FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on January 24, 2013, 05:24:18 AM

Title: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:24:18 AM

ஒருமை



சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி

சட்டம் கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:25:02 AM

பொங்கி வாடா!


தீயெழுந்து அடுப்பினிலே பாலைச் சுட்டால்
சினந்தெழுந்து பால்பொங்கித் தீயணைக்கும்!
நீ உவந்து செய்கின்ற பொங்கல் வெற்று
நிகழ்வன்று.... வீரத்தின் பாடம் கண்டாய்!
தாயிழந்த சேயர்போல் தமிழர் ஈழம்
தனையிழந்து சினங்கொண்டு பொங்குகின்றார்!
பாய்! சிவந்து களமாடு! பொங்கி வாடா!
பகைநொறுக்கித் தமிழீழ மண்ணை மீட்போம்!

திரைப்படத்தின் மார்புகளைத் தின்னும் கண்ணால்
தீந்தமிழ்த்தாய் ஈழத்தில் சாவின் வாயில்
இரைப்படப்போய் விழும்புலிகள் களத்தின் புண்கள்
இருந்த மலை மார்புகளைப் பார்ப்பாய்! ஆங்கே
நிரைப்பட நாளும் களத்தை நிறைத்தார் வீரர்!
நீ என்னடா இங்கே கிழித்தாய்? வீழ்ந்து
தரைப்பட நீ கிடக்கின்றாய்! பொங்கி வாடா!
தமிழீழம் மலர உடன் ஆணை ஏற்போம்!

நேற்றுவரை உனக்குதவி நின்ற மாட்டை
நேர்நின்று மோதுகிறாய்.... தமிழீழத்தில்
நாற்றிசையும் குண்டுகளால் உன்இனத்தை
நாளும் அழிக்கின்றார்.... நீ மோதினாயா?
போற்று தமிழ் இனமானம்! தமிழனாய் நீ
பொங்கல் செய்! விழித்தெழுவாய்! வீறுகொண்டு
காற்றெழுந்தால் புயலாகும்! பொங்கி வாடா!
களம் காண்போம்! தமிழீழம் காப்போம்! காப்போம்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:25:32 AM

நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு!


செந்தமிழர் மாவீரர் வன்னியசிங் கத்தை நாம்
வெந்தழலில் வைத்தோம்... விடுதலையே
சிந்தனையாய்
நின்றார் அறவீரர்! அன்னார் உயிர் நீஏன்
கொன்றாய்? கொடுஞ்சாவே கூறு!

அஞ்சிப் பகைவர் அதிர்ந்து நிலைகுலைய
நெஞ்சில் கனல்தாங்கி நின்றானை
வெஞ்சிறையில்
பொன்னாய்ப் பழுத்த புகழுக்குரியானை
எந்நாள்யாம் காண்போம் இனி?

பாரில் தமிழர் படைவெல்லப் போராடி
போரில் கொடுமை பொழுதெல்லாம்
நேரில்
விருப்பாய் மகிழ்ந்தேற்ற வீரர் மறைந்தார்!
நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு!

ஆற்றல் மிகுபேச்சால் ஈழத்திலே சூறைக்
காற்றை எழுப்பியவன் கண்துயின்றான்!
நாற்றிசையும்
பொங்கு தமிழ்முழக்கம் செய்த களத்தின்போர்ச்
சங்கை நொறுக்கியதோ சாவு?

கண்ணின் மணித்தலைவர் செல்வா வழிகாட்ட
மண்ணில் அவர் கொள்கை மணிவிழியாய்
எண்ணி
இனம்வாழ வாழ்ந்தார் இலையே எவ்வண்ணம்
மனம்தோறும் எங்கள்தாய் மண்?
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:26:01 AM

கியூபா முழக்கம்

ஆள்கின்றாய் கொடுஞ் சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை நெஞ்சில் இருத்து!

பண்டைத் தமிழன் காலின் சுவடுகள்
பைந்தமிழ் மண்ணில் அழிந்திடவில்லை!
அன்றைத் தமிழன் ஆடியகுளத்தில்
அலைகள் இன்னும் கலைந்திடவில்லை!

ஆள்கின்றாய் கொடுஞ்சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை நெஞ்சில் இருத்து!

கோல வானைக் குருவி விழுங்குமோ?
கொடுவாய் முதலை விழுங்குமோ ஆற்றை?
ஈழ மண்ணை லங்கா விழுங்குமோ?
எங்கே பார்க்கலாம்...! என்னடா சேட்டை!

ஆள்கின்றாய் கொடுஞ்சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை! நெஞ்சில் இருத்து

பாவி! நீ எம் மண்மிசை இந்நாள்
பாய்ச்சும் துப்பாக்கியின் கொடும் ரவைகள்
நீ அவை ரவைகள் என நினைத்தாலும்
நிச்சயம் அவைகள் சுதந்திர விதைகள்!

ஆள்கின்றாய் கொடுஞ் சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை! நெஞ்சில் இருத்து!

தமிழ் ஈழம் யாம் பெறுவது மெய்யே!
தகர்ந்து சிதறும் எதிரிகள் கையே!
தமிழர் நெஞ்சில் எரிவது நெருப்பே!
தமிழ் வீரம் தமிழர்கை இருப்பே!

ஆள்கின்றாய் கொடுஞ்சிங்கள லங்கா!
ஆணவம் சேட்டை அனைத்தும் நிறுத்து!
வாழ்தமிழ் ஈழம் தமிழர் தாயகம்!
வரலாற்றுண்மை! நெஞ்சில் இருத்து!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:26:33 AM

நெருப்புப் பழம்


நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!

அன்னைத் தமிழ் ஈழம்
என்றன் உயிர்த்தாயகம்
தன்னை வென் தொட்டான்?
தமிழா எழுக! என
மின்னை இடியைப்
புயலைத் தமிழ்செய்தேன்...
என்னைக் கொடுங்கவிஞன்
என்றார் நிறையிட்டார்...

நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!

ஓங்கு நெடுமதில்கள்
உள்ளே இருட்கோலம்
தாங்க முடியா நோய்
தாகம் பசிக்கொடுமை
தீங்கு படைக்கும்
கொடியர் சிறைக்கோட்டம்
ஏங்கி ஒரு தமிழன்
இங்கு மடிகின்றேன்...

நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!

என்னே இவ்வையம்!
எனைப்போல் ஒரு மனிதன்
மண்ணாள இங்கே
வளைந்துயான் அம்மனிதன்
சொன்னடி கைகள்
கட்டித் தொழும்பியிற்றும்
பொண்ணைப் பயலானேன்...
போதும்! இதுபோதும்!

நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!

வானில் கிளி பறக்கும்...
வண்ணக் கொடிமுல்லை
தான் நினைந்த பக்கம்
தழுவிப் படர்ந்திருக்கும்
மாநிலத்தே யான்
அட! இம் மதில் நடுவில்
ஏனிப்படி இருந்தேன்?
என்ன பிழை செய்தேன்?

நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!

பட்டு நிலா வான்
மிசை எழப் பாரெங்கும்
கொட்டு முழவிசையில்
கூத்தாட வையத்தின்
எட்டுத் திசையும்
மகிழத் தமிழன்யான்
மட்டும் துயர் தாங்கி
மாளப் பிறந்தேனா?

நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!

"நானோ அடிமை?"
என நா விளிக்கிறது!
கூனோ டிருக்கும்
உடலம் கொதிக்கிறது!
தேனோ மரணம்
என நெஞ் சொலிக்கிறது!
ஏனோ விழியில்
இரத்தம் பனிக்கிறது

நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:27:12 AM

முழக்கம்



தடித்த சிங்களத்தின் தறுக்கனே! மூடா!
தமிழன்யான் உனைக்கண்டு தலைதாழ்த்தவோடா?
துடிப்புள்ள தமிழ்வீரர் தோள்வீரம் அறியாய்...
துள்ளுகின்றாயடா! நில்! எங்கள் மண்ணில்
வெடிக்கின்ற குண்டுக்கும் அசையாத வீரர்
விளைந்துள்ள காலம் நீ வி€ளாயடுகின்றாய்!
இடிக்கின்றாயா? சரி... இடித்துப்பார் என்றன்
எலும்போடு தசைமோதித் தமிழென்றே கூறும்!

செந்தமிழ்க் கனலூறி வளர்ந்த இம்மேனி
சிறுத்தையின் எழில்மேனி வளையுமோ கூனி?
மந்திரமான செந்தமிழோடு வாழ்ந்தோம்!
மலைமோதினாலும் நிலைதாழுவோமா?
தந்தை இராவணன் ஆண்ட பொன்னாடு!
தமிழீழ நாடென்றன் தாய்நாடு கண்டாய்!
இந்தமண் மீட்பதே என் முதல்வேலை!
ஏன் மோதினாய்? என்முன் நீ எந்த மூலை!

வெறியாடும் சிங்களர் படைவீரா! இதுகேள்!
விடுதலை வீரரைத் தொடுதலை நிறுத்து!
பொறிகக்கும் விழியோடு புலிகள்யாம் நின்றோம்!
பொன்னீழம் உயிரென்றோம்... போராடுகின்றோம்!
சிறிதடா நின்பாய்ச்சல்! பெரி தெங்கள் மூச்சு!
செந்தமிழ் வீரரை என்செய வந்தாய்!
அறிக! இங்கோர் புயல் விரைவில் வெடிக்கும்!
அந்நாள் உன்சிங்களம் பாடம் படிக்கும்!

நில்லா இம்மண்மிசை அநீதிகள் நில்லா!
நிறைவெறி யாளனே! நின்படை வெல்லா!
செல்லாதடா நின்றன் செருக்கிந்த நாட்டில்!
செந்தமிழன் கதை படித்துப்பார் ஏட்டில்!
எல்லார்க்கும் இம்மண்ணில் இடமுண்டு கண்டாய்!
எதிரியின் உடல்மட்டும் விழும்துண்டு துண்டாய்!
பொல்லார்க்குப் பொல்லாத நாடெங்கள் நாடு!
புரிந்து கொண்டாயா நீ இப்போதே ஓடு!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:27:45 AM

தமிழ் கன்னி காதல்


வண்ணத் தமிழ்க்கன்னி வாய்திறந்து பேசுகிறாள்...
மண்ணிற் பிறந்து மணிக்கவிதை பாடிவரும்
பூங்குயிலே உன்னைப் புகழ்வதற்கு நான் யாரோ?
ஏங்கும் இளவஞ்சி எப்படியோ பேச்சுரைப்பாள்?
காத லுருகிவரும் காலத்தில் வாய்மழலை
பாதிவரும் மீதி பதுங்கிவிடு மென்பார்கள்!
ஆனாலும் பொல்லாத ஆசையினால் நானொருத்தி
ஏனோ புதுவிதமாய் இன்று புலம்புகிறேன்!
திட்டமிட்டுப் பேசத் தெரிந்தவள்போல் பேசுகிறேன்!
கொட்டி முழக்கும் கடல்போலக்கூவுகிறேன்!
வண்ணக் கவிஞன் வலக்கரத்தில் நான்கிடந்து
கண்மயக்கம் கொண்டு கதைபேசுங் காலமிது!
நெஞ்சிற் கவலையில்லை! நீலக் கருவிழிகள்
கொஞ்சும் ஒளிமுகமும் கூராயொரு மூக்கும்
ஏலேலோ போடும் இதழ்ப்படகும் கொஞ்சம்போல்
மேலே விழுந்திருக்கும் மீசைக் கருப்பழகும்
பட்டினியால் சோர்ந்தாலும் பார்க்கப் பிடிக்கின்ற
கட்டழகு மார்பும் கவிஞனிடங் காண்கின்றேன்!
வானத் தளவு வளர்ந்திருக்கு மென் றலைவன்
மானத்தின் தோளில் மலர்க்கொடிபோ லாடுகிறேன்!
பாவை எனக்கென்ன பஞ்சம்? எனினுமொரு
தேவை யுரைப்பேன் தெரியாதா மன்னவனே...?
விண்ணின் கதிர்வெடித்து வீழ்ந்த சிறுகோளம்
தண்ணென்று மாறித் தரைபிறந்த காலத்தில்
முன்னம் பிறந்த முதல்மனிதன் வீட்டினிலே
கன்னி பிறந்தேன்.. பிறந்துவந்த காலமுதல்
நாலு திசையும் எனக்கிருந்த நல்லபுகழ்
காலம் அறியும்! வரலாறு கண்டறியும்!
செப்பேடறியும்! செதுக்கி வைத்த கல்வெட்டில்
எப்படியு மிந்த எழில்மகளின் பேர்விளங்கும்!
தென்னன் மதுரை சிறப்புடைய வஞ்சிநகர்
பொன்னி நதிபாயும் புகார் நகரம் ஈழநகர்
ஆன தமிழ்நாட்டின் அரசிநான் ஆனாலும்
சிந்து வெளிப்பரப்பும் சிறிக் கடல்பறித்த
தென்குமரி மண்டலமும் தேடிப் புதைபொருளின்
தன்மை அறிந்தவர்கள் இந்தத் தரை முழுதும்
என்னுடைமை என்றே எடுத்துரைப்பர்! முன்பெல்லாம்
மன்னரணி மாடத்தில் மாபுலவர் கூடத்தில்
சொங்கோ லிருந்த சிறப்புடைய மாளிகையில்
தங்கி யிருந்தேன்! தலைவிதியோ மன்னவரே...
பொத்தென்று வீழ்ந்தேன்...! புகழ் கெட்டுப் போனேனே!
கொண்ட முடியிழந்து கோல வடிவிழந்து
பண்டைச் சுகமிழந்த பாவி எதுசெய்வேன்?
நாலுபேர் பார்த்து நகைப்பதற்கு ஊராரின்
கேலி உரைக்கும் கிளிப்பிள்ளை என்செய்வேன்?
என்னால் வயிற்றுணவு தேடு மெழுத்தாளர்
என்னையே விற்றுப் பிழைக்கும் இழிநிலையில்
ஆரிடம்போய்ச் சொல்லி அழுவேன்? தமிழினத்தில்
வேறிடம் நான் போனாலும் வெட்கமிலாப் பாவிகள்
பிச்சையிடும் மாற்றாரின் பின்னால் அடிசுமந்து
கச்சையிலார் போலக் கடுகளவும் மானமின்றி
நாட்டை அடகுவைத்தும் நாலுநாள் சோற்றுக்கு
காட்டிக் கொடுத்தும் கதை நடத்தும் காலத்தில்
எங்க நான் போவேன்...? எளிய தமிழ்ச் சாதி
நூறுவகைச் சாதி நொடிக்கோர் புதுச்சாதி
வேறாய் உருவாக்கி வெவ்வேறாய் மோதுண்டு
தானே அழிந்து தலைசாயும் இந்நாளில்
எங்குநான் போவேன்? எதிர்கால மொன்றில்லாப்
பெண்ணின் நிலையேனோ பெற்றுவிட்டேன்... நான் பொழியும்
கண்ணீர் நதிக்குக் கரையொன்று தேறாதா?
என்றுநான் ஏங்கி யிருக்கையிலே பூமலரும்
குன்றத்தில் வந்தீர்... கொடுத்துவைத்தேன், பொய்யில்லை!
வானமழை பார்க்கும் வயலுழவர் கண்ணெதிரே
போனமழை போலப் புறப்பட்டு வந்துள்ளீர்!
வண்ணக் கரத்தால் வளைக்கின்றீர்... ஏழையின்
எண்ணம் பலிக்காமல் என்செய்யும்? நாளைக்கே
கோல முடிபெறுவேன்.. கொண்ட பழம்பெருமை
மீளப் பெறுவேன்... மிகப் பெரிய மண்பெறுவேன்!
இல்லையா மன்னவரே? என்றாள் தமிழ்க்கன்னி!
முல்லைச் சிரிப்பொன்றை மூடித் திறந்து வைத்தாள்!
நெற்றிப் பிறையின் கீழ் நின்ற புருவத்தைச்
சற்று வளைத்தாள் சரிந்த தலையோடு
காதல் விழியிரண்டில் கைபொருத்திக் கூப்பிட்டாள்!
சேதி தெரிந்து சிறகடித்து நான் போனேன்!
என்கரத்தி லாடும் இவளருகில் இன்னும்நான்
உன்னிப் பறப்பதெனில் உள்ளுணர்வே காரணமாம்!
போதை யுலகம்... புலவனுக்குப் பொன்னுலகம்
வாதை யுலகம் வலம்வந்த வேகத்தில்
கூடல் மகளின் கொதிக்குமுடல் சூட்டினிலும்
வாடும் அவளின் வரலாற்றுச் சூட்டினிலும்
நானொருவன் சூடாகி நல்ல வெறிபடைத்து
தேனமுத மங்கை தமிழ்க்கன்னி என்னுடையாள்
பட்ட துயரம் பறக்க இடிமுழக்கம்
கொட்டி நெடுவான் குலைந்து முகிற்கூட்டம்
ஓசைப் படவும் உலகம் நடுங்குறவும்
ஆசைத் தமிழ்மேல் ஆணை யுரைக்கின்றேன்...
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:28:14 AM

ஏடு படைப்போம்!

