Post reply

Warning - while you were reading a new reply has been posted. You may wish to review your post.

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: VenMaThI
« on: Today at 12:40:15 PM »


யாருமில்லா தனி உலகம்
நமக்கென நாம்  - இல்லை இல்லை
உனக்கென நானும் எனக்கென நீயும்
நமக்காய் நாம் மட்டுமே ...

ஓடி ஆடி களைத்த நொடியிலும்
கலையாத அந்த அழகான கூந்தல்....
சீரான பற்கள் சீர்குலைந்தாலும்
குறையாத அந்த காதல் புன்னகை...

நெடுந்தூரம் பயணித்தும் - வயோதீக
வலி வந்தும்... நடையே நாட்டியமான கால்கள்..
பற்றிய நாள் முதல் இந்த நொடி வரை
என்றுமே விட்டு விலகாத கைகள்...

மணமுடித்த நாள் முதல்
இதோ இந்த தருணம் வரை
எனக்காய் என் தாயாய் நீ..
என்றுமே உன் முதல் குழந்தையாய் நான்...

நரை வந்து சூழ்ந்தாலும்
நாடி நரம்பு தளர்ந்தாலும் - தோலில்
சுருக்கம் வந்து சேர்ந்தாலும்
என்றும் மாறாதடி நம்மீது நாம் கொண்ட காதல்..

பால் தேடும் மழலை போல்
உன் பாசம் தேடும் பிள்ளையாய் நான்
அழும்போது தேற்றும் தாய்போல்
அன்பால் என்னை அரவணைக்கும் அம்மாவாய் நீ...

அறுபது ஆனாலும் அழகு குறையல
ஆச்சி ஆனாலும் அன்பு மாறல
அதே அன்பும் அதே பாசமும்
அன்றும் இன்றும் என்றும் எனக்காய்...

அன்றும் ரசித்தேனடி உன்னை
உன் துடுக்கான குறும்புகளுக்காய்....
இன்றும் ரசிக்கிறேனடி உன்னை
கிழப்பருவம் எய்தியும் மாறாத உன் குறும்புகளை...

என்றுமே சலிக்கல உன்னுடனான இப்பயணம்
இன்னும் பலகாலம் வாழ நினைக்கிறேன்
நீ இல்லா உலகமதை கனவுலயும் காண விரும்பல...
இறைவனிடம் இதை மட்டுமே என் வரமாய் கேக்கிறேன்...

ஆயுசுக்கும் அன்பா ஆதரவா வாழ்ந்தாச்சு
அம்மாவா அவ எனக்கும் அப்பாவா நான் அவளுக்கும்
வேறென்ன கேப்பேன் கடவுளே - எங்களுக்கு
சாவிலும் பிரியாத வரம் மட்டும் போதும்...

இறந்தும் பயணிப்பேன்...
எனக்கான என்னவளுடன்...
என்றுமே கைகளை பற்றிக்கொண்டு
என்றுமே அவளை ரசித்துக்கொண்டு....


Posted by: JsB
« on: Today at 06:04:52 AM »

காதல்...
வயதைப் பார்த்து வருவதில்லை...
இதயத்தைத் தேடி வரும்
இறைவனின் அழகிய வரம்...

இந்த உலகம்
இளமைக் காதலை மட்டுமே
கொண்டாடிக் கொண்டிருக்கிறது...

ஆனால்...நரைத்த முடிகளோடு,
சுருங்கிய கைகளோடு,
இன்னும் கை கோர்த்து நடக்கும்
இரண்டு இதயங்களின் காதல்...
அது சாதாரண காதல் அல்ல...
இறைவன் எழுதிய
நித்திய காவியம்...


ஒரு நாள்...
வானத்தின் நட்சத்திரங்கள்
நிலாவிடம் கேட்டன...

"இந்த பூமியில்
இன்னும் உயிரோடு வாழும்
உண்மையான காதல் எங்கே?"
நிலா புன்னகைத்து
ஒரே ஒரு வழியைக் காட்டியது...


அங்கே...
காலம் முகத்தில்
சுருக்கங்களை வரைந்திருந்தது...
ஆனால்,
இதயத்தில் மட்டும்
முதல் காதலின் துடிப்பு
இன்னும் புதிதாய் இருந்தது...


அவர் அவள் கையைப் பிடித்தார்...
அவள் அவரைப் பார்த்தாள்...
அந்த ஒரு பார்வையில்...
ஆயிரம் வார்த்தைகள்...
ஆயிரம் நினைவுகள்...
ஆயிரம் பிறவிகளின்
காதல் மறைந்திருந்தது...


அவர்கள் நடந்த பாதையில்
பூக்கள் மலரவில்லை...
ஏனெனில்,
பூக்களுக்கே
அவர்கள் காதலின் அழகை
மிஞ்ச முடியவில்லை...

காற்று கூட
அவர்களைத் தொந்தரவு செய்யாமல்
மெதுவாக வீசியது...
அந்தக் கைகளைப் பிரிக்க
அதற்கே மனம் வரவில்லை...


