Post reply

Warning - while you were reading 2 new replies have been posted. You may wish to review your post.

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: Sankari
« on: July 15, 2025, 06:47:40 PM »

ஒரு தலைமுறைக்கு முதல் பிள்ளை நீ
எல்லோருமே காத்திருந்த ஆண் தேவதை நீ 
நான் உன்னை சுமக்கவில்லை என்றாலும்
என் முதல் மகன் நீ

குழந்தைகளைப் பிடிக்காத நிலையில் இருந்தேன்
உன் பின்னே சுற்றி சுற்றி வைக்க செய்த மாயவன் நீ
உன் சின்ன சிறிய பாதத்தில் ஒருவித தாய்மையை அறிய வைத்தவன் நீ 
 
பொறுமை, நிபந்தம் இல்லாத அன்பு, பொறுப்புகள், எல்லாவற்றிக்கும் மேல் பாசம்
இது எல்லாம் என்ன என்று இந்த பூமியில் வந்து
எனக்கு கற்றுக் கொடுத்தவன் நீ
 
உன் குறும்புகளால்
உன் சேட்டைகளால்
உன் சிரிப்புகளால்
உன் அன்பினால்
உன் அறிவால்
என்னை பாசத்தில் கட்டிப்போட்டவனும் நீ

துன்பம் என்ன தாக்கிய போது
உன் குறும்பு சிரிப்பால் என்னை பார்த்து
என் நெஞ்சத்தை பஞ்சு மெத்தை போல ஆக்கியவனும் நீ
என்னை அணைத்துக் கொள்ளும்போது
எந்த கஷ்டம் இருந்தாலும் அதை காற்றில் பறக்க விட்டவன் நீ

ஒரு சிறு பையன் வெகுளித்தனம்
அவன் கள்ளத்தனம் இல்லாத பாசம்
அதைவிட இந்த உலகத்தில் வேறொன்றும் புனிதமானதில்லை என்று
உணர்த்தியதும் நீ

சின்னம்மா என்று
என்னை முதலில் அழைத்ததும் நீ
இந்த உறவில் எல்லா அர்த்தங்களையும் காட்டியதும் நீ
எந்த வேதனை, கஷ்டம், அச்சம், சோகம், தேவை இருந்தாலும்
அதை தீர்த்து வைக்கும் பொறுப்பு என்னிடம்
அதையும் புரிந்து கொள்வாய் நீ
 
 நான் உன்னை சுமக்க வில்லை என்றாலும்
 இந்த வாழ்வில் எல்லை வரை என் நெஞ்சில் சுமப்பேன்
 என் தங்கம் நீ !
Posted by: Asthika
« on: July 14, 2025, 11:02:46 PM »

எனக்கு இரண்டாவது வாழ்க்கையைக் கொடுத்த எனது மகள் சுபிக்ஷா விற்கு நான் எழுதும் கவிதை



அனைவருக்கும் குழந்தை என்றாலே ஆனந்தம் தான்
அதிலும் தன் உடன்பிறந்தவளின் பிள்ளை என்றால் பேரானந்தம்
தன் பிள்ளை போல் பார்த்து அவளின்
மழலையின் சிரிப்பில் தான் உலகத்தையே பார்ப்பாள்
தன் வாழ்க்கையை இருட்டிலிருந்து கொண்டு வந்த என் தேவதை
என்னவென்று செய்வது அறியாது இருந்தவளுக்கு வரமாய்  என் கையில் வந்தவள்....
என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள்..
உன் சிரிப்பின் அழகை பார்த்து எனக்கு சிரிப்போடு சேர்த்து ஆனந்த கண்ணீரையும் வர வைத்தவள் என் மகள்.....
என் வாழ்க்கையின் இருட்டை நீக்கி
என்னுள் புது அர்த்ததை தந்தவள் ..
என் வாழ்க்கையில் எண்ணிலடங்கா மகிழ்ச்சியை கொடுத்தவள் ...


