FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: MysteRy on February 19, 2013, 07:27:09 PM

Title: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 19, 2013, 07:27:09 PM
கனவிலும் துன்பம் செய்யாதீர்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_175131000000.jpg&hash=a19835920efedd1bc339802b5bc31480bd4d721b)


கபிலபுரத்தில், சங்கமன் என்ற வியாபாரி வசித்தான். வியாபாரத்தில் நேர்மையைக் கடைபிடிப்பவன். அவனது மனைவி நீலி. கணவன் சொல் தட்டாத பதிவிரதை.  அருகிலுள்ள சிங்கபுரம் என்ற ஊருக்கு வியாபாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. சங்கமன் அங்கு  வியாபாரத்திற்கு சென்ற போது, போட்டி வியாபாரியான பரதன் பார்த்தான். அரசரிடம் சென்று, சங்கமன் என்ற ஒற்றன் கபில புரத்திலிருந்து வேவு பார்க்க வந்துள்ளான். அவனைப் பிடியுங்கள், என்றான். அரசனும் விசாரியாமல், சங்கமனைக் கொன்று விட்டான்.

நீலிக்கு அதிர்ச்சி. புலம்பியழுதாள். நீதி தவறி யார் எனக்கு துன்பம் செய்தார்களோ, அவர்கள் அடுத்த பிறவியில் இதே துன்பத்தை அடைவார்களாக! என சாபமிட்டு இறந்து போனாள். மறுபிறப்பில் சங்கமனின் மரணத்துக்கு  காரணமான பரதன் கோவலனாகவும், அவன் மனைவி கண்ணகியாகவும் பிறந்தனர். கோவலன் கொல்லப்பட்டான். கண்ணகி தத்தளித்தாள். தவறாகத் தீர்ப்பளித்த மன்னன் நெடுஞ்செழியனாகவும், அவன் மனைவி கோப்பெருந்தேவியாகவும் பிறந்து உயிர் விட்டனர். இனிமேலாவது, பிறருக்கு துன்பம் இழைக்க கனவிலும் நினைக்காதீர்!
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 19, 2013, 07:44:17 PM
காக்கா கலரில் இருக்கியே!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_175009000000.jpg&hash=d6f229cd1239bf4fcb8a35df57df260a99e0cddf)


தருமபுரம் ஆதீனத்தில் கட்டளைத் தம்பிரானாக இருந்தவர் சம்பந்த சரணாலயர். மைசூரு மன்னர் இவரின் பெருமையைக் கேள்விப்பட்டு அரசவைக்கு அழைப்பு விடுத்தார்.  சரணலாயர் நல்ல கருப்பு. அவரைக் கண்ட மன்னர்,   அமைச்சரின் காதில், இந்த சாமியார், அண்டங்காக்கை போல கருப்பாக இருக்கிறாரே! என்று பரிகாசம் செய்தார்.  மன்னரின் வாய் அசைவைக் கொண்டே, அவர் தன்னைக் கேலி செய்வதைப் புரிந்து கொண்டார் சரணாலயர்.  சபையில் அனைவரும் கேட்கும்விதத்தில் கம்பீர தொனியில், மன்னர் பெருமானே! அண்டங்காக்கைக்குப் பிறந்தவரே! நீர் வாழ்வாங்கு வாழ்க! உமது பெருமை ஓங்குக!, என்றார்.

அவரது பேச்சைக் கேட்டு கோபமடைந்தார் மன்னர். மன்னா! உண்மையைத் தானே சொன்னேன். அண்டம் என்றால் உலகம். நீர் இந்த உலகத்தைக் காக்க தானே பிறந்திருக்கிறீர்! என்ன...நான் சொல்வது சரிதானே! என விளக்கம் அளித்தார்.  புலவரின் அறிவுத்திறத்தைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். அவருக்குப் பொன்னும் பொருளும், பட்டாடைகளும் பரிசளித்தார். சரணாலயரும் அங்கு அருளுரை நிகழ்த்தினார். சரணாலயரின் மதிநுட்பத்தை எண்ணி தருமபுரம் ஆதீனம் மகிழ்ந்தார்.  காக்கா கலரில் இருக்கியே என்று நிறத்தைக் காரணமாக வைத்து யாரையும் அவமானப்படுத்தக் கூடாது...புரிகிறதா!
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 19, 2013, 07:47:14 PM
எல்லாம் அவனே செய்கிறான்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_174531000000.jpg&hash=55d1be246ed6f323d179bed5155eb1c3bef9271f)


சொர்க்கத்தின் வாசல் மூடப்பட்டிருந்தது. உள்ளே நுழைய முயன்ற ஒருவரை தேவதூதர், நில் அங்கே!, என்று தடுத்து நிறுத்தினார்.  நான் வைக்கும் பரீட்சையில் வெற்றி பெற்றால் மட்டுமே உள்ளே அனுமதிப்பேன்! என்றார். தலையசைத்த அவரிடம், இதன் உள்ளே செல்லும் அளவுக்கு நீங்கள் என்ன நல்லது செய்தீர்கள் ?, என்றார் தேவதூதர்.  தான் செய்த நற்செயல்களைப் பட்டியல் இடத் தொடங்கினார்.  வாரம் தவறாமல் கோயிலுக்குச் சென்று வழிபடுவேன், என்றார் அவர்.  அதற்கு தூதர் மூன்று மதிப்பெண் வழங்கினார்.  குழந்தைகள் கல்வியளிக்கும் நோக்குடன் பள்ளிக்கூடம் நடத்தினேன், என்றார்.  இப்போது ஐந்துமதிப்பெண் கிடைத்தது.

ஏழைகளுக்கு அன்னதானம் கொடுத்தேன், என்றார்.  அப்படியா!, என்று கேட்ட தூதர் அதற்கும் ஐந்து மதிப்பெண் வழங்கினார்.  இந்த நிலையில் மதிப்பெண் வாங்கினால் முப்பத்தைந்து மதிப்பெண் வாங்கி பாஸ் கூட செய்ய முடியாதே என்ற கவலை வந்துவிட்டது அவருக்கு.  சற்று யோசித்தவராய், தன் கைகளைக் குவித்து நின்று கொண்டார்.  நான் செய்த செயல் ஒவ்வொன்றும் கடவுளால் தான் நடந்தது. சாதாரண மனிதனான என்னால் என்ன செய்ய முடியும்? கடவுளின் கருணையே எனது நற்செயலுக்கும் தீய செயலுக்கும் காரணம். எல்லாம் அவரால் நடந்தது, என்று சொல்லி பட்டியல் இடுவதை நிறுத்திக் கொண்டார்.  அப்போது சொர்க்கத்தின் வாசல் தானாகவே திறந்து அவருக்கு வழிவிட்டது.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 19, 2013, 08:00:47 PM
அவனிடம் சரணடையுங்கள்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_174154000000.jpg&hash=cd2cfeef016112579a292e828f647c9d69abf857)


ஒரு நெய் வியாபாரி கலப்பட நெய் விற்றதாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். நீதிபதி அவருக்கு மூன்று விதமான தண்டனை விதித்தார். கலப்படம் செய்த நெய் முழுவதையும், வியாபாரியே குடிக்க வேண்டும், அல்லது 20 கசையடி பெற வேண்டும், இரண்டும் முடியாவிட்டால் பத்து லட்சம் அபராதம் கட்ட வேண்டும். பத்துலட்சத்தை விடுவதாவது! என நினைத்த வியாபாரி, நெய்யைக் குடித்து விடுவதென முடிவெடுத்தார். ஓரளவு குடித்ததுமே நாற்றம் குமட்டியது. அதற்கு மேல் முடியவில்லை. எனவே, கசையடி வாங்கிக் கொள்வதாக  அறிவித்தார்.

கசையடி சுள் சுள்ளென விழவே, ஐயோ! அம்மா! என அலறினார். பதினைந்து அடி  வாங்கியபிறகு, இறந்து விடுவோம் என பயந்து, அடியை நிறுத்தச் சொன்னார். பத்து லட்சத்தை அபராதம் கட்டிவிட்டு தப்பித்தால் போதுமென ஓடினார். இப்படித்தான் அநேகர் இருக்கின்றனர். துன்பத்தின் ஆரம்பக்கட்டத்திலேயே, அதைப் போக்குவதற்கு கடவுளிடம் கேட்பதில்லை. தங்களால் தாங்க முடியாதென்ற நிலை வந்ததும்,  கடவுளே! காப்பாற்று என கோயிலை நோக்கி ஓடுகிறார்கள் துன்பத்தின் துவக்க கட்டத்திலேயே கடவுளே! எல்லாவற்றையும் நீ பார்த்துக்கொள், என அவனிடம் சரணடைந்து விட  வேண்டும். சரி தானே!
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 19, 2013, 08:50:24 PM
அவன் இருக்குமிடம் எங்கே?

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_173952000000.jpg&hash=138f1aec38e881f9a71a8b58fa5e70006b737b54)


ஒரு துறவியை இளைஞர் பட்டாளம் சந்தித்தது. சுவாமி! கடவுள்...கடவுள் என்கிறீர்களே! அவர் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? எப்படி இருப்பார்? என்றெல்லாம் கேலியாகக் கேட்டார்கள். துறவி அவர்களிடம்,  ஒரு சட்டியில் பால் கொண்டு வாங்களேன், என்றார். பால் வந்தது. அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது, விரலை உள்ளே விட்டு துழாவினார். சட்டியை சுற்றியசைத்தார். தரையில் வைத்தார். திரும்பவும் உற்றுப்பார்த்தார். இப்படியே, இரண்டு மூன்று முறை அவர் பார்த்துக் கொண்டிருக்கவே, பொறுமையிழந்த இளைஞர் கள், சுவாமி! நாங்கள் கடவுள் எங்கே எனக் கேட்டால், நீங்கள் பால் சட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்களே! என்று கத்தினர்.

அமைதி...அமைதி... என்ற துறவி, பாலில் வெண்ணெய் இருக்கிறதா என துழாவிப்பார்த்தேன், என்றார். இளைஞர்கள் கோபத்துடன்,அட அறிவிலியே! வெண்ணெய் எடுக்க வேண்டுமானால், முதலில் பாலைத் தயிராக்க வேண்டும். அதைக் கடைந்தால் வெண்ணெய் வந்து விட்டுப் போகிறது. இது கூட தெரியாத நீர் கடவுளைப் பற்றி பேச வந்து விட்டீரா? என்றனர். தம்பிகளே! கோபம் வேண்டாம்! பாலின் ஒவ்வொரு துளியிலும் வெண்ணெய் இருப்பது உண்மை. ஆனால், அது கண்ணுக்குத் தெரிகிறதா! அதுபோல் தான் கடவுளும். இந்த பிரபஞ்சத்தில் கலந்து நம்மை இயக்குகிறார். கண்ணுக்குத் தெரியமாட்டார், என்றார். இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கினர்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 19, 2013, 09:04:38 PM
காற்றினிலே வரும் கீதம்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_174536000000.jpg&hash=9889fa2f8b322c7c1209ee0eb4c813a696d5d0a4)


தமிழ்நாட்டில் ஒரு ஆண்டாள். வடநாட்டுக்கு ஒரு மீரா. சிற்சில வகையிலே அவள் ஆண்டாளையும் விஞ்சி விடுகிறாள். பக்திச் சுவை சொட்டும் அவரது பாக்கள் தேனும் நாணும் தீஞ்சுவை கானம்.

சிறுமி மீரா எப்போதும் ஒரு கிருஷ்ணன் பொம்மையை வைத்தே விளையாடுவாள். இரவு தூங்கும்போதும் அதுவே துணை. மன்னன் மகளல்லவா ! அரண்மனையில் அவ்வப்போது பௌராணிகர் வந்து பாகவதக் கதை பிரவசனம் செய்வார். கண்ணபிரானின் பெருமைகளை அவர் சொல்லச் சொல்ல மீராவுக்கு மெய்யுருகும். தான், பொம்மை என நினைத்த அந்தப் பெம்மான் இத்தனை தெய்வ லீலைகள் புரிந்தவனா என்று அதிசயிப்பாள். நினைவிலும் கனவிலும் கண்ணனே வந்தான். அலகிலா விளையாட்டுடைய அன்னவனுக்கே சரண் நான் என்று இடைக்குலம் காத்தவனிடமே அடைக்கலம் தேடியது, அவள் மனம். கண்ணன் என்னும் மன்னன் நினைவிலே படர்ந்து வளர்ந்த அந்தப் பைங்கொடி அரும்பு மலர்ந்து, மணம் வீசலாயிற்று. தந்தை, அவள் சுயம்வரத்திற்கு நாள் குறித்தார். மீராவோ மறுத்தாள். தந்தை குழம்பினார். மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன், தோழி... என்று சேடிப் பெண்களிடம் கிசுகிசுத்தாள்; நாணம் குமிழிட முகம் மறைத்தாள். அருவாய் இருந்து அருள் புரிவான் கண்ணன். மனிதர் போலா வந்துன்னை மணப்பான், அந்த நந்தலாலா? என்று பாங்கியர் பரிகசித்தனர். சேதியை பெரிய ராணியின் காதிலும் கொஞ்சம் ஓதி வைத்தனர். புத்திமதி புகன்றனர் பெற்றோர். மீராவோ, கன்னி மாடத்திலே கண்ணன் வழிபாட்டுக்கு வழி செய்யுங்கள்; கிருஷ்ண பக்தர்கள் எல்லோரும் அங்கே சங்கமிக்க வகை செய்யுங்கள் ! என்றாள். பாசக்காரத் தந்தை மகளின் கனிமொழிக்குக் கட்டுப்பட்டார். அவ்வாறே நடைபெற ஆவண செய்தார். அன்று முதல் கன்னி மாடம் பக்திக் கூடமாயிற்று.

ஆனால் ஊராரின் நாக்கு மீராவின் போக்கைத் தவறாகக் கருதி அவதூறாகப் பேசின. வீண் வதந்திகளால் வெகுண்டான் மன்னன். இத்தனைக்கும் காரணம் என் சொல் பேச்சுக் கேட்காத மகள்தானே ! என்று மனைவியுடன் சண்டையிட்டான். குடும்பச்சூழல் அபாயச் சுழலாக ஆகிவிட்டது. தன் பக்தையைத் தேற்ற அந்தக் கண்ணபிரானே ஒரு முதியவர் தோற்றத்தில் வந்து, உன் கிருஷ்ணபக்தியைப் பாராட்டுகிறேன். கோபியர்கள் குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே கண்ணன் மீது பக்தி செலுத்தவில்லையா? நீயும் மணவாழ்வை ஏற்று, மணாளன் மைந்தர்களுடன் சேர்ந்து பக்தி செலுத்தலாமே ! என்றார், வந்தது கண்ணன். சொன்னது மந்திரம் மறுப்பாளா மீரா? அவள் சம்மதத்தின் பேரில் மேவார் மன்னர் ராணாவுக்கு அவளை மணம் செய்து கொடுத்தனர். ராணாவும் சிறந்த பக்தர். ஜெயதேவரின் கீதகோவிந்தத்துக்கு உரை எழுதியவர். மீராவின் பக்தியுணர்வை மதித்து, அவள் வழிபாட்டுக்கென்றே தனிக்கோயில் அமைத்துக் கொடுத்தார். அங்கே மீரா அனுதினமும் பக்திப்பரவசத்துடன் பலப்பல பாடல்களைப் பாடி பரந்தாமனைத் துதித்தாள். அவள் பாடல்கள், கோயிலுக்கு வந்தோரை எல்லாம் பரவசப்படுத்தியது. செய்தி, சக்ரவர்த்தி அக்பருக்கு ஆஸ்தான பாடகர் தான்சேனும் அதை ஆமோதித்தார். ஒருநாள் இருவரும் மாறுவேடத்தில் மீரா பாடும் கோயிலுக்கு வந்தனர். மீராவின் பக்திப் பாடலில் உள்ளம் உருகிய அக்பர், அவளுக்கு ஒரு முத்து மாலை பரிசளித்துச் சென்றார். ராணா, மீரா எப்போதும் கோயில், குளம், பாட்டு, பஜனை என்றே இருப்பதைக் கண்டு வெறுத்துப் போனார். இனி கோயிலுக்குப் போக வேண்டாம். அரண்மனையிலேயே இரு ! என்று ஆணை பிறப்பித்தார். ஆனால், மீரா அரண்மனை வாசமே எனக்கு வேண்டாம். ஆண்டவன் சன்னதியே எனக்கு நிம்மதி என்று ஆலயத்திலேயே தங்கிவிட்டாள். மன்னனிடம், உங்கள் கோபமும், என் வைராக்கியமும் அவன் திருவுள்ளம். கண்ணன் என் தலைவன்; பக்தி என் தொழில். அரசி பட்டம் அனாவசிய முள்முடி என்று கூறிவிட்டாள்.

அன்று கண்ணன் பிறந்த நாள். கோயிலில் ஒரே கோலாகலம். எங்கும் தீப அலங்காரம். வலது கையிலே தம்பூராவும், இடது கையிலே கரதாளம் என்னும் சிப்ளாவுமாக மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தாள் மீரா. ராணா அங்கே வந்து மீராவின் அருட்கோலம் கண்டு, கண்களில் நீர் தளும்ப நின்றார். மீராவின் கரம் பற்றிய நாள் முதல் இன்றுவரை நடந்த சம்பவங்கள் அலைஅலையாய் அவர் மனதில் எழுந்து அடங்கின. எவ்வளவு நேரம் இப்படிக் கழிந்ததோ, தெரியாது. மீராவின் தேவகானம் ராணாவின் மனதை மெழுகிக் கோலமிட்டுவிட்டது. பாடல் நின்றது. மீரா! அரண்மனைக்குத் திரும்பலாமா? என்ற ராணாவின் குரல் கேட்டு, நிமிர்ந்து நோக்கினாள் மீரா. நீங்கள் இந்த உடலுக்கு நாதன். ஆனால் என் இதய நாதன் கண்ணன் என்றபடியே அவள் மயங்கிச் சாய்ந்தாள். கிரிதாரி! அழைக்கின்றாயா ! இதோ வந்துவிட்டேன் என்று அவள் வாய் முணுமுணுத்தது. அரை மயக்கத்தில் எழுந்தாள். கர்ப்பகிருகத்தினுள் நுழைந்தாள். இறைவன் விக்ரகத்தைத் தழுவிக் கொண்டாள். ஒரு மின்னல் பேரொளி அங்கே எழுந்து மறைந்தது. பலத்த காற்று ! கர்ப்பகிருகக் கதவுகள் தாமாகவே மூடிக்கொண்டன. மீண்டும் திறந்து பார்த்தபோது, அங்கே மீரா இல்லை. நிலைகுலைந்து வீழ்ந்தார், ராணா. கண்ணனோடு கலந்துவிட்ட மீரா இன்றும் அவன் திருவடித் தாமரையில் அமர்ந்து பாடுகிறாள்; பாடிக்கொண்டே இருக்கிறாள்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 19, 2013, 10:00:20 PM
மலைகோயில் ரகசியம்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_173952000000.jpg&hash=138f1aec38e881f9a71a8b58fa5e70006b737b54)


நம் முன்னோர் ஆன்மிகத்தில் மட்டுமல்ல! அறிவியலிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். இதனால் தான் மலை களிலும், கடற்கரை, அருவிக்கரை ஓரங் களிலும் கோயில்கள் அமைத்தனர். ஒரு மலையைக் காட்டி, இதன் மேல் ஏறு! நன்றாக மூச்சு வாங்கும், மூச்சு வாங்குவது என்பது மிகச்சிறந்த பிராணாயாம பயிற்சி, என்று யாரிடமாவது சொன்னால் கேட்பார்களா! வேறு வேலை இல்லையா! போங்க சாமி! என்று ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு போய் விடுவார்கள். அதேநேரம், அங்கே ஒரு சாமி இருக்கிறது. அதை வணங்கினால் கோடி பலன் கிடைக்கும், என்றால் ஏறிவிடுவார்கள். மேலும், கோயிலுக்குச் செல்வதால் மனதையும், உடலையும் சுத்தமாக்கிக் கொள்வார்கள். மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹோமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தி யாக்குகிறது.

தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக் கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. இதனால்தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில் மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர். இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம்.  விடுமுறை எடுக்க வேண்டி வராததால், பணி, தொழிலில் கிடைக்கும் சம்பளம் குறையாது. உடல்நிலை நன்றாக இருந்தால், மனம் முன்னேற்றம் குறித்து சிந்திக்கும். இது பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடிக்க மனிதனுக்கு துணை செய்யும். இப்போது புரிகிறதா! மலைக்கோயில், கடற்கரை கோயில் ரகசியம்.  கொசுறு செய்தி: மலைக் கோயில்களுக்கு போனால், வீட்டில் தயாரித்த பசுநெய்யில் விளக்கேற்றுங்கள். செல்வவளம் இரட்டிப்பாகும் என்பது ஐதீகம்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 19, 2013, 10:18:42 PM
கற்பனை செய்தாலே பலன்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_173735000000.jpg&hash=638e46ec317d39306fb97d0b5d1796ec86919f7e)


கடவுளைத் தரிசித்தால் மட்டும் தான்  என்றில்லை. சில நல்ல நிகழ்வுகளைக் கற்பனை செய்தாலே பலனுண்டு. ராமனின் பட்டாபிஷேக நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பது இங்கே சொல்லப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை மனக்கண் முன் கற்பனை செய்தாலே போதும்! ராமகுடும்பத்தின் பூரண நல்லாசியுடன் செல்வவளம் பெற்று வாழும் பலன் கிடைக்கும். பதினான்கு வருட வனவாசம் முடிந்து புஷ்பக விமானத்தில் ராமன் சீதையுடன் அயோத்திக்குத் திரும்பினார். அவரைக் கண்ட மக்கள் அன்பினால் வெறி பிடித்தவர்கள் போல் ஆடிப்பாடினர். மலர் தூவி வரவேற்றனர். அரண்மனைக்குள் அவர் நுழைந்தபோது, பரதன் ராமனின் பாதுகைகளை (காலணி) எடுத்து வந்தான். சுக்ரீவன், விபீஷணன் இருவரும் கவரி வீசினர். அனுமன் வெண்கொற்றக்குடை பிடித்தான். வில்லையும், அம்பையும் சத்ருக்கனன் தூக்கி வந்தான். சீதை தீர்த்தக் கமண்டலம் பிடித்திருந்தாள். வாலியின் மகன்  அங்கதன் உடைவாளும், கரடிகளின் தலைவரான ஜாம்பவான் தங்கக்கவசமும் வைத்திருந்தனர்.  அன்னையரான கோசலை, கைகேயி, சுமித்திரை  மூவரையும் வணங்கிய ராமர் அரியணையில் அமர்ந்தார். அவருக்கு புனிதநதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தால் வசிஷ்டர் அபிஷேகம் செய்தார். நட்சத்திரத்திற்கு நடுவே முழுநிலவு போல ராமர் காட்சியளித்தார். மக்கள் சந்தோஷக் களிப்பில் மகிழ்ந்தனர்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 19, 2013, 10:54:07 PM
ஜயத்ரதன்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_173554000000.jpg&hash=75add8b20fc663b110aa53bc0f0d07e11b97f905)


அழகான பெண் ஒருத்தி, ஆள் அரவம் இல்லாத காட்டில் தன்னந்தனியாக நின்றுகொண்டிருந்தால் கேட்கவா வேண்டும்? அவனவன் மோதிப் பார்க்கமாட்டானா? அதுவும் செல்வம், ஆள், அம்பு, சேனை, வாகனம், பதவி என எல்லாம் இருப்பவன் கண்ணில் அந்த அழகான பெண் அகப்பட்டு விட்டால், என்னென்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். பாண்டவர்கள் வனவாசம் இருந்த காலம். அவர்கள் அனைவரும் திரௌபதியுடன் காம்யக வனத்தில் இருந்தார்கள். அப்போது அவர்களுடன், மிகச் சிறந்த தவசீலரும் ரிஷியுமான த்ருணபிந்துவும் தௌம்யர் என்ற புரோகிதரும் இருந்தார்கள். ஒரு நாள்... பாண்டவர்கள் ஐவரும் காட்டுக்குள் வேட்டையாடப் போன சமயம், திரௌபதி தான் இருந்த குடிசை வாசலில் நின்றுகொண்டிருந்தாள். அருகிலேயே ஒரு பெரிய பர்ணசாலையில் (இலை தழைகளால் செய்யப்பட்டது) த்ருணபிந்து, தௌம்யர் முதலானோர் இருந்தார்கள். அந்த நேரத்தில், சிந்து தேசத்தின் அரசனான ஜயத்ரதன் என்பவன் திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தோடு சால்வ தேசத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். அவனுடைய படைகளும், அவனுக்குப் பக்கவாத்தியம் (ஜால்ரா) வாசிக்கும் மன்னர்களும் ஜயத்ரதனுடன் போனார்கள். ஜயத்ரதனுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்று நினைக்க வேண்டாம். அவன் ஏற்கெனவே திருமணம் ஆனவன்தான். துரியோதனன் முதலான கௌரவர்களின் ஒரே தங்கையான துச்சலை என்பவளின் கணவன்தான் அந்த ஜயத்ரதன். அவன் காம்யக வனத்தின் வழியாகப் போனபோது, திரௌபதியைப் பார்த்துவிட்டான். அவ்வளவுதான் ! ஜயத்ரதனுடைய ரதம் அங்கேயே நின்றுவிட்டது. உடன் வந்தவர்களும் பயணத்தை நிறுத்தினார்கள். ஜயத்ரதன் தன்னுடன் வந்த கோடி காச்யன் எனும் மன்னனை அழைத்து, நீ போய், அவள் யாரென்ற தகவலைத் தெரிந்து வா என்று ஏவினான். கோடி காச்யன் உடனே போய் திரௌபதியிடம் விசாரித்தான். அவளும், ஐயா ! என்னைப் போன்ற பெண்கள், உங்களைப் போன்ற அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசக் கூடாது. இருந்தாலும், இப்போது இங்கே வேறு யாரும் உதவிக்கு இல்லாததால், நானே உங்களுக்குப் பதில் சொல்கிறேன். நான் துருபத மன்னரின் புதல்வி. என் பெயர் க்ருஷ்ணை. திரௌபதி என்றும் சொல்வார்கள். மகா வீரர்களான பஞ்ச பாண்டவர்களின் மனைவி நான். துரியோதனனிடம் வஞ்சக சூதில் அனைத்தையும் இழந்து, இங்கே வன வாசத்துக்காக வந்திருக்கிறோம். பஞ்ச பாண்டவர்கள் வேட்டைக்குப் போயிருக்கிறார்கள் எனச் சொன்னாள்.

கோடி காச்யன் அப்படியே போய், ஜயத்ரதனிடம் இதைச் சொன்னான். ஏற்கெனவே திரௌபதியைப் பார்த்ததில் இருந்து தன் வசம் இழந்திருந்த ஜயத்ரதன், விடு ! நானே போய் அவளிடம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு திரௌபதியிடம் வந்தான். அங்கு போனதும் ஜயத்ரதன், மரியாதையாக ஒரு சில வார்த்தைகள் பேசி நலம் விசாரித்துப் பேச்சைத் தொடங்கினான். திரௌபதியும் ஒரு சில வார்த்தைகளில் பதில் சொல்லி ஜயத்ரதனை உபசரித்து, அவனுக்கு உட்கார ஆசனமும் கொடுத்தாள். அதன்பிறகு, காலை ஆகாரம் தருகிறேன், சாப்பிடுங்கள். சற்று நேரத்தில் தர்மபுத்திரரும் அவர் தம்பிகளும் வேட்டை முடித்து வந்துவிடுவார்கள். அவர்களும் உங்களை உபசரித்து, மேலும் வேண்டிய உணவு வகைகளைக் கொடுப்பார்கள் என்றாள். ஜயத்ரதன் சாப்பிடவா வந்திருக்கிறான்? வந்த நோக்கத்தை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினான். சாப்பாடு என்ன சாப்பாடு ! நீ சொன்னதே, எனக்குச் சாப்பிட்டதைப் போல ஆகிவிட்டது. அத்துடன் இல்லாமல் இன்னும் வேறு எனக்கு உபசாரம் செய்ய விரும்புகிறாய். வா ! என்னுடன் வந்து ரதத்தில் ஏறு ! நாட்டை இழந்து, செல்வத்தை இழந்து, தரித்திரர்களாக இந்தக் காட்டில் சுற்றிக்கொண்டிருக்கும் பாண்டவர்களால் நீ என்ன சுகத்தைக் கண்டாய்? படித்த பெண்கள், செல்வம் இல்லாத கணவனை விலக்கிவிட வேண்டும். செல்வம் உள்ளவனைத் தேடிப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஆகையால், நீ பாண்டவர்களை விட்டு விலகு. என்னைக் கணவனாக ஏற்றுக்கொள். சிந்து தேசத்துக்கும், சௌவீர தேசத்துக்கும் ராணியாக இருக்கலாம் என்றான். திரௌபதி சீறினாள்; சீ, மதி கெட்டவனே ! இப்படிப் பேச உனக்கு வெட்கமாக இல்லையா ? உன் மனைவியான துச்சலை, துரியோதனன் முதலானவர்களுக்கு மட்டும் தங்கையல்ல; பஞ்சபாண்டவர்களுக்கும் அவள் தங்கைதான். அந்த முறைப்படி பார்த்தால், நான் உன் சகோதரி தங்கை. என்னை விரும்பாதே ! பாவம் செய்யாதே ! பஞ்சபாண்டவர்களுக்குத் தெரிந்தால், உன்னை ஒழித்து விடுவார்கள் என எச்சரித்தாள்.

காமத்தால் கருத்தை இழந்தவனுக்குத் தர்மமாவது அதர்மமாவது ! திரௌபதியின் எச்சரிக்கைகள் எதுவுமே பலன் அளிக்கவில்லை. ஜயத்ரதன், திரௌபதியைப் பிடித்து பலவந்தமாகத் தன் ரதத்தில் ஏற்றிவிட்டான். திரௌபதி அலறினாள். அதைக் கேட்ட தௌம்யர் ஓடிவந்து தடுத்தார். முடியுமா? ஜயத்ரதன் திரௌபதியுடன் ரதத்தை ஓட்டிக்கொண்டு போய்விட்டான். அவன் படைகள் பின்தொடர்ந்தன. பீமா ! அர்ஜுனா ! என்று அலறியபடியே தௌம்யரும் பின்தொடர்ந்தார். நடந்தது எதுவுமே தெரியாமல், காட்டில் நான்கு திசைகளிலும் பிரிந்து வேட்டையாடிக் கொண்டிருந்த பஞ்சபாண்டவர்கள் ஒன்று கூடினார்கள். அப்போது தர்மர், இந்தக் காட்டில் மிருகங்களும் பறவைகளும் எழுப்பும் கூச்சல், ஏதோ தீமை வருவதைப் போல அபசகுனங்களாகத் தெரிகின்றன. காம்யக வனம் நமக்கு ஆபத்தை உண்டாக்குவதைப் போலத் தோன்றுகின்றது. இனம்புரியாத பயத்தால் என் உள்ளம் நடுங்குகிறது. ஆகவே, வேட்டையாடியது போதும். உடனே, நாம் இருப்பிடம் திரும்ப வேண்டும் என்றார். அவசர அவசரமாக ஐவரும் திரும்பினார்கள். அவர்களின் பர்ணசாலைகள் அமைந்திருந்த எல்லையில், திரௌபதியின் வேலைக்காரச் சிறுமி தாத்ரேயிகை என்பவள் அழுது கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் பாண்டவர்கள் அவளிடம் ஓடினார்கள். அவள் சிந்து தேசத்து அரசனான ஜயத்ரதன், தேவியைத் (திரௌபதியை) தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான். இதோ ! இந்த வழியாகத்தான் போயிருக்கிறான். செடிகள் எல்லாம் ஓடிந்து போயிருக்கின்றன, பாருங்கள் ! அவை இன்னும் வாடக்கூட இல்லை. ஆகவே, ஜயத்ரதன் நீண்ட தூரம் போயிருக்க முடியாது. சீக்கிரம் போய் தேவியை மீட்டு வாருங்கள் ! என்று சொல்லிக் கண்ணீர் சிந்தினாள். அவளுக்கு ஆறுதல் சொன்ன பாண்டவர்கள், அவள் காட்டிய வழியிலே வேகமாகப் போனார்கள். சற்று தூரத்திலேயே, ஜயத்ரதன் படைகள் போனதால் காற்றில் பறந்த புழுதியைக் கண்டு, வேகத்தை அதிகப்படுத்தினார்கள். தௌம்யர் அலறிய, பீமா ! அர்ஜுனா ! என்ற அலறல் கேட்டது. பாண்டவர்கள் அவரிடம், இனிமேல் நீங்கள் அவர்களைப் பின்தொடராதீர்கள். இங்கு வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு, ஜயத்ரதனின் படைகளை நோக்கி ஓடினார்கள். சற்று நேரத்திலேயே ஜயத்ரதனின் படைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டன.

அதைப் பார்த்த ஜயத்ரதன் நடுங்கிப் போய், உயிர் தப்பினால் போதும் என்று ரதத்திலிருந்து திரௌபதியைக் கீழே இறக்கிவிட்டு, ரதத்தைக் கிளப்பிக் கொண்டு ஓடிப் போனான். அப்போது பீமன் தர்மரிடம், அண்ணா ! திரௌபதியை அழைத்துக்கொண்டு நீங்கள் திரும்புங்கள் ! அந்தப் பாவி ஜயத்ரதனைக் கொன்றுவிட்டு, நாங்கள் பின்னால் வருகிறோம் என்றான். தர்மரோ அந்த நிலையிலும், பீமா ! ஜயத்ரதன் கெட்டவன்தான். ஆனால், நம் தங்கையின் கணவன் அவன். காந்தாரியின் மருமகன். ஜயத்ரதனைக் கொன்றால், அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள். ஆகையால், அவனைக் கொல்ல வேண்டாம் என்றார். ஆனால். திரௌபதி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக்காம்பான அந்த ஜயத்ரதனை, அவன் எவ்வளவு கெஞ்சினாலும் விடாதீர்கள் ! அவள் பட்ட பாடு அவளுக்குத்தான் தெரியும் ! தர்மர் அமைதியாக திரௌபதியை அழைத்துக்கொண்டு, தௌம்யருடன் அங்கிருந்து திரும்பினார். நகுலனும் சகாதேவனும் பின்தொடர்ந்தார்கள். பீமனும் அர்ஜுனனும் ஜயத்ரதனைத் தேடி ஓடி, அவன் ரதத்தில் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அர்ஜுனன் அம்புகளை ஏவி, குதிரைகளைக் கொன்று ஜயத்ரதனின் ரதத்தைச் செயலிழக்கச் செய்தான். ஜயத்ரதன், ரதத்திலிருந்து குதித்து ஓடினான். அவன் தலையிலிருந்த கிரீடம் கீழே விழுந்தது. உயிர் பயத்தில் ஓடிய ஜயத்ரதன், அங்கங்கே மரங்களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி ஒரு புதரில் போய் மறைந்துகொண்டான். ஆனால், ஜயத்ரதனை பீமன் பார்த்துவிட்டான். கோபம் தலைக்கு ஏறியது. ஜயத்ரதனின் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி மேலே எறிந்து, பூமியில் போட்டுத் தேய்த்தான். பீமனின் தாக்குதலைத் தாங்காமல், ஜயத்ரதன் கதறி எழுந்திருக்க முயற்சி செய்தான். அவனைத் தலையில் உதைத்து, கால்களால் மறுபடியும் உதைத்து, கைகளால் குத்தினான் பீமன். ஜயத்ரதன் மயங்கி விழுந்தான். அப்போதும் பீமனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அவனை அர்ஜுனன் தடுத்து, இவனைக் கொல்லக் கூடாது என்று தர்மர் சொன்னாரல்லவா? என்றான்.

அப்போது ஜயத்ரதனுக்கு மயக்கம் தெளிந்தது. ஆத்திரத்தை அடக்க முடியாத பீமன் ஓர் அர்த்தசந்திர (பிறைநிலவைப் போன்ற) பாணத்தை எடுத்து, ஜயத்ரதனின் தலையில் ஐந்து குடுமிகளை உண்டாக்கினான் (உச்சிக்குடுமி என்கிறோமே, அதைப் போல ஐந்து). அத்துடன், அறிவு கெட்டவனே ! இனிமேல் யார் கேட்டாலும், நான் பாண்டவர்களின் அடிமை என்று நீ சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லச் சம்மதித்தால், உன்னை உயிரோடு விடுவேன். இல்லாவிட்டால், இப்போதே கொன்றுவிடுவேன் என்றான் பீமன். ஜயத்ரதன் மறுப்பானா என்ன? ஒப்புக்கொண்டான். அதன்பிறகு ஜயத்ரதனைக் கயிற்றால் நன்றாகக் கட்டி, தர்மர்முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்கள். தர்மர் ஜயத்ரதனை மன்னித்து அறிவுரை சொல்லி அனுப்பினார். பாண்டவர்களைப் பொறுத்தவரை, ஜயத்ரதன் ஒரு சிறு துரும்புதான். ஆனால் அந்தத் துரும்பு, பாண்டவர்களின் கண்ணையே குத்தப்போகிறது என்பதை, தர்மர் உட்பட யாருமே அறியவில்லை. கடன், நெருப்பு, பகை முதலானவற்றை மீதம் வைக்கக் கூடாது. முழுவதுமாக முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை முடித்துவிடும் என்பதை பாண்டவர்கள் அறியவில்லை போலும். அதனால்தான், பெரும் பாதகம் விளையப்போவதை அறியாமல் பகைவனான ஜயத்ரதனை உயிருடன் விட்டுவிட்டார்கள். பாண்டவர்களால் விடுவிக்கப்பட்ட ஜயத்ரதன், தன் அரண்மனைக்குப் போகவில்லை. மாறாக, கங்கைக்கரைக்குப் போய்விட்டான். அங்கே சிவபெருமானை நோக்கிக் கடுமையாகத் தவம் செய்தான். ஜயத்ரதனின் தவம், அவன் முன்னால் சிவபெருமானை நிறுத்தியது. ஆம் ! சிவபெருமான் நேரில் தோன்றினார். ஜயத்ரதன் செய்த பூஜையை ஏற்றுக்கொண்டார். வரம் தருவதாகவும் சொன்னார். ஜயத்ரதன், பாண்டவர்கள் ஐவரையும் நான் வெல்ல வேண்டும் என வரம் கேட்டான். சிவபெருமான் அதை மறுத்தார். ஜயத்ரதா ! சக்திவாய்ந்த பாசுபதாஸ்திரத்தை ஏற்கெனவே அர்ஜுனன் என்னிடமிருந்து பெற்றுவிட்டான். தெய்வ அஸ்திரங்களும் ஏராளமாக அவனிடம் உள்ளன. மேலும், கண்ணனையே துணையாகக் கொண்ட அர்ஜுனனை, தேவர்களாலும் வெல்ல முடியாது எனும்போது, நீ எம்மாத்திரம்? ஆகையால், அர்ஜுனனைத் தவிர மற்ற நால்வரையும் அவர்கள் படைகளையும், ஒரே ஒரு நாள் மட்டும் நீ தடுப்பாய், வெல்வாய் என்று சொல்லி மறைந்தார். ஜயத்ரதன், தன் அரண்மனைக்குத் திரும்பினான். ஜயத்ரதன் பெற்ற வரம் வேலை செய்தது. அதனால், பாண்டவர்கள் கதறினார்கள். எப்படி? பாண்டவர்களால் அவமானப்படுத்தப்பட்ட ஜயத்ரதன், அடிபட்ட பாம்பைப் போல நெஞ்சில் சீற்றத்துடன் பாண்டவர்களைப் பழி தீர்க்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்தான். அதற்கான வாய்ப்பு, அவனுக்கு பாரத யுத்தத்தின்போது கிடைத்தது. அதுவே, அவன் வாழ்நாளை முடிக்கும் வாய்ப்பாகவும் அமைந்தது.