பாண்டிய மன்னவன் சோழன் பனிவரை
பாய்ந்து கலக்கிய சேர மகன்

ஈண்டு முளைத்த குலத்தில் எழுந்தனை!
ஏடா தமிழா! எடடா படை!

கூண்டுக் கிளிநிலை எத்தனை நாள்வரை?
கூப்பிடு கூப்பிடு வீரர்களை!

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை
ஆள நினைப்பதில் என்ன குறை?

கோட்டுப் புலிக்குலம் வாழக் குகையுண்டு!
குருவிக்குக் கூடு மரத்திலுண்டு!

காட்டு வயற்புற நண்டுக்குப் பொந்துண்டு!
கஞ்சல் எலிக்கோர் குழியுமுண்டு!

கோட்டை அமைத்துக் கொடியொடு வாழ்ந்தவர்
குலத்துக்கொரு புகல் இங்கிலையோ?

நாட்டை அமைப்பாய் தமிழ்மகனே! புவி
நடுங்கப் புயல்போல் நடைகொளடா!

மானம் அழைத்தது! வீரம் அழைத்தது!
மலைத்தோள் இரண்டும் எழவில்லையோ?

ஊனத் தசைதான் தமிழுடலோ? அட
உணர்ச்சி கடவுள் தரவில்லையோ?

ஏனம் சுமந்து பிழைப்பதற்கோ பிறன்
எச்சில் பொறுக்கவோ தமிழரினம்?

ஈனச் சரிதை கிழியப் புதியதோர்
ஏடு படைப்போம்! எழுதமிழா!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:28:46 AM

அழுகின்றோம் அழுகின்றோமே!


இலையொன்று வீழ்தல் கூடும்
இறகொன் றுதிர்தல் கூடும்
மலையொன்று சாய்வ துண்டோ?
மானத்தர் தமிழீ ழத்தில்
தலையொன்று வீழ்ந்த தையா!
தந்தை செல்வாவைக் கால
அலையொன்று சாய்த்த தையா!
அழுகின்றோம்... அழகின் றோமே!

மொழி இனம் நாடு மூன்றும்
மூச்சாக வாழ்ந்தார் ஐயா!
இழிவாகும் மாற்றினத்தார்
எமை ஆள்தல் என்றார்! எங்கள்
விழிதனைத் திறந்து வைத்தார்!
தனிவிழி மூடி இன்றேன்
அழிவெனும் சாவில் வீழ்ந்தார்?
அம்மவோ! எதுயாம் செய்வோம்?

வஞ்சினம் உரைத்தெழுந்து
வண்டமிழ் ஈழம் வாழ
நஞ்சினர் முன்அறப்போர்
நடத்திய எங்கள் தந்தை
துஞ்சினர்... உலக வாழ்வு
துறந்தனர் எனவந் தெங்கள்
நெஞ்சினில் பாய்ந்த சேதி
நெருப்பினைவார்த்த சேதி!

முடிஇலா அரசர் ஐயா
முழுச்செல்வர் எனினும் வாழ்வில்
கொடியவெஞ் சிறையிருந்தார்!
கொலைவெறிச் சிங்க ளத்தர்
பிடிநின்று தமிழ்மண் காக்கும்
பெரும்போரில் தனைஅழித்தார்!
விடிவொன்று காணுமுன்னம்
வீழ்ந்தாரே... விம்முகின்றோம்!

எந்தையின் கொள்கை என்றும்
ஈழத்தார் வாழ்வாய் நிற்கும்!
செந்தமிழ் ஈழ மண்ணில்
செல்வா கால்தட மிருக்கும்!
சிந்தையில் அவர்பொன் மேனி!
சிலைபோல நிலைத்திருக்கும்!
அந்த நாள் அவர்வாய்ச் சொற்கள்
அழியாதெம் காற்றில் வாழும்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:29:48 AM

கூனுமா தமிழன் வீரம்?


தூற்றினார் தமிழை என்னும்
துடித்திடும் சேதி கேட்டு
மாற்றலர் மண்ணில் பாய்ந்து
மானத்தைக் கல்லாய் மாற்றி
ஏற்றினான் சேரன் ஆங்கே
எதிரியின் தலைமீ தென்ற
கூற்றினைக் கேட்ட பின்னும்
கூனுமோ தமிழன் வீரம்?

பறித்திடத் தமிழன் மண்ணைப்
பரங்கியர் வந்த வேளை
தறித்தவர் தலைகள் கொய்து
தன்வலி காட்டி நின்ற
மறப்புலித் தேவன் வீரன்
மரபினில் வந்த நம்மோர்
துரத்துது குண்டென் றாலும்
துணிவிழந் தோடுவாரோ?

உற்றசெந் தமிழி னத்தை
ஒழித்திட முரசம் ஆர்த்த
துட்டகை முனுவின் கொட்டம்
தூள்படச் செய்வே னென்று
கட்டுடல் தளர்ந்த போதும்
கைதனில் வாள்பிடித்த
கொற்றவன் எல்லாளன் தன்
கூட்டமோ அடிமையாகும்?

மொழி நிலம் தமிழச்சாதி
மூன்றையும் இன்னல் வந்து
தழுவுமா? தழுவ வந்தால்
தமிழ்க்குலம் புயலாய் மாறும்!
வழிவழி வந்த வீரம்
வருவதை ஒருகை பார்க்கும்!
எலிகளும் தமிழர் மண்ணில்
எழும்! பகை ஓட்டி வைக்கும்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:30:30 AM

இருப்பாய் தமிழா நெருப்பாய்!


இருப்பாய் தமிழா நெருப்பாய்!
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!
இருப்பாய் தமிழா நெருப்பாய்!

குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!

கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா
கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்? - இனப்போர்
செய்யக் களம்வாடா கொடுமை தூள்படும்
சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!

வெல்லமோடா உயிர் உனக்கு? புவிகாண
வீறுகொண்டு போர் இடடா! - தமிழர்
உள்ளம் மகிழ நீ களத்தில் நடடா
உயிரையும் தூக்கிக் கொடடா!

வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின்
வல்லமை உன் பகை உடைக்கும்! - அட
நெஞ்சில் தமிழ்வீரம் பொங்க நில்லடா!
நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:31:13 AM

நீயா தமிழனின் பிள்ளை?


சூடு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயா தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! - அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:31:52 AM

கால முனிவன் குடில்

யானும் தானையும் மாமலை காடுகள்
யாவும் கடந்து நடை நடந்து
வானில் முகில்கள் அலைந்தன போலிந்த
வையத் திசைகள் அலைந்து வந்து
பேனும் அழுக்கும் பிடித்த தலையொடு
பிணத்தின் நிலையில் முகங்கறுத்து
மான உணர்வில் மறுபடியும் பல
மலைகள் வழியே நடைதொடர்ந்தோம்.

வீர மிருந்தும் வெறியிருந்தும் பகை
வெட்டி வீழ்த்தஓர் படையிருந்தும்
தூர நடந்தும் முழுக்கமிட்டும் மலைத்
தோள்களிரண்டும் துடிதுடித்தும்
போரை நடத்தி முடிக்க எமக்கொரு
பொழுது வரவில்லை... என்ன செய்வோம்?
ஆரை நினைத்தழுவோம்? கொடும் ஊழ்வினை
அதனை நினைத்துப் புலம்பி நின்றோம்!

விழிகள் இரண்டிலும் நீர் வடியும்! என்றன்
வெந்த மனத்தில் நெருப்பு வரும்!
மொழிகள் அழுவது போலவரும்! பெரு
மூச்சுக்கள் ஆயிரம் ஓடிவரும்!
இழிவு சுமந்த தமிழினத்தின் துயர்
எத்தனை காலம் பொறுத்திருப்போம்?
அழிவு வருமெனினும் பொறுப்போம்... இந்த
அலைச்சல் நிலைமை எவர் பொறுப்பார்?

தொடையை அடித்திட்டார்! பல்கடித்தார்! சிலர்
சோர்ந்து மரத்திலே சாய்ந்திருந்தார்!
படையில் அவ்வேளை ஒருவன் துடிப்பொடு
பக்கத்திருந்த நெடும்புதரின்
இடையில் விரற்குறி காட்டிநின்றான்! அந்த
இடத்தில் ஒரு குடில் கண்டுவிட்டோம்!
அடையத் துடித்தார் தமிழ்மறவர்... அட
அங்கோர் புதுவெறி வந்ததடா!

துள்ளி நடந்தன கால்கள்! குடிசையின்
தூய கதவம் அடைந்து விட்டோம்!
உள்ளம் சிலிர்க்க நிலை மறந்தோம்! குடில்
உடையானடிகள் வணங்கி நின்றோம்
கள்ளின் வெறிபடைத் தாடினோம்! இங்குள
கடவுளர் யாவர்? என மொழிந்தோம்!
வெள்ளைச் சிரிப்பொடு கால முனிவரன்
விழிகள் திருப்பி மொழிதலுற்றான்.
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:32:28 AM
வேறு

கேட்பீர் தமிழ் மக்காள்... விதிக்
கிழவி மிகக் கொடியாள்!
ஆட்சி தர மறுப்பாள்! உமை
அலைப்பாள்! துயர் கொடுப்பாள்!
நாட்கள் சில போனால் இவள்
நலிவாள்... உடல் மெலிவாள்!
மிட்சி வருமொரு நாள்.. அது
வரைக்கும் இவள் திருநாள்!

வையம் பெறும் இன்பம் ஒரு
வல்லோன் கொடை யாகும்!
தெய்வம் ஒரு நாளும் அட
தீங்கிழைப்ப தில்லை!
எய்தும் துய ரெல்லாம் விதி
இவளின் விளையாட்டே!
ஐயம் இதில் வேண்டாம்... இறை
ஆற்றல்தனை யுணர்வீர்!

ஆண்டிலொரு நூறா? இலை
அதிலே ஒரு பாதி
தாண்டு முனம் தமிழர்க்கொரு
தனிநா டுருவாகும்!

ஈண்டிதனை இறைவன் உமக்
கெடுத்தருளச் சொல்லி
வேண்டின தால் செப்புகிறேன்..
விடுக துய ரென்றான்!

காலமுனி உரைத்தான்! படை
மறவர் களிப் புற்றார்!
நீல நெடு வானம் வரை
பாய்ந்தார் நிலம் வீழ்ந்தார்!

நாலுதிசை யதிரக் கரம்
அடித்தார்! நகை வெடித்தார்!
கோல முகம் படைத்தார்! முனி
குளிர்ந்து மொழி தொடர்வான்...

பூத்த மரம் போல் விளங்கும்
புதிய தமிழ்க் குலமே!
காத்திருந்து கனி பறிப்பீர்...
அதுவரைக்கும் இமைகள்
சாத்தி உறங்காதீர்! படை
வரிசை சரி பார்ப்பீர்!

கூத்து வருமொரு நாள்.. உயிர்
கொடுத்து முடி கொள்வீர்!

போர் நாள் வரு முன்னே... இடை
நாளில் தமிழ் மண்ணில்
கூர் வாளிலும் கொடியோர் சிலர்
குடி கொன்றிடப் பார்ப்பார்!
சோர்வால் மனங் குலையா நிலை
கொண்டே செயல் புரிவீர்!
ஓர் நாள் வரும்... அந்நாள் தமிழ்
உய்யுந் திருநாளே!

சாதி யெனுந் தீமை... மதச்
சண்டை தலை தூக்கும்!
வீதி குடி ஊர்களென
வேற்றுமைக ளோங்கும்!
நீதி நெறி சொன்ன தமிழ்
நிலம் இழிவு தேடும்!
மோதி விதிக் கிழவி செயல்
வென்று முர சார்ப்பீர்!

பிச்சை யுண வொன்றே பெரி
தென்பான் வயிறுடையான்!
எச்சில் வரு மெனினுந் தமிழ்
இனத்தை விலை வைப்பான்!
நச்சு மகன் குடி கேடன்
நன்றியிலாப் பாவி..
உச்சி பிளந்திடுவீர்! இவன்
ஒழிந்தால் விடிவுண்டே!

தீனி முத லென்பான் வயி
றுடையான்! இவன் தோழன்
ஈன மகன் தன்ன லத்தான்
இனத்தை மதிப்பானா?
தா னுயர்வு பெறுவதெளில்
தாள் பிடித்து நிற்பான்!
மானம் விலை வைப்பான்! இவன்
மனைவியையும் விற்பான்!

இழிவுடையான் தன்னலத்தான்
எதுவரினும் அஞ்சான்!
அழிவு தமி ழினமடைய
அத்தனையுஞ் செய்வான்!
மொழியினிலு மழகு தமிழ்
மொழி மறந்த கொடியன்!
குழி நெருப்பில் இவனுடலகம்
கொடுத்து வெறி கொள்வீர்!

என்றுரைத்தான் காலமுனி
எனது முகம் பார்த்தான்...
நன்று கவிக் குழந்தாய்... ஒரு
நாடமைக்க எழுந்தாய்!
இன்றுவரை தமிழ்ப்புலவன்
ஏடெழுதிக் கெட்டான்!
உன்றனைப் போல களத்திலெவன்
உலவியவ னென்றான்!

ஏடு படைக் கின்ற குலம்
இனிய தமிழ் மொழிக்குக்
கேடு படைப்போ ரதிரக்
கிளர்ச்சி செயும் பொன்னாள்
நாடு படைக் கின்ற திரு
நாளென நான் மொழிவேன்
ஓடு படையோடு புறம்
உணர்ந்த மறத்தமிழா!

நாள் கனியும் நாள் கனிய
மனங்கனியும் நாட்டில்!
வாள் மறையும்! போர்க்கருவி
கொலை மறையும்! அன்பே
தோள் கொடுக்கும்! தமிழ்ச்சாதி
அறஞ் சுமந்து வெல்லும்
ஆள்பவராய்த் தமிழினத்தார்
ஆவது மெய் யறிமின்!

