FTC Forum
Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Global Angel on January 17, 2013, 02:31:53 AM
-
கடிவாளம்
நமது உடம்பு எங்கே இருக்கிறது என்பது முக்கியமல்ல; மனம் எங்கே இருக்கிறது என்பது தான் முக்கியம்.
உடம்பு போகின்ற இடங்களுக்கெல்லாம் மனது தொடர்ந்து வருவதில்லை. உடம்பை மயிலாப்பூரிலே உட்கார வைத்து விட்டு, மனது சிங்கப்பூர் வரையிலே சென்று திரும்பிவிடும்.
மனது போகின்ற வேகம் மிகப் பெரியது என்பதாலே தான் `வாயு வேக மனோ வேகம்…’ என்றெல்லாம் நம்முடைய மூதாதையர்கள் வருணித்தார்கள்.
அதைத்தான் சிவவாக்கியர் மிக அழகாகச் சொன்னார், `மனத்திலே அழுக்கைச் சுமந்தவன் காட்டிலே போய் இருந்தால் கூட அந்த அழுக்கு அவனோடேயே இருக்கும்’ என்று.
மனத்திலே அழுக்கில்லாதவன், ஒரு தாசியின் மார்பின் அருகிலே அமர்ந்திருந்தால் கூட, அவன் அந்த மார்பகத்தைப் பார்ப்பதில்லை. அவன் மனது அந்த தாசியை நாடுவதில்லை. பிறப்பை அறுத்து விட்ட பிறவியாகவே அவன் அங்கே காட்சியளிக்கிறான்.
ஆகவே, நன்மைகள் தீமைகள் அனைத்துமே மனத்தின் கண் தான் இருக்கின்றன என்பதனை, நான் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.
அனைத்தும் துறந்தும் கூட, கூட வந்த நாயைத் துறக்க முடியாத பத்ரகிரியாரைப் போல, எல்லாவற்றையும் துறந்தாலும் கூட இந்த மனது செய்கின்ற வேலையைத் துறக்க முடியாமல் நாம் அவதிப்படுகிறோம்.
`காதி விளையாடி இருகை வீசி வந்தாலும்
தாதி மனம் நீர்குடத்தே தான்’
என்றார் பட்டினத்தார்.
என்னதான் ஆட்டம் போட்டுக் கொண்டு போனாலும், தாதி நீர்க் குடத்திலே தான் மனத்தை வைத்திருப்பாள். தாதி என்றால்
வேலைக்காரி.தண்ணீர் தூக்கி வருகின்ற வேலைக்காரி, என்னதான் வேடிக்கைப் பேச்சுப் பேசட்டும், விளையாடட்டும், அவள் இடுப்பிலே இருக்கிற குடத்தின் மீதும், தண்ணீரின் மீதும்தான் மனது லயித்திருக்கும்.
ஞானிகளுடைய உள்ளமும் அப்படியே தான். அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதிலே லயித்து விடுவார்கள்.
ஆனால், சராசரி மனிதன் அவஸ்தைப்படுவதெல்லாம் இந்த மனத்தின் போக்கினாலே தான்.
கல்யாணத்தில் ஒரு கருப்புப் பெண் கிடைத்தால், மனது சிவப்புப் பெண்ணுக்காக ஏங்குகிறது; சிவப்புப் பெண் கிடைத்து விட்டால், கருப்புப் பெண்ணைக் காணும் போதெல்லாம் ஏங்குகிறது.
ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுக்கு வீட்டுச் சாப்பாடு பிரமாதமாக தோன்றுகிறது. வீட்டிலேயே சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுக்கு ஓட்டல் பலகாரம் மிக அற்புதமாகத் தோன்றுகிறது.
மாறுபட்ட உணர்வுகளே மனத்தின் லயங்கள்.
மனிதன் தன்னை அறியும்படி வைப்பதும் அந்த மனதுதான்; தன்னை அறிய விடாமல் தடுப்பதும் அந்த மனதுதான்.
நான் எல்லாவற்றையும் விட உயர்ந்தவன் என்ற ஆணவத்தை உண்டாக்குவதும் அந்த மனதுதான்; நான் எல்லாரையும் விடத் தாழ்ந்தவன் என்ற அறிவை உணர்த்துவதும் அந்த மனதுதான்.
`நாம் என்னதான் உயர்ந்தவர்களாக இருந்தாலும், பணிந்து போக வேண்டும்’, என்ற பணிவை உண்டாக்குவதும் அந்த மனதுதான்.
ஆகவே, தன்னை அறிய வேண்டிய மனிதன், முதன் முதலிலே வெல்ல வேண்டிய பெரிய எதிரி மனது.
உடம்பிலே ரத்தக் கொதிப்பு ஏறுவதற்கு உடம்பு மட்டும் காரணமல்ல; மனத்தின் டென்ஷன் தான் முக்கியமான காரணம் என்று மருத்துவ நிபுணர்களும், மனோதத்துவ நிபுணர்களும் கூறுகிறார்கள்.
ஒரு மனிதனைப் பார்த்து அனைவரும், `அடடா! எவ்வளவு அழகாக நீ இருக்கிறாய்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கட்டும். அவன் மனது அதைக் கேட்டுக்கேட்டு, தான் அழகாக இருப்பதாகவே நினைத்து, பூரித்துப் பூரித்து அவனுக்கு இல்லாத ஒரு அழகு முகத்திலும், மனத்திலும் வந்து விடுகிறது.
புவனத்திலுள்ள நிபுணர்களில் விஞ்ஞான நிபுணர்களைக் கூடப் பெரிதாக நினைப்பதில்லை; ஆனால், மனோதத்துவ நிபுணர்களையே உலகம் பெரிதும் மதிக்கிறது.
காரணம், மனத்தை நன்றாக அறிந்து கொண்டவன்தான், உலகை வெல்ல முடியும்; எதையும் வெல்ல முடியும் என்று உலகம் கருதுகிறது; ஒவ்வொரு மனிதனுடைய உள்ளமும் கருதுகிறது.
திருமூலர் திருமந்திரத்திலே சொன்னார்:
`தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமற் தானே கெடுகின்றான்.
தன்னையே அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே, அர்ச்சிக்கத் தானிருந் தானே!’
`தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!’
தன்னை அறிந்திருந்தால் அவனுக்குக் கேடில்லை.
மனிதன் எதனாலே கெடுகிறான்? தன்னை அறியாமலே கெடுகிறான்.
தன்னை அறியக்கூடிய அறிவு மட்டும் அவனுக்கு வந்து விடுமானால், எல்லோரும் தன்னை அர்ச்சிக்கும்படியும், தானே தனக்குப் பூஜை செய்யும்படியும் வளர்ந்து விடுவான்.
உனக்குப் பகைவன் யார்? நீயே!
உனக்கு மரணம் எது? நீயே!
உண்மை எது? நீயே!
நீ விதைத்த வினைப்பயனை அறுக்க வேண்டியவன் யார்? நீயே!
உனக்குத் தலைவன் யார்? நீயே!
உனக்குத் தொண்டன் யார்? நீயே!
எல்லாம் நீயே!
எல்லாம் நானே என்பதற்கு மூலம் எது? மனது!
`மனத்துக்கண் மாசிலன்ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற’
என்றான் வள்ளுவன்
உடம்பு களங்கப்பட்டிருக்கலாம்; ஆனால், மனது களங்கப்படாதிருக்குமானால், அந்த உணர்வு கூடப் பரிசுத்தமாக ஆகிவிடுகிறது.
முதலில் யார் மீதாவது நீ குற்றம் சாட்ட விரும்பினால், உன் மீதே குற்றம் சாட்டிப் பழகு.
ஒரு கண்ணாடியின் முன்னால் நின்று கொள். அதில் உன்னுடைய பிரதிபிம்பம் தெரியும். அதைப் பார்த்துக் கையைக் காட்டி, `நீ குற்றவாளி, நீ குற்றவாளி, நீ குற்றவாளி’ என்று மூன்று முறை சொல்.
நீ சொல்வது கண்ணாடியைப் பார்த்து; கண்ணாடி சொல்வது, உன்னைப் பார்த்து.
அதாவது, நீ உன் மனதுக்குச் சொல்கிறாய்; உன் மனது உனக்குச் சொல்கிறது.
மனது உனக்குச் சொல்கிறது என்னும் போது மனதுக்கு அப்பாற்பட்டது எது? உன் உடம்பு; உன் கண்; உன் உயிர்; அனைத்துக்குமே அந்த மனது சொல்கிறது, `நீ தான் குற்றவாளி’ என்று.
`நான் குற்றவாளி, நான் தவறானவன், நான் சிறியவன், நான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், நான் மரியாதையாக இருக்க வேண்டும்’ என்றெல்லாம் உணர, தன்னை உணர்ந்து கொள்கின்ற தன்மை என்பது ஒரு லயமாக, ஒரு ராகமாக, ஒரு சுருதியாக, ஒரு பாவமாக நம் மனதுக்குள்ளேயே எழுந்து விடுகின்றது.
எப்போது மனிதன், தன்னை உணர்ந்து கொண்டு விடுகிறானோ, அப்போது மனது பாடமாகி விடுகிறது.
பச்சை இலை தான் புகையிலை. அது பாடம் செய்து வைத்தால் எவ்வளவு நாட்கள் இருக்கின்றது?
ஒரு வெற்றிலையை எடுங்கள்; அதை ஒரு புத்தகத்துக்குள் வையுங்கள்; பல காலம் கழித்துப் பாருங்கள்; அந்த வெற்றிலையின் நிறம் மாறி, அது காய்ந்து போயிருந்தாலும் கூட அப்படியே, அதன் தன்மை கெடாமல் இருக்கும்.
இதுதான் மனத்தைப் பாடம் பண்ணுகிற முறையாகும்.
மனது பாடமாகி விட்டால், யார் இறந்தாலும் கூட அழுகை வராது; எது நிகழ்ந்தாலும் கூட அதிலே போய் மனது ஒட்டிக் கொள்ளாது.
காஞ்சிப் பெரியவர்களோ, மற்ற ஞானிகளோ எந்த மரணத்திற்காவது துக்கம் கொண்டாடினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யாருடைய மரணத்திற்காவது அவர்களுடைய கண்களிலே இருந்து கண்ணீர் வந்திருக்கிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மரணம் ஏன் அவர்களை அழச் செய்யவில்லை? மனது மரத்துப் போய் விட்டது; மனம் பாடமாகி விட்டது.
மனத்தைப் பாடம் செய்து கொண்டு விட்டால், தன்னை உணருகின்ற தன்மை, மிகச் சுலபமாக வந்து விடும்.
ஆயிரம் பேர் கூடி, நம் மீது குற்றம் சாட்டினால் கூட, நமக்குச் சிரிப்பு வரும்.
பத்தாயிரம் பேர் கூடி நமக்குப் புகழ் மாலை சூட்டினாலும், நமக்கு உடம்பிலே புல்லரிப்பு ஏற்படாது.
அதனால்தான், மனத்தைப் பாடம் செய்து கொள்ள வேண்டும் என்றனர் ஞானிகள். கீழே உள்ள பாடல்களைப் பாருங்கள்:
`மனத்தகத் தழுக்கறாத மவுனஞான யோகிகள்
வனத்தகத் திருக்கினும் மனத்தகத் தழுக்கறார்
மனத்தகத் தழுக்கறுத்த மவுனஞான யோகிகள்
முலைத்தடத் திருக்கினும் பிறப்பறுத் திருப்பரே!’
- சிவவாக்கியர்
`அலையுமனத்தை யகத்தடக்கு மவனேசரியை கடந்தோனா
மலையுமனத்தை யகத்தடக்கு மவனேகிரியை முடிந்தோனா
மலையு மனத்தை யகத்தடக்கு மவனே யோக தற்பரனா
மலையு மனத்தை யகத்தடக்கு மவனே ஞானி யதிசூரன்’!
- நிட்டானுபூதி
`ஓங்கிய பரசீ வைக்கிய முணர்ந்திடு முணர் வாலன்றிச்
சாங்கிய மகத்தி னாலுஞ் சார்ந்திடு மியோகத் தாலும்
வீங்கிய கன்மத் தாலும் வேறுபா சனையி னாலு
மோங்கிய முத்திப் பேற்றை யொன்றுவ தென்றுமில்லை!’
- விவேக சூடாமணி
மனத்திலே அழுக்கு அற்றுப் போகாதவன், மனது பாடமாகாதவன், எதற்கும் வளைந்து கொடுக்கிறவன், எதிலும் ஆசை வைக்கிறவன், காட்டுக்கு ஓடினாலும் கூட, அவனுடைய ஆசை சுற்றிக் கொண்டே இருக்கும்.
அந்தக் காட்டிலே இருக்கின்ற மரங்களையும், சுற்றிலும் இருக்கின்ற நிலங்களையும் பார்த்தால், இதில் கொஞ்சம் நமக்கு இருக்கக் கூடாதா என்று தோன்றும்.
எவளாவது ஒரு பெண் வழியிலே போனால் கூட, `இவளை வைத்து நாம் குடும்பம் நடத்தக் கூடாதா?’ என்று தோன்றும்.
ஓடியது காட்டுக்கு; பாடியது துறவறப் பாட்டு; ஆனால், தேடியதோ பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை.
காட்டுக்குப் போனாலும் கூட மனது அப்படி ஆகி விட்டால், அந்த லயத்துக்கு ஆட்பட்டு விட்டால், அது இந்த உடம்பையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போய் விடுகிறது.
ஆனால், `மனது பக்குவப்பட்டு விட்டால், அவன் காட்டுக்குப் போக வேண்டியதில்லை’ என்பது தான் சிவவாக்கியர் வாக்கு.
அவன் அங்கே இருக்கட்டும், பங்களாவிலே இருந்தாலும் அதைக் காடாக மாற்றிக் கொள்ள முடியும்; காட்டிலே இருந்தாலும் அதைப் பங்களாவாக மாற்றிக் கொள்ள முடியும்.
ஓடுகின்ற வண்டிக்குள் இருந்து கொண்டே, ஓடாமல் இருப்பவனே உண்மை சந்நியாசி; உண்மையில் மனத்தை அடக்கியவன்.
சாப்பாட்டைக் காணும் போது பசி எடுக்காதவன், மனத்தை அடக்கியவன்.
பெண்ணைக் காணும்போது இச்சை கொள்ளாதவன் மனத்தை அடக்கியவன்.
பணத்தைக் காணும் போது, இது நமக்கு இருக்கிறதா என்று எண்ணாதவன், மனத்தை அடக்கியவன்.
அடுத்தவனுடைய வீட்டைப் பார்த்து, `ஐயோ! இவ்வளவு பெரிய வீடா!’ என்று எண்ணாதவன், மனத்தை அடக்கியவன்.
எந்த ஞானியைப் பார்த்தாலும், `மனத்தை அடக்கு, மனத்தை அடக்கு’ என்று ஏன் சொல்லுகிறார்கள்?
சகல துன்பங்களுக்கும் அதுதான் காரணம்.
நான் ஏற்கெனவே அர்த்தமுள்ள இந்துமதத்தின் இதர பகுதிகளில் விவரித்துள்ளபடி, `இந்த மனத்தின் லயத்தினாலே தான்’ மனிதன்
கெடுகிறான்.அதனால்தான், `மனஸ்’ என்ற மூலத்தைக் கொண்டு `மனுஷ்யன்’ என்ற வடமொழி வார்த்தை உருவாயிற்று.
கலைவாணர் ஒரு கதை சொல்லுவார். அதை நானும் பல தடவை மேடைகளில் சொல்லி இருக்கிறேன்.
நோயுற்ற ஒருவன், ஒரு வைத்தியரிடம் போனான். `ஐயா! எனக்கு இன்ன நோய், அதற்கு ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்’ என்று
கேட்டான்.அந்த சித்த மருத்துவன் ஒரு லேகியத்தை எடுத்துக் கொடுத்தான்.
`நல்லது ஐயா! இந்த லேகியத்தை சாப்பிடும் போது ஏதாவது பத்தியம் உண்டா?’ என்று கேட்டான் அந்த நோயாளி.
`பத்தியம் வேறொன்றுமில்லை. லேகியத்தைச் சாப்பிடும் போது, குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது; அவ்வளவு தான்!’ என்று மருத்துவன் சொன்னான்.
நடந்தது அவ்வளவுதான். பிறகு, அவன் எப்போது லேகியத்தை எடுத்தாலும், எதிரே குரங்கு வந்து நிற்பது போல் தோன்றும்; கடைசி வரையில் அவன் சாப்பிட முடியவில்லை.
ஏன்? `குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது’ என்று வைத்தியன் சொன்னது அவன் மனத்தில் பதிந்து விட்ட காரணத்தால், லேகியத்தைத் தொட்டாலே அவனுக்குக் குரங்கு ஞாபகம் வரத் தொடங்கிற்று.
லேகியத்திற்கும், குரங்கிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? அவன் அதைச் சொல்லாமல் இருந்திருந்தால், இவன் அதை நினைக்கப் போகிறானா? கிடையாது.
அவன் சொல்லிவிட்ட காரணத்தால், மனது அதைச் சுற்றியே வட்டமிட்டது. லேகியத்தைத் தொடும் போதெல்லாம் `குரங்கு, குரங்கு’ என்கிற எண்ணமே வந்தது.
அதன் விளைவாகக் கடைசி வரை அவனால் அந்த லேகியத்தைச் சாப்பிட முடியவில்லை.
சில பேரைப் பார்க்கிறோம். தவறு செய்து விடுகிறார்கள். `ஏண்டா நீ இந்தத் தவறைச் செய்தாய்?’ என்று கோபத்தோடு கேட்டால், `ஐயோ, நான் என்ன செய்வேன்? என் மனது கேட்கவில்லையே! நான் அங்கே போனேன்’ என்கிறான்.
மனது எதற்குக் கேட்கும்? யாரிடம் கேட்கும்? நீ சொன்னால் மனது கேட்க வேண்டும்! அப்படிக் கேட்டால் தான் உனக்குள் அடங்கியது
மனது.மனதுக்குள் அடங்கியவனல்ல மனுஷ்யன்! மனுஷ்யனுக்குள் அடங்கியதுதான் மனது. இதுதான் வடமொழியினுடைய சாரம்.
பெரிய ஞானிகள் எல்லாம் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.
அவர்கள் ஏன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்? மனத்திலே டென்ஷன் இல்லை; நோயில்லை; நோய்க்கு அவர்கள் மருத்துவம் பார்த்துக் கொள்வதுமில்லை. தனக்கு நோய் இருப்பதாக அவர்கள் உணர்வதும் இல்லை.
இந்த மனத்தை அடக்குவதற்கு வெறும் பக்தி லயம் மட்டும் போதுமா என்றால், போதாது. இது சாதாரணமாக வரக்கூடிய ஒன்றல்ல. எல்லோருக்கும் வந்து விடாது. எல்லோருக்கும் இது வந்து விடுமானால் ஊரிலே போட்டி இருக்காது; உலகத்தில் போர் இருக்காது.
சில பேருக்கு மட்டுமே இது வருகின்ற காரணத்தால்தான், உலகத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது; அவர்களை ஞானிகள் என்கிறோம். மேதைகள் என்கிறோம்.
நாமெல்லாம் மனதுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
`என் மனசாட்சி அப்படிச் சொல்கிறது; என் மனது இப்படிச் சொல்கிறது’ என்று நாம் அடிக்கடி பேசுவோம்.
மனது சொன்னதை எது கேட்கிறது. மூளையா, கண்ணா, காதா?
அந்த மனத்தாலே ஆட்டி வைக்கப்படும் இந்த உடம்பு கேட்கிறது; அந்த உடம்பு அதன்படி செயல்படுகிறது.
ஏன், அந்த மனத்தை உன்னுடைய இஷ்டத்துக்கு, உன் மூளையினுடைய இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கக் கூடாது, `நான் சொல்கிறபடி கேள்’ என்று?
முந்திய அத்தியாயங்களில் சொன்னது போல மனத்தை அடக்கி,
`மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்
ஒன்றைய பற்றி யூசலாடுவாய்’
என்றானே பாரதி, அப்படி ஊசலாடுகின்ற மனதை உள்ளுக்குள்ளேயே அடக்கி வைத்து, பக்குவப்படுத்தி, பாடம் பண்ணி வாழக் கற்றுக் கொண்டு விட்டால், உறவு, பந்தங்கள், இரவு, பகல், இறப்பு, பிறப்பு எதிலேயும் பற்றும், பாசமும் இன்பமும், கண்ணீரும், புன்னகையும் மாறி மாறி வர வேண்டிய அவசியமே இருக்காது.
கோடை வரலாம்; வசந்தம் வரலாம்; பனிக்காலங்கள் வரலாம்; பருவங்கள் மாறுமே தவிர, உலகத்தினுடைய உருவம் மாறினாலும் கூட, உன்னுடைய நிலைமை மாறாது, மனதை மட்டும் உன்னால் அடக்க முடியுமானால்.
-
ஈஸ்வர லயம்
நர்மதையின் பிரவாகத்தை கமண்டலத்திலேயே அடக்கினாராம் ஆதிசங்கரர். கடலையே குடித்தானாம் குறுமுனிவன் அகத்தியன்.
எது ஆகும், யாராலே ஆகும் என்றெல்லாம் நாம் பயந்து கொண்டிருக்கத் தேவையில்லை. `நம்மாலே ஆகும்’ என்ற நம்பிக்கைதான் அதிலே முக்கியமாகும்.
எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டுச் செய்; அதிலே வில்லங்கம் வராது. அப்படி வந்தாலும் அது விரைவிலேயே தீர்ந்து விடும்.
ஒரு காரியம் வெற்றியடைந்து விட்டால், `நான் அப்படிச் செய்தேன்; இப்படிச் செய்தேன்; அதனாலே வெற்றி வந்தது’ என்று குதிக்காதே. `ஏதோ ஆண்டவன் அருளால் இந்த வெற்றி வந்தது’ என்று அவனையும் பங்காளியாகச் சேர்த்துக்கொள்.
கஷ்டம் வந்துவிட்டது என்றால், `நான் தான் தவறு செய்து விட்டேன்’ என்று கூட நீ வருந்தத் தேவையில்லை; `ஏதோ ஆண்டவன் கிருபை, இந்தக் கஷ்டம் இத்தோடு போயிற்று’ என்று அமைதியடை.
லாப நஷ்டங்களோ, நன்மை தீமைகளோ உன்னால் தான் விளைகின்றன என்றாலும், அதற்குப் பின்னணியில் இருப்பது ஆண்டவனுடைய இயக்கம்.
பலரிடம் திறமை இருக்கிறது; ஆனால், சிலருக்குத்தான் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அந்தச் சிலரிலேயும் மிகச் சிலர் தான் மிக வேகமாக முன்னேறுகிறார்கள்; உலகப் புகழ் பெறுகிறார்கள்.
ஏன்? ஆண்டவனுடைய இயக்கத்தில் அவனுடைய ஜாடை யார் மீது எப்பொழுது விழும் என்பதைச் சொல்ல முடியாது.
இறைவனை நம்புகிறவன், இறைவனுடைய கருணையை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டுமே தவிர, இறைவன் எப்போது வருவான் என்று ஆவலோடு இருக்க வேண்டுமே தவிர, இறைவனை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.
பக்கம் பக்கமாக இரண்டு நிலங்கள். ஒன்று பச்சைப் பசேல் என்றிருக்கிறது; ஒன்று வறண்டு போய்க் காய்ந்துக் கிடக்கிறது.
ஏன்?
அருகருகே இரண்டு கிணறுகள். ஒன்றிலே தண்ணீர் சுரக்கிறது; ஒன்று வறண்டு போய்க் கிடக்கிறது.
அது ஏன்?
அழகழகாக இரண்டு பெண்கள். ஒருத்திக்கு வருஷம் ஒரு பிள்ளை பிறக்கிறது; ஒருத்தி மலடாகவே இருக்கிறாள்.
அது ஏன்?
நெருக்கமாக இரண்டு மரங்கள். ஒன்று பூத்துக் காய்த்துப் பழமாய் பழுத்துத் தள்ளுகிறது; இன்னொன்று வெறும் இலையாய் உதிர்த்துத் தள்ளுகிறது.
அது ஏன்?
தான் பதவியில் இருக்கும் போது தன் கட்சியை விட்டு ஒருவரை விலக்கினார் ஒருவர். இப்போது அவரது பதவி போய் விட்டது. யார் விலக்கப்பட்டாரோ அவர் வந்திருக்கிறார்.
இது ஏன்?
விதி என்று சொல்லுங்கள்; வினை என்று சொல்லுங்கள்! எதுவாயினும் இறைவனின் இயக்கம் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்.
ஒரு தலைமுறை புகழ்பெற்று ஓயும்போது, அடுத்த தலைமுறை அந்தப் புகழையும் சேர்த்துக் கெடுப்பது போல பிறந்து தொலைக்கிறதே,
இது ஏன்?
டெல்லியில் இருந்து சென்னை வரை பதவியில் உயர்ந்தோர் ஒவ்வொருவரையும் பார்த்தால், அவர்கள் காலத்தில் அவர்கள் பெரும் புகழ்பெற்று விளங்குகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள், அவர்களுடைய பெயரைக் கெடுப்பதற்கென்றே பிறந்திருக்கின்றன.
ஏன் இந்தப் பிறப்பு? ஏன் இந்த நிலை? ஏன் இந்த முடிவு?
உகாண்டாவிலிருந்து அனாதையாகத் துரத்தப்பட்டு, தான்சானியாவில் அடைக்கலம் புகுந்த ஒருவர், நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் உகாண்டாவினுடைய தலைவராக ஆகியிருக்கிறார். இவ்வளவு காலத்திற்குப் பிறகு எது அவரோடு ஒத்துழைத்தது?
கராச்சியில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது, முஜிபுர் ரஹ்மானுக்கு அந்தச் சிறையிலேயே ஒரு சவக்குழி தோண்டப்பட்டிருந்தது. ஆனால், அதிலிருந்து மீண்டும், பங்களாதேஷைக் கண்டு அவர் பதவிக்கு வந்த பிற்பாடு, அவருடைய சவக்குழி வெகு விரைவிலேயே பங்களாதேஷிலேயே அமைந்தது.
அங்கிருந்து தப்பியவர், இங்கே மாண்டது எப்படி? இயக்கியது எது? நடந்தது என்ன?
பூட்டோ பதவியில் இருந்தபோது யாரைத் தளபதியாக நியமித்தாரோ, அவரே பூட்டோவைக் கைது செய்து தூக்கிலே போட்டார்.
அங்கே விளையாடியது எது?
`இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கியே தீருவேன்’ என்று சபதமிட்ட காந்தியடிகள், சுதந்திரம் வாங்கிய மறு ஆண்டிலேதான் கொல்லப்பட்டார்.
அதுவரையில் அவரைக் காப்பாற்றியது எது? எந்த பக்தி? எது அவருக்குத் துணை நின்றது?
இந்தியா, பிரிட்டனுக்கு அடிமையாக இருந்தது. இன்றோ, பிரிட்டனை விட வலிமை உள்ளதாக இந்தியா விளங்குவதாக உலகம் கருதுகிறது.
எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? இரண்டு தேசங்களுக்கிடையே ஏற்பட்ட நிலை என்ன? எந்த இயக்கத்தின் மூலம் அது நடந்தது?
எங்கோ ஒரு சக்தி இருக்கிறது. அதற்கு வடிவம் இல்லை என்கிறீர்களா? மெத்தச் சரி; `முருகன்தான்’ அது என்கிறீர்களா? அதுவும் சரி; `அல்லா தான் அது’ என்கிறீர்களா? அதுவும் சரி; `கிருஷ்ணன் தான்’ என்கிறீர்களா? அதுவும் சரி, `ஏசு தான்’ என்கிறீர்களா? அதுவும் சரி.
எதுவானால் என்ன? இறைவனுடைய இயக்கம் என்று ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதனை உணராதவன், அடிமடையனாவான்.
சிறுகூடற்பட்டி சாத்தப்பச்செட்டியாரும், பிள்ளையார்பட்டி விசாலாட்சி ஆட்சியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு எட்டாவதாக ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என்றும், ஆரம்பத்தில் அது முட்டாள் என்ற பெயரை எடுக்க வேண்டும் என்றும், பிறகு அது கவிஞனாக மாற வேண்டும் என்றும், மாறி அது சென்னையில் வந்து வாழ வேண்டும் என்றும், சென்னையில் இருந்து எல்லாத் தலைவர்களோடும் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், புதியதொரு உலகத்தைக் காண்பதிலே அந்தக் குழந்தைக்கு ஆசை வரவேண்டும் என்றும் எது விதித்தது? எது நடத்திற்று? எந்த இயக்கத்தில் அது நடந்தது?
இந்த இயக்கத்தைத்தான், நாத்திகர்கள் இயற்கை என்கிறார்கள்.
அப்படியே வைத்துக் கொள்ளட்டும்; இறைவனுக்கு அப்படியும் ஒரு பெயர் உண்டு.
`சுயம்பு’- இயற்கையாகத் தோன்றியவன் தானே இறைவன்!
என்னுடைய தாய் என்னைப் பெற்றாள்; அவளுடைய தாய் அவளைப் பெற்றாள்; அவளுடைய தாய் தந்தையர் அவளைப் பெற்றார்கள் என்று போய்க்கொண்டே இருந்தால் முதல் மூலம் ஒன்று வேண்டும். அந்த மூலத்திற்கும் ஒரு மூலம் வேண்டுமல்லவா? அதுதான், `ஆதிமூலம்’ என்று நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.
கடவுள், விதி இவற்றை நம்புவதிலே ஒரு சுகம் இருக்கிறது.
கஷ்டங்களை அது தீர்த்து வைக்கிறதோ இல்லையோ, தீர்ந்து விட்டது போன்ற ஒரு நிம்மதி ஏற்படுகிறது.
`இது நம்மாலே ஆனதல்ல’ என்ற முடிவு தானாகவே தோன்றுகிறது.
`ஆனது ஆகட்டும்’ என்று நான் முன்பே சொன்னது போல, ஒரு அமைதி தோன்றுகிறது.
அமைதியை வரவழைப்பதற்காகவாவது, ஆண்டவன் பேரில் நம்பிக்கை வேண்டும்.
`இறை நம்பிக்கை, இறை நம்பிக்கை’ என்று நான் அடிக்கடி வலியுறுத்துகிறேன், அப்படி என்றால் என்ன?
தினமும் கோவிலுக்குப் போவதா? குளிப்பதா? விபூதி பூசுவதா? குங்குமம் வைப்பதா? இல்லை; ஈஸ்வரனோடு ஐக்கியமாகி விடுவது; சிவமும் தாமும் ஒன்றே என்று அறிவது! அந்த லயத்தில் ஈடுபட்டு விடுவது.
ஆண்டவனை விட்டுத் தான் பிரிந்ததில்லை; ஆண்டவனை விட்டுத் தன்னைப் பிரிக்க முடியாது; ஆண்டவன் என்கிற வடிவத்தின் மற்றொரு பிம்பமே `தான்’ என்பதை உணர்வதே இறைவழிபாடாகும்.
மீண்டும் பெரியவரை அழைக்கிறேன்:
ஞானிக்கு ஆத்ம விஸ்வரூபத்தைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லை. ஒரே பரமாத்மா தான் இத்தனையாகவும் தெரிகிறது என்று கண்டு கொண்டவன் அவன். வெளியிலே தெரிகிற தோற்றத்தை மாயை என்று தள்ளிவிட்டு, எல்லாவற்றுக்கும் உள்ளேயிருக்கிற பரமாத்மா ஸ்வரூபத்தை மட்டுமே அனுபவிக்கிறவன் அவன். வெளிப்பார்வைக்குத் தெரிகிற உலகம் மாயை என்று ஆகிவிட்டதால், இந்த மாயா லோகத்தில் ஞானிக்குக் காரியம் எதுவுமே இல்லை. பார்க்கிறவன், பார்க்கப்படுகிற வஸ்து, பார்வை எல்லாமே ஒன்றாக அடங்கிப் போனவனுக்குக் காரியம் எப்படி இருக்க முடியும்? அவன் பிரம்மமாகவே இருக்கிறான் என்று உபநிஷத்து சொல்கிறது.
பிரம்மத்துக்குக் காரியம் இல்லை. ஆனால், அந்த மாயா உலகத்தில் அகப்பட்டுக் கொண்டு காரியங்களைச் செய்து வருகிறவர்கள் ஈஸ்வரன் என்று ஒரு வனைப் பூஜை செய்து, தங்கள் காரியங்களை நடத்தித் தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். நல்ல காரியங்களுக்காக, நல்ல மனதோடு பிரார்த்தித்தால், ஈஸ்வரனும் இவற்றை நடத்தித் தருகிறார். இதிலிருந்து ஈஸ்வரனும் காரியமே இல்லாமல் இருப்பவரல்ல என்று தெரிகிறது. நாம் பிரார்த்தித்தாலும், பிரார்த்திக்கா விட்டாலும் சகல பிரபஞ்சங்களையும் இத்தனை ஒழுங்கான கதியில் நடத்திக் கொண்டு, சகல ஜீவராசிகளுக்கும் சோறு போடுகிற பெரிய காரியத்தைச் செய்கிறார்.
காரியம் இல்லாத பிரம்மம் வேறு, காரியம் செய்கிற ஈஸ்வரன் வேறு என்பதா? இல்லை. ஞானியின் பிரம்மமேதான் லோக காரியங்களை நிர்வகிக்கிற ஈஸ்வரனாகவும் இருக்கிறது.
சிவனின் தட்சிணாமூர்த்திக் கோலம் பிரம்ம நிலையைக் காட்டுகிறது. அங்கே காரியம் இல்லை. ஒரே மவுனம்தான். அதே பரமசிவன் எத்தனை காரியங்களைச் செய்திருக்கிறார்? சிதம்பரத்தில் ஒரேயடியாகக் கூத்தடிக்கிறார். தாருகாவனத்தில் பிக்ஷாடனனாக அலைந்து மோகிக்கச் செய்திருக்கிறார். தக்ஷயக்ஞத்தில் சூரியனைப் பளீரென்று அடித்துப் பல்லை உதிர்த்திருக்கின்றார்.
ஸ்வாமி எப்போதும் உள்ளே அடங்கிய பிரம்மமாக இருக்கிறார். வெளியிலே சகல காரியமும் செய்யும் ஈஸ்வரனாக இருக்கிறார்.
சாதாரண ஜனங்கள் ஏரியில், சம்ஸார அலைகளில் நீந்திக் கொண்டிருக்கிறார்கள். ஞானிகள் மறுபக்கம் வயலிலே நிற்கிறார்கள். நடுவில் ஏரிக்கரை. அது குறுக்கிடுவதால் ஞானிக்கு ஏரி தெரியாது. ஏரியில் இருக்கிற ஜனங்களுக்கு வயல் தெரியாது. ஸ்வாமியோ இரண்டுக்கும் மத்தியில் இருக்கிற கரை மேல் இருக்கிறார்.
ஏரித்தடத்தில் நிற்கிற `தடஸ்தன்’ அவர். அவருக்கு லோகமும் தெரியும். லோக திருஷ்டி நசித்துப் போன ஞானியின் நிலையும் தெரியும். `ஏரியில் முழுகுகிறவனைத் தூக்கிப் போடு’ என்று வயலில் இருக்கிறவனைக் கூப்பிட்டு அவர் சொல்ல முடியும்.
எல்லாமே தாமே என்பதை ஸ்வாமி அறிந்திருக்கின்றார்; ஆனாலும், அவரை வேறாகவே நினைத்திருக்கிற ஜீவர்களை அவரும் வேறு போலப் பார்த்து வேடிக்கையும் செய்வார். இதைப்பற்றி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷதரின் `சிவலீலார்ணவ’த்தில் ஓர் அழகான சுலோகம் உண்டு. அதன் தாத்பர்யத்தைச் சொல்கிறேன்.
பரமேசுவரன் கூலியாளாக வந்து, பிட்டுக்கு மண் சுமந்த கதை எல்லோருக்கும் தெரியும். அவர் உடைப்பு அடைத்து ஒழுங்காக வேலை செய்யாததைக் கண்டு பாண்டிய ராஜா அவரைப் பிரம்பால் அடித்தான். உடனே அந்தப் பிரம்படி, பாண்டியன் உள்பட சகல ஜீவராசிகளின் மீதும் விழுந்தது. இங்கே, தாமே எல்லாம் என்பதை அவர் காட்டி விட்டார்.
இதைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார்: `அது சரி, உன்னைத் தவிர வேறில்லை என்ற சிவாத்வைதம் பிரம்படி படுவதற்கு மட்டும் தானா?. நீ மதுரமான பிட்டை வாங்கித் தின்றாயே, அப்போது மட்டும் ஏன் எல்லா ஜீவராசிகளுக்கும் அதை உண்ட ஆனந்தம் இல்லை? அடிபடும் போது ஒன்று; ஆனந்திக்கும் போது வேறா?’
ஸ்வாமி, உள்ளே அடங்கிய பிரம்மமாகவும், வெளியே காரியம் செய்கிற ஈசுவரனாகவும் இருப்பதை இந்த ரசமான கேள்வி மூலம் தெரிந்து கொள்கிறோம். அவர் செய்கிற காரியங்களை ஐந்தாகச் சொல்வார்கள்.
`பஞ்ச கிருத்யம்’ என்பார்கள். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்ற மூன்று உங்களுக்கே தெரியும். இந்த மூன்றும் மாயாலோக விஷயம்தான். இப்படி மாயையால் மறைகிற காரியம் `திரோதனம்’ எனப்படும். இந்த மாயையிலிருந்து விடுவிப்பதே அவன் செய்கிற மகா பெரிய காரியம். `அனுக்கிரகம்’ என்று அதற்கே பெயர்.
அத்வைத ஸித்தி நமக்கு ஏற்பட வேண்டும் என்றால் அதற்கு இந்த அனுக்கிரகம் இன்றி வேறு வழியில்லை. இந்த அனுக்கிரகத்தை வேண்டி வேண்டிச் செய்கிற உபாசனைக்கே, நம்மை அனுக்கிரகிக்கக் கூடிய கருணை படைத்தவர் அவர் என்று நம்பி, அவரிடம் நெஞ்சுருகி, அன்பு செலுத்துவதற்கே பக்தி என்று பெயர்.
இப்படி, தானே ஈஸ்வர லயமாகி விடுவதால் ஒரு வசதி உண்டு.
எதைச் செய்தாலும் கூட, இறைவன் செய்கின்றான் என்ற நோக்கம் எப்பொழுதும் தோன்றிக் கொண்டே இருக்கும்.
ஆண்டாளும், மீராவும் கண்ணனோடு ஐக்கியமானார்கள். ராதா, கண்ணனுடனே கலந்து விட்டாள்.
சைதன்ய சுவாமிகள் இறைவனோடு கலந்தார். கபீர்தாஸர் இறைவனோடு கலந்தார்.
இறைவனுக்கும் தனக்கும் பேதமில்லை என்ற உணர்வு ஏற்படும் போதே, இறைவனோடு பேசக்கூடிய வாய்ப்புத் தோன்றி விடுகிறது.
இறைவன் தன்னோடு உரையாடுவது போன்ற நினைப்பே வருகிறது.