பீஷ்மருக்குப் பிறகு துரோணர், கௌரவப் படைகளுக்குத் தலைமை தாங்கியிருந்தார். கௌரவர்களால் பாண்டவர்களின் தாக்குதலைத் தாங்க முடியவில்லை. காய்ந்துபோன வைக்கோல் கட்டுகளின் மேல் தீப்பந்தங்களை வீசி எரிப்பதைப் போல, அர்ஜுனன் தன் அம்புகளை வீசி கௌரவ சேனையை எரித்துக் கொண்டிருந்தான். தீப்பற்றி எரியும்போது காற்று வீசி அதற்கு உதவுவதைப் போல, அர்ஜுனனின் பிள்ளையான அபிமன்யு துரியோதனனின் படைகளுக்குப் பேரழிவை உண்டாக்கிக் கொண்டிருந்தான். உடனடியாகப் பாண்டவர்களைப் பிரித்து, அவர்களை பலவீனப்படுத்தியாக வேண்டிய சூழ்நிலையில் கௌரவர்கள் இருந்தார்கள். அர்ஜுனனைப் பிரித்தால் போதும். மீதி உள்ள நான்கு பேரையும் நான் வென்று விடுவேன் என்று சொல்லி, சிவன் தந்த வரத்தையும் நினைவூட்டி கௌரவர்களுக்குத் தைரியம் ஊட்டினான் ஜயத்ரதன். துரியோதனன், அர்ஜுனனைப் பிரிக்க நானாயிற்று என்று சொல்லி, சம் சப்தகர்களை ஏவினான். போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்வது அல்லது அவர்களால் கொல்லப்படுவது என்ற சபதத்துடன் போரில் ஈடுபடுபவர்களையே சம் சப்தகர்கள் என்பார்கள். அவர்கள், அர்ஜுனனைப் போருக்கு அழைத்தார்கள். அர்ஜுனன், அவர்களுடன் போரிடப் போய்விட்டான். அர்ஜுனனைத் தவிர மற்றவர்கள், துரோணர் தலைமையிலான கௌரவர் படையை எதிர்கொள்ளவேண்டிய நிலை ! கடும்போர் மூண்டது. துரோணர் வகுத்திருந்த படை அமைப்பை, யாராலும் உடைத்து உள்ளே போக முடியாத நிலை. இந்நிலை சற்று நீடித்தால், பாண்டவர் படைக்குப் பேரழிவு ஏற்படும். என்ன செய்வது? பாண்டவர் படை கலங்கியது. அப்போது அபிமன்யு, நான் இந்தத் துரோணரின் படை அமைப்பை உடைத்து உள்ளே நுழைந்து விடுவேன். ஆனால், அதிலிருந்து வெளியே வரும் வழி எனக்குத் தெரியாது என்றான். பீமன் உட்பட அனைவரும் தைரியம் சொன்னார்கள். நீ அந்தப் படையை உடைத்து உள்ளே நுழைந்து, கௌரவர் சேனைக்கு அழிவை உண்டாக்குவோம். வெளியே வருவதில் பிரச்னையே இல்லை என்றார்கள். இள ரத்தம் அல்லவா? அபிமன்யு துரோணரின் படை அமைப்பை உடைத்து உள்ளே நுழைந்துவிட்டான். தர்மர், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் படைகளுடன் அபிமன்யுவைப் பின்தொடர்ந்து, உள்ளே நுழைய முயன்றார்கள்.

அந்த நேரத்தில், ஜயத்ரதன் குறுக்கிட்டு, பீமன் முதலான அனைவரையும் படைகளோடு தடுத்தான். ஜயத்ரதன் ஏற்கெனவே தான் சிவபெருமானிடம் இருந்து பெற்ற வரத்தை, அப்போது உபயோகப்படுத்திக் கொண்டான். பாண்டவர் படை ஜயத்ரதனால் தடுக்கப்பட்டு, அபிமன்யு பகைவர்களின் நடுவில் அகப்பட்டு, வஞ்சனையாகக் கொல்லப்பட்டான். தர்மர் முதலான அனைவரும் நடுங்கினார்கள். சம் சப்தகர்களை வென்று திரும்பிய அர்ஜுனன், அபிமன்யுவின் முடிவைக் கேட்டுத் துடித்தான். அபிமன்யுவின் முடிவுக்குக் காரணமான ஜயத்ரதன் தலையை, நாளை மாலை சூரியன் மறைவதற்குள் கொய்வேன். இல்லையென்றால், நெருப்பில் விழுந்து நான் இறப்பேன். இது சத்தியம் என்று சபதம் செய்தான். தகவல் அறிந்ததும் துரியோதனன், தன் தங்கை கணவனான ஜயத்ரதனை மிகுந்த பாதுகாப்புடன் வைத்தான். போர் தொடங்கியது. அர்ஜுனனை எந்த விதத்திலும் முன்னேறவிடாதபடி கௌரவர் படை கடுமையாகப் போரிட்டது. நேரமும் போய்க்கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பொழுது சாய்ந்துவிடும். அதுவரை ஜயத்ரதனைக் காப்பாற்றிவிட்டால் போதும். அர்ஜுனன் தீயில் விழுந்து விடுவான் என்று நினைத்த கௌரவர் படை, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. சூரியன் இருளத் தொடங்கினான். (மூல நூலான வியாஸ பாரதத்தில் இல்லாத, ஆனால் மக்கள் மத்தியில் பரவியிருக்கக்கூடிய ஒரு தகவல் இங்கே இடம் பெறுகிறது) அர்ஜுனனோ, என் சபதம் தவறிப் போய்விட்டது. ஆகவே, நான் இறப்பதுதான் முறை என்று தீயை மூட்டச் சொல்லி, அதில் இறங்கத் தயாராகி விட்டான். அப்போது கண்ணன், அர்ஜுனா ! வீரனான நீ, வில்லில் பாசுபதாஸ்திரத்தைத் தொடுத்து, அதைச் செலுத்தும் நிலையிலேயே அக்னியை வலம் வா ! என்றார். அதன்படியே அர்ஜுனனும் அக்னியை வலம் வந்துகொண்டிருந்தான். அவன் முடிவைப் பார்ப்பதற்காக ஜயத்ரதன் ஆசையுடன் வெளிப்பட்டுத் தலையை நீட்டினான்; அவன் தலையை அர்ஜுனன் வாங்கிவிட்டான். ஆனால் வியாஸ பாரதத்தில், இந்தத் தீயை மூட்டச் சொல்லி அர்ஜுனன் அதில் குதிக்கப்போன தகவல் எல்லாம் கிடையாது. அதில் வேறு விதமாக தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.

போர்க்களத்தில் எதிர்ப்பட்டவர்களை எல்லாம் எமலோகம் அனுப்பிவிட்டு, வேகவேகமாக அர்ஜுனன், ஜயத்ரதனை நெருங்கி எதிர்த்தான். ஜயத்ரதனும் சும்மா இருக்கவில்லை. கண்ணன் மீது மூன்று அம்புகள், அர்ஜுனன் மீது ஆறு அம்புகள் என அம்புகளை ஏவி அவர்களை அடித்தான். அர்ஜுனன், ஜயத்ரதனின் தேரோட்டியைக் கொன்று அவன் கொடியையும் அறுத்துக் கீழே தள்ளினான். ஜயத்ரதனைச் சுற்றி கௌரவ வீரர்கள் மேலும் பாதுகாப்பாக சூழ்ந்துகொண்டார்கள். அப்போது கண்ணன், அர்ஜுனா, நான் ஒன்று சொல்கிறேன் கேள் ! நான் ஒருவழி செய்து சூரியனை மறைக்கிறேன். உடனே ஜயத்ரதன் சூரியன் மறைந்துவிட்டதாக நினைப்பான். தான் உயிர் பிழைப்பதாலும், உன் சபதம் நிறைவேறாமல் போவதாலும் அவனுக்கு மகிழ்ச்சி உண்டாகும். அந்த சந்தோஷத்தில் அவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தவறுவான். அப்போது நீ அவனை அடி என்றார். அவ்வாறு கூறி முடித்ததும் சூரியனை மறைக்கும் முகமாக, கண்ணன் அங்கே சக்ராயுதத்தை ஏவி சூரியனை மறைத்து வெளிச்சத்தைக் கவர்ந்தார். பாண்டவர் சேனை துயரத்தில் ஆழ்ந்தது. கௌரவர் சேனையோ அர்ஜுனன் முடிவை எண்ணி, சூரியன் மறைவை ஆர்வத்துடன் பார்த்தது. ஜயத்ரதனும், தலையைத் தூக்கி கழுத்தை நீட்டிப் பார்த்தான். அப்போது கண்ணன், அர்ஜுனா ! அதோ பார், ஜயத்ரதன் ! ஓர் அம்பினால் அவன் தலையை எடு ! என்றார். அடுத்த விநாடியில் அர்ஜுனன் ஓர் அம்பை ஏவி, ஜயத்ரதனின் தலையைக் கவர்ந்தான். அப்போது கண்ணன், அர்ஜுனா ! அந்தத் தலையைக் கீழே விழாதபடி செய் ! ச்யமந்த பஞ்சகம் என்னுமிடத்தில், இந்த ஜயத்ரதனின் தந்தையான விருத்த க்ஷத்ரன் ஜபம் செய்துகொண்டிருக்கிறான். ஜயத்ரதன் தலையை, அந்த விருத்த க்ஷத்ரன் மடியில் தள்ளு என்றார்.

அதைக் கேட்ட அர்ஜுனன், என்னவோ பந்தைத் தட்டுவதைப் போல அம்புகளாலேயே ஜயத்ரதனின் தலையைத் தள்ளிக்கொண்டுபோய், விருத்த க்ஷத்ரன் மடியில் போட்டான். ஜபம் முடிந்து எழுந்த விருத்த க்ஷத்ரன் மடியிலிருந்து ஜயத்ரதன் தலை கீழே விழுந்தது. விருத்த க்ஷத்ரன் தலை வெடித்து இறந்து போனான். கண்ணன் காரணம் சொன்னான்; இந்த ஜயத்ரதன் பிறந்தபோது, பூமியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒருவன் இந்த ஜயத்ரதனின் தலையை அறுப்பான் என்று அசரீரி சொல்லியது. அதைக்கேட்ட ஜயத்ரதனின் தந்தை, நான் மனமடக்கித் தவம் செய்தது உண்மையாக இருந்தால், என் மகன் தலையை எவன் கீழே தள்ளுவானோ அவன் தலை நூறு துண்டுகளாக வெடிக்கட்டும் என்றான். அதன்படி ஜயத்ரதன் தலையை பூமியில் தள்ளியிருந்தால். உன் தலை சிதறிப் போயிருக்கும். அதைத் தடுக்கத்தான், ஜயத்ரதன் தலையை விருத்த க்ஷத்ரன் மடியில் தள்ளு என்றேன். மடியில் விழுந்த மகன் தலையை, விருத்த க்ஷத்ரன் மண்ணில் தள்ளினான். அவன் வாக்குப்படியே தலை வெடித்து மாண்டான். அதேசமயம் கண்ணன், போர்க்களத்தில் இருளைப் போக்கி ஒளியைப் கொணர்ந்தார். சூரியனை மறைத்திருந்த சக்ராயுதத்தைத் திரும்பப் பெற்று, சூரியனை வெளிப்படச் செய்தார்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 19, 2013, 11:10:17 PM
த்ருஷ்டத்யும்னன்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_173427000000.jpg&hash=0be5b90dc5f570d9a905df733929f3eb4d0e64aa)


மகாபாரதம் என்றால் நாம் அனைவருக்கும் சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் பஞ்ச பாண்டவர்கள். பஞ்சபாண்டவர்களைப் பற்றியும், அவர்களது குணாதிசயங்களும் ஓரளவு நமக்குத் தெரிந்திருக்கும். இந்த மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களில் த்ருஷ்டத்யும்னனும் ஒருவன்.

இந்த த்ருஷ்டத்யும்னனைப் பற்றி அறிய வேண்டுமென்றால், துரோணரிடம் இருந்து தொடங்க வேண்டும். அப்போதுதான் த்ருஷ்டத்யும்னன் பிறந்ததற்கான காரணம் புரியும். துரோணர் தன் சீடர்களிடம், மாணவ மணிகளே ! நீங்கள் அனைவரும் வில் வித்தை முதலான போர்க்கலைகளில் நன்றாகத் தேர்ச்சி பெற்று விட்டீர்கள். குருநாதரான நான் இப்போது உங்களிடம் குருதட்சணை கேட்கப்போகிறேன். நான் கேட்கப்போவது பொன்னோ பொருளோ அல்ல. விசித்திரமான குருதட்சணை. ஆம் ! விசித்திரம்தான். சீடர்களான நீங்கள் போய் பாஞ்சால மன்னனான துருபதனைக் கட்டிவந்து, உங்கள் குருவான என் முன்னால் நிறுத்துங்கள். நான் கேட்கும் குருதட்சணை இதுதான் என்றார். அதை நிறைவேற்றுவதற்காக, முதலில் கௌரவர்கள் போய் துருபதனுடன் போரிட்டுத் தோற்றுப்போய்த் திரும்பினார்கள். அதன்பின், அர்ஜுனனும் பீமனும் துருபதனுடன் போரிடப் போனார்கள். துருபதனை வென்று, பிடித்துக் கட்டித் துரோணரின் முன்னால் நிறுத்தினார்கள். அப்போது, துருபதன் அவமானத்தால் தலைகுனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அரசரான துருபதனுக்கு ஏன் இந்த நிலை? துரோணர் ஏன் இவ்வாறு செய்யவேண்டும்? இளம் வயதில், துரோணரும் இளவரசரான துருபதனும் ஒரே குருகுலத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள். இணைபிரியாத நட்பு. அப்போதெல்லாம் துருபதன், துரோணா ! எதிர்காலத்தில் நான் அரசனாக ஆவேன். அப்போது, என் நண்பனான உனக்கு என் ராஜ்ஜியத்தில் பாதியைத் தருவேன். இது சத்தியம் என்று சொல்லுவார்.

அதன்படியே எதிர்காலத்தில் துருபதனும் அரசராக ஆனார். அப்போது துரோதணரின் நிலையோ, வறுமையின் பிடியில் சிக்கி வாடிப்போய் இருந்தது. கல்யாணமாகி குடும்பக்கணக்கில் ஒரு குழந்தை கூடிப்போயிருந்தது. அந்தக் குழந்தைக்குப் பாலுக்கு வழி இல்லை. மனம் வெதும்பிய துரோணர், சரி ! நம் நண்பன் துருபதன்தான் இப்போது அரசனாகி இருக்கிறானே ! அவனிடம் போய் ஒரு பசுமாடு கேட்கலாம். அவன் கொடுப்பான். அதை வைத்து நம் பிள்ளையின் பசியைத் தீர்க்கலாம் என்று எண்ணி துருபதனிடம் போனார். நடந்ததையெல்லாம் சொல்லி உதவி கேட்டார். ஆனால், துருபதன் துரோணரை அவமானப்படுத்தி விரட்டிவிட்டார். அன்று துருபதன் போட்ட அவமான விதைகள் துரோணர் உள்ளத்தில் முளைத்து வளர்ந்து, இதோ... இப்போது அர்ஜுனன் மூலம் துருபதனை அவமானப்படுத்திவிட்டன. அதனால்தான் துரோணர் முன்னால் தலைகுனிந்து நிற்கும்படியான நிலை துருபதனுக்கு ஏற்பட்டது. துரோணரின் தலையையே வாங்கும்படியான நிகழ்ச்சிக்கும் இது அஸ்திவாரம் போட்டது. ஆம் ! துருபதன் ஒரு தீர்மானத்துக்கு வந்தார். என்னைக் கட்டிப் பிடித்து இழுத்து வரச்சொல்லி அவமானப்படுத்திய துரோணரைக் கொல்ல ஒரு பிள்ளை வேண்டும். துரோணன் பேச்சைக் கேட்டு, என்னைப் போர்க்களத்தில் வென்ற அர்ஜுனனை மணம் செய்துகொள்ள ஒரு மகள் வேண்டும் என்று தீர்மானித்த துருபதன் ஒரு யாகம் செய்தார். யாகத்தின் முடிவில், மஞ்சளும் சிவப்பும் கலந்த நிறத்தில், அஞ்ச வைக்கும் உருவத்துடன் கிரீடம், கவசம், கத்தி, வில், அம்பு ஆகியவற்றைக் தரித்தபடி வீரன் ஒருவன் கர்ஜனை செய்தபடி யாக அக்னியிலிருந்து எழுந்தான். அப்போது ஆகாயத்திலிருந்து, இவன் துரோணருக்குச் சீடனாகவும் யமனாகவும் பிறந்திருக்கிறான். இந்த ராஜபுத்ரன், பாஞ்சாலர்களின் பயத்தைப் போக்கிப் புகழை உண்டாக்குவான். இவன் துரோணரை வதம் செய்து, துருபத மன்னனின் துயரத்தை ஒழிப்பதற்காகப் பிறந்தவன் என ஓர் அசரீரி சொல்லியது.

யாக அக்னியிலிருந்து பிறந்த குமாரன்தான் த்ருஷ்டத்யுனன். த்ருஷ்டம் என்றால், வெல்ல முடியாதவன் என்பது பொருள். த்யும்னன் என்னும் தங்கமயமான கவச குண்டலங்களோடு பிறந்ததால், அக்குமாரனுக்கு த்ருஷ்டத்யும்னன் எனப் பெயரிட்டார்கள். இவன் தோன்றிய யாக அக்னியிலிருந்து, இவனுக்குப் பிறகு தோன்றியவளே பாஞ்சாலி. ஆகவே, த்ருஷ்டத்யும்னன் தோன்றியது. துரோணரை வதம் செய்வதற்காகவே! வீரனான த்ருஷ்டத்யும்னன், வேதத்திலும் வல்லவனாக ஆனான். இவ்வளவு தகவல்களும் துரோணருக்குத் தெரியும். இருந்தும் அவர் த்ருஷ்டத்யும்னனைத் தன் வீட்டுக்கு அழைத்துவந்து, அவனுக்கு முறைப்படி வில் வித்தையைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். துரோணர் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும். என்னைக் கொல்வதற்காகவே த்ருஷ்டத்யும்னன் பிறந்திருக்கிறான் என்று விதி இருக்கும்போது, அதை என்னால் விலக்க முடியாது. அதற்காக, எனக்குத் தெரிந்திருக்கும் வித்தையை நான் அவனுக்குச் சொல்லிக் கொடுக்காமல் இருப்பது தர்மமாகாது என்று நினைத்தே துரோணர் த்ருஷ்டத்யும்னனுக்கு வில் வித்தையைச் சொல்லிக் கொடுத்தார். அவர் தனக்குத் தெரிந்த எல்லா வித்தைகளையும் சொல்லிக் கொடுத்தார். த்ருஷ்டத்யும்னனும் தன் கூர்த்த மதியால் அதிவிரைவிலேயே அனைத்தையும் கற்றுக்கொண்டான். அதன் பலனாக, புகழ்பெற்ற பாரத யுத்தத்தில் பாண்டவர்களின் படைகளுக்குத் தலைவனாக ஆனான் த்ருஷ்டத்யும்னன். கண்ணனும் தர்மரும் த்ருஷ்டத்யும்னனைத்தான் போரின்போது சேனாதிபதி ஆக்கினார்கள். போர்க்களத்தில் துரோணரால், பாண்டவ சேனைக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது. அப்போது பாண்டவர்களைப் காப்பதற்காகக் கண்ணன், இந்தத் துரோணர் வில்லுடன் இருக்கும் வரையில், இவரை யாராலும் வெல்ல முடியாது. இவரும் வில்லைக் கீழே வைக்க மாட்டார். இந்த யுத்த களத்தில் பாண்டவர் பக்கம் இருக்கும் வீரர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால், இந்தத் துரோணர் யுத்தம் செய்யக் கூடாது. இவருடைய பிள்ளையான அச்வத்தாமா, யுத்தத்தில் கொல்லப்பட்டான் என்று யாராவது இவரிடம் சொன்னால், இவர் யுத்தம் செய்யமாட்டார். உங்களில் யாராவது ஒருவர் துரோணரிடம் சென்று, அச்வத்தாமா போர்க்களத்தில் கொல்லப்பட்டான் என்று சொல்ல வேண்டும் என வற்புறுத்தினார்.

வேறு வழியற்ற நிலையில் தர்மரும் அவ்வாறே செய்ய ஒப்புக்கொண்டார். உடனே பீமன் சென்று (யுத்த களத்தில் இருந்த) மாளவ தேச மன்னன் இந்திர வர்மாவின் யானையான அச்வத்தாமா என்ற பெயர் கொண்ட யானையைக் கொன்றான். பிறகு பீமன் துரோணரை நெருங்கி, அச்வத்தாமா கொல்லப்பட்டான் எனக் கூறினான் (அச்வத்தாமா என்ற யானை கொல்லப்பட்டதை நினைத்தே பீமன் அவ்வாறு சொன்னான்). பீமன் வார்த்தைகளை துரோணர் நம்பவில்லை. அதனால் தர்மரிடம் அவர், அச்வத்தாமா, கொல்லப்பட்டானா இல்லையா? எனக் கேட்டார். அப்போது கண்ணன் சொற்படி தர்மர் நிலைமையைப் புரிந்துகொண்டார். உடனே அவர் துரோணரின் காதுகளில் விழும்படியாக, அச்வத்தாமா ஹத: குஞ்சர: என்ற வாக்கியத்தில், அச்வத்தாமா ஹத: (அச்வத்தாமா கொல்லப்பட்டான்) என்பதை உரத்த குரலில் சொன்னார். அதன்பின் உள்ள குஞ்சர: (யானை) என்ற வார்த்தையை மெல்லச் சொன்னார். அதாவது, துரோணரின் காதுகளில் அந்த வார்த்தை விழாதவாறு சொன்னார். அவ்வளவுதான் ! விளைந்தது விபரீதம். தர்மர் அவ்வாறு பொய் சொன்னதும், அதுவரையில் தரையிலிருந்து நான்கு அங்குல உயரத்தில் தரையைத் தீண்டாமலேயே இருந்த தர்மருடைய ரதம் தரையைத் தொட்டுவிட்டது. ரதத்தில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளின் கால்கள் பூமியைத் தொட்டன. (இந்த இடத்தில் மக்கள் மத்தியில் பரவியிருக்கும் ஒரு பொய்யான தகவல்: தர்மர், அச்வத்தாமா ஹத: குஞ்சர: என்று சொன்னார். அப்போது குஞ்சர: என்னும் வார்த்தை துரோணரின் காதுகளில் விழாதபடி, கண்ணன் தன் பாஞ்சஜன்யம் என்னும் சங்கை எடுத்து பம்பம் என்று முழக்கிவிட்டார். இது நல்லாப்பிள்ளை பாரதம் சொல்லும் தகவல்.

பீமன் மாளவ மன்னனின் யானையைக் கொன்றதோ, பீமன், அச்வத்தாமா இறந்து விட்டான் என்று சொன்னதோ, தர்மர் பொய் சொன்னதும் அவர் தேர் தரையைத் தொட்டதோ - இங்கே நல்லாப்பிள்ளை பாரதத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் என்ன செய்வது? பாமரர்கள் நடுவில் நல்லாப்பிள்ளை பாரதமும், படித்தவர்கள் மத்தியில் வில்லி பாரதமும்தான் பரவியிருக்கின்றன. வியாஸர், பாரதத்தில் சொன்ன அற்புதமான, உண்மையான தகவல்கள் தெரியாமலே போய்விட்டன.) தர்மர் மூலமாக அச்வத்தாமாவின் முடிவைப் பற்றிக் கேள்விப்பட்ட துரோணர், புத்திர சோகத்தால் உள்ளம் உடைந்தார்; அறிவு நிலைகுலைந்தது; தன் கைகளில் இருந்த வில்லைக் கீழே எறிந்தார். தன் மகனான அச்வத்தாமாவை நினைத்துக் கதறினார். ரதத்தின் நடுவில் உட்கார்ந்தபடி, உயிரை விடுவதற்காக யோக நிஷ்டையை அடைந்தார். இதுதான் நேரம் என்று, துரோணரைக் கொல்வதற்காகவே பிறந்திருந்த த்ருஷ்டத்யும்னன், கையில் இருந்த வில்லைக் கீழே வைத்துவிட்டு, ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு வேகவேகமாகத் துரோணரை நோக்கி ஓடினான். பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், ஆ ! ஆ ! கெட்டான் த்ருஷ்டத்யும்னன் என்று கத்தினார்கள். த்ருஷ்டத்யும்னன் அப்போது எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. அவன் வெகுவேகமாக ஓடிப்போய் துரோணரை நெருங்கினான்; துரோணரின் தலைமுடியைப் பிடித்து, அவர் தலையைத் துண்டித்தான்; துண்டிக்கப்பட்ட துரோணரின் தலையை கௌரவர்களின் முன்னால் போட்டான். அனைவரும் த்ருஷ்டத்யும்னனின் செயலைக் கண்டு சிதறி ஓடினார்கள். த்ருஷ்டத்யும்னன் எதற்காகப் பிறந்தானோ, அந்தச் செயலை முடித்து விட்டான். த்ருஷ்டத்யும்னன் பிறந்ததற்கான காரணமும் காரியமும் முடிந்துவிட்டன. ஆனால், அவன் முடிய வேண்டுமல்லவா? அதற்காக அங்கே போர்க்களத்தில் ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. என் தந்தையைக் கொன்ற த்ருஷ்டத்யும்னனைக் கொல்வேன் என்று சபதம் செய்தது. ஆம் ! அச்வத்தாமாதான் அது. அச்வத்தாமா சபதம் செய்துவிட்டானே தவிர, அந்தச் சபதம் பாரத யுத்தம் முடிந்த பிறகு, அதுவும் துரியோதனன் கீழே விழுந்த பிறகுதான் நிறைவேறியது. பாரத யுத்தத்தின் முடிவில் துரியோதனன் பீமனால் அடிக்கப்பட்டுத் தொடை முறிந்து, ரத்தம் வழியக் கீழே கிடந்தான். அப்போது அவனைப் பார்த்து அச்வத்தாமா, கிருபாசார்யார், கிருதவர்மா ஆகிய மூவரும் கலங்கிப் பலவாறாகப் புலம்பினார்கள்.

அப்போது துரியோதனன், அச்வத்தாமாவை சேனாதிபதி ஆக்கினான். உடனே அச்வத்தாமா, ஆயுதங்களை எல்லாம் கீழே வைத்துவிட்டு, யோக நிலையில் இருந்த என் தந்தையைக் கொன்ற பாவியான த்ருஷ்டத்யும்னனைக் கொல்லப்போகிறேன் என்று சொல்லி, பாண்டவர் பாசறையை நோக்கிப் போனான். அவன் சொற்படி கிருபாசார்யாரும், கிருதவர்மாவும்கூடப் போனார்கள். அவர்கள் போன நேரம்... கண்ணனும் பாண்டவர்களும் அங்கு இல்லை. தன்னைத் தாக்காதபடி சிவபெருமானை வேண்டி, அவர் அருளைப் பெற்று பாசறைக்குள் நுழைந்தான். கிருபாசார்யாரும் கிருதவர்மாவும் பாசறையின் வாயிலில் நின்றார்கள். பாசறைக்குள் நுழைந்த அச்வத்தாமா, அங்கு தூங்கிக் கொண்டிருந்த அனைவரையும் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். அவன் பார்வையில் த்ருஷ்டத்யும்னன் தூங்குவது தெரிந்தது. உடனே, அச்வத்தாமா த்ருஷ்டத்யும்னனை நெருங்கி உற்றுப் பார்த்தான். வெண்பட்டாலான பெரிய விரிப்பினால் மூடப்பட்டு, வாசனை மிகுந்த பூமாலைகளோடு கூடிய படுக்கையில் த்ருஷ்டத்யும்னன் தூங்கிக்கொண்டிருந்தான். வாசனை மிகுந்த புகை, மெல்லியதாகப் படுக்கையைச் சுற்றி வீசிக்கொண்டிருந்தது. தன் பலத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட த்ருஷ்டத்யும்னன், எந்தவிதமான பயமும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தான். அந்த நிலையில் த்ருஷ்டத்யும்னனைப் பார்த்த அச்வத்தாமா, அவனைத் தன் காலால் உதைத்தான். த்ருஷ்டத்யும்னன் திடுக்கிட்டு விழித்து, எதிரில் இருந்த அச்வத்தாமாவைப் பார்த்து எழுந்திருக்க முயற்சி செய்தான். அச்வத்தாமா விடவில்லை. இரண்டு கைகளாலும் த்ருஷ்டத்யும்னனின் தலைமயிரைப் பிடித்து, அவனை அப்படியே தரையில் தேய்த்தான். த்ருஷ்டத்யும்னனால் அப்போது ஏதும் செய்ய முடியவில்லை. அச்வத்தாமா, அடங்காத கோபத்தோடும் குரூரமான சிந்தையோடும் வில்லிலிருந்த நாண் கயிற்றை அவிழ்த்து, த்ருஷ்டத்யுனனின் கழுத்தில் கட்டி இறுக்கினான். த்ருஷ்டத்யும்னன் அலறினான். அவன் கழுத்திலும் மார்பிலும் கால்களிலும் ஏறி மிதித்தான் அச்வத்தாமா.

த்ருஷ்டத்யும்னன் கை நகங்களால் அச்வத்தாமாவைக் கீறியபடியே, குரு புத்ரா! என்னைக் கொன்றுவிடு ! தாமதம் செய்யாதே ! உன்னால் கொல்லப்பட்டு, நான் புண்ணிய உலகங்களை அடைவேன் என்று நா குழறியபடியே வேண்டினான். அச்வத்தாமா கொதித்தான். குலத்தைக் கெடுத்த பாவி ! குருநாதர்களைக் கொல்லுகிறவர்களுக்குப் புண்ணிய உலகங்கள் கிடையாது. என் தந்தையைக் கொன்ற உன்னை இப்போதே கொல்வேன் என்று சொல்லி, த்ருஷ்டத்யும்னனை, மர்ம ஸ்தானங்களில் மதயானை உதைப்பதைப் போல் உதைத்துக் கொன்றான். த்ருஷ்டத்யும்னன் வாழ்நாள் முடிந்தது. யாக அக்னியிலிருந்து பிறந்தவன், பாஞ்சாலியின் சகோதரன், வீரன், வேதங்களில் வல்லவன், துரோணரைக் கொல்வதற்காகவே பிறந்தவன். துரோணரிடமே வில், வித்தை கற்றவன். பதினெட்டு நாட்கள் நடந்த பாரத யுத்தத்தில், பாண்டவர்களின் படைக்குச் சேனாதிபதியாக இருந்தவன். வீர புருஷரான துரோணரைக் கொன்றவன். சிரஞ்சீவியான அச்வத்தாமாவின் கரங்களால் முடிவைத் தழுவியவன் என்று பல பெருமைகளைக் கொண்டவன் த்ருஷ்டத்யும்னன்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 19, 2013, 11:27:47 PM
பரதன்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_173321000000.jpg&hash=76027553f842810bfa84a524138cf40afa06095a)


துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாக எண்ணினான் ராமன். காட்டுக்குப் போ என்று தந்தையின் உத்தரவை கைகேயி வாயிலாகக் கேட்டதும் சிறிதும் மனம் கலங்காமல் அங்ஙனமே ஆகுக என்றான் என்பது வால்மீகியின் வாக்கு. கம்பரோ, கைகேயியின் சொற்கேட்டு ராமன் மகிழ்ந்தான் என்கிறார். ஆனால், ராமன் காட்டுக்குப் போன துயரத்தை பரதன் தான் அனுபவித்தான். செய்தி கேட்டதும், அங்குசத்தாலும் தோமரத்தாலும் புண்பட்ட யானை எனத் தரையில் வீழ்ந்தான் என்கிறார் வால்மீகி. காட்டுக்குச் சென்ற ராமனைக் காணும் வரையில் பரதன் பட்ட துயரத்தை வால்மீகியும் கம்பரும் பலவிதமாக வர்ணித்திருக்கிறார்கள். அயோத்தியா காண்டத்தில் முனிவரெல்லோரும் ஒன்று கூடி ராமனுக்கு முடி சூட்டி, நான் காண தேவர்கள் அருள வேண்டும் என்று பிரதிக்ஞை செய்திருந்தான் பரதன். முடிசூடும் தறுவாயில் என் நெடுநாள் கனவு பலித்தது என்று ஆனந்தக் களிப்புற்றான்.

பக்தி நூல்களில் பக்தர்களுடைய தன்மை பற்றிப் பலவாறு விவரித்திருக்கிறார்கள். வைணவ நூல்களில், வைகுண்டத்தில் நித்திய சூரிகளாக இருப்பவர்கள் கடவுளுக்கு நிகரான தோற்றத்தையும் பெற்று ஆனந்திப்பார்கள் என்று உரைக்கப்பட்டுள்ளது. இதையே பக்தர்கள் வேண்டுவர். ஆனால் பரதனோ இவ்விதமான ஆனந்தத்தைக் கோரவில்லை. தனக்கு முன் பிறந்தோன் என்றும், தந்தை என்றும், சுற்றம் என்றும், தெய்வம் என்றும் ராமனைக் கருதி, அவன் படும் துயரமெல்லாம் தான் பட வேண்டும் என்று, வருத்தத்தைத் தேடி அழைத்துக் கொண்டான். ராமன் காட்டுக்குப் போன செய்தியைக் கேட்டதும், அடியேனும் புல் மீதோ தரை மீதோ படுத்துறங்குவேன். காய்கனியே உட்கொள்வேன். மரவுரி உடுப்பேன். சடைமுடி தரிப்பேன் என்று சபதம் செய்து, ராமன் திரும்பவும் அயோத்தியை அடையும் வரை தானும் நகரத்திற்குச் செல்லாமல் நந்தி கிராமத்திலேயே தங்கி வந்தான். ராமனுடன் கூடவே இல்லாவிடினும் அவன் பாதுகையைத் தலை மேல் வைத்து, பதினான்கு வருடங்கள் அதற்கு ஆராதனம் செய்து ராமனோடு ஒன்றியிருந்த அனுபவத்தைப் பெற்றான்.

பக்தி என்பது அன்பே உருவானது. அன்பே சிவம் என்பார் திருமூலர். பக்தி செலுத்துவதற்கு அபார ஞானம், அசாத்திய சாமர்த்தியம் தேவையில்லை. மனதால், வாயால், செயலால் பக்தி செலுத்தலாம். ராமனிடத்தில் பரதனுக்கு இருந்த அன்புக்கு எல்லையே இல்லை. கரை காணாக் காதலான் என்று குகனுக்குச் சொன்ன வாக்கு பரதனுக்கும் பொருந்தும். ராமபிரானுக்கும் பரதனிடத்தில் அளவிலா அன்பு. தன்னையும் பரதனையும் ஒன்றாகவே கருதினான் என்று கம்பர், ஆழிசூழ் உலகத்தை பரதனே ஆள, தாழிரும் சடைகள் தாங்கி, காட்டில் முனிவரோடு ஏழிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து திரும்பி வா என்று கைகேயி ராமனிடம் சொன்னபோது, ராமன் அவளுக்குக் கூறிய பதில்:

என் பின்னவன் பெற்ற செல்வம் அடியேன் பெற்றதன்றோ பக்தருள் சிறந்து பரந்தாமனின் அருளைப் பெற்றவன் பரதனே !
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:01:10 AM
அவன் கேட்ட இடம்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_171130000000.jpg&hash=a7695bd3aec7bdf8ee51ec5892d53832d733f02a)


கலியுகம் துவங்கியதும், அதன் அதிபதியான கலிபுருஷன், அர்ஜுனனின் பேரனான பரீட்சித்து மகாராஜா முன் வந்தான்.  மகாராஜா! நான் புதிதாக பூலோகம்  வந்தவன். தங்க இடம் கொடுங்கள், என்று கேட்டான். உஹும்...உயர்ந்த மனநிலையுடன்  ஆட்சிசெய்யும் என் நாட்டில் உனக்கு இடமில்லை, என்று மறுத்தான் பரீட்சித்து. அப்படி சொல்லாதீர்கள். நாடு முழுக்க பரவியிருக்க வேண்டுமென நான் கேட்கவில்லை.  குறிப்பிட்ட இடத்தைச் சொல்லுங்கள், என்று கெஞ்சினான். சரி..மது அருந்தும் இடம், சூதாடுமிடம், மிருகங்களை வதை செய்யும் இடம், ஒற்றுமையில்லாத சகோதர, சகோதரிகள் இருக்குமிடம் ஆகியவற்றில் நீ தங்கலாம், என அனுமதித்தார் பரீட்சித்து.

ஒரே நேரத்தில், நான்கு இடங்களில் தங்குவது கஷ்டம். ஏதோ, ஒரு இடத்தைக்  குறிப்பிடுங்கள். அங்கே தங்கிக் கொள்கிறேன், என்றான். பரீட்சித்து அவனிடம், ஒரு தங்கக் கட்டியைக் கொடுத்து, கலியே! நீ பணத்தில் தங்கியிரு. பணத்தில் நான் சொன்ன நான்கும் இருக்கிறது, என்றார். கலிக்கு ஏக சந்தோஷம்.நன்றி மகாராஜா! இந்த பணத்தில் நான்  தங்குவேன். மக்களை அமைதி இழக்கச் செய்வேன். ஆயிரக்கணக்கானவர்கள் என் பிடியில் இருப்பார்கள். அவர்களிடையே கலகத்தை ஏற்படுத்துவேன், என்று கூறி விடைபெற்றான். கலிபுருஷன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான், என்பது நம்  எல்லோருக்குமே தெரியும்!
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:04:37 AM
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கையா!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_171103000000.jpg&hash=0967533a6cbf6168a51d148f9c04dbf665ff11d5)


ஒரு வீட்டிற்கு வியாபாரி ஒருவர் வந்தார். வீட்டுக்காரரிடம்,ஐயா! தங்கள் வீட்டில் சிலநாள் தங்கி, இவ்வூரில் வியாபாரப் பணிகளைக் கவனிக்க வேண்டியுள்ளது. தங்குவதற்கும், உணவருந்தவும் பணம் தந்து விடுகிறேன், என்றார். வீட்டுக்காரரும் சம்மதித்தார். வியாபாரி இரவு வீட்டுக்கு வந்ததும், பெரும் பணத்தை எண்ணுவார். வீட்டுக்காரனுக்கு, அதை எப்படியாவது திருட வேண்டுமென்று எண்ணம் வந்தது. வியாபாரி தூங்கியதும், நைசாக அவரது தலையணையின் கீழே, துழாவிப் பார்த்தார். பணம் சிக்கவில்லை. ஆனால், மறுநாள் வியாபாரி பாக்கெட்டில் பணம் எடுத்து வைப்பதைப் பார்ப்பார். இந்த மனுஷன் எங்கே தான் ஒளித்து வைக்கிறான்! தெரியலியே! என்று தவித்தான்.

தூக்கம் அறவே போய்விட்டது. மறுநாள், அவர் திருதிருவென விழிப்பதைப் பார்த்த வியாபாரி, என்னய்யா பணத்தை தேடுகிறீர்களா? என்றார். அவர் படீரென அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். நீங்கள் என்ன மந்திரவாதியா? பணத்தை எங்குதான் வைத்திருந்தீர்கள்? என்று கேட்டார். உன் படுக்கைக்கு கீழே பார், என்றார் வியாபாரி. அவரும் பார்க்க, அடியில் பணம் இருந்தது.  நீ என் பொருட்களை நோட்டமிட்டதை நான் பார்த்து விட்டேன். எனவே, உன் படுக்கையின் அடியிலேயே வைத்து விட்டேன். இது தான் நான் செய்த தந்திரம், என்றார். வீட்டுக்காரர் தலை குனிந்தார்.  அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படுவது அவமானத்தை தரும்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:06:17 AM
கோபம் கொள்ளலாமா!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_171002000000.jpg&hash=adf23d3242aef539c7bdbaa3ca00d3683b899076)


பெற்றோருக்கு முருகன் என்ற மகன் இருந்தான். சிறு சிறு விஷயங்களுக்கு  கூட பெற்றோரிடமும், நண்பர்களிடமும் கோபப்படுவான். இதனால், நண்பர்கள் அவனை விட்டு விலகி விட்டனர். தன்னை யாருமே அண்டாததால், அவனது கோபம் மேலும் அதிகமானது. சில வேளைகளில் அந்தக் கோபத்தை மூர்க்கத்தனமாக பெற்றோர் மீது காட்டினான். பாத்திரங்களை உடைத்தெறிவான். பெற்றோருக்கு மனக்கஷ்டத்துடன், பொருள் இழப்பால் பணக்கஷ்டமும் ஏற்பட்டது. ஒருநாள், அவனது தந்தை  கைலாசம் மகனை அழைத்தார். முருகா! நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா! உன் கோபத்தால் எவ்வளவு பொருள் இழப்பு, அது மட்டுமா? உன்னை நாடி வருபவர்களும் குறைந்து விட்டார்கள். பள்ளிக்குச் சென்ற நீ, அங்கே பிள்ளைகளை அடித்ததால் நிர்வாகம் உன்னை நீக்கி விட்டது. படிப்பு பாழானது. ஆனாலும், திருந்த மறுக்கிறாய். உனக்கு கோபம் வருவதன் காரணம் தான் என்ன? என்றார்.

எல்லாரும் என்னைக் கோபப்படுத்துகிறார்கள், என் விருப்பப்படி தான் எல்லாம் நடக்க வேண்டும். சூரியனும், சந்திரனும் என்னைக் கேட்டு தான் எழ வேண்டும், மறைய வேண்டும் என்ற கொள்கையுடைய வன் நான். என் சொல் எடுபடாததால், நான் கோபிக்கிறேன். நீங்களும், அம்மாவும் இனி நான் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். கோபப்படுவதை நிறுத்தி விடுகிறேன், என்றான். அந்தக் கஷ்டத்திலும் கைலாசம் உலர்ந்த சிரிப்பொன்றை உதிர்த்தார். உன் இஷ்டப்படியே ஆகட்டும். ஆனால், ஒரு நிபந்தனை . நீ கோபப்படும் சமயமெல்லாம், இந்தப் பெட்டியிலுள்ள ஆணியை எடுத்து அந்த மரத்தில் அடிக்க வேண்டும், என்றார். முருகனுக்கு அவர் ஏன் அவ்வாறு செய்யச் சொல்கிறார் என்பது புரியவில்லை. இருந்தாலும், தலையாட்டி வைத்தான். அன்றுமுதல், அவன் கோபப்படும் சமயங்களில் ஆணிகளை எடுத்து அடித்தான். முதல்நாள் பத்து ஆணி அடிக்கப்பட்டது. மறுநாள், மரத்தின் அருகே சென்றான்.  சே...இந்தளவுக்கா கோபப்பட்டிருக்கிறோம், கஷ்டமாக இருக்கிறதே!என்று நினைத்தான்.
அதற்காக மறுநாள் கோபப்படாமல் இல்லை. ஆனால், எண்ணிக்கை ஏழாகக் குறைந்து விட்டது.