என மொழிந்து காலமுனி
இருகரமுந் தூக்கி
புனல் பொழிந்த தென இதழில்
புது முறுவல் சிந்தி
இனியபடி வாழ்த்தி வெளி
ஏற்றி வழி விட்டான்...
முனிவரனின் அடிதொழுது
முழங்கு படை பெயரும்..
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:33:38 AM

நெடும் போர்


கொட்டு செங் குருதிக் களத்தினி லாங்கே
கொதித்தெழும் மறவர்தம்மிடையே
கட்டுடல் வீரன் ஒரு தமிழ் நெஞ்சன்
கடலென அதிர்ந்தொலி செய்வான்

தமிழர் பொன்னாட்டைத் தாயக மண்ணைத்
தரமறுக் கின்றவ னெவனோ...?
இமை நொடிப் போதி லெழுந்திரு தமிழா?
இன்னுயிர் நமக்கொரு பொருளோ?

ஓடுக தானை! ஓடுக பகைவர்
உலவிடும் திசைவழி யெல்லாம்
தேடுக தமிழர் தேசத்தின் மானம்...
தெய்வத்தில் ஆணையிட் டெழடா!

பைந்தமிழ் மொழியை எவன் பழித்தாலும்
பழித்தவன் தலை கொண்டு வாடா?
ஐந்து துண்டாக்கி அடுப்பினில் வைப்போம்!
அது நமக் குணவாகும் போடா!

கருவினில் அன்னை வளர்த்ததும் இந்தக்
கைகளைத் தந்ததும் எல்லாம்
செருவினில் வெற்றிக் கொடியுடன் நின்று
சிரிப்பதற் கன்றோடா தமிழா!

ஆழிபோல் ஆழி அலைபோல் முழங்கி
ஆடடா.... போர்க்களமாடு!
நாழிகை யொன்றில் நாடாள வேண்டும்
நாமென்று சிங்கம் போலார்த்தான்!

சங்கொன்று களத்தில் முழங்கிற்று! வீரர்
தானையும் முழங்கிற்று கண்டீர்!
பொங்குபோர்க் களத்தில் மாற்றாரும் போந்தார்!
போரென்று கொட்டிற்று முரசம்!

அதிர்ந்தன திசைகள்! அசைந்தன மலைகள்!
அழிந்தன காடுக ளெல்லாம்!
உதிர்ந்தன கரங்கள்! உடைந்தன தலைகள்!
உயர்ந்தன பிணமலைக் குவியல்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:35:01 AM

அறப்போர்


எட்டுத் திசைகளும் பட்டுத் தெறித்தன
ஈனர் குண்டுகளே! - குண்டு
பட்டுத் தமதுடல் கெட்டுச் சிதறிடப்
பாய்ந்தார் தொண்டர்களே!

மானம் பெரிதென ஊன உடல்விழ
மாண்டார் தமிழ் வீரர்! - ஆவி
தானம் எனத்தந்த மானத் தமிழன் தோள்
தங்கம்! தங்கமடா!

பெண்களை மென்மைப் பிறவிகளென்று
பேச மனம் வருமோ? - அங்கே
மண்ணி லுயிர்சிந்தும் இளைஞர்க்கு வாய்த்த
மகளிர் குலமல்லவோ?

பள்ளிச் சிறார்களும் நல்லறப் போரிலே
பாய்ந்து களிக்கின்றார்! - செந்நீர்
வெள்ளத்திலாடி மரணத்தின் முத்தம்
விரும்பித் துடிக்கின்றார்!

ஓவென்றிரைந்து நடக்குதடா எங்கும்
உரிமைப் போராட்டம்! - வாழ்வு
தாவென்று கேட்டு மடியுதடா எங்கள்
தமிழர் படைக்கூட்டம்!

தன்னை வருத்தியும் தன்னுயிர் தந்தும்
தமிழன் மடிகின்றான்! - தங்கள்
பொன்னுயிர் சிந்தும் புறாக்களைக் கண்டு
புலவன் மலர்கின்றான்!

எங்கும் பிணத்திரள்! எங்கும் பிணநெடி!
இனிய அறமங்கை - கண்ணில்
பொங்கி வழியும் புனலின் நெருப்பிலே
பூமி அழியாதே?

ஈழம் தமிழ்மண் இரண்டிலுஞ் செந்நீர்
எழுந்து பெருக்கெடுத்து - நின்ற
ஆழியுஞ் செங்கடலானது கண்டார்!
அதிர்ந்தார் புவிமாந்தர்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:35:46 AM

சாவும் ஒரு வாழ்வே!

ஏடா! தமிழ் வீரா! உனை
எலிபோல் நினைத்தாரா?
வாடா படை யூடே அற
வலியின் துணை யோடே!
நாடா பிணக் காடா என
நால்வர் மடிந்தாலும்
போடா அவர் வழியே! நகை
புரிவாள் தமிழ் மொழியே!

குண்டாந்தடி கொண்டே அடி
தந்தார் வெறியாளர்
என்றால் அது நன்றே! உமை
ஈன்றாள் புகழுண்டே!
பண்டை மொழி என்பார் தமிழ்
பார்ப்போம் அதை வீணர்
வென்றா விடுவார்கள்? மற
வேங்கை விடுவானோ?

"முத்தே! முழு நிலவே! விடை
மொழிவாய்!" என இல்லாள்
பத்தே விரல் பற்றி அவள்
பதிலின் வெறி பெற்று...
"சொத்தே! மொழி வித்தே! தமிழ்ச்
சொல்லே! உனக்காகச்
செத்தே மடிகின்றேன்!" எனச்
செல்வாய் தமிழ் ஏறே!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:36:56 AM

வெற்றி விழா


முரசுகள் அதிர்ந்தன கேண்மினோ! கேண்மின்!
முழங்கின ஊதுகுழல்!
புரவிகள் ஆடின காண்மினோ! காண்மின்!
பொழிந்தன தமிழ்ப்பாடல்!
நிரை நிரை காவடி நிறைந்தன கண்டீர்!
நிகழ்ந்தன நடனங்கள்!
அரசொடு தமிழகம் மலர்ந்தது கண்டார்!
அனைவரும் மகிழ்கின்றார்!

தூயவெண் சங்குகள் கூவின! கூவின!
தோன்றின கவிதைகள்!
ஆயிரம் வகை வகை வீணைகள் ஆர்த்தன!
அதிர்ந்தன வேட்டுக்கள்!
தாயகம் தனியரசானது! தேனிசை
தவழ்ந்தது காற்றெல்லாம்!
சேயிழை தமிழ்மகள் வாய்மலர் இதழ்களும்
சிரித்தன சிரித்தனவே!

நீள்நெடு மாளிகை வீடுகள் நிறைந்தன!
குடிசைகள் நீங்கினவே!
நாள்தொறும் வாடிய ஏழையர் பூமுகம்
நகைத்தன! நகைத்தனவே!
ஆள்பவர் அடிமையர் உள்ளவர் அற்றவர்
ஆகிய பேதங்கள்
தூள்பட விடுதலை வந்தது! விண்மிசை
பறவைகள் துள்ளுதடா!

பனிமலர் புகைப்பொருள் சந்தனம் மணந்தன!
பாவையர் எழில் காட்டும்
கனிவகை பாலொடு சர்க்கரை கரும்புகள்
இனித்தன வாயெல்லாம்!
தனியெழில் கொண்டது தமிழகம்! பந்தல்கள்
தாங்கின வீதிகளை
மனிதரின் திரள்நிறைக் கின்றதால் ஊர்மிசை
வீதிகள் மறைந்தன காண்!

கோயில்க ளெங்கணும் மணியொலி கொஞ்சின!
தமிழ்மனம் குளிர்ந்ததடா!
போயின ஊர்வலம்! வீடெலாம் பொன்விழா!
பூத்தன நிறைகுடங்கள்!
ஆயிரம் எழில்வகை! விடுதலை நாளெனில்
அழகொரு காட்சியன்றோ?
வாயிதழ் எங்கணும் வாழ்த்தொலி நின்றது!
வாழிய தமிழ் நாடே!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:37:35 AM

விழா

முத்து நிலாப்பொழியும் முற்றம் நெடுந்தொலைவில்
கத்துங் குயிலின் கனிப்பாடல்
குத்து
விளக்கெரியும் வண்ண விழாமேடை! ஆங்கே
உளக்கனியில் தேன்கொண்ட ஊர்!

வெள்ளி ஒளித் தூண்கள்! மேலே மணிக்கூரை!
கொள்ளை அழகு நிறைகோவில்!
உள்ளே
இருக்கை பசும்பொன்! எழில்சேர் இரவின்
திருக்கோலம் வேறு சிறப்பு!

தங்க நகையாள் தமிழ்க்கன்னி தேன்பாவை
பொங்க இருந்தாங்கே பூக்கின்றாள்!
திங்கள்
ஒளிநலமும் தென்றல் உணர்த்தும் நலமும்
களிக்கின்றாள்... ஓவியங் காண்!

நீல நெடுவானம் எங்கும் கொடிநிரைகள்!
கோலமொழி மகளின் கொண்டாட்டம்!
காலமுனி!
ஆங்கு விழாக் காணும் ஐயன் இதழ்முறுவல்
தாங்கும் அழகோ தனி!

மரகதம்சேர் வண்ண முடிசுமந்து மக்கள்
திரளிடையே வாழ்கின்றாள் தேவி!
கரமிசை
செங்கோல் சுமந்து சிரிக்கின்றாள்... ஞாலத்தே
பொங்கும் மகிழ்ச்சிப் புனல்!

பவள இதழ்கள் பளபளக்கும்....! ஆசை
தவழ ஒரு முறுவல் தாவும்!
இவளேன்
விழியாலே என்னை வெறிக்கப் பார்க் கின்றாள்?
அழியாத காதல் அழகு!

கோமே தகத்தின் குளிர்ந்த ஒளிகொண்டாள்!
நாமீதி லாடும்எழில் நங்கை!
பூமூடும்
தேனாகி நிற்கின்ற தேவி அருந்தமிழே
நானாகி நிற்கின்றேன் நான்!

வைர நெடும்போர் ஆடி உடல்வளைந்து
மையின் தலைநரைத்த மானிடன்
செய்ய தமிழ்ப்
பாவலன் பெற்ற பசுங்காதல் ஓவியமே!
தேமொழியே வாழ்க திகழ்ந்து!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:38:31 AM

சீறி எழுந்திடடா!

முத்தமிழ் மன்னர்கள் ஆண்ட தமிழ்நிலம்
மூக்கறு பட்டதடா! - சுய
புத்தி இழந்தவர் ஆட்சியிலே தமிழ்
பொத்தென்று வீழ்ந்ததடா! - அட!
எத்தர்கள் சட்டம் எழுதி அனுப்பிய
இந்தி நுழைந்ததடா! - இனிச்
செத்து மடிவதும் வாழ்வதும் ஒன்றுதான்!
சீறி எழுந்திடடா!

தங்கம் இருக்கையிலே தெருக் கற்களைத்
தாலிக்கு வைப்போமோ? - ஒளித்
திங்களை விட்டிங்கு மின்மினிப் பூச்சியின்
தேகத்தை வாழ்த்துவமோ? - அட
பொங்கும் அழகுத் தமிழை மறந்தொரு
பொய்யை வணங்குவமோ? - உடல்
அங்குலம் அங்குலம் ஆயினும் வெங்களம்
ஆடப் புறப்படடா!

என்ன நினைப்பில் துணிந்துவிட்டார்? இவர்
இப்படிச் செய்து விட்டார்! - நமைச்
சின்னவர் என்று கருதிவிட்டா ரெனில்
செய்கை பிழைத்துவிட்டார்! - அட!
அன்னை மொழிக்கொரு தீங்கெனில் இங்கவர்
ஆட்சி நடைபெறுமோ? - ஒளி
மின்னல் முகில் இடி என்ன வரும்படை
மீண்டும் அமைத்திடடா!

சட்ட வடிவினள் இந்தி சடலத்தின்
சாம்பல் கரைத்திடுவோம்! - சிறைக்
கட்டை உடைத்துக் களம்புகுந் தாடுவோம்!
காற்றில் வலம் வருவோம்! - அட!
கொட்டு முரசொடு வான்புகழ் கொண்டவர்
கூனி மடிவதோடா? - இமை
வெட்டும் ஒரு நொடி வேளையிலாயிரம்
வீரம் விளைத்திடடா!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:39:13 AM

உணர்ச்சி


என்னடா தோழா செருக்களமா? அட
எங்கேயடா? எனக் கூவி
சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை
துள்ளி அவாவுடன் தாவி
என்னிரு கண்கள் எதிரினிலே தொலை
இடத்தி லெதிர்ப்படை கண்டேன்!
பின்னொரு வார்த்தை யுரைப்பதுண்டோ? கொடி
பிடித்துப் பறக்குது தானை!

குன்றங்கள் தாவிக் கொடும்பகைவர் தலை
கொண்டு வரும்படை போலே
சென்றது தானை செருக்களத்தின்மிசை
செப்புகிறார்.. அட மாற்றார்
கொன்றிடல் போலும் வசைமொழிகள் எழில்
கொஞ்சுந் தமிழ்மொழி மேலே!
நன்றடா நன்று... பிறமொழிகள் தமிழ்
நாட்டை அழிக்கவோ? பார்ப்போம்!

சித்திரச் சோலைப் புறத்தினில் வானிடை
சிறகை அடித்தொலி செய்தே
கத்திப் பறந்த பறவை அணியெனக்
காற்றில் பறக்குது தானை!
புத்தொளி வீசும் விழிகளைப் பாடவோ?
மூச்சுப் புயலை எழுதவோ?
தத்து நடைத்தமிழ் தானைநடையினைப்
பாடத் தகுமோ தமிழரே?
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:39:47 AM

தமிழன் கனவு


பூவிரியும் போதினிலே
வண்டினங்கள் கவிபொழியும்!

தாவிவிழும் மலையருவி
கவிபொழியும்! சோலைதொறும்

கூவிநின்று பூங்குயில்கள்
கவிபொழியும் தமிழ்நாட்டில்...

கோவிலிலே மணியொலியும்
கவிபொழியும்.... போதாதோ?

ஆவியொன்று தந்தெனையும்
அருந்தமிழில் கவிபொழிய

மேவியவன் திருநோக்கம்
மிகவுணர்ந்து நானொருவன்

நாவினிக்க நெஞ்சினிக்க
என்னுடையான் அடிநயந்து

மாவிளக்கின் ஒளியேற்றி
மலர்சொரிந்து கவிபொழிவேன்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:40:18 AM

ஒன்றுபடு!

சாதி மதமெனும் பேதங்கள் சாயவே
தமிழா ஒன்றுபடு!
ஆதி மகளெனும் தமிழை அரசியாய்
ஆக்கி வாழவிடு!

கந்தன் பறையனென் றுரைக்கும் கயவனைக்
கண்ணீர் வர வதைப்பாய்!
இந்துவும் இஸ்லா மியனும் பொருதினால்
இருவரையும் உதைப்பாய்!

ஊருக்கூர் சண்டை தெருத்தெரு சண்டை
உருப்படு வோமோடா?
பாருக்குள் அடிமைத் தமிழர் நமக்குள்ளே
பத்துப் பிரிவோடா?

தேசம் பலவினும் வாழும் காக்கைக்குலம்
சிதைந்து பிரிவதில்லை!
பேசும் மொழியால் அவை ஒன்றுகூடும்
பெருமை நமக்கில்லை!

ஒன்று படடா தமிழா! உறுதுயர்
ஓடப் படை நடத்து!
வென்று புகழ்கொண்டு வாடா! விடுதலை
வேண்டும் தமிழனுக்கு!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:41:38 AM

உணர்ச்சி

என்னடா தோழா செருக்களமா? அட
எங்கேயடா? எனக் கூவி

சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை
துள்ளி அவாவுடன் தாவி

என்னிரு கண்கள் எதிரினிலே தொலை
இடத்தி லெதிர்ப்படை கண்டேன்!

பின்னொரு வார்த்தை யுரைப்பதுண்டோ? கொடி
பிடித்துப் பறக்குது தானை!

