FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Yousuf on October 10, 2011, 05:44:28 PM

Title: எதிரிக்கு பரிசளிக்கணும்னா மன்னிச்சுப்பழகுங்க!
Post by: Yousuf on October 10, 2011, 05:44:28 PM
நம் எல்லோருக்கும் அதிகபட்சமா தூக்கத்தைக் கெடுப்பது, சந்தோஷமான விஷயங்களை விட வருத்தமான விஷயங்கள் தான்! அதுவும் நமக்குப்பிடிக்காத ஒருத்தர் செஞ்ச செய்கையை நினைச்சே பல நாள் தூக்கம் தொலைச்சிருப்போம்.

அவுங்கதான் வாழ்க்கையிலேயே முதல் எதிரின்னு நினைப்போம். ஒரு விழாவுக்குப்போனால் நாம் அதிகம் நினைச்சுக்கிட்டு போவது நமக்குப்பிடிக்காத அந்த எதிரியும் அங்க வந்திருப்பாங்களோன்னுதான்.! ஒரு நாளின் அதிக நேரத்தை அவர்களைப்பற்றிய நினைப்புதான் எடுத்துக்கொள்ளும்!

ஆனா உண்மையா எதிரிங்கிறது யார்? உங்களிடம் பழகி, உங்களுக்கு தெரிஞ்சவராகவோ, நண்பராகவோ இருந்தவர்தான். திடீர்ன்னு ஒரே ஒரு சம்பவத்தால் அவரை எதிரியா பாவிக்க ஆரம்பிச்சுடுறோம்.

ஒரு மனிதனின் வாழ்வில் வளர்ச்சியைத்தடுப்பவர்கள் மட்டுமே எதிரியாகப் பார்க்கப்படணும். இதைத்தவிர கோபத்தில் திட்டினவுங்க, அவசரத்துக்கு பணம் தராதவங்க, கொடுத்த பணத்தைத் திருப்பித்தராதவங்க, உங்க சொந்தங்களுக்கிடையே சண்டை மூட்டினவங்க, புறம் சொன்னவர்கள், அலுவலகத்தில் மேலதிகாரிகிட்ட நீங்க செஞ்ச தப்பை போட்டுக்குடுத்தவர்கள் இப்படி வகை தொகையில்லாம எல்லாரையும் எதிரியா நினைச்சு, இவுங்களை என்ன செய்யலாங்கிற நினைப்பில் வாழ்வைத்தொலைச்சுட்டு நிற்கக்கூடாது.

உங்களுக்கு எதிரியாகுறதுக்கு , யாரா இருந்தாலும் அவுங்களுக்கு ஒரு தகுதி வேணும்னு முதலில் நினைங்க! இவுங்க நமக்கு எதிரின்னு முடிவெடுக்குறதுக்கு முன்னாடி சில விஷயங்களை சரி பாருங்க!
அவர் நம் வளர்ச்சியையோ , வாழ்க்கையையோ கெடுக்க இந்தக்காரியம் பண்ணியிருக்காரா? அவர் மனசுல நம்மளை எதிரியா நினைச்சுக்கிட்டிருக்காரா? அவருக்கு நாம ஏதாவது மனசு நோகும்படியோ, அவர் வளர்ச்சியை பாதிக்கும்படியோ ஏதாவது செஞ்சிருக்கோமான்னு யோசியுங்க! அப்படி ஏதாவது லேசா சந்தேகம் வந்தாலும் நேரா அவரிடமே பேசுங்க! ஒரு நண்பரை- நண்பராகவே தக்கவைக்க முயற்சி பண்ணுங்க!

இப்படித்தான் ஷரீஃபுக்கும் அவர் எதிர் வீட்டுக்காரருக்கும் எப்பவுமே தகராறு நடக்கும். ரெண்டு பேரும் ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் அடிச்சுக்குவாங்க.! ஒரு நாள் ஷரீஃபு, ஊர்க்காரங்களைக்கூப்பிட்டு நம்ம வீட்டில் விருந்து எல்லாரும் வந்து சாப்பிட்டுட்டுத்தான் போகணும்னார்.

என்ன விசேஷம்னு கேட்டதுக்கு எதிர் வீட்டுக்காரனுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்குன்னார். யாராலயும் நம்ப முடியலை. எதிரிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்குன்னதும் ஊருக்கே விருந்து குடுக்குறாரே! நண்பர்களாயிட்டாங்களோன்னு ஊரெல்லாம் பேச்சு!

அடேயப்பா! ஷரீஃபு! எதிரியா இருந்தாலும் அவன் சந்தோஷத்துல பங்கெடுத்துக்கணும்னு நினைச்சே பாத்தியா! நீதான்யா மனுஷன்னு எல்லாரும் பாராட்டும்போது...