இப்படியே ஆறு, ஐந்து, மூன்று எனக் குறையவே, மறுநாள் சிந்திக்க  ஆரம்பித்து விட்டான். அப்படியானால், என்னால் கோபிக்காமலும் இருக்க முடியும்  என்பது இந்த ஆணிகளின் எண்ணிக்கையில் இருந்ததே நிரூபணம்  ஆகிறது, என எண்ணிய வேளையில், கைலாசம் அவனை அழைத்தார். முருகா! இனி நீ ஆணி அடிக்க வேண்டாம். அடித்த ஆணிகளைப் பிடுங்கு, என்றார். அவனும் அர்த்தம் புரியாமல்  அவற்றைப் பிடுங்கினான். ஆணியைப் பிடுங்கிய இடங்களில் துவாரமாயிருந்தது. சில இடங்களில் பால் கசிந்து, மரத்தை அசுத்தப்படுத்தியிருந்தது. பார்த்தாயா முருகா! நீ மரத்தில் அடித்த ஆணி எந்தளவுக்கு துளை ஏற்படுத்தி அசுத்தப்படுத்தி உள்ளதை! மரத்திலேயே இந்தளவுக்கு துவாரம் விழுந்தால், உன் சொல்லால் புண்பட்ட இதயங்கள் எத்தனை இருக்கும்! மரத்தில் பால் வழிந்தது போல், அவர்களும் கண்ணீர் வடித்திருப்பார்களே! அவர்களது தாமரை போன்ற முகம் கூம்பிப் போய் இருக்குமே! சிந்தித்துப் பார், என்றார். முருகனுக்கு கண்ணீர் வந்துவிட்டது. அன்று முதல் அவனுக்கு ஆணியும், சுத்தியலும் தேவைப்படவில்லை.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:07:55 AM
ஆறானால் என்ன! நூறானால் என்ன!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_170915000000.jpg&hash=b5dd2f54412a4f36680979c75c02a1c8edadd3ac)


மரத்திலோ, வீட்டுச்சுவரிலோ விளையாடுகிற மகனைப் பார்த்து கீழே விழுந்து விடாதே மகனே! கவனமாக இரு, என்று எச்சரிக்கை செய்கிற பாசத்திற்குரிய தாய்மார்களை உலகம் முழுக்கக் காணலாம்.  ஆனால், மகன் மரணத்தை தழுவ இருக்கிற வேளையில், போ..மரணக்கயிற்றை முத்தமிடு. இது என்றேனும் ஒருநாள் உன்னைத் தேடி வரத்தான் போகிறது. எதுவரை வாழ்ந்தாய் என்பது முக்கியமல்ல.  எதற்காக வாழ்ந்தாய் என்பது தான் முக்கியம். நீ இந்த தேசத்துக்காக உயிர்விட்டால்,  நிச்சயமாக மரணமடைய மாட்டாய். உன்னைப் பற்றி தினமும் ஒருவன் எழுதிக் கொண்டிருப்பான், ஒருவன் பேசிக்கொண்டிருப்பான், ஒருவன் நினைத்துக் கொண்டிருப்பான், என்று முழக்கமிட்ட வீரத்தாய் ஒருத்தியும் இந்த பூமியில் தான் வசித்தாள்.

சுதந்திரப் போராட்ட சிரோன்மணி பகத்சிங்கின் தாயே அவர். விடுதலைக்காக பாடுபட்ட தீரன், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, மார்ச் 23, 1931ல் மரணக்கயிற்றில் தொங்க வேண்டியிருந்த நிலையில், இருபது நாட்களுக்கு முன்பாக அவரது தாய் மகனைச் சந்தித்தார். தன் மரணத்துக்காக, தாயார் அழுது புலம்புவாரே! அவரை எப்படி சமாளிக்கப் போகிறோம்... வெள்ளையர் களைக் கண்டால் கர்ஜிக்கும் அந்த சிங்கம், தன் தாயின் முகத்தைப் பார்க்க தயங்கியது. இருப்பினும், சற்றே கண்களை உயர்த்தி  அவரைப் பார்த்தபோது தான், அவள் தீட்சண்யமாக தன்னைப் பார்ப்பதைக் கவனித்தார். அப்போது, அந்தத்தாய் உதிர்த்த வார்த்தைகளைத் தான் மேலே வாசித்தீர்கள். ஆறு வயதானாலும், நூறு வயதானாலும் என்றோ ஒருநாள் மரணம் வந்தே தீரும். இந்த உண்மையை மனதில் வைத்து, பாசமுள்ள தாயாக மட்டுமல்ல...வீரத்தாயாகவும் இருந்து பிள்ளைகளை வளருங்கள். அவர்கள்  உலக சரித்திரத்தில் இடம்பிடிப்பார்கள்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:10:02 AM
நீங்களும் மருது.. இதுவும் மருது!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_170841000000.jpg&hash=ce5417919a6f9d7291fab290145fc18e732f9920)


காளையார்கோவிலிலுள்ள சிவாலயத்துக்கு புதிதாக தேர் செய்யும்படி மருதுபாண்டிய மன்னர் உத்தரவிட்டார். தச்சர்கள் மரம் தேடி அலைந்தனர். சிவகங்கை சமஸ்தானத்திற்குரிய திருத்தலமான பூவனநாதசுவாமி கோயிலில் ஒரு மரம் இருந்தது. அது நன்கு பருத்து அடர்ந்து வளர்ந்திருந்தது. அதனை வெட்டி தேர்ப்பணியைத் தொடங்குவது என முடிவெடுத்தனர். அதற்காக ஆட்களும் வந்துவிட்டனர். பலருக்கும் நிழல் தரும் மரத்தை வெட்ட கோயில் அர்ச்சகருக்கு மனமில்லை. ஓடிவந்து, மன்னரின் மீது ஆணை! இந்த மரத்தை யாரும் வெட்டக்கூடாது  என்று வேகமாக கத்தினார். பணியாட்கள் செய்வதறியாது திகைத்தனர்.  விஷயமறிந்த மன்னருக்கு கோபம் தலைக்கேறியது. என் கட்டளையை மீறும் தைரியம் அர்ச்சகருக்கு எப்படி வந்தது?  என்றவர் கோயிலுக்கு விரைந்தார்.

அர்ச்சகர் சிவனை வணங்கி விட்டு மன்னரிடம் வந்தார். மன்னரைப் பார்த்து, மாமன்னரே! வணக்கம். உங்களைப் போலவே இந்த மருதமரமும் அனைவருக்கும் குளிர்ச்சியான நிழலைக் கொடுக்கிறது. நீங்களோ மருதுபாண்டியர். இது மருத மரம். இதைப் பார்க்கும் போதெல்லாம் உங்களின் நல்லாட்சியே என் நினைவிற்கு வருகிறது. அதனால் தான் மரத்தை வெட்டுவதற்கு எனக்கு சிறிதும் மனமில்லை, என்று சொல்லி வணங்கினார். அர்ச்சகரின் பேச்சைக் கேட்ட மன்னர் என்ன செய்வதென தெரியாமல் நின்றார். அவரைப் பாராட்டிய மன்னர் பரிசளித்து விட்டு அரண்மனை திரும்பினார். சுபமான ஒரு விஷயத்துக்கு கூட மரங்களை வெட்டுவதில் மக்கள் கட்டுப்பாட்டைக் கடைபிடித்ததை இதன்மூலம் தெரிந்து கொள்கிறோம்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:11:40 AM
உனக்கு நிகர்நீயே!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_170806000000.jpg&hash=2b450268aba6524418aaf48953dffa40c5f8c6c7)


ஆணுரிமை, பெண்ணுரிமை என்ற போர்வையில், உலகத்தில் ஒழுக்கம் சரிந்து கொண்டிருக்கிறது. காதலில் சிக்கி தன்னையே இழக்கும் பெண்கள் பலர். காதலிகளால் பணம், அழகுக்காக கைவிடப்படும் ஆண்களும் இல்லாமல் இல்லை. இப்படி ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்தால் நிலைமை என்னாகும் என்பதற்கு தர்மரின் இறுதிக்காலத்தில் நடந்த சம்பவம் உதாரணம்.பாரதப்போருக்குப் பின்  சிலகாலம் ஆட்சி செய்த தர்மர், தன் தம்பிகளிடம், தம்பியரே! காலத்தை வென்றவர் எவருமில்லை. கலியுகம் வந்துவிட்டது. ஒருவரை ஒருவர் ஏமாற்றி பிழைப்பவர்கள் அதிகரிப்பார்கள். இனியும், இந்த உலகில் இருக்க வேண்டாம். அரசாங்கத்தை அபிமன்யுவின் பேரன் பரீட்சித்திடம்  ஒப்படைத்து விட்டு, நாம் திரவுபதியுடன் காடு செல்வோம். அங்கு சென்று தவவாழ்வு வாழ்ந்து இறைவனுடன் ஐக்கியமாவோம், என்றார். எல்லாரும் சம்மதித்தனர்.

மக்களிடம் பிரியாவிடை பெற்று அவர்கள் காட்டுக்குப் புறப்பட்டனர். அவர்கள் பின்னால் ஒரு நாய் மட்டும் சென்றது. செல்லும் வழியில் திரவுபதி மயங்கி விழுந்தாள். இதைக்கண்ட பீமன் தர்மரிடம், அண்ணா! யோக வாழ்வைத் தேடி  செல்கிறோமே! இந்த சமயத்தில் திரவுபதி விழுந்துவிட்டாளே! என்ன காரணம்? என்றான். அவள் அர்ஜுனன் மேல் அளவற்ற பாசம்  வைத்திருந்தாள். அவனைப் பிரியப்போகிறோமே என நினைத்தாள், மயங்கிவிட்டாள், என்றார். சற்றுநேரத்தில் சகாதேவன் விழுந்தான்.  அண்ணா! இதென்ன ஆச்சரியம்!  இவனுக்கென்ன ஆயிற்று? என்ற பீமனிடம், இவன் தன்னை விட உயர்ந்த கல்விமான் இல்லை என்ற ஆணவம் கொண்டிருந்தான். அதனால் சரிந்தான், என்றார். அடுத்து, நகுலன் விழுந்தான். இவன் தன்னை விட அழகன் இல்லை என்ற இறுமாப்பு கொண்டிருந்தான். அதனால் மயங்கினான், என்றார் தர்மர்.  பின்பு, வில்லாதி வீரனான அர்ஜுனனே விழுந்தான். பாரதப்போரில், தான் ஒருவனே தனித்து நின்று எதிரிகள் அனைவரையும் கொல்வேன் என உறுதிகூறினான். சொன்னபடி செய்யவில்லை. முடியாத ஒன்றை செய்து தருவதாகக் கூறுவது பாவம், அதனால் இறந்தான், என்றார் தர்மர். அடுத்து பீமன் மயங்கி விழ தர்மர் அங்கு நின்றபடியே, பீமா! உன்னைப் போல் பலசாலிகள் யாருமில்லை என்ற இறுமாப்பு கொண்டிருந்தாயல்லவா! அதனால் தான் இந்தக்கதி, என்றார்.

மயங்கி விழுந்த எல்லாரும் சில நிமிடங்களில் இறந்து  விட்டனர். தர்மர் பயணத்தைத் தொடர நாய் மட்டும் பின்னால் சென்றது. அப்போது, இந்திரன் ஒரு விமானத்தில் வந்தான். தர்மரை சொர்க்கத்துக்கு அழைத்தான்.  என் தம்பிகள், மனைவி இறந்துவிட்டனர். அவர்களின்றி என்னால் வர முடியாது, என தர்மர் மறுத்தார். அவர்கள் ஏற்கனவே சொர்க்கம் சென்று விட்டனர். எனவே, அங்கு வருவதில் தடையில்லை, என்றான் இந்திரன். சரி...வருகிறேன், ஆனால், நான் நாட்டை விட்டுக் கிளம்பியது என்னையே பின்தொடரும் இந்த நன்றியுள்ள ஜீவனையும் அழைத்து வருவேன். சம்மதமா? என்றார். நாய்கள் இழிபிறவிகள். சொர்க்கம் வர  தகுதியற்றவை, என்ற இந்திரனிடம், ஐயனே! அடைக்கலமாக வந்தவனைக் காப்பாற்றாமல் இருப்பது, பெண்களைக் கொல்வது, நல்லவர்களின் பொருளை அபகரிப்பது, நண்பனுக்கு தீங்கு செய்வது ஆகிய நான்கும் மிகக்கொடிய பாவங்கள். இதற்கு நிகரானது தான் நம்பி வந்தவனைக் கைவிடுவது. எனவே, நாயை விட்டு வரமாட்டேன். இதனால் சொர்க்கவாழ்வை இழக்கிறேன் என்றால், அதுபற்றி எனக்கும் கவலையும் இல்லை, என்றார் ஆணித்தரமாக. அப்போது, அந்த நாய் தர்மதேவதையாக உருமாறி நின்றது. தர்மரே! உம் பெருமையை உலகுக்கு  உணர்த்தவே உம் பின்னால் நான் வந்தேன். இழிந்த பிறவியான நாய்க்கும் நல்லது நடக்க வேண்டும் என நீர் நினைத்ததால், உனக்கு உமரான நிகரான ஒருவன் இனி விண்ணிலோ, மண்ணிலோ பிறக்கமாட்டான். எல்லாரும் இறந்தபிறகு ஆன்மா மட்டுமே சொர்க்கம் செல்லும். நீர் உடம்புடன் சுவர்க்கம் செல்லலாம், என்றது. தர்மதேவதையை வணங்கிய தர்மர் உடலுடன் சொர்க்கம் கிளம்பினார்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:13:21 AM
வற்றாத கிணறு!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_172153000000.jpg&hash=be2c0fd3f4cd1486e895b3c01042a99e336ccce2)


பத்ரிகாசிரமம் என்னும் திருத்தலத்தில் அந்தணர் ஒருவர் வசித்தார். தினமும் மக்களிடம் பிட்சை ஏற்று உண்டு வந்தார். எல்லா உயிர்களையும் நேசிக்கும் குணம் கொண்டவர். நாளைக்குப் பாடு நாராயணன் பாடு என்ற அளவில் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. தனது குடிசை வாசலில் இருபுறமும் பெரிய தொட்டி வைத்து அதில் தண்ணீர் நிரப்பி வைப்பது அவரது வழக்கம். பறவை, விலங்குகள் தாகம் தணிய நீர் அருந்திச் செல்லும். வழிப்போக்கர்களும் அவர் வீட்டில் தண்ணீர் அருந்தி இளைப்பாறிச் செல்வர்.  தண்ணீர் தானத்தால், அந்தணரின் புண்ணியக்கணக்கு அதிகரித்தது. இவ்வாறு புண்ணியம் அதிகரித்தால், இந்திர பதவியே கிடைக்கும் என்பது ஐதீகம். இதை அறிந்த இந்திரன், தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சினான். அக்னிதேவனை அழைத்தான். இருவரும் வயதானவர்கள் போல உருமாறி அவரது வீட்டுக்கு வந்தனர்.  அந்தணரே! வெயிலில் நடந்து வந்ததால் களைப்பாக இருக்கிறது.

தண்ணீர் கொடுங்கள்!, என்றான் இந்திரன். இதோ! குடியுங்கள்!, என்று சொல்லி செம்பு நிறைய தண்ணீர் கொடுத்தார் அந்தணர். அதைக் குடித்துவிட்டு,  எங்களுக்கு இன்னும் தாகம் அடங்கவில்லையே! என்றனர். தண்ணீர் எடுக்கச் சென்ற அந்தணருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அக்னிதேவன் தண்ணீரை எல்லாம் வற்றச் செய்து விட்டான்.  இதை அறியாத அந்தணர், இதென்ன மாயஜாலம்! துளி அளவு தண்ணீர் கூட இல்லாமல் எங்கே மறைந்தது?, என்று ஆச்சரியப்பட்டார். வந்தவர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க முடியாத பாவம் தன்னைப் பற்றுமோ என பயப்படவும் செய்தார்.  திரவுபதியின் மானம் காக்க வந்த கிருஷ்ணா! எனக்கும் உதவி செய்ய ஓடி வா! இந்த முதியவர்களின் தாகம் தணிக்க ஏதாவது வழிகாட்டு!, என்று வேண்டியபடி அந்தணர் கைகளை குவித்து நின்றார்.  காலி பாத்திரத்தில் தண்ணீர் நிரம்பி வழிந்தது.

அக்னி தேவனால் அந்த நீரை உறிஞ்ச முடியவில்லை. தனக்கு தோல்வி ஏற்பட்டதை உணர்ந்த இந்திரன் அக்னிதேவனுடன் தேவலோகத்திற்கு சென்று விட்டான்.  பின், அந்தணர் திருமாலை வேண்டிக் கொண்டு, வீட்டிலேயே ஒரு கிணற்றைத் தோண்டினார். அதில் சுவையான தண்ணீர் கிடைத்தது. பலரும் வந்து கிணற்றில் நீர் இறைத்து குடித்தனர். இதைக் கண்ட இந்திரனுக்குப் பொறாமை அதிகமானது. தொடர்ந்து மழையே இல்லாமல் பத்ரிகாசிரமத்தில் வறட்சியை உண்டாக்கினான். குடிநீரின்றி மக்கள் திண்டாடினர். ஆனால், அந்தணர் வீட்டு கிணறு மட்டும் வற்றவில்லை. மக்கள் அங்கு தண்ணீர் எடுத்து ஆனந்தமாகக் குடித்தனர். இந்திரன் இப்போதும் தான் தோற்றுவிட்டதை உணர்ந்தான்.  பூலோகம் வந்த இந்திரன், அந்தணரின் தர்மசிந்தனையைப் பாராட்டினான். அந்தணர் வீட்டுக் கிணற்றில் எப்போதும் நீர் வற்றாமல் இருக்கவும், அந்த நீரைக் குடிப்பவர்கள் சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் பெறவும் வரம் கொடுத்தான். அந்தணரையும் தன்னோடு அழைத்துக் கொண்டு தேவலோகம் புறப்பட்டான்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:14:59 AM
உடலா .. மனமா!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_175919000000.jpg&hash=08f5eacca1ada9981bd0bb3d82ab9841a05c91b8)


ஒரு தாசியின் வீடும், சந்நியாசியின்  குடிலும் அருகருகே இருந்தன. தாசியின் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து போவதை சந்நியாசி கவனித்தார். ஒருநாள் அவளை அழைத்து, கொடிய தொழில் செய்யும் நீ, பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாய். இறைவழிபாட்டுக்காக என் குடிலுக்கு வந்து போகும் பக்தர்களுக்கு உன் தொழில் இடையூறாக இருக்கிறது. நீ இதை விட்டுவிடு! வேறு ஏதேனும் தொழில் செய், என்று அறிவுரை சொன்னார். அவள் அதைக்கேட்டு நடுங்கினாள். சுவாமி! எனக்கு மட்டும் வேறு தொழில் செய்யும் ஆசை இல்லையா? பாவப்புதையலுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு வேறு வேலை தர எல்லாரும் மறுக்கிறார்களே! ஒழுக்கம் கெட்டவளை வீட்டு வேலைக்கு சேர்த்தால் என் கணவனுக்கும், வாழ்க்கைக்கும் அல்லவா ஆபத்து என்று குடும்பப்பெண்கள் என்னைக் கடிகிறார்களே! நான் என்ன செய்வேன்,  இருப்பினும், இதை விட்டுவிட முயற்சிக்கிறேன், என்றாள். பட்டினி கிடந்தேனும் செத்து விட முடிவெடுத்தாள்.

ஒவ்வொரு நாளும் தான் செய்த பாவத்தொழிலுக்கான மன்னிப்பு வேண்டி இறைவனிடம் ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்தாள். ஆனால், பாழும் சமுதாயம் அவளை  விடவில்லை.  உன் பரம்பரையே இந்தத்தொழில்  செய்து தானே பிழைத்தது. நீயும் கெட்டுப்போனவள் தானே! இப்போது பத்தினி போல் நடிக்கிறாயா? என்று கேவலமாகப் பேசியதுடன், அவளை வலுக்கட்டாயமாகவும் இழுத்துச் சென்றனர் சில மாபாதகர்கள். வேறு வழியின்றி அதையே அவள் தொடர்ந்தாள். இறைவனிடம் தன் நிலையைச் சொல்லி  அழுதாள். அவளது மன மாற்றத்தை அறியாத சந்நியாசி, தான் சொல்லியும் அந்தப்பெண் கேட்கவில்லையே என  கோபமடைந்தார். ஒவ்வொரு நாளும் அவளது வீட்டுக்கு வந்து போகும் ஆண்களின் எண்ணிக்கை அளவுக்கு கூழாங்கற்களை எடுத்து ஓரிடத்தில் போட்டார். அந்தக்குவியல்  தினமும் உயர்ந்து கொண்டே வந்தது. ஒருநாள் அவளிடம் அந்தக்குவியலைக் காட்டி, நீ செய்த பாவத்தின் அளவைப் பார்த்தாயா! சொல்லச்சொல்ல கேட்க மறுக்கிறாயே! என்று கடிந்து கொண்டார். அந்தக்குவியலைக் கண்டு மலைத்த அந்த அப்பாவி பெண் இறைவனிடம்,கடவுளே! இனியும் இந்தத்தொழில் எனக்கு வேண்டாம். தற்கொலை செய்வது பாவம் என்கிறார்கள். இல்லாவிட்டால், அதை செய்திருப்பேன். நீயாக என் உயிரை எடுத்துக்கொள்,என்று கதறியழுது பிரார்த்தித்தாள்.

அவளது கோரிக்கையை இறைவன் ஏற்றான். அன்றிரவே அவளது உயிர் போனது. சந்நியாசியும் அதே நாளில் இறந்தார். தாசியின் உடலை ஊர் எல்லையில் இருந்த காட்டுக்குள் வீசி விட்டனர் அருகில் இருந்தவர்கள். நரிகளுக்கும், நாய்களுக்கும் அவளது உடல் விருந்தானது. சந்நியாசியை மலர்களால் அலங்கரித்து, மலர் பல்லக்கில் ஏற்றி முறைப்படி அடக்கம் செய்தனர். அந்த ஆத்மாக்கள் விண்ணுலகம் சென்றன. அங்கிருந்தவர்கள் எமதூதர்களை அழைத்து, தாசியை சொர்க்கத்துக்கும், சந்நியாசியை நரகத்துக்கும் அனுப்பக்கூறினர்.  சந்நியாசி கதறினார். பாவிக்கு சொர்க்கம், எனக்கு நரகமா? என்றார். துறவியே! அவள் உடலால் தவறு செய்தாள். மனதால் இறைவனைப் பிரார்த்தித்தாள். அதனால் அவளது உடல் பூலோகத்தில் மிருகங்களுக்கு  இரையானது. நீர் பூலோகத்தில் உடலால் தவறு செய்யாததால், உம் உடலுக்கு அங்கே  மரியாதை கிடைத்தது. ஆனால், மனதால் தாசியின் பாவச் செயலை மட்டுமே சிந்தித்தீர். அதனால், இறைவழிபாட்டில் முழுமையாகக் கவனம் செலுத்தவில்லை. எனவே உமக்கு நரகம், என்றனர். இறைவனுக்கு உடலை விட மனமே முக்கியம் என்பது தெளிவாகிறதல்லவா!
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:16:38 AM
பெரியவங்க சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_175849000000.jpg&hash=56116e635ed822a53c3e308e61a4a3d74db30b8f)


ஒரு ஆட்டுக்குட்டிக்கு கீரை என்றால் ரொம்ப உயிர். விதவிதமான கீரைகளை தோட்டங்களுக்குள் புகுந்து சாப்பிடும். அந்த ஊரில் உள்ளவர்களில் பெரும்பாலோனோர் தர்மவான்கள் என்பதால் ஆடு தானே! தின்று விட்டுப் போகிறது என்று விட்டு விடுவார்கள். ஒருநாள், அது மேயப்போன போது எல்லா தோட்டங்களிலும் இருந்த கீரையைப் பறித்து விட்டனர். அது தாய் ஆடுடன் அலைந்து திரிந்தது. ஒரே ஒரு தோட்டத்தில் உயர்ரக கீரை ஒன்றை பயிரிட்டு, வேலியிட்டு மறைத்திருந்தனர். அதன் உரிமையாளர் மகாகஞ்சப்பிரபு, கொடூரனும் கூட. ஆடுகள் தன்  தோட்டத்துக்குள் புகுந்து விட்டால், அவற்றை கறியாக்கி சமைத்து விடுவான். குட்டி ஆடு அந்த தோட்டத்துக்குள் புக முயன்றது. தாய் ஆடு அதைத் தடுத்தது. மகளே! உள்ளே செல்ல முயற்சிக்காதே! இந்தத் தோட்டக்காரன் மற்றவர்களைப் போல் அல்ல! நம் மூத்தோர் பலர், இவனிடம் சிக்கி கறியாகி விட்டார்கள்.

நல்லவர்கள் இருக்கும் இடத்திற்கு நாம் செல்லலாம். அவர்களுக்கும் அந்தப் பொருள் அவசியம் என்றாலும், இயற்கையாகவே ஊறும் இரக்க குணத்தின் காரணமாக நம்மை விட்டு விடுவார்கள். சிலர் குச்சியால் நம்மை இரண்டு தட்டு தட்டி விரட்டி விடுவார்கள். இவனோ, கொடூரன். கொன்று விடுவான், என்றது. குட்டி ஆடு தாய் சொல் கேளாமல், வேலி தாண்டி உள்ளே புகுந்தது. ஆசை ஆசையாய் கீரையை உண்டது. தோட்டக்காரன் பார்த்து விட்டான். அரிவாளுடன் விரட்டினான். நான்கு பக்கமும் அவனது பணியாட்கள் சூழ்ந் தனர். தப்ப முடியாத ஆடு, அன்றிரவு அவர்களின் உணவானது. ஆசைக்கு எல்லை வேண்டும். நல்லவர்கள் துணையை மட்டுமே நாட வேண்டும். பெரியவர்கள் சொல் பெருமாள் சொல் என்ற அனுபவ சுலவடையை இனியாவது ஏற்று நடந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஆபத்தில் சிக்க வேண்டியிருக்கும். புரிகிறதா!
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:18:26 AM
யார் இந்த முருகன்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_180106000000.jpg&hash=83db1fb5a0548a38cc26fb4bc99b0af00dc73d11)


பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரர் எவ்வித ஆசையும் இல்லாதவர். மகாஞானி. அவர் ஆசையே இல்லாதாவரா  என்பதை சோதித்தறிய பார்வதிஆசைப்பட்டாள். சிவனும் ஒப்புக்கொண்டார். அவர்கள் சனத்குமாரர் முன் தோன்றினர். சனத்குமாரர் அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.  நான் ஒன்றும் இவர்களை நினைத்து தவமிருக்கவில்லையே! எதற்காக இங்கே வந்தார்கள் என்று  எண்ணியவர், அவர்களிடம் பேசக்கூட இல்லை. அவரிடம் கோபத்துடன் பேச்சைத்  தொடங்குவது போல்  நடித்தார் சிவன். ஏ சனத்குமாரா! நீ மகாஞானியாக இருக்கலாம். அதற்காக, லோகமாதா பிதாக்களான எங்களையே அவமதிக்கும் அளவு உனக்கு கர்வமா? வந்தவர்களை வாருங்கள் என்று அழைத்து  உபசரிக்கும் பண்பு கூட  உன்னிடம் இல்லையே! சனத்குமாரர் எதற்கும்  அஞ்சாதவர். அருமையாகப்  பதிலளித்தார். உலகில் எல்லாரையுமே  கடவுளாகப் பார்ப்பவன் நான். நீங்களும் அதில் ஒருவர்.

உம்மைக்கண்டு என் உடல் வேண்டுமானால் அச்சப்படலாம். ஆனால், ஆத்மா  நடுங்காது, என்றார்.  சரி...போகட்டும், ஏதாவது வரம் கேள், தந்து விட்டு  போகிறேன், என்றார் சிவன். இதற்கும் சனத்குமாரர்  அஞ்சாமல் பதிலளித்தார்.  எனக்கு எந்த வரமும் தேவையில்லை. வேண்டுமானால், என்னிடம் நீர் ஒரு வரம் கேளும். உமக்கு வேண்டுமானால், நான் தருகிறேன்,. அப்படியா! நீ என் பிள்ளையாகப் பிறக்க வேண்டும்,. அவ்வளவுதானே! ஆனால், வரம் கேட்ட நீர் மட்டுமே என்னைப் பெற வேண்டும். இதோ! உன் அருகில் நிற்கும் இந்தத்தாய் என்னிடம் ஏதும் கேட்கவில்லை. ஒருவர் கேட்காமல் ஒன்றைக் கொடுக்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். எனவே, தாயின்  சம்பந்தமில்லாமல் நான் பிறக்க வேண்டும்,. இதுகேட்ட பார்வதி  பதறினாள். சனத்குமாரா! இது நியாயமல்ல. என் கணவர் ஒன்றைக் கேட்கிறார் என்றால், அது  என்னையும் உத்தேசித்து தான். கணவருக்குள் மனைவி அடக்கம் என்பதை அறிவாய் அல்லவா? ஒப்புக்கொள்கிறேன்... அதற்காக நான் நேரடியாக உன் வயிற்றில் பிறக்கமாட்டேன்.

ஒரு காலத்தில் பஸ்மாசுரனுக்கு சிவன் ஒரு வரம் கொடுத்தார். அதன்படி, அவன் யார் தலையில்  கை வைக்கிறானோ, அவன்  பஸ்பமாகி விடுவான். அவன் சிவனையே சோதிக்க வந்தான். அவர் மறைந்து விட்டார். அந்தக்கவலையில், நீ தண்ணீராய் உருகிப்போனாய். அதுவே சரவணப்பொய்கை. அதற்குள் உன் கணவர் என்னைக் கிடத்தட்டும். அப்படியானால், உன் ஸ்பரிசமும் எனக்கு கிடைத்தது போல் ஆகிவிடும். சரிதானே! என்றார்.  பார்வதி சம்மதித்தாள். இருவரும் மறைந்தனர். இதுபற்றி தந்தை பிரம்மாவிடம் கேட்டார் சனத்குமாரர். குமாரா! நீ முற்பிறப்பில், தேவர்களை அசுரர்கள் கொடுமைப்படுத்துவது குறித்து வேதங்களில் இருந்து தெரிந்து கொண்டாய். அப்போதெல்லாம், அந்த அசுரர்களை அழித்து விடமாட்டோமா என மனம் கொதிப்பாய். அதன்படி, இப்போது பத்மாசுரனையும் அவனைச் சார்ந்தவர்களையும் அழிக்க சிவன் உன்னைப் பயன்படுத்தப் போகிறார். எதை நினைக்கிறோமோ அதுவாகவே  நாம் மாறுகிறோம் என்ற தத்துவத்தைப் புரிந்து கொள், என்றார். இந்த சனத்குமாரரே சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து, தாயின் சம்பந்தமில்லாமல்  பிறந்தார். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டார்.  சூரபத்மனைக் கொன்றார். உடை மீது கூட ஆசை இல்லாமல், பழநியில் கோவணத்துடன் அருள்செய்கிறார்.  இந்தக்கதை திரிபுரா ரகஸ்யம் என்ற கிரந்த  நூலில் உள்ளது.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:20:21 AM
பெண்கள் நமது கண்கள்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_175958000000.jpg&hash=f15b7a9dab546efafe6873b854eb652c2186b27c)


பெண்கள் நாட்டின் கண்கள். பெண்களை இம்சை செய்யும்  எந்த வீடும், நாடும் உருப்படாது. புராணகாலத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது. திதி என்பவள், சிவபார்வதியை வணங்கி வந்தாள். அவள் ஒரு பேரழகி. பூலோகம் வந்த  இந்திரன் அவளைக்கண்டான். அழகிகளைக் கண்டால் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவது அவன் இயல்பு.  திதி பேரழகுப் பெட்டகம் அல்லவா! இந்திரன் கண்ணில் அவள் பட்டுவிட்டாள்.  அவளை தன்னுடன் தேவலோகம் வரும்படி அழைத்தான். அங்கே பல வசதிகள்  இருப்பதாகச் சொல்லி ஆசை காட்டினான். திதிக்கு அவனுடன் செல்ல விருப்பமில்லை. இந்திரா! ஒரு பெண்ணுக்கு வசதிவாய்ப்பை விட, அவள் மனதுக்குப் பிடித்த கணவனே வேண்டும். நீ என் அழகுக்காக ஆசைப்படுகிறாய். இந்த அழகு உனக்கு  சலித்துவிட்டால், நீ இன்னொரு பெண்ணைத் தேடிப் போய்விடுவாய். கடைசிவரை மனைவியை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளும் நல்லவர்கள் எத்தனையோ பேர் இந்த பூமியில் உள்ளனர்.

அவர்களில் ஒருவரை என் கணவனாக அடைவதையே நான் விரும்புகிறேன். நீ போய் விடு, என்றாள். இந்திரன் மீண்டும் வற்புறுத்த  அவர்களுக்குள் வாதம் வலுத்தது. கோபத்தில், அவளை தனது வஜ்ராயுதத்தால் ஏழு  துண்டுகளாக வெட்டினான். ஆத்திரம் அடங்காததால், அந்த துண்டுகள் ஒவ்வொன்றையும் ஏழாக வெட்டினான். ஆக, 49 துண்டுகள் பூமியில் கிடந்தன. தன் பக்தை வெட்டப்பட்டது கண்டு  பார்வதிதேவி துடித்துப் போனாள். சிவனிடம், அன்பரே! இது என்ன கொடுமை! ஒரு பெண், ஒருவனுடைய ஆசையை நிறைவேற்றாமல் போனால்,  இப்படியா செய்வது! அதிலும், இந்திரனுக்கு மேகங்களின் தலைவன் என்ற பதவியைக் கொடுத்துள்ளீர்கள். இவன் பெய்விக்கும் மழைத்தண்ணீரைக் குடிப்பவர்களுக்கும் இதே குணம் தானே வரும்! நீங்கள் அவனுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில், அந்தப் பெண் ணுக்கு மீண்டும் உயிரூட்டுங்கள், என்றார். சிவன் பார்வதியிடம்,அவள் விதி முடிந்து விட்டது. எனவே, உயிர் கொடுப்பது இயலாது. ஆனால், ஒன்று மட்டும் உறுதி.

பெண்களை இம்சை செய்பவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே தீருவார்கள். இந்திரனால் வெட்டப்பட்ட 49 துண்டுகளும் 49 இளைஞர்களாக எழும். அவர்களுக்கு ஒருவன் தலைவனாக இருப்பான். அவர்களுக்கு தனித்தனி பெயர் இருக்காது. அவர்களை மாருதர் என்று உலகத்தார் அழைப்பார்கள். பதவி இருப்பதால் தானே இந்திரன் அட்டகாசம் செய்கிறான்! அவனது பதவியை அவர்கள் பறித்து விடுவார்கள், என்றார். அதன்படியே மாருதர் எனப்பட்ட அந்த இளைஞர்கள் பிறந்தார்கள். அனைவரும் பலசாலிகளாக இருந்தனர். மேகக்கூட்டத்தை எங்கே கண்டாலும் அவர்கள் பூமியிலிருந்தே ஊதி, சின்னாபின்னபடுத்தினார்கள். இந்திரன்  ஆத்திரம் கொண்டு அவர்களுடன் போருக்கு வந்தான். அவனைத் தோற்கடித்து, மழை பெய்யும் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்துக் கொண்டார்கள். பதவி இழந்த இந்திரன் கண்டுகொள்வார் யாருமின்றி போனான்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:22:08 AM
குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்க!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_175754000000.jpg&hash=b3c23de36fbc14f52863c9da9996c4531a57eb53)


அன்று வெள்ளிக் கிழமை. சாலம்மாள் கை கால் முகங்களை அலம்பி வெண்ணீறும், குங்குமமும் தரித்துக் கொண்டாள். சிறு பிரம்புக்கூடையில் பழம், தேங்காய், வெற்றிலைப்பாக்கு, சூடம், ஊதுவத்தி, நெய் இவற்றை எடுத்துக் கொண்டாள்.  தன் மகள் மணிமொழியை அழைத்துக் கொண்டு முருகன்கோயிலுக்குப் புறப்பட்டாள். அவ்வாறு செல்லும் போது கந்தரநுபூதி என்ற மந்திரநூலைப் பாராயணம் செய்து கொண்டே இடப்புறம் ஓரமாக நடந்தாள். மணிமொழி வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தாள். சாலம்மா கோயிலில் விளக்கில் நெய்விட்டு ஆலயத்தை வலம் வந்தாள். முருகனின் கருணையை எண்ணி உள்ளம் உருகினாள். பிரகாரத்தில் உள்ள ஏழைகளுக்குச் சில்லறைக் காசுகளை கொடுத்தாள். தெய்வமே! இவர்களின் துயரம் போக அருள்செய், என்று வேண்டிக் கொண்டாள்.

சந்நிதியில் முருகனுக்கு அபிஷேகமாகி அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். சாலம்மா மகளுடன் அமர்ந்து முருகனின் சடாக்ஷர மந்திரத்தை ஓதினாள்.  மணிமொழி,அம்மா! நேரமாகிறது. சுவாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்குப் போகலாம். வா, என்றாள்.  சாலம்மா, மகளே! ஒரு பெரிய மனிதரையே காலமல்லாத காலத்தில் பார்ப்பது நல்லதல்ல; உரிய காலத்தில்தான் பார்க்க வேண்டும். வீட்டில் தான் இருபத்து நான்கு மணிநேரமும் அடைபட்டுக் கிடக்கிறோம். கோயிலில் சிறிது நேரம் இருந்தால் நல்லது தானே! சமயம் பார்த்துத் தான் கடவுளை வணங்க வேண்டும். இப்போது சுவாமிக்கு அலங்கார சமயம். இது தரிசனத்திற்கு ஏற்ற நேரம் அன்று; அலங்காரம் முடிந்தவுடன் ஆராதனை நிகழும், என்றாள்.  தொடர்ந்து அவளிடம், ஒவ்வொரு ஆராதனைக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு.

இறைவன் அகரம் முதலாக க்ஷகரம் முடிவாக 51 அட்சரங்களின் வடிவமாக விளங்குகிறான். அதனால் அடுக்காலத்தி என்ற அக்ஷர தீபத்தைக் காட்டுகிறார்கள்.  27 நட்சத்திர வடிவமாக இறைவன் விளங்குகிறான் என்பதை உணர்த்தும் பொருட்டு நட்சத்திர தீபம்காட்டுவர். ஐந்து மந்திர வடிவமாக விளங்குகிறான் என்பதை அறிவிக்க ஐந்து தட்டு தீபத்தைக் காட்டுவர். கட்டை துணி இவற்றைக் கொளுத்தினால் முடிவில் கரி சாம்பல் நிற்கும். கற்பூரத்தைக் கொளுத்தினால் சாம்பல் நிற்பதில்லை. சூடம் தீயில் கரைந்து மறைந்து விடுகிறது. ஜீவன் சிவத்தில் ஒன்றுபட வேண்டும் என்ற உண்மையை நாம் உணரும் பொருட்டுக் கற்பூர தீபம் காட்டுவார்கள். கோயிலில் தரிசனம் செய்பவர்கள் இந்த உண்மைகளை அறிந்து வழிபாடு செய்தல் வேண்டும், என்று மணிமொழிக்கு எடுத்துச் சொன்னாள்.  அதற்குள் கோயில் கண்டாமணி முழங்கியது. சாலம்மாளும், மணிமொழியும் முருகனைத் தரிசித்து மகிழ்ந்தனர்.  மணிமொழி தாயார் கூறிய அறிவுரைகளை கேட்டு அகம் மகிழ்ந்தாள். குழந்தைகளை அடிக்கடி கோயிலுக்கு அழைத்துச் செல்லவேண்டும். விதிமுறைப்படி, இறைவனை வணங்குவது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:24:26 AM
நன்மை செய்தால் நன்மை மட்டுமே கிடைக்கும்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_175333000000.jpg&hash=e5965d19e8e8a787896fba3e87690719c391870e)


மகாபாரத்தில் கூறப்பட்ட ஓர் அழகான கதை இது. கவுதமன் என்பவன் நற்குலத்தில் தோன்றியவன். ஆனால் அவனுக்கு நண்பர்கள் சேர்க்கை சரியில்லை. எனவே அவனிடம் நல்ல குணம் என்பதே கிடையாது. ஆனால் அவனது காலத்தில் ராஜதர்மன் என்ற ஒரு கொக்கு வாழ்ந்து வந்தது. தேவர்களும் போற்றும் நற்குணங்கள் நிறைந்து, பறவைக் குலத்தையே பெருமைப்படுத்திய கொக்கு அது. அதே சமகாலத்தில் விரூபாட்சன் என்ற ஓர் அரக்கனும் வாழ்ந்து வந்தான். அவன் பிறந்ததோ அரக்கர் குலம், ஆனால் அவனை அவனது உயர்ந்த நற்குணங்களுக்காக வானவர்களும் கொண்டாடினார்கள்.

