Post reply

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: Yazhini
« on: Today at 12:23:18 PM »

உழைப்பினால் மலர்ந்தது இவ்வுலகு
உழைப்பாளிகளால் செதுக்கப்படுகிறது மனித வாழ்வு.
காணும் இடமெங்கும் மலைக்கவைக்கும்
கடும் உழைப்பின் கைவண்ணங்கள்

இல்லத்தில் தொடங்கி பிரபஞ்சம் வரை
பரந்து விரிந்து கிடக்கும்
ஆழ் கடல் முதல் முகடுகள் வரை
உயர்ந்து பிரமிக்க வைக்கும்
உழைக்கும் சோர்வரியா சிவந்த கரங்கள்...
சிறு துரும்பு முதல்
பலவற்றை கற்க பயன்படும்
இணையம் வரை
உண்ணும் உணவு முதல்
அலங்கரிக்கும் பொருட்கள் வரை
அனைத்திற்கும் உயிர் கொடுக்கும்
உழைப்பவரின் கரடுமுரடான கரங்கள்...

உருவாக்கப்படும் ஒவ்வொரு படைப்பிலும்
சிந்தும் வியர்வை துளிகளோடு
கலந்திருக்கும் குருதியின் மணம்...
உணவாகினும் உடையாகினும் பொருட்களாகினும்
நாம் வீணாக்கும் ஒவ்வொன்றும்
ஒருவரின் வியர்வையின் பயனை...
அவர்தம் உழைப்பின் கனியை...
உழைப்பவரின் அருமை உணராமல்
இருப்பது சரியா?
சிந்தியாமல் இருப்பது முறையா?
மலர்ந்திடும் ஒவ்வொரு நாளும்
உழைப்பவரின் தினம் ஆகட்டும்
சுணக்கத்தை அகற்றும் முயற்சியாகட்டும்
உழைப்பால் உயர்வோம்..
முயன்று சாதிப்போம்... 💪💪💪
Posted by: TiNu
« on: Today at 11:53:33 AM »


"உழைப்பாளியே உலகின் நாயகன்"

காலையில் எழுந்திருக்கும் போது - என்
மனதில் ஏதோ.. ஏதோ.. யோசனைகள்..
நாம் மற்றவர்களுக்காவே வாழ்கிறோமே..
நமக்காக நாம் வாழ்வே இல்லையா?

அதிகாலை எழுந்ததில் இருந்து இரவு படுக்க..
போகும் வரை.. எவ்வளவு உழைக்கிறோம்..
என் வருமானத்தை கூட எனக்காக - ஒரு
சிறு தொகைகூட எடுத்தது இல்லையே...
மனசோர்வுடன், அலுவலகம் கிளம்பினேன்..

பொண்ணே,
உனக்கு பிடிக்குமேன்னு..  விடியலே எழுந்து
இட்லி சாம்பார் செஞ்சுருக்கேன் - பொறுமையா..
நிதானமாக சாப்பிட்டு போ.. என்றாள் அம்மா... 
உணவுகளை பார்த்த எனக்கு.. ஒரே ஆனந்தம்..

தட்டில்.. சுட சுட இட்லியும் சாம்பாரும் - எனை
பார்த்து சிரிக்க.. நானும்.. ஆசை ஆசையாக சாப்பிட...
எத்தனித்த வேளையிலே.. சட்டென.. யாரோ... - என்
தலையில் சம்மட்டியால்.. அடித்தது போல உணர்தேன்..

ஆம்,
நான்  உண்ணும் தட்டு - கொல்லனின் உழைப்பு..
அரிசி,பருப்பு,காய்கறிகள் - விவசாயின் உழைப்பு..
அமர்த்துண்ணும் மேஜை,நாற்காலி - தச்சனின் உழைப்பு
நான் இருக்கும் இடம் (வீடு) - கட்டிட தொழிலாளிகளின் உழைப்பு..