தனக்குள்ளே தானாக நிறைந்து நிற்கின்ற ஆத்ம வடிவத்தைக் கோவிலிலே போய்த்தான் காணவேண்டும் என்பதில்லை.
வீட்டில் இருந்துகொண்டே காணலாம். பகலிலேயும் காணலாம்; இரவிலேயும் காணலாம்.
இப்படி ஈஸ்வரனோடு கலந்து விட்டவனைக் குளிர் நெருங்காது. நல்ல பனிக்கட்டியில் அவனைத் தூக்கிப் போட்டால் கூட, அது அவனைத் தொடாது.
வெயிலிலே தூக்கிப் போட்டாலும் கூட, அது அவனைச் சுடாது.
மழையிலே தூக்கிப் போட்டாலும் கூட, அது அவனை நனைக்காது.
காரணம், அந்த இறைவனோடு அவள் கலந்து விடுகிறான். தான் ஒரு மாமிசப் பிண்டம் என்பதையே அவன் மறந்து போகிறான்.
தான் ஒரு மனிதன் என்கிற உணர்வே அவனுக்கு அடிபட்டுப் போகிறது.
`எனக்கொரு சொந்தம் உண்டு; எனக்கொரு ஜீவன் உண்டு; பாசம் உண்டு; மனைவி மக்கள் உண்டு’ என்கிற எண்ணங்கள் அடிபட்டுப் போகின்றன.
`அவன் எனக்குத் துரோகம் செய்து விட்டான்; இவன் என்னை ஏமாற்றி விட்டான்; இவன் என்னோடு சண்டைக்கு வருகிறான்; இவன் என்னோடு போட்டி போடுகிறான்; இவன் என்னை எதிர்த்து நிற்கிறான்’ என்ற எண்ணங்களெல்லாம் லயத்தோடு ஒன்றியவர்களுக்கு வருவதே இல்லை.
இந்த ஈடுபாடு முடியுமா? நடக்கக் கூடியதுதானா?
ஏன் முடியாது? ஏன் நடக்காது?
கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து விடுகிறார்கள்.
பிள்ளைப் பாசத்தில் இரண்டறக் கலந்து விடுகிறோம்.
இறைவனோடு கலப்பதற்கு ஒரு ஆத்ம ஞானம் வேண்டும். ஆத்மாவுக்குள்ளே அந்த விளக்கு எரிந்து கொண்டே இருக்க வேண்டும். அது மிகப்பெரிய ஜோதியாக அனற்பிழம்பாக வெடிக்க வேண்டும்.
அப்படி வெடிக்கும்போது, உன்னை அணைத்து உன்னை அப்படியே சாம்பலாக்கிவிட்டு, நேரடியாகக் கொண்டு போய் இறைவனிடம் உன்னை அது சேர்த்து விடுகிறது.
ஆகவே, வாழ்நாளிலேயே இறைவனை அடைய விரும்புவோர், இறைவனும் தானும் ஒன்றே என்கிற உணர்வை முதலில் பெற்றாக வேண்டும்.
மகாகவி பாரதி கூறுகிறான்:
`சாமிநீ; சாமிநீ; கடவுள் நீயே;
தத்வமசி; தத்வமசி; நீயே அஃதாம்!
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
புகழ்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ; அம்மாயை தன்னை நீக்கி
சதாகாலம் `சிவோஹ’ மென்று சாதிப்பாயே!’
தெய்வம் உண்டென்பதை எப்படி அறிந்தோம்? உலகமிருப்பதாலேயே அறிந்தோம். தெய்வம் உயிர்; உலகம் அதன் வடிவம். உலகம் தெய்வந்தான்; உலகத்துச் செய்கைகளெல்லாம் தெய்வத்தின் செய்கைகளே; உலகத்தின் நடைகளிலிலும், வழிகளிலும் தெய்வத்தை உணர வேண்டும்.
செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை
சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை
உய்கை கொண்டதன் நாமத்தைக் கூறின்
உணர்வு கொண்டவர் தேவர்களாவர்.
வையமெல்லாம் தெய்வ வலியின்றி வேறில்லை
தெய்வம் நீயென்றுணர்.
வலிமையுடையது தெய்வம்நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்.
உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவாதொன்றில்லை
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
பயிலுமுயிர் வகைமட்டு மன்றியிங்கு
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்.
தெய்வ வலியுண்டு தீமையைப் போக்கும்.
-
பொய்யில்லா வாழ்க்கை
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
- என்றார் வள்ளுவனார்.
நீ குடிக்கலாம்; கூத்தியார் வைத்துக் கொள்ளலாம்; சூதாடலாம்; எந்தப் பாவங்களை நீ செய்தாலும் கூட, நீ கடைப்பிடிக்க வேண்டிய ஒரே ஒரு நியாயம், பொய் சொல்லாமல் இருப்பது.
எல்லாவற்றிலும் உண்மையே பேசுவது என்று முடிவு கட்டிக் கொண்டால், இந்தப் பாதகங்களில் இருந்து நீ விடுபடுவாய் என்கிறது வேதம்.
இந்தியாவில் மிக அரிதாகக் காணப்படுவது உண்மை பேசுவது!
அதிலேயும் ஜனநாயகம் என்ற ஒன்று இந்தியாவுக்கு வந்த பிற்பாடும், அரசியல்வாதிகள் என்போர் பொய்யே பேசுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களைப் பார்த்துச் சாதாரண மக்களும், சராசரி மனிதர்களும் பொய்யே பேசுவது என்று ஆரம்பித்து இருக்கிறார்கள்.
கிராமங்களிலே இருந்து நகரங்கள் வரையிலேயும் எல்லா இடங்களிலுமே பொய் பேசுவோர் அதிகரித்திருக்கிறார்கள்.
இந்தப் பொய்யினால் விளைகிற துன்பங்கள்தான், பஞ்சமா பாதகங்களிலேயே மிகப்பெரிய பாதகமாக முடிகின்ற துன்பமாகும்.
நான் தி.மு.க.வில் இருந்த போது காங்கிரஸ் காரர்களும், காங்கிரசில் இருந்த போது தி.மு.க.வினரும் எல்லோரும் பேசுவார்கள், `நான் குடிப்பவன்’ என்று.
எந்த மேடையிலும் நான் அதை மறுத்ததில்லை. சொல்லப் போனால் ஆரம்ப காலத்தில் அவர்கள் பேசிய போது எனக்குக் குடிப்பழக்கம் அதிகமில்லை. எப்போதோ மாதத்தில் ஒருமுறை, இருமுறைதான் குடிப்பது வழக்கம்.
ஆனாலும் கூட, அவர்கள் பேசிவிட்டார்கள் என்பதற்காக நான் அதை ஒப்புக் கொண்டு, `ஆமாம், நான் குடிப்பேன்’ என்று கூறி இருக்கிறேனே தவிர மறுத்ததில்லை; வாதாடியதில்லை.
திறந்த புத்தகமாக நாம் நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட்டால், அடுத்தவன் நம்மை விமர்சனம் செய்வதற்கு விஷயம்
கிடைக்காது.`இவன் இப்படிச் செய்தான், அப்படிச் செய்தான்’ என்று எதையும் ரகசியமாகப் பேச முடியாது.
நாம் இல்லவே இல்லை; செய்யவே இல்லை என்று மறுக்க வேண்டிய அவசியமும் கிடையாது.
`ஆம், செய்தேன்’ என்று ஒரு வார்த்தையின் மூலம், பல விமர்சனங்கள், பல விஷயங்கள், பல வார்த்தைகள் அடிப்பட்டுப் போகின்றன என்பதை மறந்து விடக்கூடாது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே நம்முடைய நாட்டில் பொய் பேசுவோர் அதிகமாகத்தான் இருந்திருக்கிறார்கள். இல்லையென்றால் வள்ளுவனார் அதை ஒரு முக்கியமான விஷயமாகக் குறிப்பிட்டிருக்க மாட்டாரல்லவா?
மதம் மனிதனுக்குக் கற்றுத் தரும் விஷயங்களில் மிக முக்கியமானது உண்மை பேசுவதாகும்.
`உண்மையே பேசு, உண்மையே பேசு’ என்று அது வெறும் வார்த்தையாகச் சொல்வது கிடையாது. உண்மை பேசியவன் எப்படி வாழ்ந்தான் என்பதற்குக் கதைகளையும் சொல்லி இருக்கிறது.
ஹரிச்சந்திரனுடைய வரலாறு, நாம் அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறாகும். உண்மையே பேசுவது என்று வைத்திருந்ததாலே, ஹரிச்சந்திரன், வாழ்க்கையில் கஷ்டப்பட்டிருக்கலாம்; ஆனால், அப்படி ஒரு மன்னன் இந்தப் பூமியை ஆண்டான் என்பதை இன்று வரை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்.
நம்மை நினைவில் வைத்துக் கொள்ளச் சொல்லும் சரித்திரமாக அது எப்படி ஆனது?
அவன் தன் வாழ்க்கையில் உண்மையே பேசினான் என்ற ஒரே காரணத்திற்காக, அது சரித்திரமாகிவிட்டது. கால காலங்களுக்கு அது நிலைத்து நின்று விட்டது.
எங்கள் ஊரிலே ஒருவர்.
எனக்குத் தெரிய, கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில், இது வரையிலே அவர் ஒரு உண்மை கூடப் பேசியது கிடையாது. எதையெடுத்தாலும் பொய்யே பேசுவார்.
இது பொய் என்று நமக்கே நன்றாகத் தெரியும்; இவனுக்குப் பொய் என்று தெரிகின்றது என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் பொய்தான் சொல்லுவார்.
அது ஒருவகை வியாதி போலவே தோன்றிற்று, எனக்கு. அப்படிப் பொய் சொல்வது மட்டுமல்ல; பொய்தான், தம்மை வாழ வைக்கிறது என்றும் அவர் நம்பத் தொடங்கினார்.
தன்னுடைய மகளுக்கு அவர் திருமணம் பேசினார். லட்ச ரூபாய்க்குச் சீர் வரிசை தருவதாகவும், லட்ச ரூபாய் கையில் கொடுப்பதாகவும் ஒப்புக் கொண்டார். இரண்டு லட்ச ரூபாய்க்கு ஏற்பாடு செய்திருப்பதாகவே சொல்லிவிட்டார்.
அவர் கையிலே காலணா பணம் கிடையாது. சீர்வரிசை கொடுப்பதற்கு அவரிடம் பொருள்களும் கிடையாது. அது அவருக்குத் தெரியும்; அவருடைய மனைவிக்கும் தெரியும். ஆனால், யாரிடமும் அதைச் சொல்லவில்லை.
`பாப்பாவுக்காக நான் இரண்டு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்திருக்கிறேன்; ஒதுக்கி வைத்திருக்கிறேன்’ என்று மட்டும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டே வந்தார்.
பலபேரிடம் வீட்டுத் தேவைக்கென்று இரவலாக நகைகளையும், பாத்திரங்களையும் வாங்கி வந்தார்.
கடன் வாங்கி வந்த பொருள்களை, எல்லாம் சீர்வரிசை என்று அடுக்கி வைத்துவிட்டார்.
மாப்பிள்ளை அழைப்பு நடந்து விட்டது; தாலி கட்ட வேண்டும். லட்ச ரூபாய் இவர் கொடுப்பதாகச் சொன்ன சீர்வரிசையை மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கேட்டார்கள்.
`இப்பொழுது கையிலே பணம் இல்லை. நோட்டெழுதித் தருகிறேன்’ என்றார்.
மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சரி, பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கருதித் தாலி கட்ட வைத்து விட்டார்கள்.
அவர்கள் நல்லவர்கள்; நல்ல குணமுடையவர்கள்; தரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
தாலி கட்டிய பிறகு தொகையைக் கேட்டார்கள். அவரிடம் பணமே இல்லை என்பது தெரிந்தது. இல்லை என்பது மட்டுமல்ல; சீர்வரிசையாகப் பல பொருட்களை வைத்திருந்தாரே, அவற்றையும் பல பேர் வந்து, `இது என்னுடையது, இது என்னுடையது’ என்று எடுத்துக் கொண்டு போக ஆரம்பித்தார்கள்.
மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் திகைத்தார்கள். `தவறான இடத்தில் திருமணம் செய்து விட்டோம்’ என்று அவர்கள் முடிவு கட்டினார்கள்.
கடைசியில் என்ன நடந்தது?
மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மட்டும் கொஞ்சம் தரம் கெட்டவர்களாக இருந்திருந்தால், பெண்ணினுடைய வாழ்க்கை அதோகதியாகி இருக்கும். ஆனால், அவர்கள் கொஞ்சம் உயர்ந்த குணம் படைத்தவர்களாக இருந்த காரணத்தால், ஒரே ஒரு விஷயத்தைச் சொன்னார்கள்.
`சீர் கொடுப்பதாக நீங்களே சொன்னீர்கள்; ஏமாற்றி விட்டீர்கள்; பரவாயில்லை. அதற்காகப் பெண்ணினுடைய வாழ்க்கையை நாங்கள் கெடுக்க விரும்பவில்லை. பெண்ணை நாங்கள் அழைத்துக் கொண்டு போகிறோம். அந்தப் பெண், நீங்கள் வாக்களித்தபடியே சீர்வரிசை கொடுத்த பிறகுதான் தாய் வீட்டுக்கு வருவாள். அதுவரை அவள் தாய் வீட்டு வாசலை மிதிக்க மாட்டாள்’ என்று சொல்லி, அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.
சாதாரணமாக மற்றக் குடும்பங்களில் என்ன நடக்கும்?
தாய் வீட்டுக்குப் பெண்ணை அனுப்பி, `சீர்வரிசையோடு திரும்பி வா’ என்று சொல்லி விடுவார்கள்.
இவர்கள் உயர்ந்த மனிதர்களானதாலே, பெண்ணைத் தங்களுடன் அழைத்துக் கொண்டுபோய், `தாய் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்’ என்று கூறிவிட்டார்கள்.
பெண் இப்போது நிம்மதியாகத்தான் வாழ்கிறாள் என்றாலும், அந்தப் பெண்ணின் தகப்பனார் சொன்ன பொய்யை வைத்து ஊரே சிரிப்பாய்ச் சிரித்தது. அந்த ஊரிலே அவர் குடியிருக்க முடியாமல் வேறு ஊரில் போய்க் குடியிருக்கிறார், இப்போது.
கதைகள் நிறையக் கேட்கிறீர்கள்.
ஒரு பொய், பல உயிர்களைப் பலி வாங்கியது என்றும், ஒரு பொய் ஒரு மனிதனை வாழ விடாமல் ஆக்கிற்று என்றும், ஒரு பொய், ஒரு குடும்பத்தையே பாழாக்கிற்று என்றும் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
அப்படி இருந்தும் கூடப் பொய் சொல்லுகிறவன் இல்லாமற் போனானா என்றால், அதுதான் இல்லை.
இந்தப் பொய் சொல்லுகின்றவனைத் திருத்துவதற்குத்தான், மதம் பல உபந்நியாசங்களைச் செய்தது. பல உபந்நியாசகர்கள் அதற்காகவே முயன்றார்கள்.
இன்றைக்கு மதவாதியாக இருக்கிறவன் பொய் சொல்லப் பயப்படுகிறான். `பொய் சொன்னால் நாக்கு வெந்து போகும்; பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது; பொய் சொன்னால் புற்று வைக்கும்’ என்றெல்லாம் பயந்து, பொய் சொல்லாமல் இருப்பதற்கு மத அடிப்படையிலே தான் அவன் கற்றுக் கொள்கிறான்.
அதனால்தான், தனி மனித ஒழுக்கத்தை மதம் காப்பாற்றுகிறது என்று நான் அடிக்கடி சொல்லுவது வழக்கம்.
நானென்ன, பெரியவர்கள், என்னைவிட வயதிலே மூத்தவர்கள் எல்லாம் சொல்லிப் போனதும் அது தான். மனிதனுடைய தனி வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவதும், சீர்படுத்துவதும், மதம்தான்.
`பொய் சொல்லாதே, நேர்மையாக நட, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடு, ஒழுங்காக இரு’… இவ்வளவையும் மதம் போதிக்கின்ற காரணத்தினால், அது முழு சந்நியாச மடமாக மட்டும் இல்லாமல், ஒழுக்கத்தைக் கற்பிக்கின்ற உன்னதப் பள்ளிக்கூடமாகவும், கலைக்கல்லூரியாகவும் அமைந்திருக்கிறது.
நான் பொய் சொல்லுகிறேன்; இன்னொருவன் அதிலே ஏமாறுகிறான். இதுதானே கதை?
இன்னொன்றை எண்ணிப் பாருங்கள். நானும் ஒரு பொய்யனிடம் மாட்டிக் கொண்டு, நான் ஒரு பொய் சொல்ல, அவன் ஒரு பொய் சொல்ல என்று இரண்டு பேரும் பொய் சொல்லிக் கொண்டிருந்தால், விஷயம் எப்படி இருக்கும்?
திருமூலர், திருமந்திரத்திலே சொன்னது போல், `குருடும் குருடும் குருட்டாட்டமடி, குருடும் குருடும் குழிவிழு மாறே’ என்று ஆகிவிடும்.
`வேதம் பொய், புராணம் பொய், இதிகாசம் பொய்’ என்று மேடையிலே முழங்குகிறானே, அவன் மேடையிலே பேசுவதெல்லாம் பொய்.
இன்னொன்றைப் பொய் என்று சொல்லி வருகிறவன், தானாவது பொய் சொல்லாமல் இருக்கிறானா என்றால், அதுதான் இல்லை.
வேதத்தினுடைய கதைகள் பொய்யாக இருக்கலாம்; புராணத்தினுடைய கதைகள் பொய்யாக இருக்கலாம்; ஆனால், பொய்யான கதைகள் உண்மையான நீதியைப் புகட்டுகின்றன.
மேடையிலே பேசுகின்ற நாத்திகன், பகுத்தறிவு என்ற பேராலே சொல்கின்ற பொய், எவ்வளவு குடும்பங்களைப் பாழடித்திருக்கிறது என்பதனை நான் அனுபவத்திலே அறிந்திருக்கிறேன்.
ஆங்கிலத்திலே ஒரு பழமொழி சொல்லுவார்கள், `உண்மை வாசற்படியைத் தாண்டுவதற்குள், பொய் ஊரைச் சுற்றி வந்துவிடும்’ என்று.
எவ்வளவுதான் பொய், ஊரையும் உலகத்தையும் சுற்றி வந்தாலும், கடைசியில் ஒரு நாள் அது பொய் என்பது தெரிந்து விடும்.
இறுதியிலே பொய், `உண்மை’ என்றே சாதிக்கப்பட்டு வெற்றி பெற்றதாக நீங்கள் வரலாறே கேட்டிருக்க முடியாது.
காலம்தான் வித்தியாசம். சில பொய்கள் ஆறுமணி நேரத்திலேயே வெளியாகிவிடும்; சில ஆறு நாள்; சில ஆறு வாரம்; சில ஆறு மாதம்; சில ஆறு வருஷம். ஆனால், ஆயுள் காலத்திற்குள்ளாக, நாம் சொன்ன பொய் நம்மையே வந்து திருப்பித் தாக்கும் என்பதனை வரலாறு காட்டுகிறது; வேதம் காட்டுகிறது; புராணம் காட்டுகிறது; இதிகாசம் காட்டுகிறது.
வடமொழியில், `சத்யமேவ ஜெயதே’ என்கிறார்கள்.
அந்த, `சத்யமேவ ஜெயதே’ என்பதை, `உண்மையே வெல்லும்’ என்று தமிழிலே மொழிபெயர்த்திருக்கிறார்கள். அப்படித் தமிழில் மொழிபெயர்த்தது தவறு.
மனம், வாக்கு, காயம் இம் மூன்றாலேயும் நேர்மையாக நடப்பதற்குப் பெயர்தான் சத்தியம் என்பதாகும். அந்தச் சத்தியம், இந்த மூன்றும் சேர்ந்து நீதி தவறாமல் நடப்பதாகும்.
புராண இதிகாசக் கதைகளிலே கூட, `மனோ வாக்குக் காயங்களாலே அவன் நியாயமாக நடந்தான்’ என்று தான் வரும்.
வெறும் வார்த்தையாலே மட்டும் நாணயமாக இருந்தால் போதாது; உடம்பும் நாணயமாக இருக்க வேண்டும்; மனதும் நாணயமாக இருக்க வேண்டும்.
இம் மூன்றாலேயும் நாணயமாக இருக்கும் ஒரு மனிதனை உலகம் மதிக்கும் என்பதற்குக் காந்தியடிகள் ஒரு உதாரணம்; நேரு ஒரு உதாரணம்; ராஜாஜி ஒரு உதாரணம்; மற்றும் மகான்களும் உதாரணம்; இந்தியாவுக்குள்ளே இவர்கள் உதாரண புருஷர்கள்.
ஆப்ரகாம் லிங்கனிலிருந்து உலகத்து மனிதர்கள் பல பேரையும் நீங்கள் பார்த்தால், புகழ் பெற்ற அத்தனை மனிதர்களும் உண்மை சொன்னதாலேயே புகழ் பெற்றார்களே தவிர, மிகப் பிரமாண்டமான பணி செய்ததினால் மட்டும் புகழ் பெற்றவர்களல்லர் என்பது தெரியும்.
ஆனால், எப்பொழுதும், எந்தக் கட்டத்திலும் உண்மையே பேச வேண்டும்; பொய்யே சொல்லக் கூடாதா என்று கேட்டால், அதற்கும் வள்ளுவன் ஒரு வழி வகுத்துக் காட்டியுள்ளான். நல்ல காரியம் நடக்கும் என்றால், அதற்காகப் பொய் சொல்லலாம். `பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்த்த நன்மை பயக்கும் எனின்’ என்றான் வள்ளுவன்.
பத்துப் பொய்யைச் சொல்வதனால் ஒரு பெண்ணின் திருமணம் நடந்து விடும் என்றால், அந்தப் பொய்யை நீ சொல்லலாம்.
இருபது பொய்யைச் சொல்லி ஒரு குழந்தையை உன்னால் காப்பாற்றி விட முடியும் என்றால், அந்தப் பொய்யை நீ சொல்லலாம்.
பொய்மை, வாய்மை ஆகிறது எப்போது? புரை தீர்த்த நன்மை பயக்கும் போது.
ஒரு குடிகாரக் கணவன். நன்றாகக் குடித்து விட்டுப் போதையில் மனைவியோடு சண்டை போடுகிறான். மனைவி ஏதோ வேகத்தில் திட்டி விடுகிறாள். அவள் திட்டிவிட்டாளே என்று அரிவாளை எடுத்துக் கொண்டு அவளைத் துரத்துகின்றான். துரத்தப்படும் மனைவி வெகு வேகமாக ஓடுகிறாள். ஓடிப்போனவள் கணவனுக்குத் தெரியாமல் ஒரு வீட்டில் அடைக்கலம் கேட்கிறாள். அவளுக்கு ஒருவன் அடைக்கலம் கொடுக்கிறான். வீட்டுக்குள்ளே அவளை மறைத்து வைக்கிறான். பின்னாலேயே கணவன் வருகிறான். `என் மனைவி இங்கே வந்தாளா?’ என்று கேட்கிறான்.
உடனே அடைக்கலம் கொடுத்தவன், `நாம் உண்மையல்லவா பேச வேண்டும்’ என்று கருதக்கூடாது.
என்ன செய்ய வேண்டும்?
`இல்லையே! உன் மனைவி இங்கே வரவில்லையே! அவள் யாரென்றே எனக்குத் தெரியாதே!’ என்று ஒரு பொய்யைச் சொல்ல வேண்டும்.
அப்படி அவன் பொய்யைச் சொன்னால், அவளின் கணவன் வேறொரு திசையிலே ஓடுவான். பிறகு போதை தெளிந்ததும் யோசிப்பான். `நல்ல வேளை, மனைவி கிடைக்காதது. கிடைத்திருந்தால் தவறல்லவா செய்திருப்போம்’ என்று அப்போதுதான் அவனுக்குப் புரியும்.
ஒரு பொய் உயிரைக் காப்பாற்றும்; ஒரு மனிதனைத் திருத்தும்.
அந்த மாதிரி இடங்களில் பொய் சொல்வது, நியாயம் என்கிறான் வள்ளுவன்.
ஆனால், பொய்யே சொல்லி வாழலாம் என்று முடிவு கட்டுகிறார்களே, அந்த அயோக்கியர்களைக் காணும்போது தான் எனக்கு அதிசயமாக இருந்தது.
திருமணத்திற்கு ஐயரைக் கூப்பிட்டுச் செலவு செய்வது தண்டம் என்று சொல்லிவிட்டு, `அந்தப் பணத்தை எனக்குக் கொடு’ என்று வாங்கிக் கொள்ளும் சீர்திருத்தவாதிகளை நான் பார்த்திருக்கிறேன்.
தான் பதவியில் இருக்கும்போது தவறான காரியங்களைச் செய்துவிட்டு, மற்றவன் அதே பதவிக்கு வந்து அதே காரியங்களைச் செய்தால், `ஐயோ! அநியாயம்!’ என்று சத்தம் போடும் அரசியல்வாதிகளைப் பார்த்திருக்கிறேன்.
தராசைத் தலைகீழாக நிறுத்தும் வணிகர்களை, வியாபாரிகளைப் பார்த்திருக்கிறேன்.
பத்து ரூபாய் கடன் கொடுத்து விட்டு, இருபது ரூபாய்க்கு எழுதி வாங்கும் வட்டிக் கடைக்காரனைப் பார்த்திருக்கிறேன்.
ஆயிரம் ரூபாய் நகையின் மீது இருநூறு ரூபாய் கடன் கொடுத்து, ஆறு மாதத்திற்குப் பிறகு, `நகை வட்டியில் மூழ்கி விட்டது’ என்று சொல்லும் அடகு பிடிப்பவனைப் பார்த்திருக்கிறேன்.
அரிசியிலே கலப்பதற்கென்று, தனிக் `கல் தொழிற்சாலை’யே நடத்தும் அரிசி வியாபாரியைப் பார்த்திருக்கிறேன்.
துவரம் பருப்பில் கலப்பதற்கென்று, வடக்கே இருந்து கேசரிப் பருப்பை வரவழைக்கும் வியாபாரிகளைப் பார்த்திருக்கிறேன்.
ஆட்டுக்கறியில் மாட்டுக்கறியைக் கலந்து, பிரியாணி போடும் அசைவ ஹோட்டல்களுக்குப் போயிருக்கிறேன்.
அவர்களே பதினைந்து ரூபாய்க்குக் கோழி வாங்கி, அதை எண்பது ரூபாய்க்கு விற்கின்ற அநியாயத்தைக் கண்டிருக்கிறேன்.
நாலு ரூபாய் அரிசியையும், இரண்டு ரூபாய் உளுந்தையும் கலந்து செய்கிற இட்லியை, நாற்பது ரூபாய்க்கு விற்கும் ஹோட்டல்காரர்களையும் பார்த்திருக்கிறேன்.
அடுத்த சலவையிலே சாயம் போகும் துணியை, அற்புதமான பட்டு என்று விற்பனை செய்யும் துணிக் கடைக்காரர்களைக் கண்டிருக்கிறேன்.
இந்தியாவிலே எவ்வளவுக்கெவ்வளவு புனிதமான கோயில்களைக் கண்டேனோ, அவ்வளவுக்கவ்வளவு அநியாயமாகப் பொய் சொல்பவர்களையும் கண்டிருக்கிறேன்.
இந்தப் பொய்யிலிருந்து மனிதனையும், நாட்டையும் மீட்பதற்கான ஒரே கருவி, மதம்.
ஒரே துணைக்கருவி, இறைவன்.
அந்த மதமும், இறைவனும் தான் மனிதர்களை மீட்க முடியும்.
மதத்தாலேயும், இறைவனாலேயும் பொய்யிலே இருந்து மீண்டவர்களை நான் பார்த்திருக்கிறேன்.
தெய்வ பக்தி வளர வளர, `நமக்கேன் வம்பு, ஆண்டவன் நம்மைச் சபித்து விடுவான்; ஆண்டவன் நம்மைக் கொன்று விடுவான்; ஆண்டவன் நம்மைத் தண்டித்து விடுவான்’ என்றெல்லாம் பயந்து, பொய் சொல்லாமலேயே இருக்கப் பழகியவர்கள் பலர் உண்டு.
சின்ன வயதில் பொய் சொல்லி, திருடி, ஜெயிலுக்குப் போய் வந்தவன் கூட, பெரிய வயதில் மனம் திருந்தி யோக்கியமாக இருப்பதற்கு மதம்தான் காரணமாக இருக்கிறது.
ஆகவே, மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால், அவனுக்கு மத நம்பிக்கை வேண்டும்.
அந்த மத நம்பிக்கையிலேயும், அவனை ஒழுங்காகத் திருத்தி, செம்மையாக வாழ வைக்கின்ற மதம், இந்து மதம்.
ஆம்; அதுதான் `அர்த்தமுள்ள இந்துமதம்’.
-
சேரிடம் அறிந்து சேர்
சுத்தமான சோம்பேறிகள் எப்படி சம்பாதிப்பது என முடிவு கட்டித் தொடங்கிய இயக்கமே, நாத்திக இயக்கம்.
உலகத்தின் மற்றப் பகுதிகளிலே, நம்பி நாத்திகர்களானவர்கள் உண்டு.
தமிழ் நாட்டில் பெரும்பாலும் திருடர்களும், அயோக்கியர்களுமே நாத்திகர்களானார்கள்.
திருவிழாவில் வழி தவறிப்போன குழந்தை, தேர்ச்சக்கரத்தில் சிக்கிக் கொண்டது போல், நான் இதில் சிக்கிக் கொண்டேன்.
தவறான சேர்க்கையாலே, பிறப்பின் அர்த்தத்தை மாற்ற முயற்சித்தேன்.
நான் யார் என்று புரியாத காரணத்தாலே, தங்களைப் பொறுத்தவரை கெட்டிகாரர்களாக இருந்தவர்கள் வலையில் விழுந்தேன்.
என்ன செய்வது? பக்குவமற்ற நிலை.
சின்ன வயதில் என் தாத்தா என்னைத் தோளிலே தூக்கி வைத்துக் கொள்வார்.
நான் ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களைக் காட்டி, `அவை என்ன தாத்தா?’ என்பேன்.
`நட்சத்திரங்கள்’ என்பார்.
`அப்படியென்றால் என்ன?’ என்று கேட்பேன்.
உடனே அவர் எனக்குப் புரிகின்ற பாஷையில் சொல்லத் தொடங்குவார்.
`அதாவது ஆகாயத்தில் தேவர்கள் இருக்கிறார்கள் அல்லவா, அவர்களெல்லாம் சுருட்டுப் பிடிக்கிறார்கள். அதுதான் இது!’ என்பார்.
நான் நம்பி விடுவேன்.
மழை பெய்யும்; `இது என்ன தாத்தா?’ என்பேன்.
`தேவர்களெல்லாம் குளிக்கிறார்கள்; அது தான் இது!’ என்பார்.
அதையும் நம்பி விடுவேன்.
இருபது வயதிலும் இப்படிப்பட்ட பக்குவத்தில் நான் இருந்தேன் என்பதை வெட்கமில்லாமல் ஒப்பு கொள்கிறேன்.
இல்லையென்றால் எவனோ ஒரு நாத்திகனோடு நட்பு ஏற்பட்டு, நான் நாத்திகனாகி இருப்பேனா?
ஒரு மாயா வாதம், போலித்தனம்-மனது அறிந்தே சொன்ன பொய், நாத்திகம் என்பது.
வாழ்க்கையில் அலுத்தவர்கள், சலித்தவர்கள், எவ்வளவோ காலம் கடவுளை வேண்டியும் பயனில்லையே என்று நினைத்தவர்கள்-இவர்களெல்லாம் சிக்கிக்கொண்ட வலையே நாத்திகம்.
சிக்கிக் கொண்ட ஈக்களைக் கடித்துத் தின்ன முயன்ற சிலந்திகளே, அதன் தலைவர்கள்.
அதற்கு அவர்கள் பூசிய சாயம், `பகுத்தறிவு’ என்பது.
சட்டையைக் கறுப்பாகப் போட்டுக் கொண்டு துக்கம் கொண்டாடிய அவர்கள், உள்ளத்தையும் `கறுப்பாகவே’ வைத்திருந்தார்கள்.
பெண்டாட்டியைக் கோவிலுக்கு அனுப்புவார்கள்; பிள்ளையை ஜாதகம் எழுதி வாங்கி வரச் சொல்வார்கள்; மேடையில், `எல்லாம் பொய்’ என்று பேசுவார்கள். நான் அதை நம்பினேன்.
அதுவரை கேளாத புதிய விஷயமாக இருந்ததால் அதைச் சொல்வதைப் பெருமை என்று நினைத்தேன். எதையும் மறுப்பது அறிவுக்கு அடையாளம் என்று முடிவு கட்டினேன்.
இவ்வளவு கூத்தும், இரண்டு மூன்று ஆண்டுகளே.
ஆயினும், இந்த அனுபவங் களையும், அந்தத் தலைவர்களையும் என்னால் மறக்க முடியாது.
பொய்யும் அயோக்கியத்தனமும் நிறைந்த ஒரு உலகத்தை, புனித உலகமாகச் சித்திரித்த அந்தக் கெட்டிக்காரர்களை, எப்படி நான் மறக்க முடியும்?
அவர்கள் கடவுளைப் பற்றிய கதைகளின் மீதும், புராண இதிகாசங்களின் மீதும் விளையாடினார்களே தவிர, அடிப்படைக் கடவுள் தத்துவத்திற்குச் சரியான விளக்கமும், மறுப்பும் கொடுக்க முடியவில்லை.
அதனால் தான், நான் விரைவிலேயே அதிலிருந்து மீண்டு விட்டேன்.
பிறப்புக்கு முந்தியதென்ன? இறப்புக்குப் பிந்தியதென்ன?
விஞ்ஞானிகளே திண்டாடும் இந்தக் கேள்விக்கு, இந்த அரைவேக்காடுகள் என்ன பதில் சொல்ல முடியும்?
`அம்மிக் குழவி சாமி’ என்றும், `அந்தக் கல்லை உடைத்து ரோடு போடுவோம்’ என்றும் ஊர்ச்சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு திமிர் பிடித்துப் பேச முடிந்ததே தவிர, இன்னின்ன காரணங் களால் கடவுள் இல்லை என்று எவனுமே விளக்கம் சொன்னதில்லை.
அதிலே, சிக்கிக்கொண்ட நானும், அவர்கள் பாணியிலேயே, `அடியே, காஞ்சி காமாட்சி! மதுரை மீனாட்சி! காசி விசாலாட்சி! உங்களுக்கு ஏனடி மண்டபங்கள்?’ என்று பேசத் தொடங்கினேன்.
எந்த வெயிலிலும், வற்றிப் போகக்கூடிய அந்தக் காட்டு வெள்ளம் என்னையும், இழுத்துக் கொண்டு போயிற்று.
நாத்திக வாதம் ஒரு போலித்தனம் என்பதை என்னால் உணர முடியவில்லையே, அப்போது!
அவர்களை மட்டுமே குறை சொல்லி என்ன பயன்? அந்தப் பக்குவம் எனக்கில்லையே, அப்போது!
நான் யார் என்பதை முற்றிலும் அறியவில்லையே அப்போது!
மகத்தான காவியங்களைப் படைக்கக் கூடிய உள்ளறிவு எனக்கிருப்பதாகத் தோன்றவில்லையே, அப்போது!
கூட்டம் கூடுவார்கள்; ஆட்டம் போடுவார்கள்; வசூல் செய்வார்கள்; வாழ்க்கை நடத்துவார்கள்; நானோ கைச்செலவு செய்து கொண்டு, கத்திக் கொண்டிருப்பேன்.
காரைக்குடிக்குப் போகும் போதெல்லாம் சில செட்டியார்கள் கேட்பார்கள், `ஏண்டா தம்பி, எவ்வளவோ பெரிய திறமையை வைத்துக்கொண்டு இந்தக் கூட்டத்தில் போய்க் கிடக் கிறாயே’ என்று.
அப்போது எனக்குப் புரிந்ததில்லை.
பல்லாயிரம் ஆண்டு காலப் பண்பாடுகளைப் பற்றிய வரலாற்று அறிவு எனக்குக் கொஞ்சம் கூட இருந்ததில்லை என்பதை, வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன்.
அந்த இரண்டு மூன்று ஆண்டுகள், நானும் கறுப்புச் சட்டை போட்டிருந்தேன்.
பார்ப்பதற்கே அருவறுப்பானதும், வெயில் காலத்துக்கு ஒத்து வராததுமான கறுப்புச் சட்டையை, நான் விருப்பத்தோடு தான்
போட்டேன்.சீதையைப் பற்றியும், திரவுபதியைப் பற்றியும் கேவலமாக எழுதினேன்; கம்பனைக் கேலி செய்தேன்.
சுய உணர்வில்லாத செம்மறி ஆடு, கசாப்புக் கடைக்குத் தானே போய்க் கழுத்தை நீட்டுவது போல, நீட்டினேன்.
நல்ல வேளை; கத்தி விழும் முன்பாகவே புத்தி வந்து வெளியேறினேன்.
நாத்திகன் சொல்வது என்ன?
திரும்பத் திரும்ப ஒன்றுதான்.
`சூரியன் இயற்கையாக வருகிறது; சந்திரன் இயற்கையாக வருகிறது; பிள்ளை தகப்பனாலே பிறக்கிறது; மரணம் இயற்கையாகவே நடக்கிறது; இதிலே கடவுள் என்றொருவன் இல்லவே இல்லை’ என்பதே அது.
அதிலே எனக்குப் புரியாத ஒன்று, சில தகப்பன்மார்கள் இருந்தும் அவர்களுக்குக் குழந்தை இல்லையே ஏன்?
அதுவும் இயற்கைதானா? இல்லை, அவன் ஆண் மகன் இல்லையா?
நான், யாரையும் குறிப்பிடவில்லை; பொதுவாகவே சொல்கிறேன்.
எல்லாமே இயற்கையாக நடக்கும் என்றால், செத்துப் போன பிறகு, தானே ஏன் அந்தச் சடலம் சுடுகாட்டுக்குப் போகக் கூடாது?
அப்போது மட்டும் நான்கு பேர் தேவைப்படுகிறதே, ஏன்?
இந்தச் சிந்தனை, என் கண்களைத் திறந்தது.
உள்ளே இழுக்கும் காற்று, பிராணன்; வெளியே விடும் காற்று, அபானன், இந்தக் காற்றைப் பத்திரமாகப் பாதுகாக்க உடம்பிலே எந்த மூடியும் இல்லை. ஆனால், ஓட்டைகளோ ஒன்பதிருக்கின்றன!
தினம் தினம் போய்ப் போய் வந்து கொண்டிருக்கும் காற்று, ஒரு நாள் போனால் திரும்புவதில்லை.
முன்பே குறிப்பிட்டுள்ள இந்தக் கேள்வியும், என் கண்களைத் திறந்தது.
நான் ஆசைப்படுவது எனக்குக் கிடைக்கவில்லை; `அதுதானடா விதி’ என்பாள், என் தாய்.