மாலை வந்தது...
நிலா அவர்களை ஆசீர்வதித்தது...
நட்சத்திரங்கள்
ஒளிப் பூக்களைப் பொழிந்தன...
நேரம் மட்டும்
அவர்களுக்காக நின்றது...


ஏனெனில்...
அது இரண்டு மனிதர்கள்
நடந்து செல்லும் பயணம் அல்ல...
ஆயிரம் பிறவிகளைக் கடந்து
மீண்டும் ஒன்றான
இரண்டு ஆன்மாக்கள்
நித்தியத்தை நோக்கி
கை கோர்த்து நடக்கும்
தெய்வீகப் பயணம்...


காதலை வெல்வது
விதி அல்ல...
அதை
ஒவ்வொரு நாளும்
ஒரே இதயமாக
காத்து வாழ்வதே
உண்மையான வெற்றி...


அந்த வெற்றியின்
அழகிய அடையாளமாக
நீங்கள் இருவரும்
என்றென்றும் வாழ வேண்டும்...

உங்கள் காதல்...
காலத்தைக் கடந்தும்
கவிதையாக வாழட்டும்...

உங்கள் புன்னகை...
ஒருவரின் உயிரில்
என்றும் வசந்தமாக மலரட்டும்...

உங்கள் கைகள்...
இறுதி மூச்சு வரை
ஒருபோதும் பிரியாதிருக்கட்டும்...


உங்கள் காதல்...
இந்த உலகம் முழுவதும்
"உண்மையான காதல் இன்னும் உயிரோடு இருக்கிறது"
என்பதற்கான அழகிய சாட்சியாக
என்றென்றும் ஒளிரட்டும்...


வாழ்க உங்கள் அழகான காதல்...! ❤️

அன்புடன், JSB
Posted by: Ashik
« on: Today at 12:55:40 AM »

வருடங்கள் ஓடின !!
வாழ்ககையே முடியும் தருணம் !!
ஏனோ இவளை கண்டால் மட்டும்
மீண்டும் குழந்தையாகிறேன் !!

யார் இவள் !!
என்னுள் எப்போது நுழைந்தாள் இவள் !!
தோழியாய் பள்ளி பருவத்தில் அறிமுகமானவள் !!
இன்றும் அதே பருவத்திற்கு என்னை அழைத்து செல்பவள்!!
காதலியாய் கல்லூரி
பருவத்தில் மாறியவள் !!

என்னை இன்றும் வாலிபனாய்
உணர வைப்பவள் !!
என் வாரிசுகளுக்கு தாயானவள் !!
என்றும் என்னை மழலலையாய் பாரமரிப்பவள்!!

என் இன்பத்தில் பங்கெடுத்தவள் !!
என்றும் என்னை மகிழ்ச்சியாக
வாழ வைப்பவள் !!
என் துன்பத்தை சுமந்தவள் !!
என்றும் தோல்விகள் என்னை
தொடமல் தடுப்பவள்!!

என் வாழ்வை தினமும் அலங்கரித்தவள் !! தினமும் தாயை போல என்
பாரங்களை சுமந்தவள் !!
இவளின்றி என் வாழ்வில்லை !!
இன்று இவளிடம் மூச்சு இல்லை!!

மரணம் எங்கள் காதலுக்கு முடிவுமில்லை !! அவள் மூச்சு நின்ற மறு நொடி
நின்றது என் மூச்சும் !!
இன்றும் அவளுடன் நான் !!
சொர்க்த்தில் இவள் கரம் பிடித்து
சுகமாய் உலா வரும் நான்!!
அழிவில்லா காதலுக்கு
அடையாளமாய் நாங்கள் !!
Posted by: Kavii
« on: July 06, 2026, 11:52:22 PM »

சலிக்காத காதல்
இருபதில் மலரும் ஈர்ப்பல்ல காதல்,
எழுபதைத் தாண்டியும்
இறுதி வரை தொடர்வதே பேரன்பு!

காலத்தின் கரங்கள்
உடலை மட்டுமே முதுமையாக்கும்,
கைகோர்த்து ஓடும்
இவர்களின் மனதை அல்ல!

ஆரம்பத்து வாழ்வாதாரக் கஷ்டங்கள்,
அலுவலக வேலைப் பொறுப்புகள்,
ஓயாமல் ஓடிய நாட்கள்
இவர்கள் கடந்து வந்த பாதை!

பெற்ற பிள்ளைகளை ஆளாக்கி,
இன்று பேரப்பிள்ளைகளின்
மழலைச் சிரிப்பில்
தங்கள் இளமையைத் தேடுகிறார்கள்!

சுற்றமும் சொந்தமும் சூழ்ந்திருந்தும்,
இருவர் மட்டுமே உணர்ந்த
தனிமையின் வலிகளும்
இவர்களுக்குள் உண்டு!

நரைத்த கூந்தலும் சுருக்கங்களும்
அழகைக் குறைப்பதில்லை,
வாழ்ந்து முடித்த
வாழ்க்கையின் பெருமை பேசுகிறது!