இறுக்கமான மனதுடன்,
கடகடவென பேருந்து நிலையம் நோக்கி நடந்தேன்..
நான் நடக்கும் இந்த சாலை - சாலை பணியாளரின் உழைப்பு..
பேருந்து நிலையம் - கட்டிட தொழிலாளிகளின் உழைப்பு.
நான் பயணிக்கும் பேருந்து - நடத்துனர்,ஓட்டுனரின் உழைப்பு

சலவை, தையல், முடிதிருத்துவோர், உணவு உற்பத்தி
கற்பித்தல், சட்டஒழுங்கு காத்தல், உயிர் காத்தல்
கட்டிடங்கள் அமைத்தல், இயற்கையை காத்தல்.. - என பலர்
தன்னலம் பாராது தன்னை கொடுத்து.. பலருக்காக உழைக்கின்றார்கள்

எல்லோரின்.. தின ஓட்டத்தையும் பார்த்து.. பார்த்து..
என் மனம் லேசானது.. எனக்காக நான் வாழவில்லையே  - என்ற
எண்ணம் மாறியது... நான் மட்டும் பிறருக்காக உழைக்கவில்லை...
இந்த உலகம் முழுவதும் ஒரே கூடு என  உணர்தேன்..

உழைப்பே உலகம்... உழைப்பாளிகளே இவுலகின் நாயகர்கள்..


 
Posted by: JsB
« on: Today at 05:19:57 AM »

விடியலை வரவேற்கும் முதல் மனிதன்,
வெற்றியை உருவாக்கும் கடைசி மனிதன்...
அவன்தான் உழைப்பாளி...


உலகம் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில்,
கனவுகளைச் சுமந்து நடைபோடுபவன் உழைப்பாளி...
மாலை சூரியன் மறைந்த பின்னரும்,
கடமையை முடிக்காமல் ஓய்வெடுக்காதவன் உழைப்பாளி...


அவன் சிந்தும் வியர்வைத்துளிகள்
மண்ணில் விழுவதில்லை...
நாளைய தலைமுறையின்
நம்பிக்கையாக மலர்கின்றன...


அவன் உழைப்பால் சாலை பிறக்கிறது,
அவன் உழைப்பால் பள்ளி எழுகிறது,
அவன் உழைப்பால் மருத்துவமனை இயங்குகிறது,
அவன் உழைப்பால் நாடு முன்னேறுகிறது...


விவசாயியின் கரங்களில்...
விளையும் ஒவ்வொரு நெல்மணியும்,
கட்டிடத் தொழிலாளியின் கைகளில்
உயரும் ஒவ்வொரு மாடியும்,
தொழிற்சாலையின் சுழலும் இயந்திரமும்,
சாலையில் ஓடும் ஒவ்வொரு வாகனமும்...
எங்கும் ஒலிப்பது உழைப்பின் மகத்துவமே...


அவன் கைகள் கரடுமுரடாக இருக்கலாம்,
ஆனால் அவன் மனம் கருணையால் நிரம்பியிருக்கும்.
அவன் உடைகள் எளிமையாக இருக்கலாம்,
ஆனால் அவன் உழைப்பு இந்த உலகின் செல்வம்...

பசி வந்தாலும் பொறுத்துக்கொள்வான்,
வலி வந்தாலும் சிரித்துக்கொள்வான்...
தனக்காக மட்டுமல்ல,
தன் குடும்பத்திற்காகவும்,
சமுதாயத்தின் நலனிற்காகவும்...
ஒவ்வொரு நாளும் போராடுபவன் உழைப்பாளி...


உழைக்கும் கைகள்...
என்றும் வெறுமையாக இருப்பதில்லை;
அவை நம்பிக்கையை விதைத்து,
எதிர்காலத்தை அறுவடை செய்கின்றன...


ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும்...
ஒரு உழைப்பாளியின் வியர்வை மறைந்திருக்கிறது...
அந்த வியர்வையை மதிப்பதே...
உண்மையான மனிதநேயம்...


பதவி உயர்வால் பெருமை வரலாம்...
ஆனால் உழைப்பால் மட்டுமே...
உண்மையான மரியாதையும்...
நிலையான மதிப்பும் கிடைக்கும்...


உழைப்பை நேசிப்போம்...
உழைப்பாளியை மதிப்போம்...
அவர்களின் வியர்வையில்தான்...
நம் வாழ்க்கையின் வசந்தம் மலர்கிறது...


அனைத்து உழைப்பாளர்களுக்கும்...
JSB-யின் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளும் நன்றிகளும்!