கவுதமன் வடிகட்டின சோம்பேறி, பிறரது உழைப்பில் வாழ்வதைத் தனது தர்மம் போல் கொண்டிருந்தான். தந்தை பெரிய பண்டிதர். அவர் கடின உழைப்பின் பேரில் சம்பாதித்த பணத்தில் உலகின் எல்லா சுகங்களையும் சந்தோஷமாக அனுபவித்தான். கணவனை இழந்த ஒரு பெண்ணின் மேல் அவனுக்கு மையல் வந்தது. அவளுடன் வாழ்க்கை நடத்தலானான். தந்தையான அந்தப் பண்டிதர். இவனது அட்டகாசங்கள் தாங்காமல், துயரவசப்பட்டு அந்தத் துயரக் கடலிலேயே மூழ்கி ஒருநாள் இறந்துவிட்டார். தந்தை உழைப்பில் சொகுசாக வாழ்ந்துவந்த கவுதமனுக்கு, இப்போது சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேட்டையாடிப் பிழைக்கலானான். உயர்ந்த குலத்தில் பிறந்த அவன் உயிர்க் கொலை பாவம் என்பதைப் பொருட்படுத்தவில்லை. உயிர்களைக் கொல்வது அவனுக்கு ஒரு விளையாட்டுப் போல் இருந்தது.

வெளியூரில் இருந்து அவன் தந்தையின் நண்பர் ஒருநாள் அந்த ஊருக்கு வந்தார். கவுதமனின் செயல்களைக் கண்டார். அவர் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. எப்பேர்பட்ட தந்தையின் மகன் அப்பா நீ? உயிர்க்கொலை செய்யலாமா? ஏதாவது வியாபாரம் செய்து பிழைக்கப் பார்! என்று அவர் அன்போடு அறிவுறுத்தி விட்டுச் சென்றார். பூர்வ ஜன்ம நல்வினை காரணமாகவோ என்னவோ கவுதமன் மனம் அந்த அறிவுரை பற்றிச் சிந்தித்தது. சரி, உயிர்க்கொலையை விட்டுவிடுவோம் என்று முடிவு செய்தான் வியாபாரம் பழக வேண்டுமானால் முதலில் ஏதாவது வியாபாரிகளின் கூட்டத்தோடு இணைந்து தொழில் கற்றுக் கொள்ள வேண்டுமே? அந்த ஊருக்குத் தற்செயலாக வியாபாரிகளின் குழு ஒன்று வந்தது. அவர்கள் காட்டு வழியாக வேறெங்கோ சென்று கொண்டிருந்தார்கள். அவன் அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுடனேயே நடக்கலானான்.

என்ன துரதிர்ஷ்டம்! கானகத்தில் மதம் பிடித்த யானைக் கூட்டம் அவர்களைத் துரத்தித் தாக்கியது. உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் ஓடினார்கள். கவுதமன் ஒரு மரத்தின் மேல் ஏறி நடுநடுங்கியவாறு இரவைக் கழித்தான். பொழுது விடிந்ததும் பார்த்தான், யானைக் கூட்டம் எங்கோ சென்றுவிட்டிருந்தது. வணிகர்கள் பலரும் காட்டு யானைகள் தாக்கியதால் உயிர் விட்டிருந்தார்கள். கவுதமனுக்கு உயிர் என்பது என்ன, வாழ்க்கை என்பது என்ன என்பன போன்ற கேள்விகள் மனத்தில் எழத்தொடங்கின. அவன் மெல்ல நடந்து பக்கத்தில் அதிக அபாயம் இல்லாத நந்தவனம் போன்ற ஒரு காட்டுக்கு வந்து சேர்ந்தான். மரங்களில் பழுத்திருந்த கனிகளைப் பறித்து உண்டான். எங்காவது இளைப்பாற வேண்டும் எனத் தேடியபோது பிராமாண்டமான ஓர் ஆலமரம் தென்பட்டது. பறவைகளுக்கெல்லாம் அடைக்கலம் தரும் அந்த ஆலமர நிழல் தனக்கும் அடைக்கலம் தரட்டும் என்று எண்ணியவனாய் அதன் நிழலில் காலோய்ந்து படுத்து மெல்லக் கண்ணயர்ந்தான்.

சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தபோது ஒரு பெரிய கொக்கு அவன் அருகில் அமைதியாக உட்கார்ந்திருந்தது. அது தன் மாபெரும் சிறகுகளால் அவனுக்குக் காற்று வரும்படி விசிறிக் கொண்டிருந்தது! பறவையின் செயலைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த கவுதமன், யார் நீ? என்று அந்தக் கொக்கிடம் விசாரித்தான். அவனைப் பரிவோடு பார்த்தது கொக்கு. ஐயா! என் பெயர் ராஜசிம்மா, இது நான் வசிக்கும் ஆலமரம், இந்த மரம் தான் என் வீடு. இதில் நான் கூடு கட்டிக் கொண்டு பல ஆண்டுகளாக வாழ்கிறேன். இந்த மர நிழலை நீங்கள் இளைப்பாறத் தேர்ந்தெடுத்தது என் பாக்கியம். இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்த விருந்தாளி ஆகிறீர்கள். விருந்தினரை மனம் கோணாமல் உபசரிக்க வேண்டியது தர்மமல்லவா? காற்றில்லாமல் உங்கள் நெற்றி முத்து முத்தாய் வியர்ப்பதை மேலிருந்து பார்த்தேன். அதுதான் கீழே இறங்கி வந்து சிறகுகளைக் கொண்டு உங்களுக்கு விசிறிக் கொண்டிருக்கிறேன். தங்கள் பெயர் என்னவோ? தாங்கள் எதன் பொருட்டாக இங்கு வந்திருக்கிறீர்கள்? என்று அன்புடன் கேட்டது.

ஒரு கொக்கு மிகுந்த பண்போடு மதுரமாகப் பேசுவது கவுதமனை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது பறவைக் குலத்தைச் சேர்ந்த ராஜசிம்மா! என் பெயர் கவுதமன், நான் வறுமையால் வாடுகிறேன். பணமில்லாத கஷ்டம் என்னை வதைக்கிறது.எப்படியாவது கொஞ்சம் பணம் கிடைக்காதா என்று தான் எல்லா இடங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறேன். நான் இந்தக் கானகத்திற்கு வந்ததும் பணத்øத் தேடித்தான்! என்று பரிதாபமாக பதிலுரைத்தான். கொக்கு சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது. பிறகு எதையோ கண்டுபிடித்தது போல் மலர்ச்சியுடன் சிரித்தது. பின் கவுதமனிடம், கவுதமரே! நீங்கள் என் விருந்தினர் மட்டுமல்ல. இப்போது என் நண்பரும் ஆகிவிட்டீர். உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டியது என் கடமை. உங்கள் வறுமையை என்னால் போக்க முடியும். எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். விரூபாட்சன் என்பது அவர் பெயர். அரக்கர் குலத்தைச் சேர்ந்தவர். நற்பண்புகளின் மொத்த வடிவம் அவர். நாளை காலை புறப்பட்டு அவரிடம் செல்லுங்கள். என் நண்பர் நீங்கள் என்று சொல்லுங்கள். உங்களுக்குத் தேவையான செல்வத்தை அவர் தந்து உங்களை வழியனுப்புவார் என்றது.

கவுதமன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அரக்கன் விரூபாட்சனின் இருப்பிடம் எங்கே இருக்கிறது எனக் கேட்டறிந்து அப்போதே புறப்பட்டுச் சென்று அரக்கனைச் சந்தித்தான். தன் நண்பனும் பறவையுமான கொக்கினால் அனுப்பப்பட்டவன் கவுதமன் என்றறிந்ததும் விரூபாட்சன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, பொன்னும் மணியும் வாரிவாரிக் கொடுத்தான். அத்தனை செல்வத்தையும் தூக்க முடியாமல் தூக்கிச் சுமந்துகொண்டு திரும்பி வரும் வழியில் மீண்டும் ராஜசிம்மக் கொக்கைச் சந்தித்தான். கவுதமன் அவன் கொக்கு இருந்த இடத்திற்கு வருவதற்குள் இரவு தொடங்கிவிட்டது. கொக்கு அவனை அன்போடு வரவேற்றது. அவனுக்குச் செல்வம் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தது. அன்றிரவு அவன் படுக்க மரத்திலிருந்து இலை தழைகளைப் பறித்து வந்து சுகமான படுக்கை தயாரித்தது. இன்றிரவு இங்கேயே உறங்கிவிட்டு நாளை புறப்படுங்கள்! என்று வேண்டிக்கொண்டது. கவுதமனை விலங்குகள் தாக்காமல் இருக்கச் சற்று தூரத்தில் நெருப்பு மூட்டியது. பின்னர் உறங்கும் கவுதமனின் அருகேயே தானும் படுத்து உறங்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் உறக்கம் கலைந்து எழுந்தான் கவுதமன். அருகே வெள்ளை வெளேர் என்று மாமிசக் கொழுப்புடன் சலனமற்று உறங்கும் அந்தப் பெரிய கொக்கைச் சற்று உற்று பார்த்தான். நாம் நம் ஊரை அடைய இன்னும் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டும். நாளைய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? அவனுடைய பழைய கிராதக மனம் விழித்துக் கொண்டது. உம்.. வேட்டையாடு, வேட்டையாடி வாழ்ந்தவன்தானே நீ? என்று அது அவனை உசுப்பிவிட்டது. தீயசக்திகளின் கட்டளைக்குப் பணிந்தவன்போல் அவன் திடீரென்று எழுந்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கொக்கை அள்ளி எடுத்தான். சடாரென அதை நெருப்பில் போட்டு அதன் மாமிசத்தை உரித்து எடுத்து மறுநாள் சாப்பாட்டுக்கு வைத்துக் கொண்டு, அதிகாலையில் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு வேகவேகமாக நடக்கலானான். இதை தேவலோகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரன் திகைப்பில் ஆழ்ந்தார். இப்படிக் கூட மனிதர்கள் நடந்துகொள்ள முடியுமா என்றெண்ணி அவர் விழிகள் கண்ணீர் உகுத்தன.

நாள்தோறும் ராஜசிம்மக் கொக்கு ஒருமுறையேனும் பறந்து சென்று தன் அரக்க நண்பனான விரூபாட்சனோடு உரையாடி விட்டு வருவது வழக்கம். என்ன இது? ஓரிரு நாட்களாக கொக்கைக் காணோமே? அதுவும் கொக்கு என்னிடம் அனுப்பிய மனிதனான கவுதமன் அவ்வளவு நல்லவனாகத் தெரியவில்லை. கொக்கின் மனம் அதன் உடல்போல் வெளுத்தது. அது எல்லோரையுமே நல்லவர்களாக நினைக்கிறது. இந்த கவுதமன் அதைக் கொல்லாமல் இருக்க வேண்டுமே? என்று வேதனைப்பட்ட விரூபாட்சன் தன் படைவீரர்களை அனுப்பி கொக்கு குறித்து அறிந்துவரச் சொன்னான். கொக்கின் பிய்ந்த இறக்கைகளைத்தான் அவர்கள் கொண்டு வந்தார்கள். தன் நண்பன் கொக்கின் இறக்கைகளைக் கண்ட அரக்கனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. எங்கே அந்த கவுதமன்? பிடித்து வாருங்கள் அவனை! என்று கர்ஜித்தான். கவுதமன் உடனடியாகக் கண்டு பிடிக்கப்பட்டு இழுத்து வரப்பட்டான். இவனை வெட்டி அந்த மாமிசத்தøச் சமைத்துச் சாப்பிடுங்கள்! என்று உறுமினான் அரக்கன். அரசே! அவன் உடலை வெட்டுகிறோம். ஆனால் நன்றி கொன்றவனின் மாமிசத்தைச் சாப்பிடும் அளவு நாங்கள் கேவலமானவர்கள் அல்ல! என்ற அரக்கர்கள் அவன் உடலை வெட்டினார்கள். காட்டு விலங்குகளிடம் அந்த உடல் எறியப்பட்டது.

இந்த நன்றி கொன்றவனின் மாமிசத்தை நாங்கள் தொடக் கூட மாட்டோம்! என்று விலங்குகள் அனைத்தும் விலகிச் சென்றன. தன் கொக்கு நண்பனான ராஜசிம்மனின் எஞ்சிய உடலை சந்தனச் சிதையில் வைத்துக் கண்ணீர் மல்க எரிக்க முற்பட்டான் விரூபாட்சன். அப்போது அங்கே தேவேந்திரன் தோன்றினார். விருந்தோம்பலில் சிறந்த இந்த அற்புதமான பறவையை நான் மீண்டும் உயிர்ப்பிக்கிறேன்! என்று கூறி, அதற்கு உயிர் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மறுகணம் எரியூட்டப்படவிருந்த சந்தனச் சிதையிலிருந்து ராஜசிம்மக் கொக்கு சிறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது! விரூபாட்சன் ஓடோடிச் சென்று அதைக் கட்டி அணைத்துக் கொண்டு அதன் சிறகுகளைக் கோதி விட்டான். நடந்தது அனைத்தையும் கேட்டறிந்தது, கொக்கு. தேவேந்திரன், நட்பைப் போற்றும் என் அன்புப் பறவையே! உனக்கு ஒரே ஒரு வரம் தர விரும்புகிறேன்! நீ வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள். செல்வமா? நீண்ட ஆயுளா? இன்னும் அழகிய உடலா? இனிமையான குரலா? சொல். உனக்கு வேண்டிய ஏதாவது ஒரே ஒரு வரத்தை மட்டும் கேள்! என்று பரிவோடு சொன்னார்.

தேவேந்திரனைக் கம்பீரமாகப் பார்த்த ராஜசிம்மக் கொக்கு, தேவேந்திரரே! என் விருந்தாளியும் நண்பனுமான மனிதன் கவுதமன் மீண்டும் உயிர் பிழைக்குமாறு தாங்கள் வரம் தரவேண்டும். நான் மறுபடி பிழைத்தது மாதிரி என்னைக் கொன்ற என் விருந்தினனும் பிழைக்க வேண்டும் என்பதே நான் கேட்கும் ஒரே வரம்! என்றது. தேவேந்திரன் கொக்கின் அற்புதமான பண்பைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். வானுலகத்திலிருந்து எல்லாத் தேவர்களும் கொக்கின் மேல் பூமாரி பொழிந்தார்கள். மீண்டும் உயிர் பெற்று எழுந்த கவுதமன் கொக்கிடம் மன்னிப்பு வேண்டிக் கண்ணீர் உகுத்தபோது, கொக்கு அதன் சிறகுகளால் அவன் கண்ணீரைத் துடைத்து அவனை அணைத்துக் கொண்டது. விரூபாட்சனின் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது. குணம் பல நேரங்களில் குலத்தால் அமைவதில்லை. குலம் எதுவானால் என்ன? குணத்தால் உயர்ந்தவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள் என்ற உண்மையை மனித குலம் இந்த நிகழ்ச்சி மூலம் புரிந்துகொண்டது. மனசாந்தி தரும் இந்தக் கதை மகாபாரதம் சாந்தி பருவத்தில் வருகிறது.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:26:14 AM
பாஞ்சாலியின் பதில்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_175046000000.jpg&hash=7370bb3821f65f7ab0fb4b11bf5e9a43ddc44451)


நாடு! நகரம், வளம் மிக்க பூமி அனைத்தையும் தனதாக்கிக் கொண்டு, பாண்டவர்களுக்கு ராஜாங்கப் பகுதியாக காண்டவ வனம் எனும் காட்டையே தரச்செய்தான் துரியோதனன் என்பது நமக்குத் தெரியும். ஆனால் பாண்டவர்களோ கிருஷ்ணனின் துணையுடன் காண்டவ வனத்தைத் திருத்தி, தேவலோக சிற்பி விஸ்வகர்மா மற்றும் மயனின் கைவண்ணத்தால் இந்திரப்பிரஸ்தம் எனும் அழகிய நகரை நிர்மாணித்தனர். அதைத் தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியைத் துவங்கினான் தருமன். மாடமாளிகை, கூடகோபுரங்களோடு, நீரென்றும் நிலமென்றும், நிழலென்றும் நிஜமென்றும் பிரித்தறிய முடியாத காட்சிகள் நிறைந்த மாயாலோகம் அங்கே உருவாகியிருந்தது. பளிங்குத் தரைகள், கண்கவர் சிற்பங்கள், நவரத்தினங்கள் இழைத்த தூண்கள், சுவரெல்லாம் சித்திர வேலைப்பாடுகள், விருந்தினர் மாளிகை, கடை வீதிகள், யாக சாலைகள்.... இப்படி அற்புதங்களைப் படைத்து, இந்திரப்பிரஸ்தத்தை தேவ லோகமாக மாற்றியிருந்தனர் பாண்டவர்கள். தொடர்ந்து, கிருஷ்ணனின் அருளாசியுடன் பிரமாண்டமான ராஜசூய யாகத்துக்கும் ஏற்பாடுகள் செய்த பாண்டவர்கள் மன்னர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர். சகோதரர்களான துரியோதனாதிகளுக்கும் சிறப்பு அழைப்பு விடுத்திருந்தான் தருமன்.

இத்தனைச் செல்வமும் பாண்டவர்களுக்கு எப்படி வந்தது? அதனை எப்படி அழிப்பது? என சிந்தித்தபடியே, பரிவாரத்துடன் அங்கு வந்தான் துரியோதனன். அங்கே, அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சிறப்பு மாளிகையில் தங்கினான். ஒருநாள் காலையில், மயன் உருவாக்கியிருந்த மாளிகையைக் காணப் புறப்பட்டான் துரியோதனன், அதன் சிறப்பு துரியோதனனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மாளிகையின் ஓரிடத்தில் தண்ணீர் எனக் கருதி மெதுவாகக் காலை வைத்தான். ஆனால், அது வெறும் தரையாக இருந்தது. மற்றோர் இடத்திலோ, தரையெனக் கருதி அலட்சியமாகக் காலை வைக்க, அது தண்ணீர் நிறைந்த தடாகமாக இருந்தது. இதைச் சற்றும் எதிர்பாராததால், தவறி விழுந்தான் துரியோதனன். எனினும் ஒருவழியாகச் சமாளித்து எழுந்தான். அப்போது உப்பரிகையில் இருந்து சிரிப்பொலி கேட்டது, உயரே நோக்கினான், அங்கே பாண்டவர்களின் மனைவி திரவுபதி நின்றுகொண்டிருந்தாள். அவன் விழுந்ததைப் பார்த்துத்தான் அவள் சிரித்தாள். ஆனாலும் அது தவறென உணர்ந்து சட்டென சிரிப்பை அடக்கிக் கொண்டாள். துரியோதனனோ அதை பெரும் அவமானமாக எடுத்துக் கொண்டான். பாஞ்சாலியை பதிலுக்குப் பதில் அன்றே அவமானப்படுத்த நினைத்தான்.

மறுநாள் யாகம் ஆரம்பமாக இருந்ததால், முந்தைய நாள் விழாவுக்கு வந்த உறவினர்களுக்குச் சிறப்பு விருந்து ஏற்பாடாகி இருந்தது. பாண்டவர்களும் திரவுபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரவுபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், ஐவரின் பத்தினியே,,, இன்று யாருடைய முறை? என்று கேட்டான். திரவுபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள். அதேநேரம் அங்கு தோன்றினார் கிருஷ்ணர். கலங்காதே திரவுபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய். நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும்  உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, ஏன் பதில் கூறவில்லை? என்பான். உடனே நீ தக்ஷகன் முறை என்று சொல். அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்கமாட்டான் என்றார் பகவான்.

கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரவுபதி. துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும், விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். எனக்குப் பதில் கூறவில்லையே..... இன்று யாருடைய முறை? கிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே இன்று தக்ஷகன் முறை என்று பளிச்சென பதில் தந்தாள் திரவுபதி. அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான். திரவுபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி, பயந்து ஓடுகிறான்? என்று கேட்டாள். கண்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான். துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. ஆனால் துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை. திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், மணவாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது. ஒருமுறை முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீங்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர். பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து, முனிவர் தந்த வேரையும் அதில்  இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள். அன்று பவுர்ணமி. இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்தான். பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான். கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த தக்ஷகன் எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.

தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது. உடனே அவன் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள்; துடிதுடித்தாள். துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான். தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை. அதே நேரம். அவளின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு பவுர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன். பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன்.

அன்று முதல் இன்றுவரை பவுர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தியோடு பங்குகொள்கிறான். இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியதுதான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம் என்றார் கிருஷ்ணர். துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரவுபதி.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:28:39 AM
கிருஷ்ணனுடன் போரிட்ட அர்ஜுனன்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_174731000000.jpg&hash=29d68e1ed8a6ed819dd31a4607a5c2728a1ff824)


கிருஷ்ணனும் அர்ஜுனனும் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து, குரு÷க்ஷத்திரத்தில் நடத்திய யுத்தம், மகாபாரதம் படித்தவர்களுக்குத் தெரிந்த சம்பவம், ஆனால், அர்ஜுனனை எதிர்த்து கிருஷ்ணன் நடத்திய யுத்தம் பலருக்குத் தெரியாத சம்பவம்! காரணமில்லாமல் கண்ணன் எந்தச் சம்பவத்தையும் நிகழ்த்தத் திருவுள்ளம் கொள்வது இல்லை. இந்தச் சம்பவத்துக்கும் அப்படியொரு வலுவான காரணம் உண்டு.

மகாபாரதத்தின் முற்பகுதியில் நிகழ்ந்த சம்பவம் அது. கவுரவர்களும் பாண்டவர்களும் பாகப்பிரிவினை செய்து கொண்டனர். செழிப்பான பூமியையும், மக்கள் வாழும் பகுதியையும் துரியோதனனுக்குக் கொடுத்துவிட்டு, காட்டுப் பகுதியான காண்டவ வனத்தைப் பாண்டவர்களுக்குப் பிரித்துத் தந்தான் திருதராஷ்டிரன். கிருஷ்ணனின் அனுக்கிரகத்தால், காண்டவ வனத்தை அழகிய இந்திரபிரஸ்தமாக மாற்றினார்கள் பாண்டவர்கள். மேலும் யாகங்களில் தலைசிறந்த ராஜசூய யாகத்தைச் செய்து முடித்து, பாண்டவர்களில் மூத்தவனான தர்மன் நீதி தவறாமல் ஆண்ட காலம் அது. தம்பி பீமனின் தோள் வலிமையும், அர்ஜுனனின் வில் திறனும் அவனுக்கு அரணாக விளங்கியது. அர்ஜுனனையும், அவனது உற்ற நண்பனான கிருஷ்ணனையும், நர நாராயணர் என்றே அனைவரும் அழைத்தனர். அர்ஜுனனின் நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய்த் திகழ்ந்தார் கிருஷ்ணன். அதே கிருஷ்ணன்தான் ஒருமுறை அர்ஜுனனையே எதிர்த்துப் போர் புரியும்படி நேர்ந்தது.

ஒருநாள் அதிகாலை நேரம். காலவ முனிவர் என்ற தவ சிரேஷ்டர், ஒரு நதிக் கரையில் நின்று கொண்டு காலை சந்தியாவந்தனமும், நித்திய பூஜையும் செய்து கொண்டிருந்தார். அர்க்கியம் கொடுக்க, கையில் நீரை எடுத்தபோது, ஆகாயத்தில் இருந்து யாரோ உமிழ்ந்த தாம்பூலம், முனிவர் கையில் இருந்த அர்க்கிய நீரில் விழுந்தது. அவர் திடுக்கிட்டு மேலே பார்த்தார். அப்போது, கந்தர்வன் ஒருவன் விண்ணிலே உல்லாசமாகச் சென்று கொண்டிருந்தான். அவன் பெயர் சித்திரசேனன். அவன் சுவைத்து உமிழ்ந்த தாம்பூலம்தான், முனிவர் கரத்தில் இருந்த புனித நீரில் விழுந்தது. நடந்த செயல் அவன் அறியாமல் செய்த பிழையாக இருக்கும் என, ஒரு கணம் பொறுமையுடன் நின்றார் முனிவர். ஆகாயத்தில் சென்றுகொண்டிருந்த சித்திரசேனனோ, தான் உமிழ்ந்த தாம்பூலம் முனிவரின் கரத்தில் விழுந்து களங்கப்படுத்திவிட்டது என்பதை அதே கண நேரத்தில் தெரிந்து கொண்டான். ஆனாலும் அவன் அதைப் பொருட்படுத்தாமல் தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்காமல், வேகமாகச் சென்றுவிட்டான். கோபமடைந்த காலவ முனிவர் நேராக கிருஷ்ணனிடம் சென்று தனக்கு கந்தர்வன் இழைத்த தீங்கையும், அதனால் ஏற்பட்ட அபசாரத்தையும் எடுத்துக் கூறினார். முனிவரால் அவனைச் சபித்திருக்க முடியும், இருப்பினும் பகவான் கிருஷ்ணனிடம் முறையிடுவதுதான் சரி எனக் கருதி முறையிட்டார். தவறு நேர்வது இயற்கை ஆனால், தவறு என்று தெரிந்தபின்னும் திருந்தாமல் இருப்பவரைத் தெய்வம் தண்டிக்காமல் விடுவதில்லை. கருணை வடிவானவன்தான் கண்ணன். என்றாலும் தவறுகளைத் திருத்தவேண்டியது தர்ம ஸ்தாபனம் செய்பவனின் கடமையாகி விடுகிறது. அல்லவா?

சித்திரசேனனின் சிரஸை தங்கள் பாதங்களில் சேர்த்து, அவனுக்குத் தண்டனை வழங்குகிறேன் என்று சூளுரைத்தார் கிருஷ்ணன். சித்திர சேனனைப் போரில் சந்திப்பதாக அவனுக்குச் செய்தி அனுப்பியதோடு, போருக்கும் ஆயத்தமானார். தன் இருப்பிடம் வந்த சித்திரசேனன் கண்ணன் தன் மீது போர்த்தொடுத்து வருகிறார் என்பதை அறிந்தான். சிசுபாலனையே அழித்த கிருஷ்ணனின் முன் தான் எம்மாத்திரம்? என்ற பயம் ஒருபுறமும், ஜெயித்துவிட்டால், அழியாப் புகழ் பெற்றுவிடலாமே என்கிற பேராசை மறுபுறமும் அவன் உள்ளத்தின் அடித்தளத்தில் வேரூன்றி நின்றது. அவனுக்கு நேரடியாகக் கண்ணனுடன் போரிடத் துணியவில்லை. செய்தது தவறு என்று ஒப்புக் கொண்டு, முனிவரின் கால்களிலும், கண்ணனின் காலடியிலும் சரணாகதி என்று விழுந்துவிட்டால், அவர்கள் நிச்சயம் மன்னித்துவிடுவார்கள் என்று தெரிந்திருந்தும், ஆணவம் பிடித்த சந்திரசேனன் அதைச் செய்யவில்லை. மாறாக அவனது சூன்யமான மனதில் சூழ்ச்சியே பிறந்தது.

சித்திரசேனன், சிசுபாலனின் நண்பன். அதனால் நண்பன் சிசுபாலனின் மரணத்துக்குக் காரணமான பாண்டவர்களையும் பழிவாங்க வேண்டும். கண்ணனையும் அவமானப்படுத்த வேண்டும் தானும் பிழைக்க வேண்டும் என்று புதிதாக ஒரு சதித் திட்டம் தீட்டினான். அதனை நிறைவேற்ற ஒரு நாடகம் ஆடினான். கண்ணனின் விரல்களாலேயே அவரது கண்ணைக் குத்துவதாக இருந்தது அந்தத் திட்டம். அதாவது, தன் ஆட்சியில் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் என்கிற நல்லெண்ணம் கொண்ட அர்ஜுனனை, தன் எண்ணம் நிறைவேற ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைத்தான். இதையடுத்து அர்ஜுனனைக் கண்டு, அவன் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தான். யாருக்குத் தீங்கிழைத்தானோ அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்காமல், மற்றொருவனையும் தீவினையில் ஆழ்த்த எண்ணி, இவ்வாறு செய்தான் சித்திரசேனன். அர்ஜுனா... பல்குணா... பார்த்திபா..... அபயம்... அபயம்! உயிர்ப் பிச்சை அளியுங்கள் என்று கூறி சரணடைந்தான். எழுந்திருங்கள். சரணாகதி என என் காலில் விழுந்துவிட்டீர்கள். அபயம் அளித்தேன். அதுதான் க்ஷத்திரிய தர்மம். தங்கள் குறை எதுவானாலும் தீர்த்து வைக்கிறேன் என்று உறுதிமொழி கூறினான் அர்ஜுனன்.

மன்னர் மன்னா சத்தியமாக என்னைக் காப்பாற்றுவீர்களா? என்று கேட்டான் கந்தர்வனான சித்திரசேனன். நான் வணங்கும் கண்ணன் மீது ஆணையாகக் கூறுகிறேன் . தங்களுக்கு எந்த ஆபத்து இருப்பினும், என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுகிறேன் என்றான் பார்த்திபன். அர்ஜுன ராஜனே, என் பெயர் சித்திரசேனன் நான் கந்தர்வராஜன். அறியாமல் நான் செய்த பிழை ஒன்றுக்காக, என் மீது போர் தொடுத்து, என்னை அழிக்க வருகிறான் ஒருவன். தாங்கள் என் பக்கம் நின்று அவனோடு போரிட்டு, அவனை வென்று எனக்கு உயிர்ப்பிச்சை தர வேண்டும் என்று கெஞ்சினான். உன் உயிரைப் போக்க வந்தவன் யார் என்று சொல்? என்றான் அர்ஜுனன். அவன் ஒரு சாதாரண குறுநில மன்னன்தான். தங்களுக்கும் உறவினன்தான். ஆனால் தன்னை யாராலும் வெல்ல முடியாது என்றும், அர்ஜுனன் கூடத் தன்னை  எதிர்த்து நிற்க முடியாது என்றும் மார்தட்டுகிறான் என விஷமமாகவும் சூசகமாகவும் கூறினான் சித்திரசேனன். தன்னை எதிர்க்கத் துணிந்திருக்கிறான், தன் வீரத்துக்கு சவால் விட்டிருக்கிறான், தனக்கு பந்துவும்கூட என்று மனதுக்குள் எண்ணிய அர்ஜுனன், அது கவுரவர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்று தவறாக ஊகித்தான். ஆகவே, விவேகத்துடன் சிந்திக்காமல் உணர்ச்சிவசப்பட்டு, அப்படியா? கவலைப்படாதே! அவனை வென்று, உன் உயிரைக் காப்பாற்றுகிறேன் என உறுதிமொழி கூறினான்.

சித்திரசேனன் சாதுர்யமாகப் பேச்சைத் தொடர்ந்தான். அர்ஜுன ராஜரே.... தங்களை நான் பரிபூரணமாக நம்பலாமா? ஒருவேளை அவனை நீங்கள் சந்தித்ததும் மனம் மாறி.... கந்தர்வன் முடிக்கவில்லை அர்ஜுனன் குமுறினான். என் வீரத்தை மட்டுமல்ல, என் சத்தியத்தையும் நீ சந்தேகிக்கிறாய். அடைக்கலம் என்று வந்தவரை ஆதரிக்காமல் போகமாட்டான் இந்த அர்ஜுனன். உன் எதிரி எவனானாலும் சரி, என் இறுதி மூச்சுவரை போராடி, உன்னை நான் காப்பேன். இப்போதாவது உனக்கு நம்பிக்கையும் தைரியமும் வந்ததா? எங்கிருக்கிறான் உன் பகைவன் என்று சொல்? எனக் கோபாவேசத்துடன் கேட்டான் அர்ஜுனன். மன்னர் மன்னா! என் உயிரைக் கவர என் மீது போர் தொடுத்துப் புறப்பட்டு வருகிறவன் வேறு யாருமல்ல; தங்கள் ஆத்ம பந்து, உற்ற நண்பன் துவாரகா அதிபதி கிருஷ்ணன்தான் என்றான் சித்திரசேனன். அவ்வளவு தான்! அர்ஜுனன் திகிலாலும் பயத்தாலும் ஸ்தம்பித்துவிட்டான். அவன் நாவினின்றும் பேச்சு வரவில்லை. அர்ஜுனரே ... ஏன் அதிர்ச்சி அடைந்தவிட்டீர்கள்? உங்கள் ஆத்ம நண்பனும் வழிகாட்டியும் குருவுமான கிருஷ்ணன் மீது போர் தொடுக்க வேண்டுமே என்ற தயக்கமா? அல்லது கண்ணனை ஜெயிக்கும் அளவுக்கு வீரம் தங்களுக்கு இல்லையே என்ற பயமா? கவலைப்படாதீர்கள்... தங்களால் முடியவில்லை என்றால், இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லையே என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம். எனக்கு அற்ப ஆயுள் என்று நான் சமாதானப்பட்டுக் கொள்கிறேன் என அங்கலாய்த்தான் சித்திரசேனன்.

கவலை வேண்டாம். நான் சத்தியம் தவறமாட்டேன். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உயிர் துறக்கவும் தயங்கமாட்டேன். இந்த யுத்தத்தில் நான் மடிந்தாலும். நீ உயிர் பிழைப்பது நிச்சயம். சத்தியம் தவறிய குற்றத்தைச் செய்வதைவிட, நண்பன் மீதே போர் தொடுத்து, உன்னைக் காப்பாற்ற நான் தயார். இதோ புறப்படுகிறேன் என்று சூளுரைத்து, போர்க்கோலம் பூண்டு, யுத்த பூமியில் கிருஷ்ணனைச் சந்திக்கப் புறப்பட்டான் அர்ஜுனன். குழலூதி ஆவினங்களை மேய்க்கும் கண்ணன் கவசம் அணிந்து வாள், வில் ஏந்தி நின்ற போர்கோலம் கண்டு ஆச்சரியத்தால் உறைந்து போனான் அர்ஜுனன். உற்ற நண்பனை, ஆத்மபந்துவை வழிகாட்டியாக விளங்கிய குருவை, தெய்வத்தை எப்படி எதிர்த்துப் போர் புரிவது? அர்ஜுனன் உள்ளத்தில் கலக்கம், குழப்பம், பயம், பீதி! ஆனால், கடமையைச் செய்யும் போதும், சத்தியத்தைக் காக்கும்போதும் பயத்தால் கலங்கக்கூடாது என்று கண்ணனிடம் ஏற்கனவே கேட்டுத் தெரிந்துகொண்டிருந்த அர்ஜுனன் பயத்தையும் தயக்கத்தையும் உதறிவிட்டுப் போருக்குத் தயாரானான். கிருஷ்ணார்ஜுன யுத்தம் ஆரம்பமானது. யுத்தத்தைத் தொடங்கியது கண்ணன்தான். துரோணரிடம் தான் கற்ற வித்தை எல்லாம் தீர்ந்ததுபோல் தவித்தான் அர்ஜுனன். விண்ணிலே அஸ்திரங்கள் மழையாகப் பொழிந்துகொண்டிருந்தன. அவை மோதுகின்ற சப்தங்கள் இடி முழக்கம் செய்தன. பிரளயகாலம் போலவும், ஊழித்தீ பரவுவது போலவும் உலகம் நடுங்கியது.

தருமனும், பீமனும் மற்றவர்களும் கிருஷ்ணனும், அர்ஜுனனும் மோதிக் கொள்வதை அறிந்து கலங்கி, யுத்தக் களத்தை வந்தடைந்தனர். இத்தனைக்கும் காரணமான கந்தர்வன் சித்திரசேனனை ஒரு பூச்சியைப் பிடிப்பது போலப் பிடித்து, களத்திலே கொண்டு வந்து நிறுத்தினான். பீமன். நாரதரும் தேவர்களும் அங்கே வந்து, சித்திரசேனனுக்கு அறிவு புகட்டினர். அவன் ஆணவம் அழிந்தது. அறிவு தெளிந்தது. பரந்தாமன் பாதங்களில் சரணாகதி என விழுந்தான் அவன். சரணாகதி அடைகின்றவர்களைக் காக்கின்றவன் அல்லவா கண்ணன்? அர்ஜுனனால் காப்பாற்றப்பட வேண்டியவன், கண்ணனால் காப்பாற்றப்பட்டான். கண்ணன் சூளுரைத்தது பொய்யாகவில்லை. அவன் சித்திரசேனனின் உடலை அழிக்கவில்லை, உயிரைப் போக்கவில்லை. ஆனால், அவனுள் இருந்த ஆணவத்தையும் அகந்தையையும் அறியாமையையும் அழித்தார். அவன் செய்த தவறுக்கு மன்னிப்புக்கோரி, அவனை காலவ முனிவர் கால்களில் விழுந்து நமஸ்கரிக்கச் செய்தார். சித்திரசேனன் முனிவர் கால்களில் விழுந்து சரணடைந்தான். அவனை மன்னித்தார் முனிவர், முனிவருக்குக் கண்ணன் கொடுத்த வாக்கும் நிறைவேறியது. அதே நேரம், தாயினும் மேலான தன் ஆத்ம நண்பன் கண்ணனையே போரில் எதிர்க்கும் நிலை ஏற்பட்டதற்காக வருந்தி நின்றான் அர்ஜுனன். அவனும் கண்ணனின் கால்களில் விழுந்து, மன்னிப்புக் கோரினான். பாண்டவ சகோதரர்களும் இந்தச் சம்பவத்துக்காக மனம் வருந்தி, கண்ணனிடம் மன்னிப்புக் கோரினர். அப்போது...

இதில் உங்கள் தவறு ஏதுமில்லை இப்படியும் ஒரு யுத்தமா, இது ஏன் நிகழ்ந்தது என்று நீங்கள் கலங்கி இருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சியை அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டி, பரந்த பாரத சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க எத்தனையோ தர்மயுத்தம் இன்னமும் நடக்கப் போகிறது. அதற்கெல்லாம் போதிய பலமும், திறமையும், வீரமும், துணிவும், சாதுர்யமும் அர்ஜுனனுக்கு இருக்கிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்க நினைத்தேன். அதற்காக இந்த யுத்தம் ஒரு பயிற்சிக் களமாக அமைந்தது! எனப் புன்முறுவலோடு கூறினார் பரந்தாமன். கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதை அர்ஜுனனுக்கு எடுத்துக்காட்டவே இந்த யுத்தம் நிகழ்ந்தது. குருஷேத்திரப் போர் எனும் நாடகத்தின் ஒத்திகையை நடத்தி முடித்த பெருமை கண்ணனுக்கு! பெறற்கரிய பெரும் பேற்றைப் பெற்ற பெருமை. அர்ஜுனனுக்கு!
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:30:37 AM
எப்போது திறக்கும் சொர்க்கவாசல்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_174318000000.jpg&hash=8765b23d4023ed1989a45030013f4e6be026f9e9)


மகரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம் புகும் ஆசை தவிர வேறு எந்த ஆசையும் கிடையாது. ஜொலிக்கும் விழிகளும் வெண்ணிறத் தாடியும் ஜடாமுடியுமாய் நாளுக்குநாள் அவரது வசீகரம் கூடியது. மந்தபாலர் தம் தவ வாழ்வில் நிறைவுகண்டு தாமே விரும்பி சொர்க்கம் புக முடிவு செய்தார். அக்கினியை வளர்த்த மந்தபாலர், தன் இறுதி வேண்டுகோளைச் சமர்ப்பித்தார்; ஏ அக்கனியே! எத்தனையோ முறை வேள்வித் தீ வளர்த்து சமித்துக்களை ஆகுதியாகப் பெய்து உன்னை ஆராதித்திருக்கிறேன். இன்று நான் உன்னை வளர்ப்பது என்னையே ஆகுதியாக நீ ஏற்பதன் பொருட்டே. மனத்தாலும் முழு பிரம்மசாரியாக வாழ்ந்த என்னை ஏற்று என் ஆன்மாவை சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக! இவ்விதம் முழங்கிய அவர் நெருப்பில் சடாரெனக் குதித்தார், சக முனிவர்கள் சடசடவென அவர் உடல் எரிவதைப் பார்த்துக் கைகூப்பி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அவரது ஆன்மா நட்சத்திரம் போல் ஒளி வீசியவாறு விண்ணில் பறந்தது. சொர்க்கத்திற்குச் சென்ற மந்தபாலர், சொர்க்க வாசல்முன் நின்றார். ஆனால் சொர்க்கத்தின் கதவுகள் அவருக்குத் திறக்கவில்லை. தடதடவென அதன் தங்கக் கதவுகளைத் தட்டினார், கதவைத் திறந்து தேவன் யார் நீங்கள்? என்ன வேண்டும்? என்று அதட்டினான். நான் மகரிஷி மந்தபாலன். சொர்க்கம் புக வந்திருக்கிறேன், கதவைத் திறவுங்கள் என்றார் முனிவர். தேவன் கடகடவென்று சிரித்தான். மந்தபாலரே! சொர்க்கத்தின் கதவுகள் தட்டித் திறக்கப்படுவதல்ல; தானாய்த் திறந்தால்தான் உண்டு. நீங்கள் சொர்க்கம் புகத் தகுதியானவர் என்றால் இந்தக் கதவுகள் உங்களுக்காகத் திறந்து உங்களின் வருகைக்காகத் காத்துக் கொண்டிருக்கும். அப்படித் திறவாததால் உங்களுக்கு சொர்க்கம் புகத் தகுதி இல்லை என்றே பொருள்!

