FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Yousuf on November 10, 2011, 01:46:18 PM

Title: அறிவோம் அறிவை!
Post by: Yousuf on November 10, 2011, 01:46:18 PM
அறிவு (Knowledge) என்பது உணர்தலாலும், அனுபத்தாலும், கற்பதாலும் கிடைக்கப் பெறுபவைகளாகும். அறிவு என்பது ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை கிடைப்பவைகளாகவே உள்ளன. அதனை படித்தவர்களுக்கு மட்டுமே அறிவு இருப்பது போன்றும், அறிஞர்கள் என்றும் ஒரு தோற்றப்பாடு பொதுவாக அநேகமானோரிடம் காணப்படுகின்றன.

அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது. அறிவு என்பது எல்லோருக்கும் உண்டு, மனிதரல்லாத விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை இயற்கையறிவு, உணர்வறிவு, படிப்பறிவு, பட்டறிவு, கல்வியறிவு, தொழில்சார் அறிவு, துறைச்சார் அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, ஆள்மனப்பதிவறிவு என பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.

இந்தப்பிரிவுகளை பல்வேறு உற்பிரிவுகளாக வகுத்துக்கூறலாம். எடுத்துக்காட்டாக அறிவை கூட சிலர் பேரரறிவு, சிற்றறிவு என்று வகைப்படுத்தும் முறைமையும் உள்ளது..

இயற்கையறிவு என்பது இயற்கையைப் பற்றி அறியும் அல்லது கற்கும் அறிவன்று. அது இயற்கையிலேயே கிடைக்கப்பெறும் அறிவைக் குறிக்கும். ஒரு குழந்தை பிறந்தவுடன் கிடைக்கப்பெறும் அறிவு இயற்கையறிவு ஆகும். அது முதலில் பசியை உணரும் அறிவை இயற்கையறிவாகவே கொண்டுள்ளது. அதனாலேயே பசித்தால் குழந்தைகள் அழத்தொடங்கிவிடுகின்றன.

 அதன்பின் உணரும் அறிவை பெறுகின்றது. அதாவது தாயின் முளைக்காம்பை தொட்டதும் அதையுணர்ந்து (அழுகையை நிறுத்தும்) பாலறுந்தத் தொடங்கிவிடும். இதன் வளர்ச்சிப்போக்கில் பாலைத் தரும் தாயை அறியும் அறிவையும், அவரிடத்தில் அன்புகொள்ளும் அறிவையும் பெற்றுக்கொள்ளும். இவைகளை இயற்கையறிவு எனலாம்.

கல்வியறிவு

ஒரு பாடசாலையில் கற்பிப்பதை ஒரு மாணவன் உடனடியாக அவற்றை விளங்கிக்கொள்கின்றான் என்றால், அது அம்மாணவரின் கிரகிக்கும் ஆற்றலின் தன்மையையே காட்டுகிறது. அதேவேளை ஒழுங்காக பாடங்களில் கவனம் செலுத்தாத மாணவனை அறிவற்றவன் என்று கூறவும் முடியாது. சிலவேளை அம்மாணவன் விளையாட்டுத் துறையிலோ, வேறு எதாவது ஒரு துறையிலோ அறிவதில் ஆர்வம் மிக்கவராக இருக்கலாம். இங்கே அறிவு என்பது தாம் ஆர்வம் கொள்ளும் துறைச்சார்ந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே எல்லோரது அறிவும் ஒரே மாதிரியானதாகவும், ஒரே தன்மைக்கொண்டதாகவும் இருப்பதில்லை. அதேவேளை கல்வியால் கிடைக்கப்பெறும் அறிவை கல்வியறிவு என்று மட்டுமே கூறலாம்.

ஆழ்மனப்பதிவறிவு

ஆழ்மனப்பதிவறிவு என்பது தாம் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப பிறராலோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவெனலாம். எடுத்துக்காட்டாக: பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துக்கொள்ளும் முன் வேறு ஒரு தம்பதியினர் எடுத்து தமது குழந்தை என்று கூறு வளர்ப்பதால், அக்குழந்தை தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதிந்துக்கொள்ளும் அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம்.

இன்னுமொரு எடுத்துக்காட்டாக: GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் "காட்" என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் "கோட்" என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்பார்கள். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்ப்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் எம்மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலையிக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதனையே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது.

பட்டறிவு (experience)

அறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றியோ (அறிந்து) தெரிந்து கொள்வது ஆகும். இந்த அறிவைப் பெறும் வழிகள்:

1. கூரிய நோக்கு (perception)

2. கல்வி கற்கும் முறை (learning process)

3. விவாதித்து முடிவுக்கு வருதல் (debates)

4. செவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுதல் (open ears) - கேள்வி அறிவு

5. தனக்குத்தானே விவாதிக்கும் முறை (reasoning)

நாம் அனுபவத்தினாலோ, புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஏதாவது காரண, காரியங்களினாலோ பெறுகிறோம். அறிவு என்பதன் முழுமையான விளக்கம் நம் தத்துவ மேதைகளிடையே காலம் காலமாக நடந்து வரும் விவாதமாகும். இன்றும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு என்பதற்கு சரியான விளக்கம் தரவேண்டுமென்றால் ஒரு செயல் ஏரண விதிகளால் (logically) நியாயப்படுத்தபட்டதாகவும், உண்மையாகவும், அனைவராலும் நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும். (Plato) ஆனால் இவை மட்டுமே ஒரு செயலை அறிவு என்று சொல்லுவதற்கு தகுதியான அளவுகோல் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. அறிவு பல வகைப்படும்.

ஒவ்வொரு கணத்திலும் நாம் பாடுபட்டு(அனுபவித்து) அறியும் அறிவு பட்டறிவு (experience). ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் அறிவுத்திறனை சூழ்நிலை அறிவு என்று வகைப்படுத்தலாம். புத்தகங்களில் பெறுவதை புத்தக அறிவு என்றும், சமூக வழி பெறுவதை சமூக அறிவு என்றும் பல வகை உண்டு. சூழ்நிலை அறிவு மொழி, கலாசாரம், பண்பாடு இவற்றோடு நெருங்கிய தொடர்பு உடையது.
Title: Re: அறிவோம் அறிவை!
Post by: Global Angel on November 13, 2011, 05:20:50 AM
thelivaana nalla post ;)
Title: Re: அறிவோம் அறிவை!
Post by: Yousuf on November 14, 2011, 08:21:13 AM
Nandri Angel!
Title: Re: அறிவோம் அறிவை!
Post by: RemO on November 17, 2011, 12:28:06 AM
nala pathivu machi
Title: Re: அறிவோம் அறிவை!
Post by: Yousuf on November 17, 2011, 01:33:47 PM
Nandri Remo Machi!