உலகமே ஓடி இளைப்பாறும்போது,
இவர்கள் மட்டும்
கவலைகள் மறந்து ஓடுவதில்
தான் எத்தனை ஆனந்தம்!

ஆனாலும்...
இந்த ஓவியத்தைப் பார்க்கும்போது
நெஞ்சுக்குள் ஒரு ஏக்கம் பிறக்கிறது,
"நமக்கெல்லாம் இந்த கொடுப்பினை கிடைக்குமா?

இறுதி வரை கைவிடாத
ஒரு ஜீவனுடன்,
இப்படியொரு முதுமை அமையுமா
என்ற தவிப்பு எழுகிறது!

வெண்மையாய் மாறிய கூந்தலிலும்
மாறாமல் மின்னுகிறது நேசம்,
வெறும் கோடுகளாய் இருந்த ஓவியம்
இன்று உயிராகிப் பேசுகிறது!



Posted by: Madhurangi
« on: July 06, 2026, 10:42:26 PM »

தயவு செஞ்சு... லவ் பண்ணாதீங்க...


அவள் சிரிப்பில் மட்டுமல்ல, சோர்விலும் காதலைக் காணத் தெரியலென்றால்...
இளமையின் அழகை மட்டும் ரசித்துவிட்டு,
காலம் அவள் தோள்களில் முதுமையை இறக்கும் போது
அதே பிரியத்தோடு அவளைக் காதலிக்கத் தெரியலென்றால்...
தயவு செஞ்சு... லவ் பண்ணாதீங்க...

காலங்கள் கடந்தும் அவளுக்குள் வாழும் மழலையைத் தாலாட்டத் தெரியாமல்...
"வயசுக்கேத்த மாதிரி இரு" என்று
அவள் சின்னச் சின்ன ஆசைகளுக்கு வேலி போடப் போறீங்கன்னா...
தயவு செஞ்சு... லவ் பண்ணாதீங்க...

பலநூறு கண்கள் பார்க்கும் வீதியில் அவள் விரல் கோர்க்கக் கூச்சப்பட்டு...
முதுமையில் அவள் நடை தளர்ந்து தடுமாறும் போது,
தாங்கிப் பிடிக்க உங்கள் கைகள் நீளாதென்றால்...
தயவு செஞ்சு... லவ் பண்ணாதீங்க...

அவள் எட்டும் சின்னச் சின்ன வெற்றிகளை இளமையில் கொண்டாடாமல்...
முதுமையில், "இன்னும் உன் காபியில் அதே முதல் நாள் வாசனை" என
ஒரே ஒரு வார்த்தையால் அவள் மனதை மலர வைக்கத் தெரியலென்றால்...
தயவு செஞ்சு... லவ் பண்ணாதீங்க...

கூந்தல் நரைத்து, கண்கள் மங்கி, முகம் சுருங்கும் முதுமையில்...
அதை வயதின் அடையாளமாய் பார்க்காமல்,
நீங்கள் இணைந்து வாழ்ந்த காதலின் வரலாறாய் வாசிக்கத் தெரியலென்றால்...
தயவு செஞ்சு... லவ் பண்ணாதீங்க...

நினைவுகள் மறந்து, பெயர்கள் மறந்தாலும், "சாப்பிட்டியா?" எனும் அவள் குரல் மாறாது.
அந்தக் குரலுக்காக, நடுங்கும் விரல்களுக்காக,
உங்கள் வேகத்தைக் குறைத்து அவளோடு மெதுவாய் நடக்கத் தெரியலென்றால்...
தயவு செஞ்சு... லவ் பண்ணாதீங்க...

காதல் என்பது இளமையில் "லவ் யூ" சொல்வதல்ல;
முதுமையில் மாத்திரை கொடுப்பது, கண்ணாடி தேடுவது, படிக்கட்டில் கை பிடிப்பது!
மூச்சு இருக்கும் வரை "நான் இருக்கிறேன்" என்பதை உன் இருப்பால் உணர்த்தத் துணிவில்லை என்றால்...
தயவு செஞ்சு... லவ் பண்ணாதீங்க..!
Posted by: Luminous
« on: July 06, 2026, 10:26:42 PM »

காதல்... காலம் எழுதும் கவிதை

இளமையில் காதல்,
இதயம் துடிக்கும் சத்தம்...
முதுமையில் காதல்,
இதயம் நிம்மதியாக துடிக்கக் காரணம்...

இன்று...
சின்ன வார்த்தைகள்
பெரிய சுவர்களாகின்றன...
சின்ன கோபங்கள்
நிரந்தர பிரிவுகளாகின்றன...
"விட்டுக் கொடுப்பது தோல்வி" என்று
நினைக்கும் மனங்களுக்கு...
வாழ்க்கை மட்டும்
வெற்றியைத் தருவதில்லை...