உழைப்பாளியே...
நீங்கள்தான் இந்த உலகின்
உண்மையான நாயகர்கள்... நாயகிகள்...


Posted by: Shreya
« on: Today at 03:44:03 AM »

காலை ஐந்து மணி அலார சத்தம்
நகர தொடங்கும் வீட்டின் பொழுதுகள்!
வாசல் தெளிக்கும் அம்மாவின் கைகள்
காபி வாசனையில் மலரும் காலை!

தேய்ந்த செருப்பும் தைத்த பையுமாக
நெரிசலில் ஓடுகிறது அப்பாவின் நிழல்!
தன் தோள்களை ஏணியாக்கி
நம்மை உச்சிக்கு உயர்த்தும் மனிதர்!

தன் பசி மறந்து நிலத்தில் நின்று
நம் பசியை தீர்க்கும் விவசாயி!
சேற்றில் உழைத்துக் கஷ்டப்பட்டாலும்
சோறு கொடுக்கும் எளிய மனிதர்!

​விடியாத இருளுக்குள் ஒளிர்கிறது
தெருவை கூட்டும் துடைப்பத்தின் சத்தம்!
அவர்கள் அள்ளும் குப்பைகளில்
அடங்கியிருக்கிறது நம் ஆரோக்கியம்!

சிக்னலில் நிற்கும் ஆட்டோ அண்ணன்
சவாரி கேட்டு பேசும் குரல்கள்!
போன் அடித்தால் பார்சலோடு வரும்
டெலிவரி தம்பியின் மின்னல் வேகம்!

​அதிகாலை குளிரில் ஓடிவந்து
வாசலில் பால் தரும் அண்ணன்!
அடுத்த நொடியில் பேப்பர் போட்டு
அறிவை வளர்க்கும் தம்பி!

​தெருத் தெருவாக கூவி விற்று
காய்கறி கொண்டுவரும் அக்கா!
கரியின் சூட்டிலும் புன்னகைத்து
துணி அயர்ன் செய்யும் தொழிலாளி!

வீட்டையும் கவனித்து வேலையும் பார்க்கும்
உழைக்கும் பெண்களின் ஓயாத கால்கள்!
குடும்ப சுமையை தோளில் தாங்கி
களைப்பே தெரியாமல் வாழும் உள்ளங்கள்!

பகலும் இரவும் ஸ்டியரிங் பிடிக்கும்
பேருந்து லாரி ஓட்டுநர்கள்!
தம் தூக்கம் மறந்து சாலைகளில் உழைத்து
நம்மை பத்திரமாய் சேர்க்கும் தோழர்கள்!

கம்ப்யூட்டர் முன்னமர்ந்து வேலை செய்யும்
ஐடி மனிதரின் கண்கள் சோர்வு!
ப்ளான் போட்டு தரும் இன்ஜினியர்
தினமும் நாம் பார்க்கும் நிஜங்கள்!

உடம்பு சரியில்லாமல் போகும் போது
ஆஸ்பத்திரியில் பார்க்கும் மருத்துவர்!
அன்போடு விசாரிக்கும் செவிலியர்
அவர்கள் காட்டும் சின்ன நிம்மதி!

கரும்பலகையின் எழுத்துக்களால் நம்
எதிர்காலத்தை வடிக்கும் ஆசிரியர்கள்!
மழையோ வெயிலோ அசையாமல் நின்று
மக்களைக் காக்கும் காவலர்கள்!

தங்கள் பசியையும் வலிகளையும் மறைத்து
தினம் உழைக்கும் ஏழை நெஞ்சங்கள்!
சொந்த குடும்பத்தின் சுகங்கள் மறந்து
சமூகத்தை வாழவைக்கும் தியாக சுடர்கள்!

​பண்டிகை நாளிலும் ஓய்வே இல்லாமல்
பகலிரவாய் வேர்க்கும் உழைப்புகள்!
உடல் வலிக்கக் கஷ்டப்பட்டாலும்
உதட்டில் சிரிப்பைத் தாங்கும் மனிதர்கள்!

இரத்தம் சிந்தி வாழும் இவர்களின்
உழைப்புதான் உலகத்தின் அஸ்திவாரம்!
இவர்கள் யாரும் மேடைகளில்
ஆடம்பரமாய் முழங்குவதில்லை!