மந்தபாலர் வியப்படைந்தார். தவசிரேஷ்டரான தனக்கு சொர்க்கம் புக அனுமதி கிடையாதா? தம் தவ வலிமையின் அர்த்தம்தான் என்ன? தேவனே தவத்தை அன்றி வேறெதையும் நான் செய்ததில்லை. ஏன் எனக்கு சொர்க்கம் மறுக்கப்படுகிறது? தேவன் நகைத்தபடிச் சொல்லானான். மந்தபாலரே! ஒவ்வோர் உயிரும் பூமிக்கு அனுப்பப்படும்போது படைப்பாற்றலுடன் தான் அனுப்பப்படுகிறது. பூமி தொடர்ந்து இயங்க வேண்டும் இல்லையா? படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டியது ஒவ்வோர் உயிரின் அடிப்படைக் கடமை. இயற்கையிலேயே ஒருவருக்கு மக்கட் செல்வம் கிட்டவில்லை என்றால் அது ஒப்புக் கொள்ளக் கூடியதே. ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக ஒருவர் பிரம்மச்சரிய விரதம் பூண்டால் அதுவும் கூட ஏற்கக் கூடியதே. ஆனால் எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் சொர்க்கம் புகத் தவம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பிரம்மச்சரிய விரதம் பூணுவர்களை சொர்க்கம் விரும்புவதில்லை. படைப்பாற்றல் சக்தி அளிக்கப்பட்டும் தர்மநெறிப்படி வாழ்ந்து ஆனால் ஓர் உயிரைக் கூடப் படைக்காமல் சொர்க்கம் புக எண்ணுவது சரியல்ல. உங்களுக்கு இயற்கை வழங்கிய படைப்பாற்றலுக்கு நீங்கள் நியாயம் செய்யவில்லையே! உங்கள் வாரிசு என பூமியில் யாரையாவது காட்டுங்கள். உங்களுக்காக சொர்க்கத்தின் கதவுகள் இப்போதே திறக்கும்.   
மந்தபாலர் திகைத்தார் இப்படியொரு கோணத்தில் தாம் எண்ணிப் பார்க்கவே இல்லையே என வருந்தினார். தம் தவ ஆற்றலால் தாம் மறுபிறவி எடுத்து தம் படைப்பாற்றலுக்கு நியாயம் செய்தால் அதன் பின் சொர்க்கக் கதவுகள் தமக்குத் திறக்குமல்லவா என்று யோசித்தார். தேவன், ஒரு பிறவியின் தவ ஆற்றல் மறுபிறவிக்கும் தொடரும். மறுபிறவியில் அவர் தவம் ஏதும் நிகழ்த்த வேண்டாம். தம் படைப்பாற்றலுக்கு நியாயம் செய்து தம் இனத்தைப் பெருக்க உதவினால் அது போதும் என்று விளக்கம் தந்தான்.

மந்தபாலர் தன்னை விரைவில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு சாரங்கப் பறவையாக உருமாறும்படி மனத்தில் சங்கல்பம் செய்து கொண்டார். அப்போதுதானே சீக்கிரத்தில் சொர்க்கம் வர முடியும்? மறுகணம் மாபெரும் காண்டவ வனத்தில் ஒரு மரக்கிளையில் அந்த அழகிய சாரங்கப் பறவை போய் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டது. இயற்கையின் நியதிப்படி அது மறுபிறவி  எடுத்த கணத்திலேயே அதன் முற்பிறவி நினைவுகள் மறைந்தன. அதே மரத்தின் கிளையில் சிறகுகளைத் தன் கூரிய அலகால் கோதிக் கொண்டு ஜரிதா என்ற ஒரு சாரங்கி அமர்ந்திருந்தது. அது தான் அமர்ந்த மரத்தின் இன்னொரு கிளையில் உட்கார்ந்த சாரங்கத்தை வியப்போடு பார்த்தது. ஜரிதாவின் எழிலும் கனிவான பார்வையும் மந்தபால சாரங்கத்தைக் கிறக்கம் கொள்ள வைத்தன. அந்தப் பெண் பறவையிடம் மந்தபால சாரங்கத்திற்குக் காதல் தோன்றியது. மெல்ல மெல்ல அவற்றினிடையே காதல் வளர்ந்தது ஒரே கூட்டில் இணைபிரியாமல் வசிக்கலாயின. ஜரிதா நான்கு முட்டைகளை இட்டது. அவற்றை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதற்குள் அந்த இனிய இல்லற வாழ்வில் ஒரு விபரீதம்! லபிதா என்ற இன்னொரு சாரங்கி மந்தபால சாரங்கனை வட்டமிட்டது. அதனுடைய ஆண்மை நிறைந்த பேரழகு லபிதாவை மயக்கிக் கொள்ளை கொண்டது. லபிதா பறந்து சென்று அதன் அருகே அமர்ந்து எதையோ தேடுவதுபோல் பாவனை செய்தது. யார் நீ? என்ன தேடுகிறாய்? விசாரித்தது மந்தபாலம்.

உங்கள் அலகின் வளைவிலும் சிறகுகளின் அடர்த்தியிலும் என்னையறியாமல் என் உள்ளத்தைத் தொலைத்துவிட்டேன். அது இங்கே எங்கேயாவது விழுந்து கிடக்கிறதா என்று தேடுகிறேன்..! லபிதாவின் மயக்கும் கவிதை மொழி மந்தபாலத்தைக் காந்தம் போல் இழுத்தது. தன்னை வட்டமிட்ட லபிதாவின் அழகில் லயித்த மந்தபாலம் தேடிவந்த வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை. ஏற்கெனவே மணமாகி ஒரு மனைவியும் தனக்கு உண்டு என்பதையோ மனைவி இப்போது நான்கு முட்டைகள் இட்டு அடைகாத்து வருகிறது என்பதையோ நான்கு ஆண் குஞ்சுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்பதையோ மந்தபாலம் எண்ணிப் பார்க்கவில்லை. காமம் அதன் கண்ணை மறைத்தது. மனைவி ஜரிதாவிடம் ஏதொன்றும் கூறாமல் ஒருநாள் லபிதாவோடு இணைந்து விண்ணில் பறந்து, தனியே இல்வாழ்வைத் தொடங்கின.

அப்பா எங்கே? என்று கேட்டன அப்போது தான் உருப்பெறத் தொடங்கியிருந்த நான்கு ஆண் குஞ்சுகள். உங்கள் அப்பா மனிதர்களைப் பார்த்துக் கெட்ட பழக்கத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டு விட்டார். போகட்டும், நம்மை மறந்தவர்களை நாம் நினைப்பது நம் சுயமரியாதைக்கு அழகல்ல. உங்கள் நால்வருக்கும் நானே இனித் தாயாகவும் தந்தையாகவும் இருப்பேன். வெளியே சென்று உங்களுக்குத் தேவையான உணவை நானே சம்பாதித்து வருவேன். நான் உணவு பெறுவதற்காகக் கூட்டை விட்டு வெளியே செல்லும்போது மட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்! என்றது, ஜரிதா. ஆண் குஞ்சுகள் மனம் தேறி தாய்ப்பறவை சொன்னதை ஏற்றுக் கொண்டன.

ஒருநாள் திடீரென காண்டவ வனத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இரண்டாம் மனைவி லபிதாவுடன் சுற்றிக் கொண்டிருந்த மந்தபாலம். நெருப்பைப் பார்த்துத் திகைத்தது. சரிவரச் சிறகு கூட முளைக்காத  தன் நான்கு ஆண் குஞ்சுகளும் என்ன பாடுபடுமோ என்று அதன் தந்தை மனத்தில் கவலை எழுந்தது. ஏ அக்கினியே! என் நான்கு மகன்களையும் நீ எரிக்காமல் காப்பாற்றுவாயாக! என்று அது மனமாரப் பிரார்த்தனை செய்தது. அதன்முன் அக்கினி பகவான் தோன்றி. மந்தபாலமே! உன் முற்பிறப்பில் உன் உடலையே எனக்கு ஆகுதியாக்கினாய். அந்த உன் தியாகத்தை மெச்சி உன் இப்பிறப்பில் உனது ஆண் குஞ்சுகளை நான் ஒன்றும் செய்யமாட்டேன் என வாக்குக் கொடுத்து மறைந்தார். இதைக் கண்ட இரண்டாம் மனைவி லபிதா, இன்னும் உனக்கு ஜரிதாவிடம் காதல் இருக்கிறது என்று ஊடல் கொண்டு இன்னொரு மரக்கிளையில் தனியே போய் உட்கார்ந்து கொண்டது. அக்கினியின் வாக்குறுதி பற்றி ஏதும் அறியாத தாய்ப்பறவை ஜரிதாவைக் கலக்கம் கவ்வியது. அக்கினியிடமிருந்து இறகு சரிவர முளைக்காத பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றுவது? குஞ்சுகள் பயத்தில் நடுநடுங்கின. அம்மா! நீங்கள் தப்பித்துப் போங்கள். எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் இருந்தால் வம்சம் விருத்தியாக வாய்ப்புண்டு. நாங்கள் நெருப்பிலேயே மடிந்தாலும் பரவாயில்லை. என்றன.

தாய்ப்பறவை ஜரிதா வேறு வழி தெரியாமல் அழுதுகொண்டே விண்ணில் சுற்றிக் கொண்டிருந்தது. மூத்த ஆண் குஞ்சான ஜரிதாரி வரப்போகும் கஷ்டத்தை முன்கூட்டியே உணர்ந்து கடவுளைப் பிரார்த்திப்பவனே புத்திசாலி. அவன் கடவுள் அருளால் கஷ்டத்தைக் கடந்துவிடுவான்! என்றது. சாரி, ஸதம்பமித்திரன், துரோணன் ஆகிய பிற மூன்று குஞ்சுகளும் அதை ஆமோதித்தன. அண்ணனுடன் சேர்ந்து பிரார்த்திக்கத் தொடங்கின. அக்கினி பகவானே! நீயே சூரியன் நீயே மழை தருபவன். உன்னாலேயே உயிர்கள் உண்ட உணவு ஜீரணமாகிறது. நாங்கள் இளம் குழந்தைகள். எங்களிடம் இரக்கம் காட்டு. எங்களை அழிக்காதே! இளம் குழந்தைகளின் மழலைப் பிரார்த்தனை அக்கினி பகவானைக் குளிரச் செய்தது. உங்கள் தந்தைக்கு வரம் கொடுத்திருக்கிறேன். உங்களை அழிக்கமாட்டேன் உங்களுக்கென்று என்ன வரம் வேண்டும்? என்று வெகு பிரியமாகக் கேட்டார்.

எங்கள் தந்தையை எங்களிடமிருந்து பிரித்த லபிதாவை நாங்கள் வெறுக்கிறோம். எங்கள் தந்தை எங்களுக்கு வேண்டும்! என்றன அவை. அக்கினி பகவான் சிரித்துக் கொண்டே அப்படியே நடக்கும் என்று சொல்லி படபடத்துப் பாய்ந்தார். அதோடு தனியே மரக்கிளையில் அமர்ந்திருந்த லபிதாவைப் போகிற போக்கில் அள்ளி விழுங்கிச் சென்றுவிட்டார்! தாய்ப்பறவை ஜரிதா அக்கினி அடங்கியதும் பாய்ந்தோடி வந்தது. சேதமில்லாமல் தன் குஞ்சுகள் இருப்பதைப் பார்த்ததும் அவற்றை அரவணைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் அரற்றியது. அப்போது மந்தபாலமும் அங்கே வந்து சேர்ந்தது. மனைவி, பிள்ளைகளைக் கண்டு அழுதது. ஜரிதா கணவனை வெறுப்புடன் நோக்க, பிள்ளைகளோ பாசத்தோடு தங்கள் தந்தையிடம் சென்று அமர்ந்தன. இந்தப் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் தான் அக்கினி பகவானிடம் வரம் கேட்டேன். அத்தோடு அந்த சாகசக்காரி லபிதாவை இப்போது முற்றிலுமாகத் தலைமுழுகி விட்டேன்! என்னை மன்னிக்கக் கூடாதா? என்று உருகியது மந்தபாலம்.

சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது ஜரிதா. குழந்தைகளுக்குத் தந்தை முக்கியமல்லவா; திருந்தி மன்னிப்புக் கேட்பவரை ஏற்பதுதான் தர்மமல்லவா என்று சிந்தித்தது. மெல்லப் பறந்துபோய்த் தன் கணவன் அருகில் அது அமர்ந்தபோது குழந்தைகள் அப்போதுதான் முளைக்கத் தொடங்கிய தங்கள் சின்னசிறு சிறகுகளை அசைத்து ஆர்ப்பரித்தன. ஜரிதாவின் முகத்தில் வெட்கம் படர்ந்த அழகை ரசித்தது மந்தபாலம். மேலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்த அக்கினி பகவான் சிரித்துக் கொண்டார் முதல் மனைவியின் வாழ்வைக் கெடுக்கும் இரண்டாம் மனைவியை வாழ்க்கை நெருப்பு எரிக்கக் கடவது என்று அவர் விதி வகுத்தார். காலப்போக்கில் மந்தபாலம் மூப்படைந்து தளர்ந்து உயிர் விட்டபோது அதன் ஆன்மா சொர்க்கம் நோக்கிச் சென்றது. என்ன ஆச்சரியம்! மந்தபால ஆன்மாவை வரவேற்க சொர்க்கத்தின் கதவுகள் தயாராய்த் திறந்திருந்தன. இரு தேவிகள் அந்த ஆன்மாவை வரவேற்கப் பூரண கும்பத்தோடு காத்திருந்தார்கள். இயல்பிலேயே வழங்கப்பட்ட படைப்பாற்றலுக்கு நியாயம் செய்த மந்தபால ஆன்மா அப்படித்தான் சொர்க்கத்தைச் சென்றடைந்தது.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:32:29 AM
விலை மதிப்பில்லா பூணூல்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_174054000000.jpg&hash=fce048014ba2df43ee1624c476dc0115ac8e78d6)


முன்னொரு காலத்தில் மகான் ஒருவர் பூணூல் திரிப்பதையே தன் தொழிலாகக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரிந்த ஒரே தொழிலும் அதுதான். அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. மகான் பூணூல் திரிப்பதற்குரிய மந்திரத்தை சொல்லித் திரித்துத் தினமும் அதை பகவான் திருவடியில் வைத்து வணங்கி பரம பவித்ரமாக அதை ஓலைப் பெட்டியில் எடுத்து வைப்பார். யாராவது வந்து கேட்டால் அவர்களுக்குக் கொடுப்பார். இப்படியே வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நாள் மகானின் மனைவி அவரிடம், நீங்கள் எப்பொழுதும் பூணூலைத் திரித்துக் கொண்டிருக்கிறீர்களே! நம் பெண்ணிற்கு வயதாகிவிட்டது. கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும். அதற்குப் பணம் வேண்டுமே, பக்கத்து தேசத்து ராஜா மிகவும் உபகாரியாம். அவரைப் போய் யார் உதவி கேட்டாலும் வாரி, வாரி கொடுப்பாராம். நீங்கள் ஒரு தடவை போய் பார்த்து வாருங்களேன் என்றாள். மனைவி சொல்லை மறுக்க முடியாமல், ராஜாவைப் பார்க்கப் போனார். மகானின் முக தேஜஸ் ராஜாவையும் ஆசனத்திலிருந்து எழவைத்தது. பிறகு மகானிடம், தாங்கள் வந்த விஷயம் என்ன என்று வினவ, என்ன கேட்பது என்று புரியாமல் மகான் தடுமாற, மகானே, நீங்கள் எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றார் ராஜா.

இதுவரை யாரிடமும் எதுவும் கேட்டுப் பழக்கமில்லாத மகான், நான் ஓர் யக்ஞோபவீதம் (பூணூல்) கொண்டு வந்திருக்கிறேன். அதன் எடைக்கு நிகராகத் தங்கம் கொடுத்தால் போதும்.. அதைக் கொண்டு என் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணிவிடுவேன் என்றார். தராசைக் கொண்டு வரச் சொல்கிறார் ராஜா. ஓலைப் பெட்டியிருந்து பூணூலை (ஒன்றே ஒன்று) எடுத்து மந்திரத்தைச் சொல்லி தராசுத் தட்டில் வைத்தார் ஏழை பிராமணர். இந்தப் பூணூல் அப்படி என்ன எடை இருக்கப் போகிறது? பாவம் இது கூட தெரியாமல் கேட்கிறாரே என்று ராஜா பரிதாபப்பட்டான். ஒரு தங்கக் காசைப் போட்டான். தட்டு தாழவில்லை. இரண்டு, மூன்று என்று எவ்வளவு தங்கக் காசுகள் போட்டாலும் தராசு அசையாமல் நின்றது. தன்னுடைய ஆபரணங்கள் ஒவ்வொன்றாக வைத்தும் பூணூலுக்கு இணை இல்லை. தன்னுடைய ரத்தின கிரீடத்தை எடுத்து வைத்தான். உடனே பக்கத்தில் இருந்த நாட்டின் மந்திரி ராஜாவின் காதில் அவசரப்படவேண்டாம்! இந்த நூல் நம் இராஜ்ஜியத்தையே சூறையாடிவிடும். இந்த பிராமணரை நாளை வரச் சொல்லுங்கள். அப்பொழுது எடைக்கு எடை தரலாம் என்றார்.

அரசனும் பிராமணரிடம், நாளை வாருங்கள். நீங்கள் கேட்டபடி எடைக்கு எடை தருகிறேன் என்றான். பிராம்மணருக்கு ஒரே பயம். நாம் கேட்டது தவறோ, இப்படி பூணூல் எடைக்கு மேல் வேண்டாம் எனக்கூறி விபரீதத்தில் மாட்டிக் கொண்டோமே. மறுநாள் வரச் சொல்லி சிரச்சேதம் செய்து விடுவாரோ என்றெல்லாம் யோசித்தபடி வீடு திரும்பினார். இரவு முழுவதும் தூங்கவில்லை. பயத்துடனேயே எழுந்து ராஜாவைப் பார்க்க மறுநாள் கிளம்பினார். மறுநாள் அரண்மனையில் ராஜா முன்னிலையில் தராசு கொண்டுவரப்பட்டது. பூணூலை வைத்தார் அந்தணர். ராஜாவும் ஒரு காசை எடுத்துப் போட்டார். என்ன ஆச்சர்யம். உடனேயே பூணூல் தட்டு மேலே போய்விட்டது! அதே பூணூல் அதே தராசுதான். பிறகெப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது? நேற்று வேறு மாதிரி அல்லவா நடந்தது? ராஜா மந்திரியை அழைத்துத் தன் சந்தேகத்தைக் கேட்டார். மந்திரி அதற்கு விளக்கம் சொன்னார்:

நேற்று அந்த முதியவர் கொண்டு வந்த பூணூல் மிகவும் பவித்ரமானது. மிகவும் புனிதமானது. அதற்கு நிறை காண யாராலும் முடியாது. எடை போடுவதே தப்பு. நாமெல்லாம் ஆத்மாக்கள். பகவான் மட்டுமே பரமாத்மா - பரம என்றால் உத்தமமான என்று பொருள். அதே அடைமொழி பூணூலுக்கும் உண்டு. அது இருந்ததினால் நேற்று அந்தப் பூணூல் இந்த ராஜ்யத்தையே எடை கொண்டது. ஆனால் இன்றைக்கு அதனுடைய பவித்ரம் போய் விட்டது. ஏனெனில், பூணூலைத் திரிப்பவர்கள் தங்களுடைய நியமங்களில் இருந்து தவறவே கூடாது. ஆனால் பாவம் இந்தப் பெரியவர். பயம் காரணமாக தன்னுடைய தினமும் செய்யும் நியமங்களைச் செய்யத் தவறி விட்டார். ஆதலால் இன்றைய பூணூல் பவித்ரம் போய்விட்டது. நம்மால் சுலபமாக எடை போட முடிந்தது என்று கூறினார். பிறகு அரசர் கருணையோடு ஏழை பிராமணருக்கு அவர் பெண்ணின் திருமணத்திற்குத் தேவையான தங்கத்தை அளித்து அனுப்பினார்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:34:19 AM
நல்லதை செய்வோருக்கு எமபயம் இல்லை!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_174004000000.jpg&hash=94b2512652317b418414a149b446dc42f7630c79)


வட இந்தியாவிலுள்ள நாடுகளில் ஒன்றான ஹேஹயம் என்ற நாட்டை ஆண்ட ஹைஹயர்கள் தங்கள் நாட்டைத் தனித் தனிப் பகுதியாகப் பகிர்ந்து கொண்டு ஒற்றுமையுடன் அரசு புரிந்தனர். அவர்களுள் ஒருவரது புதல்வன் ஒரு நாள் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். காட்டில் ஓர் அடர்ந்த புதரிடையே ஒரு முனிவர் தம் உடலை மான் தோலால் மூடித் தவம் செய்து கொண்டிருந்தார். வேட்டைக்கு வந்த அரசகுமாரன் அவரை மான் என்று எண்ணி அம்பால் அடித்தான். அவர் உடனே இறந்துவிட்டார். அரசகுமாரன் இறந்திருப்பதைக் கண்டு பதறினான். ஊர் திரும்பிப் பெரியவர்களிடம் நடந்ததைக் கூறினான். ஹேஹய மன்னர்கள் முனிவர் கொல்லப்பட்டதை நேரில் சென்று பார்த்தனர். வருந்தி அவர் யார் என்றறிய அங்குமிங்கும் தேடினர். அண்மையில் ஓர் ஆசிரமம் காணப்பட்டது. அது காஸ்யப முனிவரின் புதல்வரான அரிஷ்ட நேமியின் ஆசிரமம். அவரைக் கண்டு வணங்கினர்.

முனிவர் அரசர்களை உபசரிக்க முற்பட்டபோது, முனிவரே, நாங்கள் பெரிய குற்றத்திற்கு இலக்காகிவிட்டோம். ஓர் அந்தணர் எங்களால் கொல்லப்பட்டுவிட்டார். நாங்கள் தங்கள் உபசாரத்திற்குக் தகுதியற்றவர்கள் என்று அரசர்கள் கூறினர். உடனே சென்று அந்தச் சவத்தை இங்கு கொண்டு வாருங்கள். நான் என் தவத்தால் அதை உயிர்ப்பிக்கிறேன் என்றார் அரிஷ்டநேரி அவர்களிடம் . ஹைஹயர்கள் அந்தச் சவத்தைக் கொண்டு வரச் சென்றபோது அது அங்கு காணப்படவில்லை. நாய் நரிகள் இழுத்துப் போயிருக்குமோ என்று தேடியதில் அத்தகைய அடையாளம் ஏதும் இல்லை. கொன்ற பாவத்தோடு முனிவரிடம் அபசாரப்பட வேண்டிய பயமும் சேர்ந்துவிட்டதே என்று கவலையுடன் முனிவர் முன் தலைகுனிந்து நின்றனர்.

இவர்தானா உங்களால் கொல்லப்பட்ட அந்தணன்? நன்றாகப் பாருங்கள் என்று கூறி அரிஷ்டநேமி ஒரு பிராமண குமாரனைக் காட்டினார். அனைவரும் ஆச்சரியம் காட்டினர். தாங்கள் கண்ட சவத்தில் இருந்த அடையாளங்கள் எல்லாம் இந்தக் குமாரனின் உடலில் காணப்பட்டன. அவர்களால் தங்கள் கண்களை நம்ப முடியவில்லை. இவன் என் மகன், நன்கு தவமியற்றிப் பெருமை எய்தியவன். அரசர்களே, நான் சபித்துவிடுவேன் என அஞ்ச வேண்டாம். தெரியாமல் நடந்துவிட்டது. உங்கள் இரக்கமும் உண்மையும் முயற்சியும் உங்களைக் காப்பாற்றிவிட்டன என்றார் முனிவர். முனிவரின் தவப்பெருமையையும் மன்னிக்கும் மாண்பையும் கண்டு வியந்த மன்னர்கள். முனிசிரேஷ்டரே! இந்த முனிகுமாரன் இறந்ததை நாங்களே கண்டோம். இப்போது உயிருடன் உள்ளான். மரண பயமின்றி நீங்கள் எல்லோரும் இருப்பதன் ரகசியம் என்ன? என்று வேண்டினர்.

முனிவர் கூறினார். அரசர்களே! உண்மை ஒன்றையே பேசுவோம், பொய் பேச வேண்டிய விருப்பம் எங்களுக்கு இல்லை. எங்கள் கடமையைச் செய்கிறோம். ஆகவே எமன் பற்றிய அச்சம் எங்களுக்கில்லை. நன்மை தரும் நற்செய்தியையே எல்லோர்க்கும் கூறுகிறோம். தீமை பயக்கும் தீய செயலைச் செய்வதே இல்லை. ஆதலின் எமனைப் பற்றிய அச்சம் எங்களுக்கில்லை. உணவும் நீரும் அளித்து விருந்தினரை உபசரிக்கிறோம். வேலையாட்களுக்கு வயிறார உணவு தருகிறோம். மிகுந்ததை நாங்கள் உண்கிறோம். ஆகவே எமபயம் எமக்கில்லை. பொறுமை, புலனடக்கம், புண்ணியத் துறையாடல், தானம் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். நல்வினை பயக்கும் நல்ல இடங்களில் உறைகிறோம். ஆதலால் மரண பயம் எங்களுக்கு இல்லை.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 20, 2013, 09:35:42 AM
திருந்துங்க ஆட்சியாளர்களே!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_173908000000.jpg&hash=aaa38ce6677528e714423d1e8094fb01af1bae67)


நான் என்ன தவறு செய்தேன் என்று இவ்வளவு கடுமையாகப் பேசுகிறீர்கள்? பிரச்னை தான் என்ன? என்று பிசிராந்தையாரிடம் கேட்டான் பாண்டிய மன்னன். ஆம்...பாண்டியநாட்டிலுள்ள சிறிய கிராமம் பிசிர். இவ்வூரில் ஆந்தையார் என்னும் பெயர் கொண்ட புலவர் வசித்தார். ஊரின் பெயரை அவரது பெயரில் இணைத்து பிசிராந்தையார் என மக்கள் அழைத்தனர். யாரையும், எதையும் தன் எழுத்தாலும் பேச்சாலும் தட்டிக்கேட்கும் குணமுயைடவர் அவர். அவரது விமர்சனங்கள் நியாயமாக இருக்கும் என்பதால் அரசர்களும், அறிஞர்களும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அப்போது, பாண்டிய மன்னன் மக்கள் மீது பல வரிகளை விதித்தான். அந்த கடும் வரியைக் கட்ட முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள் அவதிப்பட்டனர். எல்லாரும் பிசிராந்தையாரிடம் சென்றனர். அய்யனே! தாங்கள் மன்னரிடம் சென்று, இந்த பிரச்னை பற்றி பேசக்கூடாதா! எங்கள் வருமானமெல்லாம் வரியாய் போனால், நாங்கள் குழந்தை குட்டிகளுடன் எப்படி பிழைப்போம்? தயவுசெய்து மன்னரிடம் இதுபற்றி பேசுங்கள்.

எங்களுக்கு விமோசனத்தை ஏற்படுத்துங்கள், என்றனர் கண்ணீருடன். பிசிராந்தையார் ஆவேசமாகக் கிளம்பி விட்டார். கையில் ஓலைச்சுவடி. அதில் மன்னனுக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை பாடலாக எழுதி யிருந்தார். புலவரைக் கண்ட மன்னன் வியப்படைந்தான். முன்னறிவிப்பின்றி திடீரென வருகை தந்துள்ளீர்களே! முதலில் அமருங்கள். தாகசாந்திக்கு என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று உபசரித்த மன்னன், அழகிய சிம்மாசனம் ஒன்றில் அமர வைத்தான். மன்னா! நான் தாகசாந்தி செய்துகொள்வது இருக்கட்டும். பாண்டியநாட்டு மக்கள் மிகுந்த தாகத்துடன் இருக்கிறார்களே! அதுபற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? என்று கேட்டார். புலவரே! தாங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை. வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத்தானே செய்கிறது... அவன் புரியாமல் பேசினான். மன்னா! வைகை பொய்க்கவில்லை. அது பெருகியோடுவதால் தானேகழனிகள் செழித்துக் கிடக்கின்றன. ஆனால், குடிமக்களின் வீடுகளில் தான் உணவு இல்லை. அத்தனையும் உன் கஜானாவை நிரப்பிவிட்டது,. சற்று விளக்கமாக சொல்லுங்கள்... பிசிராந்தையாரே! பிசிராந்தையார் மீண்டும் புதிர் போட்டார்.

மன்னா! யானையைப் பார்த்திருக்கிறாயா? பாண்டியன் கலகலவென சிரித்தான். என்ன புலவரே கேள்வி இது! நம் அரண்மனையில் நூற்றுக்கணக்கான யானைகள் உள்ளனவே! போர்க்காலத்தில், அவை எதிரிகளின் தலைகளை பந்தாடுவதை பலமுறை பார்த்திருக்கிறேனே! இதற்கு பதிலளித்த பிசிராந்தையார்அதெல்லாம் சரி! வயலில் விளைந்திருக்கும் நெல்லை சோறாக்கி, யானைக்கு கவளம் கவளமாகக் கொடுத்தால், அது பலநாளுக்கு போதுமானதாக இருக்கும். மொத்த யானைகளையும் வயலுக்குள் இறக்கி விட்டால், யானையின் வயிற்றுக்குப் போவது குறைவாகவும், காலில் சிக்கி வீணாவது அதிகமாகவும் இருக்கும். ஒரேநாளில் வயலில் உள்ள நெல் காலியாகி விடும். அதுபோல் தான் மக்கள் நிலையும்!  நியாயமான வரி போட்டால், உன் கஜானாவும் நிரம்பும், மக்களும் செழிப்படைவார்கள். அதிகவரி விதித்தால், மக்கள் வாழ்வு சின்னாபின்னமாகி விடும். உனக்கு அதிகாரம் இருக்கிறதே என்பதற்காக, மக்களுக்கு தாறுமாறாக வரி விதித்தால், யானையின் காலில் சிக்கிய வயல் போல, நாடும் பாழாகி விடும், என்றார். மன்னன் மனம் மாறினான். ஆட்சியாளர்களும் ஏழைகள் மீது கருணை வைத்து நியாயமான வரி வசூலிக்கலாமே!
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 06:31:59 PM
பேசும் தெய்வம்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_173727000000.jpg&hash=c35ce5d95d1cf8871ee53e0620418583cc55843f)


குருஜாம்ப ÷க்ஷத்திர கிராமத்தில் குர்யாஜி என்ற பக்தர் இருந்தார். அவரது மனைவி ராணுபாய். இந்த கிராமம் கங்கைக்கரையில் அமைந்திருந்தது. குர்யாஜி சூரிய நமஸ்காரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் சூரியன் நேரில் வந்து காட்சியளித்து, உனக்கு இருபிள்ளைகள் பிறப்பார்கள். ராமன் அம்சத்தோடு ஒருவனும், அனுமன் அம்சத்தோடு ஒருவனும் பிறப்பார்கள், என்று கூறி மறைந்தார்.  முதல் பிள்ளைக்கு கங்காதரன் என்று பெயரிட்டனர். இரண்டாவது குழந்தையை ராணுபாய் பெற்றெடுத்த போது, சூரியன் வாக்களித்தபடி அனுமனின் அம்சமாக சிறுவாலுடன் இருந்தான். அவன் சற்று வளர்ந்ததும் வால் மறைந்தது. அவனுக்கு நாராயணன் என பெயரிட்டனர். மனோதிடமான அவன் குறும்புமிக்கவனாகவும் இருந்தான். மரம், சுவர் எதுவானாலும் ஏறி குதிப்பான். மகனின் செயல்களை எண்ணி ராணுபாய் கவலைப்பட்டாள்.  ஒருநாள் ராணுபாய், நாராயணா! கண்டபடி இரவு நேரத்தில் தெருவில் அலையாதே! நண்பர்களுடன் சேர்ந்து குறும்பு செய்யாமல் சமர்த்தாக இரு!, என்றாள்.  சரிம்மா! என்றுதலையாட்டினான் நாராயணன். ஆனால், அதன் பிறகு அவன் அம்மாவின் கண்ணில் படவே இல்லை. குழந்தைகள் யாருக்கும் அவன்இருக்குமிடம் தெரியவில்லை. எங்கு தேடியும் காணவில்லை. பெற்றோர் மனம் பதறியது. கணவருடன் தானியம் சேமிக்கும் களஞ்சியத்திற்கு ராணுபாய் சென்றாள். அங்கே பதுங்கி யிருந்த நாராயணனைக் கண்டாள்.  நாராயணா! இங்கு என்ன செய்கிறாய்? என்று சப்தமாக கேட்டாள்.

 அவர்களிடம், நேற்று இரவு அம்மா என்னை வெளியே போகாமல் ஓரிடத்தில் இரு என்றதால், இங்கு வந்தேன். அது என்ன தப்பா?. என்று கேட்டான் அப்பாவியாக. பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். முதலில் கங்காதரனுக்கு பெண் பார்த்து திருமணத்தை நடத்தினர். அடுத்து நாராயணனுக்கு பெண்பார்த்து முகூர்த்த நாளையும் குறித்தனர். ஆனால், நாராயணனுக்கு திருமணத்தில் விருப்பமில்லை.  கல்யாண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. நாராயணன் வீட்டை விட்டு ஓடி விட்டான். கல்யாண வீடு களேபரமானது. மூத்தவன் கங்காதரன் பெற்றோரிடம், அனுமனின் அம்சம் கொண்டவன் தம்பி நாராயணன் என்பதை அறிந்தும் திருமணம் செய்து வைக்க நினைத்தது தவறு. அவன் காட்டுக்குச் சென்று தவவாழ்வில் ஈடுபட்டிருப்பான் என்று எனக்குத் தோன்றுகிறது, என்றார்.  குர்யாஜியும், ராணுபாயும் அதையே உண்மை என்று நம்பி மன அமைதியானார்கள்.  அவர்கள் நினைத்தது போலவே, நாராயணன் காட்டில் தவத்தில் அமர்ந்தான். நாட்கள் பல கடந்தன. ஆனால், பயன் ஏதும் கிடைக்கவில்லை. இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்து இறப்பதற்கு ஆயத்தமானான். கொடிகளைப் பறித்து மரக்கிளையில் கட்டிக் கொண்டு,  ஜெய் ராமதாச ஆஞ்சநேயா! தாயும் தந்தையுமாக உன்னை எண்ணி தவத்தில் ஆழ்ந்தேனே! இந்த பிள்ளைக்காக அன்போடு ஓடிவர வேண்டும்! என்று அழுதான்.  கருணாமூர்த்தியான ஆஞ்சநேயர் அவர் முன் தோன்றி, நாராயணனின் கண்ணீரைத் துடைத்து, கட்டித் தழுவிக் கொண்டார். கவலை வேண்டாம். உடனே வா! நாம் இருவரும் ஸ்ரீராமச்சந்திர பிரபுவிடம் செல்லலாம், என்று பஞ்சவடிக்கு அழைத்துச் சென்றார்.  பஞ்சவடி ராமர் கோயிலில் இரவு பஜனை நடந்து கொண்டிருந்தது. அதில் ஆஞ்சநேயரும், நாராயணனும் கலந்து கொண்டனர்.

பூஜை முடிந்ததும் எல்லோரும் கோயிலை விட்டுக் கிளம்பினர். அப்போது ஆஞ்சநேயர், கருணாமூர்த்தியே! ரகுராமா! என் பக்தன் நாராயணனுக்கு குருவாக இருந்து உபதேசம் செய்யுங்கள்!, என்று வேண்டிக் கொண்டார்.  ராமரும் நேரில் தோன்றி தன் திருக்கரத்தை நாராயணனின் தலையில் வைத்து மந்திர தீட்சை அளித்தார் இனிமேல் உன்னை ராமதாஸ் என்று அனைவரும் அழைப்பார்கள். உலக மக்கள் பலரை ராமபக்தியில் செலுத்தும் பாக்கியம் பெறுவாய்! நான் காட்டிற்குச் சென்றபோது கட்டிய வஸ்திரத்தையும் உனக்கு அளிக்கிறேன், என்றார். மந்திர உபதேசம், வஸ்திர தீட்சையை வழங்கினார். ஆஞ்சநேயரும் தன் பங்கிற்கு ராமதாசருக்கு சரணாகதி மந்திரத்தை உபதேசித்தார்.  என் பக்தனான நீ எப்போது நினைத்தாலும், அப்போதெல்லாம் உன் முன் தோன்றுவேன்! என்று வாக்களித்துவிட்டு மறைந்தார். ராமதாசர் தினமும் ஜயரகுவீரா என்று ஜபித்தபடியே சாலைகளில் செல்வார். பக்தர்கள் கொடுக்கும் தானியத்தை கல்லில் வைத்து அரைத்து மாவாக்கி நெருப்பு மூட்டி இரண்டு ரொட்டி சுட்டு சாப்பிடுவார்.  ஒருநாள் மராட்டிய மாவீரர் சிவாஜி, வேட்டையாடுவதற்காக காட்டிற்கு குதிரையில் வந்தார். அப்போது அவரைக் கண்டு பயந்த மிருகங்கள் எல்லாம் ஒரே நோக்கி ஓடின. அங்கு சிவாஜி ஒரு ஆச்சர்யத்தைக் கண்டார். மரத்தடியில் அமர்ந்திருந்த ராமதாசரிடம், அவை அடைக்கலமாகி நின்றன. அவர் முன்னிலையில் புலியும், மானும் கூட அன்பு காட்டி நிற்பதைக் கண்ட சிவாஜிக்கு அவர் சக்தி வாய்ந்த மகான் என்பது புரிந்தது.

கண்ணை மூடியிருந்த ராமதாசர் தியானத்தில் இருந்தார். எனவே சிவாஜி, அவரை எழுப்பாமல் அரண்மனைக்கு வந்துவிட்டார். ஆனால், அவர் மனம் மட்டும் அந்த மகானையே சிந்தித்துக் கொண்டிருந்தது. மறுநாளும் காட்டிற்குப் புறப்பட்டார். காட்டுப் பாதையில் ராமதாசர் எதிரே வந்து கொண்டிருந்தார். சிவாஜியின் கண்களில் கண்ணீர் பெருகியது. காந்தத்தைக் கண்ட இரும்பு போல ராமதாசரால் கவரப்பட்ட சிவாஜி, கரம் கூப்பி வணங்கினார்.  ராமதாசர் சிவாஜியிடம், முதலில் நீராடி வா என்று கட்டளையிட்டார்.   சிவாஜி காட்டாற்றில் நீராடி அங்கிருந்த மலர்களைப் பறித்து மாலை தொடுத்தார். ஒரு தொன்னையில் தண்ணீர் எடுத்துக் கொண்டார்.  ராமதாசரை வலம் வந்து முன் பக்தியுடன் சமர்ப்பித்தார். நீரால் ராமதாசரின் பாதங்களை கழுவினார்.  சுவாமீ! தங்களின்  திருப்பாதங்களை என் சிரசில் வைத்து அனுகிரஹம் செய்யுங்கள்!, என்று வேண்டினர். ராமதாசரும் சிவாஜிக்கு அருள்புரிந்துவிட்டு, எல்லா உயிர்கள் மீதும் அன்பு காட்டு. சாதுக்களை போற்று. ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடி. தினமும் ஆஞ்சநேயரை வணங்கு! என்று கட்டளையிட்டார்.  மன்னர் வீரசிவாஜி  ராமதாசரை குருவாக ஏற்றுக் கொண்ட செய்தி நாடெங்கும்  ரவியது. மக்களும் அவரைத் தரிசிக்க கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.  பக்தியை பரப்பிய ராமதாசர் தன்னுடைய அந்திமகாலம் நெருங்குவதை அறிந்து பக்தர்களுக்குத் தெரிவித்தார். நாடெங்குமிருந்து அவருடைய பக்தர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ராமதாசர் நீராடி துளசிமணி மாலை அணிந்து கொண்டு பத்மாசனமிட்டு ராமதியானத்தில் அமர்ந்தார். ராமர் அவர் முன் காட்சியளித்தார். ஜயரகுவீரா என்று ஜபித்த படியே அவர் உயிர் பிரிந்தது.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 06:34:21 PM
பசித்தாலும் ஆசைப்படாதீர்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_173432000000.jpg&hash=c357d8326205b3353f2d90fea04b6fa21deab1b2)


கான்கள், தானம் கூட பெறுவதைக்கூட மறுத்து விட்டனர் என்கிறதுமகாபாரதம். கஷ்யபர், அத்திரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி, வசிஷ்டர், கவுதமர் என்ற முனிவர்களும், வசிஷ்டரின் மனைவி அருந்ததியும், இவர்களின் வேலைக்காரனான பசுசகன், அவன் மனைவி கண்டையும் பிரம்மலோகத்தை அடைய விரும்பி யாகம் செய்ய முயன்றனர். ஆனால், அந் நேரத்தில் கடும் பஞ்சம் ஏற்படவே, சாப்பாட்டுக்கே பிரச்னையாயிற்று. அந்நேரத்தில், விருஷாதர்ப்பி என்பவன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன், முனிவர்களுக்காக  அமைச்சர் மூலம் அத்திப்பழங்களை கொடுத்து அனுப்பினான். அதை கையில் எடுத்ததுமே அத்திரி கீழே வைத்து விட்டார். அமைச்சரே! பழத்திற்குள் உன் அரசன் தங்கக் காசுகளை வைத்து எங்களை சோதிக்க நினைக்கிறானோ மன்னன்! இதை கொண்டு செல், என்றார். வசிஷ்டர் அமைச்சரிடம், அளவுக்கு மீறி தானம் பெறுபவன் இழிந்த நிலையை அடைவான், என்றார்.

