FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on February 02, 2013, 02:27:09 PM
-
பயறு வகைகள் உடலுக்கு மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் பயறுகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். அதிலும் அந்த பயறுகளில் பச்சை பயறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை பச்சையாக மூளைக்கட்ட விட்டு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். இப்போது அந்த பச்சை பயறை வைத்து எப்படி குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1/2 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 3 பல்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சை பயறை நீரில் போட்டு, 5-6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறை கழுவிப் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும். புளியை 2 கப் நீரில் போட்டு ஊற வைத்து, பின் அதனை கரைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் புளித் தண்ணீர், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள பச்சை பயறை லேசாக மசித்துப் போட்டு, மீண்டும் 3-5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பயறு குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.