FTC Forum
Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Global Angel on January 21, 2013, 03:53:49 AM
-
மனிதன் பிறக்கிறான், "நான்’, "எனது’ என்ற பந்தங்களுக்குள் சிக்கி, தன் குடும்பத்துக்காக மட்டும் பாடுபடுகிறான். கோடிகளைச் சேர்க்கிறான். தன் தலைமுறைக்கு சொத்து சேர்த்த திருப்தியில், போய் சேர்ந்து விடுகிறான். இப்படி எத்தனையோ பேர் வந்தனர், மறைந்தனர், மனதிலிருந்தும் மறைந்து @பாயினர். ஆனால் அனுமன், சிரஞ்சீவி. "சிரஞ்சீவி’ என்றால் என்றும் வாழ்பவர்.
அவர், எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இந்த பூமியில் வாழ்ந்தவர். விலங்கு குலத்தில் பிறந்தவர். ஆனாலும், அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன், எதையும் எதிர்பாராமல் பகவத் கைங்கர்யம் செய்ததால், நம் இதயங்களில் என்றும் வாழ்கிறார். அவரது பிறப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
புஞ்ஜிகஸ்தலை என்ற தேவலோக அப்சரஸ் பூலோகம் வந்தாள். காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷியின் உருவத்தை பார்த்து கேலி செய்தாள். அவருக்கு கோபம் வந்து விட்டது. "பெண்ணே… உருவத்தை பார்த்து எள்ளி நகையாடிய நீ, குரங்காய் போ…’ என சாபமிட்டு விட்டார்.
புஞ்ஜிகஸ்தலையின் முகம், வானர முகமாகி விட்டது. அவள் அழுது புலம்பினாள். சாப விமோசனம் கேட்டாள்.
அவளது கண்ணீர் கண்டு கலங்கிய ரிஷி, "என் சாபத்தை மாற்ற முடியாது. ஆனாலும், நீ நினைத்த நேரத்தில், நினைத்த உருவம் எடுக்கும் சக்தியைத் தருகிறேன்…’ என்று விதிவிலக்கு அளித்தார்.
அந்த பெண், இன்னொரு பிறவியில், கேசரி என்ற வானரனுக்கு வாழ்க்கைப் பட்டாள். அப்போது அவளுக்கு, அஞ்ஜனை என்று பெயர். கேசரி என்றால் சிங்கம். அஞ்ஜனை என்றால் பேரழகு. ஒருநாள், தன்வானர வடிவை மறைத்து, அப்சரசாக உருமாறி, ஒரு மலைச்சிகரத்தில் உலவிக் கொண்டிருந்தாள்.
அப்போது, வாயு பகவான் அவளை பார்த்தான். அவளது அழகில் மயங்கி தழுவிக் கொண்டான். யாரோ தன்னை அணைப்பதை உணர்ந்த அந்த பெண், எந்த ஒரு உருவத்தையும் காண முடியாமல், "இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்வது யார்?’ எனக் கதறினாள்.
அப்போது வாயு பகவான், அவளுக்கு தரிசனம் தந்தார்.
"பெண்ணே… தவறான நோக்கத்துடன் உன்னை நான் ஆலிங்கனம் செய்யவில்லை. ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் முன், அவர்கள் தேவர்களுக்கு சொந்தமாகிறாள் என்பதைத் தெரிந்து கொள். நானும் ஒரு தேவன் என்பதால், உன் கற்புக்கேதும் களங்கம் ஏற்படவில்லை. நீ உலகம் புகழும் ஒரு புத்திரனைப் பெறுவாய்…’ எனச் சொல்லி, மறைந்தார்.
அஞ்ஜனை கர்ப்பமானாள். மார்கழி மூல நட்சத்திரத்தில், அழகான ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். அவன் வாயுவுக்கு பிறந்தவன் என்பதால், பூமிக்கு வந்தவுடனேயே வானில் பறக்கத் துவங்கி விட்டான். அவனுக்கு மாருதி என்று பெயர் சூட்டினாள் அஞ்ஜனை. பிற்காலத்தில், அனுமன், ஆஞ்சநேயர் என்ற பெயர்களெல்லாம் ஏற்பட்டன.
கடவுள் தான் எல்லாருக்கும் நன்மை செய்வார். ஆஞ்சநேயரோ, கடவுளுக்கே உயிர் கொடுத்தவர். சீதையைப் பிரிந்த ராமபிரான், உயிரையே விட்டு விட இருந்த சூழ்நிலையில், "கண்டேன் கற்புடைய சீதையை’ என்ற வார்த்தையால் மூச்சு கொடுத்தார்.
இதன்மூலம், எப்போதும் நல்லதையே பேச வேண்டும். நல்லதை பேசுபவர்கள், பக்கத்தில் மட்டுமே நிற்க வேண்டும். கோபம் வரும் போது, நல்லதை பேச முடியாத பட்சத்தில், மவுனமாக இருந்து விட வேண்டும். எங்கோ இருக்கிற அயோத்தியில் இருந்து, அனாதரவாக வந்த ராமன் என்ற முகம் தெரியாத ஒருவருக்கு, அனுமன் சேவை செய்தார். அவரது மனைவியைக் கண்டுபிடித்து தரும் பணியில் அரும்பணி செய்தார். அதற்காக கூலி எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை. அவரைப் போலவே, நாமும் பிறருக்கு சேவை செய்ய வேண்டும். நிறைய முடியாவிட்டாலும், ஒருமுறையாவது பிறருக்கு உதவ வேண்டும்.
அனுமன் ஜெயந்தி நன்னாளில், அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது மட்டுமே!