தங்களின் உழைப்பினால் சரித்திரத்தை
மௌனமாய் எழுதும் எளிய மனிதர்களை
மதிப்போடு பார்த்தாலே அதுவே
சிரம் தாழ்த்திய வணக்கம்!!!
Posted by: Kavii
« on: June 29, 2026, 11:17:16 PM »

வியர்வையின் வாசம்

விடியும் முன்னே எழும்புற உலகத்துல,
விழி பிதுங்கி ஓடுது சாமானியன் வாழ்க்கை!
அரை வயிறு கஞ்சியக் குடிச்சுப்புட்டு,
அடுத்தவேளைச் சோத்துக்கு அலையுது இந்த உடம்பு!

செங்கல்லும் மணலும் சுமக்கிறப்போ,
தேஞ்சுப் போன தோள்பட்டை வலிக்கிறது நிஜம் தான்!
ஆனா, மாசம் கடைசியில் வர்ற காசுல,
மகளோட பள்ளிப் பீஸை கட்ட நெனைப்பதே தனிச் சுகம் தான்!

சேத்துல கால்வச்சு நாத்து நடும் அய்யாவுக்கும்,
குப்பையைக் கூட்டித் தெருவைச் சுத்தம் செய்யும் அக்காவுக்கும்,
வயித்துப்பசி ஒன்னுதான், அவங்க
வாழ்க்கையை ஓட்டுற போராட்டமும் ஒன்னுதான்!

வெயில்ல வெந்து, மழையில நனைஞ்சு,
காக்கிச் சட்டைக்குள்ள வேர்த்து விறுவிறுக்க,
ஊரைக் காக்கும் காவலரின் நெஞ்சுக்குள்ளும்
பெத்த புள்ளைங்கள நெனச்ச ஏக்கம் இருக்கும்!

டாக்டரும், இன்ஜினியரும், கம்ப்யூட்டர் முன்னாடி
இரவெல்லாம் கண்விழிச்சு உழைக்கிற தம்பியும்,
பெரிய படிப்பு படிச்சிருந்தாலும் — அவங்க
முதுகெலும்பும் இங்க தேயுறது தான் எதார்த்தம்!

பசிச்சவனுக்குச் சோறு குடுக்க ஓடுற
டெலிவரி பாயோட பசியை யாரும் கேக்கல!
ஆட்டோ ஓட்டி, பஸ்ஸ ஓட்டி ஓயுற கைகளுக்கு,
ஒரு நிமிஷம் நிம்மதியா உட்கார நேரமில்ல!

இத்தனை பேர் இங்க இரவும் பகலும் உழைச்சும்,
இவங்க வாழ்க்கை இன்னும் மாறாம அப்படியேதான் இருக்கு!
விலைவாசி ஏறிக்கிட்டே போனாலும் — இவங்க
வியர்வைக்கான விலை மட்டும் இன்னும் உயரவே இல்ல!

மாட மாளிகைங்க இங்க உயர உயர — இவங்க
அடித்தளத்துலேயே கிடக்குறது தான் கொடுமையா இருக்கு!
ஆனாலும் பாருங்க... இந்த வலிகள் எல்லாம்
அப்படியே நிரந்தரமா இங்க தங்கிடாது!

காலம் முழுக்க இவங்க இப்படியே கஷ்டப்பட மாட்டாங்க,
விடியற்காலை இருட்டுக்கு அப்புறம் ஒரு வெளிச்சம் வராம போகாது!
இவங்க சிந்தின ஒவ்வொரு சொட்டு வியர்வையும்,
நாளைக்கு இவங்க குடும்பத்தை உயரத்தாம விடாது!

பெத்தவங்க பட்ட கஷ்டம் வீண் போகாது,
புள்ளைங்க படிச்சு இவங்க பாரத்தை மாத்திடும்!
இருண்ட அவங்க வாழ்க்கைப் பாதையில,
ஒரு நாள் கண்டிப்பா புது வெளிச்சம் வந்துடும்!

பெரிய பதவியோ, சின்ன வேலையோ — நமக்குள்
இருக்கும் அத்தனை உழைப்பாளிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கம்!
வலிகளைச் சுமந்தே வழிகளை உருவாக்குற,
ஒவ்வொரு "உழைப்பாளிக்கும்" இந்த கவிதை சமர்ப்பணம்!