குன்றங்கள் தாவிக் கொடும்பகைவர் தலை
கொண்டு வரும்படை போலே

சென்றது தானை செருக்களத்தின்மிசை
செப்புகிறார்... அட மாற்றார்

கொன்றிடல் போலும் வசைமொழிகள் எழில்
கொஞ்சுந் தமிழ்மொழி மேலே!

நன்றடா நன்று... பிறமொழிகள் தமிழ்
நாட்டை அழிக்கவோ? பார்ப்போம்!

சித்திரச் சோலைப் புறத்தினில் வானிடை
சிறகை அடித்தொலி செய்தே

கத்திப் பறந்த பறவை அணியெனக்
காற்றில் பறக்குது தானை!

புத்தொளி வீசும் விழிகளைப் பாடவோ?
மூச்சுப் புயலை எழுதவோ?

தத்து நடைத்தமிழ் தானைநடையினைப்
பாடத் தகுமோ தமிழரே?
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:42:53 AM

தமிழீழத்தின் அழகு தனியழகு


தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள்
தாயகத்தின் பெருமை அறியும் உலகு

கடல் சூழ்ந்த யாழ்பாணம்
படகு போல் இருக்கும்!

கரை மணலில் நண்டு
ஏதேதோ கிறுக்கும்!

குடைபோலும் பனைமரம்
பார்ப்போரை மயக்கும்!

கொள்ளை அழகு என்று
உலகமே வியக்கும்!

கோணமா மலைமீதில்
அலை மோதிப் பாயும்!
கூட்டமாய் எழில் மான்கள்
கடலோரம் மேயும்!

தேன் நிலாக் காலத்தில்
கடலில் பொன் பூக்கும்!
தீந்தமிழ்ப் புலவன்கை
எழுதுகோல் தூக்கும்!

மட்டு நகர் மண்ணில்
மீன் கூடப் பாடும்!

மணல் மேட்டில் கடல் காற்றில்
தென்னை கூத்தாடும்!

பட்டிப்பளை வயல்
தங்கமாய் காய்க்கும்!
பரண்மீது உழவர்பெண்
தமிழ்ப்பாடல் கேட்கும்!

விழிகளில் வன்னி மண்
அழகள்ளிச் சொரியும்!

வேரில்லாச் செடியைப் போல்
மயிலாடித் திரியும்

எழில் தோய்ந்த மன்னாரில்
முத்துக்கள் கிடைக்கும்!

ஈழத்தின் திசை நான்கும்
ஓவியம் படைக்கும்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:45:38 AM

எழுவாய் நீ நெருப்பாய்!


தமிழா நீ தமிழ் வாழப்
பணி ஆற்று!

தமிழல்லவா உன்னை
இயக்கும் உயிர்க்காற்று!

உறவை நீ இழக்காதே!
தமிழையே மொழிவாய்!

பிறமொழி கலக்காதே!
கலந்தால் நீ அழிவாய்!

இசைவிழா மேடையில்
தமிழிசை முழக்கு!

வசையாரும் பாடினால்...
வரலாற்றை விளக்கு!

மண்மீதில் தமிழ்ப்புலவன்
மனம் நோக விடாதே!

உண்ணாமல் அவன் வாழ்ந்தால்
உணவை நீ தொடாதே!

தமிழ்வாழ உழைப்போர்க்கு
துணையாக இருப்பாய்!
தமிழையார் எதிர்த்தாலும்
எழுவாய் நீ நெருப்பாய்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:46:09 AM

ஏன் இந்த நடிப்பு?


கைதட்டத்தானா உன் கை? - தமிழா!
கைதட்டத்தானா உன் கை?

வையமெல்லாம் பகைவர்
நமைமோதும் வேளை - உன்
கையிரண்டும் களத்தில்
ஏந்தாதா வாளை?

ஆட்சி இழந்தாய்
திசைதோறும் அலைந்தாய்! - வெறும்
காட்சிப் பொருளாய் நீ
உயிர் வாழ்ந்து தொலைந்தாய்!

என்னடா உனக்கு
என்றென்றும் உதையா? - உன்
முன்னவன் இமயம்
வென்றானே - கதையா?

கொடுமை மறந்தா உன்
கை ஓசை வெடிப்பு? - அட!
அடிமை உன் வாழ்வில்
ஏன் இந்த நடிப்பு?
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:47:09 AM

செத்த நாள்

ஆடா மயிலாய் அசையா இளங்கொடியாய்
ஓடா நதியாய் ஒரு புதிராய்
நாடெல்லாம்....
வீசாத தென்றலாய் வீசும் தமிழ்ப் பெருமை
பேசாத வாய் பிணத்தின் வாய்!

புறமும் அகப்பாட்டும் காப்பியனால் பூத்த
இறவா இலக்கணத்தின் ஏடும்
குறள் மொழியும்
ஆர்க்கும் சிலம்பின் அழகு தமிழ் நடையும்
பார்க்காத கண் பாவக்கண்!

கத்து கடல்பறித்தும் கல்லாதார் தீவைத்தும்
குத்து வடமொழியின் கூர்பட்டும்
இத்தனைக்கும்....
வாடாத செந்தமிழின் வரலாறு கேட்டபின்
ஆடாத கால் ஆனைக்கால்!

வானம் அளவு வளர்ந்து மொழிக்கெல்லாம்
தானம் கொடுத்த தமிழேட்டில்
ஈனம்
படைக்க வந்தாரா? அவர் பல்லை ஓங்கி
உடைக்காத கை உலக்கை!

ஆளிருந்தால் என்ன? அழகிருந்தாலும் என்ன?
நீள்விழியார் நெஞ்சில் நிறைந்ததென்ன?
கேள் தோழா!
வையம் புகழும் தமிழ்க்கவிதை என் வாழ்வில்
செய்யாத நாள் செத்த நாள்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:47:50 AM

பாடு குயிலே!

புள்ளிச் சிறகடித்துப் பாடுகுயிலே! - தமிழன்
புதிது பிறந்தானென்று பாடுகுயிலே!
வெள்ளிக் குரலெடுத்துப் பாடுகுயிலே! - எங்கள்
விடுதலை வந்ததென்று பாடுகுயிலே!

நேற்றுவரை உலகில் அஞ்சிநடந்தோம்! - பிறர்
நீட்டும் எலும்புகளை உண்டு கிடந்தோம்!
காற்றுத் திரும்பியது கண்டு மகிழ்ந்தோம் - ஒரு
கவிதை பிறந்ததென்று பாடுகுயிலே!

சாதிப் பிரிவினைக்குச் சாட்டை கொடுத்தோம் - தமிழ்ச்
சாதிக்கு மட்டுமிந்த நாட்டைக் கொடுத்தோம்!
வீதிக்கு வீதி மொழி வேட்கை படைத்தோம்! - விடி
வெள்ளி முளைத்ததென்று பாடுகுயிலே!

ஆளப் பிறந்தவர்கள் நாடு சமைத்தோம்! - எமை
ஆட்டிப் படைத்தவர்க்குப் பாடை சமைத்தோம்!
ஈழத் தமிழ்மனைக்குப் பாலம் அமைத்தோம்! - கவி
எண்ணம் பலித்ததென்று பாடுகுயிலே!

எட்டுத் திசைகளிலும் வெற்றி மகிழ்ந்தோம் - விண்ணின்
எல்லைதனிலே கொடிகட்டி மகிழ்ந்தோம்!
கொட்டும் முரசொடுகை தட்டிமகிழ்தோம் - இது
கொள்ளை மகிழ்ச்சி என்று பாடுகுயிலே!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:48:53 AM

நில்லடா தம்பி!

முடங்கி வளைந்த முதுகே! நிமிர்வாய்!
நடுங்கிக் கிடந்த நாட்கள் தொலைந்தன!
காய்ந்த தமிழன் கண்ணை விழித்தான்!
தேய்ந்த வீரம் திரும்பி வந்தது!
நில்லடா தம்பி! நெருப்பில் நீநட!
கொல்லும் சாவினைக் கூப்பிட் டழைப்பாய்!
போனாலும் உயிர் போய்த் தொலையட்டும்...
மானம் காத்து மண்டையைப் போடு!
தமிழன் நாட்டைத் தமிழன் ஆளும்
அமிழ்தப் பொன்னாள் இந்நாள் மலர்க!
வெள்ளமே! விரைந்துவா! விடுதலை
கொள்ளும் நாளைக் கொண்டு வருகவே!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:49:52 AM

அந்நாள் எங்கே?

முடியோடு முன்னாளில்
மூவேந்தர் புகழோடு
முரசி னோடு

கொடியோடு மாற்றார்முன்
குனியாத மார்போடு
கொற்றத் தோடு

படையோடு தனியான
பண்போடு பிறநாடு
பார்த்துப் போற்றும்

நடையோடு பாராண்ட
தமிழா! உன் நாடெங்கே?
புகழேடெங்கே?

தரணிக்கோ உன்நாடு
தாய்நாடு! நீயோ பார்
பட்டாய் பாடு!

தெருவுக்கு வந்தாய் பார்!
தேகத்தை விற்றே தின்
றாய் சாப்பாடு!

மரபுக்கு மாறாக
மாற்றான் கால் ஏற்றாய்பார்!
கெட்டாய் கேடு!

பரணிக்குப் பொருள்தந்த
தமிழா! பாழடித்தாய் பார்
வரலாற்றேடு!

வஞ்சத்தால் தமிழ்மண்ணின்
வாழ்வுக்குத் தீ வைக்க
வருவோர் தம்மை

நஞ்சுண்ட கைவேலின்
நாவுக்குப் பலியாக்கி
நாடு காத்த

நெஞ்சங்கள் இன்றெங்கே?
தமிழ்மான நெற்காட்டில்
நெருஞ்சிப் பூண்டை

அஞ்சாமல் நட்டதார்?
தமிழா! உன் போர்வீரம்
அழிந்த தோடா?

வாள்தொட்ட கையெல்லாம்
வலிகுன்றிப் புகழ்குன்றி
மானம் குன்றிக்

கால்தொட்டு வாழ்கின்ற
கண்றாவிக் காலத்தைக்
கண்ணால் கண்டோம்...

பாழ்பட்ட இந்நாட்கள்
பலநாட்கள் ஆகாமல்
பார்த்துக் கொள்வோம்!

தோள்தட்டி மானத்தில்
தோய்கின்ற போராட்டம்
தொடங்கு வோமே!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:50:44 AM

உயிரைத் தூக்கி எறி!

பொன்னால் ஆன தமிழைப்
பொருதும் உடலை முறி!
உன்னால் இயலா தெனில் உன்
உயிரைத் தூக்கி எறி!

மோதித் தமிழ்வாழ் வழிக்கும்
முரடன் உடலைச் சுடு!
நாதி இல்லை எனிலோ
நஞ்சைக் குடித்துப் படு!

பவளத் தமிழர் மண்ணை
பறிப்போன் உடலை மிதி!
அவனைக் கண்டஞ் சுவையேல்
ஆற்றிலேனும் குதி!

மறத்தின் தமிழர் மண்ணில்
மாற்றான் உடலைத் தொலை!
புறத்தில் ஒதுங்கு வாயேல்
போ! நீ செய் தற்கொலை!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:51:39 AM

தமிழ் உணர்வு


தமிழென் அன்னை! தமிழென் தந்தை!
தமிழென்றன் உடன் பிறப்பு!
தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை!
தமிழென் நட்புடைத் தோழன்!
தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்!
தமிழென் மாமணித் தேசம்!
தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்!
தமிழே என்னுயிர் மூலம்!

என்றன் தமிழுடல் எழவே எழுவான்
எழுதமிழ் வானின் பரிதி!
என்றன் தமிழ்மூச் சென்பது தமிழாம்
எறிவான் இடிபுயல்! அறிதி!
என்றன் தமிழ்நரம் பினிலே பாயும்
எரிதழல் ஆற்றுக் குருதி!
என்றன் தமிழை எவன் பழித்தாலும்
எமன் அவனைத் தொடல் உறுதி!

நான் தமிழனடா! நானொரு தமிழன்!
நாற்றிசையும் இது மொழிவன்!
நான் ஒரு வெறியன் என நகை செய்வோன்
நற்றமிழ் அறியான் இழிஞன்!
நான் உயர்தமிழின் வளமுணர் தமிழன்!
நந்தமிழ் எழயான் எழுவன்!
நான் இழிகழுதை அல்லன்.... வலியன்!
நானிலத்தீர்! இது தெளிமின்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:52:51 AM

போர்!


எழுந்தது தமிழன் தோள்!
இடிந்தது சிறையின் தாள்!
சுழன்றது மறவன் வாள்!
பிறந்தது தமிழர் நாள்!

திரிந்தது பொறிகொள் தேர்!
எரிந்தது பகைவன் ஊர்!
பொழிந்தது குருதி நீர்!
நிகழ்ந்தது தமிழன் போர்!

அதிர்ந்தது முழவின் தோல்!
அழிந்தது திசை ஓர் பால்
பறந்தது வெறியர் கோல்!
பிறந்தது புறப்பா நூல்!

குவிந்தது பகைவர் ஊன்!
மகிழ்ந்தது கழுகு தீன்!
நிமிர்ந்தது தமிழர் கூன்
பறந்தது புலிவில் மீன்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:54:50 AM

பேயன்

அருவண்ணத் தமிழ் மண்ணில்
ஆரியனை முன்போர் நாள்
வருக என அழைத்திங்கே
வாழ்வித்த முதுதமிழன்
சுருள்குடுமி ஆரியனின்
சூழ்ச்சிக்கே பலியானான்.....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

கருநெஞ்சன் வங்கத்தான்
கயவன் விசயனென்பான்
வருபோதில் இலங்கைமண்
வாசல் திறந்துவைத்த
உருகுவிழல் மனத்தமிழன்
ஒளிஈழம் பறிகொடுத்தான்....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

அரு ஞாலத் திசையெல்லாம்
அங்கெல்லாம் இங்கெல்லாம்
கருகி உழைத்து வளம்
கனிவித்த உயர் தமிழன்
எருவாகிப் பிறன்வாழ்வை
எழிலாக்கித் தான் மாய்ந்தான்...

பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

திருவோங்கு பாரதம்
தெய்வமென்றும் சிங்களம்
தருசுகமே சுகமென்றும்
தனை மறந்த பெருந்தமிழன்
ஒருநாடு தனக்கின்றி
ஊர் ஊராய் உதைபட்டான்....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!

அருளாளன் எந்தமிழன்
அனைத்தூரும் ஊரென்றான்...
எருமை இவனை ஒருவன்
"ஏ! கள்ளத் தோணி" என்றான்!
பொருமி எழா இழிதமிழன்
பொறுத்திருப்போம் என்றானே....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்.
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:55:24 AM

தாவுவோம்!


பண்டை நாள் பகைமை கொண்ட நாடுகளை
வென்ற மானிடர்கள் வீழவோ....?
மண்டை ஓடுகளை நண்டின் ஓடுநிகர்
துண்டு செய்தவர்கள் தூங்கவோ?
சண்டையின் பெருமை கொண்ட தமிழர்கள்
கண்ட கண்டபடி சாகவோ?
குண்டை ஏந்தியெமை அண்டும் மாற்றானை
முண்டமாக்கி வர ஓடுவோம்!

குங்குமம் குருதி பொங்கிடத் தமிழன்
வெங்களச் செருவில் ஆடவும்
சிங்களப் பகைவர் கண்களைத் தமிழர்
தங்கொடித் திரைகள் மூடவும்
கங்கையின் வடவர் சங்கடப் படவும்
இங்கு வெம்பரணி பாடவும்
சங்கு கத்தியது! பொங்கு மாமறவர்
செங்களத்து மிசை தாவுவோம்!