எல்லாருமே, அதைப்பெற மறுக்க அமைச்சர் திரும்பி விட்டார். தனது சன்மானத்தை ஏற்க மறுத்த முனிவர்களைக் கொல்ல ஒரு பூதத்தை ஏவினான். அது யாதுதானி என்ற அரக்கியாக கொல்ல புறப்பட்டது. இந்நேரத்தில், சுனங்சசன் என்ற முனிவரை, ஏழு ரிஷிகளும் சந்தித்தனர். அவர் பருமனாக இருந்தார். வேதம் ஓதுவது உள்ளிட்ட எந்த ஆன்மிகப் பணியும் செய்யாமல், சாப்பிட்டு  கொண்டே இருப்பதால் தான், பருமனாக இருக்கிறார். சரியான சாப்பாட்டு ராமன் என்ற முடிவுக்கு வந்தனர். அவரிடம் தங்களுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டனர்.  சுனங்சசன் ஒரு குளக்கரைக்கு அனுப்பிச் சென்றார். அங்கே, அரக்கி யாதுதானி குளப் பாதுகாப்புக்காக அமர்ந்திருந்தாள். அவளிடம் முனிவர்கள், எங்களுக்கு பசிக்கிறது. இந்தக் குளத்திலுள்ள தாமரைக் கிழங்குகளை எடுக்க அனுமதி கொடு, என்றனர்.யாதுதானியும், முனிவர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பெயருக்குரிய விளக்கத்தைச் சொன்னால், குளத்துக்குள் இறங்க அனுமதிப்பேன், என்றது. முதலில் அத்திரி, நான்தினமும் 3 முறை அத்தியயனம் (மந்திர பாராயணம் அல்லது பிரார்த்தனை) செய்பவன். இரவில் அத்தியயனம் செய்யாமல் தூங்க மாட்டேன். அதனால் என் பெயர் அத்திரியாயிற்று, என்றார்.

இவ்வாறு ஒவ்வொருவரும் அவரவர் பெயருக்கு விளக்கம்அளித்து குளத்தில் இறங்கினர். கடைசியாக சுனங்சசன் அரக்கியிடம் வந்தார். அரக்கியே! என் பெயர் சுனங்சசன்...பெயர் விளக்கம் தெரியாது.. என்று ஆரம்பிக்கவும், யாதுதானி குறுக்கிட்டாள். உங்கள் பெயர் வாயில் நுழையவே மறுக்கிறது. திரும்பச் சொல்லுங்கள், என்றாள். உடனே கோபமடைந்த சுனங்சசன், என் பெயரை ஒரே தடவையில் நினைவில் வைக்காத நீ அழிந்து போ, என்று தன் திரிதண்டத்தை நீட்டினார். யாதுதானி சாம்பலாகி விட்டாள். இதற்குள் மற்ற முனிவர்கள் கிழங்குகளைப் பறித்து வந்து கரையில் கொட்டினர். மீண்டும் நீராட குளத்திற்கு சென்று விட்டு, திரும்ப வந்து பார்த்தபோது கிழங்குகளைக் காணவில்லை.  எல்லா முனிவர்களும் கிழங்கை எடுத்தவருக்கு உலகிலுள்ள அத்தனை கேடு கெட்ட செயல்களின் பாவமும் பிடிக்கட்டும் என்று சாபமிட்டனர். சுனங்சசன் மட்டும், கிழங்கை எடுத்தவருக்கு புண்ணியம் சேரட்டும், என்றார். இதிலிருந்து கிழங்கைத் திருடி சாப்பிட்டது சுனங்சசன் தான் என்ற முடிவுக்கு வந்த முனிவர்கள், நீர் தானே திருடினீர், என்றனர். ஆம்.. என்ற சுனங்சசன், இந்திரனாக மாறி அவர்கள் முன் நின்றார். பசித்த காலத்திலும், ஆசைப்படாத அவர்களைப் பாராட்டி சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்பி வைத்தார். இப்போது சொல்லுங்கள்! பசித்தால் திருடுவது என்பது நியாயம் தானா!
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 06:37:05 PM
தெய்வப் பிறவிகள்(பாம்பன் சுவாமிகள்)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_173221000000.jpg&hash=cf51f493c7367d578973f9ca575c5c84f9df1e22)


ராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பனில் சாத்தப்பன், செங்கமலத்தம்மை தம்பதியருக்கு பிறந்தவர் பாம்பன் சுவாமி. இவரது இளவயது பெயர் அப்பாவு. ஆசிரியர் முனியாண்டியா பிள்ளையிடம் தமிழ் கற்றார். ஒருநாள், பாய்மரப்படகில் சென்றபோது, துறவி ஒருவர்  சிவசிவ என்று ஜெபிப்பதைக் கேட்ட அப்பாவு, தானும்  அந்த மந்திரத்தை ஜெபித்தார். முக்கால் அணாவுக்கு (9 காசு)  கந்தசஷ்டி கவசம் புத்தகம்  வாங்கிப் படித்தார். அந்நூலில் கூறியிருந்தபடி, தினமும் 36முறை பாராயணம் செய்தார். படிப்பை மறந்தார். எந்நேரமும் பக்தியிலேயே மூழ்கிப்  போனார். ஒருநாள் சூரியன் உதய வேளையில் ஒரு தென்னந்தோப்பிற்கு அப்பாவு சென்றார். அங்கே கவிதை எழுதும் ஆர்வம் பிறந்தது. முருகப்பெருமானே! அருணகிரிநாதரைப் போல நானும் உன்னைப் பாடி மகிழ வேண்டும். அடியேனுக்கும் அருள்புரிவாயாக!, என்று கைகுவித்து நின்றார். அப்போது கங்கையைச் சடையிற் பரித்து என்னும் மங்கலத் தொடர்  மனதில் எழுந்தது. அதையே முதலடியாகக் கொண்டு பாடல் எழுதினார். தினமும் காலையில் ஒரு பாடல் எழுதுவார். இப்படியாக நூறு பாடல்கள் முடிந்தன.

ராமேஸ்வரத்திலிருந்து வந்த சேதுமாதவ ஐயர், அப்பாவு எழுதிய ஓலைச்சுவடியைப் படித்தார். அதை வித்வான்  குமாரசாமி பிள்ளையிடம் காட்டி அதிலிருந்த கவிதை நயம், பக்தி ரசத்தைப் பாராட்டினார். சில நாட்களுக்குப் பின் மீண்டும் பாம்பனுக்கு வந்த சேதுமாதவ ஐயர், அப்பாவு! இன்று மாலை என் வீட்டிற்கு வா!, என்று அழைத்துச் சென்றார். மறுநாள் விஜயதசமி. அன்றைய தினம், அப்பாவுவை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் நீராட்டினார். அவரது காதில் ஆறெழுத்தான முருகமந்திரமான சரவணபவ என்பதை உபதேசித்தார். சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளும்படி அன்புக் கட்டளையிட்டார். அன்றுமுதல் அப்பாவு, அந்த மந்திரஜெபத்தில் விருப்பம் கொண்டார்.  சேதுமாதவ ஐயரின் வேண்டுகோளின்படி, மதுரையைச் சேர்ந்த காளிமுத்தம்மையைத் திருமணம் செய்து கொண்டார்.  இரண்டு ஆண், ஒரு பெண்ணுமாக மூன்று  குழந்தைகள் பிறந்தனர்.  அப்பாவு 1891ல் துறவு பூண்டு பழநி செல்ல எண்ணம் கொண்டார். தன் நண்பர் அங்கமுத்துப் பிள்ளையிடம்,  நாளைப் பழநி செல்கிறேன், என்றார். அந்த நண்பர்,  முருகனின் கட்டளையா இது?, என்று கேட்க,ஆம் என்று பொய்யாகத் தலையசைத்தார். அப்போது, முருகப்பெருமான் அப்பாவுவைப் பார்த்து, ஏன் பொய் சொன்னாய் என்று கோபித்தார். உடல் நடுங்கிய அப்பாவு, முருகா! ஆன்மலாபம் கருதி இப்படிச் சொல்லிவிட்டேன், என்றார்.

ஆனால், முருகன் அவரிடம், பழநிக்கு, நான் அழைக்கும் வரை நீ வரக்கூடாது, என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். அப்பாவுவும் ஒப்புக் கொண்டார். வாழ்வின் இறுதிவரை, முருகன் அங்கு அழைக்கவும் இல்லை. பாம்பன் சுவாமி பழநிக்குச் செல்லவும் இல்லை. ஆன்மிகத்தில் பொய் கூடாது என்பதற்கு இந்த நிகழ்ச்சியை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். தந்தை காலமானதும், பாம்பன் சுவாமிக்கு வீட்டுப் பொறுப்பை ஏற்கும் நிலை வந்தது. ஒருநாள் தென்னந்தோப்பிற்குச் செல்லும்போது, காலில் முள் தைத்து ரத்தம் வழிந்தது. வேதனையுடன் முருகனை எண்ணி கண்ணீர் வடித்தார். அன்றிரவு ஒரு தச்சரின் கனவில் முருகன் தோன்றி, பாம்பன் சுவாமிக்கு பாதக்குறடு (காலணி) செய்து கொடுக்க உத்தரவிட்டார். பாம்பன் சுவாமி, உப்பு, புளி,காரம் சேர்க்காமல்  உண்ணத் தொடங்கினார். ஆறுமாதத்தில் உடல் மிகவும் மெலிந்து போனது. இதைக் கண்ட ஒருவன், வாழ்வில் தகாத விஷயங்களைச் செய்தால் உடம்பு இப்படித்தான் இளைத்து போகும், என்று ஏளனம் செய்தான். வைத்தியரின்  ஆலோசனைப்படி உப்பு  சேர்க்க எண்ணினார். ஆனாலும், உப்பு சேர்க்கலாமா? கூடாதா? திருவுளச்சீட்டு போட்டுப்  பார்த்தார். அதில் கூடாது என்று பதில் கிடைக்கவே  எண்ணத்தைக் கைவிட்டார். இதன்பின், ஒரு மாதத்திற்குள் முருகனருளால் மெலிந்த உடல் சீரானது.

இதன்பின், பச்சைப் பயறும், பச்சரிசியும் கலந்த உணவே அவரின்  சாப்பாடானது.  ராமேஸ்வரத்தில் முருகனை வழிபட்டு கவசநூல் ஒன்றை எழுதினார். உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18 ஆக  முப்பதையும் முதல் எழுத்தாகக் கொண்டு சண்முக கவசம்  பாடினார். எழுத்துக்கு ஒரு  பாடலாக இந்நூலில் முப்பது பாடல்கள் அமைந்தன.  பல திருத்தலங்களுக்கு  யாத்திரை சென்றார். காஞ்சிபுரம் சென்ற போது, பணம்  தீர்ந்து விட்டது. அங்கிருந்து ஊர் திரும்ப ஆயத்தமானார்.  அப்போது, இளைஞன் ஒருவன்,  குமரகோட்டத்தைப் பார்க்கவேண்டாமா? என்று சொல்லி அவரைக் கையோடு அழைத்துச் சென்றான். கோயிலில்  கொடிமரம் அருகில் செல்லும்போது, அந்த  இளைஞனைக் காணவில்லை. தன்னுடன்  வந்தது முருகனே என்று அறிந்து ஆனந்தக் கண்ணீர் விட்டார். பாம்பன் அருகிலுள்ள  பிரப்பன்வலசை மயானத்தில் ஒரு குழிக்குள் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார். முருகன் அருள் கிடைக்காமல் அங்கிருந்து எழுவதில்லை என  முடிவெடுத்தார். இடைவிடாமல் ஆறெழுத்து மந்திரம் ஜெபித்தார். 35வது நாள் நள்ளிரவில்  முருகன் தோன்றி  சுவாமிக்குதகராலய  ரகசியம்  என்னும் மந்திர  உபதேசம் செய்தார்.

திருவாதவூர், மதுரை, சிதம்பரம், காசி தலங்களுக்கு யாத்திரை செய்து விட்டு, சென்னையில் தங்கியிருந்தார். அவரது தாயார் இறந்த போன செய்தியறிந்தும் சொந்த ஊருக்குச் செல்லவில்லை. பற்றற்றே வாழ்ந்தார். அன்னை நற்கதி பெற முருகனிடம் வேண்டிக் கொண்டார்.  ஒருநாள் சென்னை தம்புச்செட்டி தெருவில் நடந்து சென்றபோது, குதிரை வண்டி மோதி காலில் முறிவு ஏற்பட்டது.  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வயதாகி விட்டதால் குணமாக வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். சண்முக கவசத்தை பாராயணம் செ#து வந்தார். விபத்து நடந்த 11ம் நாளில் வானில் வண்ணமயில்கள் இரண்டு நடனமாடுவதைக் கண்டு அதிசயித்தார். முருகனருளால்  கால்முறிவும் குணமானது.  வாழ்வின் இறுதியை அடைந்த பாம்பன் சுவாமி  சீடர்களை அழைத்து  சென்னை திருவான்மியூரில் சமாதி அமைக்க கேட்டுக் கொண்டார். அதன்படியே சமாதிஅமைக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டது.  இவர் பாடிய 6666 பாடல்களும் முருகன் அருளை நமக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 06:38:47 PM
பெண்களே.. ஜாக்கிரதை!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_173020000000.jpg&hash=bae3dbc097bad430ece749ca2e30c0b6216d3a17)


காவிரிபூம்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கரிகாற்சோழன் ஆண்டு  வந்தான். வணிகமணி என்பவர் அவ்வூரில் இருந்தார். அவரது மகள் குண்டலகேசி.. அழகுப்பதுமை... அரண்மனை அருகில்  இருந்த பெரிய வீட்டில் குடியிருந்தாள்.  அப்பகுதியில் வணிகம் செய்து வந்த காளன், நஷ்டப்பட்டதால் திருடத் துவங்கினான். கையும், களவுமாக பிடிபட்டான்.  அவனைக் காவலர்கள் கைது செய்து அழைத்து வந்த போது, தனது மாளிகையின் உச்சியில் தோழியருடன் பூப்பந்து ஆடிக்கொண்டிருந்த குண்டலகேசி வேடிக்கை பார்க்க வந்தாள். அவன் ஒரு குற்றவாளியாக இருக்கிறானே என்பது பற்றி கவலைப்படாமல், விதிவசத்தால் காளனிடம் காதல் வசப்பட்டாள். அந்தளவுக்கு அவன் அழகாக இருந்தான். கரிகாற்சோழன் முன் கொண்டு செல்லப்பட்ட காளனுக்கு மரணதண்டனை  விதிக்கப்பட்டு, மறுநாளே தூக்கில் போட உத்தரவிடப்பட்டது.

இதற்குள் தன் தந்தையிடம் தனது காதலை விவரித்தாள் குண்டலகேசி.   ஒரு குற்றவாளியைப் போயா காதலிக்கிறாய்? என தந்தை கடிந்தும், காதல் கண்ணை மறைக்க பிடிவாதம் செய்தாள். வேறு வழியின்றி மன்னனைக் காணச் சென்றார் வணிகமணி.  அவருக்கும் சோழனுக்கும் நல்ல பழக்கமுண்டு. அவரை வரவேற்ற மன்னன், இரவோடு இரவாக வந்துள்ளீர்களே! ஏதேனும் உதவி வேண்டுமா? என்றான். தாங்கள் நான் கேட்பதைத்  தருவீர்களா? என்றதும், என்ன கேட்டாலும் தருகிறேன் என வாக்களித்து விட்டான். தன் நிலையை எடுத்துச் சொல்லி, காளனை விடுவிக்கும்படி வணிகமணி வேண்டினார்.  மன்னனும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற காளனை விடுதலை செய்தான். ஒரு நல்லநாளில் குண்டலகேசிக்கும், காளனுக்கும் திருமணம் நடந்தது. ஏராளமான செல்வம் சீதனமாகக் கொடுக்கப்பட்டது. ஆனாலும், ஆசை விடவில்லை. மேலும் சம்பாதித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. மீண்டும் அவன் திருட்டில் இறங்கினான்.

கணவனைக் குண்டலகேசி கண்டித்தாள். மனைவி தன்னைக் கண்டிப்பது காளனுக்கு பிடிக்கவில்லை.  ஒருநாள் மலை உச்சிக்குப் போய் வரலாம் எனக் கூறி, அவளை அழைத்துச்  சென்றான். அங்கு சென்றதும் அவளைத் தள்ள முயற்சித்தான். அவள் சுதாரித்துக் கொண்டு, இனியவரே! தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஆனால், சாகும் முன் கணவனை வலம் வந்து வணங்கும் பெண்கள் பாக்கியசாலிகள். அதற்கு அனுமதியுங்கள், என்றாள். காளனும் வேண்டாவெறுப்பாய் சம்மதித்தான். இரண்டு முறை வலம் வந்த குண்டலகேசி, மூன்றாம் முறை வலம் வரும்போது மிகவும் விரைவாக தன் கணவனை பாதாளத்தில் தள்ளி விட்டாள். அவன் உயிரிழந்தான். பின்னர் அந்த துரதிர்ஷ்ட சாலிப் பெண், ஆசையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம், என்ற புத்தரின் போதனையை உலகெங்கும் பரப்பி, அவரது திருவடியை எய்தினாள். பெண்கள் காதல் வலையில் விழுவது ஆபத்து. பெற்றோர் சொல் கேட்டு திருமணம்  செய்து கொள்வதே பல வகையிலும் பாதுகாப்பானது.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 06:40:28 PM
அத்திரிபாச்சா ...அத்திரிபாச்சா ...

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_154157000000.jpg&hash=e980061679f163df32c66363fa3013b88af7f9a8)


அந்த ஞாபகமறதி இருக்கே...அது  மனுஷனை பாடாய் படுத்திடும்! ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண்  ஒட்டாது என்று சொல்வதைப் போல.  உலகத்திலேயே, தங்களை ஜாம்பவான்கள் போல் காட்டிக்கொள்ளும் மனிதர்கள் ஞாபக மறதிக்காரர்கள் தான். ஒரு மனுஷன் மாமியார் வீட்டுக்கு தலை  தீபாவளிக்குப் போவதாக இருந்தான். கிளம்புகிற வேளையில், மனைவிக்கு தலைசுற்றல்,  வாந்தி, மயக்கம்... மருத்துவச்சியிடம் கூட்டிப் போனான். அவள் நாடி புடிச்சு பார்த்துட்டு, இது அது சாமியோவ்!  புள்ளைய பத்திரமா பாத்துக்கோ! இப்போ பஸ்சுலே போகக் கூடாது! என்று எச்சரித்து  அனுப்பினாள். மனைவி கர்ப்பமா இருக்கிறது ஒருபுறம்  சந்தோஷம் தான் என்றாலும், தலை தீபாவளி சீர் வாங்குறதை விட முடியுமா என்ன! நான் மட்டும் போயிட்டு வரேன்னு அவன் கிளம்பிட்டான். மகள் கர்ப்பமாக இருக்கிற விபரத்தைக் கேட்டதும், அம்மாகாரிக்கு ஏக மகிழ்ச்சி. மருமகனுக்கு மோதிரம் போட்டா!! பலகாரங்களை அடுக்கித்  தள்ளிட்டா! மாமியார் செஞ்ச ஸ்பெஷல்  கொழுக்கட்டை ஒன்று இவன் மனதில் நின்று விட்டது. அவ்ளோ ருசி!  என் மகள் என்னை விட, இதை நல்லா செய்வா, என்று சர்டிபிகேட் வேறு கொடுத்தாள். மறுநாள் நம்ம ஆள் ஊருக்கு கிளம்பிட்டான்.

வீட்டிற்கு வந்து, மனைவி கையால் அந்த  பலகாரத்தை செஞ்சு சாப்பிடணுங்கிறதுக்காக, மறக்காமல் இருக்க அதன் பெயரைச் சொல்லிக் கொண்டே பஸ்சில் வந்தான். ஒரு இடத்தில் பெரிய பள்ளம்! பஸ் பள்ளத்தில் ஏறி இறங்கவே, ஒரு குலுக்கு குலுக்கியது. அந்த ஆட்டத்தில், பதறிப்போன நம்ம ஆள், அதிர்ச்சியிலே பண்டத்தின் பெயரை மறந்துட்டான்.  அத்தை ஏதோ சொன்னாளே! அத்திரிபாச்சாவோ, கித்திரிபாச்சாவோன்னு! கரெக்ட்...அத்திரிபாச்சா தான்! என அவனாகவே, முடிவு செய்து கொண்டு, வீட்டில் வந்து மனைவியிடம் அத்திரிபாச்சா செய்யுடி என்றான். அவள் விழித்தாள்.  என்னையா உளர்றே! என்றாள். அவனுக்கு கோபம் வந்துட்டு!  ஏய்! புருஷன் ஒரு பலகாரம் கேட்டா அதைச் செய்ய வலிக்கவா செய்யுது!  சோம்பேறிக் கழுதை! ஒழுங்கா சொன்னதை செய்யுடி, என்று கத்தினான். அவள் ஒன்றும் புரியமால் அழுதேவிட்டாள். அடியே! அழவா செய்யுறே! வேலை பார்க்கிறதுக்கு உனக்கு வலிக்குதோ! என்றவன் நையப்புடைத்து விட்டான். அவள் தன் அம்மாக்காரிக்கு தகவல் சொல்லி அனுப்பிவிட்டாள். அம்மாக் காரி பதறிப்போய் ஓடிவந்தாள். மருமகனைப் பார்த்து, அடப்பாவி! ஒரு பிள்ளைத்தாச்சி பொண்ணை இப்படியா அடிப்பே! பாருடா! கொழக்கட்டை கொழக்கட்டையா வீங்கியிருக்கு!.... இப்போது, நம்ம ஆள் துள்ளிக்  குதித்தான். அடியே! அதுதாண்டி! அதைத்தான் அத்திரிபாச்சான்னு மாத்திச் சொல்லிட்டேன். சரி! நான் அடிச்சலே மனசிலே வச்சுக்காதே! போய் கொழுக்கட்டை செய், என்றானே பார்க்கலாம்!
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 06:42:13 PM
கொக்கர கொக்கரக்கோ சேவலே!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_154132000000.jpg&hash=c62473f2e089322d7cfa5c005230dad870db9f25)


கஷ்யப முனிவரின் புத்திரனான சூரபத்மன்  என்னும் அசுரன், விண்ணுலக தேவர்களைக்  கொடுமைப்படுத்தினான். அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். இறைவன், தன் நெற்றிக்  கண்ணில் இருந்து ஆறு நெருப்புப்பொறிகளை உருவாக்கினார். அவை கங்கையில் தவழ்ந்து குழந்தைகளாக மாறின. ஆறுகுழந்தைகளும் இணைந்து கந்தன் என்னும் மாபெரும் சக்தியாக வடிவெடுத்தது.  அன்னை பராசக்தி, தன் சக்தியை ஒன்று திரட்டி அடக்கிய வேல் ஒன்றை மகன் கந்தனிடம் வழங்கினாள். சக்திவேலை ஏந்திய கந்தன் அழகில் மன் மதனையும் மிஞ்சியதால் முருகன் எனப்பட்டான். முருகன் என்றால் அழகன். அவன் சூரனுடன் போருக்குப் புறப்பட்டான். சிறுவா! பால் மணம் மாறாத பாலகனான நீயா என்னுடன் போருக்கு வந்தாய்! போய் விடப்பா! என்று ஆணவத்துடன் கருணையை குழைத்துப் பேசுவது போல சூரபத்மன் சிரித்தான்.

ஆனால், முருகனின் தாக்குதலில் நிலைகுலைந்து போனான். முருகன் வேலாயுதத்தை ஏவிவிட்டார். அக்னிமழையைப் பொழிந்தபடி வேல், சூரனை அழிக்கப் பாய்ந்தது. பயந்து போன சூரபத்மன், ஒரு கடலின் நடுவே பெரிய மாமரமாக உருவெடுத்து நின்றான். அம்மரத்தை முருகனின் வேல் இரண்டு கூறாக பிளந்தது. அதன் ஒருபாதியை சேவலாகவும், மறுபாதியை மயிலாகவும்மாற்றி அருள் புரிந்தார். முருகன். நீலமயிலை வாகனமாக்கிக் கொண்டார். சேவலை கொடியாக ஆக்கிக் கொண்டார். அதிகாலை விடியல் வேளையில் சேவல் கொக்கரக்கோ என்று சொல்லி முருகப்பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும். கொக்கு அறு கோ என்பதைத் தான் சேவல் கொக்கரக்கோ என்று கூவி அழைக்கிறது. கொக்கு என்றால் மாமரம், கொக்கரக்கோ என்பதற்கு மாமரத்தை இருகூறாக்கிய மன்னவனே என்பது பொருளாகும். சேவலைக் காலையில் தரிசித்தால் முருகனின் அருள் கிடைக்கும்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 06:44:33 PM
மாயவன் வந்தான்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_154100000000.jpg&hash=e00edc473f45d67584180ae1bf16ac46ced51244)


அம்மா! தீபாவளி நெருங்குது! இப்போதே பலகாரம் செய்ய ஆரம்பிச்சுடு!   என்றான் மகன்  கண்ணன். கண்ணா! கண்ணா! என அவனை வாய்நிறைய கூப்பிடுவாள் அம்மா. கண்ணன்  என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம்.. ஒரே பிள்ளை...கேட்கவா வேண்டும் செல்லத்துக்கு! அதேநேரம், அம்மா தனக்கு கொடுக்கும் செல்லத்தை கண்ணன் ஒருநாள் கூட தவறாகப் பயன்படுத்தியதே இல்லை. சமர்த்துப்பிள்ளை... பள்ளியில் அவன் தான் பர்ஸ்ட்! அவன் வீடு இருந்த  தெருவிலேயே கிருஷ்ணன் கோயில் ஒன்றும்  இருந்தது. கண்ணனும், அம்மாவும் வசதிப்படும் நாட்களில் எல்லாம் அங்கு செல்வார்கள். அம்மா நெய்யிலேயே பலகாரம் செய்தாள். முறுக்கு, அதிரசம், லட்டு...இத்யாதிகளெல்லாம்  தயாராயின. தீபாவளியன்று காலையில், பலகாரங்களை நைவேத்யம் செய்து, காக்கைச் சிறகினிலே நந்தலாலா, என்ற பாடலை இனிய குரலில் பாடினாள். அன்று விளையாட்டு விழாவிற்குஊர் மக்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அம்மா! பூஜை ஆரம்பிக்கறச்சே  என்னைக் கூப்பிடு, இங்கே விளயாட்டு விழாவை வேடிக்கை பார்த்துண்டிருப்பேன், என சொல்லிவிட்டு, கண்ணன் வெளியே ஓடிவிட்டான்.

பூஜைக்கான எல்லா பணிகளையும் அம்மா முடித்து விட்டு,  கண்ணா! கண்ணா! என அழைத்தாள். விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தவர்கள் போட்ட கூச்சலில், கண்ணனின் காதில் அம்மாவின் சப்தம் விழவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால், எங்கே நிற்கிறான் என்றும் தெரியவில்லை. ஆனால், கண்ணா...கண்ணா! என்று அவள் சப்தமாக அழைத்தது, கோயிலுக்குள் இருக்கிற கிருஷ்ணரின் காதில் விழுந்துவிட்டது. ஐயோ! எனக்கு துவாபரயுகத்தில் தேவகி, யசோதை என்று இரண்டு தாய்கள் இருந்தனர்.  இந்த யுகத்தில் யாருமில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். இதோ! ஒருதாய் என் பெயர் சொல்லி அழைக்கிறாள்.  இதோ வந்துவிட்டேன் அம்மா!  அவளது மகன் கண்ணனின் வடிவிலேயே உள்ளே வந்து விட்டான் கண்ணன். அம்மா அவனை அப்படியே அணைத்துக் கொண்டாள். எங்கே பூஜை நேரத்தில் வராமல் போய்விடுவாயோ என பயந்தேன். வா வணங்கலாம்! என்றாள். நிஜக்கண்ணன் அவள் அருகே நிற்க, சிலைக் கண்ணனுக்கு பூஜை நடந்தது. நைவேத்யம் முடித்து, கண்ணனுக்கு தட்டு நிறைய பலகாரம் அள்ளி வைத்து, ஊட்டினாள் அந்தத்தாய்.  குழந்தை அதை மென்று சாப்பிட்டான்.  இன்னும் வேண்டுமென்றான்! அவள் மேலும்  ஊட்டினாள்.

கொஞ்சம் மட்டுமே மிச்சம்! அத்தனையையும் சாப்பிட்டு விட்டு, அம்மாவுக்கு முத்தமும் கொடுத்து,அம்மா! ரொம்ப ருசி! பாவம் உனக்குத்தான் கொஞ்சமா இருக்கு! என்று பரிதாபப் பட்டுவிட்டு அவன் வெளியேறவும், அவளது மகன் கண்ணன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அம்மா! பூஜை முடித்து விட்டாயா! விளையாட்டைப் பார்த்தவர்கள் போட்ட  கூச்சலில் நீ கூப்பிட்டது கேட்கவில்லை போலும்! சரி சரி... பலகாரங்களைக் கொடு, என்றான். ஏனடா! அவ்வளவையும் நீ தானே சாப்பிட்டாய், என்றாள் தாய் ஆச்சரியத்துடன்! நானா! நான் இப்போது தானே வீட்டுக்குள்ளேயே வருகிறேன், என்றான் மகன்.  அப்படியானால்  வந்தது....அந்த நிமிடம் அவள் கண்முன் நிஜக்கண்ணன் தோன்றினான். என் தெய்வமே! உன் உலகளந்த திருவடி  என் இல்லத்தில் பட்டதா! நரகாசுரனைக் கொன்று, உலகையே ரட்சித்த உன் கைகளா, என் வீட்டு பலகாரத்தை அள்ளி சாப்பிட்டன! அவள்  புளகாங்கிதமடைந்து போனாள். பாத்திரத்தில் இருக்கும் மிச்ச பலகாரங்களை எடுத்து மகனுக்கு கொடுக்க உள்ளே போனாள். ஆச்சரியம்! பாத்திரங்கள் நிறைந் திருந்தது. அவள் வீட்டுக் கண்ணனும் ஆசை தீர சாப்பிட்டு விட்டு, பட்டாசு வெடிக்க கிளம்பினான்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 06:45:59 PM
மாடி வீட்டு ஏழை!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_135654000000.jpg&hash=633fbe7d5dcde8351bd6c73ff13339f0bedddc84)


இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவர்கள் நாட்டில் மிகக்குறைவு. ஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படை எடுத்துச் சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு காட்டைக் கடக்க வேண்டியிருந்தது. அங்கே ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் தனது வெற்றிக்காக ஆசி பெறச்சென்றான். காட்டில் கடும் குளிர் அடித்தது. முனிவரோ, இடையில் மட்டுமே ஆடை உடுத்தியிருந்தார். தியானத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு, தனது மேலாடையை எடுத்துப் போர்த்தினான் அரசன்.  கண்விழித்த முனிவர் அரசனைப் பார்த்தார். யாரப்பா நீ! எதற்காக இங்கே நிற்கிறாய்! முனிவரே! நான் பண்ணைபுரத்தின் அரசன். பக்கத்து நாட்டின் மீது படையெடுத்துச் செல்கிறேன்.

நான் வெற்றி பெற. தங்களிடம் ஆசி பெறவே காத்திருக்கிறேன்,.  சரி...எனக்கு அணிவித்த இந்த மேலாடையை எடுத்துச் செல்,. உங்களுக்கு குளிரும் என்று தானே அணிவித்தேன்!. தேவையில்லை! நான் ஏற்கனவே பணக்காரன். இந்தச் சொத்தையும் சேர்த்து சுமக்க தயாராக  இல்லை. என்னிடம் இதுபோல் பல சால்வைகள் உள்ளன. அதில் ஒன்றைத் தான் கொடுத்தேன். இதை ஏற்பதில் என்ன தயக்கம்! மகனே! உன்னிடம் ஏற்கனவே ஒரு நாடு இருக்கிறது. அது போதாதென்று இன்னொரு நாட்டையும் பிடிக்கச் செல்கிறாய். அப்படியானால், உனக்கு தேவை இருக்கிறது. தேவை உடையவனே ஏழை. அவனுக்கே பொருட்கள் தேவை,. அரசனுக்கு துறவியின் வார்த்தைகள் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. போர் எண்ணத்தைக் கைவிட்டு, நாடு திரும்பினான்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 06:47:21 PM
இறைவனிடம் தப்ப முடியுமா!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_135632000000.jpg&hash=1f0087b1c13e99f31797760f8e0e3b998190d457)


புலி ஒன்றுக்கு கடும் பசி. காட்டாறுஒன்றின் கரையில் நின்ற அது, ஆற்றில் தண்ணீர் குறைவாக வந்ததால், நடுப்பகுதியில் ஒரு மணல்திட்டில் மேய்ந்து கொண்டிருந்த எருமை ஒன்றைப் பிடிக்கச் சென்றது. புலி வருவதை பார்த்த எருமை வேகமாகச் சென்று ஒரு புதர் பகுதியில் மறைந்து கொண்டது. எருமையைக் காணாத புலி, அது வெளியே வரட்டுமே என காத்திருந்தது. எருமை வருவதாகக் காணோம். ஒரு பாறையில் படுத்திருந்தது. அப்போது, ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புலியால் எங்கும் செல்ல முடியவில்லை. திடீரெனக் கண்ணைப் பொத் தியது. இன்று எப்படியும் பட்டினி தான்! இதையே இறைவனை நினைக்கும் விரதமாகக் கருதிக்கொண்டால் என்ன! அது கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தது.

புலியின் சந்தர்ப்பவாதத்தை தோலுரிக்க இறைவன் வந்து விட்டார். காணாமல் போன எருமையின் வடிவில்! வெள்ளத்தில் அந்த எருமை மா...மா.. என கதறியபடியே தத்தளித்து வந்தது. சப்தம் கேட்டு புலி கண்களைத் திறந்தது. ஆகா! தேடி வந்தது கிடைத்து விட்டது என்று. பாறையில் இருந்த படியே எருமையின் கழுத்தைக் கவ்வி இழுத்தது. அங்கே இறைவன் பிரசன்னமானார். புலியே! நீ ஒரு சந்தர்ப்பவாதி. உணவு கிடைக்காவிட்டால் விரதம் இருப்பது போல் நடிக்கிறாய். உணவைக் கண்டதும் விரதத்தை கைவிட்டு விடுகிறாய். நீ சரியான சந்தர்ப்பவாதி. அடுத்த பிறவியில், புலியையும் விட கேவலமான ஜந்தாகப் பிறப்பாய், என சாபமிட்டு மறைந்தார். சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற்போல் மாறுபவன் இறைவனின் தண்டனைக்கு ஆளாவான். அவனது பிறவியின் நிலை தாழ்ந்து கொண்டே போகும்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 06:48:51 PM
கோயில் பக்கம் போங்க!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_135605000000.jpg&hash=a9fe32125178f2761d216c898184a5aeae483f76)


கிராமத்தில் முருகையா, தண்டபாணி என்ற நண்பர்கள் வசித்தனர். அவர்கள் அங்குள்ள முருகன் கோயில் முன்பு மாடு மேய்ப்பது வழக்கம். தண்டபாணி மட்டும் கோயிலுக்கு பிரசாதம் வாங்குவதற்காகப் போவான். முருகையாவோ அதைக் கூட செய்வதில்லை. ஒரு புதன்கிழமை. கோயிலில் கூட்டமில்லை. முருகையா மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பசுக்கன்று திடீரென ஓடி விளையாட ஆரம்பித்தது. சாலையில் போகிற வண்டிகளில் போய் விழுந்து விட்டால், ஆபத்தாகி விடுமே என பயந்த முருகையா, அதைப் பிடித்துக் கட்ட எழுந்தான். அவனது நோக்கத்தைப் புரிந்து கொண்ட கன்று ஓட ஆரம்பித்தது. நேராக கோயிலுக்குள் போய் விட்டது. பிரசாதத்துக்காக கூட கோயிலுக்கு போகாத  முருகையா, அன்று தான் முதன் முதலாக நுழைந்தான். கன்றைப் பிடிக்கப் பாய்ந்தான். அது பிரகாரத்தைச் சுற்றி நாலுகால் பாய்ச்சலில் ஓடியது. முருகையாவும் தன் பலத்தையெல்லாம் திரட்டிப் பாய்ந்தான்.

ஆனால், அது சிக்க வேண்டுமே! உஹும்...11 தடவை பிரகாரத்தைச் சுற்றி முடித்த கன்றைப் பிடிக்க முருகையா அருகில் நெருங்கவும், அது பாய்ந்தோடி கருவறைக்குள் ஓடி முருகனின் பின்னால் நின்று கொண்டது. முருகையா முருகன் முன்னால் நின்றான். உள்ளே போக அவனால் முடியாதே! ஒரு வழியாக ஒளிந்து நின்று, கன்று வெளியே வரவும் அதைப் பிடித்து, நான்கு போடு போட்டு, மந்தைவெளிக்கு வந்து கட்டிப்போட்டான்.
 இதற்குள் சர்க்கரைப் பொங்கலை ஒரு பிடி பிடித்த தண்டபாணி, கோயில் எதிரே உள்ள தீர்த்தக்குளத்தில் கையைக் கழுவினான். கையை உதறிய போது, அதிலுள்ள தீர்த்தம் அவன் தலையில் சிறிதளவு பட்டது. இப்படியே காலமும் போய்விட்டது. அவர்கள் மரணமடைந்தனர். தூதர்கள் எமன் முன்னால் அவர்களை நிறுத்தினர்.  சித்ரகுப்தன் அவர்களின் பாவ புண்ணியக்கணக்கைப் படித்தான். ""தர்மராஜா! இந்த தண்டபாணி  பிரசாதத்துக்காக மட்டுமே முருகன் கோயிலுக்குப் போனவன். அதோ, அந்த தடியன் முருகையா இருக்கிறானே! அவன் அதற்காகக் கூட அந்தப் பக்கம் போனதில்லை. இவர்கள் இருவரையும் நரகத்திற்கு அனுப்பி விடட்டுமா! என்றான்.

தர்மராஜா சிரித்தார். ""சித்ரகுப்தா அவசரப்படாதே! இவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பும்படி முருகப்பெருமான் எனக்கு உத்தரவிட்டுள்ளார். ""ஆச்சரியமாக இருக்கிறதே! இவர்களுக்கா சொர்க்கம்! ""ஆம் சித்ரகுப்தனே! இந்த முருகையா கோயிலுக்கு வழிபாட்டுக்கென வராவிட்டாலும், கன்றுக்குட்டியைப் பிடிக்கிற சாக்கில், 11 தடவை கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தான். கருவறை முன்னாலும் நின்று முருகனையே பார்த்துக் கொண்டிருந்தான். அதோ! அந்த தண்டபாணி இருக்கிறானே! அவன் தினமும் கோயில் குளத்தில் கைகழுவி விட்டு, கையை உதறும்போது தீர்த்தம் தலையில் பட்டதே! அறியாமல் செய்தாலும், அதுவும் புண்ணியச் செயல்களே! அதற்காக கருணாமூர்த்தியான கந்தன், அவர்களை சொர்க்கம் அனுப்பச்சொல்லியுள்ளார், என்றார். பார்த்தீர்களா! விளையாட்டாக கோயிலுக்குப் போனால்  கூட அவர்களுக்கு கடவுள் கருணை காட்டுகிறார். கிராமத்து கோயில்கள் நலிந்து விடக்கூடாது. கிராமமக்கள் தங்கள் ஊர் கோயிலுக்கு அடிக்கடி சென்று இரண்டு கால பூஜையாவது நடக்கும் வகையில் ஏற்பாடு செய்யுங்கள்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 06:50:26 PM
பார்த்தனை காத்த சாரதி!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_130357000000.jpg&hash=96782d41a5d1355b9e29b2128f0b731e8bac0b20)


பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்! அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை-மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும். போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும். தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள். மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும், தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான். அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கவுரவிப்பார்கள்.

குரு÷க்ஷத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது. தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன. மரியாதை விழாச் சடங்குகள் ஆரம்பமாயின. தர்மனுடைய தேரின் முறை முடிந்தபின், பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான். பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கவுரவித்தான் பீமன், மேலும் பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான். வெற்றி கோஷங்கள் வானைப் பிளந்தன.

அடுத்தடுத்து, அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன் யாருக்கும் கிட்டாத மாபெரும் பேறு தனக்குக் கிடைக்கப்போகிறது. பகவான் கிருஷ்ணனே தன்னை வணங்கிப் பாரட்டப் போகிறான் என்று எண்ணி, ஒரு கணம் தன்னை மறந்த நிலையில் இறுமாப்போடு, அந்த அற்புத தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அர்ஜுனன். ஆனால் கண்ணன் தேரைவிட்டு இறங்கவில்லை. அர்ஜுனன் திகைத்தான். பெருமையோ சிறுமையோ பாராது, கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கீதையில் தனக்கு உபதேசித்த கண்ணன், தேர்ப் பாகனுக்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்க வேண்டும் என்று நினைத்தான் அர்ஜுனன்.

அப்போது பகவான் கிருஷ்ணன், அர்ஜுனனின் அறியாமையை எண்ணி நகைத்தார், அர்ஜுனா! இந்தத் தேர் மட்டும் இந்தச் சடங்குக்கு விதிவிலக்கு. முதலில் நீ இறங்கு! என்று கட்டளையிட்டார். கண்ணனின் வார்தையை மீறி அறியாத அர்ஜுனன். அக்கணமே தேரில் இருந்து கீழே இறங்கினன். அதேநேரம், தன் சகோதரர்களுக்குக் கிடைத்த கவுரவம் தனக்கு கிடைக்கவில்லையே என ஒரு கணம் ஏங்கினான். கர்மயோகம் என்ற பகுதியாகக் கடமையைப் பற்றி அத்தனை தத்துவங்களைச் சொன்ன கண்ணன், ஒரு தேர்ப்பாகனாக பணியாற்றுவதற்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்குகிறான்? இதனால் மஹாரதனான எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏன் அவன் எண்ணிப் பார்க்கவில்லை? நான் கண்ணனை என்னுடைய தேர்ப்பாகனாக ஏற்றுக்கொண்டதால்தானே, எல்லோர் முன்னிலையிலும் எனக்கு இந்தச் சிறுமை ஏற்பட்டுள்ளது? என்று எண்ணி, மனம் குமுறினான் அர்ஜுனன்.

