்டும். மலச்சிக்கலை சரியாக்கும். தோலுக்கு மிகவும் நல்லது. 
பலாப்பழம்: தேனுடன் சேர்த்து ஒரு வேளை உணவாகச் சாப்பிடலாம். ஆர்வக்கோளாறில் அதிக சுளைகளைச் சாப்பிட்டு வயிற்றுப் பிரச்னை ஏற்பட்டாலும் இதன் கொட்டையை வறுத்துச் சாப்பிட்டாலே சரியாகிவிடும்.
பப்பாளி: செரிமானத்தைத் தரும். சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாகவும் இருக்கிறது.  தோலில் பளபளப்பைக் கூட்டும். மலச்சிக்கலை விரட்டும்.  வயிற்றுப் பூச்சிகளை விரட்டும்.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அன்னாசிப்பழம்: அகோரப் பசியைப் போக்கும்.  உடல் வனப்பு கூடும். குரல் வளம் பெருகும்.
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:24:46 PM
தானியங்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp92.jpg&hash=5116d208970542ec13900cb2b6c139ded553fdfe)

முளைவிட்ட தானியங்கள் மற்ற உணவுகளைப் போல் உடனடியாகச் செய்து சாப்பிடக்கூடியது அல்ல. எட்டு மணி நேரம் முதல் ஓரிரு நாட்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளதால் சோம்பலாகக் கருதி தவிர்த்துவிடுகிறோம்.
முளைவிட்ட தானியங்களை சுலபமான முறையில் தயாரிக்கலாம்.  'ஸ்ப்ரவுட்ஸ் மேக்கர்’ இருப்பதிலேயே சுலபமானது. கீழ் அடுக்குகளில் தானியமும் மேல் அடுக்கில் தண்ணீரும் ஊற்றிவைத்தால், தண்ணீர் சொட்டுச் சொட்டாக இறங்கும்.  எட்டு முதல் 12 மணி நேரத்தில் தானிய முளை வரும். நாம் கழுவிச் சாப்பிடலாம். தண்ணீரை அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ ஊற்றினால், சரியாக முளைக்காது.   

பொதுவாக ஊறிய தானியங்களில் சத்துக்கள் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். முளைத்து தோல் வெடிக்கும்போது அதில் மிக அதிக அளவு வைட்டமின்களும், தாது உப்புக்களும் சேரும். இதை மாவாக அரைத்தும் அருந்தலாம். முளை தானியமாக சாலட் செய்தும் சாப்பிடலாம்.  கடைகளில் விற்கும் பாக்கெட் முளைதானியங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும், முளைகட்டிய தானியங்களை ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள். 
முளைகட்டிய தானியங்கள் மிகுந்துவிட்டால், அதை உலர வைத்து அரைத்துக் கஞ்சி, அடை அல்லது சப்பாத்தியாகச் செய்து சாப்பிடலாம். 
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:25:50 PM
எள் முளைப்பால்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp93.jpg&hash=2e9ffc67c4a9fde77389ba03a6a828b37d193a54)

எள்ளில் கருப்பு எள், வெள்ளை எள் இரண்டையும் முளைக்க வைத்துச் சாப்பிடலாம்.  வெள்ளை எள்ளை நன்றாகக் கழுவி, மண் இல்லாமல் அரித்து தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத் துணியில் கட்டித் தொங்கவிட வேண்டும். முளைத்த எள்ளை தண்ணீர்விட்டு அரைத்து, வெல்லம், பேரீட்சை சேர்த்துச் சாப்பிடலாம். 
மருத்துவப் பலன்கள்:  உடல் பருக்க விரும்புபவர்கள், அடிக்கடி ஒரு பிடி முளைகட்டிய எள்ளை சாப்பிடலாம். 
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:27:19 PM
கொள்ளு முளைப்பால்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp94.jpg&hash=db6c03e647bed56be3d3f2dd259557422d39a079)

உடல் மெலிந்தவர்கள் எள்ளை நாடுவதுபோல, உடல் பருமனாக இருப்பவர்கள், மூட்டு வலி உள்ளவர்கள் அடிக்கடி கொள்ளுப் பாலையும் அருந்தலாம்.
கொள்ளுப் பயறை எட்டு முதல் 12 மணி நேரம் நீரில் ஊற வைத்து ஈரத் துணியால் கட்டிவிடுங்கள்.  முளைவிட்டதும், அரைத்து பால் எடுத்து அருந்தலாம். 
மருத்துவப் பலன்கள்: குதிரைக்கு இணையான ஆற்றலைப் பெற, அடிக்கடி கொள்ளு முளைப்பால் சாப்பிட, உடல் பலம் பெறும். கொழுப்பு கரைந்துவிடும்.
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:28:03 PM
கறுப்பு உளுந்து முளைப்பால்