Posted by: Sethu
« on: June 29, 2026, 11:04:58 PM »

"உலகத்தின் முதல் உழைப்பாளி அப்பா"

இந்த உலகத்தில் உழைப்பாளிகள்
இல்லை என்றால் இந்த உலகம்
இயங்காது என்பது நமது
சான்றோர்களின் வாக்கு !

இந்த உலகத்தில் முதல் உழைப்பாளி
யார் என்று கேட்டால் நான் சொல்லும்
அன்பு வார்த்தை "அப்பா "
பிள்ளைகளுக்கு தேவையான அனைத்தையும் தனது உழைப்பால்
செய்து கொடுத்து விட்டு
தான் பட்ட கஷ்டத்தை வெளியில் சொல்லாமல் அன்பால் இயக்கும்
தெய்வம் அப்பா அல்லவா?

பிள்ளைகள் நல்ல நிலைமைக்கு
வர வேண்டும் என்று
அவன் படிப்பதற்கு தேவையான சூழ்நிலையை தனது உழைப்பால் உருவாக்கிக் கொடுப்பவர் அப்பா !

அந்த தெய்வத்திற்கு ஈடு இணை
வேறு எதுவும் இல்லை
தனது மகன் வெள்ளை சட்டை அணிந்து அலுவலகம் செல்ல வேண்டும் என்று சேற்றில் இறங்கி இரவு பகல் பாராமல் கிழிந்த சட்டையுடன் உழைக்கும்
தெய்வம் அப்பா !

அப்பா நீ ஒரு உழைப்பாளி
நீ ஒரு நல்ல அறிவை கொடுக்கும் ஆசான்
நீ என்னை பக்குவப்படுத்தி என்னை நல்வழிப்படுத்துவதில் காவல்காரன் என்னை மனதில் நினைத்துக் கொண்டு எவ்வளவு உடல் அசதியாக இருந்தாலும் காலையில் எழுந்து ஓடும் ஓர் உழைப்பாளி !

நீ தானே அப்பா எனக்காகவும்
தனது குடும்பத்திற்காகவும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் தெய்வம் !
அப்பா தானே உதிரத்தை உழைப்பாக்கி உலகத்தை உயர்த்திடும்
உழைப்பாளி அப்பா !
இந்த கவிதை உலகத்தில் உள்ள
அனைத்து அப்பாக்களுக்கும் சமர்ப்பணம் !
Posted by: Oonjal
« on: June 29, 2026, 10:20:38 PM »

அதிகாலை முதலில்
கண்விழிப்பவள் அவள் !
அலாரம் அடித்தவுடன்
தனது தூக்கத்தை மறந்து
குடும்பத்தின் நாளைத்
தொடங்கி வைக்கும் அமைதியான
உழைப்பாளி அவள்!
கண்களில் தூக்கம் இருந்தாலும் ,
‎வேலைகளை தொடங்குவதும்
‎அவள் கைகள்தான் !

‎சமையலை தொடங்குவாள் தன்
‎மனதிற்கு பிடித்த காபியுடன்....
‎ருசியாக சமைத்து குடும்பத்தின்
‎பசியை அன்பால் தீர்ப்பாள்..
‎ஒவ்வொருவரின் விருப்பத்தையும்
‎மனதில் வைத்து சமைப்பாள்
‎மூன்று வேளை உணவுகளையும்...
‎யாரும் பசியோடு வீட்டை விட்டு
வெளியேறக்கூடாது என்பதே
‎அவளின் முதல் எண்ணம்

‎தன் பிள்ளையின் பள்ளிப்பை முதல்,
‎கணவரின் அலுவலகப் பை வரை
‎ஒவ்வொன்றையும் தயார் செய்து
கொடுப்பவள் அவளே..
‎தன் சோர்வை புன்னகையால்
‎மறைக்க தெரிந்தவளும் அவளே!

‎வீட்டின் தூய்மைக்கு காரணமான
‎துப்பரவு பணியாளரும் அவளே !
‎சிதறிக் கிடக்கும் பொருட்களை
‎சீராக அடுக்கி வைப்பதும்
‎அவளின் கைகள்தான் !