Posted by: Titus
« on: July 14, 2025, 08:59:35 PM »

அதிகாலை நேரம் கூட உன்னைப் பார்த்து கற்றுக்கொள்கிறது,
மலராமல் இருந்தாலும், நீ மலர்வதைப் போலவே பசுமையா பூக்கிறது.
உன் புன்னகை ஒரு சூரிய ஒளி போல என் வாழ்வை வருடும்,
மருந்துகள் தோற்ற இடத்தில், நீயே எனக்கே மருந்தாகிறாய்.

உன் முகத்தில் இல்லாதது போல மாயமும் வஞ்சகமும்,
அந்த சுத்தமான சிரிப்பு என் கவிதையின் உயிர் வெள்ளம்.
வெயிலின் கடுமையிலும் நீ நினைவாக நிழலாகிறாய்,
உன் பார்வையின் அமைதியில் என் மனம் தானே அழகாகிறது.

காற்று கூட உன் பெயரை அன்புடன் முத்தமிடுகிறது,
அந்த இசை என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் ஒலிக்கிறது.
நாள்கள் கண்ணீரோடு வந்திருந்தாலும் சரி,
உன் சிரிப்பு மட்டும் போதும் – அது எனக்கு புனிதப் பூஜை.

உன் வார்த்தைகள் மட்டும் போதும் ஒரு வாழ்க்கையை மாற்ற,
அதில் இருக்கும் அன்பு எனது நாள்களை இனிக்க செய்கிறது.
உன் சிரிப்பு என்பது ஒரு தெய்வீக மழை எனது உயிரில்,
அதை விட தூயதும் இனிமையும் இந்த பூமியில் இல்லை.

நட்சத்திரங்கள் கூட உன் கண்களில் ஒளி தேடி மறையும்,
என் கனவுகள் எல்லாம் உன் புன்னகையில்தான் தங்கி உறங்குகின்றன.
உன் ஒவ்வொரு சிரிப்பும் காதலின் கவிதை,
நீ இல்லாமல் என் வாழ்க்கை ஒரு முடிக்காத வரி.

உன்னை முதன்முறையாக பார்த்த அந்த நொடியிலே,
என் முழு வாழ்க்கையும் அன்பின் அமைதியாய் மாறிவிட்டது...
Posted by: Madhurangi
« on: July 14, 2025, 08:04:05 PM »

என் தத்து மகள் அனுராதாவுக்கு ❤️❤️

பெற்றால் மட்டும் அல்ல,
உணர்வினாலும் தாய்மையை பெறலாம் என நீ கற்பித்தாய்…
உன் இடைவிடாத கேள்விகளால்,
நான் இன்னும் எத்தனை கற்க வேண்டும் என நீ உணர்வித்தாய்.

கதை சொல்லி உறங்க வைக்க வேண்டும்…
உன் கை பிடித்து கடல் மணலில் நடை பயில வேண்டும்…
உன் விழி வழி இந்த உலகம் காண வேண்டும்…
உன் கரம் பிடித்து மீண்டும் அகரம் பழக வேண்டும்…

கணிதம் கற்பிக்க தாயும்,
சமத்துவம் போதிக்க தந்தையும்,
உன் வருகைக்கு ஏக்கத்துடன் காத்திருந்தோம்…

தோழனாய் உன் தந்தையும் .. ரசிகையாய் உன் தாயும்.. உன் முகம் காணும் முன்னே
உன் பெயர் கண்டோம் – அனுராதா ❤️

எம் சின்னஞ்சிறு உலகில் அங்கமாகினாய்.. உன் வருகையால் எங்கள் காதலை இன்னும் உறுதியாக்கினாய்..
உன் எதிர்காலத்தை எங்கள் லட்சியமாக்கினாய்..

என் உதிரம் நீ பகிரவில்லை,
ஆனால் என் உணர்வுகளை பகிர்ந்திருக்கிறாய்.
பத்துமாதம் உன்னை சுமக்கவில்லை,
ஆனால் வாழ்நாள் முழுதும் உன் நினைவுகளை சுமக்க வைத்திருக்கிறாய்.