தட்டுவோம் தோள்கள்! கொட்டுவோம் முரசு!
வெட்டுவோம் தளைகள் வெட்டுவோம்!
எட்டெனும் திசைகள் முற்றிலும் கொடியர்
வெற்றுடல் கால்கொண் டெற்றுவோம்!
கிட்டுவாள் இனிய வெற்றி மாமகளின்
ஒட்டிலே புகழை முட்டுவோம்!
பட்டிலே கொடிகள் வெட்டவான் வெளியில்
விட்டிசைகள் மிழற்றுவோம்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:56:08 AM

அட தமிழா!

ஏனடா... ஆண்டான்
புண்ணினை நக்கிப்
போட்டதை விழுங்கும்
உண்ணி நாயானாய்
ஒழிந்ததோ மானம்?
கண் சிவந்தோடிக்
களம் புக வாடா!

ஆண்டவன் அன்றோ?
அட தமிழா நீ
பாண்டியன் அன்றோ?
பாரடா உன்னை
ஈண்டு மாற்றார்கள்
எச்சிலால் வளர்த்தார்...
கூண்டினை நொறுக்கு!
குதியடா வெளியே!

உரிமை இழந்தாய்!
ஊழியஞ் செய்தாய்!
வரிகள் கொடுத்தாய்!
வளைந்து பிழைத்தாய்!
விரிபழம் புகழை
விற்றனை பாவி!
எரிமலை ஆகடா!
எழுக நீ எழுக!

தூக்கடா வாளை!
தோளை உயர்த்தடா!
தாக்கடா பகையை!
தலைகள் வீழ்த்தடா!
நீக்கடா தளையை!
நிமிர்ந்து நில்லடா!
ஆக்கடா கொற்றம்!
ஆளடா இன்றே!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:57:18 AM

தோழா!


என்னைப் போலொரு மானிடன் என்னை
எப்படித் தாழ்த்தலாம் தோழா? - அவன்
அன்னை போலவே என்னையும் அன்னை
ஆக்கினள் நானென்ன கீழா?

ஆணை செலுத்தவும் ஆளவும் இங்கே
ஆவி அவனெடுத்தானா? - பிச்சைப்
பானை ஏந்திய கையனாய் இந்தப்
பாவி பிறந்து வந்தேனா?

காற்று வானிலே சிட்டுக்கள் கண்டேன்....
களிப்பினில் என்னை மறந்தேன் - இன்பம்
ஏற்று மறுபொழு தென்கரம் பார்த்தேன்....
இருகை விலங்கோ டிருந்தேன்!

அஞ்சி நடுங்கியும் நெஞ்சம் பதைத்தும்
ஆயுள் கழிந்தது தோழா! - உயிர்
கொஞ்சம் இருந்தது.... கூறடா இந்தக்
கொடுமைக்கும் பேரென்ன ஊழா?

என்ன தமிழனோ? ஏன் பிறந்தேனோ?
என்னடா அடிமையின் வாழ்வு! - சீச்சீ
இன்னோர் மனிதனுக் கூழியஞ் செய்தேன்!
இருப்பதிலும் நன்று சாவு!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 05:59:01 AM

தழலிடு!

காட்டிக் கொடுப்பவன் எங்கே? - அந்தக்
கயவனைக் கொண்டு வா! தூணோடு கட்டு!
சாட்டை எடுத்துவா இங்கே! - தம்பி
சாகும்வரை அடி பின்பு கொளுத்து!

அன்னைத் தமிழை மறந்தான்! - பாவி
அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்!
என்ன கொடுமை இழைத்தான்! - தீயன்
எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்!

மாற்றார்க் கழைப்பு விடுத்தான்! - வீட்டில்
மதுவும் கொடுத்தான்! மகளும் கொடுத்தான்!
சோற்றுப் பதவிகள் ஏற்றான்! - மானம்
தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்!

பல்லாயிரம் நாட் பயிரை - வீரம்
பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை
எல்லாம் நிறைந்த தமிழை - தழலில்
இட்டவன் உடல்மேல் இடடா தழலை!

தீயன் உடல்தீயத் தீவை! - எங்கள்
தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை!
பாயும் புலியே! தமிழா! - தம்பி!
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 06:00:11 AM

நிலாவே!

நிலாவே! நீயேன் தமிழர் நிலமிசை
உலா வருகின்றாய்? ஓடிப் போய்விடு!

அடிமைச் சிறையின் இடையே அழுந்தி
துடியாய்த் தமிழன் துடித்து நலியும்

கண்ணீர் ஆற்றுக் காவிரி மண்ணில்
வெண்ணிலா உனக்கு விழல்உலா வேறா?

போ! போ! நிலாவே! போய்எங் கேனும்
வாழ்வுடை யோர்முன் வலம்வா! இங்கே...

ஒடிந்த தமிழன் உலர்ந்த தமிழன்
மடிந்து மடிந்து வாழும் தமிழன்

கண்ணில் நெருப்பு வார்க்காதே
மண்ணில் எங்கேனும் மறைந்துபோ நிலாவே!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 06:01:47 AM

வான் முகிலே!



இடிக்கின்றாய்.... வான்முகிலே!
ஏன் இடித்தாய்? இங்குள்ள
தமிழர் நெஞ்சில்
வெடிக்கின்ற விடுதலையின்
பேரார்வம் வெளிக்காட்ட
விரும்பினாயா?

கருப்பாக வருகின்றாய்..
வான்முகிலே! ஏன் கருத்தாய்?
களத்தில் பாய
விருப்போடு நாள்பார்க்கும்
தமிழ்வீரர் வெறித் தோற்றம்
விளக்கினாயா?

சிரிக்கின்றாய்...மின்னல் வாய்
வான்முகிலே! ஏன் சிரித்தாய்?
சினந்து மண்ணை
எரிக்கின்ற தமிழ்ப்புலவன்
கவிதையினை வானேட்டில்
எழுதினாயா?

ஓடிப்போ...!ஓடிப்போ...!
புதுக் கவிதை

வான்முகிலே....ஓவென்று
முழக்கமிட்டுப்

பாடிப்போ! அதிரட்டும்
மண்மேடு! காணட்டும்
பகைவர் என்போர்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 06:02:55 AM

செருக்களம் வா!



மூச்சை எடுத்தெறி தமிழா!
முழுங்கு மேகமாகிக் கிளம்பு

சிச்சி அடிமையாய் வாழ்ந்தோம்.....
செந்தமிழ்த்தாய் இதற்கொடா பெற்றாள்?

கூனி வளையவோ மேனி?
கும்பிட்டுக் கால் பிடிக்கவோ கைகள்?

தீனி மகிழவோ வாழ்க்கை?
செந்நீர் ஆடி முழக்கடா சங்கம்!

நாங்கள் கவரிமான் சாதி
நாய்போல் எசமான் அடிகளை நக்கோம்!

தீங்கு படைப்பவன் எங்கே?
தேடி உதைப்போம்! செருக்களம் வாடா!

ஓங்கி முழுங்குக தானை!
உடைந்து நொறுங்கி விலங்கு சிதறுக!

தூங்கி வழிந்தது போதும்!
துள்ளி எழுக தமிழ்த்திருநாடே!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 06:04:04 AM

காதலியே!


காதலியே! உள்ளமெனும் காயத்தோடும்
கனத்துவரும் மூச்சோடும் கண்ணீரோடும்
வாதையுறவோ இவனைக் காதலித்தாய்?
சாதலுறவோ இவனைக் காதலித்தாய்?

புல்லைப்போல் மெலிந்த உனைக் காதல் நோயால்
புண்ணாக்கி மென்மேலும் மெலியவைக்கும்
கல்நெஞ்சக் காரனை ஏன் காதலித்தாய்?
களம்நின்ற வீரனை ஏன் காதலித்தாய்?

சுகங்காட்டும் காதலர் தோள்கள்மீது
துயில்கொள்ளும் எழில்மாதர் வாழும் மண்ணில்
முகங்கூடக் காட்டாது களத்தே வாழும்
முண்டத்தை ஏனம்மா காதலித்தாய்?

பொறு கண்ணே! போர்வாழ்வு நெடுநாள் இல்லை!
பூக்கட்டும் தமிழாட்சி! மறுநாள் உன்றன்
சிறுகாலில் விழஓடி வருவேன் அத்தான்!
தித்திக்கும் முத்தம்உன் செவ்வாய்கேதான்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 06:04:37 AM

கலங்கரை



முந்தி முளைத்த கலங்கரை
தமிழ்ப் பரம்பரை - நடுச்
சந்தியில் வீழ்ந்து துடிப்பதேன்?
தாழ்ந்து கிடப்பதேன்?

அள்ளிக் கொடுத்தகை கேட்குதே!
ஓடு தூக்குதே! - இலை
கிள்ளிப் பொறுக்கித் திரியுதே!
உள்ளம் எரியுதே!

மாற்றார் தலைதனில் ஏற்றினாய்
கல்லை! வாட்டினாய்! - இன்று
மூட்டை சுமந்து நடக்கிறாய்!
தாழ்ந்து கிடக்கிறாய்!

ஆதியில் மாடம் அமைத்தவர்
வாழ்வு சமைத்தவர் - அட
வீதியில் காலம் கழிப்பதோ?
நால்வர் பழிப்பதோ?

"முல்லைக்குத் தேரை வழங்கினோம்"
என்று முழங்கினோம்! - இங்கே
பிள்ளைக்குப் பாலில்லை பாரடா!
தருவார் யாரடா?
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 06:05:30 AM

நறுக்குகள் - விளம்பரம்


குளிப்பாட்டி
அழுக்காக்குகிறான்
பெண்ணை..

தொலைக்காட்சியில்.
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 06:06:36 AM

நறுக்குகள் - அறுவடை


சுவரொட்டியை

தின்ற கழுதை
கொழுத்தது.

பார்த்த கழுதை
புழுத்தது.
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 06:07:30 AM

நறுக்குகள் - மானம்


கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு.

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே.

அம்மணமாகவே
போராடு.
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 24, 2013, 06:09:21 AM

நறுக்குகள் - மனிதன்



இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்

"பசு பால் தரும்"
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்

"காகம்
வடையைத் திருடிற்று"
என்கிறான்.

இப்படியாக
மனிதன்...
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:37:43 AM

குமுறல்


செருப்பு
ஆண்டநாள்
அது
என்கிறாய்....

சொல்
செருப்பைச்
செய்தவன்
ஆளும் நாள்
எது?
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:38:15 AM

குரல் நிறுத்திய குயில்


கழுத்து நிமிர்ந்த தமிழின வேங்கை
கனலாய் வாழ்ந்த தமிழன்
எழுத்து நிமிர்ந்த பாடல் படைக்கும்
எழுச்சிப் புலவன் வீரம்
பழுத்து நிமிர்ந்த புரட்சிச் செம்மல்
பாயும் புயலாய் எம்மை
இழுத்து நிமிர்ந்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!

போற்றப் பிறந்த களத்தின் பொருநன்
புன்மை உற்றிழந்த எம் வாழ்வை
மாற்றப் பிறந்த மாபெரும் ஆற்றல்
மறந்திகழ் இனப்போர் மண்ணில்
ஆற்றப் பிறந்த அருந்தமிழ் வீரன்
ஆரியர் நெஞ்சில் கூர்வாள்
ஏற்றப் பிறந்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!

பீடு படைத்த புலவன் மதத்தைப்
பிளந்த சூறைக் காற்று
கேடு படைத்த மடமைக் குப்பைக்
கிடங்கை எரித்த நெருப்பு
நாடு படைத்த நல்லறி வாளன்
நஞ்சர் நெஞ்சை நொறுக்கி
ஏடு படைத்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!

மனத்தை வளர்த்த மாந்தர் நேயன்
மண்ணில் நாளும் மண்டைக்
கனத்தை வளர்த்த வல்லாண் மையினர்
கழுத்தை முறித்தோன்! அடிமைத்
தனத்தை வளர்த்த தளைகள் அனைத்தும்
தறித்த போர்வாள்! மாந்தர்
இனத்தை வளர்த்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:38:48 AM

பிடி சாபம்!



கன்னெஞ்சர் சிங்களத்தர்
கயவர் என் தமிழ்ஈழத்தை
அன்னை மண்ணைச் செந்தீயால்
அழித்தார் என்றெழுந்த சேதி
மின்னலாய்த் தாக்கிற்றம்மா...
விம்மிநின் றழுகின்றேன் யான்!
என்கண்ணில் நீரா? இல்லை!
இதுவும் தீ! இதுவும் தீயே!

யாழ்நகர் நல்லறங்கள்
யாவிலும் ஊறி மக்கள்
வாழ்நகர் தமிழர் வாழ்வில்
வற்றாத கல்வி மேன்மை
சூழ்நகர் கொடியர் தீயில்
துகள் சாம்பலாகி அந்தோ
பாழ்நகர் ஆன தென்றார்!
பதறுதே தமிழ் நெஞ்சம்!

வீடுகளெல்லாம் தீயால்
வீழ்த்தினார்! கடைகளெல்லாம்
கேடுற நெருப்பு வைத்தார்!
கீழ்மன வெறியர் எங்கள்
பீடுறு யாழ்மா நாட்டின்
பெரியநூல் நிலைய மீதும்
போடுசெந் தீயை என்றார்...!
பொன்னூல்கள் எரித்தார்! சென்றார்!

அம்மம்மா! என்ன சொல்வேன்?
அனலிலே கம்பன் மாண்டான்!
இம்மா நிலம் வணங்கும்
இனியவள் ளுவன் மடிந்தான்!
"உம்"மென எழுந்த தீயில்
உயர் தமிழ் இளங்கோ செத்தான்!
செம்மனப் புலவ ரெல்லாம்
செந்தீயில் வெந்தா ரம்மா!

கொடுந்தீயே! சிங்களத்தின்
கொடுந்தீயே! இது நீ கேளாய்!
நெடுங்காலம் நின்றன் கொட்டம்
நில்லா! இப்புலவன் உன்மேல்
இடுஞ்சாபம் இன்றே ஏற்பாய்!
இருந்துபார்! நீஇம் மண்ணில்
படும்பாடு நாளை பார்ப்பேன்...!
பார்த்தே நான் உலகு நீப்பேன்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:39:20 AM

தம்பிகாள்!


வெறிச் சிங்களத்தின் கண்டிச் சிறையகம்
வீழ்ந்த என் உடன்பிறப்புக்காள்!
தெறிக்கும் விழிக்கனல் பறக்கும் புலிகளே!
தெய்வம் உண்டு நம்புங்கள்!
பொறிச்சிறை நம்மை என்செயும் பார்ப்போம்!
போர்க்களம் எமக்கென்ன புதிதோ?
குறிக்கோள் இனியது கொண்டோம் தம்பிகாள்!
கூத்தாடுவோம்! இது பொன்னாள்!

எந்தமிழ் ஈழம் ஒளிபெற நாங்கள்
இருட்சிறை ஆடுதல் இன்பம்!
வெந்தழல் ஆடி விழிமழை தோய்ந்து
வெல்லுதல் விடுதலை கண்டீர்!
சிந்துக முறுவல்! மெய்சிலிர்த் திருங்கள்!
செந்தமிழ் மூச்சென்ன சிறிதோ?
வந்தெதிர் கொள்ளும் துயரெலாம் ஏற்போம்!
வைர நெஞ்சங்களோ வாழி!

ஆழமா கடலின் அலைகளே இருங்கள்!
அறம் காத்தல் நம்கடன் அன்றோ?
கோழைகள் அல்லோம்! கொடுஞ்சிறைக் கோட்டம்
குளிர்மலர்த் தோட்டம் என்றார்ப்போம்!
ஈழமா மண்ணில் எழில் விடுதலை நாள்
இருத்தாமல் நாம் மடிவோமா?
ஊழையும் வெல்லும் உளங்களே! இருங்கள்!
ஒருபெருஞ் செயல் செயப் பிறந்தோம்!