அந்த வாசகமும் என் அறிவுக்குத் தீனி போட்டது.
நான் படித்தது குறைவு; தோன்றிய கற்பனைகள் அதிகம்.
`இது ஏதோவொரு அருள்’ என்பார்கள் பெரியவர்கள்.
`கடவுளின் அருளா?’
அப்படியொரு கேள்வி எனக்குள் எழுந்தது.
உலக வரலாறு என் உணர்வுக்குப் புதிய உரம் ஏற்றிற்று.
கோவலனின் விதியிலிருந்து சர்வாதிகாரி ஹிட்லரின் விதி வரையில் சிந்தித்துப் பார்த்தேன்.
மாபெரும் விஞ்ஞானி கூட, சர்ச்சுக்குப் போவதைச் சிந்தித்தேன்.
இறையுணர்வு என்பது தவிர்க்க முடியாதது என்றும், அதை மறுப்பது ஒரு வியாபாரத் தந்திரமே என்றும் எனக்குத் தோன்றிற்று.
1949-இல் நாத்திகம் பேசத் தொடங்கிய நான், 1954-இல் `மங்கையர் திலகம்’ என்ற படத்தில் துளசி பூஜைப் பாட்டெழுதி விட்டேன்.
`எங்கள் குலதேவி நீயே, ஸ்ரீ துளசி அம்மா அன்புத் தாயே’ என்று தொடங்கும் பாடல் அது.
அப்போதும், இப்போதும் அந்தக் கட்சியில், என்னை எதிர்ப்பதற்கென்றே ஒருவர் இருக்கிறார்; அவர் உடனே அதை ஒரு பெரிய பிரச்சினையாக்கினார்.
ஆனால், திரு. அண்ணா அவர்கள் என்னோடு பேசும் போது, `உனக்குச் சரியென்று பட்டதைச் செய்; கடவுள் இல்லவே இல்லை என்ற கொள்கையில் எனக்கும் உடன்பாடல்ல!’ என்றார்.
அதைத் தொடர்ந்து தான், `ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்று அவர் கோஷம் கொடுத்தார்.
மூன்று வருஷங்கள் நாத்திகனாக இருந்த நான், கடவுள் பாடல்கள் எழுதத் தொடங்கினேன்.
நாளாக நாளாகக் கடவுள் தத்துவங்கள் மலரத் தொடங்கின.
இந்த நிலையில், `நான் யார்?’ என்பதைக் கண்டு கொள்ள எனக்கு இவ்வளவு காலங்கள் தேவைப்பட்டன.
ஆகவே, உனக்கு நான் சொல்வது, `உன்னையே நீ ஒழுங்காக அறிய வேண்டும்’ என்றால், முதலில் யாரோடு சேருகிறாய் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
நீ யாரோடு சேருகிறாயோ, அவனது குணத்தை மட்டுமல்ல, பிறப்பையும் பார்க்க வேண்டும்.
நன்மைகள், தீமைகள் ஓரளவுக்குப் பிறப்பிலிருந்தே உருவாக்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆதி சங்கரர் சொன்னபடி, நல்ல உறவுகள் ஏற்பட்டால், `என் வீடு, என் சொத்து’ என்ற எண்ணம் மறைந்து விடும்.
அந்த எண்ணம் மறைந்து விட்டால், அது தேவை, இது தேவை என்ற ஆசை மறைந்து விடும்.
அந்த ஆசை மறைந்து விட்டால், சலனமற்ற நிம்மதி கிடைக்கும்.
நிம்மதியான வாழ்க்கையில் ஆன்மா சாந்தியடையும்.
ஆகவே, உன்னையே நீ அறிவதின் முதற்படி, `சேரிடம் அறிந்து சேர்’ என்ற பழமொழியாகும்.
-
பதில் இல்லாத கேள்வி
சிறு வயதில் குருகுல வாசத்தை விட்டு நான் வெளியிலே வந்த போது, கோழிக்குஞ்சு முட்டையில் இருந்து வெளிவந்தது போல் தான் இருந்தேன்.
`நான் யார்’ என்பதே எனக்கு தெரியாது. விபரம் தெரியாத நிலை; பக்குவமற்ற சூழ்நிலை.
காபி ஓட்டல்களையும், தியேட்டர்களையும் கூட ஆச்சரியமாகப் பார்க்கின்ற சூழ்நிலை.
குருகுலம், நல்ல பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் கற்பித்தது என்றாலும், வெளி உலகத்தைக் காண விடாமல் வைத்திருந்தது.
ஆகவே, தெளிந்த இதயத்தோடும் உலக அனுபவம் அற்ற நிலையிலும் நான் வெளியே வந்தேன்.
வந்ததிலும் தவறில்லை; நான் வாழ்ந்ததிலும் தவறில்லை; ஆனால், ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காண முடியாமல் தவித்தேன்.
அந்தக் கேள்வி என்ன?
"நான் யார்?” என்பதே அது.
நான் யார்?
அண்ட சராசரங்கள் அனைத்துமே அதைத்தான் கேட்டுக் கொள்கின்றனவாம்!
மனிதன் அறிய வேண்டிய அறிவுகளில் எல்லாம் முக்கியமான அறிவு, தன்னை அறிதலே.
ஒவ்வொரு விலங்கும், ஓரளவுக்குத் தன்னை அறிகின்றது.
பருந்து பாய்ந்து வந்தால், கோழி ஆத்திரப்படுகின்றது.
நாயை கண்டதும், முயல் ஓடுகிறது.
புலியைக் கண்டதும், மான் ஓடுகிறது.
உயிரின் மீது உள்ள இந்த நாட்டம், ஓரளவுக்குத் தன்னைப் பற்றிய உணர்வே ஆகும்.
ஆனால், இந்த உணர்வு வேறு; தான் யார் என்று அறிந்து கொள்ளும் அறிவு வேறு.
தாயினாலும், தகப்பனாலும் நாம் இந்த பூமிக்கு வந்து விட்டோம். ஆனால், ஏன் வந்தோம்; நம் வருகைக்கான நோக்கம் என்ன என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
வந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்று பல பேர் மடிந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் வரவு- செலவு பார்த்திருக்கிறார்கள்.
சிலர் காதலித்து, வெற்றி காண முடியாமல் மாண்டிருக்கிறார்கள்.
சிலர் மணம் முடித்து, மக்களைப் பெற்று அவதிப்பட்டு இறந்திருக்கிறார்கள்.
சிலர், `பதவி பதவி’ என்று அலைந்து செத்து இருக்கிறார்கள்.
சிலர், `உதவி உதவி’ என்று ஓடி, ஆடி உயிரை விட்டிருக்கிறார்கள்.
இவர்களிலே, `தான் யார்’
என்பதைக் கண்டு கொண்டு உலகிற்குச் சொல்லிவிட்டு, மறைந்த ஞானிகள் எத்தனை பேர்?
அவர்கள் பெரும் கூட்டமாக இல்லை; விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.
நான் யார்?
சினிமாப் பாட்டு எழுதுகிறானே, அந்தக் கண்ணதாசன் தானா நான்?
தொடர்கதை எழுதுகிறானே, அந்தக் கண்ணதாசன் தானா நான்?
மதுவிலும் சிற்றின்பத்திலும் மயங்கிக் கிடப்பவன் தானா நான்?
அரசியல் வாண வேடிக்கையில் அடிக்கடி பங்கு கொள்கிறவன் தானா நான்?
நல்லது கெட்டது பாராமல் நடக்கும், ஒரு முரட்டு மாடுதானா நான்?
இன்றைக்கு ஐம்பத்திரண்டு தீபாவளிகளைக் கொண்டாடி, அடுத்தது என்ன என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான் யார்?
நான் ஏன் பிறந்தேன்?
நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான்.
இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்
கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.
அது எனக்குப் புரியவில்லையே தவிர, ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டு இருக்கிறேன் என்பது உண்மை.
ஒவ்வொரு ஜீவனும், ஒவ்வொரு லட்சியத்திற்காகவே படைக்கப்பட்டு இருக்கின்றன.
ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே.
தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருள்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டு இருக்கிறது.
அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும், பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு காக்கையின் பிறப்புக்கு கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது.
அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே?
காலையில் இட்லி, தோசை; மத்தியானம் சாப்பாடு; ராத்திரியில் மீண்டும் பலகாரம்; இதற்காகவா நான் படைக்கப்பட்டேன்?
தமிழில் எல்லாச் சொல்லுக்கும் பொருள் உண்டு என்று சூத்திரம் சொல்கிறது. அது போலவே எல்லா ஜீவனுக்கும் காரணம் உண்டு.
நான் முன்பே சொன்ன சனத்குமாரர்- நாரதர் கதை தான்.
எல்லாம் தெரிகிறது எனக்கு; என்னைத் தெரியவில்லை.
கண்ணாடியில் முகம் தெரிகிறது; மனம் தெரியவில்லை.
யோசித்துப் பார்த்தால் மனம் தெரிகிறது. ஆனால் அது ஏன் படைக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாகப் பற்றிக் கொண்டே போனாலும் கூட, நான் படைக்கப்பட்டதன் மூலக் காரணத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.
`இப்படித்தான் இருக்கும், இதற்காகத்தான் இருக்கும்’ என்று ஒரு காரணத்தை நானே வகுத்துக் கொண்டு, என்னை நானே அறிய முற்படுகிறேன்.
இந்த ஒரு ஆன்மா, ஒரு லட்சம் ஆன்மாக்களுக்காவது வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே, நான் படைக்கப்பட்டு இருக்கிறேன்.
நன்மை- தீமை புரியாமல், நியாய அநியாயம் தெரியாமல் தடுமாறும் மானிட ஜாதிக்கு, ஒரு அரிக்கேன் விளக்கையாவது ஏற்றி நான் வழிகாட்டியாக வேண்டும்.
நீதி சொல்வதில், நான் வள்ளுவனாக முடியாது. ஏன்? இன்னொரு வள்ளுவன் பிறக்கவே முடியாது.
ஆனால், என் அனுபவம் சுட்டிக் காட்டுகிற நீதிகளில் வள்ளுவன் சொல்லாததும் இருக்கக்கூடும்.
தர்மோபதேசம் செய்வதில் நான் வடலூர் வள்ளலாராக முடியாது. ஏன், இன்னொரு வள்ளலார் இந்தத் தலைமுறையில் பிறக்கப் போவதும் கிடையாது.
ஆனால், என் உடலில் பட்ட காயங்களில் வள்ளலார் காணாத காட்சிகளும் இருக்கக்கூடும்.
நான் நீண்ட தூரப் பிரயாணி.
மலைச் சரிவுகளிலும் பயணம் செய்து இருக்கின்றேன். சமவெளிகளிலும் பயணம் செய்திருக்கின்றேன்.
நான் யார் என்பது தெரியாத பிரக்ஞையற்ற நிலையிலேயே, அனுபவங்களைச் சேகரித்து இருக்கிறேன்.
இந்த உலகத்தை ஓரளவு எனக்குத் தெரியும்.
நான் எழுத்தாளனாக இருக்கிறேன்; ஆகவே, வறுமையை அறிவேன்.
அரசியலில் இருந்திருக்கிறேன்; ஆகவே, அயோக்கியத்தனம் என்ன என்பது புரியும்.
கலைத்துறையில் இருந்திருக்கிறேன்; ஆகவே, ஏற்ற இறக்கங்களை அறிவேன்.
எப்படி எல்லாம் வாழக்கூடாதோ, அப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறேன்.
ஆகவே, இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக்கூடிய யோக்கியதை எனக்கு உண்டு.
முதன் முதலில் நான் நாத்திகனாக இருந்த காலங்களை எடுத்துக் கொள்கிறேன்.
இப்போது நான் நாத்திகன்.
`கடவுள் இல்லை’ என்று மிகவும் அழுத்தம் திருத்தமாக நாக்கு வலிக்கச் சொல்லும் ஒரு நாத்திகன்.
என் பின்னால் வாருங்கள்.
-
சில தத்துவங்கள்
சக்திக்கும் சிவனுக்கும் நாரதர் ஒரு மாம்பழத்தை அளித்தார்.
சக்தி தேவிக்கு அதை மூத்த மகனுக்கு அளிக்க வேண்டும் என்ற ஆசை.
சிவபிரானுக்கோ இளைய மகனுக்குத் தர வேண்டும் என்று விருப்பம்.
பிள்ளைகள் போட்டியே, பெற்றோர்கள் போட்டியாகி விட்டது.
`சரி, எதற்கு வம்பு? உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இந்த மாங்கனி!’ என்று கூறிவிட்டார் சிவன்.
முருகனிடம் மயில் இருக்கிறது. கணபதியிடம் மூஞ்சூறு தானே இருக்கிறது!
மயில் மீது ஏறி முருகப் பெருமான் உலகை வலம் வரத் தொடங்கினார்.
தாய்-தகப்பனை மூன்று முறை சுற்றினார்; கையை நீட்டினார் விநாயகப் பெருமான். மாங்கனி அவருக்குப் போய்விட்டது.
இது கதை!
`உலகத்தைவிட மிகப் பெரியவர்கள் தாயும் தகப்பனுமே’ என்ற தத்துவத்தை இந்துக்கள் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்கள்!
மகாலட்சுமிக்குச் சுயம்வரம்.
சாதாரண லட்சுமிக்குத் திருமணம் என்றாலே, ஊர் எவ்வளவு அல்லோலகல்லோலப் படுகிறது?
பத்திரிகைகளில் எல்லாம் அந்தச் செய்திதானே வருகிறது.
மகாலட்சுமிக்கே சுயம்வரம் என்றால் ஏழு உலகங்களும், தேவாதி தேவர்களும் திரளக்கூடும் இல்லையா?
முப்பத்து முக்கோடி தேவர்களும் கழுத்தை நீட்டினார்கள்.
ஆனால், மகாலட்சுமி ஒரு நிபந்தனை வைத்தாள்.
`என்னை எவன் விரும்பவில்லையோ, அவனைத்தான் மணப்பேன்’ என்றாள்.
`அவளை விரும்பாதது மாதிரி’ தேவர்களால் நடிக்கக்கூட முடியவில்லை.
ஏழு உலகங்களிலும் நடந்தாள், மகாலட்சுமி.
கடைசியில் பாற்கடலில் நடந்தாள்.
அங்கே பள்ளி கொண்டிருந்தது ஒரு கரிய திருமேனி.
மகாலட்சுமியை அது லட்சியம் செய்யவே இல்லை.
`என்ன, உங்களுக்கு ஆசையே இல்லையா?’ என்று கேட்டாள் மகாலட்சுமி.
`நீ யாரம்மா?’ என்று கேட்டது திருமேனி.
`நான் தான் மகாலட்சுமி!’ என்றாள்.
`அப்படியென்றால்…?’ என்று அது திருப்பிக் கேட்டது.
மகாலட்சுமிக்குச் சிரிப்பு வந்தது.
`உன்னை அறிவது தான் என் வேலையா? உலகத்தில் எனக்கு வேறு வேலை இருக்கிறது!’ என்றார் திருமால்.
அவர் கழுத்தில் மாலையைப் போட்டுக் காலடியிலேயே உட்கார்ந்து விட்டாள் மகாலட்சுமி.
உலக ரட்சகன் எதிலும் மயங்கி விடுவதில்லை என்பதையும், மனிதனும் அப்படி மயங்காமல் இருக்கும் வரைதான் மரியாதை என்பதையும் இந்தக் கதை எவ்வளவு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது!
ஒரு அரண்மனை, அதன் மேன்மாடத்திலே ஒரு ராஜா. அவர் பக்கத்திலே அழகான ராணி. இருவரும் பழங்களை உரித்துத் தின்றபடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சுளைகளைத் தின்றுவிட்டு தோல்களை வெளியே எறிகிறார்கள்.
ஒரு சந்நியாசி. அவனுக்கோ பசி. வெளித் திண்ணையில் அவன் உட்கார்ந்திருக்கிறான். ராஜா தூக்கியெறிந்த தோல்களை எடுத்து அவன் தின்கிறான். சேவகர்கள் பார்க்கிறார்கள். சந்நியாசியை இழுத்துக் கொண்டுபோய் ராஜா முன்னால் நிறுத்துகிறார்கள்.
அவனைச் சவுக்கால் அடிக்கும்படி ராஜா ஆணையிடுகிறான்.
அடி விழ, அடி விழச் சந்நியாசி சிரிக்கிறான்.
`ஏன் சிரிக்கிறாய்?’ என்று ராஜா கேட்கிறான்.
`அரசே, தோலைத் தின்றவனுக்கே இவ்வளவு அடி என்றால் சுளையைத் தின்றவனுக்கு எவ்வளவு அடி என்று எண்ணிப் பார்த்தேன். சிரிப்பு வந்து விட்டது!’ என்றான் சந்நியாசி.
பாவத்தின் அளவுக்கே தண்டனை என்பதற்கு இதை விடவா வேறு கதை வேண்டும்?
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுக்குத் துலாபாரம்.
துலாபாரம் என்றால் இந்தக் காலம் போல வெங்காயம், விறகு, பத்துக்காசு நாணயம் அல்ல. தங்கத்திலே துலாபாரம்!
சத்தியபாமா தன் நகைகளையெல்லாம் கழற்றி வைக்கிறாள்.
தான் செல்வம் படைத்தவள் என்பதைக் காட்டத் தாய் வீட்டுச் சீதனங்களையெல்லாம் கொண்டுவந்து வைக்கிறாள்.
தட்டு நகரவில்லை.
மெதுவாக வருகிறாள் ருக்மணி.
ஒரு துளசி தளத்தைக் கொண்டு வந்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் கால்களைத் தொட்டு வணங்கி விட்டு, அதைத் தட்டிலே வைக்கிறாள்.
என்ன ஆச்சரியம், தராசு சமமாகிறது!
ஆணவத்தோடு கொடுக்கப்படும் தங்கத்தைவிட அன்போடு கொடுக்கப்படும் இலை தழைகளுக்குச் சக்தியும், மரியாதையும் அதிகம் என்பதை இந்தக் கதை நிரூபிக்கவில்லையா?
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் வந்தார்.
`சுவாமி! ஒரு சந்தேகம்!’ என்றார்.
`என்ன?’ என்று கேட்டார் பரமஹம்சர்.
`நீங்கள் விஷ்ணு என்கிறீர்கள், சிவன் என்கிறீர்கள். அதே விஷ்ணுவின் அவதாரம் தான் ராமனும், கிருஷ்ணனும் என்கிறீர்கள். ஒரே விஷ்ணுவுக்கு இத்தனை வடிவங்கள் எதற்கு? ஏன் ஒரே கடவுளாக வைத்துக் கொண்டால் என்ன?’ என்று கேட்டார்.
அதற்குப் பரமஹம்சர் உடனே, `ஐயா! ஒரு விஷயம். நீங்கள் ஒருவர் தான். ஆனால் உங்கள் அப்பாவுக்கு மகன், மகனுக்கு அப்பா, மனைவிக்கு கணவன், மாமனாருக்கு மாப்பிள்ளை, மாப்பிள்ளைக்கு மாமனார், மைத்துனனுக்கு மைத்துனன், பாட்டனுக்குப் பேரன், பேரனுக்குப் பாட்டன். உங்கள் ஒருவருக்கே இத்தனை வடிவங்கள் இருக்கும்போது, ஈஸ்வரனுக்கு இருக்கக் கூடாதா?’ என்றார்.
கேள்வி கேட்டவர் முகத்திலே அசடு வழிந்தது.
பல தெய்வ வணக்கம் நியாயம் என்பதற்கு இதற்கு மேல் ஒரு உதாரணம் தேவையா?
இந்தப் பல தேவதை வணக்கத்தைப் பற்றி காஞ் சிப் பெரியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
மனுஷ்யர்களின் மனப்பான்மைகள் பல தினுசாக இருக்கின்றன. ஒவ்வொரு விதமான மனப்பான்மை உள்ளவர்களையும் ஆகர்ஷித்து, அவர்களைப் பக்தி செலுத்த வைத்து, அவர்களுடைய மனதைச் சுத்தம் செய்து, சித்தத்தை ஏகாரப் (ஒருமைப்) படுத்தவே பரமாத்மா பலப்பல தேவதா ரூபங்களாக வந்திருக் கிறது.
`இந்த இந்துக்களுக்கு எத்தனை கோடிச் சாமிகள்!’ என்று அந்நிய மதத்தவர்கள் நம்மைக் கேலி செய்வதுண்டு. உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வாமி இருப்பதாக விஷயம் தெரிந்த எந்த இந்துவும் எண்ணவில்லை. இந்த வைதிக மதம் ஸ்வாமி ஒருவரே என்று கண்டது மட்டுமில்லை; இந்த ஜீவனும்கூட அதே ஸ்வாமி தான் என்று வேறெந்த மதமும் கண்டு பிடிக்காததையும் கண்டு பிடித்திருக்கிறது. எனவே பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துகிற மகாசக்தியாக ஒரு ஸ்வாமி தான் இருக்கிறது என்பதில், எந்த விஷயமறிந்த இந்துவுக்கும் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஒரு ஸ்வாமி பல ரூபத்தில் வர முடியும்; அப்படிப்பட்ட யோக்கியதையும் கருணையும் அதற்கு உண்டு என்று இவன் நம்புகிறான்.
ஒரே ஸ்வாமி நம் தேசத்தின் மகா புருஷர் களுக்கும் பல ரூபங்களில் தரிசனம் தந்திருக் கிறார். அந்தந்த ரூபங்களுக்குரிய மந்திரம், உபாசனா மார்க்கம் எல்லாவற்றையும் அந்த மகா புருஷர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள். இவற்றை முறைப்படி அனுஷ்டித்தால் நாமும் அந்தந்தத் தேவதை அனுக்கிரகத்தைப் பெற முடியும். எந்தத் தேவதையாக இருந்தாலும் சரி, அது முடிவில் பரமாத்மாவே! ஆகையால், நாம் சந்தேகம் கொள்ளாமல் பூரண சிரத்தையோடு பக்தி வைத்தால் அது நமக்கு சம்ஸார பந்தத்திலிருந்து விடுதலை தரும். இந்த விடுதலைக்கு நாம் பக்குவப்படுவதற்கு முன் நம் லெளகீக வேண்டுதலைக் கூட நிறைவேற்றி அனுக்கிரகிக்கும்.
அவரவர் மனதைப் பொறுத்து ஒன்றில் பிடிமானம் கொள்வதற்கென்றே இத்தனைத் தேவதைகள் இருக்கின்றன. தாயாரிடம் குழந்தை போல் பரமாத்மாவை அனுபவிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை உடையவனுக்கு, அம்பாள் உபாசனை இருக்கிறது. ஒரே சாந்தத்தில் அழுந்திப் போக வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவனுக்குத் தட்சிணாமூர்த்தி இருக்கிறார். ஆனந்தமாக ஆடிப் பாடி பக்தி செலுத்துவதற்குக் கிருஷ்ண பரமாத்மா இருக்கிறார்.
இஷ்டம் இருந்தாலும், இஷ்டம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகாசக்தியிடம் பக்தி செய்வது என்று ஏதோ ஒரு தத்துவத்தை மட்டும் காட்டாமல், நம் மனசுக்கு எப்படி இஷ்டமோ, அதற்கு அனுசரணையாகவே அந்த மகா சக்தியை ஒரு மூர்த்தியில் பாவித்து, வெறும் தத்துவத்தை ஜீவனுள்ள ஒரு அன்பு உருவமாகப் பாவித்து பக்தி செய்வதற்கு நம் மதத்திலுள்ள `இஷ்ட தேவதை’ வழிபாடே வழி வகுக்கிறது. அன்போடு உபசரிக்க வேண்டுமானால் உபாசனைக்குரிய மூர்த்தி நம் மனோபாவத்துக்குப் பிடித்தமானதாக இருந்தால் தானே முடியும்? இதனாலேயே இஷ்ட தேவதை என்று தனக்குப் பிடித்த மூர்த்தியை உபாசிக்க நமது மதம் சுதந்திரம் தருகிறது. `நம் மனப் போக்குக்குப் பிடித்தது’ என்கிற நிலையில் ஆரம்பத்தில் ஏதோ மூர்த்தியை இஷ்ட தேவதையாக்கிக் கொண்டாலும், போகப் போக, அதனிடம் உண்மையான பக்தி உண்டாக உண்டாக, `நமக்கென்று என்ன ஒரு தனி மனப்போக்கு?’ என்று அதையும் விட்டுவிட அந்தத் தேவதையே அனுக்கிரகம் செய்யும்.
அவரவரும் தமக்கு இஷ்டமான தேவதையை உபாசிக்கும் போதே மற்றவர்களுடைய இஷ்ட தேவதைகளைத் தாழ்வாக எண்ணக்கூடாது. நமக்கு எப்படிப் பரமாத்மா அனுக்கிரகம் பண்ணுகிறாரோ அப்படியே மற்றவர்களுக்கு மற்ற ரூபங்களின் மூலம் அனுக்கிரகம் பண்ணுகிறார் என்று தெளிவு பெற வேண்டும். `அந்த அந்தத் தேவதைக்குரிய புராணத்தைப் பார்த்தால் அது ஒன்றே ஸ்வாமி, மற்ற தேவதையெல்லாம் அதற்குக் கீழானவை. இதை அவை பூஜை செய்தன. இதனிடம் அவை தோற்றுப் போயின என்றெல்லாம் இருக்கிறது’, என்று கேட்கலாம். இதற்கு `நஹி நிந்தா நியாயம்’ என்று பெயர். அதாவது இதர தேவதைகளை நிந்திப்பது பெளராணிகரின் நோக்கமல்ல. இந்த ஒரு தேவதையை ஆராதிப்பவருக்கு மனது சிதறாமல் இது ஒன்றிடமே தீவிரமாகப் பற்றுதல் ஏற்படுத்த வேண்டும் என்பதே புராணத்தின் நோக்கம்! இதற்காகவே இந்தத் தேவதைக்கு மட்டும் மற்ற தேவதைக்கு இல்லாத உத்கர்ஷம் சொல்லப்படுகிறது.
மகானுபாவர்களாக இருந்தவர்கள் எல்லாத் தேவதைகளையும் சமமாகவே பார்த்தார்கள். மகா கவிகளான காளிதாசன், பாணன் முதலியவர்களும், `ஒரே வஸ்து தான் பல மூர்த்திகளாகவும் வருகிறது’ என்று சந்தேகமில்லாமல் கூறுகிறார்கள்.
பக்தர்களின் மனோபாவத்தை பொறுத்துப் பரமாத்மா பல ரூபம் கொள்கிற போதே, பிரபஞ்சத்தில் தன்னுடைய வெவ்வேறு காரியங்களைப் பொறுத்தும் வெவ்வேறு ரூபங்களை எடுத்துக் கொள்கிறது. ரஜோ குணத்தால் சிருஷ்டி செய்யும் போது அதற்கேற்ப பிரம்மாவாகிறது. ஸத்வ குணத்தால் பரிபாலிக்கும் போது அதற்கேற்ப மகா விஷ்ணுவாகிறது; தமோ குணத்தால் சம்ஹரிக்கும் போது அதற்குரிய முறையில் ருத்ர ரூபம் கொள்கிறது. இந்த மூன்றைப் பாணனும், காளிதாசனும் ஒரே சக்தியின் மூன்று வடிவங்களாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த மூன்றுக்கும் பொருந்துவது முப்பத்து முக்கோடி தேவதைகளுக்கும் பொருந்தும்.
எனவே, `என் தெய்வம் உசந்தது; உன் தெய்வம் தாழ்ந்தது’ என்று சண்டை பிடிப்பதில் அர்த்தமே இல்லை. ஆனாலும், நம் தேசத்தில் பல இஷ்ட தெய்வங்கள் இருந்தாலும் கூடப் பிரதானமாக இருந்து வரும் சைவத்திற்கும், வைணவத்திற்கும் இடையே ரொம்பவும் சண்டை நடந்துதான் வந்திருக்கிறது. நன்றாக ஆலோசித்துப் பார்த்தால் இந்த இரண்டும் ஒரே வஸ்து தான் என்ற ஞானம் பெறுவோம்.
-
பெரியது கேட்பின்…
சனத்குமாரர் என்ற மகாயோகியை நாரதர் அணுகி, `ஐயனே! எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
`நல்லது நாரதா! உபதேசம் செய்வதற்கு முன்னால் ஒரு வார்த்தை. உனக்கு ஏற்கெனவே என்னென்ன தெரியும் என்பதை முன்கூட்டிச் சொல்லிவிடு. அதன் பிறகுதான் எதை உபதேசிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்!’ என்றார் சனத்குமாரர்.
நாரதர் தான் கற்ற வித்தைகளைக் கூறத் தொடங்கினார்.
`குருதேவா! எனக்கு ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் தெரியும். இதிகாச புராணங்கள் தெரியும். வேதங்களின் வேதமாகிய இலக்கணம், பிதுரு, கல்பம், கணித சாஸ்திரம், சகுன சாஸ்திரம், கால நிர்ணயம், தர்க்க சாஸ்திரம், நீதி சாஸ்திரம், நிருத்தம், பூதவித்தை, போர்முறை, வான சாஸ்திரம், சர்ப்ப வித்தை, கந்தர்வ வித்தை, இவை அனைத்துமே தெரியும்’ என்றார் நாரதர்.
அப்படிச் சொன்ன நாரதர் தன் சந்தேகம் ஒன்றையும் தெளிவுபடுத்தினார்.
`தேவா! இவ்வளவு வேத மந்திரங்களை நான் கற்றுக் கொண்டேனே தவிர, துன்பங்களைக் கடந்து செல்லும் ஆத்ம யோகத்தை அறிந்தவனாக இல்லை. `எவனொருவன் ஆத்மாவை அறிந்து கொள்கிறானோ அவனே துன்பத்தைக் கடப்பான்’ என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். தயை கூர்ந்து எனக்கு நீங்கள் துன்பத்தைக் கடக்கும் மார்க்கத்தைக் கற்றுத் தர வேண்டும்’ என்றார், நாரதர்.
சனத்குமாரர் சிரித்தார்.
`நாரதரே! நீர் கற்றுக் கொண்ட வித்தைகள் எல்லாம் பெயரளவில் வித்தைகளே. அவற்றை விடப் பெரிய விஷயங்கள் சில உண்டு. அவற்றின் மூலமே ஆத்மாவை அறிய முடியும்’ என்றார் அவர்.
`எவையெவை பெரியவை?’ என்று கேட்டார் நாரதர்.
`நீ சொன்ன பெயர்களை எல்லாம் விட வாக்குப் பெரியது. அந்த வாக்கைவிட மனது பெரியது. எப்படி ஒரு கைப்பிடிக்குள் இரண்டு நெல்லிக்காயோ, இலந்தைப் பழமோ அடங்கி விடுகிறதோ, அப்படியே பெயரும், வாக்கும் மனதுக்குள் அடங்கி விடும். மனத்தால் நினைத்த பின்தானே நீ சொல்லுகிறாய். செயலில் இறங்குகிறாய். அந்த மனதுதான் ஆத்மா. அந்த மனதுதான் உலகம். அந்த மனது தான் பிரம்மம். ஆகையால் மனதை நேசிப்பாயாக. அதே நேரத்தில் இன்னொன்று: சங்கற்பம் செய்வது மனதைவிடப் பெரியது. எப்போது ஒருவன் சங்கற்பம் செய்யத் தொடங்குகிறானோ, அப்போது யோசிக்கத் தொடங்குகிறான். அது மனது. உடனே பேச ஆரம்பிக்கிறான்; அது வாக்கு. அந்த வாக்கு பெயர் வடிவமாகிறது. அதில் மந்திரங்கள் ஒடுங்கி விடுகின்றன. மந்திரங்களில் கருமங்கள் ஒடுங்கி விடுகின்றன. அதே நேரத்தில் சங்கற்பத்தைக் காட்டிலும் தியானம் பெரியது. பூமி தியானம் செய்கிறது. வானம் தியானம் செய்கிறது. மலைகள் தியானம் செய்கின்றன. ஆகையால் பெருமைக்குரிய மனிதர்கள் தியான பலத்தில் ஒரு அம்சத்தையாவது பெற்றிருக்கிறார்கள். அற்பர்களுக்கும் கலகக்காரர்களுக்கும் அது வாய்ப்பதில்லை.’
`தியானத்தை விடவும் பெரியது எது என்று கேட்கிறாயா? விஞ்ஞானம் பெரியது. ஆத்ம பலம் விஞ்ஞானத்தைக் காட்டிலும் பெரியது. விஞ்ஞானம் என்பது அனுபவ விஞ்ஞானம். ஆத்ம பலம் படைத்த யோகி நூறு விஞ்ஞானவான்களை ஆட்டி வைக்க முடியும். ஒருவன் பலமுள்ளவனாக இருந்தால் அவன் படுக்கையில் கிடக்க மாட்டான்; எழுவான்; நடப்பான்; சேவை செய்வான்.’
நாரதருக்கும் சனத்குமாரருக்கும் நடந்த இந்த விவாதத்தில் ஆத்ம பலமே பொதுவாகப் பேசப்படுகிறது.
ஆத்ம பலம் என்பது என்ன?
தன்னை உணர்தல்.
`நானே பிரம்மம்! நானே ஈஸ்வரன்’ என்ற நிலையை எய்துதல்.
கடமைகளை ஒழுங்காகச் செய்வதன் மூலம் ஆத்மா பலம் பெறுகிறது.
ஒரு கதை உண்டு.
ஒரு நதியில் வெள்ளம் வந்து, பாலத்தின் இரண்டு பக்கங்களையும் அடித்துக் கொண்டு போய் விட்டது. பாலத்தின் நடுவே ஒரு குடும்பம் நின்று தத்தளித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட ஒரு பணக்காரர், ஒரு ஓடக்காரனைக் கூப்பிட்டு அவர்களைக் காப்பாற்றும்படியும் நூறு ரூபாய் தருவதாகவும் சொன்னார்.
ஓடக்காரன் அவர்களைக் காப்பாற்றினான்.
நூறு ரூபாய் எடுத்து அவர் கொடுத்தார்.
அவன் `இது என் கடமை’ என்று கூறிப் பணத்தை வாங்காமல் மறுத்து விட்டான்.
இந்த பலன் கருதாத கருமமே `கடமை’ என்பது.
இதைக் கருமம் என்பதைவிடத் `தர்மம்’ என்பது பொருந்தும்.
இத்தகைய தர்மம் தலைமாட்டில் நின்று காப்பாற்றும்.
`நான் லண்டனுக்குப் போனேன்; நான் பாரிஸுக்குப் போனேன். அனுபவித்தேன்’ என்ற அகங்காரம் கடைசிக் காலத்தில் எந்த உதவியையும் செய்யாது.
முதலில் இந்த `நான்’ தன்மையை வென்றவர்கள் தான் பெரிய யோகிகளாக மாறுகிறார்கள்.
அந்த யோகிகளிடம் இறைவனே வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், `பொன்னைக் கொடு, பொருளைக் கொடு’ என்று கேட்க மாட்டார்கள்; `என்னையே எனக்குக் கொடு’ என்றுதான் கேட்பார்கள்.
இப்படி தன்னை உணர்ந்து கொண்டுவிட்ட மனிதன் மரணத்தில் இருந்து விடுதலை பெற்று விடுகிறான்.
`அவன் செத்து விட்டான்’ என்று சொன்னால் `அவன் உடம்பு தான் செத்து விட்டது. ஆத்மா சாகவில்லை’ என்பது பொருள்.
`என்னையே எனக்குக் கொடு’ எனும் தத்துவத்தில் ஆன்மாவே உணரப்படுகிறது. அதற்குள் இருக்கும் ஈஸ்வரன் அறியப்படுகிறான்.
துயரங்கள் தோன்றாமல், சிரித்துக் கொண்டே அவன் மரணமடைந்து விடுகிறான். அதாவது அவன் உடம்பு அழிந்து விடுகிறது.
இந்த ஆன்ம யோகத்தை மிக ஆழமாக நமது சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் சிந்தித்தார்கள்.
இமய மலையில் குடி புகுந்தவன் மாத்திரை வாங்குவதற்காக டாக்டரைப் பார்த்ததுண்டா?
ஆன்மாவை உணர்ந்து கொண்டவன் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?
அவனுக்குச் சொல்வதற்குத்தான் பிறரிடம் என்ன இருக்கிறது?
-
நாத்திக வாதம்
நாத்திக வாதம் ஒரு மாய மான். கற்பனை மிக்க சொற்பொழிவுகளிலேயே அது உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. இப்போது யாரும் சொல்லாமல் தானாகவே செத்துவிட்டது.
நான் நாத்திகனாக இருந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன்.
எவ்வளவு போலித்தனமான புரட்டு வேலைகளுக்கு நம்மை ஒப்புக் கொடுத்திருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போதே, எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.
கடவுள் இல்லை என்று மறுப்பவன் கால காலங்களுக்கு உயிரோடிருப்பானானால், `இல்லை’ என்ற எண்ணத்தையே நான் இன்றும் கொண்டிருப்பேன்.
அவரவரும் பெற வேண்டிய தண்டனையைப் பெற்றுப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அவர்களுடைய வாதங்கள் எல்லாம் செல்லு படியாகாமல், விலையாகா மல் கிடக்கின்றன.
நாத்திகன் எழுதிய போற்றத்தக்க புத்தகம் என்று எதுவும் இல்லை.
நாத்திக வாதத்தில் ஆழமோ, அழுத்தமோ, நியாயமோ இல்லாததால், அவர்களது எழுத்துக்கள் காலத்தால் செத்து விட்டன.
தேவாரமும், திருவாசகமும் நிற்பதைப் போல, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அவை நிற்க வேண்டாம். ஆனால், அவர்கள் தலைமுறையிலேயே அவை அழிந்து போனது தான் ஆச்சரியம்.
இதில் ஆச்சரியம் என்ன ஆச்சரியம்; அதுதான் நடக்கக் கூடியது.
மேலை நாட்டில் கிறிஸ்துவத்திற்கு எதிராக நாத்திகர்கள் தோன்றினார்கள். அவர்களை எதிர்த்துக் கிறிஸ்துவம் போர் புரிந்தது.
இஸ்லாத்தை எதிர்த்து நாத்திகம் தோன்றவே முடியாதபடி அது பயங்கர ஆயுதத்தோடு நிற்கிறது.
இந்து மதத்தில் நாத்திகம் தோன்றுவது சுலபம். காரணம் அது சாத்விக மதம். இது யாரையும் எதிர்த்துப் போர் புரியாது. காலத்தால் தன் கடமைகளைச் செய்து கொண்டே போகும். அதன் விளைவுகளுக்கு இறைவனையே பொறுப்பாக்கும்.
அப்படி இந்து மதம் போர் புரியாமலேயே நாத்திகம் மடிந்து விட்டது.
காரணத்தை ஆராய்வது கடினமல்ல. அதன் வாதங்கள் போலித்தனமானவை; அவ்வளவுதான்.
பல்லாயிரம் ஆண்டு காலமாக வளர்ந்து நிற்கும் ஒரு இமயமலையைச் சில செம்மறி ஆட்டுக் குட்டிகள் சாய்த்து விட முயன்றன. அவற்றின் கொம்பொடிந்தது தான் மிச்சமே தவிர, மலை, மலையாகவே நிற்கிறது.