பத்துவிரல்களின் பிஞ்சுப் பிடியில்,
இத்தனை நம்பிக்கை மலரக்கூடுமா?
வாழ்வதற்கு நம்பிக்கை கொடுக்க முடியுமா?
வாய் பேசும் அதிசயம் தான் நீ!

என் சிரிப்புகளின் காரணமானாய்,
என் வாழ்வின் அர்த்தமானாய்,
இறைவன் கொடுத்த பேரருளாய்,
என்றும் என் நெஞ்சின் உறைவானாய் – அனுராதா!
Posted by: Vethanisha
« on: July 14, 2025, 05:58:49 PM »

பரபர வென அனைவரும்
வீடு முழுக்க குறுக்க நெடுக்க ஓட
"சட்டை ரெடியா , தொப்பி ரெடியா
இடம் சரியா பாருங்க !,
ஐயோ கொஞ்சம் சீக்கிரமாத்தான்
ரெடி பண்ணுங்களேன் "
என அவரை திட்டிக்கொண்டே
அறையினுள் நான் நுழைய

மறைத்திருக்கும் மேகங்களிடையே
கொஞ்சி கொண்டு எட்டி பார்க்கும்  நிலவாய்
குறும்பாய் என்னை பார்த்து
கண் சிமிட்டி சிரித்த  அந்த நொடி❤️

கோடி தெய்வங்கள் என்னை
ஆசிர்வதித்தது போல்
உலகின் இன்பங்கள் அனைத்தும்
என்னை சூழ்ந்தது போல்
என் பிறவி பயனை அடைந்தது போல்
அத்துணை பிரமிப்பு !

என்னுள் இருந்து
எனக்காய் பிறந்திட்ட
என் ஆருயிரே! 

இன்றோடு ஒரு வருடம்
என் வாழ்வின் நான் மீண்டும்
 ஜனனித்த நாள்
என் உலகமே முழுதாய்
மாறி போன நாள்
எனக்கென்ன எனக்காய்
நீ   பிறந்திட்ட நாள்
இனி நான் வாழ போகும்
ஒவ்வொரு நிமிடமும் உனக்காய் ! 
நான் சத்தியமிட்ட  நாள்

ஒரே பார்வையில் உயிர்  கொள்ளை போகுமா ?
ஒரே புன்சிரிப்பில் உலகம் பூத்து குலுங்குமா ?
ஒரே தொடுதலில் ஆதி அந்தம்  உறைந்து போகுமா ?
ஒரே சிணுங்களில் உள்ளம் மயங்கி போகுமா ?

இன்னும் அதிசயிக்கிறேன் இன்றும்  !❤️

உன் பார்வையில்
 என்னை தொலைத்து
 சிலையாய் நான் நிற்க

"எல்லாம் சரி பாத்தாச்சு
போட்டோஷூட் எடுக்க எல்லாம் ரெடி ,
பையனை அழைச்சுட்டு வா" 
என சத்தம் கேட்டு
மீண்டும் தெளிந்தேன்.

சட்டென தொலைபேசியில்
இந்த தருணம்
 பட்டென ஒரு கிளிக் 📸
இதோ!  கேலரியில் 13001 ஒன்றாய்
இணைந்த படம் .

 


Posted by: Yazhini
« on: July 14, 2025, 05:19:31 PM »

என் உயிரில் தரித்த சிறுசீவனே!
அன்னையென என்னை பிறப்பித்த
தெய்வம் தந்த வரமே!
ஆழியில் மூழ்காமல் நான் பெற்ற
என் முத்தே! என் கனியே!

உன் சின்னஞ்சிறு கண்களில்
ஒளிப்பெற்றது என் வாழ்க்கை.
தள்ளாடும் உன் சிறுநடையில்
உறுதிப் பெற்றது என் பாதை.

உன் உள்ளங்கைகளில் முகம் புதைக்கையில்
கண்ணீரும் புன்னகையாக மலரும்
மனச்சுமையும் காணாமல் போகும்.
என் மறு பிரதியே!
என் மறுப்பிறப்பே!