கொள்ளையாம் வீரம் கொந்தளித்தாடும்
குட்டுவன் தமிழ்க்குலச் சேய்காள்!
உள்ளம் மகிழ இசை ஓதுமின்கள்!
உவகையில் ஆடிக் களிப்பீர்!
பிள்ளைகளா பெற்றாள்? எமைப் பெற்றாள்
பெருமைகள் அல்லவா பெற்றாள்?
வெள்ளம் படைப்போம்! புயல்படைப்போம்! நாம்
விடுதலை படைப்போம்! இருங்கள்!

நெடும்போர் ஆடும் நிமிர்ந்த உயிர்களே!
நெருப்பினில் பூத்த நெஞ்சங்காள்!
கொடுங்சிங் களத்தின் வெலிக்கடைக் கோட்டம்
குடியிருக்கும் உங்கள் அண்ணன்
இடும்பணி கேளீர்! கண் விழித்திருங்கள்!
இன்னுயிர்தான் விலை எனினும்
கொடுங்களடா என் தம்பிகாள்! கொடுங்கள்!
கூத்தாடுவேன் உடன்பிறப்பே!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:39:52 AM

குயிலுக்கு வாழ்வு கொடு


இறைவா! எனக்கின்னும்
பல்லாண்டுயிர் ஈந்தளிப்பாய்! - என்னை
மறையா திங்கு வைத்துத்
தமிழுக்கு வாழ்வளிப்பாய்! - கொடுஞ்
சிறையால் தமிழ்மாந்தர்
படுந்துயர் அறியாயோ? - அட
இறைவா! எனக்குயிர்
தந்தால் சிறை உடையாதோ?

நோயால் எனையுருக்கி
எலும்பாக மாற்றிவிட்டாய்! - இந்த
வாயால் ஓய்விலாது
குருதி வரவும் செய்தாய்! - உன்றன்
சேயாம் தமிழ்க்குலத்தின்
துயர் களைந்திட்ட பிள்ளை - இன்று
காயாய் இருக்கையிலே
வீழ்ந்து கருகவைப்பாயோ?

உன்னை வணங்கி நின்ற
பாரதியின் பின்னொருவன்- நின்தாள்
தன்னை வணங்குகின்றேன்
அவனைப்போல் பாதியிலே - பாவி
என்னையும் நீ பறித்தால்
தமிழ்ச்சாதி ஏங்கிப்போகும்!- என்றன்
அன்னை வீழ்ந்து துடிப்பாள்
நீ என்னை அழைக்கலாமோ?

உயிரை நீட்டி என்னை
முன்போல் உலவ விடுவாய்!- சூழும்
துயிலை நீக்கி வைப்பாய்!
புதிதோர் துணிவளிப்பாய்! - அஞ்சா
வயிரநெஞ்சில் ஒன்றும்
மலைத்தோளும் ஈந்தருள்வாய்! - இந்தக்
குயிலை வாழ வைப்பாய்!
தமிழ் கூவவேண்டும் ஐயா!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:40:25 AM

தமிழ்க் கன்னி தோற்றம்

எத்தனை எத்தனை இன்பக் கனவுகள்...
என்ன புதுமையடா! - அட
புத்தம் புதுக்கிளி சோலைப் புறத்திலே
போடும் ஒலியிவளோ? - வந்து
கத்துங் குயிலின் இசையோ? கலைமயில்
காட்டும் புதுக்கூத்தோ? - அட
முத்தமிழ்க் கன்னியின் பேரெழிலை ஒரு
மொழியில் உரைப்பதோடா?

மன்னர் வளர்த்த புகழுடையாள்! இவள்
மக்கள் உறவுடையாள்! - நல்ல
செந்நெல் வளர்க்கும் உழவ ரிசையில்
சிரிக்கும் அழகுடையாள்! - சிறு
கன்னி வயதின் நடையுடையாள்! - உயர்
காதல் வடிவுடையாள்! - தமிழ்
என்னு மினிய பெயருடையாள்! - இவள்
என்றும் உயிருடையாள்!

முந்திப் பிறந்தவள் செந்தமி ழாயினும்
மூப்பு வரவில்லையே! - மணச்
சந்தனக் காட்டுப் பொதிகை மகளுக்குச்
சாயல் கெடவில்லையோ! - அட
விந்தை மகளிவள் சிந்தும் எழில்தனில்
விழிகள் சுழலுதடா! - கவி
தந்து சிரிக்கும் அழகன் எனக்கிவள்
தன்னைத் தரவந்ததோ?

தொள்ளு தமிழ்மகள் வண்ண முகத்திலே
செம்மை கொலுவிருக்கும்! - ஒளி
கொள்ளும் இதழில் மலர்நகை யொன்று
குழைந்து குழைந்திருக்கும்! - உயிர்
அள்ளும் விழிகள் இரண்டிலு மாயிரம்
ஆற்றல் நிறைந்திருக்கும்! - இவள்
உள்ள மிருக்கும் இடத்திலே காதலும்
ஒளிந்து மறைந்திருக்கும்!

தேனுங் கனியும் மதுவுங் கலந்தொன்று
சேர்ந்த உடலுடையாள்! - கன்னி
மானமெனு மெழில் ஆடையணிந்து
மயக்கப் பிறந்தவளோ? - அட
நானு மிவளும் இருக்கு முலகிலே
நாணம் இருக்குமோடா? - நாங்கள்
வான மளவு பறந்துவிட் டோமிந்த
வையம் தெரியவில்லை!

காலின் சிலம்பும் வளையும் இசையொலி
காட்டப் பறந்து வந்தாள்! - அந்த
நூலின் இடையிலே கை கொடுத்தும் விழி
நோக்கில் உயிர் கொடுத்தும் - ஒரு
வேலின் விரைவில் பறந்து வந்தேன்! - அவள்
வெள்ளை மனந் திறந்து... - புதுப்
பாலின் சுவையும் வெறியுங் கலந்தொரு
பாடம் நடத்துகின்றாள்....
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:41:02 AM

களம் புகுவாய்!


மானம் எனுமொரு பானையில் வாழ்வெனும்
தீனி சமைத்தவனே! - தமிழ்
போனதடா சிறை போனதடா! அட
பொங்கி எழுந்திடடா!

காட்டு தமிழ்மறம்! ஓட்டு வரும்பகை!
பூட்டு நொறுக்கிடுவாய்! - நிலை
நாட்டு குலப்புகழ்! தீட்டு புதுக்கவி!
ஏற்று தமிழ்க் கொடியே!

முந்து தமிழ்மொழி நொந்து வதைபட
இந்தி வலம் வரவோ? - இது
நிந்தை! உடனுயிர் தந்து புகழ்பெறு!
வந்து களம் புகுவாய்!

நாறு பிணக்களம் நூறு படித்தநம்
வீறு மிகுந்த குலம் - பெறும்
ஊறு துடைத்திடு மாறு புறப்படு!
ஏறு நிகர்த்தவனே!

நாலு திசைகளும் ஆள நடுங்கிய
கோழை எனக்கிடந்தாய்! - மலைத்
தோளும் குனிந்தது போலும்! விழித்தெழு!
காலம் அழைக்குதடா!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:41:42 AM

இனமானப் புலி எங்கே?


இன்றிருந்த பகல்தனிலே
ஞாயிறில்லை!
இரவினிலும் நிலவில்லை!
விண்மீன் இல்லை!
இன்றெரிந்த விளக்கினிலே
வெளிச்சம் இல்லை!
எண்டிசையும் செடிகொடியில்
பூக்கள் இல்லை!
இன்றிதழ்கள் ஒன்றிலுமே
முறுவல் இல்லை!
இன்றெமது நாட்டினிலே
பெரியார் இல்லை!
எவர்தருவார் ஆறுதல்? இங்
கெவரும் இல்லை!

கோல்தரித்து நேற்றுலகைத்
தமிழன் ஆண்டான்!
கொற்றவனை அவனை இழி
வாக்கி மார்பில்
நூல்தரித்து மேய்ப்போராய்
நுழைந்த கூட்டம்
நூறு கதை உருவாக்கி
"பிரம்ம தேவன்
கால்தரித்த கருவினிலே
தமிழன் வந்தான்
காணீர் என்றுரைத்தமொழி
கேட்டுக் கண்ணீர்
வேல்தரித்து நெஞ்சில் வெந்
தழல் தரித்து
வெகுண்டெழுந்த பெரியாரை
இழந்து விட்டோம்!

அஞ்சுதலும் கெஞ்சுதலும்
அறியா வீரர்
அறவலியும் மறவலியும்
நிறைந்த செம்மல்
நெஞ்சுரமும் நிமிர்நடையும்
படைத்த வல்லான்
நிறைமதியும் போர்க்குணமும்
இணைந்த ஆற்றல்
துஞ்சுதலும் உடற்சோர்வும்
இலாப் போராளி
தொடுபகையும் சூழ்ச்சிகளும்
உடைத்த சூறை
நஞ்சரையும் வஞ்சரையும்
மிதித்த வேழம்
நடுவழியில் எமைநிறுத்தி
நடந்ததெங்கே?
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:42:20 AM

எக்களிப்பு

குளித்து வந்தான் எழுபரிதி!

தங்கத் தழல் ஒளியில்
பூத்ததடா தமிழ் ஈழம்!

பொங்குபோர் ஆடிவர
இளம்புலிகள் புறப்பட்டார்....

சங்கொலியும் முழவொலியும்
கேளீரோ தமிழ்மக்காள்!

எங்கள் அருந் தமிழ்மண்ணில்
இராவணனார் பொன் மண்ணில்

அங்குலமும் இனி நாங்கள்
அயல் வெறியர் ஆளவிடோம்!

கங்குல் விலகின காண்!
எங்கள் தமிழ் மேல் ஆணை!

தங்கத் தமிழ் ஈழம்
தமிழனுக்கே! தமிழனுக்கே!

மூச்சுடையீர்! தமிழரே!
முன்வாரீர்! இனியும் வாய்

வீச்சினிலே நாள் கடத்தி
விளையாடல் வேண்டாங்காண்!

மேய்ச்சலிலே போன துகள்
ஆள்வோரின் தொழுவத்தில்

பூச்சி புழு வைக்கோலும்
பிண்ணாக்கும் விழுங்கட்டும்!

கூச்சமுடையோம் நாங்கள்
குலமானம் ஒன்றுடையோம்!

சீச்சீ.. அட தமிழா!
சிறப்பிழந்து வாழ்வோமா?

ஆச்சி! உன் பிள்ளையை
ஆடவிடு போர்க் களத்தே!

போச்சுதடி பழங் காலம்!
பூத்தது பார் தமிழ் ஈழம்!

நாம் பிறந்த நம் மண்ணில்
நாமே இனி அரசர்!

கூம்புகரம் இங்கில்லை!
குனிந்த தலை இன்றில்லை!

பாம்புக்கும் முதலைக்கும்
பணிந்து தலைவணங்கித்

தேம்பி இனித் தமிழன்
திரிவதில்லை...! போர்க்களத்தில்...

மாம்பழம் போல் குண்டுவரும்
மார்பினிக்க நாம் உண்போம்!

சாம் பொழுதும் தமிழரசு
தனைநிறுவி உயிர்விடுவோம்!

ஆம் தமிழா! அதோ பாராய்...
அரும்பியது தமிழீழம்!

மேம்பட்டான் தமிழ்மறவன்!
வீரன் தோள் வாழியவே!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:42:55 AM

படை இளைப்பாறல்

மலைமீது மாலைசாய்ந் தாற்போல்
மழை மேகம் இறங்கினாற் போல்
மலை நின்ற சோலைக் குள்ளே
மாவீரர் இருக்கை கொண்டார்!
மலை தாவி நடந்து வந்த
மயக்கத்தி லுறக்க மென்றோர்
மலையேறி விழுத லுற்றார்....
மரணம்போல் துயிலுங் கொண்டார்!

தானைதான் உறங்கி நிற்கும்...
தமிழ்வீரம் உறங்கிப் போமா?
மானத்தில் வளர்ந்த வீரர்
மலைத் தோளின் அழகு பார்த்தும்
வானையே ஒத்த மார்பின்
வடிவினைப் பார்த்து மங்கே
நானொரு மனிதன் மட்டும்
நனிதுயில் மறந்து நின்றேன்!

எழில்பூத்த மலர்ச்சோ லைக்குள்
இருளோடி மறையும் வண்ணம்
ஒளிபூத்த தென்ன வானில்
ஓவிய நிலவு தோன்றி
விழிபூத்த நிலையில் நானோ
வெறிபூத்த மனித னானேன்...
களிபூத்த நெஞ்சி னோடு
கால் போன போக்கில் போனேன்...

பொன்மழை பொழியும் வண்ணப்
புதுநிலா வானின் மேலே
என்னையும் இழுக்கும்... கால்கள்
இயலாமல் நிலத்தில் நிற்கும்!
மென்மலர் பூத்த பொய்கை
மேலெழுந் தாடும் வண்டின்
இன்னிசை நிலத்தின் மேல் நான்
இருப்பதே சரியென்றோதும்!

ஒப்பிலா அழகில் பூத்த
ஒளிக்காட்டில் கவிஞ னென்னை
இப்படிக் கொணர்ந்த நெஞ்சம்
இளமையில் தோய்ந்த நெஞ்சம்
அற்புதங் காட்டி வைக்க
அழைத்தது போலும்... ஆமாம்
செப்பவும் முடிய வில்லை
செந்தமிழ்க் கவிதை சொல்வேன்...

அழகடா அழகுக் கோலம்!
அவள் கோலம் அமுதின் கோலம்!
தழலிலே வெந்த கட்டித்
தங்கத்தின் புதிய கோலம்!
பழகவோ எதிரே வந்தாள்...
பைந்தமிழ்க் கன்னிப் பாவை?
நிழலிலே ஒதுங்கி நின்று
நெஞ்சத்தை அருகில் விட்டேன்...
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:43:26 AM

தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!
தலைமீது சுமக்கின்றான்
அடிமை என்னும் சொல்லை!
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!
எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்!
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்!

இசை தெலுங்கானது பாட்டினிலே!
இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!
திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!
தீந்தமிழ் எரியுது தீயினிலே!

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்!
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!

உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம் போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:43:56 AM

குழப்பம்

கோடித் தடந்தோளாம்! அங்கே
குன்றமொரு குவையாம்!
ஆடி வருங் கடல்கள் - களத்தில்
ஆயிரம் ஆயிரமாம்!

விழியும் நெருப்பு மொன்றே! - மறவர்
விரைவும் புயலுமொன்றே!
மொழியும் இடியுமொன்றே! - வெம்போர்
முனையை எதுமொழிவேன்?

உள்ளம் மலைக்குவமை! - அங்கே
உடல்கள் புலிக்குவமை!
வெள்ளம் படைக்குவமை! - மறவர்
வெறிக்கும் உவமையுண்டோ?

மெய்கள் சிலிர்த்திடவே - வீரம்
மிளிர்ந்த களப்புறத்தில்...
ஐயோ! ஒரு நொடியில் - நிகழ்ந்த
அழிவை எதுபுகல்வேன்?

கூனல் விதிக்கிழவி - பாவி
கொடுமை இழைத்தனளோ?
மான மறத்தமிழன் - அடடா
மதியை இழந்தனனோ?

என்ன மொழி யுரைப்பேன்? - இந்த
இழிவின் நிலை சிறிதோ?
தென்னர் படைக்குவியல் - களத்தே
சிதைந்து குலைந்ததடா!