பழைய திராவிடர் கழகச் செயலாளர்கள் எல்லாம் திருப்பதியில் அங்கப் பிரதட்சணம் வருவதை நான் பார்க்கிறேன்.
இங்கர்சால் போன்ற மேலை நாட்டு அறிஞர்கள் மத குருமார்களின் தவறுகளுக்கு எதிராகப் போர் புரிந்தார்களே தவிர, இறைவனே இல்லை என்ற வாதத்தில் அவர்கள் உறுதியாக இல்லை. அவர்களுக்குள்ளாகவே சபலமும், சலனமும் இருந்தன. ஒரு துளி நீரில் இவ்வளவு பெரிய உடம்பு முளைத்தெழுவதும், ஒரு சிறு காற்றில் அது உலாவிக் கொண்டிருப்பதும், ஒரு பொறி நெருப்பில் அது அழிந்து விடுவதும் ஏதோ ஒரு சக்தியின் இயக்கம் என்பதை அவர்களும் மறுக்க இயலவில்லை.
இறைவனது இயக்கம் இல்லை என்றால் காலங்களும் பருவங்களும் ஏது?
சந்திர கதி, சூரிய கதி ஏது?
நாத்திகன் இதை நம்பாமல் இல்லை. இதை எதிர்ப்பதன் மூலம் புரட்சிக்காரன் என்று பெயர் வாங்க விரும்பினான். நம்புகிற மக்களிடம் பணம் வாங்க விரும்பினான்.
என்னுடைய நண்பர் ஒருவர், அந்தக் கட்சிகளில் மிகப் பெரிய தலைவர். ஒரு கோயிலுக்கு இரண்டு லட்ச ரூபாய்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார்.
நான் அவரைக் கேட்டபோது, `ஏதோ ஒரு பொருளை மட்டுமே தான் கொடுத்ததாக’க் கூறினார். கும்பகோணத்தில் இருந்து அடிக்கடி ஜாதகம் எழுதி வாங்கி வருகிறார். ஆனாலும் மேடைகளில் அவர் இங்கர்சால் ஆகிறார்.
கடவுளை அதிகமாகக் கேலி செய்த இன்னொரு நண்பர். அவர் ஒரு நடிகர். சமீபத்தில் திருப்பதிக்குப் போய் வந்து, `ஏதோ ஒரு சக்தி இருக்கு! இருக்கு!’ என்கிறார்.
மேடைகளில் நடைபெறும் வார்த்தை விளையாட்டுகளில் மயங்கி நாத்திகர்களானவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவன். `கருப்புச் சட்டைக்காரன்’ என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டவன்.
எல்லாம் ஒரு சில ஆண்டுகளே!
நாத்திகனாக இருக்கும் வரையில் எதைப் பற்றியும் அதிகமாகப் பாட முடியவில்லையே?
நாத்திகத்தில் என்ன இருக்கிறது பாடுவதற்கு?
ஆத்திக உள்ளம் வந்த பிற்பாடுதான் ஆயிரக்கணக்கான பாடல்கள் பிறந்தன.
கடல் போன்று பரந்து விரிந்து நிற்பது, கடவுள் தன்மை.
நீந்தத் தெரிந்தவன் அந்தக் கடலில் இறங்கி விட்டால், ஒரே உற்சாகம் தான்.
நான் இன்னும் பார்க்கிறேன். கவிஞர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் சிலர், மேடைகளில் பாடும்போது, `நான் பெரியார் பாசறையில் புடம் போட்டு எடுக்கப்பட்டவன்’ என்கிறார்கள். அவர்கள் கவிதைகள் நிற்கவும் இல்லை; அவை கவிதைகளாகவும் இல்லை.
பாசறையில் எப்படிப் புடம் போடுவதோ எனக்கும் புரியவில்லை.
எல்லாம் போலித்தனம்! அபத்தம்!
`கண்ணதாசன் எழுதுகிற அளவு நம்மால் எழுத முடியவில்லையே’ என்று ஆதங்கப்படுகிறார்கள்.
நான் எழுதுகிற அளவுக்கு அவர்கள் எழுத வேண்டுமானால், முதலில் தாங்கள் இந்துக்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
வேத, உபநிஷத, இதிகாச புராணங்களைப் படிக்க வேண்டும்.
வெறும் வார்த்தை விளையாட்டுகள் பலிக்க மாட்டா.
மீண்டும் சொல்கிறேன், நம்முடைய பல்லாண்டுக் கால மூதாதையர்கள் ஒன்றும் முட்டாள்களல்லர்.
திருமணத்துக்கென்று அவர்கள் சில சடங்குகள் வைத்திருக்கிறார்கள். அவை ஒன்றும் பார்ப்பனச் சடங்குகளல்ல.
அவை பார்ப்பனச் சடங்குகள் ஆனால், சிலப்பதிகாரமும் பார்ப்பனக் காவியமாக வேண்டும்.
அந்தச் சடங்குகளில் இருந்து மாறுபட்டுச் சுயமரியாதைத் திருமணம் என்ற பெயரில் நாத்திகர்கள் ஒரு கோமாளிக் கூத்தை ஏற்படுத்தினார்கள்.
ஆடு, மாடுகள் குட்டிச் சுவர் களுக்கிடையே கூடிக்கொள்கிற மாதிரி, அது ஒரு திருமண முறை.
தலைவர் முன்னிலையில் மாலை மாற்றுவதாம்! தாலியும் கிடையாதாம்!
மாலையைக் கழற்றிய உடனே மணப் பந்தமும் அகன்று விடுமே?
நாத்திகன், சடங்குகளை மட்டுமல்ல; மாதரார் கற்பையும் மதித்ததில்லை.
`கற்பு என்ன, கற்பு! ஒருத்திக்கு ஒருவன் என்பதே முட்டாள்தனம்!’ என்று பேசியவர் பெரியார்.
ஆகவே, நாகரிக உலகத்தில் ஒரு காட்டுமிராண்டி தர்மத்தை உருவாக்க வந்தவர்களே, நாத்திகர்கள்.
சில சுய மரியாதைத் திருமணங்களுக்கு நான் தலைமை வகித்திருக்கிறேன்.
தாலி அறுப்பதைப் பற்றியும், விதவையாவதைப் பற்றியும் சீர்திருத்தவாதிகள் பேசுவார்கள்.
சாதாரண மனித நாகரிகத்துக்கு ஒத்து வராத மடத்தனம் இது என்பது, அவர்களுக்கு மறந்தே போய்விட்டது.
எங்களூரில், `நாத்திகனை நம்பி வீட்டுக்குள் விடாதே’ என்பார்கள்.
`அவன் பண்பாடு தெரியாதவன். பவித்திரமில்லாதவன். யாருடைய பெண்டாட்டியையும் கை வைத்து விடுவான்’ என்பார்கள்.
தெய்வத்திற்குப் பயப்படாதவன் வேறு எந்த நியாயத்துக்குப் பயப்படுவான்?
பழைய காலங்களில் எது எது எங்கெங்கு இருக்க வேண்டுமோ, அது அது அங்கங்கே இருந்தது.
இப்போதோ, கழுதை கட்டிலில் படுத்திருக்கிறது! யானை தொட்டிலில் தூங்க ஆசைப்படுகிறது; பூனை புல்லாங்குழல் வாசிக்க விரும்புகிறது; புள்ளிமான் உப்புக்கண்டமாகிறது.
நாகரிகத்திலேயே தர்மம் தடம் புரளுமானால், நாத்திகத்தின் விளைவு என்ன?
எனக்குத் தெரிந்தவரை, நாத்திகம் பேசிய உண்மையானவர்களில் பலர் சொத்தை இழந்தவர்கள். சில உத்தமத் தொண்டர்கள், பெண்டாட்டியை இழந்தார்கள்.
அக்கிரமக்காரர்கள் மட்டுமேதான் அனுபவித்தார்கள்.
பூஜை அறைக்கும், குளிக்கும் அறைக்கும் பேதம் தெரிந்தவன், ஆத்திகன்.
மல ஜலம் கழிக்கும் இடத்திலேயே சாப்பிட்டுப் பழகியவன் நாத்திகன்.
தாய்க்கும், தாரத்திற்கும் பேதம் தெரிந்தவன், ஆத்திகன்.
எதுவும் தாரம்தான் என்று கருதுகிறவன், நாத்திகன்.
தர்மம் தர்மம் என்று பயப்படுகிறவன், ஆத்திகன்.
அனுபவிப்பதே தர்மம் என்று நினைப்பவன், நாத்திகன்.
ஆத்திகன் மனிதனாக வாழ்ந்து தெய்வமாகச் சாகிறான்.
நாத்திகன், மனிதன் போலக் காட்சியளித்து, மிருகமாகச் சாகிறான்.
உண்மையிலேயே ஒருவன் நாத்திகம் பேசினால் அவன் உணர்ச்சியற்ற ஜடம்; ஆராயும் அறிவற்ற முடம்.
பகுத்தறிவு ஒழுங்காக வேலை செய்யுமானால், அது கடைசியாக இறைவனைக் கண்டுபிடிக்குமே தவிரச் சூனியத்தைச் சரணடையாது.
-
தெய்வத்தை அணுகும் முறை
உலகத்திலேயே மனிதன் அதிகமாக நேசிக்கக் கூடியது அமைதியும், நிம்மதியுமே.
பணம் வரலாம்; போகலாம். பல தாரங்களை மணந்து கொள்ளலாம்; வீடு வாங்கலாம்; விற்கலாம்; நிலம் வாங்கலாம்; சொத்தைப் பெருக்கலாம்; எல்லாம் இருந்தும் கூட நிம்மதி இல்லை என்றால் அவன் வாழ்ந்து என்ன பயன்?
சேர்க்கின்ற சொத்து நிம்மதிக்காக.
கட்டுகிற மனைவி நிம்மதிக்காகவே.
தேடுகின்ற வீடும், நிலமும் நிம்மதிக்காக.
எப்போது அவன் நிம்மதியை நாடுகிறானோ, அப்போது அவனுக்கு அவஸ்தை வந்து சேருகிறது.
ஆரம்பத்தில் மனிதன் விரும்பியோ விரும்பாமலோ பல சிக்கல்களைத் தானே உண்டாக்கிக் கொள்கிறான்.
தானே கிணறு வெட்டுகிறான்; அதில் தானே விழுகிறான்.
தானே தொழில் தொடங்குகிறான்; தவியாய்த் தவிக்கிறான்.
தானே காதலிக்கிறான்; அதற்காக உருகுகிறான்.
தானே ஒரு பெண்ணை விரும்பிக் கல்யாணம் செய்து கொள்கிறான்; பிறகு இது பெண்ணா?, பேயா? என்று துடியாய்த் துடிக்கிறான்.
எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் மனித வாழ்க்கை துன்பகரமாகவே காட்சியளிக்கிறது.
ஆகவேதான், மனிதன் ஏதாவது ஒரு புகலிடத்தை நாடுகிறான்.
தனக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று தேடுகிறான்.
மனிதர்களோ அவதூறு பேசுகிறார்கள்; கேலி செய்கிறார்கள்.
ஆகவே, அவன் தெய்வத்தைச் சரணடைகிறான்.
அந்தத் தெய்வம் அவன் குறையைக் கேட் கிறதோ இல்லையோ, காட்சியிலேயே நிம்மதியைத் தருகிறது.
இந்தத் தெய்வ பக்தியில் மிக முக்கியமானது அணுகும் முறை.
எல்லோரையும் போல கோவிலுக்குப் போனோம்; ஒரு தேங்காய் உடைத்தோம்; இரண்டு பழங்களை வாங்கிச் சென்றோம் என்பதில் லாபமில்லை.
கோவிலில் பாடப்படும் `கோரஸ்’ அல்லது கோஷ்டி கானத்தில் பெரும் பயனடைவதில்லை.
ஏழை ஒருவன் வள்ளல் வீட்டுப் படிக்கட்டுகளில் நம்பிக்கையோடு ஏறுவது போல், இறைவனை அணுக வேண்டும்.
இறைவனை ஒரு உன்னதமான இடத்தில் வைத்து, அடிமையைப் போல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவனைத் தோழனாகவே பாவிக்கலாம்.
தனியறையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு தெய்வப் பிரதிமையின் முன்னால் குறைகளைச் சொல்லி அழுவதில் பயனிருக்கிறது.
எங்கள் கிராமங்களில் ஒரு காரியம் நடக்குமா நடக்காதா என்பதற்குப் பூக்கட்டி வைத்துப் பார்ப்பார்கள். வெற்றிலைப் பாக்கு வைத்துக் கேட்பார்கள். சாமி அனுமதித்தால் மட்டுமே அந்தக் காரியத்தைச் செய்வார்கள்.
எல்லாவற்றிற்குமே தெய்வத்தை நம்பி, அதன் மூலம் அவர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.
`திருவுளம்’ கேட்பது என்பது கிராமங்களில் இருக்கும் ஒருமுறை. `நான் மேற்கொண்ட காரியம் நடக்கும் என்றால் பல்லி சொல்ல வேண்டும்’ என்று வேண்டிக் கொள்வார்கள்.
கோவிலின் ஏதாவது ஒரு பகுதியில் பல்லி சொன்னால், இறைவனின் திருவுளம் இரங்கி விட்டதென மகிழ்வார்கள். அது சொல்லவில்லை என்றால், அந்தக் காரியத்தில் ஈடுபடமாட்டார்கள்.
மனிதனின் மிகவும் குறைந்த பட்சத் தேவை நிம்மதி. அதைத் தெய்வத்திடம் இருந்து பெற்றுக் கொள்பவனுக்குப் பெயர் தான் இந்து.
தெய்வத்தை அணுகுவதில் திறமையுள்ளவர்கள் தங்கள் காரியங்களைக் கண் முன்னாலேயே சாதித்துக் கொண்டிருக்கிறார் கள்.
`முருகா முருகா’ என்று எல்லோரும்தான் கூவுகிறோம்; சிலருக்கு மட்டும் தொட்டதெல்லாம் பலிக் கிறதே, ஏன்?
அவர்கள் தெய்வத்தை அணுகத் தெரிந்து கொண்டு விட்டார்கள் என்பதே, அதன் பொருள்.
கொல்கத்தா காளி கோவிலைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள்.
ஒரு ஏழை உழைப்பாளி. அந்தக் கோவில் வாசலில் போய்ப் படுத்துக் கொள்வானாம். காலையில் கண் விழிக்கும் போது சந்நிதானத்தில் தான் கண் விழிப்பானாம். காளி தேவியிடம் வேண்டிக் கொண்டுதான் தொழிலுக்குப் புறப்படுவானாம். எப்படியும் அன்றைக்குப் பத்து ரூபாய் சம்பாதித்து விடுவானாம். என்றைக்கு அவன் ஞாபக மறதியாகச் சந்நிதானத்தைப் பார்த்துக் கண் விழிக்காமல் தெருவைப் பார்த்து விழிக்கிறானோ, அன்றைக்கு அவன் வாழ்க்கையில் சிரமம் ஏற்படுமாம்.
இதை எப்படிச் சொல்கிறார்கள் என்றால், `இன்றைக்கு இவனுக்கு லாபமில்லாத நாள் என்று தெரிந்து, ஈஸ்வரியே அவனை வேறு பக்கம் விழிக்க வைக்கிறாள்’ என்கிறார்கள்.
இதுதான் உண்மை என்று நான் நம்புகிறேன். எனக்கும் இதில் ஒரு அனுபவம் உண்டு.
நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் என் கவிதா ஹோட்டல், தேவர் திருமண மண்டபத்தில் உட்கார்ந்திருந்த போது ஒரு கேரளத்து நண்பர் என்னைப் பார்க்க வந்தார். வந்தவர் ஒரு சிறிய குருவாயூரப்பன் புகைப்படத்தைக் கொடுத்து விட்டுப் போனார்.
அதை நான் என் சட்டைப் பையிலே வைத்திருந்தேன்.
காலையில் சட்டை மாற்றும்போது எதை வைக்க மறந்தாலும், அந்தப் படத்தை வைக்க மறக்கமாட்டேன்.
அது `பெதடின்’ பழக்கத்தை விட்டு விட்ட நேரம். உடம்பிலே சில எதிரொலிகள் ஏற்பட்டு அடங்கிவிட்டன.
குருவாயூரப்பன் படம் வந்ததில் இருந்து உடம்பு மிக நன்றாக இருந்தது.
காலை குளித்துப் பலகாரம் சாப்பிட்டு விட்டு `இன்சுலின்’ போட்டுக் கொண்டால், மதியம் வரையிலே சுறுசுறுப்பாக இருக்கும்.
மதியம் நல்ல கீரையோடு சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் படுத்தால், மாத்திரை இல்லாமலே தூக்கம் வரும்.
சாயங்காலம் எழுந்து குளித்தால், உலகமே புதிதாகத் தோன்றும்.
உடனே மண்டபத்துக்கு வந்து மாலைப் பத்திரிகைகள் அனைத்தும் படித்து முடிப்பேன். ஏதாவது எழுதுவேன். உடம்பு அவ்வளவு நன்றாக இருந்தது.
அப்போது எனக்கு மலேசியாவில் இருந்து அழைப்பு வந்தது. `உடம்பு தான் நன்றாக இருக்கிறதே, போய் வரலாம்’ என்று முடிவு கட்டினேன்.
புறப்படுவதற்கு முதல் நாள் இரவு நான் நீர் சாப்பிடும் கண்ணாடித் தம்பளர் விழுந்து உடைந்தது. என்னுடைய கைக்கடிகாரம் கழன்று விழுந்தது. `என்ன துர்ச்சகுணங்களோ’ என்று எண்ணியபடி விட்டு விட்டேன்.
மறுநாள் காலை பத்தரை மணிக்கு விமானம்.
காலை இட்லி கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டு விட்டேன்.
`அதிகமாகச் சாப்பிட்டு விட்டோம்’ என்று நானே எண்ணிக் கொண்டு, `இன்சுலின்’ மருந்தை வழக்கத்துக்கு விரோதமாக அதிகம் போட்டுக் கொண்டு விட்டேன்.
சற்று மயக்கமாக இருந்தது.
விமான தளத்துக்குப் போகும் போது பையைத் தடவிப் பார்த்தேன். குருவாயூரப்பன் படத்தைக் காணவில்லை. பழைய சட்டையில் தேடிப் பார்க்கச் சொன்னேன். அதிலும் இல்லை.
விமான நிலையத்துக்கு வந்த போது ஆட்களையே அடையாளம் தெரியாத நிலை ஏற்பட்டு விட்டது.
என் குழந்தைகள், பேரன், பேத்திகளெல்லாம் விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள்.
யாரோடு பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பதே எனக்குப் புரியவில்லை.
என்னோடு கனரா பாங்க் நண்பர்களும் விமானத்தில் வந்தார்கள்.
விமானத்தில் இனிப்பு வாங்கிச் சாப்பிட்டேன்; குடித்துப் பார்த்தேன்; மயக்கம் மயக்கம் தான்.
இது நடந்தது 1975 செப்டம்பர் 28ஆம் தேதி.
மலேசியாவில் நான் போய்க் கோலாலம்பூரில் இறங்கி அங்கிருந்து 250 மைல் தூரத்திலுள்ள சித்தியவான் என்ற ஊருக்குப் போய்விட்டேன்.
அந்தச் சித்தியவான் நகரில் எனக்கு ஒரு அற்புதமான நண்பர் உண்டு. அவர் சிவகங்கைப் பகுதியைச் சேர்ந்தவர். கிருஷ்ணன் என்று பெயர்.
கோலாலம்பூர் கூட்டங்களுக்குத் தப்பி, ஓய்வுக்காக நான் அங்கே சென்றேன்.
அங்கிருந்து மூன்றாவது மைலில் ஒரு கடற்கரை உண்டு. அதன் கரையில் ஒரு சிற்றூர் உண்டு. அதன் பெயர் `லுமுட்’. அங்கே ஒரு தென்னந்தோப்பில் அழகான ஒரு காட்டேஜில் நான் தங்கி இருந்தேன்.
சரியாக மூன்றாவது நாள் அங்கிருந்து நான் சித்தியவான் நகருக்கு வந்தபோது, தமிழர்களெல்லாம் சென்னை வானொலியைச் சிரமப்பட்டுத் திருப்பிக் கொண்டிருந்தார்கள்.
நான் கிருஷ்ணன் வீட்டுப் படியேறிப் போகும் சமயம், அங்கிருந்த கிருஷ்ணனின் குமாரர், `ஐயா, காமராஜ் இறந்து விட்டார்’ என்றார்.
மறுநாள் மதியம், சென்னையில் இருந்து எனக்கு டிரங்க் கால் வந்தது, `அதே அக்டோபர் இரண்டாம் தேதியில் என் உடன் பிறந்த சகோதரியும் இறந்து விட்டதாக!’
நான் சென்னை வரமுடியவில்லை. மலேசியப் பயணத்தை ஒரு நாள்கூட ரசிக்க முடியவில்லை. ஒரே ரத்தக் கொதிப்பு; சர்க்கரைக் குறைவு; மயக்கம்; மயக்கம்; மயக்கம்!
இந்த நிலையிலும், `நான் இந்தோனேஷியாவுக்கு வந்தேயாக வேண்டும்’ என்று வற்புறுத்தினார்கள்.
பினாங்கில் புறப்படும் விமானம் இருபது நிமிஷத்தில் சுமத்திரா தீவுக்குப் போய் விடுகிறது.
நான் அங்கிருந்து கோலாலம்பூர் திரும்பியதும், சென்னையில் இருந்து டிரங்க்கால் வந்தது. என் சகோதரரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக.
உடனே நான் தங்கியிருந்த பசிபிக் ஹோட்டல் டிராவல் ஏஜெண்டிடம் டிக்கெட்டைக் கொடுத்து ஏர் இந்தியாவில் உறுதி செய்யச் சொன்னேன். அவர் உறுதி செய்து விட்டார். ஆனால், என்னிடம் டிக்கெட்டைக் கொடுக்கவில்லை.
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. காலை எட்டரை மணிக்கு விமானம். டிராவல் ஏஜெண்ட் வரவில்லை.
என்னை அழைத்துப் போயிருந்த துணை பப்ளிக் பிராஸிக்யூட்டர் நண்பர் சம்பந்தமூர்த்தி, விமான நிலையத்திலேயே டாலர் கட்டி எனக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தார்.
எத்தனை துயரங்கள்! எத்தனை சோதனைகள்!
`இவற்றுக்கெல்லாம் நாம் ஏன் காரணமாக இருக்க வேண்டும்?’ என்று தானே, குருவாயூரப்பன் காணாமல் போனான்!
விதி தவறாக இருக்குமானால், தெய்வம் கண்ணை மூடிக் கொள்ளும். அதற்காக அழுது பயனில்லை.
தெய்வத்தை அணுகும் முறையில் இருந்தே பல விஷயங்களை நாம் முன் கூட்டித் தெரிந்து கொள்ளலாம்.
தெய்வ நம்பிக்கை உள்ளவனுக்கு சகுனத் தடை ஏற்பட்டால், அதைத் தெய்வத்தின் கட்டளை என்றும், நமது கர்மா என்றும் கொள்ள
வேண்டும்.தடைதான் ஏற்படுமே தவிர, பெரும் கொடுமைகள் நிகழமாட்டா.
மலேஷியாவில் இருந்து திரும்பிய பிறகும் என் உடல்நிலை சரியாக இல்லை. உடம்பு இளைத்துக் கொண்டே வந்தது.
முப்பது பவுண்டு இளைத்து விட்டேன்.
இப்போது பார்க்கும் டாக்டர்கள் எல்லாம், இதுதான் சரியான எடை என்கிறார்கள்.
இதுவும் நான் விரும்பி நடந்ததல்ல.
பகவான் சில காலங்களில் சில காரியம் நடக்கும் என்று நிர்ணயிக்கிறான்; நம்முடைய பிரக்ஞை இல்லாமலே அவை நடந்து விடுகின்றன.
தெய்வத்தை அணுகினால் பலன்கிடைக்கும் என்பதற்காகக் கண்ட கோவிலுக்கெல்லாம் ஓடிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.
ஒரு தெய்வத்தை உளமாரப் பற்ற வேண்டும். பெரும்பாலும் சக்தி வணக்கம் உதவி செய்யக் கூடியது.
புவனேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, அகிலாண்டேஸ்வரி, கற்பகாம்பாள், மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி எல்லாமே சக்தியின் பிம்பங்களாக இருப்பதால், சக்தி உபாசனை பலன் தரும்.
ஆண் தெய்வங்களில் அவரவர் விருப்பப்படி சிவ தத்துவத்தையோ, விஷ்ணு தத்துவத்தையோ ஏற்றுக் கொள்ளலாம்.
இரவில் படுக்கப் போகும் போது தூங்குவதற்கு முன் கடைசியாகச் சொல்லும் வார்த்தை, தெய்வத்தின் பெயராக இருக்க வேண்டும்.
அதன் பிறகும் யாருடனாவது பேச வேண்டி வந்தால் மீண்டும் தெய்வத்தின் பெயரைச் சொல்லி விட்டுத் தூங்க வேண்டும்.
சின்னப்பாத் தேவர் யாரைக் கண்டாலும், `வணக்கம் முருகா’ என்பார்.
எம்.ஜி.ஆர். யாரைக் கண்டாலும், `வணக்கம் ஆண்டவனே’ என்பார்.
ஐயப்ப பக்தர்கள், `சாமி சரணம்’ என்பார்கள்.
தெய்வத்தை நாம் நடு வீட்டில் நிற்க வைத்தால், அது உள் வீட்டிலேயே வந்து உட்கார்ந்து கொள்ளும்.
நன்றி கெட்டவன் மனிதன்; நன்றியுள்ளது தெய்வம்.
-
என் குருநாதரின் எழுத்துக்களை வாசிப்பதே தனி அலாதிதான் பகிர்வுக்கு ரொம்ப நன்றிங்க
-
இதன் தொடர்ச்சி இன்னும் இருக்கு ஆதி நன்றிகள் .
-
கடவுள் மனிதனாக
`கடவுளுடைய திருநாமம் பேசப்படும் இடமெல்லாம் புண்ணியத் தலங்களே’.
இவ்வாறு இருக்க, அவர் திருநாமத்தைக் கூறுகிறவர் எவ்வளவு புண்ணிய வடிவாய் இருக்க வேண்டும்?
தெய்விக உண்மையைப் புலப்படுத்தும் அவரிடம் நாம் எவ்வளவு பக்தியுடன் இருக்க வேண்டும்?
ஆனால், உலகத்தில் ஆன்மிக உண்மையை அளிக்கும் மகான்கள் மிகவும் குறைவானவர்களே. அவர்கள் இல்லாமல் உலகம் ஒருமிக்க வாழவும் இயலாது. மானிட வாழ்க்கையின் அழகுமிக்க மலர்கள் அவர்கள்; `தமக்கென்று நோக்கமெதுவுமில்லாத கருணா சமுத்திரம்!’.
`குருவை நான் என்று அறி’ என்று கிருஷ்ண பகவான் பாகவதத்தில் பகருகிறார். இத்தகையோர்கள் எந்தக் கணம் முதல் இல்லாமல் போகிறார்களோ அப்பொழுதே உலகம் பயங்கரமான நரகமாகி அதன் அழிவை நோக்கித் துரிதமாகச் செல்லத் தொடங்குகிறது. இவர்களை விட உயர்வும் மகிமையும் உள்ள ஆசாரியர்கள் உலகில் தோன்றுகிறார்கள். அவர்களே ஈஸ்வர அவதாரங்கள்.
அவர்கள் தங்கள் விருப்பத்தாலேயே, ஒரு முறை தொடுவதாலேயே ஆன்மிக அறிவைப் பிறரிடம் பாய்ச்சுவார்கள். அவர்கள் கட்டளையினால் மிக இழிந்தவர்களும் ஒரு விநாடியிலே பெரிய ஞானிகள் ஆகிவிடக் கூடும். அவர்கள் ஆசாரியர்களுக்கும் ஆசாரியர்கள்; கடவுள் மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் பெரிய அவதாரங்களே அவர்கள். அவர்கள் மூலமாகவன்றிக் கடவுளை நாம் காண முடியாது. அவர்களை நாம் பூஜிக்காமல் இருக்க இயலாது. உண்மையாக அவர்களே நம் பூஜைக்கு உரியவர்கள்.
இந்த மானிட உருவத்தில் அளிக்கப்படும் தோற்றங்களிலன்றி இறைவனை வேறு விதத்தில் எவரும் காண இயலாது. வேறு வழியில் நாம் அவரைக் காண முயலும் போது அவரே வெறுக்கத்தக்க ஒரு போலியை உருவாக்கி, அதுவே அவர் என்று நம்புகிறோம்.
இதை விளக்கும் ஒரு கதை உண்டு.
ஒருவனைச் சிவபிரான் உருவத்தைச் செய்யச் சொன்னார்கள். அவன் நெடுநாள் முயன்று ஒரு குரங்கு உருவத்தைப் படைத்தானாம். ஆகவே, கடவுளை அவரது பரிபூரண நிலையிலிருத்திப் பார்க்க முயலும் போதெல்லாம் நமக்குத் தோல்வியே உண்டாகிறது. நாம் மனிதராய் இருக்குமட்டும், மனித நிலையை விட்டு வேறாக நாம் அவரைக் கருத இயலாது. நாம் நம் மானிட நிலையைத் தாண்டி மேலேறுவோமானால், அவரை அவர் உள்ளபடி நாம் உணரக் கூடும்.
ஆனால், நாம் மனிதராய் இருக்கும் மட்டும் அவரை மனிதரில் வைத்து மனிதராகவே பூஜிக்க வேண்டும். நீ எதை வேண்டுமானாலும் பேசலாம். எப்படி வேண்டுமானாலும் முயலலாம். ஆனால், கடவுளை மனிதராக அல்லாமல் வேறு எந்த வகையிலும் உன்னால் நினைக்க முடியாது. இதைத் தவிர வேறு வழியில்லை.
இறைவனையும், நானிலத்துள்ள பொருள்கள் அனைத்தையும் பற்றி அறிவொளி மிக்க பெருஞ் சொற்பொழிவாற்றலாம். தருக்க நிபுணராய்த் திகழ்ந்து இறைவனின் மனித அவதாரங்களைப் பற்றிய நிகழ்ச்சிகள் யாவும் பேதைமையென்று திருப்தியுற நீர் மெய்ப்பிக்கலாம். ஆனால், செயல் முறைக்கு உதவும் பொது அறிவு நிலைக்குச் சற்றே செல்வோம்.
இத்தகைய அறிவுப் பொலிவின் பின்னுள்ளது யாது? சூனியமே! ஒன்றுமின்மையே! அவ்வளவும் நுரை மட்டுமே! கடவுளின் அவதார வழிபாட்டை எதிர்த்து ஒருவர் அறிவு நலம் மிக்க சொற்
பொழிவை நீர் அடுத்த முறை கேட்குங்கால், அவரைப் பற்றி இழுத்து, `கடவுளைப் பற்றி நீர் கொண்ட கருத்து யாது? ஸர்வ சக்தித்துவம்.’ `ஸர்வ வியாகபத்துவம்’ என்பவற்றிற்கும் இவை போன்ற பிற மொழிகட்கும் அவற்றின் எழுத்துகளுக்கு அப்பால் நீர் கண்ட பொருள்கள் எவை?’ என்று வினவுவீராக.
அவற்றால் அவர் அறிந்தது யாதுமில்லை என்பதே உண்மை. அவரது சொந்த மனித இயற்கையால் பாதிக்கப்படாத எக்கருத்தையேனும் அவற்றின் பொருளாக அவர்க்கு வரையறுத்துக் கூற இயலாது. இது பற்றிப் பேசின், ஒரு நூலையும் வாசித்திராதொரு மனிதன் அமைதியாய் இருப்பான். உலக அமைதியைக் குலைக்காதிருப்பான். ஆனால், இப்பெரிய பேச்சாளரோ மன்னுயிருக்குத் தொந்தரவையும், துயரத்தையும் படைத்தளிப்பார். யாது கூறினாலும் சமயம் என்பது அனுபூதியே, பேச்சுக்கு. அனுபூதி ஞானத்திற்கும் மிகச் செவ்வனே வரையறுக்கப்பட்டுள்ள வேறுபாட்டைக் காண வேண்டும்.
நாம் ஆன்மாவிற்குள் ஆழத்தைப் பெறும் அனுபவமே மெய்யுணர்வாகும். இப் பொருள் பற்றியவரை பொது அறிவைப் போன்ற அத்துணை அசாதாரணமானது உண்மையிற் பிறிதொன்றில்லை.
நமது இப்போதைய அமைப்பால் நாம் வரையறையுற்றவர் ஆதலின், இறைவனை மனிதனாகக் காணும் கட்டுப்பாட்டுக்கு உள்ளாவோம். உதாரணமாக எருமைகள் இறைவனை வணங்க விரும்புமாயின், அவை தமது சொந்த இயற்கைக் கேற்ப, அவரை ஒரு பேரெருமையாகவே காணும். ஒரு மீன் இறைவனை வழிபட விரும்புமாயின், அவரைப் பற்றிய ஒரு கருத்து ஒரு பெரும் மீனாகவே அமைய வேண்டியதாகும். மனிதனும் அவரை மனிதனாகவே நினைக்க வேண்டியவனாவான்.
இப் பல்வகைக் கருத்துகளும் நோயினால் விரைவுற்ற கற்பனையில் எழுந்தவையல்ல. மனிதனும், எருமையும், மீனும் யாவும் அத்தனை வேறு வேறான கலங்களைக் குறிப்பதாகக் கருதலாம். இத்தனைக் கலங்களும் தத்தம் சுய வடிவிற்கும், கொள்ளும் அளவிற்கும் ஏற்ப நீரை நிரப்பிக் கொள்ளும் பொருட்டு இறைவன் என்னும் கடலுக்குச் செல்லுகின்றன. மனித கலத்தில் நீர் மனித வடிவையும், எருமைக் கலத்தில் எருமை வடிவையும், மீன் கலத்தில் மீன் வடிவையும் பெறுகிறது. இக்கலங்கள் ஒவ்வொன்றிலும் இறைவன் என்னும் கடலிலுள்ள இதே நீர் உள்ளது. மனிதர் இறைவனைக் காணும் போது, அவனை மனிதனாகக் காண்கின்றனர். விலங்குகளிடம் இறைவனைப் பற்றிய கருத்து இம்மியேனும் உண்டாயின் ஒவ்வொன்றும் அதன் தன் சொந்த இலட்சயத்திற்கு ஏற்ப அந்தந்த விலங்காகத்தான் அவரை கண்டு தீர வேண்டும். ஆதலால் இறைவனை மனிதனாகக் காணுதல் நமக்கு தடுக்க வொண்ணாதது. ஆதலால் அவரை மனிதனாக வழிபடும் கட்டுப்பாட்டுக்கு உள்ளாகிஇருக்கிறோம்.
கடவுளை மனிதனாக வழிபடாதவர் இரு வகையினர். அவருள் மதம் என்பதில்லாத காட்டுமிராண்டிகள் ஒரு வகையினர்; மானிட எளிமைகளெல்லாம் தாண்டி அப்பாற் சென்றவர்களும், தங்களுக்கு இயல்பான மானிட சுபாவத்தின் எல்லையைக் கடந்தவர்களுமான பரமஹம்சர்கள் மற்றொரு வகையினர். அவர்களுக்கு `பிருகிருதி’ எல்லாம் தாமே ஆகிவிடுகின்றன. அவர்களே கடவுளை அவருடைய உண்மை நிலையில் வைத்துப் பூஜிக்கக் கூடும். பிற விஷயங்களில் போல இரண்டு ஓரங்களும் மடமையின் எல்லையும், ஞானத்தின் எல்லையும் ஒன்று கூடுகின்றன.
இவ்விருவரும் பூஜை புரிய வேண்டியதில்லை. காட்டுமிராண்டி, தன் அஞ்ஞானத்தால் பூஜை செய்வதில்லை. ஜீவன் முக்தர்கள் (வீடு பெற்றவர்கள்) கடவுளைத் தம்மிடத்தில் காண்பதால் பூஜை செய்வதில்லை. இவ்விரு நிலைகளுக்கும் இடையிலே நிற்கும் எவனேனும் கடவுளைத் தான் பூஜை செய்யப் போவதில்லை என்று கூறுவானானால் அவனிடம் விழிப்பாயிரு. மரியாதையாகச் சொல்லுவோமானால், அவன் பொறுப்பற்றுப் பேசுகிறவன். அவன் மதம் நேர்மையற்றது; அறிவற்றவர்களுக்கே ஏற்றது எனலாம்.
மானிடர்க்குரிய குறைகளைக் கடவுள் அறிகிறார். மானிட இனத்திற்கு நன்மை புரியும் பொருட்டு அவர் ஒரு மனிதராகிறார். `தர்மம் குறைந்து அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் நான் அவதரிக்கிறேன்; யுகந்தோறும் அறத்தை நிலை நிறுத்தவும், மறத்தை அழிக்கவும், நல்லோர்களைக் காக்கவும் நான் வருகிறேன்.’
`முரடர்கள் மானிட உருவெடுத்து என்னை, நான் சர்வ லோகங்களுக்கும் பிரபு என்பதை உணராமல் இகழ்கிறார்கள்’. இதுவரை அவதாரங்களைப் பற்றி கீதையில் சொல்லப்பட்டவை, `பெரும் புயல் வரும் போதே சிறிய வாய்க்கால்களும், சாக்கடைகளும் தாம் அறியாமலே வெள்ளத்தால் நிரம்பி விடுகின்றன. அப்படியே அவதாரம் என்று உலகில் ஏற்படும் போது, பெரியதோர் ஆன்மிக வெள்ளம் உலகத்தில் பரவ, மக்கள் யாவரும் வானமெல்லாம் ஆன்மிகம் நிறைந்துள்ளதை உணர்கிறார்கள்!’ என்று பகவான் இராமகிருஷ்ணர் கூறுகிறார்.
மேலே நான் குறிப்பிட்டிருப்பது சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவில் ஒரு பகுதியாகும்.
கீதையை உபதேசித்த கண்ணன் யார்? அவன் மனிதனா, கடவுளா? கடவுளை மனிதனாகக் காண்பது சாத்தியமா?
இந்தக் கேள்விகளுக்குத்தான் சுவாமி விவேகானந்தர் மேலே கண்டபடி பதில் அளிக்கிறார்.
மற்ற மதங்கள், கடவுளை மனிதரின் தூதுவராகக் காண்கின்றன.
இந்துக்கள் கடவுளையே மனிதராகக் காண்கிறார்கள்.
சுவாமி விவேகானந்தர் சொல்வது போல், எருமையின் கண்ணுக்குக் கடவுள் ஒரு பெரிய எருமை என்றால், மனிதனின் கண்ணுக்குக் கடவுள் ஒரு மனிதர் தான்.
அதனால்தான், அவதார புருஷர்களை நாம் வழிபடுகிறோம்.
இராமாவதாரத்தையும், கிருஷ்ணாவதாரத்தையும் மனிதர்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கூட, அந்த இருவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த அவதாரங்கள்.
அவர்களிலே கிருஷ்ணன் ஒரு ஞானாசிரியன்; இராமன் ஒழுக்கத்துக்கு இலக்கணமான பேராசிரியன்.
