Posted by: VenMaThI
« on: December 17, 2025, 03:28:28 PM »வளரும் குழந்தையாய் - முகம் மலரும் மழலையாய்....
காண்போரின் புன்முறுவளுக்கு காரணமாய்....
கண்ணீரை மறந்து கனவுலகில் - என்றும்
பறக்க உதவும் சிறகாய்..
வளர்ந்தாலும் தேய்ந்தாலும் அழகாய்...
கவி பாட துடிக்கும் பல கவிஞர்களின் கருத்தாய்.....
ஈடற்ற பெண்மைக்கு ஈடான உவமையாய்....
அடுத்தவரின் இருளை போக்கும் வெளிச்சமாய்....
என்றுமே வானில் உலாவரும் வெண்ணிலவே... என் முழுமதியே....
உவமையாய் உருவகமாய் உன்னை
பாடிப்பாடி சலித்த போதும். மீண்டும்
பாடத்தூண்டும் பால்நிலவே...
எத்தனை வரிகளடி உனைப்பாட
எத்தனை வார்த்தைகளடி உனை வர்ணிக்க
எத்தனை கவிஞரடி உனைப்புகழ...
உம்மை பாடாத கவிஞனுமில்லை
உன்னை பாடாதவன் கவிஞனே இல்லை...
பலரின் உறக்கமற்ற இரவுகளின்
உற்ற துணை நீ.
தேடும்போது வானில் தோன்றும்
வெண்ணிற சிற்பம் நீ...
முகிலின் இடையில் ஒளிந்து விளையாடும்
மழலையின் வடிவமும் நீ...
உணவருந்த மறுக்கும் மழலையின்
விலைமதிப்பில்லா பொம்மையும் நீ..
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகமதில்
வாழ்வும் தாழ்வும் வாழ்க்கையின் இயல்பே என்பதையும்
கொடுப்பதால் குறைவதில்லை -குறைந்தே போனாலும்
மீண்டும் முழுமை பெறவேண்டும் என்பதையும் உணர்த்த
உனையன்றி யாருண்டு இவ்வுலகில்...
பிறந்த குழந்தை முதல் - நரைமுடி கண்டு கிழப்பருவமெய்தும் காலம்வரை
தன்னிலை மறந்து உம்மை ரசிக்கச்செய்யும்
மாயக்காரியே...
என்னையும் மயக்கிவிட்டாய்
உன் அழகில் மயங்கவிட்டாய்....
பலரது மதியில் நிறைந்த வெண்மதியே
உனைக்கண்ட இச்சிறு நொடியில்
எனையும் கவி படைக்கச்செய்துவிட்டாய்
என் கவிதையின் கருத்தாயும் அமைந்துவிட்டாய்......