பார்ப்பான் மிகவுயர்ந்தோன்...- அவனே
படையை நடத்திடுதல்
சேர்க்கும் பெருமையென்றான் - ஒருவன்
சின்னச் செயல் புரிந்தான்!

ஓங்கி வளர்ந்த மரம் - காற்றில்
உடைந்து விழுந்தது போல்
ஆங்கு தமிழ்மறவர் - நூறாய்
ஆனார் நொடியினிலே!

ஆதிப் புகழுடையோர் - உழவர்
என்றார் சிலர் அடித்தே!
சாதிக் கொடுமையடா! - இதுதான்
சனியன் எனும் பொருளோ?

செம்படவன் குதிப்பான்! - ஆங்கே
செட்டி செருக்குரைப்பான்!
கும்பம் சரிந்ததுபோல்.... தமிழர்
கூட்டம் சிதைந்தடா!

கண்கள் அனல் சுழற்ற - நெஞ்சம்
காய்ந்து சருகுபட
விண்ணில் இடிசிதற - நானோ
வேதம் முழக்குகின்றேன்.
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:44:31 AM

கால முனிவன் கூற்று

எனது பெயர் காலமுனி
நானின்றேல் உலகினிலோர்
இயக்க மில்லை!

மனித உயிர் படும் பாடும்
மாநிலத்தில் உருவாகும்
மயக்கம் யாவும்

எனதிறைவன் அறிவதுபோல்
இன்னொருவன் அறிவதெனில்
அவன் யானன்றோ?

பனி மலையும் காடுகளும்
அலைந்து வரும் படைநிலையும்
அறிவேன் மக்காள்!

தோளுயர்த்தி உலகாண்ட
தமிழ்ச்சாதி துடிதுடித்து
மாற்றார் தம்மின்

தாளடிக்கீழ் மடிகின்ற
பேரவலம் தாங்காமல்
முழக்கமிட்டு

மாளடித்தால் அடிக்கட்டும்
எனச் சொல்லி விடுதலைக்கு
மார்பு காட்டி

வாளெடுத்துத் தலை தூக்கி
வந்துள்ளீர் நுந்துணிவை
வாழ்த்துகின்றேன்!

செருக்களத்தில் முன்னொருநாள்
மோரியரைச் சிதறடித்தான்
இளஞ்சேட் சென்னி!

பொருப்பெடுத்த தோளுடையான்
குட்டுவனோ வட நாட்டுப்
போரில் வென்றான்!

உருக்கமிலா மாற்றாரைச்
சுந்தர பாண்டியன் ஒருநாள்
அடக்கி ஓய்ந்தான்!

நெருப்பெழுந்த விழியோடு
தமிழ்மறவர் பொருத கதை
நிறைய உண்டே!

முத்தமிழர் வரலாற்றில்
நேற்றுவரை மூண்டெழுந்த
கொடிய போர்கள்

அத்தனையும் யானறிவேன்
தமிழ் மக்காள்... ஆனாலும்
ஒரு சொற் கேளீர்...

பத்தல்ல நூறல்ல
கோடிமுறை போர்க்களங்கள்
பார்த்தேன்... ஆனால்

இத்தகைய படையொன்றை
மாநிலத்தில் இற்றைவரை
கண்டேனில்லை!

வீட்டினிலே பசித்திருந்து
மனையாட்டி வற்றிவிட்ட
வெறும் முலைக்கு

நீட்டுகின்ற பிள்ளையின் கை
தடுத்தழுவாள் என்பதையும்
நினைந்திடாமல்

வாட்டுகின்ற கொடிய பிணி
வறுமையிலுந் தன்மானம்
பெரிதாமென்று

பூட்டுடைத்து விடுதலை நாள்
கொண்டுவரப் புறப்பட்டீர்...
பூரிக்கின்றேன்!

இறப்பதற்கும் சொத்தெல்லாம்
இழப்பதற்கும் அடியுதைகள்
ஏற்பதற்கும்

மறப்போரில் உடற்குருதி
கொடுப்பதற்கும் மலைத்தோளின்
கீழே தொங்கும்

சிறப்புமிகு தடக்கைகள்
அறுந்துபட முழுக்கமிட்டுச்
சிரிப்பதற்கும்

புறப்பட்டீர்... அடடாவோ!
தமிழினத்தின் போர்த்திறத்தை
வாழ்த்துகின்றேன்!

முன்பொருநாள் அரசோச்சி
நானிலத்தின் முறைகாத்த
தமிழர் பண்பை

நன்கறிவேன்! அந்நாளில்
உளம் வருந்தி நலிவுற்றார்
எவருமில்லை!

அன்புடையார் தமிழ்மக்கள்
அவர்மாட்டே நிலைத்திருக்கும்
சிறந்த கொற்றம்

என்பதனால் தமிழாட்சி
வையகத்தில் எழுவதை நான்
அவாவுகின்றேன்...

இப்புவியில் தமிழினத்தார்
பகைவிரட்டி அரசமைப்பார்
எனிலிவ் வையம்

அப்பொழுதே நல்லறத்தின்
வழிநடக்கும்... குறள் படித்தோர்
அமைச்சராவார்!

தப்புமுறை அடக்குமுறை
தறுக்கர்களின் கொடுமையெலாம்
சாய்ந்து போகும்!*

ஒப்பரிய தமிழ்ச்சாதி
எண்டிசையும் உலகினுக்கே
தலைமை தாங்கும்!

கதவு திறந் திருப்பதனைக்
காண்கின்றேன்.... தமிழ்மக்காள்
எனினும் நீவிர்

புதுமனையுள் விடுதலையின்
மாளிகையில் புகுவதெனில்
தடையொன் றுண்டாம்...!

விதியெனுமோர் கொடுங்கிழவி
இடர் புரிவாள்... தமிழினத்தை
விழவும் வைப்பாள்....

எதுவரினும் அஞ்சாதீர்!
எனமொழிந்து காலமுனி
இன்னும் சொல்வான்...
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:45:14 AM

வீரம்

அழிவுற எழுதமிழ்
மாந்தர் களத்தினிலே

சுறவுகள் கடல் மிசை
வெறியொடு சுழல்வன
போலும் சுழல்கின்றார்...

நறநற வென எயி
றொலிசெய மறவர்கள்
ஆட்டம் நடக்குதடா!

புறமெனு மழகிய
தமிழ்க்குல வீரரின்
வாழ்க்கை வீண்போமோ?

மாமலை யொத்தன
தமிழரின் ஓங்கிய
தோள்கள்! சினங்கொண்டு

தாமரை யொத்தன
செந்நிற அழகொடு
விழிகள்! ஓவென்னும்

தீமலை நெருப்பினை
யொத்தன சுழன்றன
வீரர் மூச்சுக்கள்!

தேமதுரத் தமிழ்
உயிரெனக் கொண்டவர்
திரண்டார்! போர் செய்தார்!

தடியடி தலைமிசை
படவிழும் அரவென
வீழ்ந்தார் பகை வீரர்!

இடிபட வேரொடு
விழுமரம் என உடல்
சாய்ந்தார் சிலரங்கே!

அடிபுய லிடைநிலை
கெடுமொரு புவியென
ஆனார்... அம்மம்மா

பொடிபடு தசையுடல்
சுமந்தவர் அழிவுறு
போரை என்னென்பேன்?

தாவிடு வேங்கைகள்
குகையிடை ஒளிந்தன
போலுந் தமிழ்வீரர்

காவிய மார்பிடை
ஒளிந்தன குண்டுகள்!
களத்தே செவ்வானின்

ஓவியம் வரைந்தது
தமிழரின் குங்குமக்
குருதி நீரோட்டம்!

சாவிலும் விடுதலை
பெறுவது மெய்யென
வீழ்ந்தார் தமிழ்நெஞ்சர்!

பறவையின் நிரையென
வானிடை யெழுந்தன
பகைவர் ஊர்திகளே!

சிறகுகள் துகள்பட
அவைமிசை பறந்தன
தமிழர் கருவிகளே!

திறலுடை தமிழரின்
பொறிபல கணைகளை
அள்ளிச் சிதறினவே!

விறகுகள் எனமதில்
வீடுக ளெரிந்தன!
ஊர்கள் வீழ்ந்தனவே!

ஆவியில் இனியது
தமிழென உணர்ந்தவர்
அழகின் வடிவுடையார்...

தேவியர் மான்குலத்
திரளென அமர்க்களம்
ஆடிச் சிவக்கின்றார்!

தாவிடு வேல்விழி
தமிழ்வழி கொண்டவர்
கற்பின் தழல்முன்னே

சாவிடை கொழுநரை
அனுப்பிய பகைவரின்
தானை எரியாதோ?

கொடும்பொறிக் குண்டுகள்
வெடித்தெழ வானகம்
கூந்தல் விரித்தாற்போல்

நெடும்புகை எழுந்தது!
பகைவரின் கொடிகளும்
நெருப்பி லாடினவே!

கடும்புயல் அடித்ததை
நிகர்த்தது களத்திலே
தமிழர் போராட்டம்!

திடும் திடுமென ஒலி
செய்தது பகைவரின்
ஓட்டம் செவியெல்லாம்!

ஆடின கழுகுகள்...
வான்மிசை! அழுகின
பிணத்தின் இரைதேடி

ஓடின நரிகளும்
தெருப்புற நாய்களும்!
ஊரே காடாகி

மூடின பிணங்களின்
விழிகளைக் கரடிகள்
மோந்து களந்தோறும்

தேடின! பூமியின்
திசைகளும் நாறின!
புழுக்கள் திரண்டனவே!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:45:52 AM

போர்

தெய்வ மாவீரர் தமிழ் வீரர்
திரண்டு களத்தின் கண்ணே

செய்யும் அறப்போரை என்னென்று
தமிழில் செப்புவேனோ?

பெய்யும் மழைத் துளிகளென்னப்
பெருகிக் கொட்டும் மாற்றார்

கையின் குண்டுகளிடையிலே
தமிழர் களித்தாரம்மா!

குண்டின் அடிபட்டார் சில தோழர்
கூட்டஞ் சிறையாடிற்று!

தொண்டர் பலரங்கே தடியாலும்
தூள் தூளானார்! தமிழன்

மண்டையுடைந்ததே கதையெங்கும்!
எனினும் மாற்றார் தானை

கண்டக ‘ட்சியோ சிறிதேனும்
கலங்காத் தமிழர் படையே!

கொள்கை உயிரென நினைக்கின்ற
கூட்டம் உரிமைக் கோயில்

உள்ளே விடுதலை இறையோனை
அடைய ஓடுங் கூட்டம்

வெள்ளை நெஞ்சமும் அறநோக்கும்
அன்பும் கருவிகளாக்கித்

துள்ளுமொரு கூட்டம் பகைவர்க்கு
நடுங்கித் தூங்குமோடா?
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:46:25 AM

தமிழச்சி!

இலங்கை மலைதனிலே... தமிழச்சி!
என்ன துயரெலாம் காணுகின்றாயடி!
முழங்கை வலித்திடவே தேயிலை
முளைகள் பறித்து முகம் சிவப்பாயம்மா!
விலங்கும் உறங்கிநிற்கும் சாமத்தில்
விழித்து நெடுமலை ஏறி இறங்குவாய்!
பழங்கள் பழுத்திடாதோ உன் காலில்?
பச்சைக் குருதிநீர் பாயாதோ கண்மணி?

காலைப் பனிநனைவாய்! என்னம்மா...
காய்ந்து நடுவெயில் தனிலே கருகுவாய்;
பாலை நினைந்தழுவான் உன் பிள்ளை...
பாவி வெறும் முலை நினைந்தழுவாயடி!
ஏழை அடிமையடி தமிழச்சி!
இங்கோர் தமிழுடல் ஏனெடுத்தாயம்மா?
ஊழை நினைந்தழவோ? தமிழனின்
உரிமை இலாநிலை எண்ணி அழவோடி?

காட்டு மலைதனிலே... தமிழச்சி!
காலம் முழுவதும் நீ உழைத்தென்னடி?
ஓட்டைக் குடிசையொன்றும் வாழ்விலே
ஓயா வறுமையும் நோயும் இவையன்றி
தேட்டம் எதுபடைத்தாய்? அடி ஒரு
செம்புப் பணமேனும் தேறியதுண்டோடி?
நாட்டின் முதுகெலும்பே தமிழச்சி!
நானிலம் வாழநீ மாள்வதோ அம்மா?
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:47:02 AM

விடுதலைப் பொன்னாள்

காலங்கனிந்திடும் அழகுதானோ?
படைத்தவன் அருளோ? தமிழ்க்கன்னி
ஞாலம் மகிழ்ந்திட அரசுகொண்டு
வாழும் நாள் அடடா... மலர்ந்தாச்சோ?
கோலம் இதுபெருங் கோலமென்பேன்!
கொடுமைகள் பொடியாயின கண்டீர்!
நீல வான்மிசை தமிழ்நாட்டினர்தம்
கொடிகளும் எழுந்து நிறைந்தனவே!

கூனல் விதிக்கிழவியுடல் தேய்ந்தாள்
நிலைகாணீர்... குடுகுடென ஓடிப்
போன நரிபோலவே போகின்றாள்....
தமிழ் மண்ணின் மனைகள் தெருப்புறங்கள்
ஆன திசைக ளெங்கணுங் கொண்டாட்டம்!
ஒளிப் பந்தல்! அழகின் சிரிப்பம்மா!
மான விடுதலை மலர்ந்த கோலம்
உளங்கண்டு மகிழும் திருநாளோ?

முத்து வளைவுகள்! மணிகள்! பச்சை
மாவிலைப் பந்தல்! முகங்குனியும்
பத்தினிபோல் குலைசரித்த வாழை
தெருப்புறத்தே! கோலம் தரையெல்லாம்!
குத்து விளக்குகள்! மலர்கள்! காற்றில்
எழுந்தாடும் வண்ணக் கொடிக் கூட்டம்!
பத்துத் திசைகளும் அழகுக்காட்சி!
கவிஞன்கண் பார்த்துக் களிப்பதற்கே!

நீள நெடுநாள் அலைந்து களத்தே
போராடி நின்ற தமிழ்மறவர்
ஆள ஒரு நாள் கிடைத்த தென்றே
அணி சேர்ந்து பாடி அகமகிழ்வார்!
பாளையென எழில் முறுவல் விரிப்பர்
இளம் பெண்கள்! அவர் வாய்ப்பனிமுத்தம்
வேளைதொறும் அருந்தி விடுதலை நாள்
களிக்கின்றார் கொழுநர்! விழாவன்றோ?
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:47:44 AM

பெருமூச்சு


வலிபடைத்து முறமெடுத்துப்
புலியடித்த தமிழகம்
கிலிபிடித்த நிலைபடைத்து
வெலவெலத்து வாழ்வதோ?

பகையொ துங்கப் பறைமுழங்கிப்
புகழடைந்த தமிழகம்
கதிகலங்கி விழி பிதுங்கி
நடுநடுங்கி வாழ்வதோ?

படைநடத்தி மலைமுகத்தில்
கொடிபொறித்த தமிழகம்
துடிதுடித்து அடிபிடித்து
குடிகெடுத்து வாழ்வதோ?

கடல் கடந்த நிலமடைந்து
கதையளந்த தமிழகம்
உடல் வளைந்து நிலைதளர்ந்து
ஒளியிழந்து வாழ்வதோ?

மகனிறக்க முலையறுக்க
முடிவெடுத்த தமிழகம்
புகழிறக்க மொழியிறக்க
வெளிநகைக்க வாழ்வதோ?
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:48:33 AM

வீரத்தாய்!

தாலாட்டெனும் தமிழைத்
தவிர்ந்த பிற தமிழனைத்தும்
தமிழே அம்மா!