கடவுளை மனிதனாகப் பார்ப்பதால் தான் அவனைக் காதலியாக, காதலனாகப் பாவிக்கிறோம்.
இந்த பாவனையில் தெய்வத்தின் ஸ்வரூபமல்லாது, விஸ்வரூபம் வெளியாகிறது.
தாயைப் பார்க்கும் மகனைப் போல ஆண்டவனை நாம் பார்க்கிறோம்.
மனிதர்கள் அணியும் ஆடைகளையே அவனுக்கும் அணிவிக்கிறோம்.
மனிதர்கள் சூடிக் கொள்ளும் மலர்களையே இறைவனுக்கும் சூட்டுகிறோம்.
அந்த மனித பாவத்தில், நம்முடைய அறிவு லயித்து விடுகிறது.
தெய்வம் என்பது எல்லாவற்றையும் கடந்தது என்ற நிலைபோய், அது நம்மோடுஇருக்கும் ஒன்று என்ற நிலை வந்து விடுகிறது.
மனிதனுடைய பகுத்தறிவு, தெய்வத்தைப் பக்கத்தில் காணவே விரும்பி இருக்கிறது. அந்த விருப்பத்தின் உருவங்களே அவதாரங்கள்.
அத்தகைய அவதார புருஷர்கள் பிற்காலத்தில் பிறக்கவே இல்லையா என்றால், இன்றும் பிறந்திருக்கிறார்கள் என்பதே பதிலாகும்.
ஆடி, ஓடி, அலுத்துக் களைத்து, நோய்வாய்ப்பட்டுச் சாகும் மனிதனுக்குக் காட்டுக்கு நடுவே இருக்கும் ரோட்டைக் காட்டுவது போல், ஞானத்தை ஊட்டும் நல்லாசிரியர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
அவர்களில் பலர், தங்களைக் கடவுளின் அவதாரங்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை. ஆனால், அவதாரங்களாகவே வாழ்கிறார்கள்.
உயர்தர மருத்துவர்களே, `என் விதி முடிந்து விட்டது’ என்று சொல்லும் போது, உள்ளூர் மருத்துவர்கள் ஏன் கையைப் பிடித்துப் பார்க்க வேண்டும் என்பது போல, ரமண மகரிஷி இறைவன் திருவடிகளை அடைந்தார்.
சில சட்டதிட்டங்கள் கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் தங்களை ஒப்புக் கொடுத்து விடுகிறார்கள். அந்த இடத்திலேயே நிலையாக நின்று விடுகிறார்கள்.
அவர்களில் ஒருவரை நாடி, உபதேசம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பால வயதில் இருந்து குருசிஷ்ய பாவத்தில் ஈடுபடாதவர்கள் நடுத்தர வயதில் அப்படியொருவரை அணுகுவதே நிம்மதிக்கு வழி.
வெறும் புத்தகங்களைப் படிப்பதின் மூலமே ஞானம் பெற்றுவிட முடியாது.
யாராவது ஒருவர் ஆறுதல் சொன்னால் தான் அழுகை அடங்குகிறது.
யாராவது ஒரு ஞானாசிரியரிடம் உபதேசம் கேட்டுக் கொண்ட பின்னாலே தான், ஏற்கெனவே இருந்த மனோபாவம் மாற முடியும்.
வாழ்க்கை வெறும் கேள்விக் குறிகளாலே ஆனது.
சிக்கல் விழுந்துவிட்ட அந்த நூலை அறுந்து விடாமல் ஜாக்கிரதையாகப் பிரிக்க வேண்டும்.
அந்த வேலை தையல்காரருக்குத் தெரிந்த அளவு நமக்குத் தெரியாது.
நாமே நமக்குள் பெற்றுக் கொள்ளக் கூடிய நிம்மதியை நூறு மடங்காக ஆக்கத் தெரிந்தவர்கள் ஞானிகள் மட்டுமே.
அவர்களை அண்டி, மிச்சக் கால வாழ்க்கையை மேன்மைப்படுத்திக் கொள்ள முயல்வதே நிம்மதிக்கு ஒரே வழி.
-
கள்ளம், கபடம், வஞ்சகம்
கண் வெயிலைப் பார்க்கும்; மனம் மழையை நினைக்கும்; வாய் பனியைப் பற்றிப் பேசும்.
இத்தனைக்கும் எல்லா அங்கங்களும் ஒரே உடம்பில் தான் இருக்கின்றன.
`கண்ணொன்று காண, மனம் ஒன்று நாட, வாயொன்று பேச’ என்று பாடினார்கள்.
அப்படிப்பட்ட வஞ்சகர்கள் எத்தனைப் பேரை நான் பார்த்திருக்கிறேன்!
முகத்துக்கு முன்னால் சிரிப்பார்கள்; முதுகிற்குப் பின்னால் சீறுவார்கள். பக்கத்தில் இருந்து கொண்டே, `எப்போது கவிழ்க்கலாம்’ என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அப்படிப்பட்ட வஞ்சகர்கள் எவ்வளவு பேரை நான் பார்த்திருக்கிறேன்!
அவர்களைப் பற்றி எச்சரித்து எத்தனைப் பாடல்கள் எழுதியிருக்கிறேன்?
சிலரை நான் நம்பாமல் இருந்தாலும், மற்றும் சிலரை நம்பி இருந்தாலும் எனக்கு இத்தனைக் கஷ்டங்கள் வந்திருக்காது.
பெதடின் போட்டு உடம்பைக் கெடுத்துக் கொண்டிருக்க மாட்டேன்; பணத்துக்குச் சிரமப்பட்டிருக்கவும் மாட்டேன்.
ஏற்கெனவே நான் கூறியபடி, எனது வாழ்க்கை வரலாற்றுக்கு `வனவாசம்’ என்ற தலைப்பைவிட `ஒரு முட்டாளின் சுயசரிதம்’ என்ற தலைப்பே பொருத்தமானது.
ஆனால், அந்த முப்பது ஆண்டுகளில் நான் பெற்றுக் கொண்ட அனுபவங்கள்தான், இன்று எழுத்துக்களாகப் பரிணமிக்கின்றன.
பாண்டவர்கள் கெளரவர்களால் வஞ்சிக்கப்படாமல் இருந்திருந்தால், பகவானுடைய திருஷ்டி அவர்கள் மேல் விழுந்திருக்கப் போவதில்லை; பாரத யுத்தமும் நடந்திருக்கப் போவதில்லை.
நானும் பல பேரால் வஞ்சிக்கப்படாமல் இருந்திருந்தால், இந்து மதச் சிந்தனை எனக்கு இந்த அளவுக்குத் தோன்றி இருக்கப் போவதில்லை.
எனது தர்க்க அறிவை நான் விருத்தி செய்து கொள்ள வஞ்சகர்களும், துரோகிகளுமே துணையாக இருந்தார்கள்.
அவர்கள் நேரடி எதிரிகளாக இருந்திருந்தால் நான் சமாளித்திருப்பேன். மித்ர துரோகிகளாக இருந்ததாலேயே சங்கடப்பட வேண்டி வந்தது.
புராண இதிகாசங்களிலோ, அரக்கர்கள் நேரடி எதிரிகள். அவர்களை நம்பலாம்; நம்ப முடியாதவன் நண்பன் மட்டுமே.
அதனால்தான் இராமலிங்க அடிகளார், `உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்று பாடினார்.
நல்லவர்பால் சேர்ந்து ஒழுகுவது பற்றி வள்ளுவனும் கூறினான்.
வஞ்சக நெஞ்சங்களைக் கம்பனும் பாடினான்.
கள்ளத்தைக் கருவறுக்க, கபடத்தை வேரறுக்க, வஞ்சத்தை வெட்டி வீழ்த்த இந்துமதம் எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல.
இருந்தும் அது முன்னைவிட அதிகமாகி விட்டது!
இந்தியப் பொருளாதாரத்தின் பலவீனத்தால், சிறு பருவத்திலேயே மனிதன் வஞ்சகனாகி விடுகிறான்.
கற்பழித்துக் கொலை செய்வதும், காதறுத்து நகை திருடுவதும் சகஜமாகி விட்டன.
`இரக்கமென் றொருபொரு ளில்லா அரக்கர்’ என்றான் கம்பன்.
இரக்கமற்றவர்கள் இப்போது நிறைந்து காணப்படுகிறார்கள்.
`ஒரு வேளைச் சோறு தாயே’ என்று சத்தம் போடும் பிச்சைக்காரனுக்குச் சோறு போட மறுக்கிறார்கள்.
நண்பர் ஒருவர் மேடைகளிலே ஏழைகளைப்பற்றி மிக உருக்கமாகப் பேசுவார். ஒரு பிச்சைக்காரனுக்கும் காலணா போட்டதில்லை. எந்தக் கொடுஞ்செயலிலும் துணிந்து இறங்குவார். ஆனால், அவரையும் பலர் நம்புகிறார்கள்.
சாகக் கிடக்கும் உயிருக்குக் கூடப் `பணம் கொடுத்தால் தான் வருவேன்’ என்று பிடிவாதம் பண்ணும் டாக்டர்கள்-
ஜெயிக்கக் கூடிய வழக்கைக் கூட பணம் கொடுக்காததால் தோற்கடிக்கும் வக்கீல்கள்-
நண்பனோடு பழகி, அவனது மனைவியையே கெடுத்து விடும் தலைவர்கள்-
ஒன்றா, இரண்டா?
லட்ச ரூபாயைத் திருட்டுத்தனமாகச் சம்பாதித்து, இருபதாயிரம் ரூபாயைத் திருப்பதி உண்டியலிலே போட்டு விடுவதால், வெங்கடாசலபதி திருப்தியடைவதில்லை.
மனிதாபிமானத்தை நேசிக்காதவர்கள், நான் முன் பகுதியில் கூறியபடி, நரகவாசிகளே!
நான் பார்த்தவரையில் இரண்டு வகையான நீதிபதிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்.
ஒரு வகையினர் குற்றவாளிகளைக் கூட விடுதலை செய்து விடுகிறார்கள். இன்னொரு வகையினர், நிரபராதிகளைக் கூடத் தண்டித்து விடுகிறார்கள்.
வழக்கின் தன்மையைவிட, நீதிபதியின் மனப்போக்கே நியாய அநியாயங்களுக்குக் காரணமாகி விடுகிறது.
கூர்மையான கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு மென்மையான குழந்தையிடம் விளையாட்டுக் காட்டுகிறோம் என்பதை, அவர்கள் மறந்துபோய் விடுகிறார்கள்.
முதலாவது பீச் லைனில் ஒரு மாஜிஸ்திரேட் கோர்ட். அங்கே என் மீது மான நஷ்ட வழக்குத் தொடுத்திருந்தார் பால்காரர் ஒருவர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டும் யாதவ ஜாதியைச் சேர்ந்தவர். மிகச் சாதாரணமாகத் தள்ளப்பட வேண்டிய அந்த வழக்கைத் தன் ஜாதிக்காரனுக்குச் சாதகமாக்கி எனக்கு அபராதம் விதித்தார் மாஜிஸ்திரேட்.
கவனிக்க நாதி இல்லாமல், மேல் கோர்ட்டிலும் அது உறுதியாயிற்று.
நானும், என்னுடைய அரசியல் தலைவர் ஒருவரும், ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர் தன் தொழிற்சாலையில் மந்திரிகளுக்கு மது விருந்தளித்ததாகப் பேசி இருந்தோம். நான் அதை எழுதியிருந்தேன்.
அவருடைய சொந்தக்காரர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். அவரிடம் என்னுடைய சிவில் வழக்கு ஒன்று வந்தது. தன் சொந்தக்காரரை நான் அவமானப்படுத்தி விட்டதாகக் கருதி, அந்த சிவில் வழக்கை `டிகிரி’ செய்தார் அந்த நீதிபதி.
பிறகு நான் பிரதம நீதிபதி கோர்ட்டில் அப்பீல் செய்து ஜெயித்தேன்.
இப்போது மத்திய அரசில் நிபுணராக விளங்குகிற ஒருவர் மாஜிஸ்திரேட்டாக இருந்தபோது, ஒரு டில்லி மந்திரியும் மற்றும் சிலரும் போய்ச் சொன்னார்கள் என்பதற்காக, ஒரு மிஷின் வழக்கில் என்னைத் தண்டித்தார்.
பிறகு நான் உயர்நீதிமன்றத்தில் தோழர் மோகன் குமாரமங்கலத்தை வக்கீலாக வைத்து, ஒரு மணி நேரத்தில் அந்த வழக்கை ஜெயித்தேன்.
மற்றும் வேலூரில் ஒரு வழக்கு. பல வழக்குகள்.
இப்போது எல்லா நீதிபதிகளுமே ரிடையராகி விட்டார்கள்.
இப்போது என் மீது வழக்குகள் அதிகமில்லை.
இந்த நாலைந்து ஆண்டுகளில் நான் கோர்ட்டுப் படிக்கட்டு ஏறியதில்லை. இனி அதற்கான அவசியமும் இருக்காது.
இன்றைய நீதிபதிகளில் பலர் உயர்ந்த தத்துவப் பேச்சாளர்கள்.
கடந்த ஆறேழு ஆண்டுகளில் நியமிக்கப்பட்டிருக்கும் அனைவருமே எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், மனிதாபிமானிகள், அவர்களில் இளைஞர்களும் இருக்கிறார்கள்.
கள்ளம், கபடம், வஞ்சக நெஞ்சம் அவர்களிடம் இல்லை.
நானும் ஐந்தாண்டுகளுக்கு முந்திய கண்ணதாசனாக இல்லை. அதனால், எல்லோருடனும் சந்தோஷமாகப் பழக முடிகிறது.
கடந்து போன காலங்களை எண்ணிப் பார்த்தால் இப்போதும் எனக்குக் கண்ணீர் வரும்.
வஞ்சகர்களையே என் வாழ்நாள் முழுவதும் சந்தித்திருக்கிறேன்.
யாரோ ஒருவர் கவியரங்கத்திலே பாடியது போல் கவர்னர் அளவுக்குச் சம்பளம் வாங்கி, ராஷ்டிரபதி அளவுக்குச் செலவு செய்திருக்கிறேன்.அன்றைய சந்திப்புகளை எண்ணிப் பார்க்கும் போது பொய், சூது, வஞ்சக நெஞ்சம் பற்றி இந்துமதம் சொன்னதே என் நினைவுக்கு வருகிறது.
மனிதனைத் தெய்வமாக்க இந்து மதம் விரும்புகிறது. ஆனால், மனிதனை மனிதனாக்கும் முயற்சியிலேயே இன்னும் அது வெற்றி பெறவில்லை.
இதயம் பரிசுத்தமாகவும், வார்த்தைகள், உண்மையாகவும் உள்ள ஒரு ஏழையைக் கண்டால், அவன் காலில் விழுந்துவிட நான் தயார்.
உண்மையில் ஏழைகளில் தான் பலர் அப்படி இருக்கிறார்கள்.
ஓரளவு வசதியுள்ளவன் கூட, குடி கெடுப்பவனாகத் தான் இருக்கிறான்.
தன்னையே கண்ணாடியில் பார்த்த இரணியனைப் போல், பலர் தங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமுதாய உணர்வு என்பது சிறிதும் இல்லை.
நாம் சுமந்து கொண்டிருப்பது உடம்பு தான் என்பதைச் சாகும் வரையில் அவர்கள் நினைப்பதில்லை.
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளங்களையே, மதம் வளர்க்கிறது.
பொய் சொல்லாத சந்நியாசி, நாணயம் தவறாத சம்சாரி இருவரையும் அது உற்பத்தி செய்கிறது.
நாணயம், இரக்கம், ஒழுக்கம், மனிதாபிமானம் பற்றி இந்து மதம் போதித்த அளவுக்கு, எந்த மதமும் போதிக்கவில்லை.
இன்றைய இளைஞன் அப்படி ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
பத்துப் பேரை நல்லவர்களாக்குவது போல் ஒரு புனிதமான பணி, உலகத்தில் வேறெதுவும் இல்லை.
அதற்கு இளைஞர்கள் கைக் கொள்ள வேண்டிய ஒரே நம்பிக்கை, மத நம்பிக்கை.
மதமும், அது காட்டும் தெய்வமும், அதன் வழி வந்த அவதார புருஷர்களுமே, ஒரு நேர்மையான ஞானம் மிக்க சமுதாயகர்த்தாக்கள்.
-
சொர்க்கம்-நரகம்-புனர் ஜென்மம்
மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை என்ன?
அவனுடைய ஆவி இப்போது இருப்பதைப் போலவே பூமியில் உலாவுகிறதா?
இல்லை, வான மண்டலத்திலே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ போய் விடுகிறதா?
அதுவும் இல்லை என்றால், அது இன்னொரு ஜீவனாக உடனே பிறந்து விடுகிறதா?
இந்தக் கேள்விகளுக்கு எப்படியும் பதில் சொல்லலாம்.
உபந்யாசகர்கள் அவர்களுக்குத் தோன்றிய பதிலைச் சொல்கிறார்கள்.
ஆனால், மறுபிறவி என்கிற புனர்ஜென்மத்தைப் பற்றிக் காஞ்சிப் பெரியவர்கள் அழகாக ஒரு விளக்கம் தருகிறார்கள். அதனை அத்தியாயத்தின் இறுதியில் தருகிறேன்.
மனித உயிர் சொர்க்கத்துக்கோ, நரகத்திற்கோ போகிறது என்பதிலும், மறுபிறவி எடுக்கிறது என்பதிலும் இந்துக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
`சொர்க்கம், நரகம் என்ற இரண்டை ஏன் ஆண்டவன் படைக்க வேண்டும்?’ என்று யாராவது கேட்டால், `உயிர் ஏன் போக வேண்டும்?’ என்றே நான் அவர்களைத் திருப்பிக் கேட்பேன்.
ஒன்பது ஓட்டைக்குள்ளே ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு துளிக் காற்று ஒரு குறிப்பிட்ட தேதியில் வெளியேறுகிறது.
ஆக, அந்தத் தேதியை எவனோ நிர்ணயிக்கிறான் என்று தானே ஆகிறது.
அப்படித் தேதியை நிர்ணயிக்க ஒருவன் இருப்பானானால், மனித உயிருக்கு நீதியையும், அவன் நிர்ணயிப்பானல்லவா?
தவறு செய்தவர்கள் நரகத்திற்குப் போகும்படியும், நல்லது செய்தவர்கள் சொர்க்கத்திற்குப் போகும்படியும், அவன் நிர்ணயிக்கலாம் அல்லவா?
சொர்க்க-நரகத்தின் அமைப்பு, அதன் இருப்பிடம் பற்றி வேண்டுமானால் சர்ச்சை இருக்கலாம். ஆண்டவன் தான் நீதி வழங்குகிறான் என்பதில், விவாதத்துக்கே இடமில்லையே!
அவரவர்களின் கர்மாவுக்கு ஏற்றபடி நீதி வழங்கப்படுகிறது என்பதில் தவறில்லையே?
சிலரது மரணத்தையே நாம் பார்க்கிறோமே…
காந்தியை நேசித்த காமராஜ், காந்திஜீ பிறந்த நாளிலே மரணமடைந்தார்.
முருகனை நேசித்த சின்னப்பா தேவர், முருகனுக்கு உகந்த சஷ்டி நாளிலே காலமானார்.
இந்த இருவருமே சொர்க்கத்துக்குத்தான் போயிருப்பார்கள் என்பதை இவர்களது மரணமே சுட்டிக் காட்டுகிறதே!
படுக்கையில் நீண்ட நாட்கள் படுத்து அவதிப்படாதபடி, அந்தப் புண்ணிய மூர்த்திகளை இறைவன் வலி இல்லாமல் கொண்டு போயிருக்கிறான்.
`வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும்’ என்ற ஆசையை விட, `செத்தால் இப்படிச் சாக வேண்டும்’ என்ற எண்ணத்தையல்லவா இந்த மரணங்கள் உண்டாக்கி இருக்கின்றன!
ஒருவனது வாழ்நாளிலேயே மரணத்துக்குப் பின்பு அவன் எந்த நிலையை எய்துவான் என்பதை, இந்துக்கள் கண்டு பிடிக்கிறார்கள்.
சிலரைப் பார்த்து, `அட பாவி, நீ நரகத்திற்குத் தான் போவாய்!’ என்கிறார்கள்.
`புண்ணியவானுக்கு நல்ல கதி கிடைக்கும்!’ என்கிறார்கள், சிலரைப் பார்த்து.
இந்தக் கதி நிர்ணயம், அவர்களது வாழ்க்கையிலே அடங்கிக் கிடக்கிறது.
நான் அடிக்கடி சொல்வேனே ஒரு சாமியார் கதை, அது அப்படித்தான்!
இக வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கவே, பரலோகத்தைத் தீர்க்கதரிசிகள் காட்டினார்கள்.
`கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்றாலும், இந்துக்களின் அனுமானத்தில் இருந்து, அவர்கள் விரும்புகிற பண்பாடு புரிகிறது.
மனிதனை நேர்வழியில் நடக்கச் செய்வதே, அவர்களின் மூலாதார நோக்கம்.
ஆனால் மறுபிறவி என்பது நிச்சயமாக இருக்கிறது.
`ஒன்றை விரும்புகிறவன், அது நிறைவேறாமல் செத்தால், அதை நிறைவேற்றிக் கொள்ள மறுபடியும் பிறக்கிறான்’ என்கிறார்கள்.
தவறு செய்கிறவர்கள் இழி பிறப்பெடுத்ததாகக் கூறுகிறார்கள்.
இழி பிறப்பெடுத்த ஒருவன், அந்தப் பிறப்பில் தன்னுடைய கர்மாவை ஒழுங்காக நிறைவேற்றி விட்டால், அடுத்த பிறப்பில் உயர் பிறப்பெடுக்கிறான் என்கிறார்கள்.
இதிலே, நான் முதலில் கேள்வி கேட்டவாறு, ஒரே ஒரு ஐயப்பாடெழும்.
`ஒருவன் இறந்தபின் எவ்வளவு காலம் கழித்து மறு பிறப்பெடுக்கிறான்?’ என்பதே அது.
அது அவனுடைய ஆசையையும், கருமத்தையும் பொறுத்தது.
எனது சகோதரர் ஏ.எல்.எஸ். மறைந்த அதே நாளில் எனது மகள் கலைச்செல்விக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஜீவனின் மறு பிறப்பே இது என்றே நம்பிக்கை தோன்றுகிறது. சரியோ தவறோ, அப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எகிப்து நாட்டில் ஒரு விவசாயியைக் காதலித்த குற்றத்திற்காகக் கொலை செய்யப்பட்டாள் ஒரு பதினாறு வயது ராஜகுமாரி.
அவளை அடைத்திருந்த முதுமக்கள் தாழியை அண்மையிலே கண்டுபிடித்திருக்கிறார்கள்.
`ஆயிரம் வருஷம் கழித்து அவள் மறுபடியும், எகிப்து மன்னனைக் கட்டிக் கொண்டாள்’ என்றும், `அந்த விவசாயி தான் எகிப்து மன்னனாகப் பிறந்தான்’ என்றும் ஒருவர் எழுதியிருந்தார்.
இந்தக் கதைகள் உண்மையோ, பொய்யோ, ஜீவர்களைச் சிருஷ்டிக்கும் வேலையைச் சுலபமாக்கிக் கொள்ள ஆண்டவன் மறுபிறப்பை உண்டாக்கி இருக்கிறான் என்பதை நம்பலாம்.
ஆக, சொர்க்கம், நரகம், மறுபிறவி என்பதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தைகள் என்று கேலி பேசுவதை விட, வாழ்க்கைச் சாலையை ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் அற்புதங்கள் என்று ஏற்றுக் கொள்வதில் நியாயம் உண்டு.
`அது சரி, ஜீவன் தான் மறுபடி பிறக்கிறதே. மறுபடி பிறந்து அது பூமியில் தண்டனையை அனுபவிக்கப் போகிறதே, அதற்குச் சொர்க்கமும் நரகமும் எதற்கு’ என்ற கேள்வி எழும்.
பகவத் கீதைப்படி, உத்தராயணத்தில் செத்தவர்களுக்கு மட்டுமே பிறப்பு உண்டு. தட்சிணாயணத்தில் செத்தவர்களுக்கு இல்லை.
தட்சிணாயணத்தில் செத்தவர்கள் பாவம் செய்தவர்களாக இருந்தால், அவர்களைக் கொண்டு போய் வைக்க நரகமும், புண்ணியவான்களைக் கொண்டுபோய் வைக்கச் சொர்க்கமும் இருக்கின்றன.
`சொர்க்கத்தில் சுகபோகப் பிருந்தாவனம் இருக்கும்’ என்கிறார்கள்; `நரகத்தில் எண்ணெய்க் கொப்பறையும் செக்கும் இருக்கும்’ என்கிறார்கள். இவையெல்லாம் உண்மையா?
இவையெல்லாம் மனிதனின் கற்பனா வடிவங்கள்.
சொர்க்க-நரகம் என்பது இறைவனின் நீதிமுறை என்றே எனக்குப் புரிகிறது. ஆனால், அதன் அமைப்பை யாரும் பார்த்ததில்லை.
ஆவிகளின் உலகத்தில் ஏதோ ஒரு இருப்பிடம் இருக்கத் தானே செய்யும்? அதற்கொரு வடிவம் கற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
சினிமாக்காரர்கள் அரண்மனை செட் போடும்போது, அவரவர் மனோ தர்மத்திற்கேற்பப் போடுவது போல், சொர்க்க நரகத்தையும் பலர் கற்பனை செய்திருக்கிறார்கள்.
நீதிமன்றம் எப்படி இருக்கும் என்பது, நீதிமன்றத்துக்குப் போகும்வரை யாருக்கும் தெரியாது. எல்லோரும் போய்ப் பார்த்த பிறகுதான் தெரிந்து கொள்ள முடியும்.
தண்டனையோ பரிசோ எதுவானாலும் சரி, அவற்றில் இருந்து தப்ப இக வாழ்க்கையில், `சூதாடுவதையும், குடிப்பதையும், தாசி வீட்டுக்குப் போவதையும் பாவங்கள்’ என்று நான் கருதவில்லை. அவை மனிதன் தனக்குத்தானே விளைவித்துக் கொள்ளும் தீங்குகள்.
அடுத்தவனைக் கெடுப்பது, துரோகம் செய்வது, பிறன் மனை இச்சிப்பது போன்றவையே பாவங்கள் என்று இந்துப் புராணங்கள் கூறுகின்றன.
மாமிசம் உண்பதைக்கூட `மத விரோதம்’ என்று அவை கூறியதில்லை.
சடலத்தை தூக்கிச் செல்லும்போது, `ஐயோ! புண்ணியவான் போய்விட்டாரே!’ என்று பத்துப் பேர் சொன்னால், அந்த வார்த்தைகளே சொர்க்கத்தின் படிக்கட்டுகள்; `சண்டாளன் போய்விட்டான்’ என்றால் நரகத்தின் படிக்கட்டுக்கள்.
அந்த நல்ல பெயரையே மனிதன் தேடிக் கொள்ளவேண்டும்.
இந்துக்களின் வேதங்களும், புராணங்களும் அதையே வலியுறுத்துகின்றன.
இதோ, காஞ்சிப் பெரியவர் பேசுகிறார்:
`மற்ற மதங்களில் இல்லாத பல அம்சங்கள் நம் மதத்தில் இருக்கின்றன. அதில் கர்மக் கொள்கை (Karmattheory) என்று ஒன்று சொல்கிறார்கள்-நம் மதத்திலிருந்தே வந்த பெளத்தம் போன்ற மதங்கள் இதை ஒப்புக் கொண்டாலும், ஏனைய மதங்களில் இந்தக் கொள்கை இல்லை.
`கர்மா தியரி’ என்றால் என்ன?
எந்தச் செயலுக்கும் பிரதியாக ஒரு விளைவு உண்டு. Cause and Effect என்பதாகவும், Action and Reaction என்பதாகவும் இவை தவிர்க்க முடியாத விதிகளாக இருக்கின்றன என்றும் `ஃபிஸிக்ஸில்’ சொல்கிறார்கள். பெளதிகத்தில் சொல்வதையே மனுஷ்ய வாழ்க்கைக்கும் பொருத்தி கர்மக் கொள்கையை நம் ஆன்றோர்கள் கூறுகிறார்கள். பிரபஞ்சத்தில் ஜடமான பூதங்கள் போலவே சைதன்யம் என்ற அறிவுள்ள ஜீவர்களும் அடக்கம். இவை ஒன்று சேர்ந்தது தான் லோக வாழ்வு. எனவே ஒன்றுக்கு இருக்கும் நியதி, தர்மம் இன்னொன்றுக்கும் இருக்கத்தான் வேண்டும். மனிதனின் ஒவ்வொரு கர்மாவுக்கும் விளைவாக ஒரு பலன் உருவாக்கித்தான் தீர வேண்டும் என்பதே (Karmattheory) `பாவ கர்மம் செய்தால் அதற்கான தண்டனையை மனுஷ்யன் அனுபவிக்க வேண்டும். புண்ணிய கர்மம் செய்தால் அதற்கான நற்பலன் அவனை வந்தடையும்’ என்கிறது நம் மதம்.
இம் மாதிரிப் பாவ-புண்ணியக் கர்மங்களை மனிதன் அனுபவிக்க வேண்டும் என்பதாலேயே அவனுக்கும் பல பிறவிகள் உண்டாகின்றன என்கிறது நம் மதம். நல்லது செய்ய வேண்டும். கெட்டது செய்யக் கூடாது என்பதைச் சகல மதங்களும் சொன்னாலும், அவை நம் மதம் மாதிரி இத்தனை அழுத்தம் கொடுத்து, காரணம், விளைவு (Cause and Effect) தொடர்பைச் சொல்லவில்லை. மறு பிறப்புக் கொள்கையை (Reincornation Theory) மற்ற மதங்கள் – பாரத தேசத்தில் தோன்றாத மற்ற மதங்களில் எதுவுமே – சொல்லவில்லை. அது மட்டுமில்லை, இதற்கு மாறாகப் பல தினுசான கருத்துகளைச் சொல்கின்றன. ஆனபடியால், அந்த மதஸ்தர்கள் மனிதனுக்குக் கர்மா தீருகிறவரை பல ஜென்மங்கள் உண்டு என்ற நம் கொள்கையைப் பலமாக ஆட்சேபிப்பார்கள்.
பொதுவாக அந்நிய மதத்தவர் கருத்து என்னவென்றால், `இந்த ஒரே ஜென்மத்தோடு மனுஷ்யனுக்குப் பிறவி தீர்ந்து விடுகிறது. இந்த ஜென்மா முடிந்த பின் அவன் உயிர் என்றைக்கோ ஒரு நாள் ஸ்வாமி கூறுகிற தீர்ப்பைக் கேட்பதற்காக ஓரிடத்தில் போயிருக்கும்.
அந்த நாளில் (Judgement Day) ஸ்வாமி இவன் இந்தப் பிறவியில் செய்த பாவ – புண்ணியங்களைக் கணக்குப் பார்த்து இவனை நித்தய ஸ்வர்க்க வாசகத்துக்கோ அல்லது நிரந்தர நரக வாசகத்திற்கோ (Eternal Damnation)அனுப்பி விடுவார்’ என்பதாகும்.
என்னிடம் வந்த ஒரு வெள்ளைக்காரர் – இப்போதெல்லாம் தான் என்னிடம் நிறைய வெள்ளைக்காரர்கள் வந்தபடி இருக்கிறார்களே, அவர்களில் ஒருத்தர் – இவர் புத்தகம் கித்தகம் எழுதிப் பிரசித்தி பெற்றவர் – வேடிக்கையாகச் சொன்னார், அவருக்குப் பைபிளில் எங்கு பார்த்தாலும் கடவுள் அன்பே உருவானவர் (God is Love) என்று சொல்லிவிட்டு, இப்படிப் பட்டவர் ஒரு தப்புப் பண்ணியவனைத் துளிகூடக் கருணையில்லாமல், மீளவே வழியில்லாமல் நித்திய நரகத்துக்கு அனுப்புகிறார் என்று சொல்வது பொருத்தமில்லாமல் தோன்றியதாம். எனவே ஒரு பாதிரியாரிடம் சமாதானம் கேட்டாராம். அதற்குப் பாதிரியார் `நிரந்தரமாகக் காலியாகவே இருக்கிறது’ என்றாராம்.
ஆனால், யோசித்துப் பார்த்தால் இதை நாம் ஏற்றுக் கொள்வது சிரமமாய் இருக்கும். சுவாமி கருணை காரணமாகப் பாவியைக் கூட நரகத்துக்கு அனுப்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அவர்கள் சித்தாந்தப்படி அவர் பாவியின் உயிரை எங்கே அனுப்ப முடியும்? அவர்கள் கொள்கைப்படி மறு ஜென்மம் இல்லையாதலால் பூலோகத்துக்கு மறுபடி அனுப்ப முடியாது. அதனால் பாவியையும் ஸ்வர்க்கத்துக்குத் தான் அனுப்ப வேண்டியதாகும். அப்படியானால் நாம் லோகத்தில் எந்தப் பாவத்தை வேண்டுமானாலும், எத்தனைப் பாவங்கள் வேண்டுமானாலும் கூசாமல் செய்து கொண்டே போகலாம். முடிவில் எப்படியும் ஸ்வாமி நம்மை ஸ்வர்க்கத்துக்கு அனுப்பி விடுவார் என்று ஆகும். அதற்கப்புறம் லோகத்தில் சகலரும் ஒழுங்கு தப்பித்தான் நடப்பார்கள்.
நம் மதப்படியும் கர்ம பலனைத் தந்து தீர்ப்புத் தருகிற பலதாதாவான ஈஸ்வரன் பரம கருணாமூர்த்தி தான். ஆனால், அதற்காக லோகம் அதர்மத்தில் மனமறிந்து விழட்டும் என்று விடுகிறவன் அல்ல அவன்.
அதனால் என்ன பண்ணுகிறான்?
நம் பாவ பலனை (புண்ணிய பலனையும் தான்) அனுபவிப்பதற்காக நம்மை, இன்னொரு ஜென்மா கொடுத்து மறுபடி இந்த உலகுக்கே அனுப்பி வைக்கிறான். ஸ்வர்க்க ஆனந்தம், நரகக் கஷ்டம் இரண்டும் இந்த உலகத்திலேயே தான் இருக்கின்றன. நாம் கலந்தாங்கட்டியாகப் பாவம், புண்ணியம் இரண்டும் போன ஜென்மாவில் பண்ணியிருப்பதால் இப்போது கெட்டது நல்லது இரண்டையும் சேர்த்து அனுபவிக்கிறோம். ரொம்பப் பாவம் செய்தவர்கள் ரொம்பக் கஷ்டப்படுகிறோம். பொதுவிலே ரொம்பக் கஷ்டப்படுகிறவர்கள் அல்லது சமமாகக் கஷ்ட-சுகம் உள்ளவர்கள்தான் இருக்கிறோமே தவிர, தாங்கள் பரம சுகமாக இருப்பதாக நினைக்கிறவர்கள் ரொம்பவும் துர்லபமாகவே இருக்கிறார்கள். இதிலிருந்தே நாம் அனைவரும் பொதுவில் பாவமே அதிகம் பண்ணியிருக்கிறோம் என்பது புரிகிறது.
பகவான், கருணை காரணமாக, இன்னொரு ஜென்மாவிலிருந்து இவன் பாவத்தைக் கழுவிக் கொள்வானா என்று பார்ப்பதற்காக, ஒரு பெரிய வாய்ப்பாக (Opportunity) பிறவியைக் கொடுக்கிறார். அதிலே ஒரு சாஸ்திரம், க்ஷேத்திரங்கள், இத்தியாதி வசதிகளை எல்லாம் கொடுத்து இவனுடைய அழுக்கைத் துடைக்க முன் வருகிறார். `இவன் கையாலாகதவன், ஒரு நாளும் தானாக முன்னேற மாட்டான்’ என்று அடியோடு உதவாக்கரையாக நினைத்து இவனுக்குப் பாவியானாலும் கூட ஸ்வர்க்கத்தைக் கொடுத்து விடுகிறார் என்பதைவிட, இப்படி இவனைக் கூட நம்பி, உடன் தன்னைத் தானே கடைத்தேற்றிக் கொள்வான் என்று நம்பிக்கை வைத்துப் புனர் ஜென்மா தந்து, இதில் இவனுடைய தன் முயற்சிகளுக்குப் பல விதத்தில் கை கொடுக்க ஸ்வாமி முன் வருவதாகச் சொல்வது நன்றாக இருக்கிறது; பொருத்தமாக இருக்கிறது. அதுதான் பரம கருணையாகவும் இருக்கிறது. `எனக்கென்று முயற்சி என்ன இருக்கிறது; எல்லாம் உன் செயல்’ என்று ஜீவன் சரணாகதி செய்கிற போது ஸ்வாமியே இவனை ஒரே தூக்காகத் தூக்கி விடுகிறார் என்பது வாஸ்தவம். ஆனால், இவனாக முயற்சியை விடுகிற சரணாகதியில் அனுக்கிரகம் செய்வது வேறு; இவனுக்கு முயற்சி செய்யவே லாயக்கில்லை என்று நினைத்து அனுக்கிரகம் செய்வது வேறுதான். புருஷ லட்சணம் என்று ஒன்று இருப்பதாக நினைக்கிற வரையில் அதில் ஜீவனை நம்பி விட்டு வைப்பதுதான் பரம கருணை. அதுதான் நிஜமான அனுக்கிரகம்.
நிரந்தர நரகத்திற்கு ஸ்வாமி எவரையும் அனுப்புவதில்லை என்பது ஒரு தனிப்பட்ட பாதிரியாரின் அபிப்பிராயம் தான். அதுவேதான் கிறிஸ்துவம் முதலான `ஒரே பிறவி’ மதங்களின் கோட்பாடு என்று சொல்வதற்கில்லை. ஒரே ஜென்மத்தில் ஒருத்தன் பண்ணுகிற புண்ணியத்திற்காக அல்லது பாவத்திற்காக அவனை ஸ்வாமி ஸ்வர்க்கம் அல்லது நரகத்திற்கு நிரந்தரமாக அனுப்பி விடுகிறார் என்பதுதான் அம் மதங்களின் பொதுக் கருத்து! அதிலும் நாம் பொதுவாகப் பாவமே பண்ணுவதால் நரக தண்டனை பெறுகிறவர்கள் தான் ஜாஸ்தியாக இருப்பார்கள் என்பதால் தீர்ப்பு நாளைக்கே ரொம்பவும் பயங்கரமான பெயர் – Dooms dayஎன்றே வைத்திருக்கிறார்கள். இது பகவானின் கருணைக்குக் குறைவாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
நம் மதத்தின் புனர் ஜென்மக் கொள்கைக்கு ஆதரவாக ஒன்றை அழுத்தமாகக் காட்டலாம்.