அன்று...
வீட்டில் வசதி குறைவு...
கையில் பணம் குறைவு...
வாழ்க்கையில் கஷ்டம் அதிகம்...
ஆனால்...
"நீ இருந்தால் போதும்..."
என்ற நம்பிக்கை மட்டும்
குறைந்ததே இல்லை...

இன்று...
காதலிக்க நேரம் இருக்கிறது...
காத்திருக்க பொறுமை இல்லை...
திருமணம் செய்ய ஆசை இருக்கிறது...
உறவை சுமக்க மனம் இல்லை...

தாத்தாவின் கை நடுங்கும் போது...
அதை இறுக்கமாகப் பிடிக்கும்
பாட்டியின் கை...
பாட்டியின் கண் மங்கும் போது...
அவள் நடையை
தன் தோளில் சுமக்கும் தாத்தா...
அவர்கள் பேசும் மொழி
வார்த்தைகள் அல்ல...
புரிதல்...

நம் அம்மா – அப்பாவும் அப்படித்தான்...
ஆயிரம் சண்டைகள்...
லட்சம் கருத்து வேறுபாடுகள்...
ஆனால்...
ஒருநாள் கூட...
"நீயும் உன் பாதை... நானும் என் பாதை..."
என்று சொல்லவில்லை...

ஏனென்றால்...
அவர்கள் காதலை வெல்ல நினைக்கவில்லை...
வாழ்க்கையை வெல்ல நினைத்தார்கள்...

இன்று...
விவாகரத்து அதிகரிக்கிறது...
காரணம்...
காதல் குறைந்ததால் அல்ல...
பொறுமை குறைந்ததால்...
புரிதல் மறைந்ததால்...
'நாம்' என்ற வார்த்தையை விட...
'நான்' என்ற வார்த்தை உயர்ந்ததால்...
காதல் என்பது...
ஒரே நாளில்
பூத்து உதிரும் ரோஜா அல்ல...
புயலையும்...
வெயிலையும்...
மழையையும்...
கடந்து...
இறுதி வரை நிழல் தரும்
ஆலமரம்...

ஒருநாள்...
நம் தலைமுறையும் முதுமையை அடையும்...
அப்போது...
நம் கையைப் பிடிக்க
ஒரு கை இருக்க வேண்டுமா...?
அல்லது...
நம் நினைவுகளைப் பிடித்துக் கொண்டு
தனியாக வாழ வேண்டுமா...?

முடிவு...
இன்று நாம் விதைக்கும்
பொறுமையிலும்...
புரிதலிலும்...
விட்டுக் கொடுத்தலிலும்...
இருக்கிறது...

காதலைத் தேர்ந்தெடுப்பது எளிது...
காதலாகவே வாழ்ந்து காட்டுவதுதான் கலை...
இளமையில் காதலிப்பது சாதாரணம்...
முதுமையிலும் அதே கையை விடாமல் பிடித்திருப்பதுதான்...
உண்மையான காதல். 💯😇🧡💛💚💙💜Luminous
Posted by: SweeTie
« on: July 06, 2026, 10:20:18 PM »

செங்காந்தள் மலரென  அவள்
சிறு விரல்கள்  தொடும்வேளை 
சுருங்கிக்கிடந்த  என் இதயத்தில்
சுருக்  என தைக்கிறது ஒரு முள் .

முன்னாள் காதலி  அவள் 
முத்தான கவிகளால் என்னை
முழு கவிஞனாய் மாற்றியவள்
காலம் பிரித்தாலும் காதல் குறையவில்லை

உனக்காக நானும்  எனக்காக நீயும்
இவ்வுலகில் வலம் வந்த  நாட்கள் 
மீண்டும்  வருமா என ஏங்கிய நாட்கள்
காதலோடு நாம் சங்கமித்த நினைவுகள்

மரணத்தை தழுவிய  காவிய காதல் இல்லை
மீண்டும் சேர்வோம் என்ற நம்பிக்கை காதல்
வானத்தில் உலா வரும் நட்சத்திர காதல் இல்லை
வாழவேண்டும் என்ற ஆசைகொண்ட காதல்

உதிர்ந்த  இதழ்களுக்கிடையே   
மீண்டும் தோன்றும்  புதிய மொட்டு
சுவாசத்தின்  புதிய  வாசம் 
புதிதாக பிறந்த குழந்தையின் விசும்பல்

மீண்டும். மறந்துபோன அந்த சிரிப்பு,
மின்னல்  வெட்டும்  அதே   கண்கள்
வாழ்க்கைஓட்டம் நிற்கும்  வேளையில்
வந்த ஒரு  கசக்காது  காதல் ஓட்டம் 

தலைமுடியில் ஆங்காங்கே  தெரியும்
வெள்ளிக் கம்பிகள் மற்றவர்க்கு தெரியும்  வயசாக
ஆனால் அது சொல்வது எங்கள் காதலின் ஆழம் 
 காதலுக்கு  என்றும்  வயசாகாது

அருகருகே நா ஓடும் இக் காதலோட்டம்
கடிகார முட்களையும் நிறுத்திவிடும்
இளமை என்னும்  பூங்காற்று  நம்மை 
இன்பத்தில் ஆழ்த்திவிடும்  கண்மணியே
இனி நம் வாழ்வில் வசந்தம் மட்டுமே



Posted by: Oonjal
« on: July 06, 2026, 10:19:47 PM »

‎   "மிகப்பெரிய செல்வம் கணவன்"

உன் கைகளை இறுக பற்றும் போது
வாழ்க்கை முழுவதும் நான்
தடுமாறாமல் என்னை தாங்கிய
‎உன் அன்பு தான்
நினைவில் உலா வருகிறது...
‎நம் காதல் வளர்ந்தது சிறு சிறு
அக்கறைகளில் தான் ...