காலாட்டித் தமிழினத்தார்
கண்மூடி உறங்குதற்கோ
இஃது காலம்?

ஏன் பாட்டி பாடுகிறாய்?
இப்போதே போ! எனது
பிள்ளை கையில்

கூர்ஈட்டி ஒன்றெடுத்துக்
கொடு! களத்தே பாயட்டும்
குருதி வெள்ளம்!

தாயா நான்? யார் சொன்னார்?
தசை கொடுத்தேன்.... அவ்வளவே!
தமிழ்த்தாய் அன்றோ

சேயவனின் உடல் தாங்கும்
செங்குருதி மணி நீரின்
சொந்தக்காரி!

தீயோர் தம் கொடுஞ்சிறையில்
வாடுகிறாள் தமிழன்னை!
சிச்சி... இங்கே

வாய்மூடிக் கண்மூடி
உறங்குதற்கோ வளர்க்கின்றேன்
உதவாப்பிள்ளை!

ஓவென்று வீசுகின்ற
புயல்வெளியே மின்வெளியே
உடைந்து வீழ்ந்து

போமென்று வெடிக்கின்ற
வான்வெளியே இவ்வேளை
புதல்வன் உள்ளே

யாமின்று பாடுகின்ற
தாலாட்டில் உறங்குதற்கு
நீதி யாதோ?

சாவொன்று பாய்ந்து தமிழ்
தனையழிக்க வரும்போதோ
தமிழா தூக்கம்?

தேன்கட்டி தோற்றுப்போம்
இன்தமிழைப் பெற்றெடுத்த
தமிழ்த்தேன் நாடே!

ஏன் தொட்டில் ஆட்டுகிறாய்?
கயிறுகளை அறுத்துவிடு!
பிள்ளை தூங்கும்

பூந்தட்டைச் சிறு பாயை
தலைணையைத் தூக்கி எறி!
இப்போதே போ..

நீந்தட்டும் செந்நீரில்
உன்பிள்ளை! நிகழட்டும்
ஒருபோர் இன்றே!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:49:09 AM

காலையும் களமும்

கண்விழித்த படையினைப் போல்
கதிர் விழித்த வானகத்தில்
பண்ணிசைத்த குருகினங்கள்
பறந்து வரும்.. விடுதலையின்
பொன்னினைவு பாய்ந்து வரும்!
புலம்பலிலே தமிழரசி
முன்னிரவில் சொன்னதெலாம்
முகஞ்சிவக்க வெறிபடைக்கும்!

நீலநெடு வரைப்புறத்தில்
நெஞ்சினிக்க வாய் திறந்து
காலமுனி யுரைத்தகளம்
கண்டுவர மனந்துடிக்கும்!
ஓலமிட்ட சங்கொலியால்
உணர்ச்சிகொண்டு நின்றபடை
வேலெடுத்து நின்றதுபோல்
விழியிரண்டும் துடிதுடிக்கும்!

அன்னையிடம் குடித்தமுலை
அமுதத்தின் தமிழ்மானம்
என்னுயிரில் இரத்தத்தில்
இணைந்துநின்ற காரணத்தால்
கன்னிமகள் தமிழணங்கின்
கறைதுடைத்து நொடிப்பொழுதில்
பொன் முடியைக் கொண்டுவரப்
போர்நெஞ்சம் வழிபார்க்கும்!

இவ்வணமாய் நினைவலைகள்
எழுந்தடித்த நெஞ்சத்தில்
வெவ்வேறு திட்டமெலாம்
வேர்விட்டும் போர்க்களத்தில்
கொவ்வைநிறச் செங்குருதி
கொட்டுதற்குக் கண்ணெதிரே
எவ்வழியுந் தோன்றாமல்
இளமேனி பதைபதைக்கும்!

எத்தனைநாள் எடுத்தகொடி
எத்தனைநாள் அமைத்தபடை
இத்தனைக்கும் களமெங்கே...?
எனப்புலம்பி நின்றவனை
குத்துபடை மறவர்களில்
குன்றமிசை யிருந்தொருவன்
தித்திக்கும் பாவலரே...
செருக்களமா? அதோ என்றான்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:49:43 AM
தமிழ்மேல் ஆணை!

தங்கத் தமிழ்மிசை ஆணை! - என்றன்
தாய்நிகர் தமிழக மண்மிசை ஆணை!
சிங்க மறத்தமிழ் வீரர் - எங்கள்
செந்தமிழ்த் தோழர்தம் தோள்மிசை ஆணை!
சங்கு முழக்கி யுரைப்பேன் - நாளைச்
சண்டைக் களத்திலே சாக வந்தாலும்
மங்கிக் கிடக்குந் தமிழை - மீண்டும்
மாளிகை ஏற்றி வணங்கியே சாவேன்!

கன்னித் தமிழ்மகள் தெய்வம்! - அவள்
காதல் அருள்விழி காட்டிவிட் டாளடா!
என்ன சுகமினித் தேவை? - இந்த
எலும்புந் தசையு மெதுக்கடா தோழா?
மின்னி முழங்குது வானம் - இடி
மேகத்தி லேறிவலம் வர வேண்டும்!
தின்னப் பிறந்து விட்டோமா? - அட
செங்களம் ஆடப் புறப்பட்டுவாடா!

நேற்று மதிப்புடன் வாழ்ந்தோம்! - இந்த
நிலத்தின் திசைகளனைத்தையும் ஆண்டோம்!
ஆற்றல் மிகுந்த தமிழை - அரி
அணையில் இருத்தி அழகு சுவைத்தோம்!
சோற்றுப் பிறவிகளானோம்! - இன்று
சொந்தப் பெருமை யிழந்து சுருண்டோம்!
கூற்ற மெதிர்த்து வந்தாலும் - இனிக்
கூனமாட்டோ மென்று கூவடா சங்கம்!

தென்றல் தவழ்ந்திடும் மண்ணில் - நாங்கள்
தீயும் புயலும் வலம்வரச் செய்வோம்!
குன்றும் மலையும் நொறுக்கி - இந்தக்
கொடிய உலகம் பொடிபடச் செய்வோம்!
என்றும் இனிய தமிழை - அட
இன்னுயிர் மூச்சை அமுதக் குழம்பை
மன்றம் மதித்திடவில்லை - என்றால்
மக்கள் உலகம் எதுக்கடா தேவை?

கூவும் அலைகடல் மீதும் - பொங்கிக்
குமுறி வெடிக்கும் எரிமலை மீதும்
தாவும் வரிப்புலி மீதும் - எங்கள்
தடந்தோள் மீதுமோர் ஆணையுரைப்பேன்...
நாவும் இதழு மினிக்கும் - இன்ப
நற்றமிழ் மொழிக்கோர் நாடுங் கொற்றமும்
யாவும் உடனிங்கு செய்வோம்! - இந்த
யாக்கை பெரிதோ? தமிழ் பெரிதோடா?

கொட்டு தமிழா முரசம்! - அட
குறட்டைத் தூக்கம் நிறுத்தடா" என்று
வெட்ட வெளியிடைக் கூவி - என்றன்
விழிக ளெதிரே தமிழ் மகள் வாயின்
பட்டு முறுவல் சுவைத்தேன்! - அவள்
பார்வை எதிரே மறைந்தனள் கண்டீர்!
சட்டென் றுலகில் விழுந்தேன்! - என்றன்
சங்கொலி கேட்டு விழித்தது தானை
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:50:19 AM

எழுச்சி


தெய்வம் வாழ்த்திப் புறப்பட்டேன்!
தேசம் அமைக்கப் புறப்பட்டேன்!
கைகள் வீசிப் புறப்பட்டேன்!
களத்தில் ஆடப் புறப்பட்டேன்!

வீணைக் கொடியோன் தமிழ்மறவன்
வெற்பை அசைத்த (இ)ராவணனின்
ஆணைக் குள்ளே வாழ்ந்ததுபோல்
ஆட்சி நடத்தப் புறப்பட்டேன்!

எட்டுத் திசையும் தமிழ்ச்சாதி
எருமைச் சாதி போலாகிக்
கெட்டுக் கிடந்த நிலைகண்டு
கேடு தொலைக்கப் புறப்பட்டேன்!

வீசு குண்டால் எறிந்தாலும்
வெட்டி உடலும் பிளந்தாலும்
ஆசைக் கொருநாள் போராடி
ஆவி துறக்கப் புறப்பட்டேன்!

வெந்த நெஞ்சில் எழுந்தகனல்
விழியில் சிவப்பு நிறந்தீட்ட
சிந்து பாடி வெங்கொடுமைச்
செருவில் ஆடப் புறப்பட்டேன்!

மானம் இழந்து தலைசாய்ந்து
மாற்றார்க் கடிமைத் தொழில்செய்து
கூனல் விழுந்த தமிழ்வாழ்வின்
கொடுமை தீர்க்கப் புறப்பட்டேன்!

கட்டு நொறுங்கக் கை வீசிக்
களத்தில் ஆடும் வேகத்தில்
கொட்டும் வியர்வைத் துளியோடு
குருதி கொடுக்கப் புறப்பட்டேன்!

வானை இடிக்கும் போர்ப்பறையின்
வைர முழக்கம் வழிகாட்ட
தானை எடுத்துப் புறப்பட்டேன்!
தமிழர் வாழப் புறப்பட்டேன்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:50:52 AM

பயணம்

நீல மலைக் குறிஞ்சி நிலம்.... முல்லைக்காடு
நெல் விளைந்த மருதம் அதை அடுத்தநெய்தல்

கோலிழந்த தமிழன்போல் இருந்த பாலை
கொண்டிருந்த வையத்தின் திசைகளெட்டும்

காலமுனி சொன்னதுபோல் அலைந்தலைந்து
கவிஞன் யான் பட்டதுயர் கொஞ்சமில்லை!

வேலெறிந்து விளையாடும் மறவர் கூட்டம்
விழி சிவந்த கதை தவிர வேறொன்றில்லை!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:51:26 AM

பூத்தது விடுதலை!



புவிமாந்தர் அதிர்ச்சி!
களத்தே புறத்தோடும்
பகைவர் வீழ்ச்சி!

இவைகண்டு சிரித்தாள்
இனியாள் தமிழச்சி!
மக்களெல்லாம்

குவிமகிழ் கொண்டார்!
ஊர்கள் திசைகளெலாம்
கொள்ளை மகிழ்ச்சி!

சுவைகாண் விடுதலை
எனுஞ்சொல்! பூத்ததடா
தமிழன் ஆட்சி!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:51:55 AM

மடிந்து போ!


தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும்
செங்கரும்பைப் பிழிந்தும்

ஆநெய் கறுவாஏலம் கலந்தும்
அமுதாய்த் தமிழ்ப் புலவன்

ஊனை உயிரை உருக்கும் தமிழை
உன்றனுக்கே தந்தான்...

சோணைப் பயலே! தமிழை இழந்தும்
தூங்கி நின்றாயோடா?

முத்துக் குறளும் காப்பிய மைந்தும்
முதுகாப்பியன் தமிழும்

பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்
பதிகமும் உலாநூலும்

தித்திக்கும் கம்பன் புகழேந்தி
தேன் தமிழும் வீழ்ந்தே

செத்துத் தொலையப் பகை பொங்கியது!
சிரம் தாழ்ந்தனையோடா?

காள மேகக் கவிதை மழையும்
கவி பாரதி தமிழும்

கோலத் தேம்பா வணியும் அழகு
கொஞ்சு நற்சிறாவும்

தாளம் போட்டு வாழாப் பாரதி
தாசன் வெறித் தமிழும்

ஏலம் போட்டார் பகைவர்! அடநீ
எங்குற்றாயோடா?

முன்னைத் தமிழன் அன்னைத் தமிழை
முக்கூடல் நிறுவி

கண்ணாய் உயிராய் ஓம்பிய காலம்
கனிந்த புகழெல்லாம்

உன்னை ஒருதாய் உருவாக்கியதால்
உடைந்து துகள்படவே

மண்ணானது மானம் என் வாழ்ந்தாய்!
மடிந்துபோ தமிழா!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:52:27 AM

தமிழை கல்விமொழி ஆக்கு


தமிழை கல்விமொழி ஆக்கு
தமிழ்மொழி பேசட்டும்
உன் பிள்ளை நாக்கு

வெள்ளைக்காரன் மொழியை
கற்றுக்கொடாதே - என்
பிள்ளை வாயில் கொடிய
நஞ்சை இடாதே!

மணிப்புறா ஒரு நாளும்
குயில் மொழி ஏற்காது!
மான் நரி மொழியைத்தன்
நாக்கிலே தூக்காது!
அணிற்பிள்ளை கிளிமொழி
பேசவே பேசாது!
ஆங்கிலத்தை நீயேன்
சுமக்கின்றாய் கூசாது?

பிள்ளையே தன் தாயை
கண்முன் வதைப்பதா?
பேசும் தாய்மொழியின்
உயிரை நாம் சிதைப்பதா?
பள்ளியே தமிழுக்கு
கொள்ளியாய் ஆவதா?
பாராண்ட தமிழ்மொழி
சாவதா? சாவதா?

வள்ளுவன் ஆங்கிலம்
படித்தானா? இல்லையே!
வந்தான் வெள்ளையன் இங்கு
வந்தது தொல்லையே!
வெள்ளைக்காரன் போயும்
விலங்கு அறல்லையே!
வேண்டாத தமிங்கிலம்
உடைக்குது பல்லையே!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:52:56 AM

எத்தனை பெரிய மனம் உனக்கு?

எத்தனை பெரிய மனம் உனக்கு
தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே
என்பது உன் கணக்கு

ஏறி மிதித்தாலும் அவன் மனிதன்! - உன்னை
எட்டி உதைத்தாலும் அவன் மனிதன்!
காறி உமிழ்ந்தாலும் அவன் மனிதன்! - உன்
கதையை முடித்தாலும் அவன் மனிதன்!

அடக்கி ஆண்டாலும் அவன் மனிதன்! - உன்னை
அடிமை கொண்டாலும் அவன் மனிதன்!
ஒடுக்கி வதைத்தாலும் அவன் மனிதன் - உன்
உரிமை பறித்தாலும் அவன் மனிதன்!

தாக்க வந்தாலும் அவன் மனிதன் - உன்
தமிழைக் கெடுத்தாலும் அவன் மனிதன்!
ஏய்க்க வந்தாலும் அவன் மனிதன் - தமிழ்
இனத்தை அழித்தாலும் அவன் மனிதன்!
Title: Re: கவிஞர் காசி ஆனந்தன் கவிதை தொகுப்பு
Post by: Global Angel on January 26, 2013, 02:53:35 AM

தமிழர் விடுதலை!

இனிவரும் ஆண்டில்
இருக்கமாட்டார் எங்கள்
தோழர்கள் கூண்டில்!

எட்டுத் திசைகளும்
நின்ற இருட்சிறை
விட்டுக் கதிரொளி
வெளியே குதித்தது!

மொட்டுத் தளைகள்
உடைத்தது தாமரை!
சிட்டுக் குருவி
சிறகை அவிழ்த்தது!

இந்த ஆண்டில்... இன்றேல்
இனிவரும் ஆண்டில்
இருக்கமாட்டார் எங்கள்
தோழர்கள் கூண்டில்!

முப்புறம் சிறை
கொண்ட மலைகளை
ஒப்பிலா மலை
ஆறு தகர்த்தது!

குப்பு றக்கடல்
காற்றைக் கவிழ்த்தது!
சிப்பி உடைத்தொரு
முத்துச் சிரித்தது!

இந்த ஆண்டில்... இன்றேல்
இனிவரும் ஆண்டில்
இருக்க மாட்டார் எங்கள்
தோழர்கள் கூண்டில்!