வெள்ளைக்காரி ஒருத்தி என்னிடம் வந்து இந்த (Reincornation) விஷயத்துக்கு நிரூபணம் (Proof) கேட்டாள். நான் அவளிடம் வாதம் ஒன்றும் செய்யவில்லை. அப்போது மடத்து முகாமில் ஒரு பண்டிதர் இருந்தார். அவருக்கு இங்கிலீஷும் வரும். அவரிடம் அவளை அங்கே உள்ள பிரசவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு போய், அங்கே பிறந்திருக்கிற குழந்தைகளைப் பற்றிய விவரங்களைக் குறிப்பெடுத்துக் கொண்டுவரும்படி சொன்னேன். அவளும் அப்படியே பிரசவ ஆஸ்பத்திரிக்கு அவரோடு போய்விட்டு வந்து குழந்தைகளைப் பற்றிய குறிப்புகளைச் சொன்னாள். அதன்படி ஒரு குழந்தை கொழு கொழுவென்று இருந்தது. இன்னொன்று அவலட்சணமாக இருந்தது. ஒன்று உசத்தியான `வார்டில்’ செளகரியமாகப் பிறந்தது. இன்னொன்று சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு நடுவே ஒரு பரம ஏழைப் பெண்ணுக்குப் பிறந்தது.
`ஜென்மாவின் கடைசியில் பகவான் ஒருத்தரை நிரந்தரமாக நரகத்துக்கு அனுப்புவது ஒரு பக்கம் இருக்கட்டும்; அது நமக்கு கண்ணுக்குத் தெரியாத விஷயம்; இப்போது பல ஜென்மங்களில் ஆரம்பத்தைப் பிரசவ ஆஸ்பத்திரியில் பிரத்யட்சமாகப் பார்த்தாயே இதிலே ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகள்? ஏன் ஒன்று தரித்திரியத்திலும், இன்னொன்று சம்பத்திலும் பிறக்க வேண்டும்? ஏன் ஒன்று ஆரோக்கியமாகவும், இன்னொன்று அவலட்சணமாகவும் இருக்க வேண்டும்?
ஜீவனுக்கு ஒரே ஒரு ஜென்மா தான் உண்டு என்ற உங்கள் மதக் கொள்கையை ஒப்புக் கொண்டால் அவை ஜனிக்கிற போதே இத்தனை பாரபட்சங்கள் இருப்பதைப் பார்க்கிற போது ஸ்வாமி கொஞ்சங்கூடக் கருணை இல்லாது, புத்திசாலித்தனம் இல்லாமல் மனம் போனபடி கன்னா பின்னா என்று காரியம் செய்து கொண்டிருக்கிறார் என்று தானே ஆகிறது? அப்படிப்பட்ட ஸ்வாமி கருணை செய்வார் என்று நம்பி எப்படிப் பக்தி செலுத்துவது? பூர்வ ஜென்மப் பாப-புண்ணியங்களை ஒட்டிப் புனர்ஜென்மா அமைகிறது என்ற கொள்கையைத் தவிர, நீ பார்த்த ஏற்றத் தாழ்வுக்கு என்ன காரணம் சொல்ல முடியும்?’ என்று கேட்டேன்.
அவள் ரொம்பச் சந்தோஷத்தோடு நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு போனாள்.
ஆனால், நவீன காலத்தவர்களுக்கு இந்த விளக்கங்கள் (Explanations) போதாது. ஸயன்ஸ்படி ப்ரூப் கேட்பார்கள். அப்படிப் பார்த்தாலும் இப்போது `பாரா ஸைகாலஜி’க்காரர்கள் இந்த விஷயத்தில் நிறைய ஆராய்ச்சி பண்ணி, ஜன்மாந்தரங்கள் உண்டு என்பதற்கு ஆதரவாக அநேக விஷயங்களைச் சொல்கிறார்கள்.
உலகம் முழுக்க இவர்கள் சுற்றி வந்ததில் எத்தனையோ இடங்களில் பூர்வ ஜென்மத்தில் இப்போதைய இடத்துக்குத் துளிகூடச் சம்பந்தமேயில்லாமல் வேறு எங்கேயோ இருக்கப் பட்ட தூர தேசங்களில் தாங்கள் பார்த்தவற்றை நினைவாகச் சொல்கிற பல பேர் இருக்கிறார்கள். அந்த விவரங்களை எல்லாம் மறக்காமல் சொல்கிறார்கள்.
இவர்கள் சொல்வது உண்மைதானா என்று பரிசோதித்துப் பார்ப்பதற்காக `பாராஸைகாலஜி’க்காரர்கள் அந்தந்த ஊர்களுக்குப் போயிருக்கிறார்கள். போனால் அங்கே ஆச்சரியப்படுகிற மாதிரி இவர்கள் சொன்ன அடையாளங்களை, இவர்கள் பூர்வத்தில் சம்பந்தப்பட்டிருந்த மனுஷ்யர்களைப் பார்க்கிறார்கள். இது மாதிரி ஒன்று, இரண்டு அல்ல – ஏகப்பட்ட கேஸ்கள் இருக்கின்றன.
நமக்கெல்லாம் முற் பிறவி சமாசாரங்கள் அடியோடு மறந்து போய் விட்டன. ஆனால், வெகு சிலருக்கு நினைவு இருக்கிறது. அநேகமாக இப்படிப்பட்டவர்கள் பூர்வ ஜென்மத்தில் இயற்கையாகச் செத்துப் போகாமல்(Natural Death) அதாவது நோய் நொடி வந்து செத்துப் போகாமல், கொலை செய்யப்பட்டவனாகவோ, அல்லது திடீரென்று ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டு அப்போதே மரணமடைந்தவர்களாகவோ இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்….’
-
குரு-சிஷ்ய பாவம் கவியரசு கண்ணதாசன்
பண்டைய குருகுல முறைகள் இப்போது மறைந்து விட்டன.
குரு – சிஷ்ய பாவம் மறைந்து விட்டது.
ஆங்கிலக் கல்வியின் பெயரால் கல்லூரிகள் வெறும் பட்டதாரிகளையோ, காலிக் கும்பல்களையோ உற்பத்தி செய்கின்றன.
வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கத்தை இன்றையக் கல்வி போதிக்கவில்லை.
ஐந்து வருஷம் பட்டப் படிப்புப் படித்தாலும் பயனில்லாத ஒரு கல்வியையே நாம் கட்டிக்கொண்டு மாரடிக்கிறோம்.
ஒழுங்கீனமே கல்லூரியின் பிரதான அம்சமாகக் காட்சியளிக்கிறது.
சில கல்லூரிகளுக்குள் எல்.எஸ்.டி. மாத்திரைகளும், விஸ்கி பாட்டில்களும், கஞ்சாவும் தாராளமாக நடமாடுகின்றன.
அண்மையில் சென்னையில் மிகப் பிரபலமான டாக்டர் ஒருவரிடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் வந்தார். தொடையில் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமையில் அவர் இருந்தார்.
அந்த டாக்டர் மருத்துவக் கல்லூரியோடு தொடர்புள்ளவர். அவருக்கு அந்தப் பெண்ணைப் பற்றித் தெரியும்.
`என்னம்மா, ஆபரேஷன் செய்யலாமா? இல்லை, ஒரு பெதடின் போட்டுக் கொள்கிறாயா?’ என்று கேட்டார்.
`பெதடினே போடுங்கள், போதும்!’ என்று கெஞ்சினார் அந்த இள நங்கை.
டாக்டர் ஆபரேஷனும் செய்யவில்லை; பெதடினும் போடவில்லை; அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார்.
இன்று கல்வியின் தரமும் கெட்டு, மாணவர்களின் ஒழுக்கமும் பாழ்பட்டு விட்டது.
ஆனால், அந்நாளில் இந்துக்கள் ஒரு வகையான குருகுலப் பயிற்சியை வைத்திருந்தார்கள்.
ராம கதையில் வரும் ராமனும், இலக்குவனும் குரு குலத்தில் பயின்றவர்கள்.
மகாபாரதத்தில் வரும் பீமனும், அர்ஜூனனும் குருகுலவாசிகள்.
இந்துப் புராணப் பாத்திரங்கள் அனைத்துமே குருகுலப் பயிற்சியில் வளர்ந்தவையே.
அதிருஷ்டவசமாக நானும் நான்கு ஆண்டுகள் குருகுல வாசம் செய்தவன்.
`குரு வாழ்க, குருவே துணை’ என்ற சுலோகத்தைச் சொன்னவன்.
நான் பயின்ற அமராவதி புதூர் குருகுலத்தில், அதிகாலை ஐந்து மணிக்கு மாணவர்களை எழுப்பி விடுவார்கள்.
வகுப்பு வாரியாக மாணவர்கள் வரிசையில் அணிவகுத்து, வகுப்பு மானிட்டரின் தலைமையில் பின் பக்கத்துக் காட்டுக்குச் செல்வோம். அங்கே கலைந்து சென்று காலைக் கடன்களை முடிப்போம்.
பிறகு மீண்டும் வரிசையாக நின்று தியான மண்டபத்துக்குத் திரும்புவோம். அங்கே நான்தான் `பிரேயர்’ பாட்டுப் பாடுவேன். மற்றும் சில மாணவர்கள் இரண்டொரு பாடல்கள் பாடுவார்கள்.
பிறகு கலைந்து சென்று எல்லோரும் கிணறுகளில் தண்ணீர் சேந்திக் குளிப்போம்.
சாப்பாட்டு விடுதியில் வரிசையாக அமர்ந்ததும், காலைப் பலகாரம் பரிமாறப்படும், அங்கேயும் சில கோஷங்கள் உண்டு.
அவற்றிலே கடைசி இரண்டு கோஷம், `காந்தியடிகள் வாழ்க! குருகுலம் நீடூழி வாழ்க!’ என முடியும்.
அந்தக் கோஷம் முடிந்த பிறகுதான் எல்லோரும் சாப்பிடத் துவங்குவோம்.
சாப்பிட்டு முடிந்ததும் வகுப்புத் துவக்கத்துக்கான மணியோசை கேட்கும்.
வகுப்புகளுக்குள் நுழைவோம்.
பள்ளிப் பாடங்களுக்கிடையிலேயே தேச பக்தியையும், தெய்வ பக்தியையும், புகட்டுவார்கள். அன்றாடச் செய்திகளையும் சொல்வார்கள்.
மாலையில் விளையாட்டு; இரவிலே மீண்டும் தியானம்; படுக்கை.
காம்பவுண்டுச் சுவரைத் தாண்டி யாரும் வெளியே போக முடியாது.
எல்லோருக்கும் வரிசை நம்பர் உண்டு. நம்பரைச் சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.
என்னுடைய நம்பர் 498, `முத்து’ என்பது என் பெயர்.
பாரதியின் கிளிப்பாட்டுகளை நான் அதிகம் பாடுவேன். அதனால் எனக்குக் `கிளிமுத்து’ என்று பட்டம்.
உடம்பு இளைத்திருந்தால், `மீன் எண்ணெய்’ கொடுப்பார்கள்.
ஓர் அழகான நூல் நிலையம் உண்டு.
சிறிய இரசாயனக் கூடம் உண்டு.
நான் பெரும்பாலும் நூல் நிலையத்தில் தான் காணப்படுவேன்.
இசை வகுப்புத் தொடங்கினார்கள்; அதில் நானும் சேர்ந்தேன்.
காலை நான்கு மணிக்கே எழுந்து பாடல் கற்றுக் கொள்ள வேண்டும்.
`சிதம்பர நாதா திருவருள் தாதா’ என்பதே நான் கற்றுக் கொண்ட முதற் பாட்டு.
வித்வான் படிப்பு ஆரம்பித்தார்கள்; அதிலும் நான் ஒரு மாணவன்.
பத்துக்குப் பத்துச் சதுர அடியுள்ள நிலத்தை ஒவ்வொரு மாணவனுக்கும் கொடுப்பார்கள். அதில் அவனுடைய விவசாயத் திறமையைப் பார்ப்பார்கள்.
ஆளுக்கு ஒரு கன்றுக்குட்டி கொடுப்பார்கள். அதில் மாணவனுடைய கால்நடைப் பராமரிப்புத் திறமையைப் பார்ப்பார்கள்.
உள்ளேயே ஏராளமான கைத்தறிகள் உண்டு. மாணவன் அங்கே போய்த் தறி நெய்யக் கற்றுக் கொள்ளலாம்.
நான் அடிக்கடி அதில் தான் கவனம் செலுத்துவேன்.
ஒருநாள் ஒரு முழு வேட்டியையே நெய்து விட்டேன்.
நாங்கள் நெசவு செய்த வேட்டியைத்தான் நாங்கள் கட்டிக் கொள்வோம்.
சில தொழில் நெசவாளர்களும் அமர்த்தப்பட்டிருந்தார்கள். அதனால் வெளியில் துணி வாங்குவதே இல்லை.
வெளியிலே சுதந்திரப் போராட்டம் நடந்தது. உள்ளுக்குள்ளே அந்தக் கனலைக் குருகுலம் மூட்டிற்று.
1939 இல் இந்தி படிக்கும் பிரச்சினை எழுந்தது. குருகுலத்தில் இந்தி வகுப்பு ஆரம்பமாயிற்று. அன்றைக்கு நிர்வாகியாக இருந்த சுப்பிரமணிய நைனார் தான் இன்றும் இருக்கிறார்.
இந்தக் குருகுலம் போட்ட அடிப்படையில் தான் இன்றும் நான் உலாவிக் கொண்டிருக்கிறேன்.
அந்தக் குரு-சிஷ்ய பாவம், நாட்பட மறைந்து கொண்டே வருகிறது.
வாலாஜாபாத் இந்துமதப் பாடசாலையும், அமராவதி புதூர் சுப்பிரமணியம் செட்டியார் குருகுலமும் போன்ற சில மட்டுமே இன்னும் அதைக் கட்டிக் காத்துக் கொண்டு வருகின்றன.
வியாசர், வசிஷ்டர், விசுவாமித்திரர், துரோணர் போன்ற மகாத்மாக்கள் உற்பத்தி செய்த சீடர்களால் தான் இந்து மதம் செழித்துத் தழைத்தோங்கியது.
அந்தத் தத்துவ ஞான பீடத்தை கான்வென்ட் படிப்பு நிறுவ முடியாது.
பி.ஏ. படிப்பும், பி.எஸ்.சி. படிப்பும் மனிதனுடைய தார்மிக ஒழுக்கத்துக்குச் சம்பந்தமே இல்லாதவை.
குரு-சிஷ்ய பாவத்துக்குத் திரும்பினாலொழிய சராசரி வாழ்க்கையில் இனி நிம்மதி இருக்காது.
ஆசிரியரைக் கல்லால் அடிப்பது, அவதூறு பொழிந்து நோட்டீஸ் போடுவது, கல்லூரி மாணவியைக் கடற் கரையில் சந்திப்பது இவையெல்லாம் நாகரிகம் விளைவித்த கேடுகள்.
குரு-சிஷ்ய பாவத்தில் உடம்பும் உள்ளமும் பேணிக்காக்கப்பட்டன.
தேச பக்தியும், தெய்வ பக்தியும் சேர்ந்து ஊட்டப்பட்டன.
ஐந்து வயதில் இருந்தே தர்மம் தொடங்கியது.
அதனால் தான் மனிதனின் இல்லறம் கூட நல்லறமாக அமைந்தது.
வள்ளுவனுக்கு வாசுகியும், ராமனுக்குச் சீதையும், கோவலனுக்குக் கண்ணகியும் கிடைத்தார்கள்.
இன்றையப் போலி நாகரிகம் கணவன் மனைவியைக் கோர்ட்டிலே கொண்டு வந்து நிறுத்துகிறது.
சினிமா நடிகை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும், முதற் கணவனுக்கு நஷ்ட ஈடு கொடுத்ததும், குழந்தைக்கு ஜீவனாம்சம் கொடுத்ததும் செய்திகளாகின்றன.
சந்திர மண்டலமல்ல; சூரிய மண்டலத்திற்கே மனிதன் போகட்டும். பழங்காலங்களில் இந்துக்கள் வகுத்த அடிப்படைத் தர்மங்களைக் கடைப் பிடித்தால் தான், அவன் நிம்மதியாக வாழ முடியும்.
அவற்றில் ஒன்றுதான் குரு-சிஷ்ய பாவம்.
இன்று எந்த மாணவன் ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்குகிறான்? தன் கால் செருப்பையல்லவா அவர் மீது வீசுகிறான்!
இவன் படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன? நவாபுகள் படையெடுப்பினாலும், ஆங்கிலப் படிப்பினாலும் நமது பாரம்பரிய தர்மம் நசிந்து விட்டது.
அதைக் காப்பாற்றுவதற்குப் பணம் படைத்தோர் செய்ய வேண்டிய முதற்காரியம், பழைய பாணியில் குரு குலங்களை ஆரம்பிப்பதே.
-
இச்சா பத்தியம்
யோகப் பயிற்சிகளில் ஒரு வகையான பயிற்சி உண்டு. உடல் வலிமையுள்ள ஒரு ஆடவன், தனியான ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் பக்கத்தில் படுத்திருந்தாலும், அவளைத் தொடாமலேயே இருக்கும் பயிற்சி அது.
`இல்லறத்தில் பிரம்மசரியம்’ என்று இதனைக் காந்தியடிகள் விவரித்தார்கள்.
இப்போது அமெரிக்காவில் இந்து ஞானிகளைச் சுற்றிலும் அமெரிக்கர்கள் கூட்டமே அதிகமாக இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும்.
அங்கே ஒரு இந்து ஞானி, ஒரு யோகப் பயிற்சியைத் தொடங்கி வைத்திருப்பதாக `டைம்’ பத்திரிகையில் படித்தேன். அதன் புகைப்படத்தையும் அதில் பார்த்தேன்.
ஆறு ஆண்களும் ஆறு பெண்களுமாகப் பன்னிரண்டு பேர் நிர்வாணமாக நிற்கிறார்கள். அவர்கள் ஒரு வட்டவடிவத்தில் நின்று கொள்கிறார்கள். அதிலும் ஒரு ஏரியில் இடுப்பளவு தண்ணீரில் நிற்கிறார்கள். ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக் கொள்கிறார்கள். எல்லோருடைய அங்கங்களும் திறந்திருக்கின்றன. இந்த நிலையில் ஒருவர் மீது மற்றவருக்கு ஆசை ஏற்படாதவாறு பயிற்சி செய்கிறார்கள்.
நான் பல இடங்களில் குறிப்பிட்டது போல, `இயக்கத்தில் இயலாமை’, `இருந்தும் இல்லாமை’, `கிடைத்தும் ஏற்றுக் கொள்ளாமை’ என்பது இதுவே.
இதை யோகாசனம், என்பதைவிட `மோகாசனம்’ என்பது பொருந்தும்.
மனிதனது உணர்ச்சிகளில் சீக்கிரம் தூண்டப்படக்கூடியது. `பாலுணர்வு’ ஒன்றே.
பசியும் ஒரு உணர்ச்சிதான்; அதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
மனிதனுடைய தன்னடக்கத்தை மீறி எந்த உணர்ச்சியும் எழுந்து விடுவதில்லை.
ஆனால், காமம் எந்த மேதையையும் முட்டாளாக்கிக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கும்.
கிடைக்காத பெண்ணுக்கே ஏங்குகின்ற உலகத்தில், கிடைத்து விட்ட பெண்ணை அனுபவிக்காமல் இருக்கப் பயிற்சி பெற வேண்டும்.
அதன் பெயரே, `இல்லறத்தில் பிரம்மசரியம்!’
சித்தர்கள் இதனை, `இச்சா பத்தியம்’ என்பார்கள்.
காந்தியடிகள் பிற்காலங்களில் அப்படி வாழ்ந்து காட்டினார்.
அவருக்கு முன்னால் பரமஹம்சர் வாழ்ந்து காட்டினார்.
செயலற்ற நிலையில் பலவீனமான மனிதன், `நான் என் மனைவியைச் சகோதரியாகப் பாவிக்கிறேன்’ என்றால், அது `திராணி’ இல்லாததால் வந்த தத்துவம்.
உடல் கெடாமல் உள்ளத்தில் உணர்ச்சி மேலோங்கிய நிலையில், அந்த அடக்கம் தோன்றிவிடுமானால், அதுவே ஆன்மாவைப் புடம் போட்ட
ஞானம்.தேகம் ஆன்மாவை வென்றுவிடும். தறிகெட்டு ஓடும்.
ஆன்மா அதை வெல்ல முடியுமானால் அதுவே அற்புதமான யோகம்.
விவேகானந்தரைப் போன்ற இளம் துறவிகளை இன்னும் இந்து மதத்தில் காண்கிறோம். கிறிஸ்துவ மதத்திலும் அப்படிப்பட்ட சகோதரர் கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் மனத்தால் உடம்பை அடக்கியவர்கள்.
அடக்க முடியாமல் கெட்டுப்போய் ஞானிகளானவர்கள் எல்லாம், `உடம்பு என்னை ஆட்டிப் படைக் கிறதே’ என்றுதான்
எழுதியிருக்கிறார்கள்.எனக்குத் தெரிந்தவரை தமிழகத்தில் இருந்த பிரம்மசாரிகளில் மிக முக்கியமானவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். பெண் வாடையே இல்லாமல் வாழ்ந்தவர் அவர்.
உடம்பின் சுக்கிலத்தை உடம்புக்குள்ளேயே வைத்திருந்து மீண்டும் ரத்தத்திலேயே கலந்து விடுமாறு செய்யும் யோகத்தை அவர்
மேற்கொண்டிருந்தார்.அவரது உடம்பின் பளபளப்புக்குக் காரணம் அது தான் என்று சொல்வார்கள்.
ஆனால், அப்படிப்பட்ட நைஷ்டிக பிரம்மசாரிகள் நீண்ட நாள் வாழ்வதில்லை.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை இல்லறத்தில் வாழ்ந்த பிறகு, அனுபவித்த மனைவியையே சகோதரியாகப் பாவிக்கும் பாவனையையே நான், `இச்சா பத்தியம்’ என்று குறிப்பிடுகிறேன்.
காம உணர்ச்சி ஒருவனுக்கு இல்லாவிட்டாலும் கூட, அவனுடைய உணவு முறையின் மூலம் தூக்கம் பிடிக்காத நிலை ஒன்று ஏற்படும். விபரீத சிந்தனைகள் தோன்றும்.
அதனால் தான் இந்துக்கள், `தனியாக இருக்கும் ஆடவர்கள் குப்புறப் படுக்கக் கூடாது’ என்றும், `பெண்கள் மல்லாந்து படுக்கக்கூடாது’ என்றும் கூறுவார்கள்.
இதனை அறிந்துள்ள எந்த இந்துப் பெண்ணுமே மல்லாந்து படுப்பதில்லை. ஒருக்கணித்துதான் படுப்பாள்.
இந்துமதத்தின் சாது சந்நியாசிகள் அந்நாளில் தலைக்குத் தலையணை வைக்கக்கூடாது என்ற விதி இருந்தது.
சாதாரணமாகச் செதுக்கப்பட்ட மரக்கட்டையைத்தான் தலைக்கு வைத்துக் கொண்டு படுப்பார்கள்.
ஒரு வகை மரத்தில் செய்யப்பட்ட கட்டையைத்தான் செருப்பாகப் பயன்படுத்துவார்கள். மெத்தென்ற தோல் செருப்பு அணிய மாட்டார்கள்.ராமகிருஷ்ண பரமஹம்சரும், காந்தியடிகளும் உணவைக் குறைத்ததற்குக் காரணமே, `இல்லறத்தில் பிரமசரிய’த்தை அனுஷ்டிப்பதற்குத்தான்.
இதைக் காந்தியடிகளே ஒரு முறை கூறி இருக்கிறார்.
ஒரு முறை பரமஹம்சரின் சீடர்கள் அவரைப் பார்ப்பதற்காக அவர் தங்கும் இடத்திற்கு வந்தார்கள்.
அப்பொழுது நள்ளிரவு.
பகவான் தேவியாரோடு உள்ளே இருந்தார். `ஐயோ! இந்த நேரத்தில் வந்து விட்டோமே, அவரது சந்தோஷத்தைக் கெடுத்து விட்டோமே’ என்று அந்த இளம் உள்ளங்கள் பயந்தன.
அவர்களுடைய நினைப்பு, பகவான் தேவியாரோடு சல்லாபித்துக் கொண்டிருப்பதாக.
திடீரென்று வெளியே வந்தார் பரமஹம்சர். அவர்கள் சொல்லாமலே அவர்களது பயத்தை உணர்ந்தார்.
மெல்லச் சிரித்துக் கொண்டே, `நான் தேவியின் அருகே இருந்தாலும் தெய்வத்தின் அருகில் தான் இருக்கிறேன்’ என்றார்.
சீடர்களுக்குக் குளிர் விட்டதுபோல் இருந்தது.
காம லயத்தை விட்டு விட்டவனுக்கு மரத்தைத் தொடுவதும், மனைவியைத் தொடுவதும் ஒன்றுதான்.
`துறவு’ என்பதற்கே `நிர்வாணம்’ என்று பெயர்.
ஒரு பெண்ணின் நிர்வாணத்தில் கூட அவன் தெய்வீகத்தையே காணுகிறான்.
கண்ணகி கற்புக்கரசி என்றார்கள்; அதில் அவளுக்கென்ன புதுப் பெருமை?
அவள் கற்போடு இருந்து தீர வேண்டிய குலமகள்.
மதுரையை அவள் எரித்ததை வேண்டுமானால், `மறக்கற்பு’ என்று கூறலாம்.
ஆனால், மாதவி கற்போடு இருந்தாளே, அதுதான் பெருமை.
மாதவி வீட்டுக்குப் பத்துப்பேர் வந்துபோனால் அதைப்பற்றி யாரும் பேசப் போவதில்லை. அவள் அதற்கென்றே நிர்ணயிக்கப்பட்டவள்.
வசதி இருந்தும், நியாயம் இருந்தும், அதை அவள் பயன்படுத்திக் கொள்ளாமல் கற்போடு வாழ்ந்தாள்.
அதைப் போன்றதுதான் இல்லறத்தில் பிரம்மசரியம்.
கெட்டுப் போய் ஞானிகள் ஆனவர்கள், பெண்களைக் கேவலமாகத் திட்டி இருக்கிறார்கள்.
`நாற்றச் சரீரம்’ என்றும், `ஊத்தைச் சரீரம்’ என்றும் `மலசலம் நிறைந்த மண்பாண்டம்’ என்றும், `ஆறாத புண்’ என்றும், `வெட்டுண்ட காயம்’ என்றும் அவர்கள் பலவாறாகப் பெண்களை ஏசி இருக்கிறார்கள்.
இவையெல்லாம் செயலற்ற காலத்துத் தரிசனங்கள்.
அவர்கள் உடம்பு நன்றாக இருந்தபோது, `குவளை மலர்’ என்றும், `முல்லைமலர்’ என்றும், பெண்ணை, அவர்களே தான் வருணித்திருக்கிறார்கள்.ஞானிகள் நிலை அதுவல்ல.
உடம்பு நன்றாக இருக்கும் போதே உள்ளத்தில் தோன்றும் ஒளி, காம லயத்தில் இருந்து அவர்களைப் பிரித்து விடுகிறது.
சுவேதகேதுவின் காலத்திலிருந்து, பல வகையான ஞானிகள், இதை ஒரு பயிற்சியாக மேற்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட காலம்வரை, பிள்ளைப் பேறுக்காகவே மனைவியோடு உடலுறவு வைத்திருக்கிறார்கள்.
காம வயப்பட்ட மனிதர்கள் உடலுறவு கொள்ளும் போது சில விநாடிகளிலேயே உடல் தளர்ந்து விடும்.
ஆனால், மனதைப் புடம் போட்டவர்கள் உடலுறவு கொள்ளும் போது, மனைவி எவ்வளவு நேரம் மகிழ்ச்சியை எதிர்பார்க்கிறாளோ, அவ்வளவு நேரம் நீடிக்கும்.
காரணம் அவர்களிடம் வெறி உணர்வு இல்லை.
பொற்கொல்லர்கள் சங்கிலி செய்வது போலவும், விவசாயிகள் ஏரோட்டுவது போலவும், கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் கடமை புரிவதினால் கால வரம்பு நீடிக்கிறது. அதிலே மிருகத்தனம் இல்லை; தெய்விகம் இருக்கிறது. காமம் இல்லை; யோகம் இருக்கிறது. வெறும் விளையாட்டு இல்லை; ஒரு தவம் நடக்கிறது. பற்றற்ற கருமமாகவே அது பாவிக்கப்படுகிறது.
சிட்டுக் குருவியைப்போல், அந்தி பகல் எந்நேரமும் அதையே நினைத்துக் கொண்டிருப்பவன், அந்தச் சிந்தனையினாலேயே பலம் இழந்து விடுகிறான்.
உடம்பு செயலாற்றுவதால் ஏற்படும் உஷ்ணத்தைவிட சிந்தனையினால் ஏற்படும் உஷ்ணம் பத்து மடங்கு அதிகம்.
அதுவும் காமச் சிந்தனையாக இருந்தால், அந்தப் பத்து மடங்கு உஷ்ணமும் உடனே ஏறிவிடுகிறது.
அதன் பிறகு அவன் செயலாற்றத் தொடங்கும் போது மனைவியின் கண்ணுக்கே நபும்சகனாகக் காட்சியளிக்கிறான்.
அதனால்தான் இந்துக்கள், தியான முறையைக் கையாண்டார்கள்.
ஈஸ்வர தியானத்தினால் உடம்பில் உள்ள உஷ்ணம் இறங்கி விடுகிறது.
மனத்தின் சிந்தனைப் போக்கு உணர்ச்சி வயப்படாத ஒன்றில் ஐக்கியமாவதால், உடம்பு சம சீதோஷ்ணத்துக்கு வந்து விடுகிறது.
இல்லறத்தில் பிரம்மசரியம் தொடங்கிய பிறகே காந்தியடிகளும், பரமஹம்சரும் தத்துவ ஞானிகள் ஆனார்கள்.
இது பற்றிக் காந்தியடிகள் கூட விரிவாகக் கூறியிருக்கிறார்.
-
உண்ணாவிரதம்
உலகத்தில் அதிகம் சாப்பிட்டுச் செத்தவர்கள் உண்டே தவிர, குறைத்துச் சாப்பிட்டு மாண்டவர்கள் குறைவு.
ஒரு மகாராஜா சாப்பாட்டில் ஆழாக்கு நெய் ஊற்றிக் கொள்வார். ஆட்டுத் தலை தான் அதிகம் சாப்பிடுவார். கொழுப்புச் சத்துக்களை மிக அதிமாகச் சேர்த்துக் கொள்வார். ஆனால், வருஷத்தில் ஒரு மாதம் லங்கணம்!
உடம்பில் உள்ள கொழுப்பை இறக்குவதற்கு, அந்த ஒரு மாதத்தைப் பயன்படுத்திக் கொள்வார்.
இரண்டு பேர் தினமும் ஒருவகை எண்ணெய் போட்டு உடம்பைத் தேய்ப்பார்கள். இரண்டு வேளை உணவு. இரண்டு வேளையும் அரைக்கிலோ வெங்காயம் சாப்பிடுவார்கள்.
வெங்காயத்திற்கு இரண்டு குணங்கள் உண்டு: கொழுப்பைக் கரைக்கும். காம இச்சையைத் தூண்டும்.
அதனால் தான் நெய்யும், சர்க்கரையும் அதிகம் சாப்பிடுகிற பிராமணர், வெங்காயச் சாம்பார் சேர்த்துக் கொள்கிறார்கள்.
விதவைகள் வெங்காயம் சேர்ப்பதில்லை.
காஞ்சிப் பெரியவர்கள் ஒரு பிடி அவலிலும், பாலிலுமே காலம் கடத்துகிறார்.
வாரியார் சுவாமிகளும் அப்படியே.
மலையில் வாழ்ந்த சித்தர்கள், சமையல் செய்தா சாப்பிட்டார்கள்? காய், கனி, கிழங்கு கந்த மூலங்களோடு சரி.
இந்துக்கள் வாரத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
நான் சொன்ன மகாராஜாவைப் போல முஸ்லிம்கள் வருஷத்தில் ஒரு மாதம் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
இந்துக்களில் சிலர் திங்கட்கிழமை `சோமவார’ விரதம்; சிலர் செவ்வாய் விரதம்; சிலர் சனிக் கிழமை விரதம்; அது போல மாதங்களும் உண்டு. அது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
சிலர் ஆடி மாதம் முழுக்க மாமிசம் சாப்பிட மாட்டார்கள். சிலர் புரட்டாசி.
என்னுடைய சுவீகாரத் தாயார், கார்த்திகை விரதி.
உணவு செரிமானத்தை ஒழுங்கு படுத்துவதே உண்ணா விரதத்தின் நோக்கம்.
இது இறைவன் பெயரால் வழங்கப்படும் தேக ஆரோக்கியம்.
தெய்வ பக்தியோடு இந்துக்கள் ஆரோக்கியத்தைக் கலந்தார்கள்; காந்தியடிகள் தேச பக்தியும் கலந்தார்.
உண்ணாவிரதத்தை ஒரு ஆயுதமாக்கி, தேச பக்திக்கு அதைப் பயன்படுத்தினார்.
தன்னை வருத்திக் கொள்ளும் அந்த முறையின் மூலம் அந்நிய அதிகார வர்க்கத்தை அவர் நடுங்க வைத்தார்.
அவரது தேக ஆரோக்கியத்திற்கும் கூட, அவர் மேற்கொண்ட உண்ணா விரதங்கள் பயன்பட்டன.
மகாகவி பாரதியார் சொல்வது போல் நிறையச் சாப்பிடக் கூடாது என்பதும் தவறு; நிறையச் சாப்பிட வேண்டும் என்பதும் தவறு. அளவறிந்து சாப்பிட வேண்டும்.
இப்போதெல்லாம் டாக்டர்கள் வாயுத் தொல்லை உள்ளவர்களுக்கு ஒரு யோசனை சொல்கிறார்கள். அதாவது `இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தரம் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்’ என்று. `வயிறு காலியாகக் கிடப்பதால் தான் வாயு உற்பத்தியாகிறது’ என்கிறார்கள்!
அது ஓரளவுதான் உண்மை.
வாயுவில் மூன்று வகை உண்டு.
ஒன்று காலியான வயிற்றில் உண்டாவது. மற்றொன்று உஷ்ண வாயு. இன்னொன்று பதார்த்த வாயு.
உஷ்ணமில்லாத உடம்பில், உண்ணா விரதத்தினால் வாயு உண்டாவதில்லை.
எப்போதுமே உண்ணாவிரதம் உடம்பை உற்சாகமாக வைத்திருக்கும்.
அது வரம்பு மீறிப் பசி பட்டினி என்று போகும் போது தான் களைப்புத் தோன்றும்.
இப்படி நான் சொல்வது, உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு மட்டுமே.
நல்ல உழைப்பாளிகள் சாதத்தை மலையாகக் குவித்து அதிலே ஒரு குளம் வெட்டிச் சாம்பார் ஊற்றி நீச்சலடிக்கிறார்கள். அவர்களுக்கும் தொந்தி விழுகிறது. ஆனால் அந்தத் தொந்தி ஒரு பெரிய யானையையே தாங்கும்.
நாம் எங்கே உழைக்கிறோம்…?
நான் கூடச் சாப்பாடு குறைகிறதே என்று வருத்தப்படுவது உண்டு. இப்போது முப்பது பவுண்டு இளைத்துவிட்டேன். உடம்பு இளைக்கிறதே தவிர, களைக்கவில்லை.
நடமாடும் சக்தி பலவீனப்படாமல் இருக்கும் அளவுக்கே உணவு.
ஆசையிலும், பசியிலும் சில நாட்கள் அதிகம் சாப்பிட்டு விட்டால், அதைச் சமன் செய்யவே உண்ணாவிரதம்.
தெய்வ பக்தியுள்ள எந்த இந்துவுக்கும் இந்த விரதம் உண்டு.
இந்துக்களில் அதிகமான பேர் கைக்கொள்வது முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம்.
இது மாதத்தில் இரண்டு நாள் வரும்.
எனது உயிருக்கு உயிரான புரவலர் திரு.சின்னப்பா தேவர், இந்த சஷ்டி விரதத்தை நாற்பது வருஷங்களாகக் கடைப்பிடித்தார்.
அதே சஷ்டியில், வைசாகத்தில், வெள்ளிக்கிழமையில் அவர் மரணம் அடைந்தார்.
வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டியைவிடப் பிரதானமானது.
பக்தியுள்ள இந்துக்கள் ஒரு மாதத்தில் நான்கு வெள்ளி, இரண்டு சஷ்டி- ஆக ஆறு நாட்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இது மாதத்தில் ஐந்தில் ஒரு பங்கு.
உடம்பு பலவீனம் அடையாமலும், அதே நேரத்தில் உடம்பு ஏறாமலும் இது காப்பாற்றுகிறது.
இன்னும் சில அதிசய இந்துக்கள் உண்டு. அவர்கள் ஒரு மாதம் முழுக்க உப்புச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
சிலர் நெய் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
உடம்பில் உப்போ, கொழுப்போ சேராமல் காப்பாற்ற எவ்வளவு அற்புதமான வழி!
இந்துமதம் ஆரோக்கியத்தையும், பக்தியையும் ஒன்றாக இணைத்தது.
`உடம்பு கெட்டுப் போனால் ஞானம் கை கூடாது’ என்று அது கருதிற்று.
அதனால் தான் மருந்து மாத்திரைகள் இல்லாத காலத்திலேயே, நமது யோகிகளின் உடம்பு புடம் போட்டு எடுக்கப்பட்டது போலிருந்தது.
அவர்கள் படிக்கட்டில் ஏறினால் மூச்சு வாங்காது.
தண்ணீரில் நடந்து ஜலஸ்தம்பம் செய்வார்கள்.
காற்றைப்போல் துறுதுறுவென்று அலைந்தார்கள்.
`உண்ணா நோன்பு’ என்பது ஒரு தவம்.
சிறு வயதில் இருந்தே அதை ஒரு பயிற்சியாகக் கொள்ள வேண்டும்.
முப்பது வயதுவரை கண்டதைத் தின்று விட்டால் வாய்வுத் தொல்லை வரும்.
அதன் பிறகு உண்ணாவிரதம் இருந்தால் வாய்வு அதிகமாகும்.
இளம் பருவத்தில் இருந்தே இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
நான் படித்த குருகுலத்தில் உண்ணாவிரதம் இல்லையே தவிர, உணவு முறையில் ஒழுங்கிருந்தது.
புதன் கிழமையும், சனிக்கிழமையும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, மாதம் ஒரு முறை பேதிக்குச் சாப்பிடுவது. அன்று காலைப் பலகாரம் கிடையாது; அங்கே எண்ணெய்ப் பலகாரங்கள் போட மாட்டார்கள்.
காலைப் பலகாரத்தையும், இரவுச் சாப்பாட்டையும் அளந்து தான் கொடுப்பார்கள்.
பசி உயிர் போனாலும் அந்த விரதத்தில் ஒரு ஆரோக்கியம் இருந்தது.
வாரத்தில் ஒருநாள் உண்ணாவிரதப் பயிற்சி, ஞானம் பெறுவதற்கான வழிகளில் ஒன்று.
-
ஞானத்தைத் தேடி… மவுனம்-கவியரசு கண்ணதாசன்
காற்றுக்கு இலைகள் அசைகின்றன; மலர்கள் அசைகின்றன; கொடிகள் அசைகின்றன; மரங்கள் கூட அசைகின்றன; ஆனால் மலைகள் அசைவதில்லை!