நான் சாப்பிட்டேனா
என்று கேட்ட உனது குரல்
‎சோர்ந்து அமரும்போது
‎மடி தாங்கிய உனது கரம்
‎எனக்காக உனது ஆசைகளை
தியாகம் செய்த அன்பு
‎இவை அனைத்துமே என் வாழ்க்கையின்
‎அழகான காதல் நினைவுகள்...

‎இடி மழைக்காலங்களில் என் பயத்தை
‎"நான் இருக்கிறேன்" என்ற
வார்த்தையால் அரவணைத்தாய்...
‎உனது கைகோர்த்து போகும் பாதையில்
‎எனக்கு பயம் என்பதே சிறிதும் இல்லை....

‎என் கரங்களில் மருதாணி
அலங்கரித்த நாட்களும் உண்டு
‎இன்று காலம் வரைந்த கோலம்
‎என் கைகளின் சுருக்கம்....
‎நம் முகங்களில் வயதின் சுருக்கம்
‎இன்னும் கூடலாம்...
‎ஆனால் உன் கையை பற்றி இருக்கும்
‎எனது விரல்கள் மட்டும் தளராது...

‎ஏனெனில் நான் காதலித்தது
‎உன் இளமையை அல்ல..
‎உன் அழகையும் அல்ல..
‎நம் வாழ்க்கையின் அனைத்து
துன்பங்களையும்
உன் தோளில் சுமந்து கொண்டு
மகிழ்ச்சி மட்டும் என்னோடு
பகிர்ந்த உனது இதயத்தைதான்...

‎என்னிடம்
"நீ பெற்ற மிகப்பெரிய செல்வம் எது"?
என்று கேட்டால் நான்
‎புன்னகையுடன் சொல்வேன்...
‎எனது பெயருக்கு பின்னால்
வந்த உறவாக இருந்தாலும்
‎எந்த நாளிலும் நான் இருக்கிறேன்
என்று வார்த்தையின்றி
‎எனக்கு முன்னால் செல்லும் கரத்தின்
‎சொந்தக்காரன் "என் கணவன்"
‎அவன்தான் எனது
மிகப்பெரிய  செல்வம் !

‎முடி நரைத்தாலும் நம் மனங்கள்
‎நரைக்கவில்லை....
‎மற்றவர்கள் நம்மளை முதியவர்கள்
என்று சொல்லட்டும்...
‎என் மனம் உன்னை பார்க்கும்
‎ஒவ்வொரு முறையும்
‎"இவன்தான் என் முதல் காதல்...
‎இவன்தான் என் கடைசி காதலும்"
‎என்று ‎அமைதியாய் சொல்லும்...

‎உயிர் இருக்கும் வரை உனது
கை பிடித்து நடக்க வேண்டும்...
‎இந்தப் பயணம் முடியும் நேரம்
‎உன் தோளில் சாய்ந்தபடியே
‎"என் வாழ்க்கை முழுமையடைந்தது"
‎என்று நிம்மதியோடு
கண்களை மூட வேண்டும்....
Posted by: Sethu
« on: July 06, 2026, 10:19:21 PM »

‎முதுமை காதல்....


வருடங்கள் பல கடந்தும்
‎கண்களில் பார்வை குறைந்தும்
‎தளர்ந்த நடையும் ,தேகத்தில் உள்ள அனைத்து உறுப்புகளும் தளர்ந்தும்,
‎பாசம், நேசம் ,அன்பு இவற்றையெல்லாம்
‎உள்ளடக்கிய காதலுக்கு வயதே இல்லை
‎என் இதயத்துடிப்பு நிற்கும் வரை
‎என் கடைசி மூச்சு நிற்கும் வரை
‎என் இதயத்தின் இளமை நீயே..

‎இளமையில் கஷ்டப்பட்டு உழைத்து
‎சேர்த்து வைக்கும் பணம் என்ற காற்று
‎முதுமையில் நம்மை
இதமாக தழுவுகிறது...
‎அப்போது உன் தளர்ந்த நடையும்
‎உன் சுருங்கிய கரங்களை பற்றிக்கொண்டு
‎நடக்கும் போது நம் மகிழ்ச்சிக்கு
‎எல்லை என்பது இல்லாமல்
‎பேசிக்கொள்கிறது நம் இதயங்கள்...