குருதி சிந்த உன்னை ஈன்றேன்
மாசற்ற பரம்பொருளைப் பெற்றேன்.
காணா தெய்வத்தின் சிறுவடிவே!
குறுபுன்னகையில் எனை மீட்கும்
குறும்பே! என் செங்கதிரே!

தென்றலும் உன் தூளியை ஆட்ட
நிலவும் சாமரம் வீச
காரிருளும் உன்னால் ஒளி பெற
புது விடியலை நீ காண
என் கண்ணே!
கண்ணயர்ந்து நீ உறங்கு...
Posted by: சாக்ரடீஸ்
« on: July 14, 2025, 04:26:04 PM »


யார்ரா சொன்னது குழந்தைப் பருவம் ஜாலின்னு ?

எதுக்கு திட்டு
வாங்குறோம்னு தெரியாமலே
அப்பன் மாதிரியே இருக்கனு அலறுவாங்க
தப்பு பண்ணாலும் சரி
சும்மா இருந்தாலும் சரி
திட்டு தாங்க

யார்ரா சொன்னது குழந்தைப் பருவம் ஜாலின்னு ?

சாப்பிடும்போது
காரம் மூக்க துளைக்கும்
சளி ஒழுகும்
கையால தொட முடியாது
சட்டையில பின் பண்ணின
kerchief தொங்கும்
தொடைக்கலன்னா ஸ்கூல்ல
திட்டு வாங்க வேண்டியது

யார்ரா சொன்னது குழந்தைப் பருவம் ஜாலின்னு ?
 
தூங்கும்போது பெட்ல
உச்சா போனாலும்
காலையில அம்மா கண்ண
உருட்டி உருட்டி திட்டுவாங்க
நிம்மதியா தூங்க முடியாது
என்னடா வாழ்க்கை இது ?

யார்ரா சொன்னது குழந்தைப் பருவம் ஜாலின்னு ?

பக்கத்து வீட்டு
ரிமோட் கார் கண்ண மயக்கும்
அம்மா வாங்கி தாங்கன்னு
கெஞ்சி கேட்டா இருக்கிற பொம்மையை
ஆடி கிழிச்சவனுக்கு
இப்ப கார் வேணுமா ?
திட்டு மேல திட்டு மனசு வலிக்கும்

யார்ரா சொன்னது குழந்தைப் பருவம் ஜாலின்னு ?

டவுசர் கழண்டு விழாம
ஒரு கையில பிடிக்கணும்
பிச்சைக்காரன் மாதிரி
நடக்க வேண்டியதா இருக்கும்
இப்படி
ஓடுறது ஜாலியா ?
இல்ல வேதனையா?

யார்ரா சொன்னது குழந்தைப் பருவம் ஜாலின்னு ?

அப்பா அம்மா ஆனதுக்கு
நம்ப தான் காரணம்
அதுக்கு கொஞ்சம் கூட
நன்றியோ விசுவாசமோ  இல்லாம
மொபைல் பார்த்துட்டே இருக்காதே
கண்ணு போயிடும்னு நம்மளையே
குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க

யார்ரா சொன்னது குழந்தைப் பருவம் ஜாலின்னு ?

வரவன் போறவன் எல்லாம்
கன்னத்தை புஜக் புஜக் னு
அழுத்தி கொஞ்சுறோம்னு சொல்லுவாங்க
அழகா பொறந்தது என் தப்பா ?

யார்ரா சொன்னது குழந்தைப் பருவம் ஜாலின்னு ?