உளுந்தை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற ஈரத் துணியில் கட்டித் தொங்கவிடுங்கள்.  12 மணி நேரத்தில் முளைவிட்டுவிடும்.  இதை நீர் சேர்த்து அரைத்து பால் எடுக்கலாம். 
மருத்துவப் பலன்கள்: உடல் போஷாக்குடன் இருக்கும்.  குளிர்ச்சி மிகுந்த உணவு.  தாய்ப்பால் அதிகரிக்கும். உடல் மெலிந்தவர்கள் புஷ்டியாகிவிடுவார்கள். 
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:28:59 PM
கொண்டைக்கடலை முளைப்பால்

கொண்டைக்கடலை ஊறி, முளைவிட 24 மணி நேரம் ஆகும்.  12 மணி நேரம் ஊறவைத்து ஈரத் துணியில் கட்டி முளைவிட்டதும் அரைத்துப் பால் எடுத்துப் பருகலாம். 
மருத்துவப் பலன்கள்: அதிக புரதச் சத்து நிறைந்தது. வளரும் குழந்தைகள், கடின உழைப்பாளிகள்,  விளையாட்டு வீரர்கள் சாப்பிட்டுவந்தால், ஆற்றல் அதிகரிக்கும்.   பச்சைப்பயறு முளைப்பால்
எட்டு மணி நேரம் ஊறவைத்து இரண்டு முறை நன்றாக அலசி, ஈரப் பருத்தித் துணியில் கட்டி எட்டு மணி நேரம் முளைக்கவிடலாம்.  இதனுடன் நீர் கலந்து மிக்ஸியில் அடிக்கவும்.  பச்சைப் பயறு பாலாகக் கிடைத்ததும், இதில் தேன், வெல்லம் சேர்த்து காலை உணவாகச் சாப்பிடலாம்.   
மருத்துவப் பலன்கள்: வளரும் குழந்தைகள், பெரியவர்களுக்கு மிகவும் நல்லது.  சர்க்கரை நோயாளிகள் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடலாம்.
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:30:02 PM
கோதுமை முளைப்பால்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp95.jpg&hash=af418e4fa3ea00bba0632713e1f99bff920d528d)

பஞ்சாப் கோதுமையைக் குறைந்தது எட்டு முதல் 12 மணி நேரம் ஊறவைத்து ஈரத் துணியில் கட்டி.  காற்றோட்டமான அறையில் தொங்கவிட வேண்டும். எட்டு மணிக்கு மேல் ஊறவைத்தால் புது நீர் மாற்ற வேண்டும்.  கோதுமை முளைவிட, 12 முதல் 18 மணி நேரம் ஆகும்.  முளைத்த கோதுமையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து 150 மி.லி. தண்ணீர் சேர்த்து அரைத்து, தேன், வெல்லம், மிளகுத்தூள் கலந்து பருகலாம். 
மருத்துவப் பலன்கள்:  புற்றுநோய் வீரியத்தைக் குறைக்கும். ஊட்டச்சத்தானது. கொழுப்பைக் குறைக்கும். ரத்தவிருத்திக்கு நல்லது.
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:31:04 PM
கம்பு முளைப்பால்

8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, 12 மணி நேரம் ஈரத்துணியில் அல்லது முளை தானியப் பாத்திரத்தில் வைத்தால், முளை கிளம்பி வரும். 
அடிக்கடி ஒரு கைப்பிடி முதல் இரண்டு கைப்பிடி அளவுக்குச் சாப்பிடலாம். நீர் விட்டு அரைத்து பால் எடுத்துக் காய்ச்சி அருந்தலாம். 
மருத்துவப் பலன்கள்:  உடலில் தெம்புகூடும்.  சக்தி அதிகரிக்கும். உடல் யானை பலம் பெறும். திடகாத்திரமாக இருக்கும்.
இதேபோல் கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், பார்லி, சோயா, வெந்தயம், வேர்க்கடலையை வைத்துத் தயாரிக்கலாம்.
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:32:27 PM
மூலிகை சூப் வகைகள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp96.jpg&hash=f2054dfb8598cab1b8c5a9187ac8e848ca1e7c35)

சா£ப்பிடுவதற்கு முன்பு சூப் சாப்பிடும் வழக்கம் இன்று அதிகரித்துள்ளது.  சூப் நல்ல பசியைத் தூண்டும். அதிலும் மூலிகை சூப் குடித்து வந்தால், நோயைக் கிட்ட நெருங்கவிடாது.  பொதுவாக சூப் மூலம் 50 கலோரி சக்தியும், கூடவே முளைதானியப்பால், பவுடர்கள் கலப்பதால் 100 கலோரி சக்தியையும் பெறலாம். காலை, மாலை டீ, காபிக்குப் பதிலாக இந்த வகை சூப் சாப்பிட்டுப் பாருங்கள்... உடலில் தெம்பும் ஆரோக்கியமும் கூடும்!
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:33:41 PM
முடக்கத்தான் சூப்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp97.jpg&hash=ffd0f96debbb884dd56963706c627541e2daa70f)