‎நமது காதல் மொழியை என்னுடைய வயது
‎காரணமாக எனது உடல் சோர்வாகலாம்
‎எனது கை கால் தளர்வாகலாம்
‎ஆனால் உன் தளர்ந்த கைகளை
பற்றிக் கொண்டு செல்லும்போது
‎என் இதயத்தில் உள்ள நம் காதலின் வலு
பல மடங்கு அதிகரிக்கும்
‎அதிசயம் கண்டேன்...

‎என்னுள் முதுமை காதல் என்பது
முகத்தின் அழகைப் பார்த்து
‎ஈர்த்து வரும் காதல் அல்ல
‎அது வாழ்க்கையில் ஒருவருக்கொருவர்
‎புரிந்து கொண்ட முழுமையான புரிதலே !

‎அந்த நரைத்த முடியிலும்
சுருங்கிய முகத்திலும்
‎மாறாத அன்பையும் பாசத்தையும்
‎காதலையும் தேடும் உன்னதமான
‎காதல் தான் முதுமை காதல்....
Posted by: Shreya
« on: July 06, 2026, 10:19:09 PM »

                                                காதல் சுவடுகள்

காலச் சக்கரம் சுழன்றாலும் நம்
காதல் சுவடுகள் நெஞ்சை விட்டு அழியவில்லை!
கூந்தல் வெளுத்து நரைசூடி நின்றாலும்,
உள்ளத்தின் துள்ளல் இன்னும் குறையவில்லை!

​பூட்டிய கதவுகள் யாவையும் உடைத்து,
புதியதோர் உலகிற்குள் ஓடுகிறோம்!
வயதின் எல்லைகள் யாவையும் கடந்து
குழந்தைகளாய் நாம் இன்று மாறுகிறோம்!

​சுருக்கங்கள் விழுந்த உந்தன் கன்னத்து முத்தங்கள்,
கோடிப் பொன்னைக் காட்டிலும் பேரழகு தருபவை!
தொலைந்துபோன நம் இளமையின் அழகிய மிச்சங்கள்,
இன்று எல்லைகள் இல்லாமல் நெஞ்சில் துள்ளுதே!

​காற்றின் திசையெங்கும் நம் சிரிப்புச் சத்தம்,
கேட்டுப் பறவைகள் வாழ்த்துகள் சொல்லுதடி!
இளமைக் காலத்தில் இல்லாத ஒரு வேகம்,
முதுமையின் வாசலில் எப்படி வந்தது?
உலகத்தின் கவலைகள் யாவையும் மறந்து,
நேற்றைய சுமையிறக்கி, இன்றைய நொடியை
ரசிக்கத் தொடங்கியதோ!

​விதி எழுதிய சுவடுகளை நம் பாதங்கள் அழிக்கட்டும்,
துயரங்கள் தீண்டாததோர் புதிய உலகம் பிறக்கட்டும்!
இந்த அலாதி மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை,
உன் கைகளைப் பிடித்தபின் எனக்குத் தோல்வியே இல்லை!

​இன்னும் ஓடுவோம் மூச்சடங்கும் வரை அல்ல,
நம் காதல் மூச்சு உலகைக் கடக்கும் வரை!
Posted by: RajKumar
« on: July 06, 2026, 10:18:46 PM »

இளமை காதல் இனக் கவர்ச்சியால் வந்தது
இளமைக் காதலில் உறுதி குறைவு முதுமை காதல் இறுக்கமான அன்பினால் இதயத்தில் உறுதியுடன் இருக்கும் காதல் புரிதல் மிக்கது

இளமைக் காதல் காய்களை போன்றது
பழுக்க காத்து இருக்கும் காய்
முதுமை காதல் இனிய சுவை மிக்க பழங்களைப் போன்றது
நரைத்த முடியுடன்
தோள்கள் சுருங்கினாலும்
காதல் அன்பு சுருங்காது

வயது ஆனாலும் உள்ளத்து அன்பு குறையாமல் வாழ்க்கையின்
கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு கைகளை இறுக்கி பிடித்து கொண்டு கால்கள் மட்டும் ஓடுகிறது
இளமை துள்ளலுடன்

வாழ்க்கை ஓட்டம் தடுமாறினாலும்
வலக்கை இடக்கையை விட்டதில்லை
வண்ணமயமான அவர்கள் வாழ்க்கையில் முகத்தில் இருக்கும் சிரிப்பு குறையாமல்
 வயது ஒரு எண் தான் என்று சொல்லாமல் சொல்கிறது
அவர்கள் வாழ்க்கை

முதுமை காதல் அன்பு காதல் பாசம் கருணை புரிதல் மிகுந்து ஒருவரை ஒருவர் அப்படியே ஏற்றுக் கொண்டதின் இனிமையான வாழ்க்கை பிணைப்பு

நிபந்தனையற்ற அன்புடன்
அவர்களுக்குள் எதிர்பார்ப்புகள் குறைந்து உண்மையான நேசம் மிகுந்த முதுமை வாழ்க்கை