சாப்பாடு பிடிக்கலன்னு
வாய் திறக்க முடியாது
காரமோ கசப்போ
வாயில திணிச்சு
முழுங்கி முடிக்கணும்
இல்லன்னா திட்டு காத்திருக்கு

ஆனா
ஒரே ஒரு நல்ல விஷயம் சொல்லணும்னா
காசுக்காக எங்கயும் ஓட வேண்டியதில்ல
கையில காசு இல்லனாலும் மனசு லேசா இருக்கும்
அதான் குழந்தைப் பருவத்தோட ஒரே ஜாலி !
Posted by: Agalya
« on: July 14, 2025, 03:34:30 PM »

என்னில் நீ தோன்றிய அந்த கனம் முதல்
அந்த மெடிக்கல் கிட்டில் செக் பண்ணி
அதுக்கு அப்பறம் ஆரம்பித்த அலப்பற இருக்கே
அந்த அலப்பற
நிக்க முடியல உட்கார முடியல
குனிய முடியல நிமிர முடியல
எந்த பக்கம் பாத்தாலும் கண்ண கட்டுது

காலைங்கறதே எனக்கு 11 மணி தான்
காலை உணவு 12 மணிக்கு
மதியம் உணவு 5 மணிக்கு
இந்த இடைவெளிக்கு நடுவுல
வரும் பாரு ஒரு மயக்கம்
அப்பறம் எங்க நைட் டின்னர் சாப்டரது
விடிஞ்சுருமே

இவ்வளவு கஷ்டப்பட்டு  துயரப்பட்டு
செக் அப் போயிட்டு 2 ஊசி போட்டு
உன்ன வளத்து
2 நாள் வலிக்கு அப்பறம்
பெத்து எடுத்து
சொல்லி முடியல
அப்பாடா முடிஞ்சு னு பாத்தா
அதுக்கு அப்பறம் தான் இருக்கு
நமக்கு வேட்டு

தூங்கறதே இல்ல
விடிய விடிய முழிப்பு
விடிஞ்சு தூக்கம்
இத்தனையும் பாத்து பாத்து வளத்து
இப்போ இருக்க trend எல்லாம் பாத்து
மாதாந்திர photo shoot எடுத்து
ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு theme
ரெடி பண்ணி
அதுக்கு நானே camera man ஆ மாறி

இதுக்கு இடைல காஸ்ட்யூம் வேற
பொண்ணு நா சொல்ல முடியாத டிரஸ் கலெக்க்ஷன்ஸ்
அதே ஆண் பிள்ளைக்கு
ஒரே டிராயர் பனியன் தான்
எதெல்லாம் பாத்து பாத்து எடுத்து
எதுக்கு மத்தில ஆறு மாசம் கடந்தா
அதுக்கு ஒரு கேக் வெட்டி

அப்புறம் நின்னு நடந்து
விழுந்து புரண்டு
வீட்ட ரெண்டு பண்ணி
எல்லாத்தையும் இழுத்து போட்டு
உனக்கு பின்னாடியே நான் அலஞ்சு
என்னோட self care அ மறந்து

குளிக்க வச்சு சோறு ஊட்டி
சீர் ஆட்டி வளத்தா
வளந்து சொல்ற முதல் வார்த்தை
அப்பா
அப்போ வரும் பாரு
ஒரு கோவம்

இவ்வளவு
பொலம்பு பொலம்புற
நீ ஜாலியா
பெட்ஷீட் குள்ள
உக்காந்துகிட்டு என்ன
பாத்து சிரிக்கிற 🤣🤣🤣
Posted by: Lakshya
« on: July 14, 2025, 03:26:18 PM »

ஏன் எனக்குன்னு எந்த பெயரும் வைக்கல??? எல்லாரும் "குழந்தை" - அப்படி தான் சொல்றாங்க, என யோசித்து கொண்டிருந்த பாப்பா திடீரென...

அடடா விடிஞ்சிருச்சு போல சேரி எழுப்புவோம் அம்மாவ...

கண்கள் மெல்ல விழிக்கிறாள் அம்மா குழந்தை அழும் சத்தம் கேட்டு...கதிரவன் கூட இன்னும் துங்கிட்டே தான் இருக்காரு உனக்கு என்ன அவசரம் என்று கொஞ்சி கொண்டே கேட்டாள்...

பசிக்குதே அம்மா என்று குழந்தை செய்கை காட்ட, முத்தமிட்டு தூக்கி கொண்டாள்...உன் கரம் என்னை தழுவட்டும் மீண்டும் உறங்குவேன், நீ விழித்திரு என் அருகில்...

