FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: சிநேகிதன் on February 23, 2013, 07:08:55 PM

Title: ஆடை இல்லாத ஏழையை விட
Post by: சிநேகிதன் on February 23, 2013, 07:08:55 PM
அரசன் ஒருவன் பெரிய படை ஒன்றைத் திரட்டினான். பக்கத்து நாட்டை வெல்வதற்கு அந்தப் படையுடன் பனி படர்ந்த மலைகளின் வழியே சென்று கொண்டிருந்தான்.


அங்கே ஓரிடத்தில் உடலில் உடை ஏதுமில்லாமல் துறவி
ஒருவர் அமர்ந்து இருந்தார்.


"ஆளைக் கொல்லும் இந்தக் குளிரில் ஆடை இல்லாமல்
இவர் இருக்கிறாரே...?" என்று அவர் மேல் இரக்கப்பட்டான் அரசன்.


விலையுயர்ந்த தன் போர்வையைக் கழற்றி அவ்ரிடம்
தந்தான். ஆனால் அவரோ அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார்.


" இந்தக் குளிரைத் தாங்கிக் கொள்ள இறைவன்
எனக்குப் போதுமான உடைகளைத் தந்து இருக்கிறான். என்னால் ஆடை இல்லாமல் இந்தக்
குளிரைத் தாங்க முடியும். யாராவது ஏழைக்கு இந்தப் போர்வையைத் தாருங்கள்."
என்றார் அவர்.


" உடலில் எந்த ஆடையும் இல்லை. சொந்தமாக எந்தப்
பொருளும் இல்லை. இவரை விட ஏழையை எங்கே தேடிக் கண்டுபிடிப்பது?" என்று நினைத்தான்
அவன்.


"அய்யா, உங்களை விட ஏழையை நான் எங்கே
கண்டு பிடிக்க முடியும்?" என்று கேட்டான் அரசன்.


" அரசே, நீ எங்கே செல்கிறாய்?" என்று கேட்டார்
அவர்.


" பக்கத்து நாட்டை வென்று என் நாட்டுடன்
சேர்த்துக் கொள்வதற்காகப் படை எடுத்துச் செல்கிறேன்."


சிரித்த துறவி, " ஒரு நாட்டுக்கு அரசனாக
இருந்தும் நீ நிறைவு அடையவில்லை. உன் உயிரையும் பல ஆயிரக்கணக்கான வீரர்களின்
உயிரையும் பனயம் வைத்துப் பக்கத்து நாட்டை உன் நாட்டுடன் சேர்த்துக் கொள்ளப்
போருக்குச் செல்லும் நீதான் என்னை விடப் பெரிய ஏழை. இந்தப் போர்வையை நீயே
வைத்துக்கொள்." என்றார்.


தலை கவிழ்ந்த அரசன் அவரை வணங்கினான்.


"அய்யா, என் கண்களைத் திறந்து விட்டீர்கள்.
உள்ளம் நிறைவு அடையாத நிலையில் உள்ளவர்களே ஏழை என்பதை நான் உணர்ந்து விட்டேன்.
இனி எந்த நாட்டின் மீதும் படை எடுக்க மாட்டேன்..." என்று சொல்லிவிட்டு தன்
படைகளுடன் நாடு திரும்பினான்.
Title: Re: ஆடை இல்லாத ஏழையை விட
Post by: Gotham on February 23, 2013, 08:02:06 PM
நிறைவைப் பற்றி நிறைவான கதைக்கு நன்றி சிநேகிதன்
Title: Re: ஆடை இல்லாத ஏழையை விட
Post by: Bommi on February 23, 2013, 10:10:43 PM
மன நிறைவு ... நிலையை அடையாமல் எந்த நீதிநெறியும்
இருக்க முடியாது.என்று உங்கள் கதை உணர்த்தியது
நன்றி சிநேகிதன
Title: Re: ஆடை இல்லாத ஏழையை விட
Post by: vimal on February 24, 2013, 01:06:48 AM
mananiraivu onre magizhchikku marunthaaga irukkum.... nalla kadhai nanba