FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on February 25, 2013, 04:31:11 PM
-
ஊறுகாயில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஊறுகாய் என்றால், அது மாங்காய் மற்றும் எலுமிச்சை ஊறுகாய் தான்.
ஆனால் சிலருக்கு பூண்டு வாசனை மிகவும் பிடிக்கும். அத்தகையவர்கள், பூண்டை வைத்து கூட ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மேலும் ஊறுகாயை சப்பாத்திக்கு கூட தொட்டு சாப்பிடலாம். சரி, இப்போது அந்த பூண்டு ஊறுகாயை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பூண்டு - 1 கப் (தோலுரித்தது)
எலுமிச்சை சாறு - 1/2 கப்
சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
மல்லி - 2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1/4 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், பூண்டை போட்டு வதக்க வேண்டும்.
அதே சமயம் வறுத்து வைத்துள்ள வெந்தயம், சீரகம், மல்லியை, மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை வாணலியில் உள்ள பூண்டுடன் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.
அடுத்து எலுமிச்சை சாற்றை விட்டு, நன்கு கெட்டியாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
சற்று கெட்டியானதும், வேண்டுமெனில் அதில் தேவையான எண்ணெய் சேர்த்து, 5-6 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.
பிறகு அதனை குளிர வைத்து, ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு, பயன்படுத்த வேண்டும்.
இப்போது பூணடு ஊறுகாய் தயார்!!!