FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on April 08, 2013, 04:08:22 PM

Title: எதை கொடுத்தாயோ !!
Post by: ஆதி on April 08, 2013, 04:08:22 PM
ஒன்றெனவும்
ஒவ்வொன்றெனவும்
வேறெனவும்
வெவ்வேறெனவும்
ஒன்றுமே அற்றதெனவும்
கருதப்படலாம்

ஆழப்பாய்ந்து
அகண்டு பெருத்து
அழுந்தி நின்று
விதைத்த இடம் யாவிலும்
அகற்ற முடியாதனவாய்
அசுரத்தன்மை பெற்றுவிடலாம்

எந்த உருவத்துக்கும் பொருந்துவதாகவும்
எந்த உருவத்துக்கும் பொருத்தமற்றதகாவும்
எந்த உருவத்தினின்றும் உருமாறுவதாகவும்
எந்த உருவத்தினின்றும் உருமாறவியலாததாகவும்
எந்த உருவத்துக்கும் சம்பந்தமற்ற ஒன்றாகவும் இருக்கலாம்

நீர்குமிழி ஒன்றின் மென்மையோடு வெடிக்கலாம்
மயிலிறகின் தன்மையோடு வருடலாம்
வெங்கல்லின் கடுமையோடு சுடலாம்
மெல்லிய மூங்கில் சிலாம்பாய் ஊடுருவி உள்வேதனை கொடுக்கலாம்..

அனாதரவான தருணமொன்றில்
ஆதரவாய் அனைக்கும் கையொன்றாய் வரலாம்
ஆதரவற்ற கிழவியொருத்தியின் வெறுங்கைகளாய் நீளலாம்
விலைமகளொருத்தியின் வயிற்றிலடிக்கும் ஈனக்கைகளாய் ஏய்கலாம்..

தனிமையில் தன்முகம் உரிந்து
சீழ்வழியும் விகாரமுக காட்டி அச்சமுறுத்தலாம்..

எனக்குள் இருந்தும்
உனக்குள் இருந்தும்
மற்ற யாரொருவரில் இருந்தும்
அல்லது நம் ஒவ்வொருவரில் இருந்து
கொஞ்சம் கொஞ்சமாய் விழுந்து
மாவுருவம் பெற்ற
ஒன்றெனவும்
ஒவ்வொன்றெனவும்
வேறெனவும்
வெவ்வேறெனவும்
ஒன்றுமே அற்றதெனவும்
கருதப்படலாம்...
Title: Re: எதை கொடுத்தாயோ !!
Post by: Global Angel on April 09, 2013, 05:43:38 PM
இதுதான் நான் ஒண்ணுமே கொடுக்குறதில்ல ... வேணும்னா எதாவது கேட்டுப் பாருங்க ....

அழகான அர்த்தமுள்ள கவிதைகள் ஆதி .. இன்னதுதான்னு முடிவுக்கு வரமுடியாத பல கருக்களை அகத்தே கொண்டு அழகாக ஜொலிக்கும் கவிதை