அர்ஜுனனின் மனோநிலையைத் தன் ஞானத்தால் அறிந்தார் ஸ்ரீகண்ணன். அடுத்த விநாடியே தேரிலிருந்து கீழே இறங்கினார். அதே விநாடியில், தேர்க் கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகி மறைந்தார். கண்ணன் தேரைவிட்டு இறங்கிய மறுவிநாடியே அர்ஜுனனின் தேர் குபீரென்று தீப்பிடித்து, அக்னி ஜுவாலையுடன் எரிய ஆரம்பித்தது. எல்லோரும் திகிலோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை.

அர்ஜுனா! இந்த பாரத யுத்தத்தில் உன் எதிரிகள் அனைவரின் தாக்குதல்களும் உன் ரதத்தின் மீதுதான் குறிவைத்து நிகழ்த்தப்பட்டன. அவர்கள் போரில் எய்த அஸ்திரங்கள், ஏவிவிட்ட தீய மந்திரங்கள், அனுப்பிய தீய சக்திகள் அத்தனையையும் தடுத்து நிறுத்தி, யுத்தம் முடியும்வரை இந்தத் தேருக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன். நான் சாரதியாக அமர்ந்து கொண்டிருந்தால் தான், இந்தத் தீய சக்திகள் இதுவரை செயலற்றிருந்தன. படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு. இந்தத் தேரின் முடிவு ஏற்படும் தருணம் வந்ததை உணர்ந்தேன். நான் முதலில் இறங்கினால் இந்தத் தீய சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும். அந்த விநாடியே தேர் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகும். என்பதையும் அறிந்தேன். இப்போது புரிகிறதா, நான் முதலில் இறங்கியிருந்தால், நீ இந்தத் தீயில் சிக்கியிருப்பாய். இப்போதும் உன்னைக் காப்பாற்றவே இந்தத் தேரை விதிவிலக்காக்கில உன்னை முதலில் இறங்கச் சொன்னேன்!

தேர்ப்பாகனாகப் பணிபுரிந்த நான் உன்னை வணங்கி, வாழ்த்தி, நீ தரும் சன்மானத்தைப் பெறத்தயங்குவதாக நீ நினைத்தாய். என் எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம்-காரியம் உண்டு என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நீ அறிய வாய்ப்பளித்து இருக்கிறேன். இருந்தாலும் உன்னுடைய சுயகவுரவத்தால் உன் சிந்தனை சற்று நேரம் கலங்கி இருந்தது. அது தவறு. இதோ... உன்னை வணங்க நான் சித்தமாயிருக்கிறேன் என்று நீண்ட விளக்கம் தந்தார் ஸ்ரீகண்ணன்.

அவர் கூறிய கடைசி வார்த்தைகள் அர்ஜுனன் காதில் விழவில்லை. காரணம் அவர் கால்களில் அர்ஜுனன் வேரற்ற மரம் போல் விழுந்து கிடந்தான். அக்கணமே கிருஷ்ண பகவான் வாழ்க என்ற கோஷம் வானைப் பிளந்தது. பார்த்தசாரதியை எல்லோரும் பார்த்தனைக் காத்த சாரதி என்று வாயார வாழ்த்தினார்கள்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணனிடம் இருந்து பகவத்கீதையை நேரடியாகவே உபதேசம் பெற்ற அர்ஜுனனுக்குப் பத்தொன்பதாம் நாளில் இத்தனை அஞ்ஞானம் இருந்தது என்றால்... கீதையை அரைகுறையாகக் கேட்டுவிட்டு அல்லது கீதையின் ஒரு சில வரிகளைப் படித்துவிட்டு, நான் கீதையைப் புரிந்துகொண்ட பரம ஞானி என்று ஒருவன் எண்ணினால், அது எத்தகைய அறியாமை?
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 06:52:44 PM
பேசும் தெய்வம்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_125954000000.jpg&hash=b7644ebc60d7b30032781447e61c5bd0c6350c5f)


ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த திருவிசநல்லூர் பக்திப்பயிர் செழித்த புண்ணிய பூமி. அங்கு வாழ்ந்த வேங்கட சுப்பிரமணிய ஐயர் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குலதெய்வமானவெங்கடேசரோடு,ராமனையும் சேர்த்து வேங்கடராமன் என பெயரிட்டனர். மூன்று வயது வரை குழந்தை பேசவில்லை. பெற்றோர் மனம் வருந்திய நேரத்தில், வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர், இந்தக் குழந்தையிடம் தெய்வீகசக்தி இருக்கிறது. இவன் நிச்சயம்பேசுவான். அதோடு ஒரு மகானாகவும் விளங்குவான், என்றார். திருவிசநல்லூர்அருகிலுள்ளமணஞ்சேரியில் கோபாலசுவாமி என்ற ராம பக்தர் இருந்தார். அவரிடம் குழந்தையை அழைத்துக் கொண்டு சுப்பிரமணியஐயர் சென்றார்.இவனது குறை தீர்க்கும் மருந்து ஒன்று இருக்கிறது என்று சொல்லிய பக்தர், குழந்தையின் வலக்காதில் ராம என்ற மந்திரத்தை ஜெபித்தார். அதைக் கேட்ட வேங்கடராமன் எழுந்தான். பரசவம் அடைந்தவனாய் பேசும் திறன் பெற்றான்.ஏழுவயதில் உபநயனம் செய்து வைக்க ஏற்பாடானது. தந்தைபிரம்மோபதேசம் செய்த போது,மனதிற்குள் ராமதரிசனம் பெற்றான். அந்தக்காட்சி மறைந்ததும்,வேங்கடராமனால் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் சிந்தினான். அன்று முதல்எப்போதும்ராமநாமமே ஜெபித்தான்.

தந்தையைக் குருவாக ஏற்று வேதம், சாஸ்திரம் கற்றான். சங்கீதவித்வானிடம் இசைப்பயிற்சியும் பெற்றான். இசையோடு சேர்ந்த நாம சங்கீர்த்தனமே சிறந்தது என்ற எண்ணம் வேங்கடராமனின் மனதில் வேரூன்றியது. ஜானகி என்ற பெண்மணியை மகனுக்கு பெற்றோர் மணம் செய்து வைத்தனர். ஒருநாள் ராமாயண உபன்யாசத்தில், ராமனைக் காட்டுக்கு அனுப்பாதே! அயோத்தியிலேயே உஞ்சவிருத்தி செய்தாவது இருக்கச் சொல் என்று தசரதரின் வேண்டுகோளைக் கேட்டதும், வேங்கடராமனின் உள்ளம் உருகியது. அன்று முதல் தானும் உஞ்சவிருத்தி செய்து கிடைத்த பொருளைக் கொண்டு வாழ்வு நடத்த எண்ணினார். மக்கள் அவரை சத்குரு சுவாமிகள் என்று அன்போடுஅழைத்தனர். தினமும் லட்சத்து எட்டாயிரம்ராமநாமம் ஜெபித்து வந்தார்.மனைவி ஜானகியுடன் சுவாமி அயோத்திக்கு நடந்தே யாத்திரை புறப்பட்டார். ஆந்திராவில், தாளபாக்கம் கிராமத்தை வந்தடைந்தார்.அங்கிருந்த பாகவதர்களிடம் அன்னமாச்சாரியார் வகுத்த பாகவத சம்பிரதாயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். அங்குஇரவில் தூங்கியபோது கனவில் போதேந்திர சுவாமிகள் என்பவர் தோன்றினார். இவர் நாமசங்கீர்த்தனம் மூலம்பக்தியைப் பரப்பியவர். அவர் சத்குரு சுவாமியிடம், உடனே தமிழகத்திற்கு போ! உன்னால் ஒரு மகத்தான செயல் ஆகவேண்டியிருக்கிறது, என்றார். அந்த சமயத்தில் காவிரியின் நடுவில் அமைந்திருந்த போதேந்திரசுவாமிகளின் அதிஷ்டானம் (சமாதி) மண் மூடி மறைந்து கிடந்தது. அதைக் கண்டுபிடித்து மீண்டும் சீரமைப்பதே தன் கடமை என்பதை உணர்ந்த சுவாமி, அயோத்தி பயணத்தை நிறுத்தி விட்டு தமிழகம் திரும்பினார். பக்தர்களுடன் அதிஷ்டானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டார்.அப்பகுதி மக்களுக்கு இதுபற்றி ஏதும் தெரியவில்லை. அப்போது, கோடைகாலம் என்பதால் காவிரிநதி வறண்டு கிடந்தது. ஒவ்வொரு இடத்திலும் தன் காதை மணலில் வைத்து. எங்காவது நாம சங்கீர்த்தனம் கேட்கிறதா என்று கவனித்தபடி தேடினார்.

ஒரு இடத்தில் பூமியிலிருந்து ராம ராம ராம ராம என்ற திருநாமம் துல்லியமாகக் கேட்பதை உணர்ந்தார். ஆனந்தக்கண்ணீருடன் அங்கே விழுந்து வணங்கினார். தஞ்சை மன்னரின் உதவியுடன் மீண்டும் அங்கொரு அதிஷ்டானம் கட்டினார். அந்த இடமே கோவிந்தபுரம் போதேந்திர சுவாமிகள் அதிஷ்டானமாகத் தற்போது விளங்குகிறது. தஞ்சை மன்னர் கோவிந்தபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குபாகவதபுரம் என பெயரிட்டு மானியம் வழங்க உத்தரவிட்டார். ஒருசமயம், சத்குரு சுவாமிகள், சீடர்களுடன் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு தெருவில் வந்து கொண்டிருந்தார். அழுதபடி வந்த ஒருவர் ஓடிவந்து சுவாமியிடம் மனைவி ஜானகிஅம்மையாரின் மறைவு செய்தியைத்தெரிவித்தார். இதைக் கேட்டு, அவர் அதிர்ச்சிஅடையாமல், தன் மனைவி ஸ்ரீராமன்திருவடியை அடைந்திருப்பாள் என்பதால்,பரவசத்துடன் ராமநாமம் ஜெபித்தபடிநர்த்தனமாடினார். பின், ஒரு துறவியைப் போல தன் வாழ்வை பக்திப்பணிக்கேஅர்ப்பணித்தார்.ஒருநாள் சுவாமி, பாகவதர்களுடன்நாமசங்கீர்த்தனம் செய்தபடி வந்தபோது, திண்ணையில் ஒருவன் கால்நீட்டிப்படுத்திருந்தான். இப்படி மரியாதைக் குறைவாகஇருக்கிறாயே! பாகவதர்களை அவமதிப்பது பாவம். காலை மடக்கிக் கொள்! என்று பக்தர்கள் சொல்ல, நீங்களும் என்னைப் போல மனிதர்கள் தானே! என்று சொல்லிஅலட்சியமாகப் பார்த்தான். அன்று முதல்கடுமையான வயிற்றுவலி அவனுக்குஉண்டானது. பின் மருதாநல்லூர் சுவாமியைத் தேடிச் சென்று தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அவரோ,நீ எனக்கு அபச்சாரம் செய்திருந்தால் மன்னிக்கலாம். ஆனால், நீயோ பாகவத அபச்சாரம் செய்து விட்டாய். உன்னை மன்னிக்கும் சக்தி எனக்கில்லை! என்று மறுத்துவிட்டார். ஆனாலும், அவரின் வழிகாட்டுதல்படி,பாகவதர்களின் பாத தீர்த்தத்தை அருந்தி நோயிலிருந்து மீண்டான். மருதாநல்லூர் மடத்தில்ஒருநாள் சுவாமி தியானத்தில் இருந்தார். அந்த சமயத்தில் சீடர் ஒருவர் அங்கு வந்தார். சுவாமிக்கு அருகில், ராமனும், சீதாபிராட்டியும் அமர்ந்திருந்ததைக் கண்டார். கணப்பொழுதில் ராமனும், சீதையும் அவருள் ஐக்கியமாயினர். இதை கேள்விப்பட்ட ஒருவனுக்கு தானும் இக்காட்சியைக் காண ஆசைஉண்டாயிற்று. அன்றிரவு,மருதாநல்லூர் சுவாமி உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், ஜன்னல்வழியாக எட்டிப் பார்த்தான். கட்டில் மீது ராமனும் சீதையும் ஏகாந்தமாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அப்போது ஏற்பட்ட பேரொளியால் அவன் பார்வை பறி போனது.சுவாமியின் அருளால் மீண்டும் பார்வை பெற்றான். மண்ணில் பிறவி எடுத்த நோக்கத்தைநிறைவேற்றிய சுவாமி, அந்திம காலம்வந்ததை அறிந்தார். சீடர்களை அழைத்து,எனக்கு கடவுளிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது. நீங்கள் அனைவரும்தாரகமந்திரமான ராமநாமத்தை ஜெபியுங்கள்! என்று கூறி ராமனோடு ஐக்கியமானார்.அந்த நாள் சித்திரை வளர்பிறை அஷ்டமி.அப்போது அவருக்கு வயது 41.மருதாநல்லூர் சத்குரு சுவாமிகாட்டிய நல்வழியில்,நாமும் தினமும் ராமநாமம்ஜெபிப்போம்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 06:54:16 PM
பெண்களை மதியுங்கள்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_125912000000.jpg&hash=8f79a2788b81ff13bf97337a007de74937b29c4c)


பெண்கள் நாட்டின் கண்கள். பெண்களை இம்சை செய்யும் எந்த வீடும், நாடும் உருப்படாது. புராணகாலத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது.திதி என்பவள் இறைசிந்தனை மிக்கவள். சிவபார்வதியை வணங்கி வந்தாள். அவள் ஒரு பேரழகி. ஒருநாள்மேகங்களின் தலைவனான இந்திரன் பூலோகம் வந்தான். அவன் அழகிகளைக் கண்டால் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவான். திதி பேரழகுப் பெட்டகம் அல்லவா! இந்திரன் கண்ணில் அவள் பட்டுவிட்டாள்.  அவளை தன்னுடன் தேவலோகம் வரும்படி அழைத்தான். அங்கே பல வசதிகள்இருப்பதாகச் சொல்லி ஆசை காட்டினான். திதிக்கு அவனுடன் செல்ல விருப்பமில்லை.இந்திரா! ஒரு பெண்ணுக்கு வசதிவாய்ப்பை விட, அவள் மனதுக்குப் பிடித்த கணவனே வேண்டும். நீ என் அழகுக்காக ஆசைப்படுகிறாய்.

இந்த அழகு உனக்கு சலித்துவிட்டால், நீ இன்னொரு பெண்ணைத் தேடிப் போய்விடுவாய். கடைசிவரை மனைவியை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளும் நல்லவர்கள் எத்தனையோ பேர் இந்தபூமியில் உள்ளனர். அவர்களில் ஒருவரை என் கணவனாக அடைவதையே நான்விரும்புகிறேன். நீ போய் விடு, என்றாள்.இந்திரன் மீண்டும் வற்புறுத்த அவர்களுக்குள் வாதம் வலுத்தது. கோபத்தில், அவளை தனது வஜ்ராயுதத்தால் ஏழு துண்டுகளாக வெட்டினான். ஆத்திரம் அடங்காததால், அந்த துண்டுகள் ஒவ்வொன்றையும் ஏழாக வெட்டினான். ஆக, 49 துண்டுகள் பூமியில் கிடந்தன.தன் பக்தை வெட்டப்பட்டது கண்டு பார்வதிதேவி துடித்துப் போனாள்.சிவனிடம், அன்பரே! இது என்ன கொடுமை! ஒரு பெண், ஒருவனுடைய ஆசையை நிறைவேற்றாமல் போனால், இப்படியா செய்வது! அதிலும், இந்திரனுக்கு மேகங்களின் தலைவன் என்ற பதவியைக் கொடுத்துள்ளீர்கள். இவன் பெய்விக்கும் மழைத்தண்ணீரை  குடிப்பவர்களுக்கும் இதே குணம் தானே வரும்! நீங்கள் அவனுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில், அந்தப் பெண்ணுக்கு மீண்டும் உயிரூட்டுங்கள், என்றார்.

சிவன் பார்வதியிடம், அவள் விதி அவ்வாறே முடிய வேண்டும் என உள்ளது. எனவே, அப்படி அவள் வாழ்வு முடிந்தது. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. பெண்களை இம்சைசெய்பவர்களும் அதற்கான பலனை அனுபவித்தேதீருவார்கள். இந்திரனால் வெட்டப்பட்ட 49 துண்டுகளும் 49 இளைஞர்களாக எழும். அவர்களுக்கு ஒருவன்தலைவனாக இருப்பான். அவர்களுக்கு தனித்தனி பெயர் இருக்காது. அவர்களைமாருதர் என்று உலகத்தார் அழைப்பார்கள். இந்திரனின் பதவியை அவர்கள் பறித்து விடுவார்கள், என்றார்.அதன்படியே மாருதர் எனப்பட்ட அந்தஇளைஞர்கள் பிறந்தார்கள். தாய், தந்தை யாரென்றே தெரியாமல் வளர்ந்தார்கள். ஆனால், அனைவரும்பலசாலிகளாக இருந்தனர். மேகக்கூட்டத்தை எங்கே கண்டாலும் அவர்கள்பூமியிலிருந்தே ஊதிசின்னாபின்னபடுத்தினார்கள். இந்திரன் ஆத்திரம் கொண்டு அவர்களுடன் போருக்கு வந்தான். அவனைத்தோற்கடித்து, மழைபெய்யும் அதிகாரத்தை அவர்கள் கையில்வைத்துக்கொண்டார்கள்.பதவி இழந்த இந்திரன் கண்டுகொள்வார் யாருமின்றிபோனான்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 06:56:10 PM
திருவாசகம் தந்த திருவருளார்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_171702000000.jpg&hash=30ecbed2d67fe84ab847d63d73931f71b62bec11)


பக்திநிலையில் அரும்பு, பூ, காய், கனி என்னும் நான்கு நிலைகள் உண்டு. இதில் மாணிக்கவாசகரை கனிந்த க்திக்கு எடுத்துக் காட்டாகச் சொல்வர். இவர் பாடிய திருவாசகத்தின் பெருமையை திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்று குறிப்பிடுவர். திருவாசகத்தையும் சிவனையும் வேறுவேறாக பிரித்துப் பார்ப்பதில்லை. திருவாசகத்தின் ஒவ்வொருபாடலிலும் சிவனருள் நிறைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் திருவாசகத்தை மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப் என்ற வெளிநாட்டவர். இதை மொழிபெயர்த்த போது, பக்தியால் அவருக்கு கண்ணீர் பெருகியது. அவர் குறிப்பெடுத்த காகிதகங்கள் அதனால் நனைத்து ஈரமானது.  அம்மையப்பனாக விளங்கும் சிவனைத் தனது தாயாக பல இடங்களில் மாணிக்கவாசகர் போற்றுகிறார். நாயிற் கடையாய் கிடந்த அடியேனுக்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே என்றும் தாயினும் சாலப் பரிந்து பாவியேனுடைய ஊனினை உருக்கியவனே என்றும் போற்றுகிறார்.

மாணிக்கவாசகருக்காக சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பல. இவரது இயற்பெயர் வாதவூரார். அரிமர்த்தன பாண்டியனின் அவையில் அமைச்சராக இருந்தார். திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார்கோயிலுக்கு மாணிக்கவாசகர் சென்றபோது, சிவன் குரு வடிவில் தோன்றினார். மாணிக்கவாசகரை ஆட்கொண்டு மறைந்தார். இதன்பின், சிவசிந்தனையில் மூழ்கிய மாணிக்கவாசகர், சிவப்பணிக்கே தன்னை அர்ப்பணித்தார். அவருக்காக சிவன் நரியைப் பரியாக்கியும், வைகையில் வெள்ளம் பெருகச் செய்தும், பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டும் பல அற்புதங்களை நிகழ்த்தினார்.  சிதம்பரம் வந்த மாணிக்கவாசகர் முன்புநடராஜப் பெருமான், அந்தணர் வடிவில் தோன்றினார், மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல,  ஏடும் எழுத்தாணியும் கொண்டு திருவாசகத்தைஎழுதினார். திருவெம்பாவை பாடலைப் பாடிய போது பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று சிவன் வேண்டினார். அதன்படியே திருச்சிற்றம்பலக்கோவை என்னும்நூலையும் பாடினார்.

சுவடியின் முடிவில், மாணிக்கவாசகன் சொல்ல அழகிய சிற்றம்பலம் உடையான் எழுதியது என்று கையெழுத்திட்டு சிதம்பரம் கோயில் பஞ்சாட்சரப்படியில் வைத்து விட்டு மறைந்தார். காலை பூஜைக்குவந்த தில்லைவாழ் அந்தணர்கள், அந்த ஓலைச்சுவடியைக் கண்டு அதிசயித்தனர். மாணிக்க வாசகரிடம் அப்பாடல்களின் பொருளை விளக்கும் படி வேண்டினர். அம்பலக்கூத்தனே அதன் பொருள் என்ற மாணிக்க வாசகர், நடராஜரின் திருவடியில் கலந்தார்.  ஆண்டுக்கு ஆறுமுறை நடக்கும் நடராஜ அபிஷேகங்களில் மார்கழி திருவாதிரையே சிறப்பானது. அன்று அதிகாலை  சூரியோதய வேளையில் ஆருத்ரா அபிஷேகம் நடக்கும். பழந்தமிழ் நூல்களில் ஆதிரை முதல்வன் என்று சிவன் குறிப்பிடுகின்றனர். திருவாதிரை விழாவின் தினமும் மாலையில் மாணிக்கவாசகர். சுவாமி சந்நிதிக்கு எழுந்தருள்வார். அப்போது திருவெம்பாவை பாடி தீபாராதனை செய்வது வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பு. பரம்பொருளும் பக்தனும் சமம் என்பதை உணர்த்தும் விழாவாக, மார்கழி திருவாதிரை அமைந்துள்ளது.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 06:58:10 PM
அவரால் எல்லாம் முடியும்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_170636000000.jpg&hash=ccd9e8019d0618c201b159e7284ae610ddcfa05f)


மகானிடம் சீடன் ஒருவன், சுவாமி! மனிதனுடைய விருப்பத்தை எல்லாம் கடவுளால் நிறைவேற்ற முடியாது போல் தெரிகிறதே  என்றான். ஏன் அப்படி சொல்கிறாய் . காட்டில் மரம் வெட்டும் விறகுவெட்டி,  எப்போதும் குளிரடிக்க வேண்டும் என்று  கடவுளிடம் வேண்டுகிறான், என்றான் சீடன். நியாயம் தானேப்பா! குளிரடித்தால் தானே வெட்டிய விறகெல்லாம் சீக்கிரம் விற்கும்,.  எப்படி நியாயமாகும் சுவாமி! பழ வியாபாரியோ எப்போதும் வெயில் கொளுத்த வேண்டும் என்றல்லவா நினைக்கிறான் என்றான். அதுவும் நியாயமே! பழங்கள் கெடாமல் இருக்கவேண்டுமானால் வெயில் அடிக்கத் தானே வேண்டும், என்றார்.

சுவாமி! நான் சொல்வதைக் கேளுங்கள்.  விவசாயியோ மழையை வேண்டுகிறான். செங்கல் சூளைக்காரனோ சாரல் கூட விழக்கூடாது. எப்போதும் வெயில் வேண்டும் என்று  நினைக்கிறான். கடவுளே நினைத்தாலும் கூட  எப்படி இவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற  முடியும்?, என்றான். மகான் அவனிடம்,இப்போது வானிலை  எப்படி இருக்கிறது?, என்று கேட்டார்.  வெயில் காய்கிறது சுவாமி,. போனவாரம் எப்படி இருந்தது?,. சுவாமி! செவ்வாய், புதன் கிழமைகளில் மழை பெய்ததால் குளிராக இருந்தது,.  பார்த்தாயா கடவுளின் லீலையை! போன வாரத்தில் மழை,குளிர். இந்த வாரத்தில் வெயில்.  எல்லோரின் விருப்பத்தையும் அவர் நிறைவேற்றி  வைத்ததை நீயே ஒப்புக் கொண்டு விட்டாய்  அல்லவா, என்றார்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 06:59:45 PM


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_170548000000.jpg&hash=f23b03441528c90b19eb42e96148976be5091521)


மகாபாரதத்தை ஸ்லோக வடிவில், வியாசர் சமஸ்கிருதத்தில் எழுதிய காலத்தில் ச என்ற அக்ஷரத்தை (எழுத்து) அதிகமாக பயன்படுத்தியிருந்தார். ஒருமுறை, கவிப்பேரரசர் காளிதாசர் ஒரு காட்டுவழியே சென்றார். வழியில் வியாசர் சிலை இருந்தது. தன் ஆட்காட்டி விரலை சிலையின் தொப்புளுக்குள் விட்டு குடைந்தபடியே. நீர் பெரிய சகாரப் பிரியராச்சே! உம்மைப் போய் பெரிய கவிஞன் என்கிறார்களே! ச இல்லாமல் உம்மால்
ஒரு ஸ்லோகம் எழுதி விட முடியுமா என்ன! என்று கேலியாகக் கேட்டார். அவ்வளவு தான்! தொப்புளுக்குள் சிக்கிய விரல் வெளியே வரவில்லை. சிலை பேசியது. ஆம்...சிலைக்குள் இருந்து வியாசரே பேசினார்.

அடேய் புத்திசாலி! ச இல்லாமல் நீ ஒரு ஸ்லோகம் சொல்லு, அப்படியானால் தான் விரல் விடுபடும், என்றார். இதென்ன பிரமாதம்...சொல்கிறேன், என ஆரம்பித்தவரை தடுத்த வியாசர், ஏற்கனவே நீ மனதில் தயாராய் வைத்துள்ளதை ஏற்கமாட்டேன். நான் சொல்லும் விஷயத்துக்கேற்ற  ஸ்லோகம் சொல் பார்க்கலாம், என்றவர்,  திரவுபதிக்கு பஞ்சபாண்டவர்கள் எவ்வெப்போது என்னென்ன முறை ஆக வேண்டும், சொல் பார்க்கலாம், எனக் கேட்டார். காளிதாசர் படுவேகமாக ஒரு ஸ்லோகத்தைச் சொன்னார். விரல் விடுபட்டது. வியாசர் அவர் முன் தோன்றி, நான் பாரதத்துக்காக ஒரு  லட்சம் ஸ்லோகம் எழுதினேன். எழுதியவர்  மகாகணபதி. ஆனால், இப்போது நீ சொன்னது போல, பாரதத்தில் ஒரு ஸ்லோகம் கூட அழகாக வரவில்லை, என்று பாராட்டினார். வியாசரையும் விட சிறந்த கவிஞர்  காளிதாசர் என்பது இதிலிருந்து  தெரிகிற விஷயம்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 07:01:24 PM
பரதன்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_170505000000.jpg&hash=7e341d7ee5be87f7316f60514febf6de1af7f3e2)


பூனைக்குட்டியிடம் நம் குழந்தை விளையாடினால் கூட, டேய் பார்த்து...கையை  கடிச்சுட போகுது, என்று எச்சரிக்கை செய்கிறோம். ஆனால், நம் பாரத தேசத்துக்கு அந்தப்பெயர் வரக்காரணமாக இருந்த அந்தச் சிறுவன் சிங்கக் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, ஒரு மகாராஜா... அங்கு வந்தார்.  அவரது பெயர் துஷ்யந்தன். துர்வாச முனிவரின் சாபத்தால், தன் மனைவி யாரென்று தெரியாமல் நினைவை இழந்தவர். கண்வமகரிஷியின் வளர்ப்பு பெண்ணான சகுந்தலையை மணம் செய்தவர். மாபெரும் வீரர். அசுரர்களுடன்  போர் வரும் காலங்களில், அவரையும் உடனழைத்துச் செல்வான் தேவேந்திரன். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவர் அன்று, காட்டுவழியே விமானம்  ஒன்றில் வந்த போது, சிங்கக்குட்டியுடன் விளையாடும் சிறுவனைக் கண்டார். ஆகா! எனக்கு வீரன் என்ற பட்டம் இருப்பதே தவறு. நான் பகைவர்களைத் தோற்கடித்திருக்கிறேன். ஆனால், இந்தச் சிறுவனைப் போல சிங்கத்துடன் விளையாடும் அளவுக்கு தைரியம் பெற்றிருக்கவில்லையே! இவன் யார்! விசாரித்து செல்லலாமே!
விமானம் தரை இறங்கியது.

தம்பி! நீ யார்! சிங்கத்துடன்  விளையாடுகிறாயே! பயமாக  இல்லையா! சிறுவன் கலகலவென சிரித்தான். நாம் மனிதர்கள். சிங்கத்தை விட  ஓரறிவு அதிகமுள்ளவர்கள். நாம்  பயப்படலாமா? சிறுவனின் பதில்  மகாராஜாவை சிந்திக்க வைத்தது.  இவன் வீரன் மட்டுமல்ல,  புத்திசாலியும் கூட...யார் பெற்ற  பிள்ளையோ! அவர்கள் கொடுத்து  வைத்தவர்கள். அப்போது சலங்கை  சத்தம் பலமாகக் கேட்டது. சில பெண்கள் ஒரு சேர  வந்தார்கள். பரதா! கிளம்பு!  முனிவர் மரீசி உன்னை அழைக்கிறார்,. ஆம்...அவனது பெயர் பரதன். சற்று பொறுத்து  வருகிறேன். ஆமாம்... அம்மா  எங்கே? அன்னையார் நீராடச் சென்றுள்ளார். சற்று  நேரத்தில் வந்து விடுவார்... என்றவர்கள் அவனது கையைக் கவனித்தனர். பரதா! உன் கையில் கட்டியிருந்த ரøக்ஷ (மந்திரக்கயிறு) எங்கே?சிறுவனும் அப்போது தான் கவனித்தான்.  ஐயையோ! அதை எப்படியாவது தேடிப்பிடியுங்கள். ரøக்ஷயைத் தொலைத்தால், முனிவர் என்னைத் தொலைத்து விடுவார்,.

சிறுவன் பதட்டத்துடன் அங்கும் இங்கும் தேடினான். பணிப்பெண்களும் தேடினர். மன்னர் இதைக் கவனித்து, அவரும் தேடத் துவங்கினார். ஒரு செடியின் அடியில் கிடந்த ரøக்ஷயை எடுத்து பெண்களிடம் நீட்டி, இதுவா பாருங்கள், என்றனர். அந்தப்பெண்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். ஐயா! தாங்கள் யார்? இந்தக் கயிறை இந்தச் சிறுவனின் தந்தையும், தாயும் தவிர மற்றவர்கள் தொட்டால் பாம்பாகி விடும் என முனிவர் சொல்லியிருக்கிறார். அப்படியானால், நீங்கள் இவனது தந்தையா? இதற்குள் அவனது தாய் அங்கு  வர, ராஜா அதிர்ச்சியுடன் பார்த்தார். சகுந்தலா...அவளும் அதிர்ச்சியுடன் அவனை அணைத்துக்  கொண்டாள். சில ஆண்டுகளுக்கு முன் என்னைப் பார்த்த போது, நீ யாரென்றே தெரியவில்லை என்றீர்கள். இப்போது நினைவு வந்து விட்டதா? துர்வாசரின் சாபத்தால் ஏற்பட்ட விளைவுகளை சகுந்தலாவிடம் விளக்கினார். அந்த ராஜா தான் துஷ்யந்தன்.  அவருக்கும் சகுந்தலைக்கும் பிறந்த  வீரத்திருமகனான பரதனே  நம் ஆண்டை ஆண்ட மாபெரும் சக்கரவர்த்தி.  அவரது பெயரால் தான் நம் தாய்த்திருநாடு பாரதம் எனப்படுகிறது.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 07:03:19 PM
பேசும் தெய்வம்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_170417000000.jpg&hash=34fc7d50d25343797bb767d8be8ae7d90bf878eb)


மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன திருவிழா கொண்டாடப்படுவது, இந்த பூலோகத்தில் பிறந்த ஒரு தெய்வப் பெண்மணியின் தியாகத்திற்காக என்பது உங்களுக்குத் தெரியுமா!  சோழநாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தில் சாதுவன் என்ற வியாபாரி இருந்தார். பெரிய பணக்காரர். அவரது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், அவ்வூரில் நடந்த நாடகத்திற்குச் சென்றார். நாடகத்தில் நடித்த நடிகையைச் சந்தித்தார். அவளது அழகு, ஆடல், பாடலில் மயங்கி காதல் கொண்டார். அவள் வீட்டிற்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார். நடிகையோ, சாதுவனைவிட அவர் வைத்திருந்த பொருள்மீது ஆசை வைத்திருந்தாள். வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் தனக்கு தரும்படி கேட்டாள். சாதுவனும் கொடுத்து விட்டார். பொருள் கிடைத்ததும் அவரை விட்டுச் சென்றுவிட்டாள்.  தன் மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான் தனக்கு இந்த கதி ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன் வீட்டிற்குக் போகவில்லை. மீண்டும் சம்பாதிக்கத்  திட்டமிட்டார். அப்போது, வங்கதேசத்தில் இருந்து வியாபாரிகள் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர்.

அவர்களைச் சந்தித்த சாதுவன், தனக்குத் தெரிந்த வியாபார நுட்பத்தையெல்லாம் எடுத்துச் சொன்னார். அதைக் கேட்டதும் அவர்களுக்கு சாதுவனைப் பிடித்துப் போனது. தங்களுடன் சாதுவனைப் பாய்மரக்கப்பலில் அழைத்துச் சென்றனர்.  கப்பல் சென்று கொண்டிருந்தபோது, இரவு வேளையில் பயங்கரப் புயல் அடித்தது. கப்பல் கவிழ்ந்து விடும் நிலைமையில் அனைவரும் இறைவனை வழிபட்டனர். மனைவிக்குக் கூட தெரியாமல் வந்த சாதுவனுக்கு அவள் நினைவு எழுந்தது. இழந்த பொருளை எல்லாம் மீட்டபிறகு அவளைச் சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் தான் சாதுவன் அவளிடம் சொல்லாமல் வந்துவிட்டார். ஒரு வேளை கப்பல் கவிழ்ந்து இறந்து போனால் மனைவியிடம் தனக்கு உண்டான கெட்டபெயர் அப்படியே நிலைத்து நின்று விடுமே என வருந்தினார். புயலோ நின்றபாடில்லை. கப்பல் கடலில் மூழ்கி விட்டது. கடலில் விழுந்த வியாபாரிகளை முதலைகள் விழுங்கி விட்டன. அதிர்ஷ்டவசமாக அவை சாதுவனை ஒன்றும் செய்யவில்லை. அவர் உடைந்த கப்பலின் பலகை ஒன்றின் மீதேறி படுத்துக் கொண்டார். தனக்கு துரோகம் செய்தவர் என்றாலும் கூட, கணவன் எந்த இடத்தில் இருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று தினமும் வேண்டிக் கொள்வது ஆதிரையின் வழக்கம்.

அவளது பிரார்த்தனைக்கும், கணவர் திருந்திவிடுவார் என்று பொறுமையுடன் காத்திருந்ததற்கும் பலனாக, சாதுவன் படுத்திருந்த பலகை பாதுகாப்பாக கரையில் ஒதுங்கியது.  ஒருநாள், சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில் மூழ்கியதும் செய்தி ஆதிரையை எட்டியது. தன் கணவர் இறந்துவிட்டார் என முடிவு செய்த ஆதிரை கலங்கிப் போனாள். இதயமே வெடித்துவிட்ட நிலையில், மயானத்திற்குச் சென்று தீ மூட்டி உயிர் துறக்க முடிவெடுத்தாள். இறைவா! அடுத்த பிறவியிலும் அவரே என் கணவராக வரவேண்டும், என்று வேண்டியபடி தீயில் குதித்தாள்.  ஆனால், அந்தக் கற்புக்கரசியை அக்னிதேவன் சுடவில்லை. அவளுடைய கற்புத்தீ தான் எரியும் அக்னிதேவனைச் சுட்டது. அவள்  உயிருடன் மீண்டாள். நெருப்பில் குதித்தும் உயிர் போகாததால், ஆதிரைக்கு வருத்தம் உண்டானது. அப்போது வானில் அசரீரி ஒலித்தது. ஆதிரையே! கவலை வேண்டாம்! உன் கணவர் மீண்டும் வருவார், என்றது. ஆதிரை மகிழ்ந்தாள். இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவனை அந்நாட்டு அரசரிடம் காவலர்கள் ஒப்படைத்தனர். அவரிடம் தன் கதையை சாதுவன் எடுத்துச் சொன்னான். அரசர் உண்ணக் கொடுத்த மாமிசம், கள் ஆகியவற்றை சாதுவன் ஏற்றுக் கொள்ளவில்லை.  அரசர் சாதுவனிடம், நாம் மகிழ்ச்சியுடன் இருக்கத்தான் கடவுள் மதுவையும், மாமிசத்தையும் படைத்திருக்கிறார். அப்படி இருந்தும் ஏன் சாப்பிட மறுக்கிறாய்?, என்று கேட்டார்.  சாதுவன் அவரிடம், அரசே! நான் ஏற்கனவே மது, மாது, மாமிசத்திடம் சிக்கிச் சீரழிந்தவன். இனி, நான் மாமிசம் உண்பதாக இல்லை. மனதை மயக்கும் கள்ளும் குடிக்கமாட்டேன். இலை, காய்கறி, கனிவகை, தானியம், கிழங்கு ஆகிய உணவுகளை கடவுள் நமக்கு தாராளமாக வழங்கியுள்ளார். இந்தபிறவியில் ஒரு ஆட்டைக் கொன்றால் அந்த ஆடு அடுத்த பிறவியில் நம்மைக் கொல்லும்! கள் குடிப்பதால் சண்டைகள் உருவாகி அது கொலையில் முடியும். நாமும் அடுத்தபிறவியில், அதே கொலைகாரனால் கொல்லப் படுவோம். இந்த பிறவி நீடிப்பதை விரும்பவில்லை, என்றான்.  இதைக்கேட்ட மன்னர் மனம் திருந்தினார். சாதுவனை காவிரிப் பூம்பட்டினம் கிளம்பிய ஒரு கப்பலில் அனுப்பி வைத்தார். ஆதிரையிடம் மன்னிப்பு கேட்டு, அவளுடன் பலகாலம் வாழ்ந்தார் சாதுவன்.  கற்புக்கரசியான ஆதிரையே  நட்சத்திரமாக வான மண்டலத்தில் மிளிர்கிறாள். அவளது கற்பின் பெருமையை மெச்சியே, அந்த நட்சத்திரத்திற்கு திரு என்ற அடைமொழியும் சேர்க்கப்பட்டு திருவாதிரை என வழங்கப்படுகிறது.  அம்மையப்பனாகிய சிவபெருமானும் ஆதிரைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அதை தனது சொந்த நட்சத்திரமாக ஏற்றார்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 07:05:21 PM
வியாக்ரபாதர்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_170335000000.jpg&hash=7b4527e102f8ba2436a2aaf55a7a2dd628db3087)


மத்யந்தனர் என்ற முனிவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மழன் எனப் பெயர் சூட்டி, வேதங்களைக் கற்றுக் கொடுத்தார்.ஒருமுறை மழன், தந்தையே! இறைவனை அடைய வழி தவம் செய்வது தானே!, என்று கேட்டான்.மகனே! தவம் செய்வதால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால், பிறவியில்லாத நிலை ஏற்படாது. சிவபூஜையைப் பக்தியுடன் செய்பவர்களே மறுபிறவி எடுப்பதில்லை. நீ தில்லைமரங்கள் அடர்ந்த வனத்தில் இருக்கும் சிவனை வழிபட்டால் உனக்கு நற்கதி கிடைக்கும், என்றார்.மழன் அன்றுமுதல் சிவனையே நினைத்து எதையும் செய்தான். அவனை, மழமுனிவர் என மற்ற முனிவர்கள் அழைத்தனர்.மழமுனிவர் சிவபூஜை செய்வதற்கு தில்லைவனம் வந்து சேர்ந்தார். தினமும் பூப்பறித்து அர்ச்சனை செய்வார். சில சமயங்களில் அழுகல் பூக்களும் சேர்ந்து வந்து விடும். அதனை எண்ணி வேதனைப்படுவார்.  சிவனே! அழுகிய மலர்களால் உம்மை அர்ச்சித்தால் பாவம் வந்து விடுமே! விடிந்த பிறகு மலர் பறித்தாலோ, வண்டுகள் தேன் குடிக்க வந்து எச்சில்பட்டு விடுகிறது.

விடியும் முன் பறிக்க எண்ணி மரம் ஏறினாலோ கால் வழுக்குகிறது. இருட்டில் மலர் பறித்தால் கண் தெரியாமல் அரும்பையும், அழுகலையும் பறித்து விடுகிறேன். நல்ல பூக்களை மட்டும் பறிக்க நீ தான் வழிகாட்ட வேண்டும், என்று வேண்டிக் கொண்டார். பக்தனின் கோரிக்கையை ஏற்ற சிவன் அவர் முன் தோன்றினார். அதைக் கண்ட மழமுனிவர் பரவசம் அடைந்து,எனக்கு வாழ்வில் எந்த சுகமும் வேண்டாம். உன்னைக் காலம் முழுவதும் பூக்களால் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும். வழுக்காமல் மரம் ஏற புலியின் கால்களைத் தரவேண்டும். கைவிரல்கள் புலி நகமாய் மாற வேண்டும். இதைத் தந்தால் எளிதாக மரம் ஏறமுடியும். அது மட்டுமல்ல! கால்களிலும், விரல்களிலும் கண்கள் இருந்தால் நல்ல மலர்களை மட்டும் பறிப்பேன். அவற்றையும் தர வேண்டும் என்று வேண்டினார்.சிவனும் அந்த வரத்தை வழங்கினார். புலியை சமஸ்கிருதத்தில்வியாக்ரம் என்பர். இதனால், மழமுனிவர் வியாக்ரபாதர் என்னும் பெயர் பெற்றார்.