‎துணிகளைத் துவைத்து காய வைத்து
பாத்திரங்களைப் பளபளவென
கழுவி வைத்து வீட்டை ஒரு
கோவிலாய் மாற்றும்
‎மந்திரம் அவள் உழைப்புத்தான் !

‎தனக்குப் பிடித்ததைத்
‎தள்ளி வைத்து பிள்ளைக்கு
பிடித்ததை வாங்கித் தருபவள்
குழந்தையின் கண்ணீரைத்
துடைக்கும் போது
‎அன்பான அம்மா அவள் !
‎கணவரின் கவலைகளை
மறக்கடிக்கும் போது தோள்
கொடுக்கும் தோழி அவள் !
‎ஒரு குடும்பத்தின் மருமகளாக
‎பொறுப்பை ஏற்கிறாள் !
‎மகளாக பாசத்தைக் காட்டுகிறாள் !
‎தன் குழந்தைக்கு முதல்
‎ஆசிரியராகவும் மாறுகிறாள் !
‎குடும்பத்தில் யாருக்காவது
உடல்நலம் பாதிக்கப்பட்டால்
செவிலியராக மாறுகிறாள்!

‎ஒவ்வொரு உறவிலும் தன்னை
‎முழுவதுமாக அர்ப்பணிக்கிறாள் !
‎ஒரே உடலில் எத்தனை
‎முகங்கள் தான் அவளுக்கு...
‎காய்ச்சல் வந்தாலும்
‎விடுமுறை இல்லை...
‎களைப்பு வந்தாலும்
‎ஓய்வு இல்லை...

‎மாதச் சம்பளம் இல்லை
‎பதவி உயர்வும் இல்லை
‎விடுமுறை நாட்கள் இல்லை
‎ஓய்வூதியமும் இல்லை
‎ஆனாலும் அவளின்
உழைப்பால்தான்‎
ஒரு குடும்பம் நிம்மதியாக
வாழ்கிறது !

‎அவள் செய்யும் வேலைகளை யாரும்
‎கணக்கில் எடுப்பதில்லை
‎ஆனால் அவை இல்லையென்றால்
‎ஒரு குடும்பத்தின் அன்றாட
‎வழக்கமே தடுமாறிவிடும்
‎அவள் இல்லாத ஒரு நாள்
‎வீடு வீடாகவே இருக்காது

‎உலகின் பல தொழில்களை
‎நாம் போற்றலாம் !
‎ஆனால் ஒரு இல்லத்தரசியின்
‎அன்பும் பொறுப்பும் தியாகமும்
‎கலந்த உழைப்புக்கு ஈடாக
‎எந்த வேலையும் இல்லை...
‎அவள் ஒரு சாதாரண பெண் அல்ல.
‎சம்பளம் வாங்காத உழைப்பாளி
‎விடுமுறை இல்லாத தொழிலாளி
‎குடும்பத்தின் முதுகெலும்பு அவள்
‎அவள் ஒவ்வொரு இல்லத்தின்
‎அமைதியான உழைப்பாளி

‎வீடு என்பது சுவர்களும் கதவுகளும்
‎மட்டும் அல்ல..
‎அதன் உயிராக இருப்பவள் தான் அவள்.
‎அவள் வீட்டில் இருப்பவள் அல்ல,
‎வீட்டையே உயிர்ப்போடு வைத்திருப்பவள்.
‎அவள் தான்...
‎                    இல்லத்தரசி.
Posted by: Thenmozhi
« on: June 29, 2026, 10:13:13 PM »

"உழைப்பாளிகளே நாட்டின் முதுகெலும்பு"

உழைப்பே உலகின் உயிர்மூச்சு !
உழைப்பாளிகள் வாழ்வின் ஒளிவிளக்கு !
உழைப்பாளிகள் கரங்கள்
பேசும் மொழி உழைப்பு !
உழைப்பாளிகளின் வாழ்க்கை
சொல்லும் பாடம் முயற்சி !

வயலில் விதை தூவும் விவசாயி,
வாழ்வின் அன்னம் தரும் கடவுள்!
கட்டிடம் எழுப்பும் தொழிலாளி,
கனவுகளை நனவாக்கும் சிற்பி.
சாலைகள் அமைக்கும் கரங்கள்,
ஆடைகளை நெய்யும் நெசவாளர்
சமூகத்தின் முன்னேற்றப் படிகள்!