50 முதல் 75 கிராம் முடக்கத்தான் இலை (அ) முடக்கத்தான் பொடி மூன்று டீஸ்பூன் எடுத்து நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும். இதில் வெங்காயம், தக்காளி, காரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, இஞ்சி சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு மசிக்கவும்.  இரண்டு டீஸ்பூன் சோள மாவு சேர்க்கலாம். 
மருத்துவப் பலன்கள்: 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, சர்க்கரை நோய், வாதம், வாயுத் தொல்லை, வயிற்றுப் புண், முடக்குவாதம், மூட்டுவலி, பக்கவாதம் குணமடையும். உடல் வலுப்பெறும். 
வல்லாரை சூப்
50 கிராம் வல்லாரைக் கீரையைப் பொடியாக நறுக்கி, பசுமை மாறாமல் தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து, கூடவே விரும்பிய காய்கறிகளைச் சேர்த்துக் கொதித்ததும், மசித்து வடிகட்டவும்.  இதில் சிறிது கோதுமை மாவு கலந்து தயாரிக்கலாம். 
மருத்துவப் பலன்கள்:  நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சி, குடல்புண், மாலைக்கண் நோய் சரியாகும். 
பொன்னாங்கண்ணி சூப்
75 கிராம் பொன்னாங்கண்ணிக் கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி 250 மில்லி தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.  இதனுடன் 50 கிராம் காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கொதித்ததும், மிளகுத்தூள், சீரகத்தூள், இரண்டு டீஸ்பூன் கேழ்வரகு மாவைக் கலந்து இறக்கவும்.  விருப்பப்பட்டால் ஐந்து சொட்டு எலுமிச்சைச் சாறு, இந்துப்பு சேர்க்கலாம். 
மருத்துவப் பலன்கள்: உடலில் தேமல், சொறி சரியாகும். ரத்தசோகை விலகி, முகம் பொலிவு பெறும்.  குடல்புண், பித்தம் அகலும்.  பொன்னிறம் கூடும்.  கண்ணுக்கு மிகவும் நல்லது.   
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:34:41 PM
துளசி சூப்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp98.jpg&hash=f9bae8fceae31c7da9ae35a952c8dc84b269d95d)

ஒரு கைப்பிடி துளசி அல்லது 10 கிராம் துளசிப் பொடியை நீர் சேர்த்து,  50 கிராம் காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து மசிக்கவும். இதில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பருகவும்.
மருத்துவப் பலன்கள்:  கபத்தைப் போக்கும். கல்லீரல் வீக்கம், பல் வலி குறையும்.  மூச்சுப்பிடிப்பு, விஷக்காய்ச்சல், ஆஸ்துமா சரியாக்கும். 
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:35:26 PM
கொத்தமல்லி சூப்

ஒரு கட்டு கொத்தமல்லியை நன்றாகக் கழுவி, தண்டுடன் பொடியாக நறுக்கி நீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.  இதனுடன் பீன்ஸ், முருங்கைக்காய், தக்காளி, வெங்காயம், புதினா, பூண்டு, இஞ்சி, மிளகுத்தூள், சீரகத்தூள் முளை தானியப்பால் சேர்த்து அருந்துங்கள். 
மருத்துவப் பலன்கள்: வாயுத் தொல்லை, வயிற்றுப் பொருமல், அஜீரணம், பித்தம் இவற்றைச் சரிசெய்யும்.  சளி, இருமல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
Title: Re: ~ சத்துக்கு சத்து... சுவைக்கு சுவை! ~
Post by: MysteRy on October 18, 2013, 04:36:34 PM
முருங்கைக்கீரை சூப்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp99.jpg&hash=5a85b8f3a90cf80d5708acb2986e320298cc8d9f)

75 கிராம் காய்கறிக் கலவையை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். ஒரு கட்டு முருங்கை இலையை உதிர்த்து, கழுவி நீர்விட்டு வேகவிடவும். இதில் மசித்த காய்கறிக் கலவையைப் போட்டு மிளகுத்தூள், சீரகத்தூள், இரண்டு டீஸ்பூன் சோளமாவு அல்லது முளைதானியப்பாலைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

மருத்துவப் பலன்கள்: உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, நல்ல குணம் தெரியும். நரம்புத் தளர்ச்சி, பெண்களுக்கு அதிக உதிரப்போக்கும் சரியாகும். எலும்பு வலுவடையும்.