விளையாடு அம்மா என்னோடு என்று குழந்தை அம்மாவின் சேலையை பிடித்து இழுக்க... குட்டி கைகளை பிடித்து சொன்னாள் வேலை இருக்கிறது என்று...அந்த மழலைக்கு என்ன புரியும்???

மீண்டும் அதையே செய்தது, முகம் சுழிக்காமல் புன்னகையோடு விளையாடினாள்...

விளையாடி கொண்டே குழந்தை உறங்க, அன்னை கவிதையாக ஒரு பாட்டை பாடினாள்...

என் கரங்களில் மலர்ந்த பூவே, என் சுவாசம் நீ தானே...
நீ அழுகிற சத்தம் கூட என் வாழ்வின் ஓர் கவிதை தான் பாப்பா...

உன் விழி பார்த்து ரசிக்கிறேன், உன் சிரிப்பை கண்டு வியக்கிறேன்...
உன் கை பிடித்து நடக்க வைக்க ஆசை ஆனால் நீ இன்னும் தாவுழ கூட இல்லையே...
உன் சிரிப்பின் ஓசையை, எனக்கு கேட்டுக்கொண்டே இருக்க ஆசை...

நீ பார்க்கும்பொழுது உலகம் சுத்தமாக இருக்கணும்...அதற்கு நீயும் ஒரு காரணமாக இருக்கணும், இதுவே உன் அம்மாவின் ஆசை...
Posted by: Thenmozhi
« on: July 14, 2025, 01:28:43 PM »

மழலையின் அழகில் மயங்கினேன்....

அதிகாலை மலரும் மலர்களை மிஞ்சிவிடுகிறது
மழலை உந்தன் அழகிய புன்னகை!
கோடி மருந்துகள் இருந்தும் பலன் இல்லை!
உன் சிரிப்பு ஒன்றே என்னை குணமாக்கி விடுகிறதே!
கள்ளம் கபடமற்ற உந்தன் மழலை சிரிப்பு
கவி பாட வைக்கிறதே என்னை!

உயிரும் மெய்யும் கலந்திருக்கிறது உந்தன் புன்னகையில்!
நீ பேசிடும் மழலையில் ஒலிக்கின்றன இசைக்கருவிகளின் அனைத்து மெட்டுக்களும்!

எத்தனை துன்பங்கள் இருந்தாலும் மறந்து போகின்றது உந்தன் மழலை பேச்சிலும்,சிரிப்பிலும்!
நீ தூங்குகின்ற அழகினை இரசிக்க ,கோடி கண்கள் கொடுத்தாலும் போதாது மழலையே!

இரசித்தபடியே இருந்திட இறைவன் படைத்திட
ஒரே மொழி உந்தன் மழலை மொழியே!
உன் அழுகை கூட அழகான கவிதை ஆனதே!
அம்மா என்று கூறும் உன் மழலை தமிழுக்கு அழகானதே!

இயற்கை அழகு கூட தோற்றுவிட்டதே !
மழலை உந்தன் அழகினில்!
இதயம் திருடி நீ சிரிக்கிறாய்
தெய்வத்தின் சாயல் தெரிகிறதே உன் சிரிப்பினில்!
நன்றாக தூங்கு மழலையே !
இந்த பருவம் போய்விட்டால்
வேறு பருவம் இல்லை நிம்மதியாக தூங்குவதற்கு!

மழலையே உந்தன் அழகினில்
மயங்கிய மாது நான்
மண்ணுலகில் இருக்கும் வரையில் இரசித்துகிட்டே இருப்பேன்!
மழலையே உன் கூட மழலை மொழி பேசிகிட்டே இருப்பேன்- நானும் ஒரு மழலையாக!
நீ மழலை மொழி ! நான்  உன் தேன்மொழி!
Posted by: Forum
« on: July 14, 2025, 11:46:21 AM »

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்

1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும். .


Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.



நிழல் படம் எண் : 378

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்