சிவதரிசனம் மூலம் அரிய வரம் பெற்ற அவரை அனைவரும் பாராட்டினர்.ஒருசமயம், வைகுண்டத்தில் விஷ்ணுவின் பாரத்தை திடீரென தாங்க முடியாமல் ஆதிசேஷன் அவதிப்பட்டார். இதற்கான காரணத்தைக் கேட்ட போது, ஆதிசேஷா! பூலோகத்திலுள்ள தில்லை வனத்தில் சிவனின் நடனக்காட்சியைப் பார்த்தேன். அந்த மகிழ்ச்சியில் என் உடல் பூரித்தது. அதனால் பாரம் அதிகமானது, என்றார்.அந்தக்காட்சியைக் காண ஆதிசேஷன் விருப்பம் கொண்டார். விஷ்ணுவும் அனுமதித்தார். பூலோகத்தில் பிறக்க வேண்டுமானால் ஒரு தாய் தந்தை வேண்டுமல்லவா! தங்களுக்கு ஆதிசேஷன் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என்று அத்திரி மகரிஷியும், அவர் மனைவி அனுசூயாவும் விஷ்ணுவிடம் வரம் பெற்றிருந்தனர். அந்த தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு பதஞ்சலி என்னும் பெயரிடப்பட்டது. வியாக்ரபாதர் தவம் செய்யும் வனத்திற்குச் சென்று அவரைச் சந்தித்த பதஞ்சலி, சிவனின் நடனத்தைக் காணும் ஆவலைத் தெரிவித்தார். இருவரும், சிவபெருமான் நடனதரிசனம் தரும் நன்னாளுக்காகக் காத்திருந்தனர். மார்கழி திருவாதிரையன்று பேரொளி ஒன்று அவர்கள் கண் முன் விரிந்தது. நந்திகேஸ்வரருடன் கருணையே வடிவான சிவன் எழுந்தருளினார். உமையவள் சிவகாமி இறைவனின் அருகில் நின்றாள். அப்போது சிவன் ஆனந்த நடனம் ஆடினர். வியாக்ரபாதரும், பதஞ்சலியும் ஈசனின் திருநடனம் கண்டு மகிழ்ந்தனர். நடராஜா என்று போற்றி மகிழ்ந்தனர்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 07:08:05 PM
எந்த நிலையிலும் இறைவனை நம்பு!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_172554000000.jpg&hash=2dc72d5da85bb94fee6702d005efeda2af8a5de2)


திருமாலும், லட்சுமியும் ஆதி சேஷனின் மீது அமர்ந்து சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.  கலியுகத்தில்  மனிதன் எப்படியிருப்பான் என்பது பற்றிய பேச்சு அது. திடீரென  திருமால் எழுந்தார். கருடன் கணப் பொழுதில் அவர் முன் வந்து நின்று, சுவாமி ஏறுங்கள் என்றான். அவர் எங்கு போகிறார் எனத்தெரியாவிட்டாலும், தன் மேல் அவர் ஏறியதும், அதுபற்றிய விபரம் கேட்டு, அங்கே வேகமாகப் போய் நிற்பது கருடனின் வழக்கம்.  பெருமாளும் கருடன் மேல் ஏறி, அதோ! வண்ணத்துணிகள் காய வைக்கப்பட்டுள்ள அந்த ஆற்றங்கரைக்குப் போ, என்றார். கருடன் அதை நோக்கிப் பறக்கவும், வேண்டாம்... வைகுண்டத்துக்கே திரும்பி விடு, என்றார். கருடனும் வைகுண்டத்தில் அவரை இறக்கி விட்டான்.

அவரைப் பார்த்த லட்சுமி,சுவாமி! பேச்சைக் கூட பாதியில் விட்டு விட்டு, என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல்  அவசரமாகக் கிளம்பினீர்கள்! இப்போது, திரும்பி விட்டீர்களே! என்றாள். திருமால் சிரித்தபடியே, லட்சுமி! ஒரு இளைஞன் என் திருநாமத்தை உச்சரித்த படியே ஆற்றங்கரையோரமாக நடந்து சென்றான். கவனக்குறைவாக, வழியில் சலவைத் தொழிலாளி ஒருவன் காயப்போடப்பட்டிருந்த ஒரு சேலையை மிதித்து விட்டான். அதைப் பார்த்த தொழிலாளி ஆத்திரத்தில் அவனை விரட்டினான்.  நான் அவனைக் காப்பாற்ற புறப்பட்டேன். ஓடிய இளைஞன், என் திருநாமம் சொல்வதை விட்டு விட்டு வழியில் கிடந்த கல்லை எடுத்து, சலவைத் தொழிலாளி மீது எறிவதற்கு ஓங்கினான். ஆகா! இனி என் உதவி அவனுக்கு தேவையில்லை என திரும்பி விட்டேன், என்றார். எந்த நிலையிலும் இறைசிந்தனையுடன் இருப்பவனையே இறைவனுக்குப் பிடிக்கும்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 07:10:16 PM
அபகரித்தால் அம்பேல் தான்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_172520000000.jpg&hash=a4469967e6cd6d3f9fc930428ceb8806cfff5935)


மக்களை ஏமாற்றி சம்பாதிப்பவர்கள், சகோதர பிரச்னையில் சொத்தை அபகரிப்பவர்கள், அடுத்தவரை மிரட்டி பொருளைப் பறிப்பவர்கள்...யாரானாலும் பறித்த சொத்து நிலைக்காது. இதோ ஒரு சம்பவம். கலிங்கநாட்டை ஆட்சி  செய்த வாகுலனுக்கு இன்ப  முகன், நண்பமுகன் என்ற பிள்ளைகள். தன் மறைவுக்குப் பின், மூத்தவன் இன்பமுகன் ஆட்சி நடத்த வேண்டுமென்றும், அவனுக்குப் பின் இளையவன் ஆட்சி செய்ய வேண்டுமென்றும் எழுதி வைத்தான். ஒப்பந்தத்தை எழுதியது மற்றவர்களுக்கு  தெரியாது. அன்றிரவே, வாகுலன் இறந்து விட, ஒப்பந்தத்தை இன்பமுகன் எரித்து விட்டான். தனக்குப் பின் தன் மகன் நாடாள வேண்டுமென்பது அவன் விருப்பம். தம்பி நண்பமுகனுக்கு பல தொல்லைகள் கொடுத்தான். இதையறிந்த நண்பமுகன் மனம் வெறுத்தான்.

சொந்த  சகோதரனே, தனக்கு துரோகம் செய்ததைப் பொறுக்க மாட்டாமல், அரண்மனையை விட்டு வெளியேறினான். காலம் வரும் வரை காத்திருக்க முடிவு செய்தான். அவந்தி தேசத்துக்கு சென்றான். அங்கே, தன்னை இளவரசனாகக் காட்டிக் கொள்ளாமல், போர்ப்பயிற்சி தரும் ஆசிரியராகக் காட்டிக் கொண்டான். அந்நாட்டு மன்னன் இளங்கோவன், அவனது திறமை பற்றி கேள்விப்பட்டு, தன் அந்தரங்க பாதுகாவலனாக நியமித்துக் கொண்டான். இளங்கோவனின் மகள் சுந்தரி, பெயருக்கேற்றாற் போல்  பேரழகி. கட்டிளங்காளையான நண்பமுகன் மீது அவளுக்கு காதல். அவனைத் திருமணம் செய்ய விரும்பி, தந்தையிடம் விருப்பத்தை வெளிப்படுத்தினாள். மகளே! மன்னாதி மன்னர்களெல்லாம் உன்னை மணக்க போட்டியிடுகின்றனர். நீ சாதாரண வீரனை விரும்புகிறாயே! உலகம் என்னை மதிக்குமா? என்றான். அப்பா! நீங்கள் வாள்சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதில் என்னை மணக்க விரும்புவோர் பங்கேற்கட்டும்.

வெற்றி பெறுபவருக்கு, என்னை மணம் முடித்துக் கொடுத்து, நம் நாட்டின் மன்னனாகவும் ஆகலாம் என அறிவியுங்கள். நண்பமுகன் நிச்சயம் வெல்வார் என்று நம்புகிறேன், என்றாள். மாபெரும் மன்னர்கள்  முன்னால் நண்பமுகன் தூசாகி விடுவான். யாரோ ஒரு மன்னன் தான் வெற்றி பெறப் போகிறான்! அவனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்து விடலாம் என இளங்கோவன் கணக்கு  போட்டான்.  ஆனால், போட்டியில்  நண்பமுகன் வென்றான்.  இளங்கோவன் நண்பமுகனிடம், உண்மையைச் சொல், ஒரு வீரனால் இங்குள்ள மன்னர்களை ஜெயிக்க முடியாது. நீ யார்? என்று கேட்டான்.  தான் கலிங்கதேச இளவரசன் என்றும், நடந்த விபரங்களையும் அவன் கூறவே, போட்டிக்கு வந்த அரசர்கள் எல்லாரும் அவனுக்கு நண்பர்களாயினர். எல்லாருமாக இணைந்து கலிங்கத்திற்கு  வந்தனர். இன்பமுகனை  விரட்டியடித்து விட்டு, நண்பமுகனை கலிங்கத்தின் ராஜா வாக்கினர். ஒன்றுக்கு இரண்டாக, கலிங்கத்தையும், அவந்தியையும் இணைத்துஅவன்  அரசாண்டான். அடுத்தவர்  சொத்தைப் பறிப்பவர்கள், அதை  அனுபவிக்கும் பாக்கியமில்லாமல் போய் விடுவார்கள்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 07:12:32 PM
அவன் இப்போது இல்லை!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_172444000000.jpg&hash=07727711641332fb9a0e2a6401c81a8ea18ca5df)


ஒரு ராஜா கொடுங்கோலாட்சி செய்தான். கண்டபடி வரிவிதித்து கசக்கிப் பிழிந்தான். விரும்பிய பெண்களை அந்தப்புரத்தில் அடைத்து வைத்தான். இவன் செத்து தொலைய மாட்டானா என்று மக்கள் இறைவனிடம்  பிரார்த்திக்க ஆரம்பித்து விட்டனர். ஒருநாள், ஒரு மகான் அவ்வூருக்கு வந்தார். அவரிடம் மக்கள் தங்கள் கஷ்டத்தைச்  சொன்னார்கள். மகான் அவர்களிடம்,நான் மன்னனை நேரில் சந்தித்து அவனுக்கு  அறிவுரை சொல்கிறேன், நல்லதே நடக்கும், மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள், என்று சொல்லி தேற்றினார்.

அரசவைக்கு சென்ற அவரை மன்னன் எழுந்து நின்று கூட வரவேற்கவில்லை. என்ன சாமியாரே! காடு, கரை என  எங்காவது சுற்றினால் என்ன! அரண்மனைக்கு வந்து யாகம் நடத்துகிறேன்...அது...இது  என சன்மானம் வாங்க வந்திருக்கிறீரா? என எகத்தாளமாகக் கேட்டான். மகானுக்கு கோபம் வந்துவிட்டது. அட மூடனே! உன் கொடிய ஆட்சியில்  மக்கள் படும் பாட்டை எடுத்துரைக்க வந்தால், எடுத்தெறிந்தா பேசுகிறாய்? இன்னும்  ஓராண்டில் உனக்கு சாவு நிச்சயம், என்று சாபம் கொடுத்து விட்டு வெளியேறி விட்டார். மக்களுக்கு இந்த செய்தி எட்டியது. மகானின் சாபம் பலித்தே தீரும் என அவர்கள்  மகிழ்ந்தனர். துறவிகளின் சாபம் பலிக்குமென்பதால்,  மன்னனையும் பயம் தொற்றியது. அன்று முதல், தன்னை நாடி வந்தோருக்கெல்லாம் வாரிக் கொடுத்தான்.

மக்களின் வரிச்சுமை  பெருமளவு குறைக்கப்பட்டது. பெண்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மக்கள் அவனை வாழ்த்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த வாழ்த்து அவனுக்கு அரணாக இருந்தது. ஓராண்டும் கழிந்து விட்டது. மகானின் சாபம் பலிக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் அங்கு வந்தார். சுவாமி! உங்களிடம் தவறாக நடந்ததற்காக மன்னியுங்கள். உங்கள் சாபம் பலிக்காமல் போனது எப்படி? என்றான் மன்னன். யார் சொன்னது, சாபம் பலிக்கவில்லையென! கெட்டவனான ராஜா இறந்து விட்டான். இப்போது நற்குணமுடைய ராஜாவல்லவா ஆட்சி செய்கிறான்! என்றார். மன்னனும்  மக்களும் மகிழ்ந்தனர்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 07:13:59 PM
இந்தக்கல்லுக்கு ஈடாகுமா?

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_172420000000.jpg&hash=27abd7dfd7ab6aef355cab705fb223b0608841c2)


ஒரு ராஜாவைப் பார்க்க, மகான் ஒருவர் வந்தார். அவரிடம், ராஜா தன் அருமை பெருமையை எல்லாம் கொட்டித் தீர்த்தான்.  ஒரு வைரக்கல்லை காட்டி, சாமி! இது மாதிரி கல் எந்த நாட்டிலேயும் இல்லே! இதற்கு கோடி கோடி பணம் விலை. என் மார்பிலுள்ள தங்கச்சங்கிலியில் இதை பதிக்கப் போகிறேன். அப்புறம் நான் தான் உலகத்திலேயே செல்வந்தன், என்றான். மகான் சிரித்தார். அதிருக்கட்டும், இந்த கல்லை உன் மார்பில்  பதிப்பதால் என்னாகப் போகிறது? என்றார். இது என் பெருமையை பறைசாற்றும்.

இதை அணிந்துள்ள என்னைப் பாதுகாக்க நூறு வீரர்களை நியமித்திருக்கிறேன், என்றான் இன்னும் பெருமையுடன். இதை விட உயர்ந்த கல் இதே ஊரில் இருக்கிறது. பார்க்க வருகிறாயா? என்றதும், ஆசை உந்தித்தள்ள ராஜா கிளம்பினான். ஒரு குடிசைக்கு ராஜாவை அழைத்துச் சென்ற மகான், உள்ளே பார்! அந்தப் பெண் இந்தக் கல்லால் மாவாட்டி விற்றுப் பிழைக்கிறாள். அவள் குடும்பத்தையே அந்தப் பணம் பாதுகாக்கிறது. நீ வெறுமனே ஒரு கல்லைக் கழுத்தில் அணிவதால் உனக்கோ, பிறருக்கோ என்ன பலன்? என்றார். ராஜாவுக்கு சுரீரென்றது. கல்லை விற்றுக் கிடைத்த தொகையை கஜானாவில் சேர்த்து மக்களுக்கு  செலவிட்டான்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 07:16:04 PM
அம்மாவின் போதனை!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_172353000000.jpg&hash=6950e04e9448d9b6028f079b6c5aee37588643f0)


சதத்துவஜர் என்ற  அரசரின் மனைவி  மதாலஸா. இவள் பக்திப்பூர்வமானவள். மனிதனே தன் செய்கைகளால் தெய்வமாகலாம் என நினைப்பவள். மதாலஸா கணவரிடம், அன்பரே! நம் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை என்னிடமே ஒப்படைக்க வேண்டும். யாரும் அதில் தலையிடக்கூடாது, என்றாள். காரணம் தெரியாத அரசரும் சரியென வாக்கு கொடுத்து விட்டார். அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்ததும் அரசர் விக்ராந்தன்
(ஊர் ஊராக சுற்றுபவன்) என்று பெயரிட்டார். இதைக் கேட்டு அரசி சிரித்தாள். அதற்கான  காரணம் அரசருக்குப் புரியவில்லை. ஆனால், கேட்கும் தைரியம் இல்லை. அந்தக் குழந்தையை அரசி நிராஞ்ஜன் என்று அழைத்தாள். இதற்கு பற்றில்லாதவன் என்று பொருள்.  பாலூட்டும் பருவத்திலேயே வாழ்க்கை என்றால் இன்னதென்று, குழந்தைக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.

இந்த வாழ்வு பொய்யானது. பிரம்மம் (தெய்வம்) ஒன்றே மெய்யானது, என்று சொல்லிக் கொண்டே பால் கொடுப்பாள். குழந்தை பெரியவனான பின்   தவமிருக்க போய்விட்டான். இதையடுத்து பிறந்த இரண்டு குழந்தைகளும் இதே போல் தவமிருக்க சென்று விட்டனர். அரசருக்கு கவலை வந்து விட்டது. ராணி இப்படியே செய்தால், தனக்குப் பிறகு நாடாள யார் இருக்கிறார்கள்? இந்த தேசம் பாதுகாப்பற்று, வாரிசற்று போய் விடுமோ என அஞ்சினார். இதையடுத்து ஒரு குழந்தை பிறந்தது. இம்முறை ராஜா பெயர் வைக்க வந்த போது, ராணி  அவரைத் தடுத்தாள்.  உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வைக்கும் பெயர் சரியாக அமையவில்லை. நான் இவனுக்கு அலர்க்கன் என்று பெயர்  சூட்டுகிறேன், என்றாள். ராஜா அதிர்ந்து விட்டார். ஏனெனில், அந்தப்பெயருக்கு  பைத்தியக்கார நாய்என்று அர்த்தம். இவளுக்கு தான் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று எண்ணிய அவர். ராணியிடம், நீ இப்படி செய்யலாமா? என்றார். நீங்கள் முதல் குழந்தைக்கு  விக்ராந்தன் என்றும், அடுத்தவனுக்கு சுபாகு( வலிமை  மிக்க தோள்களை உடையவன்) என்றும், மூன்றாமவனுக்கு சத்துருமர்த்தனன் (எதிரிகளை துவம்சம் செய்பவன்) என்றும் பெயர் வைத்தீர்கள். அந்தப் பெயருக்கேற்றாற் போல் அவர்களும் நடக்கவில்லை. அப்படியிருக்க, இவனுக்கு பைத்தியம் என்று பெயர் வைத்ததால், அவன் பைத்தியமாகி விடுவானா என்ன! தீ என்றால் நாக்கு சுட்டு விடாது.

இந்தப் பெயரே இருக்கட்டும்,  என அடித்துச் சொல்லி விட்டாள். ஒன்றும் புரியாத ராஜா,  இவனையாவது அரசாள தயார்படுத்து. இவனையும் விட்டால் நாடாள யார் உள்ளனர்?  என்றார்.  அதை ராணி ஏற்றுக்  கொண்டாள். மகனுக்கும்  அரசாளும் வித்தையைக் கற்றுக் கொடுத்தாள். அவன் பொறுப்பேற்றதும், ராஜாவும், ராணியும் காட்டுக்கு புறப்பட்டனர். மகனுக்கு ஒரு பதக்கத்தை அணிவித்த ராணிமகனே! உனக்கு கஷ்டம் வந்தால் மட்டும் இந்த பதக்கத்திற்குள் இருக்கும் ஓலையை படித்துப் பார்,  என்றாள். பலகாலம் கழிந்ததும், அவனுக்கு வாழ்வில் ஏதோ வெறுப்பு தட்ட, ஓலையை  எடுத்துப் படித்தான். நீ பற்றற்றவனாக இரு, அப்போது  ஆத்மஞானம் அடைவாய்,  என்றிருந்தது. அதிலுள்ள உண்மையை அலர்க்கன் புரிந்து கொண்டான். அவனும் தவமிருக்ககாட்டுக்குப் போய்விட்டான். குழந்தைகள் அதிக  ஆசையின்றி, ஒழுக்கமாக வளர இந்தக் கதையை மார்க்கேண்டய புராணத்தில் சொல்லிஉள்ளனர்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 07:18:04 PM
இது தான் வாழ்க்கை!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_150531000000.jpg&hash=bf5235df7fc880dc50037eb26db3604768393361)


மகரிஷிக்கு நிதாகர் என்ற சீடர்.  இவருக்கு ஆத்ம ஞானம் அடைய வேண்டும் என்பது விருப்பம்.ஆத்மா என்பது அணு போன்றது. அதற்கு உறுப்பெல்லாம் கிடையாது. பிராமணன், வைஸ்யன், சூத்திரன் என்பதெல்லாம் உடலைப் பொறுத்த விஷயம். ஆத்மாவுக்கு இந்தப் பாகுபாடு கிடையாது. தற்போது சூத்திரனாக இருப்பவன், அவன் செய்யும் வினைகளுக்கேற்ப பிராமணனாகவும் பிறக்கலாம், க்ஷத்திரியனாகவும்  (அரசன்) மாறலாம், கீழ்நிலையான மிருகமாகவும் பிறக்கலாம், என்று உபதேசித்தார் ரிஷி. நிதாகருக்கு புரிந்தும் புரியாதது போல் இருந்தது. ஆயிரம் வருஷம் இதுபற்றி சிந்தித்தார்.ஒருநாள் காட்டில் தர்ப்பை அறுத்து வந்தார். அவ்வூர் ராஜா யானை மீது அமர்ந்து ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். அப்போது மகரிஷி ரிபு வந்தார். நீண்டகாலம் ஆகிவிட்டதால் ரிபுவை, நிதாகருக்கு அடையாளம் தெரியவில்லை.

யாரோ சாமியார் என நினைத்து விட்டார். ஏன் இங்கே நிற்கிறாய்? ரிபு கேட்டார்.எதிரே ராஜாவின் யானை ஊர்வலம் வருகிறது? அதனால் ஒதுங்கி நிற்கிறேன்,.ராஜாவா யார் அது?யானை மேல் உட்கார்ந்திருக்கிறாரே...அவர் தான்.யானையா...அப்படியானால் என்ன? மகரிஷியாக இருக்கீறீர்! இது கூட உமக்கு தெரியாதா! கருப்பாக நீண்டு வளைந்த கையுடன் குண்டாக இருக்கிறதே ராஜாவுக்கு கீழே! அதுதான்!. அப்படியா! ராஜா மேலே... யானை கீழே..  என்றீரே! மேலே என்றால் என்ன? கீழே என்றால் என்ன?. ரிபு இப்படி கேட்டாரோ இல்லையோ...நிதாகர் டென்ஷனாகி விட்டார். மகரிஷியைக் கீழே தள்ளினார். அவர் மீது இரண்டு பக்கமும் காலைத் தூக்கிப் போட்டார். இப்போது புரியுதா? நீர் கீழே...நான் மேலே!அப்போதும் ரிபு அமைதியாக கேட்டார். நீர் என்பது யார்? நான் என்பவர் யார்? இப்போது தான் நிதாகர் சிந்தித்தார்.இவர் சாதாரண ஆளல்ல! யாரோ மகான்.

ஒரே கேள்வியில் மடக்கி விட்டாரே! கோபமே வரவில்லையே! இவர் மாபெரும் தபஸ்வி, என நினைத்தவரின் முகத்தை உற்றுக்கவனித்த நிதாகர், அவர் தனது குரு என்பதை தெரிந்து கொண்டு, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.நிதாகா! நான் உன் குரு என்பதை ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதால் மறந்து விட்டாய். இத்தனை ஆண்டுகள் ஆகியும், ஆத்மஞானம் என்றால் என்ன என்பது பற்றி அறியாமல் இருந்து விட்டாயே! நான் யார்? என்ற கேள்வியை திரும்பத்திரும்ப உன்னிடமே கேள். உன் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் எல்லா உறவுகளுமே மாயை. இவை உன்னிடம் சில காலம் இருந்து விட்டு போய் விடும். ஏன்... நீயும் மறைந்து போவாய். இந்த உண்மையை மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார். நாம் இறைவனிடம் இருந்து வந்தவர்கள். அவன் மட்டுமே நமக்கு நிரந்தர சொந்தம் என்ற ஆத்மஞானம் கைகூடும், என்றார்.நிதாகருக்கு சிந்தனையில் தெளிவு பிறந்தது.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 07:20:43 PM
இதுவல்லவோ குருபக்தி!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_150335000000.jpg&hash=3c886df4b0360dd6d86f1466d5362ecc553f2994)


காஞ்சி மகாப்பெரியவருக்கு கைங்கர்யம் செய்து வந்தவர்கள் காசிக்கண்ணன், வைத்தியநாதன் என்ற தொண்டர்கள். இருவரும் பெரியவர் மீது அளவற்ற பக்தி கொண்டவர்கள். ஒருசமயம் மகாப்பெரியவர் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருந்தார். அப்போது, ஒரு ஊழியர் ஓடிவந்து, பெரியவா! கண்ணன், வைத்தா (வைத்தியநாதனை இப்படி சுருக்கிச்சொல்வார் பெரியவர்) இருவருமே உங்களிடம் பக்தி செலுத்துகிறார்கள், இவர்களது பக்தியில் ஏதாவது வித்தியாசம் காண்கிறீர்களா? என்றார். பெரியவர் சிறிது யோசித்தார். காசிக்கண்ணனிடம் நீ போய், பெரியவர் உன்னைக் கிணற்றில் குதிக்கச்சொன்னார் என்று சொன்னால், அவன்பெரியவாளா சொன்னா! எதற்குச் சொன்னார், காரணமில்லாமல் அவர் ஏதும் சொல்லமாட்டாரே! சரி, பெரியவரிடமே கேட்டுவிட்டு பின் குதிக்கிறேன் என்று சொல்வான். வைத்தாவோ, பெரியவா சொன்னாளா! என்னையா! என்று கனஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு, உடன் கிணற்றில் குதித்து விடுவான். இதுதான் வித்தியாசம். இருவருமே என்னைப் பொறுத்தவரை சமமானவர்கள் தான். காசிக்கண்ணன் யோஜனையுடன் செய்வான். வைத்தா யோசிக்காமல் செய்வான். கைங்கர்யத்தில் இருவரும் சமமே! என்று பதிலளித்தார்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 07:24:17 PM
அண்டங்காக்கைக்கு பிறந்தவரே!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_125250000000.jpg&hash=81f50a0e4551f34d1d1ccb54f561fd0ee56395ef)


தருமபுரம் ஆதீனத்தில் கட்டளைத் தம்பிரானாக இருந்தவர், துறவி சம்பந்த சரணாலயர். இவர் கந்தபுராணத்தைச் சுருக்கமாகப் பாடிய புலவர். திருத்தல யாத்திரையாக கர்நாடகா சென்றிருந்தார். மைசூரு மன்னர் இவரின் பெருமையைக் கேள்விப்பட்டு அரசவைக்கு அழைப்பு விடுத்தார். பல்லக்கு, பரிவாரங்கள் சரணலாயரை அழைத்து வர அமைச்சர் மேற்பார்வையில் கிளம்பின. அவர் அரண்மனைக்கு சகல மரியாதைகளுடன் அழைத்து வரப்பட்டார். சரணாலயர் நல்ல கருப்பு. அவரைக் கண்ட மன்னர், சிரித்தபடி, அமைச்சரின் காதில் மெல்ல, சுவாமி, அண்டங்காக்கை போல கருப்பாக இருக்கிறாரே! என்றார்.  மன்னரின் வாய் அசைவைக்கொண்டே, புலவர் தன்னைக் கேலி செய்வதைப் புரிந்து கொண்டார்.

சபையில் அனைவரும் கேட்கும் விதத்தில் கம்பீர தொனியில், மன்னர் பெருமானே! அண்டங்காக்கைக்குப் பிறந்தவரே! நீர் வாழ்வாங்கு வாழ்க! உமது பெருமை எங்கும் ஓங்குக!, என்றார்.  அப்பேச்சைக் கேட்டு கோபமடைந்தார் மன்னர். மன்னா! உண்மையைத் தானே சொன்னேன். அண்டம் என்றால் உலகம். நீர் இந்த உலகத்தைக் காப்பதற்காகத் தானே பிறந்திருக்கிறீர்! என்ன... நான் சொல்வது சரிதானே! என விளக்கம் அளித்தார்.  புலவரின் அறிவுத் திறத்தைக் கண்ட மன்னன் மகிழ்ந்தார். அவருக்குப் பொன்னும் பொருளும், பட்டாடைகளும் பரிசளித்தார். சம்பந்த சரணாலயரும் அங்கு அருளுரை நிகழ்த்தி விடைபெற்றார். சம்பந்த சரணாலயரின் மதிநுட்பத்தை எண்ணி தருமபுரம்
ஆதீனமும் மகிழ்ந்தார்.  நிறத்தைக் காரணமாக வைத்து யாரையும் அவமானப்படுத்தக் கூடாது...புரிகிறதா!
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 07:26:02 PM
தெய்வப்பிறவிகள்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_125132000000.jpg&hash=615cb6b19f2faab1381fd298cf652cb0f03d2029)


குஜராத் மாநிலத்திலுள்ள டங்காரா கிராமத்தில் வசித்தவர் ஹர்சன்ஜிலால்ஜி. சிவபக்தராக திகழ்ந்தார். குபேரநாத மகாதேவர் என்ற பெயருடன் சிவன் கோயில் ஒன்றை கட்டினார். இவரது மூத்தமகன் மூலசங்கரன். இவரை தயாராம் என்றும் தயானந்தர் என்றும் அழைப்பார்கள்.மூலசங்கரன் இளமையிலேயே வேதங்கள் பல கற்றார். வடமொழி ஸ்லோகங்களில் இவருக்கு பெரும் ஆர்வம் இருந்தது. தந்தையைப்போலவே மகனும் பக்தி மார்க்கத்தில் இறங்கினார். இது தயாராமின் தாய்க்கு பிடிக்கவில்லை. அந்த தாயாரும் சிவபக்தையே என்றாலும், தங்களைப்போல ஆழமான பக்தி வழியில் செல்லவேண்டாம் என்றுமகனிடம் சொன்னார். ஆனால் ஹர்சன்ஜி, மகனின் சிவபக்திக்கு ஆதரவு தெரிவித்தார். சிவராத்திரி நாட்களில் மூலசங்கரன் விடிய விடிய பூஜை செய்வார். 13 வயதிலேயே அவர் சிவராத்திரி விரதம் இருக்க துவங்கிவிட்டார். ஒரு சிவராத்திரியின்போது ஏராளமான பக்தர்கள் சிவன் கோயிலில் வழிபட்டுக் கொண்டிருந்தனர். நேரம் செல்லச்செல்ல எல்லாருக்கும் தூக்கம் வந்துவிட்டது. மூலசங்கரனின் தந்தையும் கோயில் சுவரில் சாய்ந்தபடியே தூங்கிவிட்டார். மூலசங்கரன் மட்டும் கண்விழித்து எல்லாரும் இப்படி தூங்குகிறார்களே என வருந்தியபடியே, சிவலிங்கத்தை கவனித்தார். லிங்கத்தின் மீது சில எலிகள் ஏறி விளையாடிக் கொண்டிருந்தன. அவை நைவேத்தியப் பொருட்களை கொறித்துக் கொண்டிருந்தன. யாராலும் தொடமுடியாத லிங்கத்தை இந்த எலிகள் தொட்டு விளையாடுகிறதே. இதைத்தடுக்க இந்த சிவனால் முடியாதா? என மூலசங்கரன் சிந்தித்தார். தன் தந்தையை எழுப்பி எலிகளை காட்டினார். இவற்றை விரட்டாவிட்டால் சிவனுக்கு உரிய பொருட்களை எலிகள் தின்றுவிடுமே. இது சிவனுக்கு நாம் செய்யும் அபச்சாரம் ஆகாதா? சிவன் இருப்பது உண்மையானால், அவரே இந்த எலிகளை விரட்டலாம் அல்லவா? என கேட்டார். மகனிடம், இப்படியெல்லாம் பேசக்கூடாது. சிவபெருமான் கயிலாயத்தில் வசிக்கிறார். அவரை நாம் வணங்குவதற்காக சிலை வடிவில் இங்கு வைத்துள்ளார்கள். சிலையால் எலிகளை விரட்டமுடியாது, என்றார்.அப்படியானால் சக்தியில்லாத இந்த சிலையை என்னால் வணங்கமுடியாது. இது அர்த்தமற்றது, என சொல்லிவிட்டு தயாராம் வீட்டிற்கு சென்றுவிட்டார். சிவராத்திரி விரதத்தை கைவிட்டார். உடனே சாப்பிட்டார். இதைக்கேள்விப்பட்ட அவனது தந்தை கடுமையாக திட்டினார்.

ஆனாலும், உருவங்களை வழிபடுவதில் அர்த்தமில்லை என மூலசங்கரன் உணர்ந்தார். கோயிலுக்கு செல்வதை விட்டுவிட்டு படிப்பில் அக்கறை செலுத்தினார். அவருக்கு 16 வயதானபோது அவரது பாசத்திற்குரிய தங்கை கொடிய நோயால் இறந்துவிட்டார். உறவினர்கள் அனைவரும் அழுதனர். மூலசங்கரன் தங்கை மீது பாசம் கொண்டிருந்தாலும்கூட அசையாமல் அமர்ந்திருந்தார்.மரணத்தை வெல்லும் சக்தி யாருக்கும் இல்லை. மரணத்தை தவிர்க்க பிறவியற்ற நிலைக்கு செல்லவேண்டும். இதற்கு தியானமே சிறந்த வழி, என உணர்ந்தார். இதே போல அவரது மாமாவின் மரணமும் அவரை இதே சிந்தனையில் தள்ளியது. பாசத்தை மறந்து துறவறம் மேற்கொண்டால்தான் முக்தி பெறுவதற்குரிய வழி பிறக்கும் என உணர்ந்தார். அன்று முதல் பைத்தியம் போல காணப்பட்டார். மகனுக்கு திருமணம் செய்துவைத்தால் எல்லாம் சரியாகும் என பெற்றோர் எண்ணினர். மூலசங்கரன் மறுத்துவிட்டார்.யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் சித்திப்பூர் சென்று துறவு வாழ்க்கையை ஆரம்பித்தார். சுத்த சைதன்யன் என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த விஷயத்தை அவரது தந்தைக்கு சிலர் தெரிவித்தனர். ஹர்சன்ஜி அவரை தேடிபிடித்து அழைத்துவந்தார். வரும் வழியிலேயே மூலசங்கரன் தப்பி விட்டார். மகனைக் காணாமல் தவித்த தந்தை சில நாட்களில் இறந்துவிட்டார். மற்ற மகன்களும் இறந்து போனார்கள். தப்பியோடிய மூலசங்கரன் பரோடாவில் வசித்த பரமானந்த பரமஹம்சரிடம் வேதம் பற்றி அறிந்தார். சன்னியாசம் பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை பரமானந்தரிடம் தெரிவித்தார். சிறுவரான மூலசங்கரருக்கு துறவறம் வழங்கி பரமானந்தர் தயங்கினார். எனவே சிருங்கேரி மடத்திலிருந்த பூர்ணானந்த சரஸ்வதி சுவாமியைச் சந்தித்த மூலசங்கரன் தனக்கு சன்னியாச தீட்சை வழங்கும்படி கேட்டார்.பூர்ணானந்தர் மூலசங்கரனுக்கு சன்னி யாச தீட்சை அளித்து தயானந்த சரஸ்வதி என்ற பெயர் சூட்டினார். மூலசங்கரன் தயானந்தர் ஆனார். தயானந்தரின் காலத்தில்தான் இந்தியாவின் பலஇடங்களிலும் சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றிருந்தது. கான்பூர், மீரட் நகரங்களில் பெரும் கலவரம் நடந்தது. ஏராளமான அப்பாவிமக்கள் கொல்லப்பட்டனர்.

இதைப் பார்த்த தயானந்தர் வேதனை அடைந்தார். பின்னர் பஞ்சாபிலுள்ள கர்த்தார்பூர் என்ற இடத்திற்கு சென்ற அவர் விரஜானந்தர் என்பவரை சந்தித்தார். அவருக்கு பார்வை கிடையாது. இந்த நிலையிலும் கூட கையில் ஒரு கம்பை வைத்துக்கொண்டு ரிஷிகேஷ் வரை நடந்தே சென்றவர் அவர். தனது 15வது வயதிலேயே இந்த சாதனையை செய்தார். விரஜானந்தரை சந்தித்த தயானந்த சுவாமி அவரது சீடரானார். அவரிடம் பல போதனைகளைக் கற்றார். முக்தி பெறவேண்டும் என்ற தயானந்தரின் எண்ணத்தை மாற்றி, நாட்டின் சேவைக்காக அர்ப்பணித்துக் கொள்வதே உண்மையான தெய்வ வழிபாடு என்ன எடுத்துக் கூறினார். அதன்பின் விரஜானந்தர் இறந்துவிட்டார். விரஜானந்தரின் கருத்தை ஏற்ற தயானந்தர் மதமாற்றம், பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். மூடக் கொள்கைகள் மக்களுக்கு ஆகாது என எடுத்துக் கூறினார். நாட்டு மக்கள் அனைவரும் ஒரே இனம், ஒரே மொழி என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றார். 1875ம் ஆண்டில் மும்பையில் ஆரிய சமாஜம் என்ற அமைப்பை துவக்கினார். இந்த சமாஜத்தின் மூலம் கல்விக்கூடங்கள் அமைத்தார். தன்னிடம் வலியவந்து யாராவது பொருள்கொடுத்தால் அதை கல்விக்காக செலவிட்டார். ஜோத்பூர் மன்னர் தயானந்தரை அரண்மனைக்கு வரும்படி அழைத்தார். மன்னர் ஒரு பெண்பித்தர். எனவே தயானந்தரை அரண்மனைக்கு செல்லவேண்டாம் என அவரை சார்ந்தவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் சுவாமிகள் அவர்கள் சொன்னதை பொருட்படுத்தாமல் அரண்மனைக்கு சென்று மன்னரை கண்டித்தார். அப்போது மன்னரின் அருகில் நன்னிஜான் என்ற தாசிபெண் இருந்தாள். அவளைப்பார்த்த தயானந்தருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இதுபோன்ற நாய்களுடன் அரசர்கள் தொடர்பு வைக்கலாமா? என கேட்டார். இதைக்கேட்டதும் நன்னிஜானுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.  தயானந்தரை கொல்ல திட்டமிட்டாள். விஷம்கலந்த பாலை அவருக்கு கொடுத்தாள். இதைக்குடித்த தயானந்தருக்கு எவ்வளவோ சிகிச்சை செய்தும் உடல்நிலை மோசமானது. அவரை ஆஜ்மீருக்கு அழைத்துச்சென்று வைத்தியம் செய்தனர். ஆனாலும் மருந்து எதுவும் பலனளிக்காமல் காயத்ரி மந்திரத்தை ஜெபித்தபடி உயிர்நீத்தார். பாசத்தை மறந்து முக்தி பெறுவதற்கான அவரது போதனைகளை இன்றும் ஏராளமானோர் பின்பற்றி வருகிறார்கள்.
Title: Re: ~ பக்தி கதைகள் ~
Post by: MysteRy on February 25, 2013, 07:28:01 PM
மனுஷனை மனுஷன் மதிக்கணும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.dinamalar.com%2Fkovilimages%2FStory%2FST_124949000000.jpg&hash=b8e6bf51537e49003bd67abbe64104a2fef3285d)


மனிதனுக்குள் எவ்வளவோ திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன. இப்போதெல்லாம், பணத்தை வைத்து தான் ஒருவரது மதிப்பு எடையிடப்படுகிறது. திறமைக்கு மரியாதை கொடுப்பவர்கள் ரொம்ப சிலர் தான்! செல்வி என்ற பணக்கார பெண்ணின் வீட்டுக்கு  இன்னொரு பணக்காரியான மல்லிகா விருந்தாளியாக வந்தாள். விருந்தினர் அறையில், செல்வி பல ஓவியங்களை மாட்டி வைத்திருந்தாள். அவற்றை வாங்கிய விதம், அவற்றுக்காக ஆயிரக்கணக்கில் செலவு  செய்தது பற்றி பெருமையாகச் சொல்லிக் கொண்டாள். மல்லிகாவுக்கு அதில் அவ்வளவு ஆர்வமில்லை. ஏனடி! உனக்கு அறிவிருக்கா! யாராவது ஐயாயிரம், பத்தாயிரத்துக்கு ஓவியங்களை வாங்குவார்களா! இது எவ்வளவு காலமடி நிலைக்கும்!

வெறும் வண்ணத்துக்கும், திரைச்சீலைக்குமா இவ்வளவு காசு கொடுப்பார்கள்! பைத்தியக்காரி! என்னைப் பார்! நீ இங்கு வாங்கி வைத்துள்ள ஓவியங்களுக்கு நிகரான தொகைக்கு வைர நெக்லஸ் வாங்கி, கழுத்தில் அணிந்திருக்கிறேன், எப்படி டாலடிக்கிறது பார், என்றாள் கர்வம்  பொங்க! செல்வி அவளிடம்,மல்லி! நீ கரிக்கட்டையாய் கிடந்து சற்று பளபளப்பைப் பெற்றுள்ள  ஒரு பொருளுக்கு மதிப்பு  கொடுக்கிறாய். நானோ, இவற்றை வரைந்த மனிதனின் திறமைக்கு மதிப்பளிக்கிறேன். பகட்டுக்கு செலவழிப்பதை விட, மனிதனுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வர செலவழிப்பது தான் எனது கொள்கை. மனிதனின்  திறமைக்கு மதிப்பளிக்கும் நாட்டிற்கு செல்வம் தானாகவே வந்து சேரும், என்றாள். ஆம்...அவள் சொன்னது நிஜம் தானே!