அசைவது பலவீனத்தைக் காட்டுகிறது; அசையாதது உறுதியைக் காட்டுகிறது.
சளசளவென்று பேசுகிறவன், எவ்வளவு பெரிய கெட்டிக்காரனாக இருந்தாலும், சொற்பொழிவாளனாக இருந்தாலும், தன் பலவீனத்தைக் காட்டிக் கொள்கிறான்.
மவுனி முட்டாளாக இருந்தாலும் பலசாலியாகக் காணப்படுகிறான்.
`சும்மா இருப்பதே சுகம்’ என்றார்கள்.
பேசாமல் இருப்பது பெரும் திறமை. பேசும் திறமையைவிட அது மிகப் பெரியது. அதனால் தான் ஞானிகளும் பெரிய மேதைகளும் குறிப்பிட்ட சில காலங்களில் மவுன விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று விரும்பி, அதைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்துகிறவன் பெரிய மரியாதையைப் பெற்று விடுகிறான்.
சிறிய விஷயத்தைக்கூட வளைத்து வளைத்துப் பேசுகிறவன், கேலிக்கு ஆளாகிறான்.
பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவனை, `மக்கட்பதடி’ என்றான் வள்ளுவன்.
`சுருங்கக் கூறி விளங்க வைத்தல்’ என்பார்கள்.
ஞானிகள் சில விஷயங்களைக் கூறுகிறார்கள். அவை பொன் மொழிகளாகி விடுகின்றன.
பைத்தியக்காரர்கள் பதினாயிரம் பேசுகிறார்கள். அவை சீந்துவாரில்லாமல் போகின்றன.
மவுனம் ஒரு மகத்தான ஞானம். அது தெய்விகக் கலை.
ஒரு குடும்பம். கணவன்-மனைவி இருவர். கணவனுக்கு மனைவியிடம் கோபம், ஆனால் அதை வெளியில் சொல்லவில்லை. மனைவியிடம் பேசாமலேயே இருக் கிறான். அவன் அவளைத் திட்டி இருந்தால், அது சாதாரணமாகவே போயிருக்கும். அவன் பேசாமல் இருப்பதே அவளைச் சித்திரவதை செய்கிறது.
`அவன் பேச மாட்டானா, பேச மாட்டானா?’ என்று எதிர்பார்க்கிறாள். `இரவில் நிச்சயமாகப் பேசுவான்’ என்று நம்புகிறாள்; தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறாள்.
`நான் என்ன தப்புப் பண்ணினேன்?’ என்று மெதுவாகக் கேட்கிறாள்.
நள்ளிரவில் பக்கத்தில் வந்து உட்காருகிறாள். காலைப்பிடித்து விடுகிறாள். அவன் மவுனம் கலையவில்லை.
அவன் மவுனம் தொடரத் தொடர, அவள் தாகம் அதிகரிக்கிறது.
திடீரென்று ஒரு வார்த்தை அவன் பேசி விட்டான். அவளுக்குத் தெய்வமே கண் திறந்தது போன்று தோன்றுகிறது.
`இன்றைக்கு நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம்!’ என்று ஊர் முழுக்கச் சொல்லிக் கொண்டு வந்து விடுகிறாள்.
பத்து வார்த்தை திட்டி, நாலு உதை உதைப்பதைவிட, அந்த மவுனம் மகத்தான சக்தியைப் பெற்றுவிடுகிறது.
கோயிலில் இருக்கின்ற சிலை, வருகின்ற பக்தனிடமெல்லாம் பேசத் தொடங்குமானால், பக்தனுக்கே அலுப்புத் தட்டிவிடும்.
`கோயிலுக்குப் போனால் அந்தச் சாமி நம்மை விடாதய்யா! உயிரை வாங்கிவிடும்!’ என்று பேசத் தலைப்பட்டு விடுவான்.
அது மவுனமாக இருக்க இருக்க, பக்தன் தான் பேசுகிறான்; பாடுகிறான்; புலம்புகிறான்.
ஆரவாரங்கள் வெறும் மயக் கங்கள்.
அரசியல்வாதியின் கூச்சல், வேறு வேலை இல்லாதவனின் புலம்பல்.
தொண்டைத் தண்ணீரைக் காய வைப்பதில் என்ன லாபம்?
`இவர் கொஞ்சம் பேசமாட்டாரா?’ என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.
பேசத் தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க வேண்டும்.
கடலில் ஆழமான பகுதியில் அலை இருக்காது.
வெறும் பொட்டல் வெளியில் வீடு கட்டிப் பாருங்கள்; பயங்கரக் காற்றடிக்கும்.
வெண்மேகம் போகின்ற வேகத்தைவிட, கார்மேகத்தின் வேகம் குறைவு.
நாய் ஓடுவதைவிட, யானை நடப்பதில் வேகம் அதிகம்.
சலனமற்ற மவுனம், பல அர்த்தங்கள் கொண்டது.
பிரஞ்சு மொழியில் ஒரு வார்த்தைக்கு ஒரே அர்த்தம் உண்டு. ஆங்கில வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் வரும். தமிழ் வார்த்தையில் நாலைந்து அர்த்தங்கள் வரும். ஆனால், மவுனத்தில் எல்லையற்ற அர்த்தங்கள் உண்டு.
பேசாமல் இருப்பவனே, பெரிய விஷயத்தைச் சொல்பவன்.
பேசிக்கொண்டிருப்பவன் ஞானக் கிறுக்கன்.
ஏராளமான வரிகளைக் கொண்ட இலக்கியங்களைவிட, ஏழு வார்த்தைகளில் அடங்கிவிட்ட திருக்குறள், உலகத்தைக் கவர்ந்து விட்டது. காலங்கள் தோறும் துணைக்கு வருகிறது. நிலையான தத்துவத்தைச் சொல்கிறது.
எனது நண்பர் ஒருவர் வாரத்தில் ஒரு நாள் மவுன விரதம்; ஒரு நாள் உண்ணாவிரதம். வயது அறுபதைத் தாண்டுகிறது; ஒரு மாத்திரை கூட அவர் போட்டுக் கொண்டதில்லை.
ஆரோக்கியத்திற்கும் மவுனம் மிக அவசியம்.
தவம் புரிகின்றவன் `ஓம் நமசிவாய’ என்ற வார்த்தையைக் கூடச் சொல்வதில்லை.
மவுனமாக இருப்பவனுக்கு ஆகாரம் குறைவாக இருந்தால் கூடப் போதும்.
அதிகம் பேசுவதால் அடி வயிறு சூடாகிறது. தீனி அதிகம் கேட்கிறது. அதன் மூலம் உடம்பு பெருத்து விடுகிறது.
வாரியார் சுவாமிகள் சாதாரணமான நேரங்களில் பேசுவது குறைவு. சொற்பொழிவுகளிலும் அலட்டிக் கொள்ளாமல் பேசுவார். அந்த இரண்டு மணி நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் இரண்டொரு வார்த்தைகள் தான் பேசுவார். அதனால், ஒருவேளைச் சாப்பாடே அவருக்குப் போதுமானதாக இருக்கிறது. குரல் கணீர் என்று கம்பீரமாக ஒலிக்கிறது. நோயற்ற வாழ்வுக்கு அவர் இலக்கணமாகிறார்.
காஞ்சிப் பெரியவர்கள் பேசுவது குறைவு; அதனால் உண்பதும் குறைவு. இந்த வயதிலும் எங்கேயும் நடந்து செல்ல அவரால் முடிகிறது.
சில மனிதர்கள் ஆளைப் பிடித்தால் விடமாட்டார்கள்; அறுத்து எடுத்து விடுவார்கள்.
சிலர் ஒலிபெருக்கியைப் பிடித்தால் விடமாட்டார்கள்.
குடிப்பவர்கள் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள்.
மதுவையும், மங்கையையும் கூட மவுனமாக ரசிப்பதில் உள்ள சுகம், சளசளவென்று பேசுவதில் இல்லை.
நிறையப் பேசுகிறவன், தன் வார்த்தைகளாலேயே காட்டிக் கொடுக்கப்படுகிறான். அவனைக் கண்டாலே பலரும் ஓட ஆரம்பிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட அறுவைகளிடம் இருந்து தப்புவதற்காகவே சித்தர் களும், முக்தர்களும் மலையிலே தங்கிக் கொண்டார்கள்.
காதலில் கூட ஜாடையில் இருக்கின்ற சுகம், வாய் மொழியில் இல்லை.
மனிதர்களைவிட, பல மிருகங்களுக்கு அதிக வயது.
அவற்றை விட மரங்களுக்கு அதிக வயது.
அவற்றை விட மலைகளுக்கு அதிக வயது.
காரணம், அவை பேசாமலும், அதிர்ச்சி அடையாமலும் இருப்பதே.
மவுனத்தின் சக்தியை உணர்ந்துதான் இந்துக்கள் தவம் புரிந்தார்கள்; நிஷ்டையில் அமர்ந்தார்கள்; மவுன விரதம் மேற்கொண்டார்கள்.
நீண்ட நாள் பேசாமல் இருப்பது என்பது, ஒருவகை நிர்விகல்ப சமாதி; அதை மேற்கொண்டவன் ஞானத்தைத் தேடினால் அது கிடைக்கும்.
-
மரணத்தை வெல்லும் யோகம்
எப்பொழுதுமே தன்னை உணர்ந்து கொண்டு விட்ட மனிதன், மரணத்தில் இருந்து விடுதலை பெற்று விடுகிறான்.
அவன் செத்துவிட்டான் என்று சொன்னால், `அவன் உடம்பு தான் செத்துவிட்டது, ஆன்மா சாகவில்லை’ என்பது பொருள்.
`என்னையே எனக்குக் கொடு’ என்னும் தத்துவத்தில் ஆன்மாவே உணரப்படுகிறது. அதற்குள் இருக்கும் ஈஸ்வரன் அறியப்படுகிறான்.
துயரங்கள் தோன்றாமல் சிரித்துக் கொண்டே அவன் மரணமடைந்து விடுகிறான். அதாவது, அவன் உடம்பு அழிந்து விடுகிறது.
இந்த ஆன்ம யோகத்தை மிக ஆழமாக நமது சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் சிந்தித்தார்கள்.
இமய மலையில் குடி புகுந்தவன், மாத்திரை வாங்குவதற்காக டாக்டரைப் பார்த்ததுண்டா?
ஆன்மாவை உணர்ந்து கொண்டவன், பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?
அவனுக்குச் சொல்வதற்குத்தான் பிறரிடம் என்ன இருக்கிறது?
இப்போது நான் சொல்லப் போவது, மரணத்தை வெல்லும் யோகம் பற்றிய `கடோப நிஷதம்’ ஆகும்.
கவுதமரின் குமாரர் வசிஸ்ரவர்; அவரது குமாரன் நசிகேதன்.
அவர் தன்னிடம் இருந்த எல்லாப் பொருள் களையும் தானம் செய்தார்.
அவரது குமாரன் நசிகேதனுக்கும், `தன்னை, தந்தை யாருக்குத் தானம் செய்வார்?’ என்ற கேள்வி எழுந்தது.
`தனக்கு வயதான பின் தானம் செய்வதில் பொருளிருக்க முடியாது. கடைசி முறையாகத் தண்ணீர் குடித்துப் புல்லைத் தின்று மலடாகி விட்ட கிழட்டுப் பசுக்களைத் தானம் செய்வதில் என்ன யோகம் இருக்க முடியும்? இந்த ஒன்பது வயதிலேயே, தானும் தானம் செய்யப்பட வேண்டும்!’ என்று நசிகேதன் கருதுகிறான்.
`தந்தையே! என்னை யாருக்குத் தானம் செய்யப் போகிறீர்?’ – தந்தையைக் கேட்கிறான்.
அவர் பேசாமல் இருக்கிறார்.
அவன் மீண்டும், மீண்டும் கேட்கிறான்.
அவர் கோபத்தோடு, `உன்னை யமனுக்குத் தானம் செய்யப் போகிறேன்’ என்கிறார்.
நசிகேதன் யோசிக்கிறான்:
`தன்னைப் பெற்றுக் கொள்வதால் யமனுக்கு என்ன லாபம்? நான் யமனிடம் போவதென்றால், பலருக்கு முன்னால் போகப் போகிறேன். அல்லது சிலருக்கு நடுவில் செல்லப் போகிறேன். என்னை அடைவதன் மூலம் யமன் செய்யப் போவது என்ன இருக்கிறது?’
அவன் ஏதேதோ யோசிக்கிறான்.
`தந்தையே! நம் முன்னோர்கள் நடந்து வந்த விதத்தைக் கவனியுங்கள். தானியங்களைப் போல மனிதன் அழிகிறான்; தானியங்களைப் போலவே மீண்டும் பிறக்கிறான். நானும் போய் வருகிறேன்’ என்று கூறிப் புறப்படுகிறான்.
நசிகேதன் ஸ்தூலத்துடனேயே யம தர்மனைப் பார்க்கப் புறப்படுகிறான்.
தானியங்களை உதாரணம் காட்டியதில், அவன் ஒரு அர்த்தத்தைக் குறிப்பிடுகிறான்.
`ஒரு தானியத்தின் ஆயுள் காலம் எவ்வளவோ, அவ்வளவுதான் மனிதனின் ஆயுட்காலம்’ என்பது அவனது நம்பிக்கை.
வாழ்வு இவ்வளவு சிறியதாக இருக்கும் போது, அதில் ஆசை வைப்பானேன்?
காம, குரோத, லோபங்களில் சிக்குவானேன்?
தந்தையிடம் சொல்லுகிறான், தன் புறப்பாட்டை.
தந்தையும், அவன் யமனைப் பார்க்கப் போவதை அனுமதிக்கிறார்.
யமனைத் தேடி நசிகேதன் சென்ற போது, யம தர்மன் வீட்டில் இல்லை. அதனால் மூன்று நாட்கள் அவன் அங்கே தங்க நேரிடுகிறது.
மூன்று நாளும் நசிகேதன் உண்ணாவிரதம் இருக்கிறான்.
மூன்றாவது நாள், யம தர்மன் வருகிறான்.
ஒரு பிராமணச் சீடன் தனக்காக மூன்று நாட்கள் விரதம் இருப்பதைப் பார்த்து, யமன் சொன்னான்:
`ஏ அதிதியே! பிராமணா! என் வீட்டில் நீர் மூன்று இரவுகள் உணவருந்தாமல் கழித்து விட்டீர். அதற்குப் பதிலாக மூன்று வரங்களை உங்களுக்குத் தருகிறேன். என்னென்ன தேவை என்று நீங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு என் வணக்கம். உமக்கு நன்மை உண்டாகட்டும்.’
உடனே நசிகேதன் மூன்று வரங்களைக் கேட்கிறான்.
முதல் இரண்டு வரங்களும், நசிகேதனின் தந்தையைப் பற்றியதும், சொர்க்கத்தைப் பற்றியதுமாகும். அதில் ஒன்று, அக்னி யாகம். அதற்காகக் கற்கள் பதித்த ஒரு தங்கச் சங்கிலியை யமன் தருகிறான்.
அது யம தர்மனின் முத்திரை.
மூன்றாவது கேள்வி தான் சிக்கலானது.
`யமதர்ம ராஜரே! ஒரு மனிதன் இறந்த பிறகு, `அவன் இருக்கிறான்’ என்று சிலர் சொல்லுகிறார்கள்; `இல்லை’ என்று சிலர் கூறுகிறார்கள். `உண்மை எது?’. அவன் இருக்கிறானா இல்லையா? இந்தச் சந்தேகம் வெகு நாட்களாக இருக்கிறது. இதை எனக்கு நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்.’
இந்த இருபதாவது ஸ்லோகத்துக்கு விளக்கம் சொல்லும்போது, சுவாமி சின்மயானந்தா அவர்கள் கீழ்க்கண்டவாறு சொல்லுகிறார்கள்:
`உபநிஷத ரிஷிகள் பெருமையே பெருமை! கதாநாயகனுடைய சித்திரத்தைச் சொல்லாத வார்த்தைகளிலேயே எவ்வளவு திறமையாக அமைக்கிறார்கள்! இது ஷேக்ஸ்பியரின் கற்பனைகூடச் செய்ய முடியாத ஒன்றாகும்! அந்த அமர ரிஷிகளுக்கு நம் வணக்கம் நிறைந்த வாழ்த்துக்கள் உரியனவாகுக.’
`நாம் முன்னால் பார்த்தோம்; இலட்சிய (ஆன்ம வித்தை) மாணவனாக நசிகேதன் மனவமைதியையும் இன்பத்தையும் வேண்டி, முதல் வரத்தைத் தீர்த்தான். இரண்டாவது வரத்தை மனித சமுதாயம் ஆசி பெற அர்ப்பணித்தான்; இப்பொழுது கடைசி வரம் என்ற பொழுது தான் தன் நலத்தைப் பற்றி நினைக்கிறான். தன் பெரிய சந்தேகங்கள் ஒன்றைத் தீர்த்து வைக்குமாறு கேட்கிறான்.
தியாகம் வேண்டும். தனக்குரியவர் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ளவருக்கு நன்மை புரிந்து, அவர்கள் நன்மையைத் தன் ஆன்ம விடுதலையை விட முதலில் எண்ணுமளவுக்குத் தன்னுள்ளே, `தயை’ வேண்டும். உண்மையான ஆன்ம முன்னேற்றம் தேடுபவன், உண்மையைத் தேடிச் செல்லும் யாத்திரையில் முழு வெற்றியையும் பெற வேண்டும் என்றால், அவனுக்கு இன்றியமையாத முக்கிய குணம் வேண்டும். இது, இன்று பக்தர்கள் வர்க்கத்தில் மெதுவாக வந்து செறிந்து நிற்கின்ற நம்பிக்கைக்கு நேர்மாறானது தான். தப்பிதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அந்தத் தப்பான அர்த்தத்தில் தான் அவர்கள் சங்கடங்கள் தங்கும் குளவிக் கூடும் அமைகிறது.’
`மதத்தைப் பின்பற்றுவது நன்மைக்கமைந்த, சமுதாய அல்லது சமூக வாழ்க்கைக்கு இடையூறு அல்ல; இடையூறாக இருக்கவும் முடியாது. ஆன்மீக வாழ்வு விழைபவன் ஊமையாகவும், செவிடாகவும் இருத்தல் வேண்டும் என்பதில்லை.
அவனுக்குத் தன்னைச் சுற்றியுள்ள மக்கள் உலகின் தேவைகளும், துயர்களும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவன் தேடித் தன்னுள்ளே ஓர் அன்பையும், பிறர் துயருக்கு அழுது கரைகின்ற உள்ளப் பொறையையும் பெற வேண்டும். தன் உறவினர், தன் தலைமுறை மக்கள் இவர்களுடைய உள்ளங்களுடன் தன் உள்ளத்தைப் பொருத்தி அறியும் ஆற்றல் இல்லாத ஒருவனுக்கு உண்மையின் கோயிலுக்குள் தூய்மையுள் தூய்மையான அந்த நிலையை அடையத் தகுதி கிடையாது.’
`இந்தச் சுலோகத்திலிருந்து உபநிஷதம் என்பது ஆரம்பிக்கிறது. இதுவரை செய்ததெல்லாம், ஒரு பக்குவமடைந்த ஜீவனைப் பூரண தகுதி வாய்ந்த ஆசாரியரின் எதிரே கொண்டு வருவதற்கான நாடக இயல் நிறைந்த ஒரு சந்தர்ப்பத்தைக் காட்டி அமைப்பதற்கான முயற்சிதான்.’
`அந்த பிராமணச் சிறுவன் எழுப்பிய சந்தேகம், அவன் `சாஸ்திரப் பண்பாட்டை’யும் அவனது `தன் வளர்ச்சி’யையும் காட்டித் தருகிறது. எப்பொழுதும் இந்திரியங்கங்களையே தேடித் திரியும் மிருக மனிதன், வாழ்க்கையைப் பற்றி முழுதாக எண்ணி, ஆழ்ந்த ஒரு முனைப்பட்ட இவ்விதமான சந்தேகத்தைக் கொள்ள முடியாது. அவன் அதற்காகவும் சமநிலையும், புத்தித் திறனும் கொண்டிருப்பது மிகவும் அபூர்வமே!’
`ஆகா! வாழ்க்கையில் கண்ணீர் வரவழைக்கும் இச்சம்பவம் இருக்கிறதே, சாவு என்ற ஒன்று, அதனுடைய பயங்கர அழகின் சுழலில் விழுந்து தத்தளிக்கிற சிந்தனையாளர்கள் எவ்வளவோ; இன்றும் கூடச் சாவு எல்லா நிலைகளிலும், எல்லாப் பகுதிகளிலும் உள்ள எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஆசிரியர்கள், தத்துவவாதிகள் எல்லோரையுமே தன்பால் ஈர்க்கும் ஓர் அழகிய கருத்துத்தான். ஆனால் இந்தக் கம்பீரமான பிரச்னையைத் தீர்க்கும் அளவுக்கு அறிவாற்றல் உள்ளவர்கள் வருவது மிகவும் குறைவே என்றும் நாம் பார்க்கிறோம்.
ஆனால், முனிவர்கள் தம் அமைதியில் அவர்கள் அறியவும் உணரவுமாகத் தம் கருவிகளை நன்கு தயார் செய்து கொண்டார்கள். பரநிலையான அந்த மேலேயுள்ள உத்தம நிலைக்கு உயர்ந்தார்கள். அமைதியாகக் கவனித்து, விஞ்ஞான முறையில் அலசி ஆராய்ந்து, இந்த அற்புதமான சாவு எப்படி ஏன் என்கின்ற கேள்விக்கு முடிவையும் உண்மையாகக் கண்டுபிடித்தார் கள்.’
`இந்தியத் தத்துவ விசாரணையாளர்களையே எடுத்துக் கொண்டாலும், அவர்களிடையே சாதாரணமாக நிகழக்கூடியதாக இருந்தாலும், விசித்திரமான சாவைப் பற்றி முரணானதும், தம்மையே தாம் மீறுகின்றதுமான முடிவுகளைக் காண்கிறோம். நசிகேதனே இந்தச் சுலோகத்தில் அதைத்தான் சொல்லுகிறான்.
சாவே முடிவு; அதற்கப்பால் சூனியத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று நிலைநாட்டிய விசாரணையாளர்களில் சில வர்க்கங்கள் இருக்கின்றன. மாறுபட்ட சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள், `அது உண்மையல்ல. சாவுக் குழிக்குப் பின்னும் வாழ்வு இருக்கிறது,’ என்று வாதம் புரிந்து நிலை நிறுத்தவும் செய்கிறார்கள்’.
`சாவுக்குப் பின் வாழ்வு உண்டா? இல்லையா?’ என்ற கேள்வி, மனதும் புத்தியும் புகழக்கூடிய பிரதேசத்திற்குரிய ஒன்றன்று. நம் எல்லைக்கு அப்பால் ஒரு ஞான உலகம் பரவியிருக்கிறது என்பது உண்மை. உணர்ச்சி தரும் மனதும், சிந்தனை புரியும் புத்தியும் மிக மிக முயன்றாலும், அந்த உலகத்தைக் குறித்துக் கையை நீட்டி விரலைக் காட்டித் தெளிவற்ற சில வழிகளை மட்டுமே காட்ட முடியும். அந்தச் சுத்த அறிவின் தேசத்துக்குப் போக வேண்டுமே! சாதாரண மனிதனிடம் அதற்குத் தக்க வாகனம் கிடையாது! அவன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் சரி; உணர்ச்சிப் பிழம்பாக இருந்தாலும் சரியே. துறவு, ஞானம் இவ்விரண்டின் சீமான்கள் தான் அந்த சகஜ ஆற்றல் பெற்றிருப்பார்கள். அவர்கள் தம் விருப்பப்படி ஒருவனை அந்த `அப்பாலுள்ள’ தேசத்துக்கு அழைத்துச் செல்ல முடியும்.
`சுருங்கக் கூறினால், இப்படிப்பட்ட அப்பாலுக்கு அப்பாலைப் பற்றிய கேள்விகள், வார்த்தைகளாலே விளக்கப்பட முடியாதவை. நமக்குத் தெரிந்த சாதாரணமான நேர் அறிவு, அனுமானம், ஒத்திட்டு அறிதல் முதலிய எந்த அறிவும் நிரூபணத்தின் மூலமும் காட்டி நிலை நாட்டிவிட முடியாதவை. அவற்றை அணுகித் தீர்க்க ஒரே முறைதான் உண்டு. `ஆகமம்’ மூலம் தான் அது முடியும். ஆன்ம அறிவு கைவந்த மகான்கள் தந்த ஞானச் சொற்களைத்தான் `ஆகமம்’ என்கிறோம். அந்த ஞான சீலர்களைச் `சாது’க்கள் என்றும் `முனிவர்கள்’ என்றும் சொல்கிறோம்.’
`ஆகவே தான் நசிகேதன் யமனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான். அவர் தர்மங்களுக்கெல்லாம் அரசரல்லவா! அதனால் தான் அவரிடம் இந்தக்கேள்வியைக் கேட்டதில் நியாயம் இருக் கிறது.’
`முக்கியமாகப் புத்தரைப் பின்பற்றும் சூனியவாதிகளும், இந்துக்களிடையே உலகாயதவாதிகளான சர்வாகர்களுமே, `முடிவு ஒரு சூனியமே’ என்று முடிவு செய்கிறவர்கள்.’
உலகாயதவாதிகள் வாதம் இதுதான்: `உடல்தான் எல்லாம். உயிர் என்பதை கை, கால்கள் முதலிய அங்கங்களைச் சேர்ப்பதால், தானே ஏற்படும் ஓர் அற்புதமே!’
`அவர்கள் வாதத்தில், உயிர்க்கும் இந்த உயிரின் இனிய வெம்மை, உடலின் இன்ப துன்பங்களுக்கு இறைவனாக நிற்கும் அந்தத் தெய்வ சக்தியல்ல. ஆனால், அது தானாகச் சேர்க்கையின் பொழுது ஏற்பட்ட ஒரு சினைப் பொருள். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து மென்றால் ஒரு செந்நிறம் தனித்துத் தானாக நேர்கிறதல்லவா? அந்த மாதிரி அந்த நிறம், இந்தத் தனித்தனி ஒன்றிலுமே இல்லையே! அதேபோல அவர்கள் கட்சி, உடலின் அங்கங்களைச் சேர்த்தால், அதாவது இயற்கை அவ்விதம் சேர்க்கும் பொழுது உயிர் தோன்றுகிறது! அப்படிப் பேசுகிற குழுவினருக்குச் சாவு என்பது உடல் மறைவு; உயிரின் சூன்யம் அவ்வளவுதான். சூனியத்திலிருந்து உயிர் வெளியாகிறது; கொஞ்ச நேரத்திற்கு நிச்சயமற்ற சில ஆட்டங்கள் போடுகிறது; பிறகு சூனியத்திலே மறைந்து விடுகிறது.’
`பகுத்துச் சிந்திக்கும் ஒருவனுக்கு அந்தத் தத்துவம் தகர டப்பாச் சத்தம் என்று தெரியும். சூனியத்திலிருந்து ஒன்றும் ஆகாது. அதற்குள் ஒன்றும் மறையவும் முடியாது – மீண்டும் சூனியமாக!’
`புத்த மதத்தைச் சேர்ந்த சூனியவாதிகளின் கட்சி வாதங்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் சொல்வதையே அவர்கள் வாதம் கண்டிக்கிறது. இதை நாம் வெகு சுலபத்தில் புரிந்து கொள்ளலாம். பரம உண்மை என்பது நிர்வாணம் அல்லது இல்லாதிருக்கும் தன்மை என்று நிலைநாட்ட அவர்கள் வாதம் புரிகின்றார்கள். அதுவே, முன்னுக்குப் பின் முரணான வாதம். சங்கர பகவத் பாதாள், அதே வார்த்தையையே எடுத்துக் கொண்டு பேசுகிறார்கள். வாதக் களத்திலிருந்தே அவர் களை விரட்டி விடுகிறார்கள்.’
`அவர்கள் சொல்லுகிறதை அப்படியே ஒப்புக் கொள்வோம் என்றால் என்ன முடிவு ஏற்படும்? அவர்கள், இல்லாதிருக்கும் இருப்பை அறிந்தவர்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். சங்கராசாரியார் மற்றும் வேதாந்திகள் கருத்துப்படி, `இல்லாதிருக்கும் நிலை’யை அறிகிறவன் அல்லது அந்த அறிவாகிய ஞானம்தான் பரம தத்துவம். நம்முன் இருக்கும் இந்த ஞானம் அல்லது அறிகின்ற அந்தப் பொருள் தேய்வதில்லை. சாய்வதில்லை.’
`ஆகவே, வெறும் ஏட்டுப் படிப்பெல்லாம் ஞானம் விழைபவனைக் குழப்பப்படுத்தும். பலதரப்பட்ட சிந்தனையாளர்கள் தங்கள் முறையில் தங்கள் மனப்பாங்கு, பண்பாட்டுக்கு ஏற்றவாறு தனித்தனியே எண்ணி வாதம் புரிந்து முடிவு காணுகிறார்கள். அந்த முடிவுகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாயிருக்கின்றன. உண்மையான தீர்ப்பைத் தருவதுதான் யார்? எந்தத் தர்மபுத்திரன் நமக்கு உண்மையைச் சொல்வார்? அந்த உண்மையை உள்ளபடி அனுபவித்துணர்ந்த ஆத்ம ஞானிதான் செய்ய முடியும். ஆகவே, நசிகேதன், யம தர்மனைப் பார்த்து இந்த ஆத்யாத்மிகக் கேள்வியைக் கேட்டது முற்றிலும் சரியே!’
இந்தக் கேள்வியால் யம தர்மனுக்குப் பயம் வந்து விடுகிறது.
`நசிகேதா! இந்த விஷயத்தில் தெய்வங்களே சந்தேகம் கொண்டிருக்கின்றன. உண்மையில் அதைப் புரிந்து கொள்வது சுலபமில்லை தான். தயவு செய்து என் பொருட்டு நீ இதைக் கேட்காதே!’
நசிகேதன் சொல்லுகிறான்:
`மரணத்தின் தந்தையே! இறைவனுக்குக் கூட இதில் சந்தேகம் உண்டு என்று நீ சொல்கிறாய். இதை அறிய முடியாது என்கிறாய். ஆகவே எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது; இதற்குப் பதில் சொல்லக் கூடியவன் நீ ஒருவனே! எனது இந்த மூன்றாவது வேண்டுகோள் மிக முக்கியமானது.’
நசிகேதன் விடவில்லை; மரண ரகசியத்தை வெளியிட யம தர்மனும் தயாராக இல்லை.
`உனக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன், மக்கள், பேரர்கள், நூறு வயது, தங்கம், பசுக்கள், ராஜாங்கம் எல்லாம் தருகிறேன். அழகான பெண்களைத் தருகிறேன்; சேவகர்களைத் தருகிறேன். அனுபவி. மரணத்தின் ரகசியத்தை மட்டும் கேட்காதே!’ என்றான் யம தர்மன்.
`யம தர்மா, மரணத்தை மடியில் கட்டிக் கொண்டு இவற்றை அனுபவிப்பது எப்படி? ஆகவே, அந்த ரகசியத்தை நீ சொல்லியே ஆக வேண்டும்’ என்கிறான் நசிகேதன்.
யம தர்மன் வேறு வழியின்றிச் சொல்லத் துவங்குகிறான்…
`நசிகேதனுடைய வாதம் மிகவும் ஆணித்தரமானது. கடோபநிஷத்தின் முக்கியமான பகுதி அதுதான். ஆனால், அவன் நின்ற இடம், மரணத்தின் ரகசியத்தைத் தவிர வேறு ஒன்றும் கேட்க மாட்டேன் என்பதே. ஒரு இலட்சியப் பிடிப்பை இதில் காண்கிறோம்.’
`ஒரு ஏழை, பணக்காரப் பெண்ணைக் காதலிக்கிறான். லட்ச ரூபாய் தருகிறேன், என் பெண்ணை மறந்து விடு’ என்று சொன்னால், சிலர் மறந்து விடுவார்கள்.
ஆனால், நசிகேதனோ, பூலோகம் தெரிந்து கொள்ள விரும்பும், `மரண ரகசிய’த்திலேயே நிற்கிறான்.
யமன் சொல்லும் ரகசியமோ, திடுக்கிடத் தக்கதாக இல்லை. அது, பகவத்கீதையின் மற்றொரு பதிப்பாக நின்று ஆன்மாவையும், பற்றற்ற தன்மையையும் அதிகம் பேசுகிறது.
நித்தியம், அநித்தியம் இரண்டுக்கும் உள்ள வேற்றுமையைக் கூறுகிறது.
மேலும் `அர்த்தமுள்ள இந்துமதம்’ வாசகர் களுக்குப் பிடிபட முடியாத கடினமான தத்துவங்களை விளக்குகிறது.
ஆனால், சுருக்கம் இதுதான்.
ஆன்மாவைப் புடம் போட்டு எடுத்தவன், மரணமடைந்தாலும் அவன் செத்ததாக அர்த்தமில்லை. அது அல்லாதவன் மட்டுமே இறந்தவனாகக் கருதப்படுகிறான்.
`கடோபநிஷத்தைப் படித்ததில் இருந்து ஒன்று எனக்குப் புரிகிறது. பகவான் கீதையில் சொல்வது போல், `எதிலும் சம நோக்கு உள்ளவனே மரணமற்ற நிலையை எய்துகிறான்,’ என்பதே அது.
கிட்டத்தட்ட ஒரு மரம், அல்லது மலையின் நிலை தான்.
வெயிலடித்தாலும் பனி விழுந்தாலும் எல்லாவற்றையும் அவை ஒரே சீராகத் தாங்கிக் கொள்கின்றன.
இது ஒரு பக்குவ நிலை.
மனிதன் விலங்காக இருந்தால், அந்த விலங்கிற்கும் குறிப்பிட்ட சில உணர்ச்சிகள் இருக்கின்றன. தெய்வமாக இருந்து விட்டால் கேள்வியே
இல்லை.ஆனால், அவன் மனிதனாகவே இருக்க வேண்டும். இருட்டையும் வெளிச்சத்தையும் சமமாகப் பாவிக்க வேண்டும்.
`இந்த யோக நிலையை எய்தியவன், இறந்தும் வாழ்கிறான்’ என்கிறான், யம தர்மன்.
`அவன் உயிரை நான் கொண்டு போகவில்லை! வெறும் சக்கையையே கொண்டு போகிறேன்!’ என்பது யம தர்மன் வாதம்.
மானிட ஜாதி முழுவதும் இந்தப் பக்குவ நிலையை எய்திவிட்டால் உலகத்தில் உள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விடும்.
வீட்டுக்குக் கதவும், பூட்டும் தேவைப்படாது.
கோர்ட்டிலே சத்தியப் பிரமாணம் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஒருவன் மனைவி, இன்னொருவன் பக்கத்திலே தூங்கலாம்; அவர்கள் இருவரும் தொட மாட்டார்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் குறுக்கே போடப்பட்டுள்ள திரைகள் விலகிவிடும்.
ஆசை என்ற வார்த்தை இல்லாமற் போய்விடும்.
`எல்லாம் அநித்தியம்’ என்பது உணரப்பட்டு விடும்.
`காமம் என்பது ஒரு குழந்தையின் ஜனனத்துக்காவே’ என்ற உணர்ச்சி வந்து விடும்.
`பொருள் என்பது உயிர் வாழ்வதற்கு மட்டுமே’ என்ற நிலை தோன்றிவிடும்.
ஏமாற்றுதல், கலகம் செய்தல், பதவிப் போட்டிகள் நீங்கி விடும்.
கட்சிகள் இருக்கமாட்டா.
அப்படி இருந்தாலும், ஒவ்வொருவரும் தான் பதவிக்கு வரவேண்டும் என்று கருதமாட்டார்.
அடுத்தக் கட்சிக்காரனைப் பார்த்து, `நீங்களே வரவேண்டும்’ என்று ஆசைப்படுவான்.
`நான், என்னுடையது’ என்ற எண்ணம் அடங்கி விடும்.
பங்கீடு செய்து வாழத் தோன்றும்.
`இல்லறத்தில் பிரம்மசரியம்’ என்ற காந்திஜியின் ஆசை கைகூடும்.
சொல்லப் போனால், துயரங்களுக்கெல்லாம் எவை எவை காரணமோ, அவையெல்லாம் அடிபட்டுப் போகும்.
இப்படிப் பக்குவம் பெற்று விட்ட மனிதன் மரணமடைந்தாலும், மரணமடைவதில்லை.
`துன்பத்திற்குரிய மரணம்’ என்ற நிலையில் இருந்து விடுபட்டு விடுகிறான்.
இதுவே யோகங்களில் எல்லாம் கர்ம யோகம்.
நூற்றுக்கு நூறு ஜனங்களுக்கு இது வருமா?
வருவது கடினம்.
வந்துவிட்டால் மத்திய சர்க்காரும் கிடையாது. மாநில சர்க்காரும் கிடையாது!
சோஷலிச, கம்யூனிஸம், முதலாளித்துவம் எதுவும் கிடையாது.
மனிதத் தன்மை என்ற ஒன்றே நிலைபெற்று விடும்.
-
தெய்வீக உணர்வு
என் அளவுக்குப் பட்டினத்தாரும், அருணகிரிநாதரும் கூட அனுபவித்திருக்க மாட்டார்கள்.
ஒரு யோகியின் பரிபூரண நிலையை எய்த எல்லோராலும் முடியாது.
இறைவனே மனது வைத்து, வில்லங்கங்களில் இருந்து விடுதலை செய்யும் போது, அதையே பெரிய வரமாகக் கருத வேண்டும்.
மரணம் தவிர்க்க முடியாதது. எல்லோருடைய வாழ்விலும் என்றோ ஒரு நாள் அது நிகழப் போகிறது.
பழைய உடல் நிலை இருந்தால், இன்று நான் ஒரு இருதய வியாதிக்காரனாக இருப்பேன்.
ஒருவேளை மரணம் கூடச் சம்பவித்திருக்கலாம்.
அப்போதெல்லாம் நான்கு படி ஏறினால் மூச்சு வாங்கும்; கால்கள் சுரந்து, வீங்கிப் போய்க் கிடக்கும். அது ஒரு நல்ல சகுனமல்ல.
இன்றைய நிலையில் ஓரளவாவது உணவு உண்ண இறைவன் என்னை அனுமதித்தால் போதும்; வேறு எந்த அபிலாஷைகளும் எனக்கில்லை.
உற்சாகமாக நடமாடும் சக்தி ஒன்று மட்டும் இருந்தால் போதும்.
கையில் இருக்கிற பேனா நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
குழந்தை குட்டிகள், பாசம் என்ற வில்லங்கங்கள் இல்லாதிருக்குமானால், இப்போது நான் நேசிக்கக் கூடியது, ரிஷிகேச யாத்திரையே!
இடுப்பளவு கங்கை நீரில் உட்கார்ந்து கொண்டு யோகம் புரிவது போல் சுகம் வேறு என்ன இருக்கிறது?