முதுமை காதலின் அழகே
உண்மையான புரிதலுடன்
அவர்களின் அன்பான அரவணைப்புடன் காதலின் ஆழத்தை உணர்த்தும் மன அமைதி

வாழ்வின் பிரச்சனைகளுக்கு தோளோடு தோள் நின்று
கைகோர்த்து அதனைக் கடந்து முதிர்ச்சி அடையும் முழுமையான காதல் பருவம் முதுமைப் பருவம்

முதுமை காதல் முழுமையானதே புரிதல் அடித்தளம்
அன்பு ஆணிவேராக இருந்து இருமனம்
ஒரு மனமாய் இணைந்து
ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுத்து
 பசுமையான காதலை என்றென்றும் கால ஓட்டத்துடன் கடந்து
 ஈருயிர் ஓர் உயிராய் கலந்து
காதலில் வெற்றி பெற்று 
அகம் மகிழ்ந்து
வாழும் வாழ்க்கை புனிதமானது
 முழு நிலவைப் போன்று பிரகாசமானது
Posted by: Thenmozhi
« on: July 06, 2026, 10:18:36 PM »

 "பள்ளி நட்புடன் அவனும் நானும்"

அவனும் நானும்...
ஒரே பள்ளியில் படித்தோம் !
அடுத்தடுத்த இருக்கைகளில்
அமர்ந்து அரட்டை அடித்தோம் !
ஆனால் படித்தது மட்டும்
அடுத்தவன் நோட்டைத்தான்!

ஆசிரியர் கேட்ட கேள்விக்கு
பதில் தெரியாத நேரத்தில்...
கரும்பலகையை விட
கடவுளைத்தான் அதிகம் நம்பினோம் !

காலம் ஓடியது...
பள்ளி நட்பு
மெல்லக் காதலாக மாறியது...
சொல்லத் துணிவில்லாமல்
இருவரும் பார்வையிலேயே...
ஆயிரம் கவிதைகள் எழுதினோம் !

வாழ்க்கை வந்தது...
காதலை விட
கடமையை கையில் கொடுத்தது !
இருவரும்
இருவேறு பாதையில் நடந்தோம்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு,
பள்ளியில் சந்தித்தோம்...

அவனைப் பார்த்தேன்...
நரைத்த தலைமுடி
முகத்தில் காலத்தின் கோடுகள்
ஆனால் கண்களில் மட்டும்
அதே பள்ளி நாட்களின் பிரகாசம் !
என்னைப் பார்த்தான்...
தலையில் வெள்ளி பூத்திருந்தது !

அவன் சிரித்துக்கொண்டே,
"நீ இன்னும் அதே அழகுதான் தேனு...
ஆனா கண்ணாடி இல்லாம
எனக்குத்தான் தெரியல!" என்றான்

நான் உடனே,
"நீயும் அதே ஹீரோதான்...
ஆனா ஹீரோயினுக்கு பதிலா
இப்போ முழங்கால் வலிதான்
உன்னைச் சுற்றி வருது!" என்றேன்.
இருவரும் சிரித்தோம்...

நலமா?" என்ற கேட்ட ஒரு வார்த்தை...
ஆண்டுகள் முழுவதையும் சுருக்கியது !
கைகுலுக்கிய அந்த நொடி...
உணர்த்தியது நட்பின்
வலிமையை மீண்டும் !

அன்று  பள்ளியில் அவன் என்
கையை பிடித்து நடந்தவன்...
இன்று நானே அவன் கையை
பிடிச்சு கூட்டிட்டு போறேன்!
ஏன்னா... இவனை தனியா விட்டா
எந்த திசையில போவான்னே தெரியாது !

தனிமையில் அவனை விடாமல்
கிண்டல் செய்து சிரிக்க
வைத்துக்கொண்டே இருப்பேன் நான் !
என்னை ஏளனம் செய்து
மகிழ்விப்பான் அவன் !

அவன் மெதுவாக,
"அப்போ உனக்காக வாங்கிய
சாக்லேட்டை கொடுக்க முடியல...
இப்போ சர்க்கரை நோய்,
வாங்கியும் கொடுக்க முடியல!" என்றான் !

நான் சிரித்தபடி,
"பரவாயில்லை...
அந்தக் காதல் இனிப்பு
இன்னும் நெஞ்சில் தேனாக இருக்கு...
சாக்லேட் இல்லாத குறையே
தெரியல!" என்றேன் !

அப்போது புரிந்தது...
முதுமை என்பது
வயதுக்குத்தான் வரும்...
பள்ளி நட்புக்கு வராது !

காலம் என்பது
முகத்தை மாற்றலாம்...
ஆனால் உண்மையான காதலையும்,
கலாட்டா நட்பையும்
ஒருபோதும் மாற்ற முடியாது!

