கேழ்வரகு புட்டு மாவு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2013%2F11%2Fmdaymu%2Fimages%2Fp60.jpg&hash=8f0eb1e659393b4a160a911c7fbe26080207d72a)
''என் மாமியார் சமைக்கும் பல சத்துணவுகளில் புட்டு மாவும் ஒன்று. சமைக்கும்போதே புட்டு மாவின் மணமும் சுவையும் கமகமக்கும். என் வீட்டில் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவதும் இதைத்தான்'' என்கிறார் தேனியைச் சேர்ந்த ஜோதி ராணி அருள் அழகன். வீட்டில் அனைவரும் தெம்புடன் இருக்க அடிக்கடி சமைக்கும் உணவு ரெசிபியும் இதுதானாம். ''இந்தப் புட்டு மாவை, சூடாகச் சாப்பிட்டால் தும்மல், மார்புச் சளி பிரச்னைகூட இருந்த இடம் தெரியாமல் பறந்து போகும்'' என்கிற ஜோதி, புட்டு மாவு செய்முறையைப் புட்டுப் புட்டு வைத்தார்.
தேவையான பொருட்கள்:
கேப்பை மாவு - ஒரு கப், பனங்கற்கண்டு - 50 கிராம், முற்றிய தேங்காய் - பாதி, மிளகுத் தூள் - ஒன்றரை ஸ்பூன், சித்தரத்தை - அரை ஸ்பூன், நல்லெண்ணெய் - 5 ஸ்பூன், உப்பு - சிறிதளவு.
செய்முறை:
கேப்பை மாவில் சிறிது உப்பு சேர்த்துப் புட்டுக்கு, பிசைவதுபோல் பிசையவும். வெறும் கடாயில் பிசைந்த மாவைப் போட்டு வறுக்கவும். மாவு லேசாக வறுபட்டதும், நல்லெண்ணெய் சேர்த்து வறுத்து, துருவிய தேங்காயைச் சேர்த்து நன்கு கிளறவும். நல்ல வாசனை வந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத் தூள், சித்தரத்தை சேர்த்துக் கிளறி சூடாகச் சாப்பிடவும். மழைக்காலத்துக்கு ஏற்ற சிறந்த சிற்றுண்டி இது.
சித்த மருத்துவர் ஜீவா சேகர்: கேழ்வரகில் கால்ஷியம் இருப்பதால் எலும்புகளுக்கு நல்லது. இரும்புச் சத்தும் உள்ளதால் ரத்தசோகையைத் தடுக்கும். ஆஸ்துமா பிரச்னை தீரும். சித்தரத்தை, மிளகு சேர்ப்பதால், சளியைக் குணமாக்கும். உடல் உஷ்ணத்தைச் சம நிலையில் வைத்திருக்கும்.