ஷரீஃபு சொன்னாரு! அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை! எதிர்வீட்டுக்காரனுக்கு லாட்டரி விழுந்தது வாஸ்தவம்தான்.. ஆனால் அந்தப்பணத்தை வாங்குறதுக்கு டிக்கட் வேணுமில்ல! அதைக்காணும்னு ரெண்டு நாளா திண்டாடிக்கிட்டிருக்கான். அந்த சந்தோஷத்தைக் கொண்டாடத்தான் இந்த விருந்துன்னாரு!

இப்படி இருந்தா யாருதான் எதிரியாக மாட்டாங்க! (லாட்டரி சீட்டு விற்பதும் வாங்குவதும் தடை செய்யப்பட்டது  என்பதை நினைவில் கொள்க)

வேலை இடத்தில் நம்மை விட நல்லா வேலைபாத்து முன்னேறணும்னு நினைக்கிறவுங்க, தொழிலில் நம்மைவிட வேகமா செயல்பட்டு ஜெயிக்கிறவுங்க இவுங்களையெல்லாம் மறந்து போய்க்கூட எதிரி லிஸ்டில் சேத்துடக்கூடாது. அவுங்களெல்லாம் போட்டியாளர்கள் ! போட்டியாளர்கள் என்னிக்குமே நம்மை விட நல்லா முன்னேறணும்னு நினைப்பாங்களே ஒழிய நம்மை கீழே தள்ளணும்னு நினைக்கமாட்டாங்க! அப்படி நம்மை கீழே தள்ளும் அந்த விநாடியிலிருந்து அவுங்க போட்டியாளர்ங்கிற நல்ல தகுதியை இழந்து நமக்கு எதிரியா ஆகிடுவாங்க!

நாமும் யாருக்கும் போட்டியாளரா இருக்குறது ரொம்ப ஆரோக்கியமான விஷயம். ! நம் வாழ்க்கைக்கு எது நல்லதோ அதை எடுத்துக்கிட்டு நடை போடலாம். ஆனா அதில் ஒரு சின்ன நடவடிக்கை கூட அடுத்தவுங்களை பாதிக்கிறதா இருக்கக்கூடாது. எதிரி விஷயத்தில் இது ரொம்ப முக்கியம். நீங்க அழுவதைப்பாத்து யாருமே சிரிச்சுடக்கூடாது. உங்க சிரிப்பால் ஒருத்தர் கூட அழுதுடக்கூடாது. எதிரி இந்தப்புள்ளியில்தான் உருவாகிறார்கள்!

எதிரிங்கிறவங்க நம் வளர்ச்சியைத்தடுக்கிறவங்களா இருந்தா பதிலுக்கு அவுங்க வளர்ச்சியைத்தடுக்க முயலும்போதுதான் நாம் அவுங்களுக்கு எதிரியாகுறோம். அதுக்குப்பதிலா.. அவுங்க முயற்சிகளைப்புறந்தள்ளிட்டு நம்ம சக்தி முழுவதையும் நம் வளர்ச்சிக்கு செலவழிச்சோம்னா நம்மைவிட புத்திசாலி யாரும் இருக்க முடியாது.

எதிரிக்கும் பரிசளிக்கணும்னா மன்னிச்சுப்பழகுங்க! எதிரியை தண்டிக்கணும்னா வாழ்ந்துகாட்டுங்க..! வாழ்ந்துகாட்டுதலைவிட மிகச்சிறந்த பழிவாங்குதல் வேற எதுவுமே இல்லை! போட்டியாளர்களை இனங்கண்டு எதிரிகளைப்புறந்தள்ளி வாழ்வில் வெற்றிபெற உளமார்ந்த வாழ்த்துக்கள்.
Title: Re: எதிரிக்கு பரிசளிக்கணும்னா மன்னிச்சுப்பழகுங்க!
Post by: Global Angel on October 10, 2011, 08:45:17 PM
Quote

எதிரிக்கும் பரிசளிக்கணும்னா மன்னிச்சுப்பழகுங்க! எதிரியை தண்டிக்கணும்னா வாழ்ந்துகாட்டுங்க..! வாழ்ந்துகாட்டுதலைவிட மிகச்சிறந்த பழிவாங்குதல் வேற எதுவுமே இல்லை! போட்டியாளர்களை இனங்கண்டு எதிரிகளைப்புறந்தள்ளி வாழ்வில் வெற்றிபெற உளமார்ந்த வாழ்த்துக்கள்.

okmanichuten ;)
Title: Re: எதிரிக்கு பரிசளிக்கணும்னா மன்னிச்சுப்பழகுங்க!
Post by: Yousuf on October 10, 2011, 09:44:02 PM
Yaruku Yaar yethiri Konangi...! :P
Title: Re: எதிரிக்கு பரிசளிக்கணும்னா மன்னிச்சுப்பழகுங்க!
Post by: Global Angel on October 11, 2011, 02:41:20 AM
enakku naan ;)