நமக்கு வயதானாலும்,
நட்பின் ஆழத்தினால்
நினைவுகள் புதுசுதான்...
காதல் சொல்லப்படாவிட்டாலும்,
இதயம் அதை மறப்பதில்லை...
சிரிப்பு குறைந்தாலும்,
நண்பன் அருகில் இருந்தால்
வாழ்க்கை மீண்டும்
பள்ளிப் பருவமாகி விடும் !

தனிமை துணையாக,
ஏக்கம் நிழலாக வாழ்ந்தேன் !
மீண்டும் பள்ளியில் உன்னைச் சேர்த்தது
பிரியாவிடை நாளான இன்று !
மௌனமாய் நின்ற கண்கள்
ஆயிரம் கதைகள் பேசின..
காலம் பிரித்த இதயங்களை
விதி மீண்டும் இணைத்தது...
பள்ளி நட்பு தொடரும் வாழ்நாள் முழுதும்...

Posted by: Rahmathulla
« on: July 06, 2026, 10:18:22 PM »


     ஏக்கம்  பொய்யானது



  இன்று என்  மனைவின் பிறந்தநாள். திருமணம் முடித்த போது எப்படி இருந்தாளோ..

அதே புன்னகையுடன் முதுமை தோற்றத்திலும் புன்னகை செய்யும் புன்னகை அரசி அவள்..

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை  திருமணம் செய்து கொண்டவள்..

நான் அடைந்த இன்பம் துன்பம் அனைத்திலும் பங்கு பெற்றவள்..
என்னை நல்வழியில் நடத்தி சென்றவள்..

என் சொந்தம் பந்தங்கள் என்னை இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியை போதும்
என்னை வழி நடத்தி சென்றவள்..

காலங்கள் கடந்தாலும்  பாசம் மாறா உற்ற துணைவியும் அவள்..

தன் பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாடணும் என்று முடிவும் எடுத்தாள்..

அதன் படியே பிறந்தனாளும் நன்றாக நடந்து முடிந்தது..

என் மனைவி முஹத்தில் அவ்ளோ ஆனந்தம்.. புன்னகையில் மிதந்தாள் ..

என் கரத்தை பிடித்து இங்க வாங்க என்று  சொல்லி  கொண்டு நடந்தால்..

 அன்றைய பிறந்தநாள் தான் அவளுக்கு  கடைசி பிறந்தநாளும் கூட..

திடிரென்று கீழே விழுந்தால்.. விழுந்த என் மனைவியை பார்த்து  அதிர்ச்சி அடைந்தேன்..

Doctor வந்து  helth a check  பண்ணி பார்த்து .
உங்க மனைவிக்கு  வாதம் நோய்   வந்துள்ளது  வலது பக்கம் கை கால் செயல் இழந்துள்ளது என்றார்...

Doctor சொன்னதும் எனக்கு  அந்த நிமிடம் என்ன செய்வது தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்தேன்..

அவளை பார்த்து ஏன் இதற்கு தான் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் பிறந்தநாள்  கொண்டாட்டம் வேண்டும் என்று கேட்டியா..

   அழுதேன் அழுதேன் அவள் கண்கள் இருந்து அசைவு மட்டும் இருக்கிறது..
வேற எந்த ஒரு உணர்வும் இல்லை..

காலம் பாரு எவ்ளோ சோதனை எல்லாம் எனக்கு கற்று தருகிறது என்று..

எப்படி எல்லாம் அழகாய் சிரிப்பாள் என் மனைவி ஆனால் இன்று அவளை பார்க்க வேதனை அழிக்கிறது...

வயது முதிர்ந்த காலத்திலும்  என்னை அண்பாய்  பார்த்தவள்..

என் மனைவியை இப்படி பார்ப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்க வில்லையே..
 
இவ்வுலகில் உன்னை விட்டால் எனக்கு யார் இருக்கா என்று கதறி கதறி அழுதேன்..

எனக்கு ஆறுதல் சொல்ல கூட உன்னை தவிர வேற யாரும் இல்லையே..

நீயோ என் பேச்சை காதில் வாங்கி மௌனம் காக்கிறாயே...

அந்த நிமிடமும் என் மனைவி திரும்ப பழைய நிலைமைக்கு   வந்து விடுவாள் என்று  ஏக்கம் கொண்டேன்..

என்னிடம் பேசி விடுவாள் என்று.. என் மனைவி பேரை சொல்லி சொல்லி  கூப்பிட்டேன்...

என் ஏக்கம் பொய்யானது.
அவள்
நிலைமை  புரிந்து.. என் மனதை திடபடுத்தி  கொண்டேன்..

யாருக்காக நான் இவ்வுலகில் வாழ ஆசை பட்டேனோ அவள்  இன்று    சிறு குழந்தை போல் படுக்கையில் தள்ளபட்டால்..

நானோ அழுது புலம்பி தவிக்கின்றேன்..

அவள் என்னை பார்த்த காலம் போயி.. இனி நான் அவளை  ஒரு குழந்தையை போல் பார்க்க வேண்டும்.. பார்ப்பேன்......
Posted by: Forum
« on: July 05, 2026, 08:15:36 PM »

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 408

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்