நாட்டின் எல்லையில் நமக்காக
சண்டையிட்டு பாதுகாத்திருக்கும் இராணுவத்தினர்
இரவு பகலாய் குற்றங்களை புலனாய்வு செய்யும் காவல்துறையினர்
நீதிக்காக போராடும் சட்டத்தரணிகளும் நீதிபதிகளும்
இவர்களின் கடின உழைப்பினால்
நிம்மதியாய் தூங்கும் மக்கள் !

இல்லங்களை அன்புடனும் ,
பொறுப்புடனும் நடாத்தும் இல்லத்தரசிகள்!
கடல் அலைகளில்  தத்தளித்து வழங்குகின்றனர் கடல் உணவுகளை
மீனவர்கள் !
அறுசுவை உணவுகளை இன்முகத்துடன் நமக்கு அளிக்கும் உணவகங்கள் !
இருக்கும் இடத்திலிருந்தே  பொருட்களை பெற்றுக் கொள்ள வழி செய்யும் விநியோகிஸ்தர்கள் !

ஆசிரியர்கள் விதைக்கிறார்கள் அறிவை,
மருத்துவர்கள்   காக்கிறார்கள் உயிர்களை,
தூய்மை பணியாளர் நகரம் காக்க,
அனைவரின் வாழ்வும் அழகாகிறது !

விஞ்ஞானிகளின் அதிசயக் கண்டுபிடிப்புகளும்
விண்வெளியில் புரிந்த சாதனைகளும்
வியாபாரிகளின் நுணுக்கமான 
வர்த்தக முறையும்
வியத்தகு உலகத்தை உருவாக்கியது !

எங்கள் மனங்களை மகிழ்விக்கும்
இயல் ,இசை ,நடன கலைஞர்களும்,
எங்களை அழகுபடுத்தும்
அழகு கலை நிபுணர்களும்,
இன்பமாய் இஷ்டப்பட்ட இடத்துக்கு நாம்  சென்றுவர உழைக்கும் ஓட்டுநர்களும்
உழைப்பாளிகளே !

கடின உழைப்பை நண்பனாக்கி,
கடமையைத் தெய்வமாக எண்ணி,
துன்பங்கள் வந்தாலும் துவளாமல்,
துணிவுடன் முன்னேறிச் செல்பவன்!

அவன் வியர்வை மண்ணில் விழுந்தால்,
பசுமை முளைக்கும் !
அவன் கரங்கள் செயல்பட்டால்,
நாட்டின் வளர்ச்சி மலரும் !

உழைப்பாளியின் நேர்மையும்,
ஒழுக்கமும் அனைவருக்கும்
சிறந்த எடுத்துக்காட்டு !
அவன் உழைப்பின் பலனால்தான்
நம் வாழ்க்கை இனிமையாகிறது !

உழைப்பை மதிக்கும் மனம் கொண்டால்,
வாழ்க்கை வளமாகும் !
உழைப்பாளிகளைப் போற்றும் நாடு
என்றும் செழிப்போடு திகழும் !
உழைப்பே உயர்வின் திறவுகோல் !
உழைப்பாளிகளே நாட்டின் முதுகெலும்பு !

குறிப்பு: உலகில் உள்ள அனைத்து உழைப்பாளிகளுக்கும் இந்த கவிதை சமர்ப்பணம்.


Posted by: Rahmathulla
« on: June 29, 2026, 10:12:38 PM »


      உழைப்பு ஒரு   பொழுதும் கை விடாது


அறியா வயதில்  பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தந்தையே இழந்து தன் அம்மா தங்கைக்காக  வாழ்வது  என்பது சோகம் கலந்த  வேதனை..

கட்டிட வேலை செய்து அதில் வரும் வருமானம் எந்த ஒரு  தேவைகளையும் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை..

என் தங்கை அண்ணா ஸ்கூல் open aachu  uniform & books எல்லாம் வாங்கணும் சொல்லும் போது என்னிடம் இப்போ பணம் இல்லை  என்று எப்படி சொல்லவேன்...
அப்படி சொன்னால் என் தங்கைக்கு மனம் ஏற்குமா.. அப்படி தான்  சொன்னேன் எனக்கு  இப்போ வருமானம் இல்லை   கொஞ்சம் டைம் கேளு  என்று..