இறைவனைப் பற்றிய சிந்தனையை விட, வேறு சிந்தனைக்கு அங்கு வேலை என்ன?
பரலோக வாழ்க்கைக்கும், இகலோக வாழ்க்கைக்கும் இடையேயுள்ள தாரதம்மியங்களைக் குறிப்பிட்டு, உலகத்திற்குச் சொல்லி விட்டால், என் கடைசிக் காலம் பெருமைக்குரியதாக ஆகிவிடாதா?
ஆன்மாவைப் பற்றிய ஆராய்ச்சியில் நான் முழுமை பெற்று விட்டால், பகவானை அகக் கண்களால் தரிசித்து விட மாட்டேனா?
வைராக்கிய ஞானிகள் இன்றுவரை நின்று நிலைத்திருப்பது போல், நானும் நிலைத்திருக்க மாட்டேனா?
ஒருவேளை அந்த ஞானிகளின் அளவுக்கு நானும் வாழ மாட்டேனா?
பரபரப்பான நகர நாகரிகத்திலிருந்து கட்டுப்பாடுகளற்ற தனிமையை எட்டும்போது, குறுக்கீடுகள் இல்லாத அந்தத் தனிமையில் எவ்வளவு சிந்தனைகள் வரும்?
அந்த யோகத்தில் நோய்கள் இல்லை; நோய்களுக்கு மருந்துகளும் இல்லை.
அது வேண்டும், இது வேண்டும் என்ற ஆசை இல்லை; ஆரவாரமில்லை.
நிம்மதி; அதுதான் தேவனின் சந்நிதி.
இரண்டு கைகளையும் நீட்டிப் பிச்சை வாங்கி, உண்டு குளிர்ந்த மர நிழலில் துண்டை விரித்துத் தூங்குவதில் உள்ள சுகம், நகரத்து ஏர் கண்டிஷன் அறையில் கிடைக்காது.
உலகம் சுற்றிலும் செயற்கையாகத் தோன்றுகிறது.
நவீன நாகரிகத்தின் போலித்தனம் விளங்குகிறது.
`எல்லா ஆட்டங்களுமே முடியக் கூடியவையே’ என்ற சிந்தனை, அடிக்கடி வருகிறது.
பணம் சேர்ப்பதும், பங்களா வாங்குவதும் மறந்தே போய்விட்டது.
அன்றாடத் தேவைகளுக்கு மட்டுமே பணம்; வெயில் மழைக்கு ஒதுங்கவே வீடு.
தேவைகள் குறைந்தபட்ச நிலையை எட்டுகின்றன.
இருபது வயதில் அதிகபட்ச நிலைக்குப் போன மனது, ஐம்பதிலேயே குறைந்தபட்ச நிலைக்கு வந்து விட்டது.
பிறப்பின் நோக்கங்கள் முடிந்தனவோ இல்லையோ, ஒரு பிறப்பு முடிவை நோக்கிப் பயணம் செய்கிறது.
இளம் வாலிபர்களைக் காணும் போதெல்லாம், இவர்கள் ஆடி ஆடி ஓய வேண்டியவர்கள் என்று தோன்றுகிறது.
`மனிதனுடைய இலட்சிய எல்லை ஈஸ்வர ஐக்கியமே’ என்று எண்ணும்போது, பகவத்கீதையின் சுலோகங்கள் பளிச்சிடுகின்றன.
ஒரு இளைஞன் பகவத்கீதை படித்தால், அது புரிவது கடினம்.
வாழ்ந்து பார்த்தவன் வாழ்க்கையைப் பார்ப்பது போல, அனுபவித்து அறிந்தவன் அதைப் படித்தால் புரியும்.
மனத்தின் சபலத்தைப் பற்றி அர்ஜுனன் கேட்கிறான்; `அதை யோகத்தால் அடக்க முடியும்’ என்று பகவான் சொல்லுகிறான்.
இன்றைய கல்லூரி மாணவனிடம் போய் யோகத்தைப் பற்றிப் பேசினால், அவன் சிரிப்பான்.
காமக் களியாட்ட நடனங்களையும், திரைப்படங்களையும் விரும்பும் அவனுக்கு அது புரியாது.
ஆனால் எனக்குப் புரிகிறது.
மனம்-
அதன் கோலங்கள் தான் எத்தனை?
தான் போடுகின்ற கோலங்கள் அனைத்துமே ஓவியங்கள் என்று எண்ணுவது மனம்.
குழந்தைப் பருவத்தில் அது குருத்து விட்ட போது, உலகத்தின் பசுமையே அதன் கண்ணுக்குத் தெரிந்தது.
சேலை அழகாக இருந்தால் கூடச் சேயிழையாள் அழகு என்று எண்ணிற்று.
எதிலும் ரசனை, எதிலும் சுகம்.
யாராவது ஒருவர் அன்பாகப் பேசிவிட்டால், அவரையே சுற்றி வட்டமிடும்.
எவளாவது ஒருத்தி காதலிப்பது போல் நடித்துவிட்டால், அவளுக்காகவே ஏங்கும்.
அமெரிக்காவைப் பற்றிப் படித்து விட்டால், அங்கு போக மாட்டோமா என்று அலறும்.
ஆனால், வயது ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும் போதுதான், எதன் மீதும் ஒரு கேலிச் சிரிப்பு எழும். `எவ்வளவோ பார்த்தாகி விட்டது’ என்று சொல்லத் தோன்றும்.
எதைப் பற்றிப் பேசினாலும், `அந்த நாளிலே…’ என்று ஆரம்பிக்கும்.
வாசற்படி, தான் மலையின் ஒரு பகுதியாக இருந்ததை எண்ணிப் பார்த்தால் வருத்தப்படத்தான் செய்யும்.
ஆனால், வாசற்படியாகச் செய்யும் சேவையை மலையாக இருந்தபோது, தான் செய்யவில்லை என்று எண்ணிப் பார்த்தால், அது மகிழ்ச்சியடையும்.
செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்து முடித்தால், யோக காலத்தில் அவை திரண்டு நிற்கும்.
நான் எழுதியதை விட, எழுதாமல் விட்டது அதிகம்.
ஆனால், எழுதியதே அதிகம் என்று பல பேருக்குத் தோன்றுகிறது.
அப்போது நான் பகவத்கீதையை மொழி பெயர்க்கவில்லை.
படித்திருந்தால், எனது சொற்பொழிவு நிலையே திசை மாறி இருக்கும்.
மற்றவர்களும், காலம் கடந்ததற்குப் பின்பு இதைச் சிந்திக்கக் கூடாதே என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறேன்.
இன்னும் எனக்கொரு நம்பிக்கை இருக்கிறது.
இறைவன் சற்று ஒத்துழைப்பானானால், இதற்கு முன் யாரும் சொல்லாத சில விஷயங்களை, நான் சொல்ல வாய்ப்பிருக்கிறது.
சிறு வயதின் போகானுபவங்களும், ரோகானுபவங்களும் சிந்தனையைக் கொஞ்சம் தடை செய்கின்றன.
உலக விஞ்ஞானத்திற்கும், பூலோகத்திற்கும், தெய்விக உணர்விற்கும் இந்து மதமே அடிப்படை என்று எனக்கு அடிக்கடி தோன்றுகிறது. அது பற்றி ஆராய உடல் வலிமை இன்னும் சற்று அதிமாகத் தேவைப்படுகிறது.
மூச்சை அடக்கிக் கடலுக்குள்ளே முத்தெடுப்பவனைப் போலதான், இப்போது நான் சில சாதாரண முத்துகளை எடுத்து வருகிறேன்.
இந்து மதத்தில், சுமார் 112 உபநிஷத்துகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவற்றில் கடோபநிஷத்தில் சில பக்கங்கள் மட்டும்தான் நான் படித்திருக்கிறேன்.
பார்க்கப் போனால், உபநிஷத்துகளைப் படித்து ஆராயவே ஒரு பிறவி எடுக்க வேண்டும் போல் தோன்றுகிறது.
சிறு வயதில் இருந்த சிறிய ஆசைகள் போய், பெரிய வயதில் பெரிய ஆசைகள் முளைத்திருக்கின்றன.
இவை ஒரு யோகியின் ஆசைகளே!
`இன்னும் என்ன? இன்னும் என்ன?’ என்ற கேள்வியை இப்போது மனது கேட்கிறது.
உடம்பு நன்றாக இருக்கும்போது மனத்தில் யோக நிலை இல்லை.
இரண்டும் ஒன்றாகக் கைவரப் பெற்றவர்களே உன்னத யோகிகள்.
`அங்கே ஒரு சுவாமி அப்படிச் செய்தார்; இங்கே ஒரு சுவாமி இப்படிச் செய்தார்’ என்று நாம் செய்திகள் கேள்விப்படுகிறோம்.
அவையெல்லாம் என்ன?
ஏதோ ஒரு யோகம் அவர்களுக்குக் கைவந்த கலையாகி விட்டது.
`ஒருவரைப் பார்த்தவுடனேயே வரலாற்றைச் சொல்லி விடுகிறார்’ என்றும், `நீங்கள் வீட்டுக்குப் போங்கள். ஒரு செய்தி காத்திருக்கிறது’ என்றார் என்றும், சில அதிசயங்களைக் குறிப்பிடுகிறார்கள்.
திருமுருகன் பூண்டியில் ஒரு சுவாமி, திருவண்ணாமலையில் ஒரு சுவாமி, பெங்களூருக்கு அருகில் ஒரு சுவாமி, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு சுவாமி – பலரைப் பற்றி பலவிதமாகக் கூறப்படுகிறது.
அவர்கள் விளையாடுவது சித்து என்று நானும் கூறியிருக்கிறேன். ஆனால், அதுவும் ஒரு வகை யோகமே.
என்னாலும் உன்னாலும் எது முடியாதோ, அதை இன்னொருவன் செய்யும்போது அவனது திறமையை ஒப்புக் கொண்டுதான் அடுத்ததைப் பேச வேண்டும்.
இந்த சித்துக்களுக்கு அப்பாற்பட்ட யோகிகள் சிலர் உண்டு.
காஞ்சிப் பெரியவர்கள், அவர்களில் முக்கியமானவர்கள்.
காஞ்சிப் பெரியவர்கள் செய்வதை `ஹடயோகம்’ என்றே கூறலாம்.
அவர் ஆணியை விழுங்குவதில்லை.
சமாதியில் முப்பதுநாள் இருந்து மீண்டும் வருவதில்லை.
ஆனால், இவற்றை எல்லாம் விட ஒரு தெய்விக நிலையை அவர் எட்டியவர்.
ராமானுஜர் காலத்தில் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் பற்றிய சர்ச்சை எழுந்தது. இன்று இரண்டு மார்க்கத்துக்குமே பாலமாக விளங்குபவர் காஞ்சிப் பெரியவர்.
எல்லா யோகிகளிடமும் மேதைத் தன்மையை எதிர்பார்க்க முடியாது.
காஞ்சிப் பெரியவர்களிடம் அதுவும் இருக்கிறது.
உண்மையான மேதைக்கு வேண்டிய அடக்கமும் இருக்கிறது.
பற்றற்ற ஞானமும், பரமார்த்திக நிலையும் இருக்கின்றன.
`எல்லோராலும் முடியாது’ என்று சொல்லக்கூடிய வாழ்க்கை நிலை இருக்கிறது.
லெளகீக வாழ்க்கையை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கும் தெளிந்த உணர்விருக்கிறது.
கடலிலேயே கருங்கடல், அரபிக்கடல் என்றிருப்பதைப் போல, இந்தக் கடலும் ஞானக் கடல், பக்திக் கடல், யோகக் கடல்.
கைப்பிடி அவலிலும், ஆழாக்குப் பாலிலும் ஒரு ஜீவன் காதகாதங்கள், நடந்தே போக முடிகிறதென்றால், அது அவலின் சக்தியல்ல; ஆன்மாவின் சக்தி.
வைட்டமின் மாத்திரையால் உடம்பு சூடாகிறது என்று கருதி, இரண்டு மாத காலம் வைட்டமின் மாத்திரைகளை நான் நிறுத்தினேன். இத்தனைக்கும் நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தேன். ஆனாலும் என்னால் எழுந்து நடமாட முடியவில்லை.
எழுதுவேன், படுப்பேன், எழுவேன்; காலைப் பலகாரம் சாப்பிடுவதற்குக் கூட உட்கார முடியவில்லை.
அவரோ, ஆன்ம சக்தியைத் துணையாகக் கொண்டு நடக்கிறார்; பேசுகிறார்; ஆன்மாவைப் புடம் போட்டு எடுத்து விட்டால், நன்றாகப் பாடம் பண்ணிவிட்டால், உடம்பு அதற்குக் கட்டுப்பட்டு விடுகிறது.
ஆன்மாவைப் பாடம் பண்ணுவதென்றால் என்ன?
`எதையும் சமமாகப் பாவிப்பது’ என்கிறது பகவத்கீதை.
இன்பம், துன்பம், இருட்டு, வெளிச்சம் எல்லாமே சமமாகிவிட்டால் யோகம் கைகூடி வரும்.
சாவுக்கு அழாமலும், வரவுக்குச் சிரிக்காமலும், சம உணர்வு எய்தும் தன்மை சுலபத்தில் வந்து விடாது.
நான் காதலில் கருகிப் போகிறேன்; பாசத்தில் வெந்து போகிறேன்; வேண்டியவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் சாதாரண மனிதனை விட மோசமாக அழுகிறேன்.
ஆன்மாவின் பலவீனம் முழுமையாக செம்மைப்படவில்லை.
நாள் ஆக ஆக இந்தப் பலவீனம் குறைவதும் தெரிகிறது.
என் சகோதரரின் மறைவு என்னை அதிர்ச்சி அடைய வைத்தது உண்மையே.
அந்த அதிர்ச்சி எல்லாம், `நல்ல வாழ்க்கை அமையாமல் அவர் மாண்டு விட்டாரே’ என்பதால் ஏற்பட்டது.
ஆனால், எனது நான்கு சகோதரிகள் இறந்த போது, அழுத அழுகையை விட, இப்போது அழுதது குறைவு.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சகோதரி காலமானார். அப்போது எனக்குப் பதினேழு வயது.
தொடர்ச்சியாக ஏழு நாட்கள் அழுதேன்.
பல வருஷங்கள் அந்த மரணத்தை மறக்க முடியவில்லை.
இப்போது ஒன்றை மறப்பது என்பது கடினமாகத் தோன்றவில்லை.
`நாமும் சாக வேண்டியவர்களே’ என்ற எண்ணம் அழுத்தமாக எழுவது இந்த வயதில்தான்.
இன்னும் நாலைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மரணத்தைக் கண்டு சிரிக்கும் நிலையே எனக்கு ஏற்பட்டு விடக் கூடும்.
பரிபக்குவ நிலை, பரிமாணத்தின் மூலமே வருகிறது. அது எய்துகின்றவனுடைய அறிவைப் பொறுத்தது. அது சீக்கிரம் வந்துவிடக் கூடும்.
நான் குருகுலத்தில் படித்தவன். ஐந்தாண்டு காலம் வெளி உலகை அறியாது வாழ்ந்தவன்.
அதை விட்டு வெளியே வந்து உலகைப் புரிந்து, உள்ளங்களைப் புரிந்து பக்குவநிலை எய்துவதற்கு எனக்கு இவ்வளவு காலமாயிற்று.
இதுவும் முழுப் பக்குவமல்ல.
முழுப் பக்குவம் என்பது, விரும்புவது கிடைக்காவிட்டாலும், விரக்தியடையாமல் இருப்பது.
மீண்டும் கீதையைச் சொன்னால், எதையும் சமமாகப் பாவிப்பது.
காஞ்சிப் பெரியவர்களைத் தவிர, வேறு ஒருவரிடமும் அந்தப் பக்குவ நிலையை நான் காணவில்லை என்று சொன்னால், மற்றவர்கள் வருத்தப்படக்கூடாது.
பெரும்பாலானவர்களிடம் கோபமாவது மிஞ்சி இருக்கிறது; பெரியவர்களிடம் அதுவும் கிடையாது.
இந்த யோகம், பயிற்சி, படிப்பு, அனுபவம் ஆகிய அனைத்தும் சேர்ந்த பின்னாலே வரும்.
உடம்பிலே திமிரில்லாத இளைஞர்கள் மட்டுமே இதைப் பயில முடியும்.
-
மனிதனுக்கு தேவையான யோகம் எது?
போகத்தில் புரண்டு, ரோகத்தில் அவதிப்படும் சாதாரண மனிதன், இனி யோகத்தை தரிசிக்கும்படி செய்வோம்.
அண்மையில் ஒரு நண்பரை நான் சந்தித்தேன். அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் இறந்து போனார்கள். குடும்பத்திலும் சிறிது கசப்பு. அவர் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்.
சோகமாக உட்கார்ந்திருந்த அவர், `இனி என்ன இருக்கிறது பிரதர்? வனமோ வனாந்தரமோ எங்காவது போய்ச் சிவனே என்று விழ வேண்டியது தான்!’ என்றார்.
அப்படி விழுவதுதான் யோகமா?
இல்லை, அது வெறும் விரக்தி.
செயல்படக் கூடியவன் செயலை மறப்பதும், அல்லது துறப்பதும் கரும யோகத்தின் ஒரு பகுதி.
பலமுள்ளவன் எதிரியை அடிக்காமலிருப்பது அடக்கத்துக்கு இலக்கணம்.
வசதியுள்ளவன், பிறரை ஏமாற்றாமல் இருப்பது பெருமையின் ஒரு கூறு.
நன்கு வாழும்போதே ஒருவன் யோகியாவது, உயர்ந்த நிலை.
விரக்தியுற்ற நிலையில் யோகியாவது, தாழ்ந்த நிலை.
`தமோ’வாக இருப்பது `ரஜோ’வாக மாறி, `சத்வ’ குணத்துக்குத் தள்ளப்படும் யோகத்தில் பெருமை இல்லை.
ரஜோ குணத்தையும், தமோ குணத்தையும் பார்த்துச் சிரித்தபடி யோக நிலையை எட்டுவதே தெய்விகம்.
இமய மலையிலும், அதன் அடிவாரங்களிலும் ஏராளமான சாதுக்கள் திரிகிறார்கள்.
பலர் ஏற்படுத்திய மிஷன் அமைப்புகளில், பலவகையான சந்நியாசிகள் இருக்கிறார்கள்.
இவர்களில் மூன்று வகையினர் உண்டு.
ஒரு வகையினர், சிறு வயதிலேயே ஞானம் கைவரப்பெற்று அப்படியானவர்கள்.
இன்னொரு வகையினர், குடும்பத்தில் சிக்கிச் சீரழிந்து வந்தவர்கள்.
மூன்றாவது வகையினர், பிறப்பிலேயே ஆண் தன்மை இல்லாதவர்கள்.
இவர்களிலே ஞானிகள் உண்டு; துறவிகள் உண்டு; சந்நியாசிகள் உண்டு; ஆனால் யோகிகள் இல்லை.
`யோகி’ என்பவன் சித்தத்தை மட்டும் அடக்கிப் பழகியவனல்ல; ஜகத்தையும் அடக்கி வெற்றி பெற்றவன்.
அவர்களுடைய திருஷ்டியில் மூன்று காலங்களும் தோன்றும்.
அவர்கள் தங்கள் கண்களால் எதைப் பார்த்தாலும் வசியமாகும்.
யோகிகளின் பார்வையில் புலி அடங்கும்.
மயில் ஆடும்.
மேகம் மழை பொழியும்.
அவனை நெருப்புச் சுடாது.
குளிர் அவனை அடக்காது.
மார்கழி மாதத்தில் சமவெளியில் நம்மால் உலவ முடியவில்லை.
அவர்கள் வெள்ளிப் பனிமலையில் உலாவுகிறார்கள்!
பனிக்கட்டிகள் மிதந்து வரும் நீரில் நீராடுகிறார்கள்!
கிடைக்கும் உணவை உண்கிறார்கள்.
போகத்திற்கு அலைவதில்லை.
ரோகம் அவர்களைத் தீண்டுவதில்லை.
மருந்து மாத்திரைகளுக்கு அங்கே வேலை இல்லை.
நாம் எல்லாருமே அப்படி யோகிகளாக முடியுமா?
முடியாது.
அப்படித்தான் ஆகத்தான் வேண்டுமா?
தேவை இல்லை.
யோகியாக இல்லாமலேயே, யோகம் கைவரப் பெற்றவனாக லெளகீக வாழ்க்கையை ஒருவன் நடத்த முடியும்.
ஒருவன், மனைவியோடு வாழலாம்; ஆனாலும், அவளைத் தீண்டாமலிருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒருவனுக்கு நிறைய உணவு வசதிகள் இருக்கலாம். பசி எடுத்தாலும் அந்த உணவை உண்ணாமலிருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
இதுதான் இயக்கத்தில் இயங்காமை.
இதுவே லெளகீக மனிதனுக்குத் தேவையான யோகம்.
பதவி என்றால் எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் நேரம் வரும் போது, அந்தப் பதவியைத் தூக்கியெறியும் திராணி எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை.
`நம்மை அது அடக்குவதா, அதை நாம் அடக்குவதா?’ என்று வரும் போது, `எதையும் நான் அடக்க முடியும்’ என்ற நிலைக்கு வருவதே யோகம்.
அழகான பெண்ணொருத்தி தனிமையிலே காத்திருக்கிறாள், நமக்காக.
நமக்கோ ரத்தம் உடம்பில் துறுதுறுவென்று ஓடுகிறது.
இந்த நிலையில் அந்தப் பெண்ணை வெறுக்கக் கற்றுக் கொள்வது யோகம்.
எது கிடைத்தாலும், `எனக்கு, எனக்கு’ என்று ஓடுகிறவன் போகி.
பின்பு ஒரு நாள் அவன் ரோகி.
`எதையும் விடத் தான் உயர்ந்தவன்’ என்று கருதக் கூடியவன் யோகி.
வாரியார் சுவாமிகள் சொன்ன கதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.
ஒரு குறுகலான பாலம்; நன்றாகக் குளித்து விட்டு நெற்றியில் விபூதிப் பூச்சோடு அந்தப் பாலத்தில் வந்து கொண்டிருக்கிறது ஒரு யானை; எதிரிலே அசிங்கமாக வந்து கொண்டிருக்கிறது ஒரு பன்றி. பன்றி, வாலை ஆட்டிக் கொண்டு கம்பீரமாக வருகின்ற வேகத்தில், சக்தி வாய்ந்த யானைக்கு கோபம் வரவில்லை. அது ஒதுங்கி நின்று வழி விடுகிறது. பன்றிக்கோ தான் வெற்றி பெற்று விட்டதாக நினைவு. யானையே தனக்குப் பயந்து விட்டதாக ஒரு கனவு. ஆனால், யானையினுடைய நினைவோ, `பாவம் பன்றி! விட்டு விடுவோம்’ என்பதாகும்.
தன்னை உயரத்தில் வைத்துப் பார்க்கும் ஆணவம் இல்லாமல் யானை ஒதுங்கிற்று.
இன்னொரு யானைக் கதை.
ஒரு யானையின் மீது சவாரி செய்ய ஒரு அணில் விரும்பிற்று. `சரி, முதுகில் ஏறிக் கொள்!’ என்றது யானை. அணில் ஏறிக் கொண்டது.
யானை அதைச் சுமந்து செல்லும் போது யானையின் தலையில் ஒரு தென்னை மட்டை விழுந்தது.
யானை ஒரு பிளிறு பிளிறிற்று.
உடனே அணில் கேட்டது, `நான் முதுகில் இருக்கிறது வலிக்கிறதா?’ என்று.
யானைக்கு அணில் ஒரு சுமையா?
ஆனாலும், அணிலுக்கு அப்படி ஒரு நினைவு.
தாழ்ந்தவர்கள் தங்களை உயர்வாகக் கருதும் போது, உயர்ந்தவர்கள் சிரித்துக் கொண்டே ஒதுங்கிவிட வேண்டும்.
அதுவும் யோகம் தான்.
`என்னைவிட நீ உயர்வா?’ என்று சண்டைக்குப் போகக் கூடாது.
`உலகத்தில் கடவுள் தனக்கு அடுத்தபடியாக நம்மை வைத்திருக்கிறான்’ என்று கருதி, அந்தத் தெய்விக நிலையை எட்டி விடுகிறவனே
யோகி.`பட்டதெல்லாம் போதுமடா பகவானே’ என்ற பட்டினத்தார் யோகம், அனுபவ யோகம்.
ஒன்றைப் பார்த்த உடனேயே, `இது விஷம்’ என்று கண்டு கொள்பவனே அறிவார்ந்த யோகி.
`இது மோசம்’ என்று கண்டு கொள்கிறவன் அறிவார்ந்த யோகி.
அதை அனுபவித்துப் பார்த்து விலகுபவன், அனுபவ யோகி.
அறிவார்ந்த யோகியின் செயலைத்தான், `ஞான திருஷ்டி’ என்கிறார்கள்.
ஒரு பஸ்ஸில் ஏறி வெளியூருக்குச் செல்ல விரும்பினார் ஒரு நண்பர். திடீரென்று, `இன்றைக்கு போக வேண்டாம்’ என்று முடிவு கட்டினார்.
அன்று அந்த பஸ் விபத்துக்குள்ளாகி விட்டது.
இது இறையருள் யோகம்.
இறைவன் எல்லோருக்கும் இந்தச் சக்தியைக் கொடுப்பதில்லை.
பூர்வ ஜென்ம விதிவசத்தால் சிலருக்கு இது கைகூடுகிறது.
நூறாண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி இறையருள் யோகம் கைவரப் பெற்றவர்கள் பிறக்கிறார்கள்.
இந்த விதிவிலக்குகளை நம்முடைய வாழ்க்கையில் எடைபோடக் கூடாது.
உண்மையான யோகம் என்பது, நான் முன்னே சொன்னபடி, வாழ்ந்து கொண்டே வாழாமல் இருப்பது; அல்லது வாழாமலே வாழ்வது.
பகவான் கீதையிலே கூறும் முக்கியமான யோகங்கள் சில. கரும யோகம் அவற்றிலே ஒன்று.
`கருமத்தைச் செய்; பலனை எதிர்பார்க்காதே’ என்பதே பகவான் வாக்கு.
இதை ஆயிரக்கணக்கான தடவைகள் நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
இதன் பொருள் என்ன?
`அலுவலகத்தில் வேலை பார்; சம்பளம் வாங்காதே’ என்பதா?
சாதாரண மனிதனுக்கு அப்படித்தான் தோன்றும்.
ஆனால், உண்மை அதுவல்ல.
உனக்கென்று சில சுய தர்மங்களை வகுத்துக் கொள்.
`பத்துப் பேருக்கு உதவுகிறது’ என்று வைத்துக் கொண்டால், எந்தப் பத்துப் பேரிடமிருந்து எதையும் நீ எதிர்பார்க்க முடியாதோ, அவர்களுக்கு உதவு.
`கருமம்’ என்பது கடமை.
`மகனைப் படிக்க வைத்துப் பட்டம் பெற வைத்து, உத்தியோகமும் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்’ என்று மட்டும் நினை.
`அப்படிக் கொடுத்து விட்டால், அவன் சம்பளத்தில் சாப்பிடலாமே’ என்று நினைக்காதே.
எங்கே நீ பலனை எதிர்பார்க்கலாமோ, அங்கே எதிர்பார்க்கலாம்.
மனைவிக்கு நகை வாங்கிக் கொடுப்பதும், கருமம்தான்; அப்படி வாங்கிக் கொடுத்தால், `அவள் நம்மிடம் பிரியமாக இருப்பாள்’ என்ற பலனும் அதில் அடங்கி இருக்கிறது.
அரசியல் ரீதியாகச் சொன்னால், ஒரு கருமத்தின் பலன் இருந்தும், இல்லாமலும் இருக்கிற இரண்டு நிலைகள் உண்டு.
உதாரணம்: வங்காள தேச விடுதலை.
அந்த விடுதலையின் மூலம் ஒரு அரக்கனிடமிருந்து வங்காள தேச மக்கள் விடுதலை பெற்றார்கள்.
நாம் அந்த நாட்டைக் கைப்பற்றவில்லை.
ஆனால், ஒரு கோடி அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
ஒரு வகையில் நமக்குப் பலன் இருந்தது; ஒரு வகையில் பயனில்லை.
நாம் எதிர்பார்த்த பலன், அகதிகளை அனுப்புவது.
நாம் விரும்பாத பலன் நாட்டைக் கைப்பற்றுவது.
தச்சன், அடிக்கின்ற ஆணிக்கு கூலி வாங்காமல் இருக்க முடியாது.
கொல்லன், அடிக்கின்ற இரும்புக்குக் கூலி வாங்கித்தான் தீர வேண்டும்.
பகவான் இவர்களைத்தான், பலனற்ற கருமம் செய்யச் சொல்லுகிறான் என்று பலர் தப்பாகக் கணக்கிடுகிறார்கள்.
உண்மை அதுவல்ல.
`கருமம்’ என்ற வார்த்தையைக் `கடமை’ என்றே அவன் கொள்கிறான்.
`தருமம்’ என்பது என்ன?
பலன் கருதாத உதவி.
`கருமம்’ என்பது பலன் கருதாத கடமை.
எந்தப் பலனும் கருதக் கூடாது.
`மகாராஜன் நல்லா இருக்கணும்’ என்று வாழ்த்துவார்கள், பெற்றுக் கொண்டவர்கள். அந்தப் பலனையும் எதிர்பார்க்கக் கூடாது.
சிலர் பெற்றுக் கொண்டே திட்டுவார்கள்; அதைப் பற்றியும் கவலைப் படக்கூடாது.
`அடப்பாவி! நான் எவ்வளவு உதவி செய்திருக்கிறேன். என்னைப் போய்த் திட்டுக்கிறானே’ என்று சொல்லக் கூடாது.
உண்மையில் அதுவும் ஒரு வகை யோகம்தான்!
`நன்றியை எதிர் பாராதே.’
`நன்றி கெட்டவனை மன்னித்துவிடு.’
`எந்தச் சூழ்நிலையிலும் நமது கடமையைச் செய்து விட்டோம்’ என்று திருப்தியடையுங்கள்!
- இதுவே யோகம்.
இந்த இலக்கணத்தின்படி, எத்தனை பேரை இன்று நாம் சந்திக்க முடியும்?
தருமச் சொத்து என்று வைத்து, அதிலேயும் கொள்ளையடிப்பவர்கள் தான் அதிகம்.
ஆனால், கண்ணை மூடிக்கொண்டு கடமையைச் செய்வதுதான் யோகம்.
இன்றைய யோகிகளில் சிலர் காரியத்தைச் செய்து கொடுத்துவிட்டு – தாங்கள் எதிர்பார்க்காவிட்டாலும் வருகின்ற பலனைப் பெற்றுக் கொள்கிறார்கள்!
அதுவே, நேரான யோகத்துக்குப் புறம்பானது.
லெளகீக வாழ்வில் ஒரு மனிதன் கடைபிடிக்க வேண்டிய தர்மம் இது.
நல்ல அடை மழை, `தனது வீடு ஒழுகுகிறது’ என்று நாலு பேர் கதவைத் தட்டினால், அவர்கள் படுப்பதற்குக் கூடச் சில பேர் இடங் கொடுப்பதில்லை.
ஓர் இந்து, `தங்கள் வீடு, அகதிகளும், அதிதிகளும் ஆபத்தில் தங்குவதற்காக’ என்று கருத வேண்டும்.
`தன் உணவு பங்கிட்டுச் சாப்பிடவே!’ என்று எண்ண வேண்டும்.
`மனைவியைத் தவிர, மற்ற உடமைகள் தன்னுடையனவல்ல!’ என்று எண்ண வேண்டும்.
`செல்வம் செல்லக்கூடியது’-
`தங்கம் தங்காதது’-
தங்கக் கூடியது, நல்வினைப் பயன் ஒன்று மட்டுமே.
உலகத்தில் அளவுக்கு மீறி வாழ்க்கையை அனுபவித்தவர்களில் நானும் ஒருவன்.
அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்லி விடுவதில் தவறில்லை என்று எழுதுகிறேன்.
ஸ்ரீஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் சொன்னபடி, வயதாகும் போது சிந்தனையில்தான் திருப்தியடைய வேண்டியிருக்கிறது.
முன்பெல்லாம் ரத்தத்தில் ஒரு அதீதமான உணர்ச்சி இருந்தது.
எந்த ஹோட்டலைப் பார்த்தாலும் பசி எடுத்தது.
எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஆசை வந்தது.
பெரும்பாலான நேரங்கள் பெண்ணைப் பற்றியும், சாப்பாட்டைப் பற்றியுமே பேசுவேன்.
கருங்குரங்கை எப்படிச் சமைப்பது என்பதில் இருந்து, பச்சைப் பாம்பு சூப் வைப்பது வரை நாக்கில் ஜலம் சொட்டச் சொட்டப் பேசுவேன்.
சிறு வயதில் நான் சாப்பிடும்போது, நான் சாப்பிடச் சாப்பிட முன்னால் போடப்படும் எலும்புகளை அள்ளி அள்ளி என் தாயார் வெளியே கொண்டு போய்ப் போடுவார்கள்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு வரையில், என் மனைவியும் அப்படித்தான் செய்தாள்.
காரணம் எலும்புகள் மலைபோல், குவிந்து கிடந்தால் திருஷ்டி படும் என்பார்கள்.
மலேஷியாவில் சீன ஹோட்டல்களுக்குள் நுழைந்து விட்டால், நான் சாப்பிடும் சாப்பாட்டை யாரும் சாப்பிட முடியாது.
ஓரிடத்தில் நான் சாப்பிட்டு முடித்த போது ஒருவர், `இதென்ன மனிதன் சாப்பிடுகிற சாப்பாடா’ என்றே கேட்டு விட்டார்.
சுமார் இருபது வருஷங்களாக எனது இரவுச் சாப்பாடு, இரவு பன்னிரண்டு மணிக்கு மேல்தான்.
இடையிடையே நோய்வாய்ப்பட்டிருந்தபோது, பத்து மணிக்குச் சாப்பிட்டிருக்கிறேன்.
அதுவும் சுமார் இரண்டு மாத காலம்தான்.
சாதாரணமாகவே பன்னிரண்டு மணிக்குச் சாப்பிடுவது தான் வழக்கம்.
ஒன்பது மணியிலிருந்து பன்னிரண்டு மணி வரை குடித்துக் கொண்டும், சிந்தித்துக் கொண்டும் இருப்பேன்.
சிந்தனை, வெள்ளம் போல் கரை புரண்டு ஓடும்.
பெண்களைப் பற்றிய பாடலே தோன்றும்.
உலகத்தை அனுபவித்து முடித்துவிட வேண்டும் போலிருக்கும்.
அடிக்கடி எழுந்து கண்ணாடி பார்ப்பேன்.
இரத்தமெங்கும் ஆனந்தம் கொப்புளித்துக் கொண்டிருக்கும்.
அப்போதும் உடம்புக்கு நோய் வரும்.
எத்தனை மாத்திரைகள் உண்டோ, அத்தனையும் சாப்பிடுவேன்.
அந்த நாட்களில், யார் யாரைச் சந்தித்தோம் என்பது கூடப் பாதி மறந்து போய்விட்டது. அவ்வளவு நிதானமின்றி ஆடி இருக்கிறேன்!
எவ்வளவு ஆடினாலும், எழுத்து மட்டும் ஒழுங்காக இருக்கும்.
அப்போதும் இரத்தக் கொதிப்பு இருந்தது. ஆனாலும் அதன் தோற்றமே இல்லை.
ஒரு `அல்டோமட்’ மாத்திரையைப் போட்டபடி போய்க்கொண்டே இருப்பேன்.
ஒரு டாக்டருக்குத் தெரியாத அளவு மாத்திரைகள் எனக்குத் தெரியும்.
உடம்பு பொத பொதவென்றிருக்கும்; முகம் வீங்கி இருக்கும்; ஆனால், எதை நினைத்தாலும் எழுத முடியும்.
தமிழ் மொழி, நாக்கில் புரண்டு விளையாடும்.
ஒன்றா? இரண்டா?
பன்னிரண்டு வயதிலேயே போகத்தை தொடங்கியவன்.
`பெத்தடின்’ பழக்கம் எனக்கு ரோகமாயிற்று.
கடந்த மூன்றாண்டு காலமாக, இறைவன் என்னை யோகத்திற்கு தள்ளுகிறான்.
உப்பு அளவோடு; உறைப்பு கூடவே கூடாது; புளி, எலுமிச்சம்பழம் ஆகவே ஆகாது.
காய்கறிகளில் வெண்டைக்காய், புடலங்காய்களைத் தவிர வேறு காய்கறிகளைச் சாப்பிட முடியாது.
இறைச்சி இல்லை; மீன் மட்டுமே.
இட்லியும், தோசை மாவும் கூடப் புளிக்கக் கூடாது.
இருநூற்று இரண்டு பவுண்டு எடை இருந்தவன், நூற்று அறுபத்து எட்டுக்கு வந்து விட்டேன்.
ஆனாலும் இதுவும் ஒரு வசதியாகவே இருக்கிறது.
அத்தனை ஆஸ்பத்திரிகளிலும் சோதித்தேன்; உடம்பில் ஒரு நோயும் இல்லை என்று கூறிவிட்டார்கள்.
இரத்தத்தில் சர்க்கரை நூறுதான் இருக்கிறது; கொழுப்பு நூற்று நாற்பதுதான் இருக்கிறது.
ஆனால், திமிர் பிடித்த ஆசைகள் போய்விட்டன.
தினமும் பெண்களைப் பற்றிச் சிந்திப்பதும், அறவே நின்று போய்விட்டது.
படிக்கலாம் என்று நினைத்தால் `செளந்தர்ய லஹரி படிக்கலாமா, லலிதா சகஸ்ரநாமம் படிக்கலாமா, விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கலாமா’ என்று தோன்றுகிறது.
ஒன்றும் எழுதாமல் இருந்தால், `ராமானுஜர் நாடகம் பார்க்கலாமா, பார்த்தசாரதி கோயிலுக்குப் போகலாமா’ என்று தோன்றுகிறது.`நோயே இல்லை’ என்று டாக்டர்கள் கூறிய பிறகும் கூட, ஏதோ சொர்க்கத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு விட்ட பிரமை உண்டாகிறது.
நான் விரும்பியோ, விரும்பாமலோ, ஒரு யோகியின் நிலை என் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த எட்டு மாதங்களாக அந்த நிலை வளர்ந்து வருகிறது.
முன்பெல்லாம் மது அருந்தினால், அதில் ஒரு அற்புதமான சுகம் இருந்தது. இப்போது வெறுப்புத் தோன்றுகிறது.
முன்பு அனுபவிக்கக் குடித்தேன்.
இப்போதுதான் உண்மையிலேயே சூழ்நிலைகளை மறக்கக் குடிக்க வேண்டியதிருக்கிறது.
ஆனால், கொஞ்ச நாட்களாக குடியின் மீதும் வெறுப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது.
மது, மாமிசம், மங்கை இம்மூன்றிலிருந்தும், பகவான் என்னை விடுவித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.
இதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இருக்கிறேன்.
அளவுக்கு மீறிய போக காலம், ஐம்பதிலேயே முடிந்து விடுவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.