உடைனே என் தங்கை அண்ணா டீச்சர் ஏத்துக்க மாட்டாங்க என்று சொல்லி அண்ணா நான் படிப்பை பாதியில் நிறுத்திட வா என்று சொன்ன உடனே..  எனக்கு கண்ணீர்  மழ மழ வென வந்தது.
 வேண்டாம்  அண்ணா எப்படியும் பணம் ரெடி பண்ணி தரேன் நீ நல்லா படிக்கணும்  படிச்சு பெரிய ஆளாய் வரணும் என்றேன்.. 
இப்போ உள்ள சூழ்நிலையில் எப்படி அண்ணா  காலம் போகும் என்றால்..

அந்த நிமிடம் என் தந்தை நினைவு வந்தது..
எப்படி எல்லாம் எங்களை கஷ்ட்டப்பட்டு வளர்தாய் ஆனால் இன்றோ நீங்க  இல்லாத  வாழக்கை எங்களுக்கு நரகம் போல தோன்றுதே..

என்னால் என் தங்கைக்கு சிறிய   தேவையே கூட செய்து குடுக்க முடியவில்லேயே.. என்ற எனக்குள்  கேள்வியே எழுப்பினேன்..

அழுதேன் அழுதேன்  இறைவன் என் பேச்சை கேட்டு என் அழுகையை பார்த்தும்  அமைதி காத்தான்..

இறைவா உனக்கு இரக்கம் குணம் இல்லையா ஏன் என் தந்தை உயிரே எடுத்து கொண்டாய்..

எதுவுமே தெரியாமல் இந்த உலகில் நான் என் அம்மா தங்கையே எப்படி வாழவைப்பேன்  என்று கதறி அழுதேன்...
அந்த நிமிடம் ஆழமாய் யோசித்தேன்
கட்டிட வேலை செய்து என் அம்மா தங்கையே காப்பாற்றுவேன் என்று மனதில் ஆழமாக பதித்தேன்..

செங்கல் மணல் சுமந்தேன்  அதில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது.. காயங்களின் வலி வெளியே சொன்னால் மேஸ்திரி வேலை செய்யாதே இங்கே இருந்து  போயி விடு என்று சொல்வான் என்று என் காயங்களை  தாங்கி கொண்டு  ஒவ்வொரு நிமிடமும்  என்னுடைய உழைப்பும் வேர்வை துளிகளும் என்னை கை விடாது என்று சொல்லி என்னை நானே அமைதிப்படுத்தினேன்.வேலையே ஆர்வமாக செய்தேன்..

அப்படி செங்கல் மணல் சுமக்கும் போது என் நினைவு முழுதும் என் தங்கை  படிப்பை பற்றியே..
 என் தங்கை வாழ்க்கையாச்சும்  நல்லா இருக்கனும்  நல்லா வாழுவாள் என்று   என்னுள் ஒரு நம்பிக்கை வந்தது..

 2வாரம் வேலையோடு பணியில் கடந்தேன்
 பணியின் போது  மேஸ்திரியிடம் கொஞ்சம் பணம் தேவை  அவன் என் நிலைமையை அறிந்து முன் பணமும் என் கூலியையும்  சேர்த்து கொடுத்தான் 
எந்த இறைவனே உனக்கு இரக்கம் இல்லையா என்று திட்டினேனோ அந்த இறைவன் நாடாமல் எனக்கு மேஸ்திரியிடம் உதவி கிடைத்து இருக்காது..
மேஸ்திரிகும் நன்றி புரிந்தேன்..

 பணத்துடன் போன உடனே என் தங்கை அம்மாவிற்கு மிக சந்தோசம் கலந்த ஆனந்த கண்ணீர்   என் மகன் உழைப்பாள்  உயருவான்...

படிப்பு என்னை கை விட்டது ஆனால் ஒரு பொழுதும் என் உழைப்பு என்னை கை விடாது..

உழைப்பு தான் மனிதனின் முதன்மை அடையாளம்..

நன்றி
Posted by: Forum
« on: June 28, 2026, 10:19:11 PM »

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 407

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்